வாப்பா நெசவாளி என்றாலும் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்களை தறி நெய்யும்போது ராகமாக பாடுவார், கேட்டிருக்கிறேன். அதேபோல் தியாகராஜ பாகவதர் பாடல்களையம் பாடுவார். இசை குறித்து எனக்கு இது ஓர் அறிமுகம் எனில் இயல்பாகவே இஸ்லாமிய மக்கள் வாழும் ஊர் என்பதால் கல்யாண வீடுகளில் நாகூர் அனீபா பாடல்கள்தான் ஒலிக்கும், எனவே எனக்கு நினைவு தெரிந்து அறிமுகம் ஆன ஒரு பாடகர் அனீபாதான்.
சென்னை திருவல்லிக்கேணியில் வெண்கல பாத்திரங்களை தலையில் சுமந்து விற்றதாகவும் பொருளாதார நிலையில் நல்லவிதமாக இருந்ததாகவும் என் வாப்பா எப்போதாவது சொல்வது நினைவில் உள்ளது. ஏன் அதை கைவிட்டுவிட்டு தென்காசியில் தறித்தொழிலுக்கு வந்தார் என்று கேட்டு பதில் பெறும் அளவுக்கு வயதும் அனுமதிக்கவில்லை, கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முதிர்ச்சியும் இல்லை. இப்போது நினைத்தால் வருத்தமாக உள்ளது. அதேபோல் அம்மாவின் ஊர் தென்காசி என்றாலும் இலங்கையில் தன் சகோதரிகளுடன் ஓட்டலில் சமையல் தொழிலில் ஈடுபட்டதை அடிக்கடி சொல்வார். ஒருசில உணவுப்பண்டங்களின் சிங்களப்பெயரையும் அவற்றை செய்யும் விதத்தையும் கூட சொல்வார். ஒரு பெண்ணான அவரது அனுபவங்களையும் சற்றே காதுகொடுத்து ஈடுபாட்டுடன் கேட்டிருந்தால் பெரிய கதை ஒன்றுக்கான அடித்தளமாக இருந்திருக்கும். இரண்டையும் தவற விட்ட பாவியானேன் நான்.
தென்காசியில் சாரம் எனப்படும் கைலி, சேலை நெசவு பிரதானம். குழித்தறிகள், அதாவது தரையில் குழி தோண்டி அதற்குள் தறியை கட்டமைத்து இருப்பார்கள். மழைக்காலத்தில் தரையின் பக்கவாட்டில் ஈரக்கசிவு ஏற்பட்டால் தறி நெசவு சிரமமாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில் தறித்தொழில் சிரமம்தான்.
மதுரையில் பலகைத்தறி. தமிழகத்தின் மிகப்பெரிய நெசவுத்தொழில் ஊராக செல்லூர் இருந்தது. ஆற்றின் தென்கரை, அனுப்பானடி, கிருஷ்ணாபுரம் காலனி பகுதிகளில் சவுராஷ்டிர சமூக மக்கள் அதிகம். செல்லூரின் தறித்தொழிலுக்கு அடிப்படை ஆன பாவோடுதல், பாவுக்கான டப்பா தார் சுற்றுதல் ஆகிய தொழில்களில் அச்சமூகத்தின் பெண்கள் ஈடுபடுவார்கள். அச்சமூகத்தின் ஆண்கள் செல்லூர் நெசவுத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டு நான் பார்த்தது இல்லை.
ஒட்டுமொத்த நெசவுத்தொழிலாளர்களின் வாக்குகள்தான் மதுரையில் சட்டமன்ற தொகுதியின் வெற்றி தோல்வியை பாதித்தன. கைத்தறி தொழில் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்லி மதுரை மேற்குத்தொகுதியில் எம் ஜி ஆர் நின்று ஜெயித்தார். தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த அவரை மேடையின் முன்னே வெகு அருகில் பார்த்த நினைவு உள்ளது. கைத்தறி தொழிலுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன், இனிமேல் கைத்தறி நெசவாளிகள் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லி வாக்குகளை பெற்றார். அவ்வளவுதான்.
வாப்பாவின் வழியில் எஸ் எஸ் எல் சி முடித்திருந்த மூத்த அண்ணனும் நெசவில் ஈடுபட்டார். பதினோரு வயது மூத்தவர். அன்றைய எஸ் எஸ் எல் சியில் எலெக்டிவ் சப்ஜெக்ட் என்ற ஒன்று இருந்தது. அண்ணன் விவசாயத்தை தேர்வு செய்து இருந்தார். அவரது ரிகார்டு நோட்டை பார்த்துள்ளேன், மிக அழகாக படம் வரைவார்.
தென்காசியில் இருந்து ஒருநாள் இரவில் குடும்பம் ஊரை விட்டு புறப்படுவதற்கு முன்பே வாப்பாவும் அண்ணனும் மதுரைக்கு சென்று தொழில், வாடகை வீடு என உறுதி செய்து வந்திருந்தார்கள் என்பதை பின்னாட்களில் தெரிந்துகொண்டேன். வாப்பா, அம்மா, அண்ணன் என மூவரும் கைத்தறி நெசவுத்தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றினார்கள்.
மதுரையில் செல்லூர் ஜெயபாரத் பள்ளியில் எட்டாவது வரையும் 12வரை மாநகராட்சி இளங்கோ மேனிலைப்பள்ளியிலும் படித்தேன். அதன் பின் கல்லூரியில் சேரவில்லை, குடும்பச்சூழல் காரணமாக. நானும் கைத்தறிதொழிலில் இறங்கினேன், நெசவும் அறிவேன். ஆனால் ஜகார்டு எனப்படும் பூவாலை துண்டுகளை நெய்யும் தறியை கட்டுவது, அதன் டிசைன் அட்டை தயாரிப்பது என டெக்னிகல் பக்கத்தில் வேலை செய்தேன். பிறகு ஆம்பூரில் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன். மீண்டும் மதுரைக்கே வந்துவிட்டேன்.
தினத்தந்தியில் வந்திருந்த விளம்பரத்தை பார்த்து ஆவடி பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அப்ரெண்ட்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். விளம்பரத்தை பார்த்தவர் வாப்பா என்றாலும் பயிற்சி தேர்வுக்கு அழைப்பு வந்தபோது வாப்பா சென்னைக்கு என்னை அனுப்ப தயங்கினார். அண்ணனே தலையிட்டு என்னை ஆவடிக்கு அனுப்பினார்.
130 ரூபாய் மாத உதவித்தொகை stipend. மறுமாதமே அது 230ஆக உயர்த்தப்பட்டது என்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அண்ணனுக்கு அழைப்பு வர மாநில அரசின் பட்டுவளர்ப்பு துறையில் ஓசூரில் பயிற்சி பெற்று வேலையும் பெற்று இப்போது பணியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.
இரண்டாவது அண்ணனுடன்தான் நான் சென்னை கோடவுன் தெருவில்தான் Godown street அறையில் தங்கி இருந்தேன். சென்னையின் மிக மிக பிஸியான தெரு அது. அவருக்கு ஒன்றிய அரசின் கனரகதொழில்துறையில் stenographer வேலை கிடைத்து டெல்லி செல்ல நான் ஆவடிக்கு வந்து அறை எடுத்து தங்கினேன்.
ஒன்றரை வருட பயிற்சிக்கு பிறகு மூன்றரை வருடங்கள் நிரந்த தொழிலாளியாக பணி செய்த பின் திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகம் ஆவடியில் DRDO பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் Lower Division Clerk வேலைக்கு நேர்முகத்தேர்வுக்காக அழைத்தது. Competition Success Review, Competition Master போன்ற மாத இதழ்கள், The HINDU, Front line, Outlook என வாசித்து என் ஆங்கில அறிவையும் பொது அறிவையும் வளர்த்து வந்தேன். எல்லாம் சுயமாக செய்ததுதான்.
LDC தேர்வில் என்னுடன் சேர்த்து நான்கு பேர் தேர்ச்சி பெற்றார்கள். ஒருவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், ஒருவர் மாற்றுத்திறனாளி, ஒருவர் விமானப்படையில் ஓய்வுபெற்றவர். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினன். உடனடியாக ஒரு விசயம் தெளிவாக தெரிகிறதா? இந்த நான்கு பேருமே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிக்கு தேர்வானவர்கள் என்ற உண்மை தெளிவாக தெரிகிறதா? 1988 மே மாதம் பணியில் சேர்ந்து பின்னர் துறை தேர்வு எழுதி Class 1 Gazetted Officer ஆனேன்.
ஒரே வருடத்தில் 1989இல் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய வி பி சிங் அவர்களின் ஆட்சிக்கு எதிராக சங் பரிவாரம் மிகப்பெரிய கலவரங்களை கட்டவிழ்த்து விட்டது. ராஜீவ் கோஸ்வாமி என்ற ஒருவன் தீக்குளித்து செத்தான் அல்லது சாகடித்தார்கள். திட்டமிட்டபடி அத்வானியை வைத்து ரதயாத்ரை கலவரம் நடத்த பீகாரில் லல்லுபிரசாத் அவரை கைது செய்ய வி பி சிங் அரசுக்கு அளித்த ஆதரவை பிஜேபி வாபஸ் பெற்று அவர் ஆட்சியை கவிழ்த்தார்கள்.
... ... ...
எனது குடும்பத்தில் யாரும் உயர்ந்த பள்ளிகளிலோ தனியார் பள்ளிகளிலோ படிக்கவில்லை. செல்லூரில் நான் எட்டாவது வரை படித்த ஜெயபாரத் பள்ளியில் பல நூறு நெசவாளிகளின் பிள்ளைகள்தான் கட்டணம் இன்றி படித்தார்கள்.
காமராஜரின் இலவச கல்வி, டாக்டர் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் பிற இடதுசாரி இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் உயர்சாதி பிராமணீயத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், விளைவாக அரசியல் அமைப்பு சட்டங்கள் வழங்கிய உரிமைகள், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றால்தான் ஒரு கைத்தறி நெசவாளியின் பிள்ளைகள் அரசுத்துறைகளில் வேலை பெற்றார்கள், சமூகத்தில் ஒரு மரியாதையை பெற்றார்கள், பொருளாதார நிலையில் உயர்ந்தார்கள். தமது வாரிசுகளை தாம் கற்ற கல்வியை விடவும் அதிக அளவில் படிக்கவைத்தார்கள்.
... ...
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சொல்வது மிக முக்கியமானது. குலத்தொழிலை அதாவது கோவிலில் பூஜை செய்வது, உஞ்ச விருத்தி, திதி, விவாஹங்களில் மந்திரம் சொல்வது ஆகிய குலத்தொழில்களை செய்து வயிற்றை கழுவிய பிராமணர்கள் அவற்றை கைவிட்டு பட்டப்படிப்பு, chartered accountant, என்ஜினீயரிங், டாக்டர், ஐ டி படிப்பதுடன் பிராமணீயம் தடை செய்துள்ள கடல்கடந்த பிரயாணத்தை மிக சகஜமாக ஏற்றுக்கொண்டு ஸ்டேட்ஸ், கனடா, ஈரோப் என அரை முக்கால் ட்ரவசர்களை போட்டுகொண்டு அதாவது பஞ்சகச்சம் குடுமி ஆகியவற்றை துறந்து வாழும் எனில் இன்றைக்கு பிரதமர் தொடங்கி வைத்துள்ள விஸ்வகர்மா திட்டம் யாரை அல்லது எந்தெந்த சமூகங்களை உள்ளடக்கும் என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.
(மதராஸ் கடற்கரையில் ஜெர்மனியின் எம்டன் கப்பல் குண்டுபோட்டவுடன் இந்தியாவில் இனிமேல் ஹிட்லர் ஆட்சிதான் என்று முடிவுசெய்து ஜெர்மன் மொழி படிக்க ஓடிய திருவல்லிக்கேணி மைலாப்பூர்வாசிகளின் கதையை நான் இங்கு எழுதவில்லை).
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக