சென்னையின் மிகப்பழமையான தெருக்கள் நிறைந்த பகுதி ஜார்ஜ் டவுன். ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு வணிகத்துக்கு என எழுதப்பாடாத விதியோடு இயங்கியது வியப்பு. அண்ணா பிள்ளை சந்து மளிகை பொருட்கள் விற்கும் மையம் என்பதால் அத்தெருவில் நுழைந்தால் மளிகை சாமான்கள் வாசம் வரும். ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு அண்ணாபிள்ளை சந்து மட்டும் ஏன் ரொம்பவும் பிடித்த இடமாக இருந்தது என்று இப்போது புரிகிறது. அடுப்படி, வீட்டு சமையல் என்று மனம் என்னை அறியாமல் நாடி இருக்கிறது. மினர்வா தியேட்டர், அதன் காப்பி மணம் பற்றி பல முறை எழுதிவிட்டேன்.
ஆவடிக்கு அப்போது மின்சார ரயில் மாத சீசன் டிக்கெட்18 ரூபாய் மட்டுமே. ரயிலில் ஏறினால் அநேகமாக எல்லோர் கைகளிலும் ஏதாவது ஒரு பத்திரிகை, வார இதழ் என்று இருக்கும். வாசிப்பதோடு மட்டுமின்றி அரசியல் உரையாடல்கள் நிகழும். அருகில் இருப்பவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் ஆக இருந்தாலும் தீவிரமான உரையாடல் நிகழும். அவரவர் நிறுத்தம் வந்த உடன் சார் 'இறங்குறேன்' என்று இறங்கி செல்வார்கள். அதுவரை வாசிக்கப்பட்ட செய்தித்தாளை அவர் அங்கேயே விட்டுச்செல்வார். அப்படியே அது அரக்கோணம் வரையும் பல கைகள் மாறும். ஒரே செய்தித்தாள், பல மனிதர்கள், பல கோணங்கள், பல விவாதங்கள் என மனிதர்களுக்குள் ஒரு உரையாடல் இருந்தது. நக்கீரன், ஜூனியர் விகடன், தராசு என வாங்கி வாசிப்போர் அவற்றையும் அருகில் இருப்பவரிடம் விட்டுவிட்டு செல்வார்கள்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விசயம், பலர் ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான் ஏறுவார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்து ஏற்கனவே இருப்பவர்கள் இருக்கையை ரிசர்வ் செய்வார்கள். ஆனால் இவர்கள் யாரும் சக பயணி என்பதை தவிர வேறு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள்.
எல்லாவற்றுக்கும் மையமாக நான் கவனிப்பது மனிதர்களுக்குள் நடந்த உரையாடல். இப்போது அடிக்கடி நடக்கும் ரயிலில் கத்திக்குத்து, கொலை என்பதெல்லாம் அப்போது இல்லை.
... ... ...
இப்போது? மனிதர்கள் கைபேசியில் ஆழ்ந்து உள்ளே சென்றுவிட்டார்கள். ரயிலில் ஏறுவதில் தொடங்கி இறங்கும்வரை அது எத்தனை மணி நேர பிரயாணம் ஆனாலும், உள்ளூர் மின்சார ரயில், 10, 20, 30 மணி நேர பிரயாணம் ஆனாலும் கைபேசிகளில் ஆழ்ந்து விட்டார்கள். சக பயணிகள் முகத்தையும் பார்ப்பதில்லை, எந்த ஒரு உரையாடலும் இல்லை. புத்தகம் வாசிப்பவர்கள் அநேகமாக யாரும் இல்லை. 30 மணி நேர பிரயாணத்துக்கு பின் இறங்கும்போதும் சக பயணியை நோக்கிய சிறு புன்னகையோ கை அசைப்போ எதுவும் இல்லை, காதுகளில் மூளை நரம்புடன் ஏற்கனவே பிணைக்கப்பட்ட கருவியுடன் வருகிறார்கள், போகிறார்கள்.
பொது இடங்களில் மட்டுமின்றி குடும்பங்களிலும் இதே நிலைதான். ஒரு மனிதனுக்கு இரண்டு அதி நவீன கைபேசி, ஒரு மடிக்கணினி எனில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன உரையாடலுக்கும் உறவுக்கும் நேரம் ஏது?
மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள், ஆனால் தனித்தனி தீவுகளாக இருக்கிறார்கள்.
உலகம் ரொம்ப வேகமாக செல்வதாகவும் எதுக்கும் நேரம் இல்லை சார் என்ற உரையாடலையும் சகஜமாக கேட்க முடிகிறது. நவீன தொழில்நுட்பமும் கருவிகளும் நம் வேலைகளை எளிதாக்கி நேரத்தை பெருமளவு சேமிக்க உதவியுள்ளன எனில் அந்த மீதமான நேரத்தை எதன்பொருட்டு செலவு செய்தோம்? மின்சார கட்டணத்தை மின்சார அலுவலகத்தில் சென்று வரிசையில் செலுத்தி விட்டு வீடு திரும்ப சுமார் ஒரு மணி நேரம் ஆனது, இப்போது இணையத்தில் ஐந்து நிமிடத்தில் செலுத்திவிட முடிகின்றது எனில் மீதமான 55 நிமிடங்களை நாம் எந்த வகையிலாவது உருப்படியாக பயன்படுத்தினோமா என்ற கேள்வியை கேட்டால் இது அவசர உலகம் சார் என்ற பொய்யான கட்டமைப்பு உடைப்படுகிறது அல்லவா? சரியாக சொன்னால் கடந்தகாலத்துடன் ஒப்பிட்டால் இப்போது ஒரு நாளைக்கு சுமார் 30 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது என்றால் அந்த ஏற்கனவே இருந்த 24 மணி நேரத்தையும் கூடுதலாக கிடைத்த
ஆறு மணி நேரத்தையும் திருடிக்கொண்ட நவீன தொழிநுட்பம் அதாவது முதலாளித்துவ தொழிநுட்ப வளர்ச்சி மனிதர்களை எதை நோக்கி தள்ளி உள்ளது?
இது மாய உலகம். வேகமாக ஓடும் நவீன தொழில்நுட்பம் என்ற பெயரில் முதலாளித்துவம் மனிதர்களை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்துள்ளது. 90களில் உலகெங்கும் புகுத்தப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தின் லேட்டஸ்ட் வடிவமே இது. கடந்த பத்தாண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட முகநூலில் இப்போது நாம் புரட்சி செய்யவில்லையா? அரசியல் கள செயற்பாடுகளின் பொருட்டு இப்போது மனிதர்களை திரட்டுவது கடினமான செயலாகி வருகிறது. அரசியல் போராட்ட களசெயல்பாடுகளுக்கு திரளும் கூட்டங்களில் உழைப்பாளி மக்களை பெருவாரியாக பார்க்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்தின் கோபதாபங்களை வீதிக்கு கொண்டுவருவதை மடைமாற்றியுள்ள நவீன தொழிநுட்பம் ஓரிரண்டு ஸ்டேட்டஸ், பதிவு போதும், திருப்தி அடைவோம் என அவர்களுக்கு திட்டமிட்ட வகையில் வழி செய்து இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பொழுதுபோக்கு பதிவுகள், சினிமாக்களின்பால் இழுத்துக்கொண்டு போகிறது.
டுனீசியாவில் நடந்த அரபு வசந்தம் போல இங்கேயும் நடந்து விடாதா? முகநூலும் வாட்சப்பும் போராட்ட களங்களுக்கு மக்களை திரட்ட பயன்படாதா என்று கேட்கலாம். 140 கோடி மக்கள் கொண்ட தேசத்தை, நூற்றுக்கணக்கான இனங்களும் மொழிகளும் அதே அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களும் ஆக, நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள், டி வி சானல்கள் என பல்வேறு வடிவங்களில் டுனீசியாவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இந்த தேசம் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. தவிர கடந்த பல பத்தாண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யாவும் இந்துத்துவா தீவிரவாத சக்திகளின் கைகளில்தான் சென்று சேர்ந்துள்ளன. அநேகமாக அனைத்து ஊடகங்களும், அச்சு, மின்னணு என அனைத்தையும் இந்துத்துவா அரசியல் சக்திகள், அவற்றின் ஆதரவு சக்திகள் கைப்பற்றி விட்டன. சமீபத்திய உதாரணம் என் டி டி வி. ஆக அங்கிங்கு எனாதபடி கைபேசி, டி வி, செய்தித்தாள் என நீக்கமற இந்துத்துவா சக்திகளின் பிரசாரமே நமது மூளைகளுக்குள் வலிந்து திணிக்கப்படவில்லை, நாமே முன்வந்து நமக்குள் திணித்துக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு விட்டன.
... ... ...
சென்னையில் இருந்து சேலத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பகல் நேர ரயிலில் சென்றேன். என்னுடன் வந்த நண்பர்கள் அனைவரும், சக பயணிகளும் அவரவர் கைபேசிகளில் ஆழ்ந்து இருக்க, நான் அப்போது வந்த வார இதழ் ஒன்றை வாசித்துக்கொண்டு வந்தேன். சேலம் நெருங்கும்போது சக பயணி ஒருவர் கேட்டார், சார் சென்னையில் இருந்து பார்க்கிறேன், நீங்கள் மட்டும்தான் புத்தகம் வாசித்துக்கொண்டு வருகிறீர்கள், இப்போதும் ஒருவர் கைபேசி பார்க்காமல் புத்தகம் வாசித்துக்கொண்டு வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது சார் என்றார். அவர் என்னுடன் எப்போதாவது உரையாடுவார். தன் மகனுக்கும் மகளுக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்வார். அவர் சென்னை ஐ ஐ டியில் ஆய்வு மாணவராக அப்போது இருந்தார், ஏற்காட்டில் சில ஏக்கர் விவசாயம் செய்யும் குடும்பம் அவருடையது.
... ... ...
பள்ளி செல்லும் மாணவன், மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் பலர் மிக புகழ்பெற்ற மனிதர்களின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். எங்கே விழுந்தது இடைவெளி? உரையாடலில் விழுவதாக நினைக்கிறேன்.
ஆப்பிளின் புதிய கைபேசி ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனைக்கு வந்துள்ளதாம். மும்பையில் உள்ள முதல் ஆப்பிள் ஸ்டோரில் அதை வாங்கும்பொருட்டு குஜராத், சென்னை, பெங்களூர் போன்ற வெளி இடங்களில் இருந்து விமானத்தில் பயணம் செய்து முதல் நாள் பகல், இரவு கடைக்கு முன் படுத்து உறங்கி புது கைபேசியை பல நூறு பேர் வாங்கி பெருமை பொங்க இணையத்தில் பதிவு செய்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதி. கூட்டம் கூட்டமாக கூடிய இவர்கள் கடை முன் காத்திருந்த அந்த 20 மணி நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள், கழுத்தும் வலது கை பெருவிரலும் நோக நோக ஏற்கனவே தங்களிடம் இருந்த கைபேசியை நோண்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். சக மனிதர்களுடன் ஆன உரையாடல்?
தோழர் போப்பு அவர்களிடம் நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். அந்தக்கால பேருந்துகளில் இருக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வகையில் இருந்தன, உங்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று கேட்டார். நுட்பமான அவதானிப்பு. நீக்கப்பட்டது இருக்கையின் வடிவம் அல்ல, மனிதர்களுக்கு இடையே ஆன உரையாடல்.
மின்சார ரயில் பயணத்தில் சக மனிதர்கள் பரிமாறிக்கொள்ளும் கொய்யாப்பழங்கள் அர்த்தமிக்கவை. ஆப்பிள்களால் அவற்றை எப்போதும் நெருங்க முடியாது.
... ...
(படத்தில்: மும்பையில் புதிய ஆப்பிள் 15 வாங்க திரண்ட கூட்டம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக