சனி, அக்டோபர் 21, 2023

மேல்மருவத்தூர் மடம் செய்த ஆன்மிக 'புரட்சி'

பார்ப்பனீய மடங்கள் ஆனாலும் இடைசாதி மடங்கள் ஆனாலும் உழைக்கும் மக்களை யதார்த்தமான வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவும் போராடும் ஜனநாயக சக்திகளை நோக்கி அவர்கள் செல்லாமல் தடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும் நிறுவனங்களே. மக்களை ஏமாற்றி பணம் சுருட்டுவது பிரதான தொழில் என்றாலும்.

சங்கர மடங்கள் மேல்சாதி சிறுபான்மை பிராமணர்களுக்கு எனில் இடைசாதி மடங்கள் ஆகப்பெரும்பான்மை பிராமணர்கள் அல்லாத மக்கள் பிரிவினரை தம் பக்கம் இழுத்தன என்பதுதான் நுட்பமான அபாயம். 1980களுக்கு பிறகு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஆசிரியர் சிறிய அளவில் சாமியார் தொழிலை தொடங்குகிறார். பெரியார், அண்ணா பிறந்த மண்ணில்தான் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பேராதரவுடன் அவர் தம் தொழிலை விரிவாக்குகிறார். அமைச்சர் பெருமக்கள், டெல்லி அதிகார மட்டம், ஒரு கட்டத்தில் மோ டி என மேல்மருவத்தூரில் வந்து குவிய உள்ளூர் ஆட்சி நிர்வாகமும் போலீஸ் நிர்வாகமும் அடங்கி போவதுடன் மடத்துக்கு சேவகம் செய்யும் துறைகள் ஆகின. இயற்கையாகவே அவர் ஒரு அரசியல்வாதிகளின் கருப்புபண பினாமி ஆகிறார்.

பல சதுர கி மீ பரப்பளவு நிலங்கள் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்டன. அவர் அனுமதி இன்றி நிலம் விற்க வாங்க முடியாது என்ற நிலை புகுத்தப்பட்டது. எல்லாகார்ப்பரேட் மடங்களும் போலவே இங்கும் கல்வி மருத்துவம் என்ற சேவை முகமூடி தேவைப்பட ஏற்கனவே அரசு நிர்வாகத்தில் பலமாக செல்வாக்கை நிலைநிறுத்திய பங்காரு அதையும் செய்தார். தன் மனைவியை உள்ளூராட்சி தலைவர் ஆக கொண்டுவந்தார். அதாவது கணவர் சாமியார் மனைவி உள்ளூர் நிர்வாக தலைவர். ஆஹா! அவரது ஒரு மகனுக்கு த நா அரசின் மிக உயர்ந்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பெண் எடுத்தார்கள்.

அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன. மருத்துவ கல்லூரி விடுதியில் தண்ணீர் வராததால் குரல் கொடுத்த மாணவன் அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வும் தொடர்ந்து நடந்த கலவரத்தில் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் சூறையாடப்பட்டதும் வரலாறு. நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் அல்லது மாணவர்கள் அமைப்பு எதுவும் குரல் எழுப்பிட முடியாது, எழுப்பினால் நிர்வாகத்தின் ரவுடிகள் சிறப்பாக கவனிப்பார்கள்.

பல்மருத்துவகல்லூரி தொடங்கி அனுமதி பெற பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி நிர்வாகத்தின் மூன்று பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்மருவத்தூர் மக்கள் சமூகத்திலும் உள்ளூர் அரசியலிலும் தேர்தல்களிலும் ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது, உள்ளூர் மக்கள் பிரச்னைகளுக்கு திராவிட கட்சிகளும் சரி இடதுசாரி இயக்கங்களும் சரி எந்த அளவுக்கு குரல் எழுப்ப முடிகிறது, கடந்த 30, 35 வருடங்களில் உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட போராட்ட இயக்கங்கள் என்னென்ன, என்னென்ன வடிவங்களில் நடத்தப்பட்டன என்ற வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் மட்டுமே மேல்மருவத்தூர் என்ற தமிழ்நாட்டின் பகுதியில் உள்ளூர் அரசியல் இயக்கங்களின் பங்கு வளர்ந்துள்ளதா தேய்ந்து உள்ளதா என்பதை புரிந்துகொள்ள முடியும். தேய்ந்து இருந்தால் அதற்கான காரணம் வெட்ட வெளிச்சம்தான். இந்த லட்சணத்தில் பெண் உரிமை கோவில் நுழைவு என்று ஒரே கூச்சலாக உள்ளது. என்ன கோவில்? என்ன நுழைவு? ஜனநாயக இடதுசாரி இயக்கங்களின்பால் திரள வேண்டிய ஆண்களையும்

பெண் சமூகத்தையும் ஒரு சேர பங்காரு அடிகளார் ஹைஜாக் செய்யவில்லையா? இதில் பெண் உரிமை எங்கே வந்தது?

... ...

பார்ப்பனீய மடங்களுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுப்பதும் இடைசாதி பினாமி மடங்களிலும் பீடங்களிலும் பெண்களுக்கு அனுமதி அளிப்பதும் இரண்டுமே ஜனநாயக விரோத சக்திகளுக்கு உவப்பானவைதான். ஒன்றில் மறுப்பதை இன்னொன்றில் balance செய்வது, இதில் நமக்கென்ன உள்ளது உவப்பு அடைய? இரண்டையும் தாண்டிய பங்காருவின் ஜுனியர் ஜக்கியின் வழிபாட்டில் ஜீன்ஸ், டிரம்ஸ், ட்ரம்பெட், கும்பல் கும்பலாக வெளிநாட்டு ஸ்டைல் டான்ஸ், வண்ண விளக்குகள் என்று வேறு ஒரு வடிவத்தில் உள்ளதே, மேல்மருவத்தூரை விடவும் அங்கே பெண்ணுரிமை ஜாஸ்தி என்று மார்க் போடலாமா? 

உண்மையில் ஜக்கி, நித்யானந்தா, பிரேமானந்தா எல்லோருக்கும் பங்காருதான் வழிகாட்டி. எல்லோரும் அவரை தொடர்ந்து வந்தவர்கள். கர்நாடகாவில் இருந்து ஜக்கி இங்கே யாரை முன்னுதாரணமாக கொண்டு வந்தான்? பல நூறு ஏக்கர் அரசு வனங்களை அவன் வளைத்துப்போட்டு டெல்லியின் அரசியலை நடத்துகிறான் எனில் பங்காருதான் முன்னோடி. பெண்கள், சொத்து என்று கொட்டம் அடித்து இப்போது நாட்டை விட்டு ஓட அனுமதிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கும் ஜக்கிக்கும் பங்காருவுக்கும் அரசு நிர்வாகத்தின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு. 

வளர்ச்சியாக வார வழிபாட்டு மன்றம் என்ற ஒரு அமைப்பு. நூற்றுக்கணக்கான மக்கள் திரளை பார்க்க முடிகிறது. இது பார்ப்பனர் அல்லாத உழைக்கும் மக்கள் கூட்டம். இந்த கூட்டம் இயல்பாக யாரை நோக்கி வந்திருக்க வேண்டும்? பார்ப்பனீய இந்துத்துவா அமைப்பான ஆர் எஸ் எஸ் காலப்போக்கில் பார்ப்பனர் அல்லாத மக்களை திட்டமிட்டு தன் வட்டத்துக்குள் கொண்டு வந்தது எனில் பங்காரு, ஜக்கி போன்றோரின் வழிபாட்டு அல்லது அபிமானிகள் அமைப்புகளும் அதே வேலையைத்தான் செய்கின்றன. சுருக்கமாக இந்த அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று complementary ஆனவை. அதாவது எப்படி ஆனாலும் உழைக்கும் மக்கள் ஆண் பெண் வேறுபாடு இன்றி இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் பின்னால் திரண்டு விட கூடாது என்பதில் கவனமாக உள்ளன. உழைக்கும் மக்களின் எதிரிகளான அரசு அமைப்புக்கும் அரசு எந்திரத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இப்படியான ஆன்மீக முகமுடி பேர்வழிகளும் அமைப்புகளும் தேவைப்படுகிறார்கள், இந்த அமைப்புகள் சிதைந்து விடாமல் கவனமாக இருப்பார்கள். வனநிலத்தை ஜக்கி ஆக்கிரமிக்கவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்ததை மறந்து தள்ளிவிட்டு போக முடியாது.

வள்ளலார், வைகுண்டசாமி வரிசையில் திருடர்களை சேர்க்க முயற்சி செய்ய வேண்டுமா? அந்த வேலையை பார்ப்பனீய கும்பல் முயற்சி செய்து பார்க்கும், நம் வேலை அது அல்ல.

20.10.2023

கருத்துகள் இல்லை: