சனி, அக்டோபர் 21, 2023

மேல்மருவத்தூர் மடம் செய்த ஆன்மிக 'புரட்சி'

பார்ப்பனீய மடங்கள் ஆனாலும் இடைசாதி மடங்கள் ஆனாலும் உழைக்கும் மக்களை யதார்த்தமான வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவும் போராடும் ஜனநாயக சக்திகளை நோக்கி அவர்கள் செல்லாமல் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் நிறுவனங்களே. மக்களை ஏமாற்றி பணம் சுருட்டுவது பிரதான தொழில் என்றாலும்.

சங்கர மடங்கள் மேல்சாதி சிறுபான்மை பிராமணர்களுக்கு எனில் இடைசாதி மடங்கள் ஆகப்பெரும்பான்மை பிராமணர்கள் அல்லாத மக்கள் பிரிவினரை தம் பக்கம் இழுத்தன என்பதுதான் நுட்பமான அபாயம். 1980களுக்கு பிறகு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஆசிரியர் சிறிய அளவில் சாமியார் தொழிலை தொடங்குகிறார். பெரியார், அண்ணா பிறந்த மண்ணில்தான் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பேராதரவுடன் அவர் தம் தொழிலை விரிவாக்குகிறார். அமைச்சர் பெருமக்கள், டெல்லி அதிகார மட்டம், ஒரு கட்டத்தில் மோ டி என மேல்மருவத்தூரில் வந்து குவிய உள்ளூர் ஆட்சி நிர்வாகமும் போலீஸ் நிர்வாகமும் அடங்கி போவதுடன் மடத்துக்கு சேவகம் செய்யும் துறைகள் ஆகின. இயற்கையாகவே அவர் ஒரு அரசியல்வாதிகளின் கருப்புபண பினாமி ஆகிறார்.

பல சதுர கி மீ பரப்பளவு நிலங்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்டன. அவர் அனுமதி இன்றி நிலம் விற்க வாங்க முடியாது என்ற நிலை புகுத்தப்பட்டது. எல்லாகார்ப்பரேட் மடங்களும் போலவே இங்கும் கல்வி மருத்துவம் என்ற சேவை முகமூடி தேவைப்பட ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் பலமாக செல்வாக்கை நிலைநிறுத்திய பங்காரு அதையும் செய்தார். தன் மனைவியை உள்ளூராட்சி தலைவர் ஆக கொண்டுவந்தார். அதாவது கணவர் சாமியார் மனைவி உள்ளூர் நிர்வாக தலைவர். ஆஹா! அவரது ஒரு மகனுக்கு த நா அரசின் மிக உயர்ந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பெண் எடுத்தார்கள்.

அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன. மருத்துவ கல்லூரி விடுதியில் தண்ணீர் வராததால் குரல் கொடுத்த மாணவன் அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வும் தொடர்ந்து நடந்த கலவரத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சூறையாடப்பட்டதும் வரலாறு. நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் அல்லது மாணவர்கள் அமைப்பு எதுவும் குரல் எழுப்பிட முடியாது, எழுப்பினால் நிர்வாகத்தின் ரவுடிகள் சிறப்பாக கவனிப்பார்கள்.

பல்மருத்துவகல்லூரி தொடங்கி அனுமதி பெற பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி நிர்வாகத்தின் மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் மக்கள் சமூகத்திலும் உள்ளூர் அரசியலிலும் தேர்தல்களிலும் ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது, உள்ளூர் மக்கள் பிரச்னைகளுக்கு திராவிட கட்சிகளும் சரி இடதுசாரி இயக்கங்களும் சரி எந்த அளவுக்கு குரல் எழுப்ப முடிகிறது, கடந்த 30, 35 வருடங்களில் உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்ட இயக்கங்கள் என்னென்ன, என்னென்ன வடிவங்களில் நடத்தப்பட்டன என்ற வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் மட்டுமே மேல்மருவத்தூர் என்ற தமிழ்நாட்டின் பகுதியில் உள்ளூர் அரசியல் இயக்கங்களின் பங்கு வளர்ந்துள்ளதா தேய்ந்து உள்ளதா என்பதை புரிந்துகொள்ள முடியும். தேய்ந்து இருந்தால் அதற்கான காரணம் வெட்ட வெளிச்சம்தான். இந்த லட்சணத்தில் பெண் உரிமை கோவில் நுழைவு என்று ஒரே கூச்சலாக உள்ளது. என்ன கோவில்? என்ன நுழைவு? ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின்பால் திரள வேண்டிய ஆண்களையும்

பெண் சமூகத்தையும் ஒரு சேர பங்காரு அடிகளார் ஹைஜாக் செய்யவில்லையா? இதில் பெண் உரிமை எங்கே வந்தது?

... ...

பார்ப்பனீய மடங்களுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பதும் இடைசாதி பினாமி மடங்களிலும் பீடங்களிலும் பெண்களுக்கு அனுமதி அளிப்பதும் இரண்டுமே ஜனநாயக விரோத சக்திகளுக்கு உவப்பானவைதான். ஒன்றில் மறுப்பதை இன்னொன்றில் balance செய்வது, இதில் நமக்கென்ன உள்ளது உவப்பு அடைய? இரண்டையும் தாண்டிய பங்காருவின் ஜுனியர் ஜக்கியின் வழிபாட்டில் ஜீன்ஸ், டிரம்ஸ், ட்ரம்பெட், கும்பல் கும்பலாக வெளிநாட்டு ஸ்டைல் டான்ஸ், வண்ண விளக்குகள் என்று வேறு ஒரு வடிவத்தில் உள்ளதே, மேல்மருவத்தூரை விடவும் அங்கே பெண்ணுரிமை ஜாஸ்தி என்று மார்க் போடலாமா? 

உண்மையில் ஜக்கி, நித்யானந்தா, பிரேமானந்தா எல்லோருக்கும் பங்காருதான் வழிகாட்டி. எல்லோரும் அவரை தொடர்ந்து வந்தவர்கள். கர்நாடகாவில் இருந்து ஜக்கி இங்கே யாரை முன்னுதாரணமாக கொண்டு வந்தான்? பல நூறு ஏக்கர் அரசு வனங்களை அவன் வளைத்துப்போட்டு டெல்லியின் அரசியலை நடத்துகிறான் எனில் பங்காருதான் முன்னோடி. பெண்கள், சொத்து என்று கொட்டம் அடித்து இப்போது நாட்டை விட்டு ஓட அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கும் ஜக்கிக்கும் பங்காருவுக்கும் அரசு நிர்வாகத்தின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு. 

வளர்ச்சியாக வார வழிபாட்டு மன்றம் என்ற ஒரு அமைப்பு. நூற்றுக்கணக்கான மக்கள் திரளை பார்க்க முடிகிறது. இது பார்ப்பனர் அல்லாத உழைக்கும் மக்கள் கூட்டம். இந்த கூட்டம் இயல்பாக யாரை நோக்கி வந்திருக்க வேண்டும்? பார்ப்பனீய இந்துத்துவா அமைப்பான ஆர் எஸ் எஸ் காலப்போக்கில் பார்ப்பனர் அல்லாத மக்களை திட்டமிட்டு தன் வட்டத்துக்குள் கொண்டு வந்தது எனில் பங்காரு, ஜக்கி போன்றோரின் வழிபாட்டு அல்லது அபிமானிகள் அமைப்புகளும் அதே வேலையைத்தான் செய்கின்றன. சுருக்கமாக இந்த அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று complementary ஆனவை. அதாவது எப்படி ஆனாலும் உழைக்கும் மக்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் பின்னால் திரண்டு விட கூடாது என்பதில் கவனமாக உள்ளன. உழைக்கும் மக்களின் எதிரிகளான அரசு அமைப்புக்கும் அரசு எந்திரத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இப்படியான ஆன்மீக முகமுடி பேர்வழிகளும் அமைப்புகளும் தேவைப்படுகிறார்கள், இந்த அமைப்புகள் சிதைந்து விடாமல் கவனமாக இருப்பார்கள். வனநிலத்தை ஜக்கி ஆக்கிரமிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்ததை மறந்து தள்ளிவிட்டு போக முடியாது.

வள்ளலார், வைகுண்டசாமி வரிசையில் திருடர்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டுமா? அந்த வேலையை பார்ப்பனீய கும்பல் முயற்சி செய்து பார்க்கும், நம் வேலை அது அல்ல.

20.10.2023

திங்கள், அக்டோபர் 16, 2023

மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

 
மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

- எஸ் வி ராஜதுரை

வரலற்றில் வர்க்க போராட்டங்கள் மதவடிவங்களிலும் வெளிப்படுவதை மார்க்சியம் எடுத்துக்காட்டியிருக்குறது. இதற்குப் பலரும் அறிந்துள்ள எடுத்துக்காட்டு, 'ஜெர்மனியில் உழவர் போர் என்னும் நூல். இதில் எங்கெல்ஸ், தாமஸ் முன்ஸர் என்பவரின் தலைமையில் நடந்த ஏழை உழவர்களின் போராட்டத்தில் விவிலியமும் கிறிஸ்தவக் கருத்துக்களும் எவ்வாறு ஒடுக்குவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார். தென்னிந்தியாவில் சமணபெளத்த மதங்களுக்கு எதிராக பக்திமார்க்கம் என அழைக்கப்படும் சைவமும் வைணவமும் நடத்திய போரட்டங்களும்கூட வணிக வர்க்கத்திற்கு எதிராக சாதிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் நடத்திய போராட்டங்களே எனச் சில மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

'மாப்பிள்ளைமார்' அல்லது 'மாப்ளாக்கள்' என அழைக்கப்படும் மலையாள முஸ்லிம்கள் 1921-22ஆம் ஆண்டுகளில் நடத்திய கிளர்ச்சியும் கூட வர்க்கப்போராட்டத்தின் வடிவமே என்பதை பிரிட்டிஷ் வரலாற்றறிஞர் கான்ராட் உட் Conrod Wood நிறுவுகிறார். அவரது நூலின் தமிழாக்கம் ஆன 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' (அலைகள் வெளியீடு, சென்னை), அன்றைய சென்னை பெருமாநிலத்தின் (Madras Presidency) பகுதியாக இருந்ததும் இன்றைய கேரள மாநிலத்தை சேர்ந்ததுமான மலபார் பகுதியில் 1921 ஆகஸ்ட் முதல் 1922 முற்பகுதி வரை நூற்றுக்கணக்கான சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ நான்கு இலட்சம் மாப்பிள்ளைமார் வாழ்ந்த பகுதியில் நடந்த இக்கிளர்ச்சி, பார்ப்பனர்கள், நாயர்கள் உள்ளிட்ட மேல் சாதி இந்துக்களுக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக நடந்த வர்க்கப்போராட்டம் ஆகும். மலபார் பகுதியில் இருந்த நிலவுடைமை அமைப்பு அன்றைய சென்னை பெருமாநிலத்தின் வேறெந்த பகுதியிலும் காணப்படாத ஒன்று. 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தின் அனுபவ பாத்தியதையை பெற்றிருந்த (ஆனால் சட்டப்படி நிலத்தின் உடைமையாளர்களாக இல்லாது இருந்த) சாதிய இந்துக்களுக்கும் (ஜென்மிகள்), அவர்களிடம் குத்தகைதாரர்களாகவும் கூலி உழவர்களாகவும் இருந்த மாப்பிள்ளைமார்களுக்கும் இடையே, ஜென்மிகளின் சுரண்டலுக்கு எதிராக நடந்த இக்கிளர்ச்சி யில் ஜென்மிகளுக்கு சார்பாகவே பிரிட்டிஷ் இந்திய நிர்வாக யந்திரம் நடந்துகொண்டது.

ஜென்மிகளுக்கு ம் சாதி இந்துக்களுக்கும் எதிராக 1836-1919ஆம் ஆண்டுகளிலேயே பல்வேறு கிளர்ச்சி கள்  நடந்து இருப்பினும் 1921_22 ஆம் ஆண்டு கிளர்ச்சி தான்  மேலும் பரவலானதாகவும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் நடத்தப்பட்டது. எனினும் இதில் மலபார் பகுதியில் இருந்த எரநாடு போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் இருந்த மாப்பிளைமார் மட்டுமே கலந்துகொண்டனர். ஏராளமான மேல் சாதி இந்துக்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பாலியல் வன்முறைகளும் நடந்தன. ஜென்மிகளுக்கு எதிராக மாப்பிள்ளைமார் நடத்திய போராட்டத்திற்கு அடிப்படைக்காரணம் பொருளாதார சுரண்டல் என்றாலும் குத்தகைதாரர்களும் ஏழை உழவர்களும் ஒன்று கூடுவதற்கு தடையாக அவர்கள் தொடர்பு வட்டம் குறுகியதாக இருந்தது. சிதறிக்கிடந்த அவர்களை நெருக்கமான தொடர்புக்குள் கொண்டுவந்தவை அவர்கள் வழிபாட்டு தலங்களே ஆகும்.

இஸ்லாமிய மதத்தலைவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அந்த கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றாலும் 'தங்கள்கள்' என சொல்லப்படும் மதத்தலைவர்கள் சிலர் அந்த வர்க்கப்போராட்டத்திற்கு பிற மதத்தவர் இடையே இருந்த சுரண்டப்படும் மக்களினதும் ஜனநாயக சக்திகளினதும் ஆதரவை திரட்டுவதற்கு பதிலாக மூர்க்கத்தனமான மதவெறி போராட்டமாக அதை திசை திருப்பினர். அதேபோல் மாப்பிள்ளைமார் இடையே இருந்த வணிக வர்க்கமும் ஆதரவு தரவில்லை. விதிவிலக்காக சில வணிகர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோதிலும் கிளர்ச்சிக்கு மத அடிப்படை வழங்கியவர்கள் கற்பிதம் செய்த 'மாப்ளா ராஜ்ஜியம்' நமது காலத்தின் தாலிபான் ஆட்சியின் உருவரைவு என்று கூட சொல்லலாம். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் பரந்துபட்ட இஸ்லாமிய மக்களின் விடுதலைபோராட்டங்கள்,  மத அடிப்படைவாதிகளின் தலைமையின் கீழ் வந்தால், புதிய வகையான பாசிசம்தான் உருவாகும் என்பது அன்றைய தங்கள்களில் இருந்து இன்றைய ஒசாமா பின் லேடன் வரை தொடர்ந்து மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த கிளர்ச்சியை பொருத்தவரை தேசியவாதிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டை கான்ராட் உட் விளக்குகிறார்: "(மாப்ளா) கிளர்ச்சி மண்டலத்தில் கிலாபத் ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததில் பொறுப்பான தலைவர்கள், கிளர்ச்சியில் எந்த பொறுப்பிலும் பங்கேற்காமல் இருந்தது மட்டுமல்ல; தமது கிலாபத் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருமாறி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கமாக மாறியது கண்டு ஒட்டுமொத்தமாக அதனை கண்டனம் செய்தார்கள்... சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, இந்த கிளர்ச்சி ஒரு பைத்தியக்காரத்தனமான பாய்ச்சல் என்றும் பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்க கூடியது என்றும் வர்ணித்தார்."

மாப்ளா கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசு தன் காவல்துறையை மட்டுமின்றி இராணுவத்தையும் பயன்படுத்தி யது. அது மட்டுமின்றி இன்று சர்வாதிகார ஆட்சிகள் நிலவும் இலத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் இருப்பவை போன்ற 'உஷார் படைகளை' (vigilantes) - அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள குடிமக்களின் படைகளை - உருவாக்கியது. இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்த சால்வா ஜுடம் போன்ற 'குடிமக்கள் படை' ஒன்றை உருவாக்கிய பிரிட்டிஷ் இந்திய அரசு, இந்தியாவில் இப்போதும் உள்ளதும் மூர்க்கத்தனமாக அடக்குமுறைகளுக்குப் பிரசித்தி பெற்றதும் ஆன 'மலபார் சிறப்பு காவல்படை'யையும் 1921இல் உருவாக்கியது. அதே சமயம், இஸ்லாமிய குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோரின் பிரச்னையை மதச்சார்பற்ற வகையில் அணுகி அவற்றை தீர்ப்பதற்கான இடதுசாரி விவசாயி சங்கங்கள் உருவாவதற்கும் இந்த கிளர்ச்சி காரணமாயிற்று. நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு வர்க்கப்போராட்டத்தின் நியாயங்கள், பலகீனங்கள் ஆகியவற்றை விளக்கும் இந்த நூலை தமிழாக்கம் செய்துள்ள மு. இக்பால் அகமதுக்கு இது முதல் முயற்சி என்பதால், ஆங்காங்கே தென்படும் சில நெருடல்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

...

'பார்வையிழத்தலும் பார்த்தலும்'

எஸ் வி ராஜதுரை, என் சி பி எச், மே 2016

... ... ... ...

எனது முதல் மொழிபெயர்ப்பு நூல் 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' அலைகள் வெளியீட்டகத்தால் 2007 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. எஸ் வி ஆர் அவர்கள் இந்த நூலுக்கு இப்படி ஒரு மதிப்புரையை எழுதி இருப்பதை நான் இப்போதுதான் அறிவேன்! நன்றி தோழர் எஸ் வி ஆர்!

16/10/2023

திங்கள், செப்டம்பர் 25, 2023

ஆப்பிளும் கொய்யாப்பழங்களும்

சென்னைக்கு வந்த புதிதில் சென்னையின் மிக பிஸியான கோடவுன் தெருவில் (குடோன் ஸ்ட்ரீட் என்றே வழக்கில் வந்துவிட்டது) அண்ணனுடன் அறையில் தங்கினேன். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சரக்கு ஏற்றுவது இறக்குவது, சற்றே தொலைவில் இருந்த கொத்தவால் சாவடி காய்கறி போக்குவரத்து என உழைக்கும் மக்கள் வேலையில் இறங்கிவிடுவார்கள். பகல் பொழுதில் நடக்கமுடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலில் திணறும் என் எஸ் சி போஸ் சாலையை இரவு பத்து மணிக்கு மேல் நடந்து சென்று பார்ப்பது வேறு ஒரு உலகமாக இருக்கும். 

சென்னையின் மிகப்பழமையான தெருக்கள் நிறைந்த பகுதி ஜார்ஜ் டவுன். ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு வணிகத்துக்கு என எழுதப்பாடாத விதியோடு இயங்கியது வியப்பு. அண்ணா பிள்ளை சந்து மளிகை பொருட்கள் விற்கும் மையம் என்பதால் அத்தெருவில் நுழைந்தால் மளிகை சாமான்கள் வாசம் வரும். ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு அண்ணாபிள்ளை சந்து மட்டும் ஏன் ரொம்பவும் பிடித்த இடமாக இருந்தது என்று இப்போது புரிகிறது. அடுப்படி, வீட்டு சமையல் என்று மனம் என்னை அறியாமல் நாடி இருக்கிறது. மினர்வா தியேட்டர், அதன் காப்பி மணம் பற்றி பல முறை எழுதிவிட்டேன்.

ஆவடிக்கு அப்போது மின்சார ரயில் மாத சீசன் டிக்கெட்18 ரூபாய் மட்டுமே. ரயிலில் ஏறினால் அநேகமாக எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒரு பத்திரிகை, வார இதழ் என்று இருக்கும். வாசிப்பதோடு மட்டுமின்றி அரசியல் உரையாடல்கள் நிகழும். அருகில் இருப்பவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் ஆக இருந்தாலும் தீவிரமான உரையாடல் நிகழும். அவரவர் நிறுத்தம் வந்த உடன் சார் 'இறங்குறேன்' என்று இறங்கி செல்வார்கள். அதுவரை வாசிக்கப்பட்ட செய்தித்தாளை அவர் அங்கேயே விட்டுச்செல்வார். அப்படியே அது அரக்கோணம் வரையும் பல கைகள் மாறும். ஒரே செய்தித்தாள், பல மனிதர்கள், பல கோணங்கள், பல விவாதங்கள் என மனிதர்களுக்குள் ஒரு உரையாடல் இருந்தது. நக்கீரன், ஜூனியர் விகடன், தராசு என வாங்கி வாசிப்போர் அவற்றையும் அருகில் இருப்பவரிடம் விட்டுவிட்டு செல்வார்கள். 

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விசயம், பலர் ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான் ஏறுவார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்து ஏற்கனவே இருப்பவர்கள்  இருக்கையை ரிசர்வ் செய்வார்கள். ஆனால் இவர்கள் யாரும் சக பயணி என்பதை தவிர வேறு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். 

எல்லாவற்றுக்கும் மையமாக நான் கவனிப்பது மனிதர்களுக்குள் நடந்த உரையாடல். இப்போது அடிக்கடி நடக்கும் ரயிலில் கத்திக்குத்து, கொலை என்பதெல்லாம் அப்போது இல்லை. 

... ... ...

இப்போது? மனிதர்கள் கைபேசியில் ஆழ்ந்து உள்ளே சென்றுவிட்டார்கள். ரயிலில் ஏறுவதில் தொடங்கி இறங்கும்வரை அது எத்தனை மணி நேர பிரயாணம் ஆனாலும், உள்ளூர் மின்சார ரயில், 10, 20, 30 மணி நேர பிரயாணம் ஆனாலும் கைபேசிகளில் ஆழ்ந்து விட்டார்கள். சக பயணிகள் முகத்தையும் பார்ப்பதில்லை, எந்த ஒரு உரையாடலும் இல்லை. புத்தகம் வாசிப்பவர்கள் அநேகமாக யாரும் இல்லை. 30 மணி நேர பிரயாணத்துக்கு பின் இறங்கும்போதும் சக பயணியை நோக்கிய சிறு புன்னகையோ கை அசைப்போ எதுவும் இல்லை, காதுகளில் மூளை நரம்புடன் ஏற்கனவே பிணைக்கப்பட்ட கருவியுடன் வருகிறார்கள், போகிறார்கள்.

பொது இடங்களில் மட்டுமின்றி குடும்பங்களிலும் இதே நிலைதான். ஒரு மனிதனுக்கு இரண்டு அதி நவீன கைபேசி, ஒரு மடிக்கணினி எனில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன உரையாடலுக்கும் உறவுக்கும் நேரம் ஏது? 

மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள், ஆனால் தனித்தனி தீவுகளாக இருக்கிறார்கள். 

உலகம் ரொம்ப வேகமாக செல்வதாகவும் எதுக்கும் நேரம் இல்லை சார் என்ற உரையாடலையும் சகஜமாக கேட்க முடிகிறது. நவீன தொழில்நுட்பமும் கருவிகளும் நம் வேலைகளை எளிதாக்கி நேரத்தை பெருமளவு சேமிக்க உதவியுள்ளன எனில் அந்த மீதமான நேரத்தை எதன்பொருட்டு செலவு செய்தோம்? மின்சார கட்டணத்தை மின்சார அலுவலகத்தில் சென்று வரிசையில் செலுத்தி விட்டு வீடு திரும்ப சுமார் ஒரு மணி நேரம் ஆனது, இப்போது இணையத்தில் ஐந்து நிமிடத்தில் செலுத்திவிட முடிகின்றது எனில் மீதமான 55 நிமிடங்களை நாம் எந்த வகையிலாவது உருப்படியாக பயன்படுத்தினோமா என்ற கேள்வியை கேட்டால் இது அவசர உலகம் சார் என்ற பொய்யான கட்டமைப்பு உடைப்படுகிறது அல்லவா? சரியாக சொன்னால் கடந்தகாலத்துடன் ஒப்பிட்டால் இப்போது ஒரு நாளைக்கு சுமார் 30 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது என்றால் அந்த ஏற்கனவே இருந்த 24 மணி நேரத்தையும் கூடுதலாக கிடைத்த

ஆறு மணி நேரத்தையும் திருடிக்கொண்ட நவீன தொழிநுட்பம் அதாவது முதலாளித்துவ தொழிநுட்ப வளர்ச்சி மனிதர்களை எதை நோக்கி தள்ளி உள்ளது?

இது மாய உலகம். வேகமாக ஓடும் நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் முதலாளித்துவம் மனிதர்களை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்துள்ளது. 90களில் உலகெங்கும் புகுத்தப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தின் லேட்டஸ்ட் வடிவமே  இது. கடந்த பத்தாண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட முகநூலில் இப்போது நாம் புரட்சி செய்யவில்லையா? அரசியல் கள செயற்பாடுகளின் பொருட்டு இப்போது மனிதர்களை திரட்டுவது கடினமான செயலாகி வருகிறது. அரசியல் போராட்ட களசெயல்பாடுகளுக்கு திரளும் கூட்டங்களில் உழைப்பாளி மக்களை பெருவாரியாக பார்க்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்தின் கோபதாபங்களை வீதிக்கு கொண்டுவருவதை மடைமாற்றியுள்ள நவீன தொழிநுட்பம் ஓரிரண்டு ஸ்டேட்டஸ், பதிவு போதும், திருப்தி அடைவோம் என அவர்களுக்கு திட்டமிட்ட வகையில் வழி செய்து இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பொழுதுபோக்கு பதிவுகள், சினிமாக்களின்பால் இழுத்துக்கொண்டு போகிறது.

டுனீசியாவில் நடந்த அரபு வசந்தம் போல இங்கேயும் நடந்து விடாதா? முகநூலும் வாட்சப்பும் போராட்ட களங்களுக்கு மக்களை திரட்ட பயன்படாதா என்று கேட்கலாம். 140 கோடி மக்கள் கொண்ட தேசத்தை, நூற்றுக்கணக்கான இனங்களும் மொழிகளும் அதே அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களும் ஆக, நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள், டி வி சானல்கள் என பல்வேறு வடிவங்களில் டுனீசியாவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இந்த தேசம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. தவிர கடந்த பல பத்தாண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யாவும் இந்துத்துவா தீவிரவாத சக்திகளின் கைகளில்தான் சென்று சேர்ந்துள்ளன. அநேகமாக அனைத்து ஊடகங்களும், அச்சு, மின்னணு என அனைத்தையும் இந்துத்துவா அரசியல் சக்திகள், அவற்றின் ஆதரவு சக்திகள் கைப்பற்றி விட்டன. சமீபத்திய உதாரணம் என் டி டி வி. ஆக அங்கிங்கு எனாதபடி கைபேசி, டி வி, செய்தித்தாள் என நீக்கமற இந்துத்துவா சக்திகளின் பிரசாரமே நமது மூளைகளுக்குள் வலிந்து திணிக்கப்படவில்லை,  நாமே முன்வந்து நமக்குள் திணித்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு விட்டன.

... ... ...

சென்னையில் இருந்து சேலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பகல் நேர ரயிலில் சென்றேன். என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும், சக பயணிகளும் அவரவர் கைபேசிகளில் ஆழ்ந்து இருக்க, நான் அப்போது வந்த வார இதழ் ஒன்றை வாசித்துக்கொண்டு வந்தேன். சேலம் நெருங்கும்போது சக பயணி ஒருவர் கேட்டார், சார் சென்னையில் இருந்து பார்க்கிறேன், நீங்கள் மட்டும்தான் புத்தகம் வாசித்துக்கொண்டு வருகிறீர்கள், இப்போதும் ஒருவர் கைபேசி பார்க்காமல் புத்தகம் வாசித்துக்கொண்டு வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது சார் என்றார். அவர் என்னுடன் எப்போதாவது உரையாடுவார். தன் மகனுக்கும் மகளுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்வார். அவர் சென்னை ஐ ஐ டியில் ஆய்வு மாணவராக அப்போது இருந்தார், ஏற்காட்டில் சில ஏக்கர் விவசாயம் செய்யும் குடும்பம் அவருடையது.

... ... ...

பள்ளி செல்லும் மாணவன், மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் பலர் மிக புகழ்பெற்ற மனிதர்களின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். எங்கே விழுந்தது இடைவெளி? உரையாடலில் விழுவதாக நினைக்கிறேன்.

ஆப்பிளின் புதிய கைபேசி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனைக்கு வந்துள்ளதாம். மும்பையில் உள்ள முதல் ஆப்பிள் ஸ்டோரில் அதை வாங்கும்பொருட்டு குஜராத், சென்னை, பெங்களூர் போன்ற வெளி இடங்களில் இருந்து விமானத்தில் பயணம் செய்து முதல் நாள் பகல், இரவு கடைக்கு முன் படுத்து உறங்கி புது கைபேசியை பல நூறு பேர் வாங்கி பெருமை பொங்க இணையத்தில் பதிவு செய்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதி. கூட்டம் கூட்டமாக கூடிய இவர்கள் கடை முன் காத்திருந்த அந்த 20 மணி நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள், கழுத்தும் வலது கை பெருவிரலும் நோக நோக ஏற்கனவே தங்களிடம் இருந்த கைபேசியை நோண்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். சக மனிதர்களுடன் ஆன உரையாடல்?

தோழர் போப்பு அவர்களிடம் நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். அந்தக்கால பேருந்துகளில் இருக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வகையில் இருந்தன, உங்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று கேட்டார். நுட்பமான அவதானிப்பு. நீக்கப்பட்டது இருக்கையின் வடிவம் அல்ல, மனிதர்களுக்கு இடையே ஆன உரையாடல்.

மின்சார ரயில் பயணத்தில் சக மனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் கொய்யாப்பழங்கள் அர்த்தமிக்கவை. ஆப்பிள்களால் அவற்றை எப்போதும் நெருங்க முடியாது.

... ...

(படத்தில்: மும்பையில் புதிய ஆப்பிள் 15 வாங்க திரண்ட கூட்டம்)

சாதீயம், பெரியார், குலத்தொழில், இடஒதுக்கீடு, நான், நீங்கள்...

கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவன் நான். சொந்த ஊர் தென்காசி. அநேகமாக ஆறு வயது ஆகும்போது மதுரைக்கு இடம் பெயர்ந்தோம், அதாவது பிழைப்பு தேடி. இரண்டு அண்ணன்மார், நான், எனது தம்பி, வாப்பா, உம்மா என ஆறு பேர் கொண்ட குடும்பம்.

வாப்பா நெசவாளி என்றாலும் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களை தறி நெய்யும்போது ராகமாக பாடுவார், கேட்டிருக்கிறேன். அதேபோல் தியாகராஜ பாகவதர் பாடல்களையம் பாடுவார். இசை குறித்து எனக்கு இது ஓர் அறிமுகம் எனில் இயல்பாகவே இஸ்லாமிய மக்கள் வாழும் ஊர் என்பதால் கல்யாண வீடுகளில் நாகூர் அனீபா பாடல்கள்தான் ஒலிக்கும், எனவே எனக்கு நினைவு தெரிந்து அறிமுகம் ஆன ஒரு பாடகர் அனீபாதான். 

சென்னை திருவல்லிக்கேணியில் வெண்கல பாத்திரங்களை தலையில் சுமந்து விற்றதாகவும் பொருளாதார நிலையில் நல்லவிதமாக இருந்ததாகவும் என் வாப்பா எப்போதாவது சொல்வது நினைவில் உள்ளது. ஏன் அதை கைவிட்டுவிட்டு தென்காசியில் தறித்தொழிலுக்கு வந்தார் என்று கேட்டு பதில் பெறும் அளவுக்கு வயதும் அனுமதிக்கவில்லை, கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முதிர்ச்சியும் இல்லை. இப்போது நினைத்தால் வருத்தமாக உள்ளது. அதேபோல் அம்மாவின் ஊர் தென்காசி என்றாலும் இலங்கையில் தன் சகோதரிகளுடன் ஓட்டலில் சமையல் தொழிலில் ஈடுபட்டதை அடிக்கடி சொல்வார். ஒருசில உணவுப்பண்டங்களின் சிங்களப்பெயரையும் அவற்றை செய்யும் விதத்தையும் கூட சொல்வார். ஒரு பெண்ணான அவரது அனுபவங்களையும் சற்றே காதுகொடுத்து ஈடுபாட்டுடன் கேட்டிருந்தால் பெரிய கதை ஒன்றுக்கான அடித்தளமாக இருந்திருக்கும். இரண்டையும் தவற விட்ட பாவியானேன் நான்.

தென்காசியில் சாரம் எனப்படும் கைலி, சேலை நெசவு பிரதானம். குழித்தறிகள், அதாவது தரையில் குழி தோண்டி அதற்குள் தறியை கட்டமைத்து இருப்பார்கள். மழைக்காலத்தில்  தரையின் பக்கவாட்டில் ஈரக்கசிவு ஏற்பட்டால் தறி நெசவு சிரமமாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில் தறித்தொழில் சிரமம்தான். 

மதுரையில் பலகைத்தறி. தமிழகத்தின் மிகப்பெரிய நெசவுத்தொழில் ஊராக செல்லூர் இருந்தது. ஆற்றின் தென்கரை, அனுப்பானடி, கிருஷ்ணாபுரம் காலனி பகுதிகளில் சவுராஷ்டிர சமூக மக்கள் அதிகம். செல்லூரின் தறித்தொழிலுக்கு அடிப்படை ஆன பாவோடுதல், பாவுக்கான டப்பா தார் சுற்றுதல் ஆகிய தொழில்களில் அச்சமூகத்தின் பெண்கள் ஈடுபடுவார்கள். அச்சமூகத்தின் ஆண்கள் செல்லூர் நெசவுத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டு நான் பார்த்தது இல்லை. 

ஒட்டுமொத்த நெசவுத்தொழிலாளர்களின் வாக்குகள்தான் மதுரையில் சட்டமன்ற தொகுதியின் வெற்றி தோல்வியை பாதித்தன. கைத்தறி தொழில் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்லி மதுரை மேற்குத்தொகுதியில் எம் ஜி ஆர் நின்று ஜெயித்தார். தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அவரை மேடையின் முன்னே வெகு அருகில் பார்த்த நினைவு உள்ளது.  கைத்தறி தொழிலுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன், இனிமேல் கைத்தறி நெசவாளிகள் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லி வாக்குகளை பெற்றார். அவ்வளவுதான்.

வாப்பாவின் வழியில் எஸ் எஸ் எல் சி முடித்திருந்த மூத்த அண்ணனும் நெசவில் ஈடுபட்டார். பதினோரு வயது மூத்தவர். அன்றைய எஸ் எஸ் எல் சியில் எலெக்டிவ் சப்ஜெக்ட் என்ற ஒன்று இருந்தது. அண்ணன் விவசாயத்தை தேர்வு செய்து இருந்தார். அவரது ரிகார்டு நோட்டை பார்த்துள்ளேன், மிக அழகாக படம் வரைவார்.

தென்காசியில் இருந்து ஒருநாள் இரவில் குடும்பம் ஊரை விட்டு புறப்படுவதற்கு முன்பே வாப்பாவும் அண்ணனும் மதுரைக்கு சென்று தொழில், வாடகை வீடு என உறுதி செய்து வந்திருந்தார்கள் என்பதை பின்னாட்களில் தெரிந்துகொண்டேன். வாப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் கைத்தறி நெசவுத்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

மதுரையில் செல்லூர் ஜெயபாரத் பள்ளியில் எட்டாவது வரையும் 12வரை மாநகராட்சி இளங்கோ மேனிலைப்பள்ளியிலும் படித்தேன். அதன் பின் கல்லூரியில் சேரவில்லை, குடும்பச்சூழல் காரணமாக. நானும் கைத்தறிதொழிலில் இறங்கினேன், நெசவும் அறிவேன். ஆனால் ஜகார்டு எனப்படும் பூவாலை துண்டுகளை நெய்யும் தறியை கட்டுவது, அதன் டிசைன் அட்டை தயாரிப்பது என டெக்னிகல் பக்கத்தில் வேலை செய்தேன். பிறகு ஆம்பூரில் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டேன்.

தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரத்தை பார்த்து ஆவடி பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அப்ரெண்ட்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். விளம்பரத்தை பார்த்தவர் வாப்பா என்றாலும் பயிற்சி தேர்வுக்கு அழைப்பு வந்தபோது வாப்பா சென்னைக்கு என்னை அனுப்ப தயங்கினார். அண்ணனே தலையிட்டு என்னை ஆவடிக்கு அனுப்பினார்.

130 ரூபாய் மாத உதவித்தொகை stipend. மறுமாதமே அது 230ஆக உயர்த்தப்பட்டது என்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அண்ணனுக்கு அழைப்பு வர மாநில அரசின் பட்டுவளர்ப்பு துறையில் ஓசூரில் பயிற்சி பெற்று வேலையும் பெற்று இப்போது பணியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

இரண்டாவது அண்ணனுடன்தான் நான் சென்னை கோடவுன் தெருவில்தான் Godown street அறையில் தங்கி இருந்தேன். சென்னையின் மிக மிக பிஸியான தெரு அது. அவருக்கு ஒன்றிய அரசின் கனரகதொழில்துறையில் stenographer வேலை கிடைத்து டெல்லி செல்ல நான் ஆவடிக்கு வந்து அறை எடுத்து தங்கினேன். 

ஒன்றரை வருட பயிற்சிக்கு பிறகு  மூன்றரை வருடங்கள் நிரந்த தொழிலாளியாக பணி செய்த பின் திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆவடியில் DRDO பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் Lower Division Clerk வேலைக்கு நேர்முகத்தேர்வுக்காக அழைத்தது. Competition Success Review, Competition Master போன்ற மாத இதழ்கள், The HINDU, Front line, Outlook என வாசித்து என் ஆங்கில அறிவையும் பொது அறிவையும் வளர்த்து வந்தேன். எல்லாம் சுயமாக செய்ததுதான். 

LDC தேர்வில் என்னுடன் சேர்த்து நான்கு பேர் தேர்ச்சி பெற்றார்கள். ஒருவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், ஒருவர் மாற்றுத்திறனாளி, ஒருவர் விமானப்படையில் ஓய்வுபெற்றவர். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினன். உடனடியாக ஒரு விசயம் தெளிவாக தெரிகிறதா? இந்த நான்கு பேருமே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிக்கு தேர்வானவர்கள் என்ற உண்மை தெளிவாக தெரிகிறதா? 1988 மே மாதம் பணியில் சேர்ந்து பின்னர் துறை தேர்வு எழுதி Class 1 Gazetted Officer ஆனேன்.

ஒரே வருடத்தில் 1989இல் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய வி பி சிங் அவர்களின் ஆட்சிக்கு எதிராக சங் பரிவாரம் மிகப்பெரிய கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது. ராஜீவ் கோஸ்வாமி என்ற ஒருவன் தீக்குளித்து செத்தான் அல்லது சாகடித்தார்கள். திட்டமிட்டபடி அத்வானியை வைத்து ரதயாத்ரை கலவரம் நடத்த பீகாரில் லல்லுபிரசாத் அவரை கைது செய்ய வி பி சிங் அரசுக்கு அளித்த ஆதரவை பிஜேபி வாபஸ் பெற்று அவர் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

... ... ...

எனது குடும்பத்தில் யாரும் உயர்ந்த பள்ளிகளிலோ தனியார் பள்ளிகளிலோ படிக்கவில்லை. செல்லூரில் நான் எட்டாவது வரை படித்த ஜெயபாரத் பள்ளியில் பல நூறு நெசவாளிகளின் பிள்ளைகள்தான் கட்டணம் இன்றி படித்தார்கள்.

காமராஜரின் இலவச கல்வி, டாக்டர் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் பிற இடதுசாரி இயக்கங்களும் திராவிட  இயக்கங்களும் உயர்சாதி பிராமணீயத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், விளைவாக அரசியல் அமைப்பு சட்டங்கள் வழங்கிய உரிமைகள், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றால்தான் ஒரு கைத்தறி நெசவாளியின் பிள்ளைகள் அரசுத்துறைகளில் வேலை பெற்றார்கள், சமூகத்தில் ஒரு மரியாதையை பெற்றார்கள், பொருளாதார நிலையில் உயர்ந்தார்கள். தமது வாரிசுகளை தாம் கற்ற கல்வியை விடவும் அதிக அளவில் படிக்கவைத்தார்கள்.

... ...

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சொல்வது மிக முக்கியமானது. குலத்தொழிலை அதாவது கோவிலில் பூஜை செய்வது, உஞ்ச விருத்தி, திதி, விவாஹங்களில் மந்திரம் சொல்வது ஆகிய குலத்தொழில்களை செய்து வயிற்றை கழுவிய பிராமணர்கள் அவற்றை கைவிட்டு பட்டப்படிப்பு, chartered accountant, என்ஜினீயரிங், டாக்டர், ஐ டி படிப்பதுடன் பிராமணீயம் தடை செய்துள்ள கடல்கடந்த பிரயாணத்தை மிக சகஜமாக ஏற்றுக்கொண்டு ஸ்டேட்ஸ், கனடா, ஈரோப் என அரை முக்கால் ட்ரவசர்களை போட்டுகொண்டு அதாவது பஞ்சகச்சம் குடுமி ஆகியவற்றை துறந்து வாழும் எனில் இன்றைக்கு பிரதமர் தொடங்கி வைத்துள்ள விஸ்வகர்மா திட்டம் யாரை அல்லது எந்தெந்த சமூகங்களை உள்ளடக்கும் என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

(மதராஸ் கடற்கரையில் ஜெர்மனியின் எம்டன் கப்பல் குண்டுபோட்டவுடன் இந்தியாவில் இனிமேல் ஹிட்லர் ஆட்சிதான் என்று முடிவுசெய்து ஜெர்மன் மொழி படிக்க ஓடிய திருவல்லிக்கேணி மைலாப்பூர்வாசிகளின் கதையை நான் இங்கு எழுதவில்லை).

... 

திங்கள், ஆகஸ்ட் 21, 2023

முத்தம்

முத்தம் உதடுகளில் தொடங்குவது

உதடுகளில் முடிவதில்லை


முத்தம் வெறுங்காற்றில் மிதப்பதில்லை

அது 

பரிமாறப்பட்ட ஈரத்துடன் வெளியெங்கும் வாழ்வது

வெறுங்காற்று முத்தங்களை உணர்வதில்லை


முத்தம்

ஆன்ம பரிவர்த்தனையா?

இதயத்தின் இடம்மாறலா?

அன்பின் அஞ்சல் முத்திரையா?

இல்லை,

எந்த இரு உதடுகளுடனும் முத்தங்கள் முற்றுப்பெறுவதில்லை

முதல் முத்தம்

இரண்டாவது முத்தம்

மூன்றாவது...

எதுவாக இருந்தாலும் முத்தம் முத்தமே


முத்தம் உதடுகளில் தொடங்குவது

உதடுகளில் முடிவதில்லை

கொடுத்தவரும் இல்லை

பெற்றவரும் இல்லை 

முற்றும் துறந்த நிலையே முத்தம்


முத்தங்களை நீங்கள் விரும்புகிறீர்களோ வெறுக்கிறீர்களோ,

தெரியாது,

காற்று வெளியெங்கும் போக்குவரத்து நெரிசலாய்

முத்தம்

முத்தம்

முத்தமே

ஆக்சிஜனாய்


உங்கள் சுவாசக்காற்றின் நூறு விழுக்காடும்

முத்தங்களின் மூலக்கூறே


உதடுகளை விற்பவர்கள்

கரியமிலவாயு வணிகர்கள்

அவர்களுக்கு

முத்தங்களின் அர்த்தம் புரிவதில்லை.

...

(2023 ஆகஸ்ட் மாதத்தில் நரேந்திரமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல்காந்தி தன்னை நோக்கி பறக்கும் முத்தம் இட்டதாக அமைச்சர் ஸ்மிர்தி இரானி குற்றம்சாட்டினார்)

சாதி அரிவாள் ஏந்திய நாங்குநேரி பள்ளிச்சிறுவர்கள்

சாதிய பிடிமானம் 'பெருமைமிகு' இந்தியன் ஒவ்வொருவன் மனதிலும் அடியாழத்தில் பதிந்துள்ளது என்பது வரலாறு, மறுப்பதற்கில்லை. 

ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புகளில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு, நவீன தொழில்வளர்ச்சி அடைந்த காலத்துக்கு

மாறினால் சாதி, சாதிய மனப்பான்மை ஒரே இரவில் ஒழிந்து விடும் என்பது நடக்காத ஒன்று. இந்தியாவில் பிரிட்டிஷ்காரன் ரயில் பாதை போட்டுவிட்டான், இனிமேல் தொழில் வளர்ச்சி அது இது என்று மார்க்ஸை மேற்கோள் காட்டுவது சாதீய அடித்தளத்தில் கட்டப்பட்ட இந்திய சமூகத்துக்கு அப்படியே செராக்ஸ் காப்பியாக பொருந்தாது, பொருந்தவில்லை என்பதை வரலாறு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பாவில் தொழிற்புரட்சி , எனவே அடுத்த கட்டம் முதலாளித்துவ சமூகம் எனில் அங்கே சாதி என்ற கட்டுமானம் இல்லை. 


இந்திய சமூகம் உடலளவில் முதலாளித்துவ வடிவத்திலும் சிந்தனை அளவில் நிலப்பிரபுத்துவ வடிவத்திலும்தான் இப்போதும் இருக்கிறது. இந்திய சாதீய ரத்தத்தின் வயது பல நூறு ஆண்டுகள். ரயில் பாதை போட்டவுடன் இது ஆட்டோமேட்டிக்காக ஃபில்டர் ஆகாது. ரயில்பாதை RO மெஷின் ஆகாது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சமூகத்துடன் ஒப்பிடும்போது கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். யாருக்கு இந்த வாய்ப்புகள் சென்றன, இந்த வளர்ச்சியின் பலன்கள் யாரை அடைந்தன அல்லது பலன்களை  யார் அனுபவித்தார்கள் என்ற கேள்விக்கான பதிலுக்குள் சாதீயம் இல்லையா? 

பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி பெற்றது உண்மைதான், ஆனால் விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இருவர் சர்மாவாகவும் மல்கோத்ராவாகவும் இருந்தது தற்செயலான ஒன்றா? மங்கள்யான், சந்த்ராயன் மாடல்களை பாண்டி கோவிலிலோ முனியாண்டி கோவிலிலோ அல்லது ஏதாவது மசூதியிலோ கிறித்துவ ஆலயத்திலோ சீக்கிய குருத்துவாராவிலோ வைத்து வணங்காமல் நேரே உயர்சாதி சாமியான திருப்பதி கோவிலுக்கு எடுத்து சென்று வணங்குவதில் மத துவேஷம் மட்டுமல்ல, சாதீய வன்மமும் இருப்பது உண்மை இல்லையா? முதலாளித்துவ விஞ்ஞான உடலுக்குள் நிலப்பிரபுத்துவ மூளை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஆங்கிலத்தையும் ஸ்பானிஷையும் இன்னபிற பிரதேச மொழிகளை பேசி பெர்முடாஸ் த்ரீ ஃபோர்த் போட்டுகொண்டு பெப்சி பிட்சா என்று பீத்திக்கொண்டு திரிந்தாலும் தன் சாதி மாட்ரிமோனியலில் பதிவு செய்து வைக்கவில்லையா? நவீன தொழிநுட்பம், இணையம் யாவும் சாதிவாரி மாட்ரிமோனியலில் வந்து நிற்கவில்லையா? சாதிமறுத்த அல்லது கலப்பு மணத்துக்கான மாட்ரிமோனியல் ஏன் இதுவரை எங்கேயும் இல்லை?

இந்து மதம் சாதிய செங்கல்களால் கட்டப்பட்டது, ஆனால் இந்த செங்கல்களை எந்த சிமெண்டாலும் ஒட்டிவைக்க முடியாது, இதனால்தான் இந்து மதம் மிகப்பலவீனமானது. சாதீய செங்கல்கள் என்றைக்கு உருவப்படுமோ அல்லது சரியுமோ அன்றைக்கு இந்து மதம் என்ற கட்டுமானம் சரிந்து வீழும். கீழ்மட்ட செங்கல்கள் விழிப்புணர்வு பெறாத வரைதான் மேல்மட்ட செங்கலான பிராமணீயம் கோலோச்ச முடியும். தன் இருப்பை உறுதி செய்யும்பொருட்டே புராணம், இதிகாசம் போன்ற புளுகுமூட்டை போலி சிமெண்டால் கட்டுமானத்தை உறுதிசெய்ய பிராமணீயம் காலந்தோறும் கடுமையாக உழைக்கிறது.


கல்வி, வேலை, பொருளாதார வளர்ச்சி, அதன் நேர்மறை விளைவாக சமூக அந்தஸ்து, பொதுவெளியில் சம இடம் என கீழ்சாதியாக கருதப்படும் மக்கள் முன்னேறும்போது தர்மபுரி நத்தம் அண்ணாநகர், நாங்குநேரி சம்பவங்களை ஆதிக்க சாதியினர் அரங்கேற்றுவார்கள். கோகுல்ராஜுகளும் இளவரசன்களும் தலை துண்டிக்கப்படுவார்கள். 

இந்த சாதீய கட்டுமானத்தில் இருந்து வெளியேறும்போது, மீனாட்சிபுரத்தில் செங்கல்கள் உருவப்படும்போது இராம கோபாலன், சோ ராமசாமி  தொடங்கி வாஜ்பேய் வரை பதட்டம் அடைகிறார்கள். அது உண்மையில் நாக்பூரின் பதட்டம். 

தன் சாதி, தன் குலசாமி, தன் சாதியில் பெண் ஆண் எடுப்பது என்பது வரை பிற சாதியினரை துன்புறுத்தாத இயல்பான நடவடிக்கையாக இந்து சாதீய சமூகம் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது, பல நூற்றாண்டுகளாக. என்றைக்கு கோபாலகிருஷ்ணன்களும் கீழவேளூர்களும் கையில் அரிவாளும் துப்பாக்கியும் தீவட்டியும் ஏந்துவார்களோ அன்றைக்கு அதே மொழியில் பதில் சொல்வதுதான் சரி, அதில் தவறில்லை. ஒரு கன்னத்தில் கோபாலகிருஷ்ணன் அறைந்தால் அவனது இரண்டு கன்னத்தையும் பிய்த்து எரிவதே சரி.

... ...

மதுரையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தல்லாகுளம் பெருமாள் கோயில் சுவர்களில் சில சுவரொட்டிகளை பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது.

செல்லூர் கலைவாணர் என் எஸ் கே படிப்பகத்துக்கு என் பொதுஅறிவை வளர்த்ததில் மிகப்பெரிய பங்கு உண்டு. நாளிதழ்கள், வார இதழ்கள், விடுதலை, உண்மை, மக்கள்  குரல், முரசொலி, தினமணி, சோவியத் நாடு உட்பட எல்லாமும் கிடைக்கும். தீக்கதிர், செம்மலருக்கு நான் சி ஐ டி யு கைத்தறி சங்கத்துக்கு செல்வேன். உண்மை, விடுதலையில் ஆர் எஸ் எஸ் பற்றி எழுதுவார்கள். புரிந்ததோ இல்லையோ, 

பார்ப்பனர்கள், பார்ப்பனீயம், பெரியார் என வாசித்துள்ளேன். 

அந்த சுவரொட்டிகள் ஆர் எஸ் எஸ் சுவரொட்டிகள். '....ஆம் தேதி ....சோ ராமசாமி பேசுகிறார்' என்று பலமுறை பார்த்துள்ளேன். என் எஸ் கே படிப்பகத்தில் துக்ளக்கும் வாசிப்பேன், சினிமாவில் சோ ராமசாமியையும் பார்ப்பேன். எனவே சோ ராமசாமி காமெடியான ஆள் இல்லை என்பது புரிந்தது. 

...

ஆவடியில் குடிவந்த பின் புது ராணுவசாலை எனப்படும் நியூ மிலிட்டரி ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் ஒருநாள் பி ஜெ பி பொதுக்கூட்டம் நடந்தது. 10க்கு 10 மேடை போட்டு நடத்தினார்கள். சிறப்பு பேச்சாளர் யார் தெரியுமா? எல் கே அத்வானி. 500 போலீஸ், இசட் பிரிவு, கருப்பு பூனை, செவப்பு நாய்  என ஒரு கெடுபிடியும் இல்லை. நானும் வழக்கம்போல இரவு சாப்பாட்டுக்கு வள்ளியப்பன் மெஸ்ஸுக்கு போகும்போது அத்வானி பேசிக்கொண்டு இருந்தார். மேடைக்கு முன் 30, 40 பேர் கூட இல்லை. மக்கள் அவரவர் வேலையை பார்க்க போய்க்கொண்டே இருந்தார்கள்.

...

மதுரை பெருமாள் கோயில் சுவரொட்டியையும் அத்வானி கூட்டத்தையும் ஒரு 40 வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இந்த 40 வருட கால அரசியலை திரும்பி பாருங்கள். 500 போலீஸ், இசட் பிரிவு, கருப்பு பூனை இல்லாத அத்வானியை இப்போது இன்றைய அரசியலில் கற்பனை செய்யுங்கள். முடியாது.


பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண்.... போதாது. கட்சி அரசியல், அன்றாட அரசியல் தற்காலிகமானவை, இந்துத்துவா சக்திகளுக்கும் அதன் சல்லி வேர்களான சாதீய அமைப்புகளுக்கும் எதிரான

தத்துவ போராட்டங்களில் திராவிட கட்சிகள் வெகுதூரம் பின் தங்கி உள்ளன என்பதை மறுக்க முடியாது. உத்தபுரம் சாதீய சுவர் சிக்கலில் திமுக தள்ளாடியதை மறுக்க முடியாது. பாப்பா பட்டி, கீரிப்பட்டி தலித் மக்கள் உரிமைக்காக இதே பெரியார், அண்ணா மண்ணில்தான் அயர்ச்சி தரும் மிக நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது என்பதை மறுக்க முடியாது. வேங்கைவயல், நாங்குநேரி ஆகியவை இவற்றின் நீட்சியே.

இந்துத்வா ஆர் எஸ் எஸ், சாதீய சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகளின் போராட்டம் அவர்களது சக்தியின் எல்லை வரைதான் நீண்டுள்ளது, நீள முடியும். இந்த தளத்தில் இடதுசாரிகளை விடவும் வலிமை வாய்ந்த திராவிட கட்சிகள்தான் சாதீய சக்திகளுக்கு எதிராக வெளிப்படையான சமரசம் அற்ற போரை இடதுசாரி, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்த முடியும். அதற்கு அடிப்படையாக தமது கட்சிகளுக்குள்ளும் இயக்கங்களுக்குள்ளும் உள்ளாய்ந்த ஆய்வை இப்போதாவது தொடங்க வேண்டும்.

மொழிபெயர்ப்பும் மாவோ நூல் தொகுதிகளுக்கான ஆனந்தவிகடன் விருதும்

ஆனந்தவிகடன் விருதுகள் இப்போது மிகப்பெரிய அளவில் ஒருநாள் விழாவாக நடத்தப்படுகிறது. விருது பெற்றோரின் புகைப்படங்கள் விகடனில் முழுப்பக்கம் அச்சிடப்பட்டு பெருமைப்படுத்தப் படுகிறார்கள்! பல வருடங்களுக்கு முன் அப்படி இல்லை!

2012க்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல் ஆக தேர்வு செய்யப்பட்டது அலைகள்-விடியல் இணைந்து வெளியிட்ட மாவோ தேர்வு செய்யப்பட்ட படைப்புகளின் தமிழ் மொழியாக்கம். 9 தொகுதிகள் மொத்தம்.

ஏறத்தாழ 12 தோழர்களுக்கு மேல் இதில் உழைப்பை செலுத்தினார்கள். தொகுதிகள் 5, 9 இரண்டும் என் மொழியாக்கம். மொழியாக்கம் என்பது உயிரை உறிஞ்சும் ஒரு பணி. எடுத்துக்கொண்ட மூல நூலின் சப்ஜெக்ட் மீது முதலில் உள்ளார்ந்த பற்றுதலும் புரிதலும் இருந்தால் அன்றி மொழியாக்க வேலையில் இறங்க முடியாது. காசுக்கும் பிழைப்புக்கும் மொழியாக்கம் செய்தால் அதில் ஜீவன் இருக்காது. மாவோ ஆகட்டும், ஸ்டாலின் ஆகட்டும், மொழியாக்கம் என்பதை அரசியல் பணியாக கருதி எல்லா தோழர்களும் உழைத்து செய்தார்கள். இவை இரண்டுமே மரியாதைக்குரிய தோழர் பெ நா சிவம் அவர்களின் நீண்ட கால திட்டம். இந்த நேரத்தில் விடியல் சிவா அவர்களை அன்புடன் நினைவு கூர்கிறேன்.

ஆதவன் தீட்சண்யா தன் 'மீசை என்பது வெறும் மயிர்' நாவலில் ஓரிடத்தில் என்னைப்பற்றி சொல்லியிருப்பார். காசுக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்வோரை இருமொழி எந்திரங்கள் என்று சொல்லியிருப்பார். சில பல மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும்போது இரண்டு பக்கத்துக்கு மேல் ஓடாது. குறைந்தபட்சம் மூல மொழியின் இலக்கண அமைப்பும் புரியாமல் தமிழின் இலக்கண அமைப்பும் புரியாமல் ஆக்ஸ்போர்டு, வெப்ஸ்டர் அகராதியை வைத்துக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை எடுத்துப்போட்டால் அது முழிபெயர்ப்பாக மட்டுமே இருக்கும், மொழிபெயர்ப்பு அங்கே இருக்காது. இப்போது கூகிளில் மாவை போடுகிறார்கள், பிரின்டரில் கேவலமான சப்பாத்தியாக வெளியே வருகிறது. பால்வினை நோய் என்றால் கூகிள் milk disease என்று துப்புகிறது.

ஒரு சில ஆங்கில சொற்களின் தமிழ் இணை சொல்லுக்காக பல நாட்கள், சில மாதங்கள் யோசித்துக் கொண்டே இருந்துள்ளேன். ஏதாவது ஒரு நாளில் எங்கேயோ ஒரு பொறி தட்டுப்படும், அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி மொழிபெயர்ப்பாளன் மட்டுமே உணர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சி ஆகும். அனுபவிக்க வேண்டும்.

பெயர்சொற்களின் நேரடி தமிழ்ப்பொருளை கொண்டுவருவதில் சிக்கல், சிரமம் ஏற்படும் எனில் குறிப்பிட்ட சொல்லுக்கான வினைச்சொல் மூலத்தை தேடி அங்கிருந்து பொருள்கொணர முயற்சி செய்தால் வெற்றி கிட்டும் என்பது என் அனுபவம். எல்லாமும் மனிதனின் வினையில் இருந்து, உழைப்பில் இருந்து உருவானவை. 

நிற்க.

2013 புத்தக கண்காட்சி சென்னையில் நடந்துகொண்டு இருந்தபோது தோழர் அலைகள் சிவம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது விகடனில் இருந்து ஒரு நண்பர் வந்தார். 'நீங்கதான் அலைகள் பதிப்பக...?' 'ஆமாம் சொல்லுங்க' 'மாவோ நூல் மொழியாக்கத்துக்கான விகடன் விருதினை கொண்டு வந்துள்ளேன், வாங்கிக்கோங்க' என்றவாறு பையில் இருந்து எடுத்துக்கொடுத்தார். சரி கொடுங்க என்று சிவம் அவர்கள் அதை வாங்கிக்கொண்டார். விருது வழங்கும் விழா இவ்வாறு இரண்டு நிமிடங்களில் முடிவு பெற்றது. நான் தற்செயலாக அங்கே இருந்ததால் இது எனக்கு தெரியும். மொழிபெயர்ப்பு செய்த பிற தோழர்களுக்கு இதுவும் தெரியாது! புகைப்படத்தில் சிவம் அவர்களும் நானும்.

அலைபேசியில் புகைப்படம் எடுத்தவர் தோழர் இளங்கோ Elango Sivam.

திங்கள், ஜூலை 24, 2023

வடகிழக்கு கலவரங்களின் மையமான ஒன்றிய பி ஜெ பி அரசு+கார்ப்போரேட் கூட்டணி


1

கடந்த மார்ச் மாதம் மணிப்பூரின் மலைப்பிரதேச மக்களை அவர்களின் பாரம்பரிய காடுகளில் இருந்து மாநில பிஜேபி அரசு வெளியேற்றியது.  அரசு கூறிய ஒரே காரணம்: இக்காடுகள் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள். 

அதே மார்ச் மாதம் பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவை செய்தது. அதன் பெயர் Forest Conservation (Amendment) Bill, 2023.

பல்லுயிர்பெருக்கம் மிக அதிகமான அளவில் கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு மாநிலங்களில், அதே வனங்களில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக வனங்களோடும் இயற்கையோடும் தம் வாழ்வை பிணைத்துக்கொண்டு வாழும் பழங்குடியினர் பகுதிகளில் இப்படி ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டியதன் பின்னணி என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற Forest Conservation Act, 1980இல் திருத்தத்தை கொண்டுவருவதே இந்த முன்வரைவு. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. விந்தை என்னவெனில் அந்த குழுவில் இருந்த அனைத்து எம்.பி.களும் பிஜேபி கட்சியினர். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் இகுழுவுக்கு அனுப்பியதில் உள்நோக்கம் இருந்தது. இக்குழு பொதுமக்கள் கருத்தை அறிவதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து விளம்பரம் செய்தது. அதாவது 2023 மே 18 இறுதி நாள் என்று அறிவித்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும். இப்போது நடந்து கொண்டு இருப்பது அந்த மழைக்கால கூட்டத்தொடர்தான்.

FCA 1980 சட்டம் சுற்றுச்சூழலுக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக இருப்பதால் இச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவது அவசியம் என்று  ஒன்றிய பிஜேபி அரசு கூறிக்கொண்டாலும் உண்மை என்ன? வடகிழக்கு மாநில மக்களின் நிலங்கள் முழுவதையும் அந்த மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து கார்பொரேட் முதலைகளிடம் ஒப்படைப்பது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இதில் ஒளிந்துள்ளது. அதனை மறைக்க பிஜேபி அரசு வளர்ச்சி, மக்கள் நலன் என்று பகட்டான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் நிலம், இயற்கை வளம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்ற்றின் மீதான அம்மக்களின் உரிமைகளுக்கு நம் அரசியமைப்புசட்டம் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு முன்வைத்துள்ள இந்த முன்வரைவோ வடகிழக்கு மக்களின் உரிமைகளை முற்றாக நிராகரிக்கிறது, மாறாக பல லட்சம் ஹெக்டேர் காடுகளை அவர்களிடம் இருந்து பறித்து கார்பொரேட் வசம் கொடுக்கவும், காடுகள் சாராத பிற வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் எளிதில் வழி செய்கின்றது.

உதாரணமாக, இப்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்தின் மிக கடுமையான ஷரத்துகளில் இருந்து இந்த திருத்தம் முழுமையாக விலக்கு அளிக்கிறது. உதாரணமாக, சர்வதேச எல்லைகளில் இருந்து, கட்டுப்பாட்டு கோட்டில் LOC அல்லது LAC யில் இருந்து 100 கிமீ தூரத்துக்குள் இருக்கின்ற எந்த ஒரு நிலத்தையும் அரசு கைப்பற்றி கொள்ளலாம். 

வடகிழக்கு மாநிலங்கள் சீனா, திபெத், மியான்மர், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் எல்லையை கொண்டவை. நாகாலாந்து மாநிலத்தின்  90% நிலங்களையும் இந்த சட்டத்திருத்தம் பாதிக்கும். கூடவே அருணாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் காடுகளையும், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 100% நிலங்களையும் பாதிக்கும். 

Godavarman வழக்கில் உச்சநீதிமன்றம்1996இல் வழங்கிய தீர்ப்பின்படி வனங்களை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆன விதிகள் அனைத்து காடுகளுக்கும் சமமாக பொருந்தும். அந்த நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அது என்ன வகையான காடாக இருந்தாலும்.

இமயமலை தொடரில் உள்ள 15,000 கி.மீ சர்வதேச எல்லை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்நிக்கோபார் தீவுகள், மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆகிய நிலப்பரப்பில் உள்ள காடுகள் அனைத்தையும் பாதுக்காக்க தக்க வகையில் இதுகாறும் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இப்போது கொண்டுவரப்பட்ட சட்ட முவரைவு கைவிட சொல்கிறது.


2

1980 சட்டமானது, நாகாலாந்து, மிஜோரம் சட்டமன்றங்களுக்கு நிலம், இயற்கை வளம், அரசியல்-கலாச்சார உரிமைகள் மீதான தமது சொந்த சட்டங்களை இயற்றிக்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. 2023 திருத்தமோ அரசியலமைப்பு சட்டம் பிரிவு371ஐ நீர்த்துபோக செய்யுமா அல்லது முற்றாகவே துடைத்து போட்டு விடுமா என்பதுதான் நாகா மக்களின் இன்றைய கேள்வி.

பல்லாயிரம் வருடங்கள் ஆக வனங்களில் குடியிருந்த, கூடியிருக்கும் பழங்குடியினர்தான் வனங்களை உண்மையில் பாதுகாக்கின்றார்களே தவிர அரசோ அரசின் சட்டங்களோ அதிகாரிகளோ அல்லர். அரசு என்ற ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே பழங்குடியினர்தான் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர் என்பதே எளிய உண்மை. 

ஒன்றிய பிஜேபி அரசு 2021இல் National Mission on Edible Oils-Oil Palm NMEOOP என்ற திட்டத்தின் கீழ் 11040 கோடி ரூபாய் ஒதுக்கியது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் குறிவைக்கப்பட்டன. இந்த பகுதிகள்தான் இந்தியாவின் முக்கியமான பல்லுயிர்பெருக்க பகுதிகள், உலகின் தலையாய மூன்று பல்லுயிர்பெருக்க பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவை. மிக அரிய விலங்கினங்கள், பறவைகள், அரிய மருத்துவ குணங்களை கொண்ட தாவரங்கள், காடுகளில் மட்டுமே விளையக்கூடிய உணவுப்பயிர்களை உள்ளடக்கிய பாதுக்காக்க பட்ட வனங்களை கொண்ட பிரதேசங்கள்.

2021 திட்டப்படி இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.    இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட்டால் இக்காடுகளின், இந்த மாநிலங்களின் சுற்றுச்சூழலும் காடு சார்ந்த வாழ்வை ஒட்டிய அம்மக்களின் கலாச்சார பாரம்பரியமும் அழியும் என்று நன்கு தெரிந்தே அசாமிலும் அருணாச்சல பிரதேசிலும் 2021க்கு முன்பே அதாவது 2004 தொடங்கியே பாமாயில் மரங்கள் பயிரிடப்பட்டன. கோத்ரெஜ், சங்கி சாமியார் ராம்தேவின் பதஞ்சலி, 3F Oil palm Agrotech ஆகிய கம்பெனிகள் மாநில அரசின் உதவியுடன்

விவசாயிகளை அணுகி கொள்ளை லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி பாமாயில் பயிரிட தூண்டின. ஏற்கனவே இருந்த இயற்கையான காடுகள் அழிக்கப் பட்டன, அந்த இடங்களில் பாமாயில் பயிரிடப்பட்டது. இதுவரை கண்டிடாத அளவுக்கு தாராள மானியம், இலவச மரக்கன்றுகள்,  விளைபொருட்களை சந்தையில் விற்க உதவி, உள்நாட்டில் இதனால் வளர்ச்சி என்று பல்வேறு ஜிகினா விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமானவை என்று மக்கள் பின்னர் உணர்ந்தார்கள். ஆனால் அந்த அழிவை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை.


3

ஒரே நிலத்தில் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதுதான் மண்ணின் வளத்தை பெருக்கும். பணப்பயிர் ஆன பாமாயில் மரத்தை மட்டுமே பயிரிடுவதால் அதாவது  ஒற்றைப்பயிர் விவசாயம் செய்வதால் monoculture எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கேடுகள், உணவு உத்தரவாதத்துக்கு நேர்ந்துள்ள அபாயம் ஆகியவற்றை அரசும் கார்பொரேட் நிறுவனங்களும் பழங்குடியின மக்களிடம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

மிஜோரம் மாநிலத்தில் 2004 தொடங்கி ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் மட்டுமே பயிரிட்டதால் ஏற்பட்ட சேதாரம் ஆனது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். அவற்றை பட்டியல் இடலாம்:

* Food and Agricultural Organization வெளியிட்ட வரைபடங்களின்படி வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல.

* மிஜோரம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல. ஒரு பாமாயில் மரம் ஒரு நாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அதாவது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு நாளைக்கு 40000-50000 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதாவது இரண்டு ஹெக்டேர் பாமாயில் மரங்களுக்கு தேவையான தண்ணீர் ஆனது ஒரு மிஜோர குடிமகன் ஒரு வருடம் முழுவதும் உட்கொள்ளும் குடிநீருக்கு சமம்.

 வடகிழக்கு மாநிலங்களில் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும்.  ஆக இருக்கும் நிலத்தடி நீரையும் பெய்யும் மழை நீரையும் ஒட்டுமொத்தமாக பாமாயில் மரங்கள் உறிஞ்சி எடுத்துவிட, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

* பாமாயில் மரங்களுக்கு உரமும் பூச்சி மருந்தும் அதிகம் தேவை என்பதால் வடகிழக்கு மாநிலங்களின் காடுகள் தம் இயற்கையான மண்ணின் வளத்தை இழந்தன.

* அறுவடை செய்யப்பட்ட பாமாயில் பழங்களை 24 மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்தி எண்ணெய் எடுக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பிழிவு ஆலைகளுக்கு பழங்களை கொண்டு செல்லத்தக்க சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கொள்முதல் மையங்கள் எதுவும் இல்லாததால் பழங்கள் அழிந்து நட்டத்தில் முடிந்தது.

* அவ்வாறு அழிந்து போன பழங்களால் நிலம் மேலும் நாசமானது.

* பாமாயில் மரத்தின் அடிப்பாகம் மிக மிக பெரிதாக வளரும் என்றும் வருடத்திற்கு நான்கு முறை இந்த மரங்களை சீராக்க வேண்டும் என்றும் அதற்கென கூலியாட்களை நியமித்து கூலி கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

* பாரம்பரிய காடுகளில் பன்னெடுங்காலமாக விளைந்த அல்லது விளைவிக்கப்பட்ட உணவுதான்ய, தாவர வகைகளை உண்பதை தமது உணவுப்பண்பாடாக கொண்டிருந்த பழங்குடியினர், ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் விவசாயத்தால் தமக்கான உணவு உத்தரவாதத்தை இழந்தனர். அதாவது தம் உணவுப்பண்பாட்டை கைவிடும் அவலம் நேர்ந்தது.

* இக்காடுகளில் இயற்கையாக விளைந்த உணவுப்பயிர்கள், மருத்துவ தாவரங்கள், தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆகியவை அளிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியன பயிரிடப்பட்டதால் மக்களுக்கான உணவு உத்தரவாதம் இல்லாத அவலநிலை ஏற்பட்டது. இது நீண்டகால பாதிப்பு ஆகும்.

* ஒரு ரூபாய் வருமானமோ லாபமோ கிடைக்காத ஒரு விவசாயி நாளடைவில் தன் நிலத்தை பாமாயில் பயிர் செய்ய தூண்டிய கார்பொரேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டு வெளியேறுவார். அவ்வாறு வெளியேறியுள்ளார்கள். அதன் பின் தம் பாரம்பரிய நிலங்களில் கார்பொரேட் கம்பெனிகளின் கூலிகளாக உழைத்தார்கள். ஆக கார்ப்பரேட் முதலைகளுக்கு வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கிட்டத்தட்ட இலவசமாக கொடுத்துவிடும் பிஜேபி அரசின் திட்டம் இப்படி நிறைவேறுகிறது.

* ஒன்றிய, மாநில அரசுகளின் அடாவடி சட்டங்கள், சட்ட திருத்தங்களால் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட நிலங்களின் மீது கிராம பஞ்சாயத்துக்களோ பிற கிராம சமூக கவுன்சில்களோ எந்த உரிமையும் கொண்டாட முடியாத கையறு நிலை ஏற்பட்டது.


* காடுகளின் அல்லது வடகிழக்கு மாநிலங்களின் பல்லுயிர்பெருக்கம் நாசமானது. 


* உண்மையில் காடுசாரா வணிக நடவடிக்கைகளின் பொருட்டே வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கார்பொரேட் நிறுவனங்கள் கைப்பற்றின. காட்டு சுற்றுலா, வனவிலங்கு காட்சிசாலைகள், சபாரி ஆகிய தொழில்களை இக்காடுகளில் தொடங்கி நடத்த கார்பொரேட் முதலைகளுக்கு குத்தகை விடலாம் என்றுதான் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள 2023 சட்ட முன்வடிவு கூறுகிறது. 

* ஒருமுறை பாமாயில் பயிர் செய்தால் அந்த மண்ணில் வேறு விவசாயம் செய்ய முடியாது.

* உலகின் இரண்டாவது பெரிய பல்லுயிர்பெருக்க பிரதேசம் ஆன வடகிழக்கு மாநிலங்கள் இந்த கார்பொரேட், அரசுகள் கூட்டணியால் தம் இயற்கை சூழலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அழிந்து போனதாக கருதப்பட்ட Bugun Liocichla என்ற பறவை வடகிழக்கில் மட்டுமே கண்டறியப்பட்டது.


4

மிஜோரம் மாநில அரசு New Land Use Policy NLUP என்ற திட்டத்தை நடைமுறை படுத்தியே தன் மாநிலத்தில் பாமாயில் விவசாயத்தை ஊக்குவித்தது. பாமாயில் விவசாயம் அதாவது ஒற்றைப்பயிர் விவசாயம் மிஜோரத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்ததை கண்ட மணிப்பூர் விவசாயிகள் அதாவது மலைவாழ் குக்கி மக்கள் தம் மாநில அரசு மிஜோரம் அரசின் NLUP ஐ நகல் எடுப்பதை 2014இலேயே எதிர்த்தார்கள். பாரம்பரிய, இயற்கை சார்ந்த  ஜூம் jhum சுழற்சி விவசாய முறையே சிறந்தது என்ற தம் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பாமாயில் விவசாயத்தின் அனுபவம் என்ன?

வளர்ந்து வரும் நாடுகள் ஆன தென் கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் விவசாயம் என்பது மிகப்பெரிய எதிர்மறையான அனுபவத்தை அவர்களுக்கு கொடுத்தது என்பது வரலாறு. 

இந்த நாடுகள் தமது கசப்பான பாமாயில் விவசாய அனுபவங்களை பிறகு Round Table On Sustainable Palmoil என்ற அமைப்பை ஏற்படுத்தி பாமாயில் விவசாயத்தை மிக கவனமாக முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நலம் பேணும் அரசுகளால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்வதையே கொள்கையாக கொண்ட அரசால் நாடு நாசமாவது மட்டுமே நடக்கும்.


5

ஒன்றிய பிஜேபி அரசின் பிரதமரும் அமைச்சர்களும் கடந்த பத்து வருடங்களில் மிகப்பல முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தது ஏன் என்ற கேள்வியையும் இப்போது நடக்கும் மணிப்பூர் கலவரங்களின் பின்னணியையும் மேலே சொல்லப்பட்ட ஒன்றிய அரசு, கார்பொரேட் கூட்டணி மேற்கொண்டுள்ள மக்கள் விரோத கொள்கைகளோடு இணைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது. 

ஒருபுறம் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கும் இந்து மத மக்களுக்கும் இடையே கலவரங்களை தூண்டி விடுவது; மறுபுறம் அதானி, அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரும் கார்பொரேட் முதலைகள் தம் சொத்தை பல நூறு மடங்கு பெருக்கி கொள்ள ஏதுவாக வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதும் பல லட்சம் கோடி மதிப்புக்கு கார்பொரேட் வரியை தள்ளுபடி செய்வதும் வங்கிகள் திவால் ஆவதை அனுமதிப்பதும் மிகத்தீவிரமாக தெளிவாக பிஜேபி அரசால் நடத்தப்படுகிறது. 

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டுமே 4500 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள கட்சிதான் பிஜேபி. கொரோனாவின் பேரால் மக்களிடம் திரட்டப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கும் அதே கட்சியின் பிரதமர்.

தன் தேசத்தின் ஒரு மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஓராயிரம் ஆண்களால் நிர்வாணமாக வீதிகளில் நடத்தப்பட்டது தெரிந்தும் கூட அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல, அது பற்றி கடுகளவும் கவலை இன்றி அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர் மனைவிகளுக்கு வைரமோதிரம், சேலை ஆகிய பரிசுபொருட்களை தேர்வு செய்யும் வேலையில் கவனமாக இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெருத்த வாய்வீச்சு வீரராக திறந்து வைத்த இந்த தேசத்தின் பிரதமர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வந்து மணிப்பூர் பற்றி பேச அச்சப்படுகிறார்.

இந்த பின்னணியில் பார்க்கும்போது மணிப்பூர் கலகங்களை இரண்டு மக்கள் பிரிவினருக்கு இடையே ஆன கலவரம் ஆக பிஜேபியும் ஆர் எஸ் எஸ் சார்பு ஊடகங்களும் சித்தரிக்க முயல்கின்றன, ஒன்றிய பிஜேபி அரசு+கார்பொரேட் கூட்டணி கொள்ளையை  திட்டமிட்டு மறைக்கின்றன என்பது தெளிவு.

இதை புரிந்துகொண்டு மெய்தெய் இன மக்களும் குக்கி இன மக்களும் கைகோர்த்து, வடகிழக்கின் இந்து, முஸ்லிம், கிறித்துவ, புத்த சமய மக்களும் கைகோர்த்து பிஜேபி ஒன்றிய அரசு + கார்பொரேட் கூட்டணியை எதிர்க்க வேண்டும். வடகிழக்கில் அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டும் எனில் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மதசார்பற்ற சக்திகளும் அமைதியை விரும்பும் இயக்கங்களும் வடகிழக்கு மக்களிடையே இந்த பின்னணியை வலுவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். 

இந்திய நாடு ஒருசில கார்பொரேட் கம்பெனிகளின் சொத்து அல்ல என்பதிலும் மக்களிடையே பிளவை உருவாக்கி தந்திரமாக நாட்டை ஒருசில கார்பொரேட்டுகளுக்கு விற்பனை செய்யும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலை அம்பலப்படுத்துவதே நம் முன் உள்ள உடனடியான பெரும் கடமை என்பதிலும் உறுதியாக இருப்போம்.

... ...

வெள்ளி, ஜூலை 21, 2023

மணிப்பூர்: பின்னோக்கிய பார்வையும் கலவரங்களுக்கான காரணங்களும்

 

1

வடகிழக்கு மாநிலங்கள் ஏழு. ஏழு சகோதரிகள் அதாவது seven sisters என அழைக்கப்படும் ஏழு மாநிலங்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் ஆகியவற்றில் இந்து மத மக்கள் பெரும்பான்மையினர்; மேகாலயா, நாகாலாந்து, மிஜோரம், அருணாசல பிரதேஷ் ஆகியவற்றில் கிறித்துவ மக்கள் பெரும்பான்மையினர். அசாமில் குறிப்பிடத்தக்க அம்சம் அங்கே மட்டும் ஒரு கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள், அதாவது வட கிழக்கின் 93% இஸ்லாமிய மக்கள் அசாமில் வாழ்கின்றனர். 

இந்தியாவின் கிறித்துவ மக்களில் 30% பேர் வடகிழக்கு மாநிலங்களில்தான் வாழ்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க அளவில் புத்த மத மக்கள்

திரிபுரா, சிக்கிம், அருணாசல பிரதேஷ், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் ஏறத்தாழ 50 சிறுபான்மை இனக்குழுக்களும், 10 பெரும்பான்மை இனக்குழுக்களும் உள்ளன என்று சொல்லப்பட்டாலும் அது சரியான கணக்கும் அல்ல, ஏனெனில் நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. 

பேராசிரியர் பிபன் சந்திரா எழுதிய India after Independence 1947-2000 (1999, Penguin)

என்ற நூலில் கூறுகிறார்: "1971 மக்கள்தொகை கணக்கின்படி இந்திய மக்கள்தொகையில் நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் இருந்துள்ளன. அன்றைய கணக்கின்படி 38 மில்லியன் அதாவது 3 கோடியே 80 லட்சம் பழங்குடி மக்கள் இருந்துள்ளனர். அதாவது அன்றைய மக்கள்தொகையில் 6.90 விழுக்காடு.

பழங்குடி மக்கள் மத்திய பிரதேசம், பிஹார், ஒரிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகியமாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில்தான் ஒட்டுமொத்த வடகிழக்கு மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தார்கள். மலைகளிலும் காடுகளிலும் வசித்த பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்க்கை கூறுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், அன்றாட வாழ்வியல் ஆகிய அனைத்தும் பிற மக்களின் அதாவது பழங்குடியினர் அல்லாத மக்களின் வாழ்க்கை கூறுகளில் இருந்து பெரிதும் மாறுபட்டவை.

இந்த அடிப்படையான முக்கியமான மானுடவியல் கூற்றினை, விஞ்ஞான அடிப்படையில் ஆன உண்மையை, சமூக வரலாற்றை எவர் ஒருவர் புரிந்துக்கொள்ள முற்படுகிறாரோ, புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்கின்றாரோ அவரால் மட்டுமே பழங்குடி மக்களின் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களின் வாழ்வியலை, அரசியல் பொருளாதார நிலையை அல்லது மாற்றங்களை புரிந்துகொள்ள முடியும், சரியான கோணத்தில் அணுக முடியும்.

1952இல் பிரதமர் நேரு இவ்வாறு எழுதினார்: வடகிழக்கு எல்லைப்பிரதேசம் ஆனது அரசாங்கங்களின் சிறப்பு கவனத்திற்கு மட்டுமே உட்பட்டது அல்ல, மாறாக இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட கவனத்துக்கும் உரியதாகும். அந்த மக்களுடன் நமது தொடர்பானது நமக்கு அதாவது எஞ்சிய பகுதி இந்திய மக்களுக்கு நன்மைபயக்கும் என்பதுடன் வடகிழக்கு பிரதேச மக்களுக்கும் நன்மை பயப்பதாகும். இந்தியாவின் கலாச்சார வல்லமைக்கும் கலாச்சார பன்முகத்தன்மைக்கும் வளமைக்கும் வடகிழக்கு பிரதேச மக்கள் சிறப்பான பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்கள்".

நேருவின் இந்தப் பார்வையை அரசியலமைப்பு சட்டத்தின் ஆறாவது செட்யூலில் நம்மால் உணர முடியும். ஆறாவது செட்யூல் அசாமின் பழங்குடி மக்களுக்கு மட்டுமே பொருந்தியதாகும். பழங்குடி மக்கள் தம்மைத்தாமே ஆண்டுகொள்ளும் உரிமையை வழங்குகிறது; சுயாட்சி பெற்ற மாவட்டங்கள், மாவட்ட-பிரதேச கவுன்சில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு அவை அசாம் மாநில சட்டமன்ற அதிகாரத்தை மீறாத வகையில் சில சட்டங்களையும் நீதி நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ள வகை செய்தது.

நேருவின் இந்த அணுகுமுறைகள் அசாமின் எல்லைப்பிரதேசங்களை உள்ளடக்கிய North East Frontier agency அதாவது NEFA 1948இல் உருவாகக்காரணமானது. அது ஒரு யூனியன் பிரதேசமாக தனிப்பட்ட நிர்வாக அமைப்புக்கு உட்பட்டு இருந்தது. 1987இல்தான் NEFA ஆனது அருணாசல பிரதேசம் ஆக மாறி தனிமாநிலம் ஆனது.

இதன் பிறகு அசாம் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த பழங்குடி மக்களுக்கும் சமவெளிப்பகுதிகளில் இருந்த அசாம், வங்காளி மக்களுக்கும் இடையே பிரச்னைகள் தோன்றின, முக்கிய காரணம்: பழங்குடி மக்களின் கலாச்சார பழக்க வழக்கங்களும் அசாமிய, வங்காள மக்களின் கலாச்சார பழக்கவழக்கங்களும் ஒத்துபோகவில்லை. தமது தனிப்பட்ட கலாச்சார அடையாளங்கள் மறைந்து விடுவதாக, அல்லது பழங்குடி அல்லாத மக்களால் அழிக்கப்படுவதாக பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தார்கள்.

இப்பிரச்சினை பெரிதாகி 1950களின் நடுவே தமக்கான தனிப்பட்ட மலையக மாநிலம் வேண்டும் என்று பழங்குடியினரின் ஒரு பிரிவினர் கோரிக்கை எழுப்பினார்கள். ஆனால் மிக வலிமையாக இக்கோரிக்கை வற்புறுத்தப் படவில்லை, ஒன்றிய அரசு இக்கோரிக்கையை கண்டுகொள்ளவும் இல்லை. தொடர்ந்து அசாம் மாநிலத்துக்குள்ளேயே பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர்.

1960இல் ஒரு திருப்பமாக அசாமிய தலைவர்கள் ஒன்றுகூடி அசாமிய மொழிமட்டுமே மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைக்க, மலைப்பிரதேசத்தின் பல அரசியல் கட்சிகள் ஒன்று கூடி  All party hill leaders conference (APHLC) என்ற ஒற்றை அமைப்பின் கீழ் திரண்டு இந்திய அரசுக்குள்ளேயே தமக்கான தனிப்பட்ட மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.

போராட்டங்கள், கடை அடைப்பு என பழங்குடி மக்களின் கோரிக்கை தீவிரம் அடைந்தது. 1962 சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்த பழங்குடி மக்களின் தலைவர்கள்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வென்றனர்! அசாம் சட்டமன்றத்தை புற க்கணிப்பதாகவும் அவர்கள் பிரகடன்ம்செய்தார்கள். 

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன, இது குறித்து விவாதித்துமுடிவு செய்ய பல கமிஷன்கள், கமிட்டிகள் நியமிக்கப்பட்டன.

1969இல் அரசியமைப்புசட்டம் திருத்தப்பட்டது. அசாமுக்குள் ஒரு மாநிலமாக மேகாலயா உருவாக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களை மறு வரைவு செய்யும் திட்டத்தின் கீழ் 1972இல் மேகாலயா தனி மாநிலம் ஆனது.  Garo, Khasi, jaintia பழங்குடி மக்களை உள்ளடக்கியது மேகாலயா.

தொடர்ந்து மணிப்பூர், திரிபுரா ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக உருவாகின.

...

2

மணிப்பூரின் எல்லைகள்: வடக்கில் நாகாலாந்து, தெற்கில் மிஜோரம், மேற்கில் அசாம், கிழக்கில் பர்மாவின் (மியான்மர்) Sagaing பிரதேசமும் அதே தென்கிழக்கில் பர்மாவின் ச்சின் Chin மாகாணமும் எல்லைகள். 

மொழி: அதிகாரப்பூர்வ மொழி மணிப்புரி. யதார்த்தத்தில் அது மெய்த்தேய் Meitei மொழி. Sino-Tibetan மொழிகள் பேசும் மக்களும் உள்ளார்கள். Sini-Tibetan மொழிக்குடும்பம் ஏறத்தாழ 400 மொழிகள் கொண்ட பெரிய குடும்பம்.

விடுதலைக்கு முந்தைய காலத்தில் மணிப்பூர் மன்னராட்சியின் கீழ் இருந்துள்ளது. 1930களில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 1939இல் இரண்டாவது உலகப்போர் தொடங்கிடவே பேச்சுவார்த்தை தொடரவில்லை. மன்னராட்சி இருந்தபோதும் 1948இல் ஒரு சட்டப்பேரவை நிறுவப்பட்டது. 1941 முதல் 1955 வரை மன்னராக இருந்த மஹராஜா புத்தசந்திரா 1949 செப்டம்பர் 21 அன்று இந்திய அரசுடன் மணிப்பூரை இணைத்த்துக்கொள்ள முடிவு செய்தார். 1949 அக்டோபர் 15 அன்று இந்திய அரசுடன் முறையாக இணைந்தது.

இங்கே ஒரு நிகழ்வை குறிப்பிடவேண்டும். மஹராஜா புத்தசந்திரா அசாம் கவர்னரை சந்தித்து மணிப்பூரின் சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றி பேசும்பொருட்டு ஷில்லாங் சென்றதாகவும் ஆனால் ஷில்லாங்கில் அவரை நிர்ப்பந்தம் செய்து இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட செய்ததாகவும் வரலாறு சொல்கிறது. சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.L

இந்த இணைப்பு பற்றி மணிப்பூர் சட்டமன்றத்தில் பேசவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை என்பதுடன் மணிப்பூர் மக்களின் ஒப்புதலும் இல்லை என்பது மணிப்பூரில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, மணிப்பூர் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணினார்கள். ஆக அரசுக்கும் மணிப்பூர் மக்களுக்கும் இடையே ஆன கசப்புணர்வு 1949இலேயே தோன்றிவிட்டது எனலாம். 1949க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் யூனியன் பிரதேசமாக இருந்தது. அதன் பின் ஆன காலம் முழுவதும் அங்கே 

 ஆயுதம் ஏந்திய பல குழுக்கள் முளைத்து தொடர்ந்து அரசியல் சிக்கல்கள் நீடிக்கும் மாநிலம் ஆக மணிப்பூர் உள்ளது.

... 

"அரசியல் சட்டப்படி வரையறுக்கப்பட்ட" நிபந்தனைகளுக்குள் ஒரு சமூகம் அல்லது சமூகக்குழு வருமாயின் அச்சமூகத்தை சார்ந்தவர் பழங்குடி அதாவது scheduled tribe என்ற உரிமை பெற்றவர் ஆகிறார்.

மணிப்பூரின் Meitei மெய்த்தேய் இனத்தை சேர்ந்த (பெரும்பான்மை மக்கள்) தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்டகாலமாக வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் மக்களில் சிறுபான்மையினர் ஆன ஏற்கனவே பழங்குடியினர் ஆக உள்ள மலைவாழ்மக்கள் ஆன குக்கி சமூகத்தினர் மெய்த்தேய் மக்களின் இக்கோரிக்கையை அடியோடு எதிர்க்கிறார்கள். காரணங்கள் பல.

.....

3

மணிப்பூர் இரண்டு முக்கியமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு மணிப்பூரின் பரப்பளவில் 10% நிலப்பரப்பு ஆகும். மெய்த்தேய் வகுப்பினர் இப்பள்ளத்தாக்கில் வாழ்கிறார்கள். இவர்கள் சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBC. மணிப்பூர் மக்கள்தொகையில் இவர்கள் 64%க்கும் அதிகம். மணிப்பூரின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் 60, இப்பள்ளத்தாக்கில் மட்டும் 40 தொகுதிகள் உள்ளன. அதாவது மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் பலம் வாய்ந்த இடத்தில் மெய்த்தேய் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ பிரிவை சேர்ந்த இந்து மத மக்கள். இசுலாமிய மக்களும் இருக்கிறார்கள்.

மற்றொரு பகுதி மலைப்பகுதி. குக்கி பழங்குடி மக்கள் வாழும் பகுதி. மணிப்பூரின் பரப்பளவில் 90% நிலப்பரப்பு ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி மக்களில் 35%க்கும் மேல் இந்த 90% நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் சட்டமன்றத்தின் 20 தொகுதிகள் மட்டுமே இங்கே உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 33 பழங்குடி இனமக்கள் முக்கியமான இரு பிரிவுகளுக்குள் அடங்குவர்: நாகா பழங்குடியினர், குக்கி பழங்குடியினர்.  Kuki-Chin-Mizo சமூக மக்கள்.

 இவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ மக்கள். இவர்கள் சட்டப்படி செட்யூல்ட் பழங்குடியினர் Scheduled Tribes.

இரு பிரிவு மக்களும் சமூக, கலாச்சார அடிப்படையிலும் பூகோள ரீதியான வரலாற்று கூறுகள் அடிப்படையிலும் இவ்வாறு OBC, ST என வரையறுக்கப்பட்டுள்ளனர்.

....

4

1963 முதல் 2017 வரையில் ஆன காலகட்டத்தில் பெரும்பாலான காலங்களில், ஒன்பது முறை, காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. 1977-79 காலத்தில் ஜனதா கட்சியும் 2001இல் சுமார் நான்கு மாதங்கள் சமதா கட்சியும், இடைப்பட்ட காலங்களில் மாநிலத்தில் உள்ள கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன.

2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையும், அதன் பின்னும் பி ஜெ பி ஆட்சி செய்கின்றது. இரண்டு ஆட்சியிலும் நாங்தோம்பாம் பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். 2007இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் 2016இல் விலகுகின்றார். அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்து கட்சியில் இருந்து வெளியேறி பி ஜெ பியில் சேர்கிறார். 2017 தேர்தலில் பி ஜெ பி (முதல் முறையாக) ஆட்சி அமைக்கிறது. பிரேன் சிங் முதல்வர் ஆகிறார். 

...

5

கலவரங்களுக்கான காரணங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் பழங்குடி மக்களுக்கு என பல சிறப்பான உரிமைகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே முன்னேறிய சமூகத்தினர் பழங்குடி சமூக மக்களை எந்த விதத்திலும் சுரண்டிவிடாத அளவுக்கு பழங்குடிகளை பாதுக்காக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. பழங்குடியினர்க்கு உரிமையான நிலப்பகுதிகளை பழங்குடி அல்லாத ஒருவர் விலைக்கு வாங்க முடியாது, உரிமை கொண்டாடவும் முடியாது.

அரசியல் சட்டம் பிரிவு 371(c) இன்படி மணிப்பூரின் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்க பட்டுள்ளன. பழங்குடி அல்லாத மக்களுக்கு மணிப்பூர் பழங்குடி மக்களின் நிலங்களை கைமாற்றவோ விற்கவோ முடியாது. மேலும் அரசு வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீடு இப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Lol

2015ஆம் ஆண்டு அப்போது இருந்த காங்கிரஸ் அரசு சட்ட மன்றத்தில் மூன்று சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது: The Manipur Land Revenue and Land Reforms (Seventh) Amendment Bill, 2015; The Protection Of Manipur People's Bill, 2015; The Manipur Shops and Establishments Act (Second) Amendment Bill, 2015 ஆகிய மூன்று மொழிவுகள்.

இந்த மூன்று சட்டமுன்வடிவுகளையும் பழங்குடி குக்கி மக்கள் எதிர்த்தார்கள். திரும்ப பெற வலியுறுத்தினார்கள். 

காரணங்கள்: 1. இந்த சட்டமுன்வடிவுகள் மெய்த்தேய் மக்களை பழங்குடியினர் ஆக அங்கீகரிக்கும் அம்சங்களை கொண்டுள்ளன. அவ்வாறு செய்தால் மாநிலத்தின் பொருளாதாரமும் அரசியலும் மெய்த்தேய் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். ஏற்கனவே தமது மலைப்பகுதிகளுக்கு அதாவது பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் பள்ளத்தாக்கு மக்களுக்கு அதாவது மெய்த்தேய் மக்களுக்கு மடை மாற்றி விடப்படுவதாகவும் தம் நலன்களுக்கு அரசு போதிய அளவு நிதி ஒதுக்குவது இல்லை என்றும் குக்கி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

2. மூன்று சட்டமுன்வடிவுகளும் 'மணிப்புரி' அல்லாத ஒருவர் அந்த மாநிலத்துக்குள் நுழைய வேண்டும் எனில் அதற்கான பிரத்யேக பயண நுழைவு அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று சொல்கின்றன. Inner Line Permit என்று அழைக்கப்படும் அனுமதி அது. இதே போன்றதொரு அனுமதிக்கான நிபந்தனை அருணாசல பிரதேஷ், மிஜோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உண்டு.

3. இந்த முன்வடிவுகள் சட்டமானால் சமவெளிப்பகுதிகளில் வாழும் மெய்த்தேய் இன மக்கள் தமது (குக்கி) வாழிடமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிக்கவும் தமது பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றிக்கொள்ளவும் வழி ஏற்படும் என்று குக்கிகள் ஆவேசம் அடைந்தார்கள், போராட்டங்கள் வெடித்தன.

மறுபுறம் மெய்த்தேய் மக்கள் இந்த சட்ட முன்வடிவுகளை வரவேற்று அவற்றை சட்டமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினார்கள்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்வடிவுகளை அன்றைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பினார்கள். The Protection Of Manipur People's Bill, 2015 என்ற சட்ட முன்வடிவில் 'மணிப்புரி' என்ற வரையறைக்கு தெளிவான விளக்கம் இல்லை என்று கருத்து கூறி அதை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார், மற்ற இரண்டு முன்வடிவுகளையும் மாநில அரசின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார்.

...

6

2017இல் பி ஜெ பி ஆட்சி அமைந்தது, பிரேன் சிங் முதல்வர் ஆனார். மெய்த்தேய் மக்கள் பழங்குடியினர் ஆக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று பி ஜெ பி தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருந்தது. எனவே இக்கோரிக்கையை மெய்த்தேய் மக்கள் கையில் எடுத்தார்கள். குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு உயிர் கொடுத்து மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்கள்.

மெய்த்தேய் மக்களின் நீண்ட கால கோரிக்கையான இது, The Protection Of Manipur People's Bill, 2018 என்ற வடிவத்தில் பி ஜெ பி ஆளும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குக்கி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மிக எளிதாக இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது, ஏனெனில் 60இல் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஜெ பி கட்சிக்காரர்கள்!

The Protection Of Manipur People's Bill, 2018 என்ற சட்டமுன்வடிவின்படி 1951க்கு முன்புவரை மணிப்பூரில் வாழ்ந்தவர்கள், 1951க்கு முன்பே இருந்து இப்போதும் வாழ்கின்றவர்களுக்கு 'அந்த மண்ணின் பூர்வகுடிகள்' அதாவது indigenous people என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.  ஆக பாங்கல் Pangalaa இசுலாமியர்கள், மணிப்பூரின் ST மக்கள், மேலும் 1951க்கு முன்பான காலத்தில் இருந்து மணிப்பூரில் வசிக்கும் இந்தியக்குடிமக்கள் அனைவரும் 'மணிப்புரிகள்' அதாவது மணிப்பூரின் பூர்வகுடிமக்கள் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த வரையறைக்கு உட்படாத எவரும் மணிப்புரி அல்லாதவர் Non-Manipuri என்றும் ஒருமாத காலத்துக்குள் அவர்கள் தமது பெயரை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கட்டளை இட்டது. 

மிக முக்கியமான பிரச்சனைக்கு உரிய அம்சம் அல்லது தந்திரம் இந்த சட்ட முன்வடிவில் உள்ளது என்று குக்கிகள் குற்றம்சாட்டியது எது எனில் National Register for Citizens, 1951 தேசிய குடிமக்கள் பதிவேட்டிலோ Village Directory, 1951 கிராம பதிவேட்டிலோ குக்கி பழங்குடி மக்களின் பெயர்கள் இருக்காது அல்லது சரியான துல்லியமான தகவல்கள் இருக்காது. மணிப்பூர் என்ற மாநிலம் உருவானது 1972 ஜனவரி1 என்பதால் 1972க்கு முன்பு என்ற காலக்கெடுதான் நியாயமானதாக இருக்கும் என்று Joint Action Committee against Anti-Tribal Bills என்ற அமைப்பு (பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட முன்வடிவுகளுக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பு) வலியுறுத்தியது. குக்கிகளை அடையாளப்படுத்த தக்க 

வாக்காளர் பட்டியல், நிலவுடைமை பத்திரம் உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் 1951க்கு முன்பான காலத்தில் இருக்காது. எனவே இந்த நிபந்தனை அல்லது காலக்கெடு குக்கி இன பழங்குடி மக்களை அவர்களின் பாரம்பரிய மலைப்பகுதியில் இருந்தும் வாழிடங்கள், காடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் தந்திரம் இதில் அடங்கியுள்ளதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

.....

7

பிரச்சினையின் பிற வடிவங்கள்:

1. குக்கி பழங்குடியினர் வாழும் பகுதியில் மெய்த்தேய் மக்களோ பிறரோ நிலம் வாங்க முடியாது. ஆனால் மெய்த்தேய் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை பிற பகுதி மக்கள் வாங்க முடியும்.

2. Reserve forest எனப்படும் காப்புக்காடுகள் என்று அரசு அறிவித்த பகுதிகளில் இருந்து குக்கி பழங்குடியினர் மக்களை அரசு வெளியேற்றிய நடவடிக்கை குக்கி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

2020இல் ஏறத்தாழ 1346 வீடுகளை Langol காப்புக்காடு பகுதியில் இடிக்க அரசு முடிவு செய்தது, 95 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்தன. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது. Langol பகுதி இம்பால் நகரின் மலையடிவாரத்தில் உள்ளது.

3. வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் பழங்குடியினர் வாழிடங்களை அரசு பறிமுதல் செய்வதும் சில ஆயிரம் ரூபாய் பணத்தை இழப்பீடு என்ற பெயரில் கொடுப்பதும் "பழங்குடி மக்கள் மீதான சட்டப்பூர்வமான தாக்குதல்" அன்றி வேறில்லை.

4. ஓபியம் எனப்படும் கசகசாவை போதைப்பொருள் ஆக பயிரிடுவது மணிப்பூரின் ஆகப்பெரிய சமூகக்கேடு. ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பூமியாக இருந்த நிலைமாறி மணிப்பூர் இப்போது ஓப்பியத்தின் உற்பத்திக்களனாக மாறி விட்டது. போதைப்பொருட்களுக்கு எதிரான அரசு நிர்வாக அமைப்பான Narcotics and Affairs of Border இன் தகவல் படி  மணிப்பூரில் 2017-23 கால இடைவெளியில் 15,400 ஏக்கர் பரப்பில் ஓபியம் பயிரிடப்பட்டுள்ளது. 2,518 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களை தம் பாரம்பரிய வாழிடங்களில் இருந்து வெளியேற்றவே போதைப்பொருளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒரு போர்வையாக பி ஜெ பி அரசு ஏவுகிறது என குக்கி பழங்குடியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்ட நாள் அன்று சுராசந்த்பூரில் போராட்டம் உடனடியாக வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். 11 வயது சிறுவனும் ஒருவன். குக்கிகள் அவனது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 632 நாட்கள் வைத்திருந்தார்கள்.

....

அரசுகள் சொல்வது போல் இது வெறும் இரண்டு குழுக்களுக்கு இடையே, அதாவது பழங்குடியினர், பழங்குடி அல்லாதவர்கள் இடையே ஆன பிரச்னை மட்டுமேதானா? உண்மை அங்கே முற்றுப்பெறுகிறதா?

இல்லை. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370ஐ அவசரகதியில் பி ஜெ பி அரசு நீக்கிய உடன் அங்கே நிலங்களை வாங்கிட இந்தியாவின் பிற பகுதிகளின் சாமான்ய மக்களில் எத்தனை பேர் அங்கே நிலங்களை வாங்கி குவித்து விட்டார்கள்? இத்தனை வருடங்களுக்கு பிறகு அங்கே லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வெகு விரைவில் இந்திய, சர்வதேச கார்பொரேட்டுகளுக்கு காஷ்மீரின் கதவுகளை அகலமாக திறப்பார்கள். மேலும் UAE ஐ சேர்ந்த ஒரு பெரிய கார்பொரேட் கம்பெனி அங்கே மால் தொடங்கிட அனுமதி பெற்றுள்ளதாம்.

அதே போல் மெய்த்தேய் இன மக்களில் பெரும்பாலோர் குக்கி பழங்குடியினர் வாழும் பகுதிகளை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதும் தெளிவான உண்மை! எனில் மெய்த்தேய் மக்களின் பேரால் இந்த கோரிக்கையை பின்னால் இருந்து தூண்டி விடுவோர் ஆதிக்க வர்க்கத்தின் பிரதிநிதிகளே. பணம் படைத்த கார்பரேட் கும்பலின் ஏஜெண்டுகள் ஆன மெய்த்தேய் ஆதிக்கவர்க்கத்தின் கோரிக்கைதான் அது. 

கடந்த மார்ச் 29 அன்று வனப்பாதுகாப்பு சட்டம்,1980இல் ஒன்றிய பி ஜெபி அரசு கொண்டுவந்த திருத்தம் இது:  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டின் பாதுகாப்பு-ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் முன்அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணப்பயிர் வேளாண்மை செய்யவும், காடுகளுக்கு அடியில் உள்ள வளங்களை கொள்ளையிடவும் அனுமதி அளித்தது. அத்திருத்தத்தின் மூலம் வனப்பாதுகாப்பு சட்டத்தை ஒழித்துக்கட்டி இயற்கை வளங்களை கார்பொரேட் டுகள் கொள்ளையடிக்க  வழி செய்து கொடுத்தது மோடியின் ஒன்றிய அரசு. இதை நன்கு புரிந்துகொண்டுள்ள குக்கி இன பழங்குடியினர் தம் போராட்டங்களை கார்பொரேட் முதலைகளுக்கு எதிராகவும் நடத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளார்கள். 

...

9

ஆப்பசைத்த குரங்கின் கதை


குக்கி அமைப்புகள் 2000ஆவது வருடத்திற்கு முன்பே தமக்கான தனி குக்கி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வந்தார்கள். ஒரு உடன்பாட்டுக்கு வரும் விதமாக Kuki land territorial council என்ற நிர்வாக அமைப்பு குக்கி பழங்குடியினரின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட ஒத்துகொண்டார்கள். மணிப்பூர் அரசு, மணிப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றின் நிர்வாக, நிதி அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுன்சில் ஆக இது இருக்கும்.

2008 ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது. முக்கியமாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நிறுத்திவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்ற நிலையை ஏறத்தாழ 25 ஆயுதம் தாங்கிய குக்கி அமைப்புகள் ஏற்றுக்கொண்டார்கள். அப்படியான ஆயுதம் ஏந்திய அமைப்புகள் ஏறத்தாழ 32 இருந்தன. இந்த உடன்படிக்கை Suspension of Operations (SoO) என்று அழைக்கப்பட்டது.

இந்த உடன்பாடு ஒரு வருட காலத்துக்கு செல்லும், அதன்பின் ஒவ்வொரு வருடமும் உடன்படிக்கையை நீட்டித்துக்கொண்டு வந்தார்கள்.

இந் SoOஇன் படி UPF என்ற United Peoples Front, KNO எனப்படும் Kuki National Organization ஆகிய ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகள் தம் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக கையெழுத்து இட்டனர், ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. Kuki Zo சமூகத்தின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான United People's Front ஒன்பது வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கியது, ஏறத்தாழ 2,000 கிளர்ச்சியாளர்களை கொண்டது. KNO 23 ஆயுதம் ஏந்தி ய குழுக்களை உள்ளடக்கியது, இங்கேயும் ஏறத்தாழ 2,000 கிளர்ச்சியாளர்கள் உள்ளனர்.

இது ஒரு முத்தரப்பு உடன்படிக்கை அதாவது Tripartite agreement. ஒன்றிய அரசு, மாநில அரசு, குக்கி கிளர்ச்சியாளர் அமைப்புகள் ஆகிய மூன்று தரப்பினரும் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கை. மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் பகுதிகளில் 14 கண்காணிப்பு முகாம்களை நிறுவி அமைதியை கொண்டு வர முயற்சி செய்வது இதன் நோக்கம்.

ஆனால் மெய்த்தேய் சமூகத்திற்கு ஆதரவான People's Alliance for Peace and Progress என்ற அமைப்பு SoO உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வற்புறுத்தியது. அதற்கு அந்த அமைப்பு சொன்ன காரணங்கள்:

1. இந்த சமாதான கால இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு  ஆயுதம் ஏந்திய குக்கி அமைப்புகள் தம்மை பலப்படுட்கள் கொள்கின்றனர்.

2. மியான்மரில் (பர்மா) இருந்து குக்கி இன மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரவைத்து தம் அமைப்புகளில் இணைத்துக் கொள்கிறார்கள்.

3. ஓபியம் பயிரிடுவது, ஆயுதக்கடத்தல் ஆகியவற்றுக்கு சட்டவிரோதமாக எல்லைதாண்டி வரும் குக்கிகளை ஈடுபடுத்துகிறார்கள்.

4. SoO உடன்படிக்கையை பயன்படுத்தி காடுகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் குக்கிகள் ஆக்கிரமிக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனை மூலமாக பணத்தை பெருக்குகிறார்கள்.

...

இந்த முத்தரப்பு உடன்படிக்கை ஒப்பந்தம் மாநிலத்தில் அமைதியை கொண்டுவந்தது என குக்கிகள் உறுதியாக நம்பினார்கள். "ஆனால்  சமாதானமம் அமைதியும் முற்றிலுமாக திரும்புவதற்கு முன்பாக SoS உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மெய்த்தேய் வலியுறுத்துவதற்கு ஒரே காரணம் குக்கிகளுக்கு எந்த பலனும் கிடைக்க கூடாது என்பதே."

பி ஜெ பி முதலமைச்சர் பிரேன் சிங் செய்த தவறு ஆப்பசைத்த குரங்கின் கதையாக ஆனது. இந்த SoS உடன்படிக்கையை மேலும் வலுவாக்குவதற்கு பதிலாக மெய்த்தேய் குழுக்களின் நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்தார். 2023 மார்ச் 10 அன்று அமைச்சரவையை கூட்டி SoO உடன்படிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதாவது உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது என்று பொருள். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம், முதலமைச்சர் பிரேன் சிங் மெய்த்தேய் சமூகத்தை சேர்ந்தவர்.

ஒன்றிய அரசுக்கும் இதனை தெரிவித்தார். ஆனால் ஒன்றிய பி ஜெ பி அரசு மாநில பிஜேபி அரசின் இந்த முடிவை ஏற்பதில் தயக்கம் இருப்பதாக தெரிவித்தது. 

மாநில முதல்வரின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கை எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒரு உடன்படிக்கையை கைவிடுவதால் விளையக்கூடிய  கேடுகளை கூட ஒரு முதல்வரால் முன்னுணர முடியவில்லை என்று சொல்லிவிட முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டால் 40 எம் எல் ஏ க்களை கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் நிர்ப்பந்தத்துக்கு அவர் அடிபணிந்து போனதில் வியப்பில்லை.

....

10

இந்த நேரத்தில் மலைப்பிரதேசமான சுரசாந்த்பூர், தெங் நூபல் Tengnoupal ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன. இப்போராட்டங்களை ஒருங்கிணைத்தது Indigenous Tribal Leaders Forum என்ற அமைப்பு.  இந்த கிளர்ச்சிகளுக்கான காரணம்: குக்கிகள் வாழும் பகுதிகளில் பல வீடுகளை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. பல கிறித்துவ சர்ச்சுகளுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்ட து. அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக காரணம் சொன்னது. இந்த போராட்டங்களுக்கு பின் குக்கி ஆயுத கிளர்ச்சி அமைப்புகள் இருப்பதாக அரசு கருதியது. இப்போராட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை, சட்ட விரோதமானவை என்று அறிவித்தது மட்டுமின்றி இந்த போராட்ட ஊர்வலங்களை அனுமதித்த டெபுடி கமிஷனர், எஸ் பி ஆகியோருக்கு விளக்கம் தருமாறு நோட்டிஸ் அனுப்பியது.

இந்த கெடுபிடிகள் யாவும் தங்களை ஒடுக்குவதற்கான மாநில அரசின் நடவடிக்கை என்றே குக்கி மக்கள் கருதியதில் வியப்பில்லை. மூன்று கிறித்துவ ஆலயங்களை மாநில அரசு இடித்து தள்ளியப்பின் மாநில அரசு இந்து மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட மெய்த்தேய் சமூகத்துடன் கைகோர்த்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மணிப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (மணிப்பூரின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆன Kim Kangte  கூறுவதை கேட்போம் (News click, 5.7.2023):

கலவரகும்பல்களுடன் சேர்ந்து சாதாரண சிவிலியன் மக்களும் கலவரம் செய்தார்கள், உண்மைதான். ஆனால் Arambai Tenggol அமைப்பினர் சீருடை அணிந்து இந்த கலவரத்துக்கு தலைமை தாங்கியதை நான் என் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தேன். (Arambai Tenggol என்ற அமைப்பு பெரும்பான்மை மெய்தெய் மக்களின் அமைப்பு). இந்த சம்பவங்கள் யாவும் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இல்லையெனில் மே 3, 4, 5 ஆகிய மூன்று நாட்களும் குக்கி வாழும் பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்தது எப்படி?l

Arambai Tenggol, Meitei Leepun (மெய்த்தேய் ஆயுதகுழுக்கள்) ஆகிய இரண்டும் ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நடக்கும் கலவரங்களுக்கு பின்னால் மதம் உள்ளது. சர்ச்சுகளை எரித்தார்கள், வீடுகளை எரித்தார்கள், பின்னர் மனிதர்களை கொலை செய்தார்கள். ஆக இப்போது மெய்த்தேய்க்கும் குக்கிகளுக்கும் இடையே ஆன கலகம் என்று சித்தரிக்கிறார்கள். இது உண்மை இல்லை. உண்மையில் பெரும்பாலான மெய்த்தே சர்ச்சுகளை எரித்தவர்கள் மெய்த்தேய் அமைப்பான Arambai Tenggol இன் ஆட்களே.

....

Kim Kangte யின் கூற்றுக்கு வலு சேர்க்கும் செய்திகள் உள்ளன.

Bangalore Manipur Students Association என்ற அமைப்பு பெரும்பான்மை மெய்த்தேய் சமூக இளைஞர்களை கொண்ட அமைப்பு. மே 3 கலவரங்களுக்கு பின் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதன் இந்துத்துவா பின்னணியை அம்பலமாக்குகிறது: "இந்து கிராமங்களை குக்கி ஆயுத கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரிப்பதால் அப்பாவிகள் சாகின்றார்கள்... குக்கி ஆயுத போராட்டகாரர்களும் சட்ட விரோத பர்மிய குடியேறிகளும் போதை வஸ்து மாஃபியாக்களால் ஆதரிக்கப்படுவோர் ஆவர். இந்த குக்கிகள்தான் முற்றிலும் அமைதியான இந்து மணிப்புரி குடியிருப்புகளை தீயிட்டு அழித்தார்கள்".

 அப்பட்டமான ஆர் எஸ் எஸ் சொல்லாடல் அன்றி வேறென்ன? 'அப்பாவிகள்' யார்? மெய்த்தேய் இன மக்களுக்குள், அவர்களது அமைப்புகளுக்குள் ஆர் எஸ் எஸ் நுழைந்து விட்டது அல்லது அந்த அமைப்புக்களே ஆர் எஸ் எஸ் அமைப்புகள்தான் என்று சொல்லலாம். இப்போது மணிப்பூர் பற்றி எரிவதற்கான காரணம் வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளே. 

Forum of Religious for Justice and peace என்ற அமைப்பு சொல்கிறது: இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான ஒரு பிரச்சனை இப்போது கிறித்தவர்களுக்கு எதிரான ஒரு விசயமாக மாற்றப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் உள்ளிட்ட அனைத்து கிரித்துவர்களும் இப்போது மணிப்பூரில் கலவரங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மெய்த்தேய், மார்ஸ், மிஜோஸ், ச்சின் இனங்களை சேர்ந்த அனைத்து கிறித்துவர்களும் இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Arch Bishop Lumon: அரசியல் சட்ட விழுமியங்களுக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் விரோதமான, ஒளிவுமறைவான மதவாத சதிகளும் பிற்போக்கு சித்தாந்தங்களும் இப்பிரதேசத்தில் நுழைந்து மாநிலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே, சமாதானத்துடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த மக்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளன.

Father Velickagam, Vicar General, இம்பால்: அவர்கள் எங்களை திட்டமிட்டு துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்குகிறார்கள், எங்கள் சர்ச்சுகளையும் நிறுவனங்களையும் தாக்குகிறார்கள். கத்தோலிக்க மக்களை எளிதில் அடையாளம் கண்டு தாக்குகிறார்கள்.

நாங்கள் போலீசை தொலைப்பேசியில் மீண்டும் மீண்டும் அழைத்தாலும் பதில் இல்லை. கலவரம் செய்த குற்றவாளிகளோ தெருக்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எமது Pastoral Training Centre ஐ தாக்கினார்கள். சர்ச்சுக்குள் தீ வைத்தார்கள்... சர்ச்சுகள், பிற சொத்துக்கள் என  20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்ட்டுள்ளன. இந்த இழப்புக்கு ஈடு செய்ய அரசும் இதுவரை முன்வரவில்லை. கலாச்சார காவலர்கள் என்ற பேரில் மதவாத சக்திகள் கிறித்தவ மதத்தை அழிக்கும் முயற்சியில் எங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றார்கள்.

குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை இந்து மத மக்களுக்கு எதிரானவர்களாக இஸ்லாமிய மக்களை சித்தரித்து தன் வாக்கு வங்கி அரசியலை நடத்திக்கொண்டு இருக்கும் ஆர் எஸ் எஸ் சின் உறுப்புகள் ஆன பி ஜெ பி, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தல், வனவாசி கல்யாண் போன்ற அமைப்புகள் இதுவரை தாம் நுழைய முடியாத வடகிழக்கு மாநிலங்களில் கால் பதிக்கவே பல பத்தாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே பகைமையை மூட்டி கலவரங்களை தூண்டுகிறது. 

....

11

மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட கலவரங்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் அண்டை மாநிலங்களுக்கும், எல்லை கடந்து மியான்மர், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்து இருப்பதாக வாசிக்கும் செய்திகள் சொல்கின்றன. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் உண்மையான கள நிலவரத்தை யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. மாநிலத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. அவரோ ஹெலிகாப்டரில் பறந்து சென்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து வந்தார்.

சி பி எம், சி பி ஐ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் நிவாரணமுகாம்களில் தங்கியுள்ள மக்களையும் மாநில கவர்னரையும் சந்தித்து வந்த பின் "தமது மாநில முதல்வர் மீது நம்பிக்கை இழந்துள்ளனர், பிரதமரின் மவுனத்தை கேள்வி கேட்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்கள். 

மணிப்பூருக்கு சென்ற உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர்கள் ஆன ஆனி ராஜா, நிஷா சித்து, தீக்ஷா த்விவேதி ஆகியோர் மீது ஜூலை 8 அன்று எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளது காவல்துறை.

அண்டை மாநிலம் ஆன மிஜோரத்தின் பி ஜெ பி துணைத்தலைவர் ஆர்வன்ராம் சுவாங்கா இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்: மணிப்பூரில் சர்ச்சுகள் எரிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்பது கலவரங்களுக்கு ஆதரவு அளிப்பதே. 357 சர்ச்சுகள், கிறித்துவ போதகர்களின் வீடுகள், சர்ச் அலுவலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கிறித்துவர்களுக்கும் கிறித்துவ மதத்துக்கும் எதிராக இழைக்கப்படும் இந்த குற்றச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்".

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஏவல் துறைகளையும் கவர்னர்களையும் ஏவி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல், தான் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் பெயரளவுக்காவது சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியாமல் போனது மிக மிக கேவலமானது.

கடந்த ஒன்பது வருடங்களில் முப்பது தடவைக்கும் மேல் நம் பிரதமர் வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் சென்றுள்ளார். 80 நாட்களுக்கு மேல் பற்றி எரியும் ஒரு வடகிழக்கு மாநிலம் பற்றி இதுவரை ஒரே ஒரு சொல்லைக்கூட அவர் உதிர்த்து விடாமல் மிக கவனமாக இருக்கிறார். கலவரத்தில் ஈடுபடுவோரை ஒரே ஒரு சொல்லாலும் கூட கண்டனம் செய்யவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தும், நம்பிக்கை தரும் ஒரே ஒரு சொல்லை கூட இதுவரை உதிர்க்கவில்லை. அவர் சார்ந்துள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பு எவ்வாறு திட்டமிடுகிறதோ எவ்வாறு கட்டளை இடுகிறதோ அவ்வாறே அவர் நடந்து கொள்கிறார்.

மே  மாத முதல் வாரத்தில் ஒரு பெரிய ஆண்கள் கூட்டம் இரண்டு குக்கி இன பெண்களை உடலில் இருந்த ஆடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு நிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக நடத்தி சென்ற காட்சி இன்று வெளியாகிட நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைர மோதிரம் தேர்வு செய்வதிலும் பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு சேலை தேர்வு செய்வதிலும் இந்திய பிரதமர் தன் பொன்னான நேரத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறார். 

....

20.7.2023

வியாழன், ஜூலை 20, 2023

மேரி மக்தலீனாவின் அருளாசியும் இந்திய விண்வெளி சாதனைகளும்


இந்தியாவில் முதன்முதலாக ஒரு ராக்கெட் ஏவப்பட்டது கேரளாவில் திருவனந்தபுரத்தில் தும்பா என்ற கடற்கரை ஓர மீனவ கிராமத்தில் இருந்துதான்.

அப்போது ISRO கிடையாது. 1962இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு National Committee for space research என்ற ஆய்வு நிறுவனத்தை அணுசக்தி துறையின்கீழ் நிறுவினார். அவருக்கு தூண்டுதலாக இருந்தவர் குஜராத்தை சேர்ந்த விக்ரம் சாராபாய் என்ற விஞ்ஞானி. ISRO முறையாக நிறுவப்பட்டது 15.8.1969 அன்று.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, 1975இல் அதை விண்ணில் ஏவியது சோவியத் யூனியன்.

திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிமீ வடக்கில் உள்ள கடற்கரை மீன்பிடி கிராமம்தான்

தும்பா. புனித பிரான்சிஸ் சேவியர் பதினாறாம் நூற்றாண்டில் கேரளாVவுக்கு வந்தபோது தங்கியிருந்த கிராமம் அது. மண் சுவராலும் தென்னை ஓலைகளாலும் ஒரு தேவாலயத்தை புனித பிரான்சிஸ் கட்டுகின்றார். ஏறத்தாழ100 வருடங்களுக்கு பிறகு புனித பார்தலோமியோவ்வுக்கானஆலயமாக மண்சுவர் அகற்றப்பட்டு நிலையான கட்டிடம் கட்டப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஆலயம் மேரி மக்தலீன் ஆலயமாக மாறியது. ஆலய கட்டுமானம் நடந்துகொண்டு இருந்தபோது கடற்கரையில் ஒதுங்கிய மிக அழகிய சந்தனமர சிலைதான் அந்த மேரி மக்தலீன் உருவச்சிலை. அதுவே ஆலயத்தின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகியது. அதுவரை காணப்படாத மிகப்பெரிய மரம் ஒன்று அதே கரையில் ஒதுங்க, அதுவே ஆலயத்தின் கொடிமரமாக ஆக்கப்பட்டது. மரித்த யேசு உயிர்த்து எழுந்தபோது மேரி மக்தலீனுக்கே முதலில் காட்சியளித்தார் என்பது கிறித்துவ மக்களின் நம்பிக்கை.

... ...

இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்தை எங்கே நிறுவலாம் என்ற கேள்வி எழுந்தபோது புவியின் காந்தப்புல நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த தும்பா சிறந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டது. 

அன்று விக்ரம் சாரா பாயும் ஹோமி பாபாவும் திட்டமிட்டபடி சாராபாய் மேரி மக்தலீன் ஆலயத்தின் பிஷப் ஆக இருந்த ரெவரெண்ட் பீட்டர் பெர்னார்டு பெரீராவை சந்திக்கிறார். அது ஒரு சனிக்கிழமை. தும்பாவின் அருமையை பிஷப்புக்கு எடுத்துச்சொல்லி சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஆலயம், நிலம் அனைத்தையும் அரசுக்கு விட்டுத்தருமாறு சாராபாய் வேண்டுகிறார். பிஷப் புன்னகை புரிந்து மறுநாள் வர சொல்கின்றார். 

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டுக்கூட்டத்தில் கூடியுள்ள கிறித்துவ மக்களிடையே பிஷப் உரையாற்றுகிறார்: என் குழந்தைகளே! இங்கே புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி வந்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்காக நமது ஆலயத்தையும் நான் வாழும் வீட்டையும் விட்டுக்கொடுக்குமாறு அவர் நம்மிடம் வேண்டுகிறார். விஞ்ஞானம் உண்மையை தேடுகிறது, அது தனிமனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்துகிறது. மதத்தின் உயரிய வடிவம் என்பது ஆன்மீகமே. ஆன்மீகவாதிகள் கடவுளிடம் எதை வேண்டுகிறார்கள்? மனித மனங்களில் அமைதியை வேண்டுகிறார்கள். சுருக்கமாக சொல்வேன் - நானும் விக்ரமும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம் - விஞ்ஞானமும் ஆன்மீகமும் கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டுகின்றன, எதற்கு? மனிதனின் சிந்தனையும் உடலும் வளம் பெற வேண்டும் என்பதற்கே. ஆக, குழந்தைகளே, கடவுளின் ஆலயத்தை ஒரு நெடுங்கால விஞ்ஞான திட்டத்திற்காக ஒரு விஞ்ஞானி கேட்கிறார், கொடுத்து விடலாமா?

கூட்டத்தில் பெரும் அமைதி நிலவுகிறது. ஒருசில நொடிகள் மட்டுமே. அதன்பின் ஒட்டுமொத்த சபையும் 'ஆமென்' என்று முழங்க அந்த நொடியில் இருந்து தொடங்குகிறது எதிர்கால இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு.

... ....

Thumba Equatorial Rocket Launching Station என்ற இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமும் முதல் ராக்கெட் ஏவுதளமும் கிறித்துவ மக்கள் மனமுவந்து அளித்த இடத்தில்தான் அமைந்தது. தேவாலயமும் சுற்றி இருந்த மீனவ மக்களின் வீடுகளும் காலி செய்யப்பட்டன. ஆலயத்தின் மேரி மக்தலீன் பீடத்திற்கு முன்புதான் இந்தியாவின் முதற்கட்ட ராக்கெட்டுகள் பலவும் வடிவமைக்கப்பட்டன, உருவாக்கப்பட்டன. அமெரிக்கா NASAவில் செய்யப்பட்டு இந்தியா வாங்கிய Nike-Apache ராக்கெட் மேரி மக்தலீனுக்கு முன்புதான் ஒருங்கிணைக்கப்பட்டது. 

ஆலயத்தின் மையமான இடத்தில் TERLS நிர்வாக அலுவலகம் இயங்கியது. பின்னர் ராக்கெட் கட்டுமானத்திற்கு என தனி கட்டிடம் கட்டப்பட்டபோது ராக்கெட் பணிகள் அங்கே மாற்றப்பட்டன. அதன்பின் ஆலயமும் பிற கட்டிடங்களும் விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டன. ஏவுதளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு தொடக்கப்பள்ளிதான் ஏவுதள அலுவலகம் ஆக இருந்துள்ளது. பின்னர் அது நூலகமாக மாற்றப்பட்டது.

மிக உயர்ந்த அழகிய ஆலயத்தின் கட்டுமானத்திற்கோ மேரி மக்தலீன் உருவச்சிலைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி பாதுகாக்கப்பட்டது. 

கிராமத்தின் மீனவ மக்கள் கடற்கரையின் மீதான தம் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. தமது மீன்பிடித்தொழில் நடவடிக்கைகள், வலைகளை காய வைப்பது ஆகிய அன்றாட வாழ்க்கையை இதே கடற்கரையில்தான் நடத்தி வந்தார்கள். ராக்கெட் ஏவும் முன்பு அறிவிக்கப்பட்டால் கடற்கரையில் தமது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து ஒத்துழைப்பார்கள்.

விண்வெளி ஆய்வின் தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் இருந்த தலைசிறந்த விஞ்ஞானிகளை அரசு தேர்வுசெய்து இங்கே வரச்செய்தது. அப்படி வந்த விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி நேராக ராக்கெட் ஆய்வு மையத்திற்கு வந்தால் ஆலயத்தில் இருந்த 'குடியிருப்பு' பகுதிக்கு செல்வதும் அதன் பின்னர் வந்து சேரும் குடும்பத்தினரும் இந்த 'குடியிருப்பு' பகுதியில்தான் வசிக்க வேண்டும். 

ஆலயத்தை சுற்றி இருந்த பழைய செங்கல் கட்டிடங்களும் கூட பயன்பாட்டில்தான் இருந்துள்ளன. ராக்கெட் கட்டுமான பிரிவு, காவலர் பிரிவு, உணவகம் உள்ளிட்ட பல துறைகள் இயங்கியுள்ளன. பிஷப்பின் இல்லத்தில்தான் TERLS இன் இயக்குனருக்கும் பிற மூத்த விஞ்ஞானிகளுக்கும் ஆன அலுவலகம் ஆக இருந்துள்ளது.

1985இல் தும்பா ஏவுதளமும் குடியிருப்பு பகுதிகளும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்த பின்னர், ஆலயம் விண்வெளி ஆய்வுக்கண்காட்சியாகமாக மாறியது.

... ...

இந்தியாவின் முதல் SLV3 ஐ வடிவமைத்தவர் அப்துல்கலாம். ரோஹிணி செயற்கைக்கோளை சுமந்து சென்றது. நாள் 18.7.1980.

அப்துல் கலாம், சின்யா ராமச்சந்திர ராவ் சத்யா ஆகியோரால் அங்கே வடிவைக்கப்பட்ட ஒரு எந்திரத்தை 1968 பிப்ரவரி 2 அன்று அன்றைய பிரதமர் இந்திரா இயக்கி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் Centaur rocket ஐ மாலை 6 மணிக்கு இந்திராவே இயக்கி ஏவுவதாகவும் திட்டமிடப்பட்ட து. மிக அபாயகரமான ஒரு வேதிப்பொருள் அடங்கிய ஒரு சாதனத்தை அந்த ராக்கெட்டுடன் இணைக்கும் வேலையில் விஞஞானி சி ஆர் சத்யா ஈடுபட்டு வருகிறார். நேரமோ ஓடிக்கொண்டிருக்க, மூன்று கி மீ தொலைவில் இருந்தவர்களுக்கு ஜீப் அனுப்பி வைக்க நிர்வாகம் மறந்துவிட்டதே!  வேறு வழியின்றி சத்யாவும், வேலப்பன் நாயரும் சைக்கிளில் காரியாரில் வைத்து தள்ளிக்கொண்டு போன காட்சியை கருப்பு வெள்ளை யில் படம் ஆக்கியவர் உலகப்புகழ் பெற்ற Henri Cartier Bresson!!! 

விக்ரம் சாராபாய் 1942இல் மிருணாளினியை மணம் புரிந்தார், அவர்களது மகள் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய். கேப்டன் லட்சுமி அவர்களின் இளைய சகோதரிதான் மிருணாளிணி. 

... ...

இன்று பிற்பகல் 2.30க்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து

ஏவப்பட்ட சந்த்ராயன் 3 விண்கலத்தை விண்ணுக்கு எடுத்துக்கொண்டு சென்ற ஏவுவாகனம் LVM3. 

சந்த்ராயன் 3 வெற்றி பெறட்டும்! ஆமென்.

...