திங்கள், அக்டோபர் 16, 2023

மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

 
மத வடிவத்தில் ஒரு வர்க்கப்போராட்டம்

- எஸ் வி ராஜதுரை

வரலற்றில் வர்க்க போராட்டங்கள் மதவடிவங்களிலும் வெளிப்படுவதை மார்க்சியம் எடுத்துக்காட்டியிருக்குறது. இதற்குப் பலரும் அறிந்துள்ள எடுத்துக்காட்டு, 'ஜெர்மனியில் உழவர் போர் என்னும் நூல். இதில் எங்கெல்ஸ், தாமஸ் முன்ஸர் என்பவரின் தலைமையில் நடந்த ஏழை உழவர்களின் போராட்டத்தில் விவிலியமும் கிறிஸ்தவக் கருத்துக்களும் எவ்வாறு ஒடுக்குவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்குகிறார். தென்னிந்தியாவில் சமணபெளத்த மதங்களுக்கு எதிராக பக்திமார்க்கம் என அழைக்கப்படும் சைவமும் வைணவமும் நடத்திய போரட்டங்களும்கூட வணிக வர்க்கத்திற்கு எதிராக சாதிய நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் நடத்திய போராட்டங்களே எனச் சில மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

'மாப்பிள்ளைமார்' அல்லது 'மாப்ளாக்கள்' என அழைக்கப்படும் மலையாள முஸ்லிம்கள் 1921-22ஆம் ஆண்டுகளில் நடத்திய கிளர்ச்சியும் கூட வர்க்கப்போராட்டத்தின் வடிவமே என்பதை பிரிட்டிஷ் வரலாற்றறிஞர் கான்ராட் உட் Conrod Wood நிறுவுகிறார். அவரது நூலின் தமிழாக்கம் ஆன 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' (அலைகள் வெளியீடு, சென்னை), அன்றைய சென்னை பெருமாநிலத்தின் (Madras Presidency) பகுதியாக இருந்ததும் இன்றைய கேரள மாநிலத்தை சேர்ந்ததுமான மலபார் பகுதியில் 1921 ஆகஸ்ட் முதல் 1922 முற்பகுதி வரை நூற்றுக்கணக்கான சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ நான்கு இலட்சம் மாப்பிள்ளைமார் வாழ்ந்த பகுதியில் நடந்த இக்கிளர்ச்சி, பார்ப்பனர்கள், நாயர்கள் உள்ளிட்ட மேல் சாதி இந்துக்களுக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக நடந்த வர்க்கப்போராட்டம் ஆகும். மலபார் பகுதியில் இருந்த நிலவுடைமை அமைப்பு அன்றைய சென்னை பெருமாநிலத்தின் வேறெந்த பகுதியிலும் காணப்படாத ஒன்று. 

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தின் அனுபவ பாத்தியதையை பெற்றிருந்த (ஆனால் சட்டப்படி நிலத்தின் உடைமையாளர்களாக இல்லாது இருந்த) சாதிய இந்துக்களுக்கும் (ஜென்மிகள்), அவர்களிடம் குத்தகைதாரர்களாகவும் கூலி உழவர்களாகவும் இருந்த மாப்பிள்ளைமார்களுக்கும் இடையே, ஜென்மிகளின் சுரண்டலுக்கு எதிராக நடந்த இக்கிளர்ச்சி யில் ஜென்மிகளுக்கு சார்பாகவே பிரிட்டிஷ் இந்திய நிர்வாக யந்திரம் நடந்துகொண்டது.

ஜென்மிகளுக்கு ம் சாதி இந்துக்களுக்கும் எதிராக 1836-1919ஆம் ஆண்டுகளிலேயே பல்வேறு கிளர்ச்சி கள்  நடந்து இருப்பினும் 1921_22 ஆம் ஆண்டு கிளர்ச்சி தான்  மேலும் பரவலானதாகவும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் நடத்தப்பட்டது. எனினும் இதில் மலபார் பகுதியில் இருந்த எரநாடு போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் இருந்த மாப்பிளைமார் மட்டுமே கலந்துகொண்டனர். ஏராளமான மேல் சாதி இந்துக்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பாலியல் வன்முறைகளும் நடந்தன. ஜென்மிகளுக்கு எதிராக மாப்பிள்ளைமார் நடத்திய போராட்டத்திற்கு அடிப்படைக்காரணம் பொருளாதார சுரண்டல் என்றாலும் குத்தகைதாரர்களும் ஏழை உழவர்களும் ஒன்று கூடுவதற்கு தடையாக அவர்கள் தொடர்பு வட்டம் குறுகியதாக இருந்தது. சிதறிக்கிடந்த அவர்களை நெருக்கமான தொடர்புக்குள் கொண்டுவந்தவை அவர்கள் வழிபாட்டு தலங்களே ஆகும்.

இஸ்லாமிய மதத்தலைவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக அந்த கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றாலும் 'தங்கள்கள்' என சொல்லப்படும் மதத்தலைவர்கள் சிலர் அந்த வர்க்கப்போராட்டத்திற்கு பிற மதத்தவர் இடையே இருந்த சுரண்டப்படும் மக்களினதும் ஜனநாயக சக்திகளினதும் ஆதரவை திரட்டுவதற்கு பதிலாக மூர்க்கத்தனமான மதவெறி போராட்டமாக அதை திசை திருப்பினர். அதேபோல் மாப்பிள்ளைமார் இடையே இருந்த வணிக வர்க்கமும் ஆதரவு தரவில்லை. விதிவிலக்காக சில வணிகர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோதிலும் கிளர்ச்சிக்கு மத அடிப்படை வழங்கியவர்கள் கற்பிதம் செய்த 'மாப்ளா ராஜ்ஜியம்' நமது காலத்தின் தாலிபான் ஆட்சியின் உருவரைவு என்று கூட சொல்லலாம். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் பரந்துபட்ட இஸ்லாமிய மக்களின் விடுதலைபோராட்டங்கள்,  மத அடிப்படைவாதிகளின் தலைமையின் கீழ் வந்தால், புதிய வகையான பாசிசம்தான் உருவாகும் என்பது அன்றைய தங்கள்களில் இருந்து இன்றைய ஒசாமா பின் லேடன் வரை தொடர்ந்து மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த கிளர்ச்சியை பொருத்தவரை தேசியவாதிகள் மேற்கொண்ட நிலைப்பாட்டை கான்ராட் உட் விளக்குகிறார்: "(மாப்ளா) கிளர்ச்சி மண்டலத்தில் கிலாபத் ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததில் பொறுப்பான தலைவர்கள், கிளர்ச்சியில் எந்த பொறுப்பிலும் பங்கேற்காமல் இருந்தது மட்டுமல்ல; தமது கிலாபத் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருமாறி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கமாக மாறியது கண்டு ஒட்டுமொத்தமாக அதனை கண்டனம் செய்தார்கள்... சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, இந்த கிளர்ச்சி ஒரு பைத்தியக்காரத்தனமான பாய்ச்சல் என்றும் பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்க கூடியது என்றும் வர்ணித்தார்."

மாப்ளா கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் இந்திய அரசு தன் காவல்துறையை மட்டுமின்றி இராணுவத்தையும் பயன்படுத்தி யது. அது மட்டுமின்றி இன்று சர்வாதிகார ஆட்சிகள் நிலவும் இலத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் இருப்பவை போன்ற 'உஷார் படைகளை' (vigilantes) - அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ள குடிமக்களின் படைகளை - உருவாக்கியது. இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்த சால்வா ஜுடம் போன்ற 'குடிமக்கள் படை' ஒன்றை உருவாக்கிய பிரிட்டிஷ் இந்திய அரசு, இந்தியாவில் இப்போதும் உள்ளதும் மூர்க்கத்தனமாக அடக்குமுறைகளுக்குப் பிரசித்தி பெற்றதும் ஆன 'மலபார் சிறப்பு காவல்படை'யையும் 1921இல் உருவாக்கியது. அதே சமயம், இஸ்லாமிய குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள் ஆகியோரின் பிரச்னையை மதச்சார்பற்ற வகையில் அணுகி அவற்றை தீர்ப்பதற்கான இடதுசாரி விவசாயி சங்கங்கள் உருவாவதற்கும் இந்த கிளர்ச்சி காரணமாயிற்று. நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு வர்க்கப்போராட்டத்தின் நியாயங்கள், பலகீனங்கள் ஆகியவற்றை விளக்கும் இந்த நூலை தமிழாக்கம் செய்துள்ள மு. இக்பால் அகமதுக்கு இது முதல் முயற்சி என்பதால், ஆங்காங்கே தென்படும் சில நெருடல்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

...

'பார்வையிழத்தலும் பார்த்தலும்'

எஸ் வி ராஜதுரை, என் சி பி எச், மே 2016

... ... ... ...

எனது முதல் மொழிபெயர்ப்பு நூல் 'மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' அலைகள் வெளியீட்டகத்தால் 2007 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. எஸ் வி ஆர் அவர்கள் இந்த நூலுக்கு இப்படி ஒரு மதிப்புரையை எழுதி இருப்பதை நான் இப்போதுதான் அறிவேன்! நன்றி தோழர் எஸ் வி ஆர்!

16/10/2023

கருத்துகள் இல்லை: