வியாழன், ஏப்ரல் 09, 2026

மேற்காசிய அரசியலும் நிதிமூலதன நெருக்கடியும்

1908ல் அரபு பிராந்தியத்தில் அதுவும் ஈரானில் முதல் முதலாக எண்ணெய் வளம் அதாவது பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே 1927இல் ஈராக்கிலும், 1932இல் பஹ்ரேய்னிலும், 1938இல் சவுதி அரேபியாவிலும் குவைத்திலும் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்டது. 

அதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே ஈரான், மெசபடோமியா மக்கள், நிலத்தில் இருந்து வெளிப்படும் புதைபடிவ எண்ணெய்க் கசிவுகளை விளக்கு எரிக்கவும், மருந்துகள் செய்யவும், நீர்க்காப்புப் பொருளாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஈரானில் காஜர் வம்ச ஆட்சியின் (1789-1925) கீழ் வில்லியம் நாக்ஸ் டார்சி  (William Knox D'Arcy) என்ற பிரிட்டிஷ் தொழிலதிபர்தான் ஈரானில் முதல் முதலாக நவீன கால பெட்ரோலிய துரப்பணத் தொழிலை தொடங்கியவர். 

பிரிட்டிஷ் கம்பெனிகளின் ஆதிக்கம் 

1908இல் ஈரானில் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் 1909இல் பர்மா ஆயில் கம்பெனியால் ஆங்கிலோ-பெர்சியன் ஆயில் கம்பெனி உருவாக்கப்பட்டது. டார்சி அதன் இயக்குநர் ஆனார்.  இதன் பின்னர் கச்சா எண்ணெய் வெளியே எடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. சில காலத்துக்குப் பின் பிரிட்டிஷ் அரசு இந்தக் கம்பெனியின் 51 விழுக்காடு பங்குகளை விலைக்கு வாங்கியது. எனவே இயல்பாகவே இக்கம்பெனி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமாகி விட்டது. 1935இல் ஆங்கிலோ-ஈரான் ஆயில் கம்பெனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1954இல் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனி என்று பெயர் மாறியது. நவீன காலத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்று அறியப்படுகின்ற கம்பெனியின் மூல நிறுவனங்களில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெயை பூமிக்கு அடியிலிருந்து எடுப்பது, சுத்திகரிப்பது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பிற எரிபொருள் வடிவமாக மாற்றுவது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து தொழினுட்ப வசதிகளையும் அடிப்படை கட்டமைப்பையும் இந்த கம்பெனிகள் தான் செய்தன. சரியாக சொன்னால் அரசின் கட்டுப்பாட்டில் இவை எதுவுமே இல்லாமல் ஐரோப்பிய பிரிட்டிஷ் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய ராயல்டி எனப்படும் உரிமைத்தொகையைக் கூட இந்தக் கம்பெனிகள் செலுத்தவில்லை. 

தேசிய சொத்தாக பிரகடனம்

1951இல் தேசிய முன்னணியின் தலைவர் ஆன முகம்மது மொசாதீக் நாட்டின் பிரதமர் ஆனார். ஈரானிய தேசிய விடுதலையும் ஈரானிய பெட்ரோலிய வளமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை, பெட்ரோலிய வளமனைத்தையும் தேசிய சொத்தாக பிரகடனம் செய்வோம்  என்று அறிவித்தார். 1952இல் ஈரானிய நாடாளுமன்றம் ஆன மஜ்லிஸ் ஈரானிய பெட்ரோலிய வளமனைத்தையும் தேசிய சொத்தாக அறிவிக்க ஒப்புதல் அளித்தது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியை நேஷனல் ஈரானியன் ஆயில் கம்பெனி என்று  பெயர் மாற்றம் செய்து கம்பெனியை தேசிய மயம் ஆக்கினார் மொசாதீக், அதாவது மக்கள் சொத்து என்று அறிவித்தார். இங்கே இருந்துதான் மத்திய கிழக்கின் முதல் பெரும் தலைவலி உருவாகிறது. அதாவது வலிமை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையை மொசாதீக் மிகத்துணிச்சலுடன் எடுத்தார். பிரிட்டிஷ் அரசு ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்தது. 

இதன் பின்னர் அமெரிக்க அரசின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பும் பிரிட்டிஷ் அரசின் எம்.ஐ.6உம் இணைந்து மொசாதீக்கை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டின. ஈரானின் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஊடகங்கள், உளவாளிகள் என்று அனைவரும் விலைக்கு வாங்கப்பட்டனர். மொசாதீக்குக்கு எதிரான பிரச்சாரம் வலுவாக செய்யப்பட்டது. 1953இல் மன்னர் ஷா மொசாதீக்கை பதவியில் இருந்து நீக்கி வீட்டுச்சிறையில் அடைத்தார். 1967இல் மொசாதீக் மரணம் அடைந்தார். இதன் பின்னர் அமெரிக்காவின் பொம்மை அரசாக ஈரான் அரசாட்சி இருந்தது என்பதை சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் 1979இல் ஈரான் மக்கள் எழுச்சியின் காரணமாக மன்னன் ஷா நாட்டை விட்டு ஓடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தான். 

இதனைத் தொடர்ந்து எல்லா அரபு நாடுகளும் தமது எண்ணெய் வளத்தை தேசிய சொத்தாக பிரகடனம் செய்தன. அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் மீது கண்ணாக இருக்க அன்றைய சோவியத் யூனியன் மட்டுமே அரபு நாடுகளுக்குத் துணையாக நின்றது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 30 டாலர்கள் என்ற விலையை அரபு நாடுகள் கூடிப் பேசி நிர்ணயம் செய்தார்கள். ஓ.பி.இ.சி. என்று சொல்லக்கூடிய எண்ணை பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கவுன்சில் உருவானது. கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை இந்த கவுன்சில் தனது கையில் வைத்துக் கொண்டது. ஆக இதன் பின்னர்தான் பாலைவனப் பிரதேசமாய் கிடந்த, நவீன காலத் தொழில் முன்னேற்றமோ எந்திரத்தொழில் வளமோ இல்லாமல் இருந்த ஒட்டுமொத்த அரபு பிராந்தியத்தின் அல்லது மேற்கு ஆசிய சமூகத்தின் முகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வேறு வடிவில் உருவாகத் தொடங்கியது. இதனை வெறும் பெட்ரோலியத் தொழில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரு நிகழ்வாக மட்டுமே சுருக்கிப்பார்க்க முடியாது. அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் பொருளாதார மேலாண்மை, காலனி ஆதிக்க அரசியல், மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் சமூகத்தின் மீது ஏவப்பட்ட உழைப்புச் சுரண்டல், அந்த நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்தல், சந்தைப்படுத்துதல் ஆகிய போக்குகளுக்கு எதிராக மேற்காசிய அரபு நாடுகள் விடுத்த சவாலாக, எதிர் அரசியலாக பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.

ஏகாதிபத்தியங்களின் தந்திரங்கள்

இதன் பின்னர் தான் ஏகாதிபத்தியங்கள் அரபு நாடுகளுக்குள் பிரிவினையை உருவாக்க எல்லா தந்திரங்களையும் செய்தார்கள். மிக முக்கியமாக அரபு நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஒரே மதமாயினும் ஷியா, சுன்னி என இரண்டாகப் பிரிந்து கிடந்ததை, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னால் உலகில் 80 சதவீத இஸ்லாமியர்கள் சுன்னி பிரிவையும், 12 முதல் 14 சதவீதத்தினர் ஷியா பிரிவினரையும் சேர்ந்தவர்கள். சவுதி அரேபியா, அரபு அமீரகம், குவைத், பஹ்ரெய்ன், ஈராக், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் சுன்னி பிரிவையும் ஈரான் ஷியா பிரிவையும் பின்பற்றும் நாடுகளாக உள்ளன. மதப் பிரிவினை அடிப்படையில் ஆன இந்த முரண்பாடுகள் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் முரண்பாடுகளாகவும் இந்த நாடுகளுக்குள் வளர்ந்தது. குறிப்பாக 1979 ஆம் ஆண்டு ஈரானில் அரசு அதிகாரத்தில்  ஷியா பிரிவினர் அமர்ந்த பின்பு ஒட்டுமொத்த அரபுப் பிராந்தியமும் இந்தப் பிரிவினைக்குள் சிக்கத் தொடங்கியது. 

நவீன கால பெட்ரோலிய அரசியல் 

அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்வது, கைப்பற்றிய எண்ணெயை துர்க்மேனிஸ்தான் தொடங்கி மேற்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியப்பெருங்கடலுக்கு கொண்டு வருவது, ஸ்டாக் செய்வது, அதனை விற்பது என அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. இதற்காகவே ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சூழலில்தான் அல்கொய்தா அமைப்பின் பின்லேடன் 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் மீது தாக்குதலை நடத்தினான். இந்த தாக்குதல் நடத்தப்படப் போவது அமெரிக்காவுக்கு நன்கு தெரியும், ஆனால் தெரிந்தே அதை அனுமதித்தது என்ற வாதம் இன்றளவும் முற்றுப்பெறவில்லை. ஆனால் 2001 செப்டம்பர் 11 தாக்குதலை ஒரு காரணமாக வைத்து, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி அல்கொய்தா அமைப்பை முற்றாக ஒழிப்பதாக சொல்லி ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் அமெரிக்கா நுழைந்தது. மட்டுமின்றி சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் உலகத்துக்கு ஆபத்து என்று சொல்லி ஈராக்குக்குள் நுழைந்து இராக்கை அழித்து சதாமையும் கொன்றது. அதன் மூலம் தனது சார்பு அரசை ஒன்றை நிறுவி ஈராக்கின் எண்ணெயை எடுக்கத் தொடங்கியது. ஆக அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியது.  ஆனால் ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கா தான் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரான போர்க்களத்தை சந்திக்க வேண்டி இருந்தது, பெரும் சேதத்தை விலை கொடுத்து அங்கிருந்து வெளியேறியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும்  அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரே ஒரு உச்சநோக்கத்துக்காக அப்பகுதி இஸ்லாமிய நாடுகளுக்குள் தொடர்ந்து முரண்பாட்டை வளர்த்தும் கூர்மைப்படுத்தியும் வந்தன என்பதை கடந்த நூறு வருட வரலாறு சொல்கிறது. ஈரான்-ஈராக் மோதல், எகிப்து-சிரியா மோதல், சிரியா-லெபனான் மோதல், லெபனானில் கிறிஸ்துவர் முஸ்லிம் இடையே கலவரம், இஸ்ரேல்-பாலஸ்தீன போர், குவைத்-ஈராக் மோதல், இதர அரபு நாடுகளுக்கு இடையே தொடரும் பதற்றம் அல்லது போர் ஆகியவற்றின் வேராக இருப்பது அமெரிக்காவின் பிரித்தாளும் தந்திரமே. 

இன்றைக்கு ஈரானைத் தவிர அரபு பிராந்தியத்தின் அனைத்து இஸ்லாமிய நாடுகளுமே அமெரிக்க சார்பு நாடுகளாகவும் இஸ்ரேலுடன் மோதலைக் கடைபிடிக்காமல், அதனை நோக்கி கேள்வி எழுப்பாமல் மௌனமாகக் கடந்து போகும் நாடுகள் ஆக இருக்கின்றன. மட்டுமின்றி இந்த நாடுகள் அனைத்துமே தம் நாடுகளுக்குள் அமெரிக்காவின் ராணுவ, விமான தளங்களையும் தமது கடற்பிரதேசத்தில் அமெரிக்காவின் கடற்படையையும் நிறுவுவதற்கு அனுமதி கொடுத்துள்ளன. 

இந்த ஒட்டுமொத்த மேற்காசிய அரபுப் பிராந்திய நாடுகளும் ஒன்றிணைந்து இஸ்ரேலை எதிர்கொண்டு இருந்திருந்தால் பாலஸ்தீனமும் காசாவும் லெபனானும் இப்போது நாம் பார்க்கின்ற பூமியின் மிகப்பெரிய பேரழிவில் இருந்து பிழைத்து இருக்க முடியும். பாலஸ்தீன மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் தம்மைச் சுற்றியுள்ள பிற இஸ்லாமிய நாடுகளால் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஈரான் மட்டுமே அவர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. 

ஜியோனிசமும் இஸ்ரேலும்

தியோடர் ஹெர்ஸ் என்பவர் கண்டுபிடித்த ஜியோனிச கொள்கையின் அடிப்படையில் யூதர்களுக்கு என ஒரு தனி நாடாக 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் ஜோர்டான், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். 1948 தொடங்கி 1956, 1967, 1973, 1982 என்று தொடர்ந்து எகிப்து, சிரியா, ஜோர்டான், கோலன் குன்றுகள், பாலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை என்று அரபுப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வேட்டை நாயாக இஸ்ரேல் இன்றளவும் கொலை பாதகத்தை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் தந்திரம்

இரண்டு உலக யுத்தங்களிலும் பல கோடி மக்கள் செத்து ஒழிந்தாலும் உண்மையில் உலக யுத்தத்தின் போர்க்களமாக ஐரோப்பாவும் (சோவியத்) ரஷ்யாவும் கிழக்கே ஜப்பான் போன்ற நாடுகளும்தான் இருந்தன, பல லட்சம் மக்களைப் பலி கொடுத்தன என்பதும் அமெரிக்கா தனது மண்ணில் பெரிய சேதங்கள் எதையும் சந்திக்கவில்லை என்பதும் அப்பட்டமான உண்மை. ஆனால் அதன் பின்னர் அமெரிக்காவினுடைய தலையீட்டின் காரணமாக டபிள்யு டி ஓ, ஐ எம் எஃப், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு போர் இல்லாத சூழலிலும் மூன்றாம் உலக நாடுகளையும் ஆப்பிரிக்கா போன்ற வளமை குன்றிய வறுமை மிகுந்த நாடுகளிலும் நுழைந்து பொருளாதார ஆக்கிரமிப்பு செய்து அவற்றின் செல்வங்களை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குவிப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. 

இப்போதும் கூட மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலை வைத்து அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறதே தவிர அதன் நேரடி பாதிப்பு அமெரிக்க மண்ணுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இல்லை என்பதையும் செத்து மடிந்து கொண்டிருப்பவர்கள் ஈரான்,  இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் மக்கள் மட்டுமே என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 

அணு ஆயுத அரசியல்

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடிய ஐந்து நாடுகளாக சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் அறியப்பட்டன. அதன் பின்னர் இந்தியா, வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளும் அணுசக்தி வளர்ச்சி பெற்ற நாடுகளாக அல்லது அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடிய நாடுகளாக வளர்ந்தன. ஆசியாவில் ஈரானிடமும் அத்தகைய ஒரு அணு ஆயுதம் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.  அமெரிக்காவின் வேட்டை நாயான இஸ்ரேலும் நம்புகிறது.

2015இல் அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த பாரக் ஒபாமா ஈரானுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டார். அதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால் ‘அணுசக்தி வல்லமை இல்லாத ஈரான் என்பதுதான் மேற்காசிய பிரதேசத்திற்கு உகந்தது’ என்பதே. அணு ஆயுத வல்லமை இருக்கிறதோ இல்லையோ, ஈரானிடம் நெடுந்தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள், ராடார் போன்ற தொலைத்தொடர்பு, உளவு சாதனங்கள் இருப்பதை இஸ்ரேல் முற்றாக விரும்பவில்லை. எனவே ஒபாமா- ஈரான் ஒப்பந்தத்தை இஸ்ரேல் எதிர்த்தது. 

சமீப காலமாக நடைபெற்று வந்த அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியமான பேசுபொருளாக ஈரானின் ஏவுகணை திட்டத்தையும் அரசு சாராத ஆயுதக்குழுக்களுக்கான (ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹௌத்தி போன்ற குழுக்கள்) ஆதரவையும் இணைக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியது. இதன் பொருள் மிகத் துல்லியமானது: ஈரானை ஆயுதம் ஏதும் இல்லாத ஒரு தூய்மையான அஹிம்சாவாதியாக ஆக்கி விடுவது. மேலும் ஈரானின் இப்போதைய தலைமையை போர் மூலம் அப்புறப்படுத்திவிட்டு  தாம் விரும்புகிற ஒரு ஆட்சியை அல்லது ஒரு தலைவரை ஈரான் நாட்டின் தலைவராக நியமிப்போம் என்றும் அமெரிக்கா பகிரங்கமாகவே சொல்கிறது.

பிற நாடுகளுடன் ஆன ஈரானின் உறவு

2021 ஆம் ஆண்டு சீனாவுக்கும் ஈரானுக்கும் இடையே 25 வருட காலத்திற்கான ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 40,000 கோடி அமெரிக்க டாலர் அளவிலான மூலதனத்தை ஈரானில் இடுவது என்றும் சீனா உறுதி அளித்துள்ளது. குறிப்பாக அடிப்படைக் கட்டமைப்புகள், எரிசக்தி, மின்சாரம் வங்கித்துறை ஆகியவற்றில் பெரும்பான்மையாக முதலீடு செய்யப்படும். பல நூறு கோடி பணமதிப்புள்ள பெல்ட் அண்ட் ரோடு இனிசியேடிவ் அதாவது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று பெரும் கண்டங்களையும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கின்ற திட்டம் சீனாவிடம் உள்ளது. இந்த முதலீட்டின் முக்கியமான பகுதி இன்றளவில் எண்ணெய், எரிவாயு வாங்குவதில் மட்டும்தான் செலவாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஈரான் ஏற்றுமதி செய்த கச்சா எண்ணெயில் 80% சீனாவுக்கு தான் விற்பனை செய்யப்பட்டது. மட்டுமின்றி சீனா 13.5% தள்ளுபடி விலையிலும் தனது சீன நாணயத்திலும் இந்த கச்சா எண்ணெயை வாங்கிக் கொண்டது. 

பிரிக்ஸ் என்று சொல்லப்படுகின்ற கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, ஈரான், சீனா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்கள் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. மற்றொரு அமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பிலும் ஈரான் உறுப்பினராக உள்ளது. அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்காக ஈரான் உருவாக்கிக் கொள்வதை சீனா ஆதரிக்கிறது. காரணம் என். பி. டி என்று சொல்லக்கூடிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் ஈரான் ஒரு உறுப்பினர். 

அமெரிக்காவின் முற்றுப்பெறாத காலனியாதிக்க அரசியல்

அமெரிக்கா ஏற்கனவே நேட்டோ விரிவாக்கம் என்ற பெயரில் ரஷ்யாவின் எல்லை நாடான உக்ரேய்னை தூண்டிவிட்டு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கனடாவையும் கிரீன்லாந்தையும் அமெரிக்காவின் பகுதிகள் என்று டிரம்ப் பகிரங்கமாக அறிவிக்கிறார். கிரீன்லாந்து இதற்கு உடன்பட்டு செல்ல வேண்டும் என்று மிரட்டுகிறார். ஜனவரி மாதம் வெனிசுவேலாவுக்குள் அதிரடியாக படைகளை அனுப்பி அந்த நாட்டின் குடியரசுத்தலைவரையும் மனைவியையும் விமானத்தில் கடத்திக் கொண்டு போய் அமெரிக்காவில் சிறை வைத்திருக்கிறார் ட்ரம்ப். அவர்கள் இப்போது உயிருடன் இருக்கிறார்களா என்பது சந்தேகத்திற்கு இடமான ஒன்று. இதன் மூலம் வெனிசுவேலாவில்   தனக்கு விருப்பமான ஒரு அரசை நிறுவி அதன் பெட்ரோலியத்தை சுரண்டி எடுப்பதற்கான நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. விக்டர் ஹ்யுகொ சாவேஸ் இருக்கும்வரை அமெரிக்காவால் அங்கே வாலாட்ட முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்பு அரசியலின்  விரிவாக்கமாகவே ஈரானின் மீதான தாக்குதலைப் பார்க்க முடியும். 

ஈரானில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் இதனை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது, எனவே மக்கள் விரும்புகின்ற ஒரு அரசை ஈரானில் நிறுவ வேண்டும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து சொல்லி வருகிறது. இதன் பொருள் மிகத் தெளிவானது. ஈரானின் அரசுக்கு எதிரான ஒரு குழப்பத்தை அல்லது ஒரு கிளர்ச்சியை தமக்கு விருப்பமான உள்ளூர் குழுக்களை கொண்டு நடத்துவது, அதன் மூலம் அதற்கு மக்களின் போராட்டம் என்று பெயரிட்டு பிரச்சாரம் செய்வது என்பதே அமெரிக்காவின் திட்டம். 

இப்போதும் கூட பிப்ரவரி மாத இறுதியில் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சு வர்த்தை நடத்திக் கொண்டிருந்த சூழலில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்கா ஈரான் மீது பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. ஈரான் அமெரிக்காவை தாக்க திட்டமிட்டிருந்தது என்ற ஒரே ஒரு காரணத்தை சொன்னார் ட்ரம்ப். இதற்கான ஆதாரத்தை இன்று வரை அவரால் காட்டமுடியவில்லை.

ஈரானின் உச்சபட்சத் தலைவர் அலி கொமெய்னி அவர்களை பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா கொன்றது. இதன் மூலம் இரண்டு உடனடியான விளைவுகளை அமெரிக்கா எதிர்பார்த்தது: ஒன்று, நாட்டின் தலைவரை இழந்ததால் அரசு கவிழ்ந்துவிடும்; இரண்டாவதாக, ஒரு உள்நாட்டுக்குழப்பம் அல்லது கிளர்ச்சி ஏற்படும். ஆனால் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டுமே நடக்கவில்லை. மாறாக ஈரான் மக்கள் அரசுக்கு ஆதரவாக தெருக்களில் திரண்டார்கள், அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களுடன் ஆவேசமாக வெளியே வந்தார்கள். மட்டுமின்றி ஈரானை தாண்டியும் பல வெளிநாடுகளில் இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவிலேயே அமெரிக்காவின் இந்த கொடூரத்தாக்குதலுக்கும் போருக்கும் எதிரான மக்களின் போராட்டங்கள் எழுந்தன. உலகெங்கும் அமெரிக்காவுக்கு வலுத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. மட்டுமின்றி ஈரானிய அரசுத் தலைமையும் ராணுவக்கட்டமைப்பும் அதன் தலைமையும் முன்னைவிட உறுதியாக கட்டப்பட்டு விட்டது என்பது கடந்த பதினெட்டு நாட்கள் போரில் வெளிப்பட்டு விட்டது. மேலும் மேற்காசியப்பிராந்தியத்தில் மிகப்பெரிய ராணுவ வல்லமையும் உளவுத்திறன் வல்லமையும் கொண்ட தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை தடுக்கும் வல்லமையும் எதிர்த்தாக்குதலும் பொருந்திய நாடு என்ற பிம்பத்தை இதுவரை உருவாக்கி வைத்திருந்த இஸ்ரேல், ஈரானின் தொடர் தாக்குதலால் உருக்குலைந்து போனது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கூட பெஞ்சமின் நெத்தன்யாஹு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை நடந்து கொண்டே இருக்கிறது. 

மட்டுமின்றி சுற்றி இருக்கின்ற அரபு நாடுகளில் இருக்கின்ற அமெரிக்க ராணுவ தளங்களையும் விமான தளங்களையும் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கின்ற அமெரிக்க ராணுவ கப்பல்களையும் ஈரான் வலிமையாகத் தாக்கி பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 

ஈரானிடம் இருக்கக்கூடிய நெடுந்தொலை ஏவுகணைகள், உளவுக் கருவிகள், ராடார் போன்ற தகவல் தொழினுட்பக்கருவிகள் உள்ளிட்ட பல போர் சாதனங்கள் சீனாவாலும் ரஷ்யாவாலும் கொடுக்கப்பட்டவை என்பது வெளிப்படையான உண்மை. இப்போது நடந்து கொண்டிருக்கின்ற போரில் எதிரிகளின் இலக்குகள், எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் நடப்புநேர நகர்வுகளை துல்லியமாக கணித்து வரும் தகவல்கள் யாவும் சீனா, ரஷ்யா நாடுகளில் இருந்தே பெறப்படுகின்றன என்பதும் வெளிப்படையான பேச்சாக இருக்கிறது.

ஈரானின் தாக்குதலை சமாளிக்க முடியாத அரபு நாடுகள் தமக்கு உதவியாக வருமாறும் வலிமை வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறும் அமெரிக்காவை கேட்டுக் கொண்ட போது, இஸ்ரேலினுடைய பாதுகாப்பு முக்கியமானது என்று அமெரிக்கா மறுத்து விட்டதால் இந்த அரபு நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் அதனுடைய சொல்லைக் கேட்டு ஆடியதற்காகவும் ஆன பலனை இந்த நாடுகள் இப்போது அனுபவிக்கின்றன. 

ஹோர்மஸ் நீரிணைப்பாதை

ஈரான் ஒழிக்கப்படுமானால் அது ஒரே ஒரு முடிவுக்குத்தான் இட்டுச்செல்லும்: அமெரிக்க ஒற்றைத்துருவ வல்லாண்மை அரசியல் தலை தூக்கி அமெரிக்க ஆதரவுடன் ஓர் ஈரான் அரசு நிறுவப்படும். இதன் மூலம் மேற்கு ஆசியா மட்டுமின்றி கிழக்கு ஆசியாவிலும் சீனாவின், ரஷ்யாவின் செல்வாக்குக்கு சவால் விடுவதும் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான ஹோர்மஸ் நீரிணைப்பாதையை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொண்டு வருவதும் நடக்கும். முக்கியமாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வணிகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருப்பார்கள். அதன் பொருள் சர்வதேசப் பொருளாதாரத்தின் அச்சை இயக்கி வழிநடத்துபவர்களாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பார்கள். 

ஹோர்மஸ் நீரிணைப்பாதையை ஈரான் இப்போது மூடி வைத்துள்ளது. இதன் வழியாகத்தான் உலகத்தின் 20 சதவீத பெட்ரோலியம் எண்ணெய் வர்த்தகம் அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கோடி கச்சா எண்ணெய் பீப்பாய் வர்த்தகப் போக்குவரத்து நடக்கிறது. இதில் பாதி அதாவது ஒரு கோடி பீப்பாய் சீனாவுக்கு மட்டுமே செல்கிறது. 2025ல் மட்டும் ஈரானிடம் இருந்து 52 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சீனா வாங்கி உள்ளது. சவுதி அரேபியாவும் அதே வருடம் இதைவிட அதிகமான எரிபொருளை சீனாவுக்கு கொடுத்துள்ளது. ஆக இன்று எழுந்துள்ள வளைகுடா போரானது இந்த எண்ணெய் வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கிறது, எனவே சீனாவை நேரடியாக பாதிக்கிறது எனில் இது வெறும் பெட்ரோலிய வர்த்தகம் சார்ந்த பிரச்னை மட்டுமேதானா?

ஆட்டம் கண்ட உலகப்பொருளாதாரம்

ஹோர்மஸ் நீரிணைப்பாதையை ஈரான் மூடியுள்ள நிலையில் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து ஏற்கனவே கையிருப்பில் உள்ள பெட்ரோல், டீசல், எரிவாயு உட்பட அனைத்தும் கரைந்து வருகின்ற நிலையில் சர்வதேச அளவில் ஒரு பொருளாதார வீழ்ச்சியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்பார்த்திடாத அமெரிக்கா,  “ஹோர்மஸ் நீரிணைப்பாதையை மீட்க போர் தொடுப்போம் வாருங்கள்” என்று மிகப்பல ஐரோப்பிய நாடுகளையும் தென் கொரியாவையும் ஆஸ்திரேலியாவையும் நேட்டோ நாடுகளையும் அழைக்கின்றார், ஆனால் இதுவரை எந்த ஒரு நாடும் அவரது அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை என்பது ஈரான் விடயத்தில் ட்ரம்ப் எடுத்த முடிவு தவறு என்று சொல்கிறது.

சீன வெளியுறவு அமைச்சர், “அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் ஆனது ஈரானின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரான அத்துமீறல், ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கங்களுக்கும் சர்வதேச உறவுகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிரானது இந்த போர்” என்று கூறியுள்ளார் (3.2.2026). சீன வெளியுறவு அதிகாரி மாவோ நிங், " வளைகுடாவில் இப்போது ஏவப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். போரில் ஈடுபட்டுள்ள அனைவரும் பேச்சு வர்த்தை நடத்த வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார். மட்டுமின்றி சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகள் சபையின் அவசரக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை அப்படியான கூட்டம் நடக்கவில்லை. மார்ச் மாதம் 31ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு செல்ல இருந்தார், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. 

திசை மாறிய இந்திய வெளியுறவுக்கொள்கை 

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா இந்தியாவுக்கு உத்தரவு இட்டபின் இந்தியா அவ்வாறே நடந்து கொண்டது. ஆனால் ஹோர்மஸ் நீரிணைப்பாதை  மூடப்பட்டது எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் கையிருப்பிலும் பயன்பாட்டு அளவிலும் சிக்கலை ஏற்படுத்தி உள்நாட்டுப் பொருளாதார உறுதித்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா இப்போது திணறும் நிலையில், அமெரிக்கா அதிபர் இரக்கப்பட்டு  “30 நாட்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு வாங்கிக் கொள்ளுங்கள்” என்று இந்தியாவுக்கு ‘அனுமதி’ கொடுத்திருப்பது மிகப்பெரிய இழிவு, இந்தியாவுக்கு இதுவரை நேராத ஒரு அவமானம் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் மிகக் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். “நாங்கள் எதைச் சொன்னாலும் அதை இந்தியா செவ்வனே கடைப்பிடிக்கிறது” என்று வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லெவிட் கேலி செய்துள்ளார்.  

அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதாலேயே 2019ஆம் ஆண்டு முதல் ஈரானிடமிருந்து பெட்ரோலியம் வாங்குவதை இந்தியா நிறுத்தி விட்டது. தவிர அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில் ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்குவதை இப்போது இந்திய அரசு நிறுத்திய பின், முன்பு போல தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ய முடியாது, நாங்கள் நிர்ணயிக்கும்  விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளதும் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் மிகப்பெரிய அவமானத்தைத் தேடி கொடுத்துள்ளது.

மார்ச் நான்காம் நாள் அன்று இந்தியப்பெருங்கடல் பிரதேசத்தில் ஐ.ஆர்.ஐ.எஸ்.டேனா என்ற ஈரானிய கடற்படைக்கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பல் டார்ப்பிடோ ஏவி தாக்கியதில் 87 ஈரானிய படை வீரர்கள் உயிர் இழந்தார்கள்; கப்பல் மூழ்கி விட்டது. குறிப்பிடப்பட வேண்டியது என்னவெனில் இந்தியா விசாகப்பட்டினம் கடலில் நடத்திய சர்வதேச நட்புறவு அடிப்படையில் ஆன கடற்படைப் பயிற்சியில் ஈரான் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிப்ரவரி 26ஆம் நாள் இந்தப் பயிற்சி முடிந்த பின்  ஈரான் திரும்பும் வழியில்தான் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தன் விருந்தினராக வந்து திரும்பிய கப்பலில் இருந்து ஆபத்துக்கால உதவி வேண்டி வந்த வேண்டுகோளை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பதும் சம்பவம் நடந்த பின்னரும் தனது நிலைப்பாட்டை இந்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மவுனம் காத்ததும் உள்நாட்டில் கடும் விமர்சனத்துக்கு ஆளானது மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்தியாவுக்கு அவப்பெயரைத் தேடித் தந்துள்ளது.  ஆனால் இலங்கை அரசு உடனடியாக தனது கடற்படையை அனுப்பி ஆபத்தில் சிக்கி இருந்த ஈரானியர்களைக் காப்பாற்றி உள்ளது.  தாக்குதலில் மாண்டவர்களின் உடல்களையும் மீட்டுள்ளது. மட்டுமின்றி மற்றொரு ஈரானிய கப்பலுக்கு திரிகோணமலை துறைமுகத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளது. 

இந்தப்போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்சத் தலைவரை அமெரிக்கா கொன்று விட்டதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத இந்தியா, ஈரான் மீதான கண்டனத் தீர்மானத்தை ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சிலில்  134 நாடுகளுடன் இணைந்து முன்மொழிந்துள்ளது என்பதும் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கூட்டுச்சேரா நாடுகளின் தலைமைத்தகுதி படைத்திருந்த இந்தியாவின் இன்றைய வெளியுறவுக் கொள்கை மிக அப்பட்டமாக அமெரிக்க சார்பான ஒன்று என்று இப்போது அம்பலமாகியுள்ளது. பிப்ரவரி 28 ஈரான் தாக்குதலுக்கு இரண்டு நாள் முன்பாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த இந்திய பிரதமர், “இஸ்ரேல் தந்தை நாடு, இந்தியா தாய்நாடு” என்று பிரகடனம் செய்தது, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அந்த நாடு இந்திய பிரதமருக்கு கழுத்தில் அணிவித்த பதக்கத்தை ஏற்றுக் கொண்டது ஆகியவை இந்தியாவில் மிகப்பெரிய விமர்சனத்தைக் கிளப்பி உள்ளது. நாடாளுமன்றத்தில் இது பெரிய பிரச்சினை ஆகி உள்ளது.  வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அரசின் கொள்கைகள் தியோடர் ஹெர்சின் ஜியோனிச  கொள்கைகளுக்கு நெருக்கமானவை அல்லது அந்த கொள்கைகளின் அச்சு அசலான நகல் என்பது மோடி அரசின் இந்த  அணுகுமுறையால் அம்பலமாகி உள்ளது. 

எவ்வாறு முதலாவது உலகப்போரும் இரண்டாவது உலகப் பொரும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்ட சமூக பொருளாதார சிக்கலின் விளைவாக விளைந்தனவோ, போரின் இறுதியில் எவ்வாறு ஐரோப்பிய நாடுகளையும் இன்ன பிற மூன்றாம் உலக நாடுகளையும் அமெரிக்காவும் பிரிட்டனும் பிரான்சும் தமக்கிடையே பங்கு வைத்துக் கொண்டனவோ அதேபோன்ற ஒரு நிலைமைக்கு இப்போது நடக்கின்ற இந்த மேற்காசிய யுத்தம் இட்டுச் செல்லாது என்பது மட்டும் உறுதி. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. தான் நினைத்தபடி எல்லாம் ஆட முடியும் என்று அமெரிக்கா இப்போது செயல்பட முடியாது. போரின் போக்கை கவனித்தாலும் கூட, அமெரிக்காவின் கணிப்பு அத்தனையும் தவறாகி விட்டன என்பதும் இந்தப்போரில் இருந்து விரைவில் வெளியே வரவே அமெரிக்கா விரும்புகிறது என்பதும் ட்ரம்ப் விடுக்கும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளால் புரிகின்றது. தனது ஐரோப்பிய கூட்டாளிகளாலும் பிற சகாக்களாலும் கைவிடப்பட்ட நிலையில் அமெரிக்கா தனியே சிக்கிக்கொண்டுள்ளது.

உண்மையில் இப்போது அமெரிக்கா சிக்கிக் கொண்டிருப்பது நிதி மூலதனத்தில் ஏற்பட்டிருக்கின்ற கடுமையான நெருக்கடியில்தான். மூலதனத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமும் முதலீடு செய்வதன் மூலமும் அந்த நாடுகளின் வளங்களை கொள்ளை அடிக்கலாம், அந்த நாட்டு மக்களின் உழைப்பை குறைந்த ஊதியத்தில் சுரண்டலாம், அந்த நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கலாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிடுகிறது. நவீன பொருளாதாரத்தின் அச்சாக பெட்ரோலிய வளம் இருப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கருதுவதால் அவர்களின் கவனம் முழுவதும் பெட்ரோலிய வளமிக்க மேற்காசிய நாடுகளின் மீதும், இயற்கையான கனிம வளம் மிக்க ஆப்பிரிக்க நாடுகளின் மீதும் தென் அமெரிக்க நாடுகளின் மீதும் குவிந்து இருக்கிறது. ஆனால் உழைப்பு இன்றி வெறும் மூலதனம், இயற்கை வளம் ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது என்பதை இந்த ஆதிக்க சக்திகள் உணர்ந்தே இருக்கின்றன. குறிப்பாக மக்கள் தொகை மிகுந்துள்ள இந்த நாடுகளின் உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியானது மிகப்பெரிய மூலதனமாகும். 

ஒருபுறம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேலையின்மை, குடியிருக்க வீடுகளின்மை, அரசுகள் கைவிடப்பட்டதால் அதிகரிக்கும் மருத்துவ செலவு உள்ளிட்ட பிரச்னைகளால் உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள். அதே நேரத்தில்  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு தரப்பட வேண்டிய ஊதியத்தை விடவும் பல மடங்கு குறைவாக ஆசிய, ஆப்பிரிக்க மக்களுக்கு கொடுக்க முடியும். அதன் பொருட்டு இந்த நாடுகளின் அரசுகளை தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துமாறு அல்லது ஒழித்துக்கட்டுமாறு கையை முறுக்குகிறது அமெரிக்கா. உலகெங்கும் நவீன காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டவும் அதன் தலைவனாக தன்னை நிலை நிறுத்தவும் அமெரிக்கா அல்லது அமெரிக்க நிதி மூலதனம் முயற்சி செய்கிறது. 

ஆனால் இந்த முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதையே உலக அரசியல் போக்கு தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அமெரிக்காவின் உழைப்பாளி மக்களும் அமெரிக்காவின் சார்பு அல்லது கூட்டாளி நாடுகளில் உள்ள உழைப்பாளி மக்களும், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் உழைப்பாளி மக்களும் தத்தமது நாடுகளின் அரசுகள் கடைபிடிக்கின்ற தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, சாமானிய மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவது அதைத்தான் காட்டுகிறது. பன்னாட்டு மூலதனத்தை உள்நாட்டில் குவிப்பதை தவிர்த்து தற்சார்பு நிலையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையையும் எடுத்தால் மட்டுமே இந்தியா போன்ற வளரும் நாடுகள் தாக்குப்பிடித்து நிற்க முடியும் என்பதை கடந்தகால வரலாறு சொல்கிறது.

...

பேசும் புதிய சக்தி ஏப்ரல் 2026 இதழில் வெளிவந்த கட்டுரை. கட்டுரை எழுதப்பட்ட நாள் 17.3.2026.

வியாழன், ஜனவரி 15, 2026

குறைந்த பட்ச கூலிச்சட்டமும் பாண்டி விளையாடிய குலுக்கல் சீட்டும்

குறைந்த பட்ச கூலி சட்டம் Minimum Wages Act, 1948 என்று ஒரு சட்டம் உள்ளது. இந்தியாவில்தான். 

எட்டாவது வகுப்புக்கு மேலே படிக்க முடியாமல் பள்ளிப்படிப்பை அத்தோடு நிறுத்தும் பல கோடி மக்கள் நிறைந்த நாடு இது. விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னாலும் இதுதான் யதார்த்தம். ஆசாத் கி அம்ருத் எல்லாம் மேடையில் வாய் கிழிக்கவும் பிலெக்ஸ் போர்ட் வைக்கவும் மட்டுமே பயன்படும். எட்டாவது வகுப்பை தாண்டி பத்தாவது வகுப்பை முடித்து ப்ளஸ் ஒன்று வகுப்பை தொடர முடியாமல் அத்துடன் வெளியேறும் பல கோடி மாணவர்களும் இருக்கின்றார்கள். எட்டாவதும் இல்லாமல் ப்ளஸ் டூவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்கள் இவர்கள். 

இவர்களின் எதிர்காலம் கருதி ஏதாவது ஒரு கைத்தொழிலை இவர்கள் கற்றுக்கொண்டால்நல்லது என்று 1950களின் தொடக்கத்தில் அன்று இருந்த ஒன்றிய அரசு திட்டமிட்டதால் ஐ டி ஐ எனப்படும் கைவினை தொழில்சார் பயிற்சிப்பள்ளிகள் நாடெங்கும் உருவாக்கப்பட்டன. ஏறத்தாழ 130க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி தரப்படுகிறது. எட்டாவது முதல் பன்னிரெண்டாவது வகுப்பு தேறியவர்கள் பயிற்சி பெற தகுதி படைத்தவர்கள். சான்றிதழ் பெற்று வருபவர்கள் தம் வாழ்க்கைக்கான குறைந்தபட்ச வருவாயை தேடிக்கொள்ள முடியும் என்பதுதான் ஐ டி ஐ படிப்பின் சிறப்பு. 

... ...

என்னதான் ஒரு தொழிற்சாலையில் நாணயமாக நேரத்தை வீணாக்காமல் உழைத்தாலும் முதலாளி என்பவனுக்கு லாபம் ஒன்றுதான் குறிக்கோள். அவன் வீசி எறியும் சில்லறைகள்தான் அந்த தொழிலாளியின் உழைப்புக்கான கூலி. பல நேரங்களில் வீசி எறியாமலும் போகலாம்.

இந்தியத்தொழிலாளர்கள் இப்படி முதலாளிகளால் ஏமாற்றப்படுவார்கள் என்று தெரிந்ததால்தான் K G R Chowdhury என்பவர் 'ஒவ்வொரு தொழிலுக்கும் ஆன குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கான வாரியங்களை உருவாக்க வேண்டும்' என்று 1920இலேயே அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு பரிந்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக பலவேறு கூட்டங்கள், அரசுகள், கமிட்டிகள், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள், பரிந்துரைகள், பேச்சுவார்த்தைகள் என தொடர்ச்சியாக தொய்வின்றி ஒரு நீண்ட இயக்கம் நடைபெற்றது, நடைபெறுகின்றது. இதன் விளைவுதான் அல்லது பலன்தான் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் வெவ்வேறு வகையான தொழில்களுக்கு இதுதான் குறைந்தபட்சகூலி என்று நிர்ணயம் செய்கின்றன, அதற்கான பஞ்சப்படியும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட தொழிலாளிக்கு employees provident fund, ESI வசதிகள் அளிக்கப்படும். 

... .... ...

இந்த சட்டத்தின்படி மாநகராட்சி, முனிசிபலிட்டி, இவை அல்லாத பிற பகுதிகள் என மூன்று மண்டலங்களாக zones a, b and c தொழில் செய்யும் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன, அதற்கொப்ப ஊதியத்தில் சிறிது வேறுபாடு உள்ளது.  ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் பஞ்சப்படி பரிசீலனை செய்யப்படும், அதாவது உயர்த்தப்படும். தொழிலாளர்கள் unskilled, semiskilled / supervisor, clerk/skilled, highly skilled என்று தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உதாரணமாக 1.10.2022 முதல் மண்டலம் Aயில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

unskilled 454 ரூ,  semiskilled / supervisor 495 ரூ, clerk/skilled 539 ரூ, highly skilled 596 ரூ.

காவலாளியின் தினசரி ஊதியம் மண்டலவாரியாக 940, 866, 788 என்றும், தரையை கூட்டி சுத்தம் செய்யும் பணியாளருக்கு 711, 595, 477 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதாவது இதன் பொருள் என்னவெனில் 454 ரூபாய் தினக்கூலி பெறும் ஒரு தொழிலாளி அந்த 454 ரூபாயில் (25 வேலை நாட்கள் எனில் மாத ஊதியம் ரூ.11350) தன் மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்தால் நான்கு பேர் அந்த 454 ரூபாய்க்குள் தமது ஒட்டுமொத்த குடும்ப செலவுகளையும் சமாளித்துக்கொள்ள வேண்டும். உணவு, உடை, பள்ளி கல்லூரி கல்விச்செலவு, போக்குவரத்து (இதில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் என்று புரிந்துகொள்க), பண்டிகை கால செலவுகள், எதிர்பாராத செலவுகள் ஆன குடும்ப விழாக்கள் போன்றவை என அனைத்தும் அடங்கும்.

Organised sector எனப்படும் அணித்திரட்டப்பட்ட உழைப்பாளர் திரள் ஆன அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மேற்படி குறைந்தபட்ச ஊதியத்துக்குள் வராத (அதனினும் அதிக ஊதியம் பெறும்) தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தவிர பல கோடி உழைப்பாளர்களை அடக்கிய மிகப்பெரும்பான்மை இந்திய சமூகம் இந்த குறைந்தபட்ச ஊதிய வரம்புக்குள்தான் வாழ்க்கையை நடத்துகின்றது. இதுதான் யதார்த்தம்.

... ...

இதுதான் இன்றைய யதார்த்தம் எனில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின் ஒன்றிய அரசு வெளியிட்ட  2000 ரூபாய் தாள் யாருக்கு என்ற கேள்வி நியாயமானது. அதாவது ஒரு நாளைக்கு 454 ரூபாய் வருமானமே உள்ள ஒரு தொழிலாளிக்கு இரண்டு 200 ரூபாய் தாளும்,  மீதி 54 ரூபாய்க்கு 10 ரூபாய், 5 ரூபாய் தாள் அல்லது நாணயங்களே தேவையானவை, போதுமானவை. அன்று demonetization அறிவிக்கப்பட்ட பின் ஏ டி எம் எந்திரங்கள் எல்லாவற்றிலும் 2000 ரூ தாள்கள் மட்டுமே அடுக்கப்பட்டு இருந்தன என்பதையும் இப்போது அந்த 2000 ரூ தாளை எங்கும் பார்க்க முடியவில்லை என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவை யாருக்காக அச்சிடப்பட்டன, இப்போது யாரால் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன என்பதை புரிந்துகொள்ள பெரிய அரசியல் பொருளாதார மேதைகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

.. ...

கறுப்பு பணம் புரளும் ஆகப்பெரிய தொழில் என்பது சினிமா தொழில் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இது தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்ற அளவில்தான் கடந்த காலங்களில் இருந்தது. அதாவது எத்தனை கோடிகள் செலவு செய்து படங்களை தயாரித்து வெளியிட்டாலும் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை ஒரு காலத்தில் 75 பைசா,  1, 2, 5, 10 ரூபாய் என்று இருந்து பின் 10, 20, 40, 50 என்பதை தாண்டி விற்றது இல்லை, படம் பார்க்க வரும் மக்களின் தலையில் அநியாயமாக டிக்கெட் விலையை சுமத்தி கொள்ளை அடித்தது இல்லை.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் புதிய கலாச்சாரம் ஒன்று உருவாகி கேள்வி கேட்பார் இன்றி வளர்ந்து வருகிறது. பொங்கல், தீபாவளி அன்று அதிகாலை காட்சி என்ற பெயரில் டிக்கெட் விலை 1000, 2000 என்று அடிக்கப்படும் பெருங்கொள்ளைக்கு வரம்பே இல்லை. சாதாரண காலங்களிலும் டிக்கெட் விலை 200, வண்டி பார்க்கிங் 100, காப்பி 50, பாப் கார்ன் 100 என்று தியேட்டர்காரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவு எதுவுமில்லை. அதாவது ஒரு நாள் குறைந்த பட்ச கூலி ஆன (ஒரு குடும்பமே வாழ வேண்டிய) 454 ரூபாய்க்கு சமம் அல்லது அதிகம்.

இந்த லட்சணத்தில் தாய் தகப்பன் வருமானத்தில் நாயகர்களுக்கு கட் அவுட், மாலை, பால் அபிஷேகம், தவறி விழுந்து சாவு எல்லாம் அநாகரிகத்தின் உச்சக்கட்டம். சமூகத்தின் அறிவு மட்டமும் கலாச்சார மட்டமும் உயர்ந்து வருவதை சில பத்தாண்டுகள் இடைவெளியில் உணர முடியும். எம் ஜி ஆர் காலத்தில் கூட இந்த அளவு சீர்கேட்டை, சீரழிவை நான் கண்டதில்லை.

... ...

கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். ஒரு தீபாவளி அன்று மதுரை நியூ சினிமாவில் ரிலீஸ் ஆன எம் ஜி ஆர் நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தை பார்க்க என் பக்கத்து வீட்டு குடும்பமும் என் அம்மாவுடன் நானும் செல்ல திட்டமிட்டோம். வீட்டில் பெரிய ஆண்கள் யாரும் வரவில்லை. பெண்கள் வரும் முன் பக்கத்து வீட்டு பாண்டியும் நானும் சென்று டிக்கெட் எடுக்க வேண்டும் என்று திட்டம். அவன் என்னை விட வயதில் மூத்தவன். தியேட்டர் வாசலில் சிவாஜி, பத்மினி, எம் ஜி ஆர், மஞ்சுளா என்று  சீட்டு போட்டு குலுக்கிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அது பற்றி அப்போது ஒன்றும் தெரியாது. டிக்கெட் எடுக்க கொடுத்து இருந்த பணத்தில் இருந்து (மொத்தமே 5 ரூபாய்க்கு மேல் இருந்திருக்காது) பாண்டி 50 பைசா வைத்து விளையாடினான். அவனுக்கு ஒரு ரூபாய் கிடைத்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பாண்டி இப்போது 2 ரூபாய் வைத்து விளையாடினான். மொத்தமும் போனது. பாண்டி திருதிரு என முழித்தான். பணம் காணாமல் போய்விட்டது என்று அவன் அம்மாவிடம் பொய் சொன்னான்.

இப்போது சினிமா தியேட்டர்காரர்களும் அரசாங்கமும் சேர்ந்து மூணு சீட்டு விளையாடுகின்றார்கள்.

.

15.1.2023

வெள்ளி, டிசம்பர் 26, 2025

மத்ய ப்ரதேஷ் ஹிமாச்சல் ப்ரதேஷ் வைரஸ் ப்ரதேஷ்

மத்ய பிரதேச காங்கிராஸ் அரசை கவிழ்த்து
மார்ச் 23 2020 அன்று பிஜேபி முக்யமந்த்ரிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த உடன் கொரோனா வைரஸ் கண்ணில் தெரிய 25 மார்ச் 2020இல் டிவியில் வந்து முதல் லாக் டவுன் அறிவித்தார் பிரதான் மந்த்ரி மோடி. முதல் அலை 2020இல் சுகாதார அமைச்சர் என்ற ஒருவர் இல்லாத ஒரே மாநிலம் பீஜேபியின் ம.பி.தான். பெருந்தொற்று பரவிய ஒரு நெருக்கடியான காலத்தில் இதுதான் மிகப்பெரிய விசித்திரம், கொடுமை!
அதைப்பற்றி ஊடகங்களில்  ஒரே ஒரு ஒற்றை சொல்லும் பேசப்படவில்லை.

அதற்கு முன்பே 2019 டிசம்பரில் சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டபின் உடனடியாக விமான போக்குவரத்தை நிறுத்தி இருக்கலாம். நடந்து கொண்டிருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறுத்துமாறு எதிர்க்கட்சிகள் உச்ச ஸ்தாயியில் அலறினாலும் ப்ரதான் மந்த்ரி அதை கண்டுகொள்ளவில்லை. காரணம் வேறென்ன? ம.பி. காங் அரசை கவிழ்க்க பிஜேபிக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. 

ஆனால் தன் கேவலமான வியாபார அரசியலை மறைக்க டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தை காரணம் காட்டி இந்திய இஸ்லாமிய சமூகமே கொரோனாவுக்கு காரணம் என்று டிவிக்களில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட, மக்கள் பணத்தில் மாத சம்பளம் வாங்கும் பீலா ராஜேஷ் போன்ற அதிகாரிகள் ஆர் எஸ் எஸ் ப்ரச்சாரகர்களாக மாறி நாக்பூர்பீடம் வாந்தி எடுத்ததை தின்று மீடியாக்களில் வெட்கம் மானம் இன்றி மறு வாந்தி எடுத்தார்கள். இரண்டு வருடங்கள் கழிந்த பின் நெட்டி முறித்து கொட்டாவிவிட்டு 'தப்லீக் ஜமாஅத்தை குற்றவாளி ஆக்கியது தப்பு' என்று உ.நீ.மன்ற நீதிபதிகள் தீஈஈஈஈர்ப்பு சொல்லும்போது, இசுலாமிய சமூகம் ஏற்கனவே சந்தித்து இருந்த பொய்க்குற்றச்சாட்டு, அவமானம், சமூக ஒதுக்கல் ஆகிய சேதங்களை அத்தீர்ப்பால் நேர்செய்ய முடியவில்லை. சேதம் சேதம்தான். பீலா ராஜேஷ் போன்ற பிஜேபி அடிவருடிகள் வேறு துறைக்கு மாற்றப்பட்டு வழக்கம்போல 30ஆம் தேதி சம்பளத்தை வாங்கிகொண்டு இருந்தார்கள்.

அதன் பிறகு கும்பமேளா என்ற பெயரில் பல லட்சம் நிர்வாண ஆசாமிகள் அலஹாபாத்திலும் ஹரித்வாரிலும் கூடிய போதும், ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் பல லட்சம் கூடி கும்மாளம் அடித்தபோதும், இவற்றின் பொருட்டு ரயில்களில் வாகனங்களிலும் ஊர் ஊராக பயணித்தபோதும் கொரோனா வைரஸ் பற்றி ப்ரதான் மந்திரியும் உ.நீ.மன்றமும் ஒரு வார்த்தையும் பேசாமல் மவுனமாக இருந்தார்கள். ஏனெனில் கொரோனாவை பரப்பும் கூட்டம் எனில் அது இசுலாமியர்கள்தான் என்ற கருத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ப்ரதான் மந்திரியின் நெருங்கிய சகாக்களான அம்பானி, அதானியின் அபான வாயுவின் சப்தத்தை மட்டுமே செய்தி என நம் வீட்டில் கொட்டும் ஊடகங்கள் அதை உறுதி செய்தார்கள்.

ஏழு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் கதி கலங்கி காய்ச்சல் கண்ட மோடி கூட்டம் குஜராத்தில் தொடர்ந்து பல்லாயிரம் பேரை திரட்டி தெரு தெருவாக ஊர்வலம் போனபோதும் சீனாவில் நிலைமை சரியில்லை என்றுதான் செய்திகள் சொன்னன. ஹிமாச்சலில் ஒருவேளை காங் ஓரிரண்டு இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்து இருந்தால் அந்த அரசை கவிழ்த்துவிட்டு பிஜேபி அரசை அமைத்து முடிக்கும் வரை இப்போது பேசும் கொரோனா அபாயத்தை பிஜேபி பேசி இருக்காது, அது வரை ராகுல் காந்தி யாத்திரையும் கண்ணுக்கு தெரிந்து இருக்காது. 2020 மார்ச் ம.பி.அரசை கவிழ்த்த கதையை மீண்டும் வாசியுங்கள். 2024 தேர்தல் வியூகங்களை, வியாபாரத்தை நடத்த இந்த புதிய வகை வைரஸ் என்ற பிரச்சாரம் பயன்படும் எனில் 2024 வரை லாக் டவுன் அறிவிக்கவும், நாடாளுமன்றத்தை முடக்கவும் பிஜேபி அவ்வாறே செய்யும். நமது நண்பர்கள் மீண்டும் மயிர் பிளக்கும் தடுப்பூசி விவாதங்களில் இறங்குவார்கள்.

இதுவன்றி வேறொரு விஷயத்தை ஊடகங்கள் தீவிரமாக பேசுவதில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடுப்பூசியால் இப்போது பரவும் மாற்று வடிவ வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்பதே அது. அப்படியெனில் அதே தடுப்பூசியை இப்போதும் செலுத்தி கொள்ள உபதேசம் செய்வது ஏன்? 

பைசரும் மாடெர்ணாவும் ஒவ்வொரு வினாடியும் ஆயிரம் டாலர் லாபம் (வருமானம் அல்ல, லாபம்) மட்டுமே சம்பாதிப்பதாக வெளிவந்த ஆக்ஸ்பாம் அறிக்கையை ஊடகங்கள் பேசுவது இல்லை, முற்போக்கு நண்பர்களும் அது பற்றி பேசுவதில்லை.

26.12.2022

வியாழன், டிசம்பர் 25, 2025

நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்கம்

நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்கம்: 2003 வாஜ்பாய் அரசின் நிலையும் மோ டி அரசின் அறிக்கையும் த.நா.அரசின் நிலையும்

இன்றைய 25.12.24 தி ஹிந்து ஆங்கில நாழிதழில், ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் ஒன்றிய நிலத்தியல் துறைக்கு (G S I) சொல்லியுள்ள அறிவுறுத்தல்கள் அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டென் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்புகின்றன.

ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் ஒன்றிய நிலத்தியல் துறைக்கு (GSI) சொல்லியுள்ள அறிவுறுத்தல்களில் முக்கியமானது, ஆறு கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி டங்க்ஸ்டென் சுரங்க திட்ட வேலைகளை மறு பரிசீலனை செய்ய சொல்லி இருப்பதாகும்.

இவற்றுள் அரிட்டாப்பட்டி கிராமம் அரசால் அறிவிக்கப்பட்ட பல்லுயிர்ப்பெருக்க பகுதி என்பதுடன், தொல்லியல் சின்னங்கள் நிரம்பிய பகுதியும் ஆகும்.

உத்தேசிக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் பரப்பளவு வரம்புக்குள்  இருந்து அரிட்டாப்பட்டி கிராமத்தை விலக்கி வைக்கும் சாத்தியத்தை கண்டறியுமாறு ஒன்றிய நிலத்தியல் துறைக்கு (GSI) அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

அதுவரை சுரங்கப்பணி ஒப்பந்ததாரர் ஆன ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு (முன்னாள் அரசுப்பொதுத்துறை நிறுவனம்) சுரங்கப்பணியை தொடங்க கொடுக்கப்படும் ஆணையை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனில் தமிழக அரசின் பங்குதான் இதில் முக்கியமாக உள்ளதா? இந்தக் கேள்வி வேறு பல தகவல்களுக்கு இட்டு செல்கிறது.

ஒன்றிய அமைச்சகம் தனது அறிக்கையில் சொல்வன இவை:

193.215 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர்ப்பெருக்க பகுதி இருப்பதாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு தெரிவித்து இருந்தது. உத்தேசிக்கப்பட்டுள்ள சுரங்கப்பகுதியில் இது பத்து விழுக்காடு ஆகும். ஆனாலும் இந்த சுரங்கப்பகுதியை ஏலம் விடுவதை தமிழக அரசு எதிர்க்கவில்லை.

2024 பிப்ரவரி மாதம் இந்த ஏலம் விடும் நடவடிக்கை தொடங்கியது, நவம்பர் 7 அன்று ஏலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலம் முழுவதுமே தமிழக (தி மு க) அரசிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை, கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏல நடவடிக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் கூட்டிய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2023க்கு முந்தைய காலத்தில் இதுபோன்ற தாதுப்பொருட்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருந்தது என்பதால், GSI டங்க்ஸ்டன் சுரங்கம் குறித்த குறிப்பாணையை (Memorandum) செப்டம்பர் 2021 லேயே தமிழக திமுக அரசுக்கு கையளித்தது. 2023இல் 1957 சுரங்க-தாதுப்பொருள்  சட்டத்தில் ஒன்றிய மோடி அரசு ஒரு திருத்தம் செய்து இது போன்ற சுரங்கங்கள், தனிமங்களை ஏலம் விடும் அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசுக்கு மாற்றம் செய்து கொண்டது.

இந்த சட்ட திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுரங்கங்களை ஏலம் விடப்போவதை தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சகம் தெரிவித்தது. தமிழக அரசின் நீர் வளத்துறை அமைச்சர் ஒன்றிய அரசுக்கு உடனே எழுதிய கடிதத்தில் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை பற்றி கேள்வி எழுப்பினார், மேலும் ஏலம் விடும் உரிமையை மாநில அரசுகளுக்கே கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

2021-23 காலத்தில் ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசின் கையில் இருந்தபோது அப்படி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிகாரம் கையில் இருந்த ஒன்பது வருட காலத்தில் தமிழக அரசு எந்த ஒரு சுரங்கத்தையும் ஏலம் விடவில்லை.

ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்.

...

கீழ்க்கண்ட நியாயமான சந்தேகங்களை மாநில அரசு தீர்க்க வேண்டும்:

“2024 பிப்ரவரி மாதம் இந்த ஏலம் விடும் நடவடிக்கை தொடங்கியது, நவம்பர் 7 அன்று ஏலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலம் முழுவதுமே தமிழக (தி மு க) அரசிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை, கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏல நடவடிக்கை தொடங்கிய நாளில் இருந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் கூட்டிய பல கூட்டங்களில் தமிழக அரசு கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.” ஒன்றிய அமைச்சகத்தின் இந்த விளக்கம் உண்மை எனில் மாநில அரசு ஏன் மௌனமாக இருந்தது?

“இந்த சட்ட திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுரங்கங்களை ஏலம் விடப்போவதை தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சகம் தெரிவித்தது.” ‘நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல சுரங்கங்கள்’ எனில் இன்னும் பல சுரங்கங்கள் தமிழகத்தில் தோண்டப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதா? உண்மை எனில் மக்கள் மத்தியில் அவற்றை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

...

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் கம்பெனி பற்றி சிறிய விளக்கம்.

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் கம்பெனி  உலகின் இரண்டாவது பெரிய துத்தநாக கம்பெனியாக இருந்த ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். 1966இல் மக்களின் சொத்தாக தொடங்கப்பட்ட இந்த கம்பெனியை 2003ஆம் ஆண்டு ஒன்றிய பி ஜே பி வாஜ்பாய் அரசுதான் மிட்டல் முதலாளியின் வேதாந்தா கம்பெனிக்கு விற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் கம்பெனி இந்த வேதாந்தா நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனம் என்பது வெளிச்சமான உண்மை. (கருணாநிதி அவர்கள் சொன்னதுபோல) வாஜ்பாய் ஏன் நல்லவர் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

24.12.2024.

...

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம்: வாஜ்பாயி அரசும் திமுக அரசும் 

1966இல் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாக தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஜின்க் லிட் என்ற பெரிய நிறுவனத்தை பீ je pee வாஜ் பாய் அரசு 2003இல் வேதாந்தா மிட்டல் முதலாளிக்கு விற்றது.

அரிட்டாபட்டி என்ற ஊர் நாயக்கர்பட்டி சுரங்க பிராஜெக்டில் அடங்கிய பல ஊர்களில் ஒரு ஊர். இந்த பிராஜெக்ட் இப்போது ஏலத்தில் எடுத்து இருப்பவர் வேதாந்தா மிட்டல்.

இந்த ஏல நடவடிக்கை தொடங்கியது முதல் முடிந்த வரை திமுக அரசுக்கு எல்லாம் தெரியும், எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்று நேற்று ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சகம் கூட்டிய பல கூட்டங்களில் மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் என்றும் அறிக்கை சொல்கிறது.

...

இந்த அறிக்கைக்கு அமைச்சர் திரு. துரை முருகன் இன்று பதில் அல்லது விளக்கம் கொடுத்துள்ளார். The Hindu, 26.12.24, பக்கம் 1, 6. அது பின்வருமாறு:

"இப்போதைய ஒன்றிய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்று அனைவரும் அறிவார்கள், எனவேதான் மாநில அரசு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை, தெரிவிப்பது வீண் என்று கருதினோம்.

சுரங்கம் தோண்டும் பணிக்கான ஒத்திக்கு விடும் உரிமை மாநில அரசுக்கே உள்ளது என்பதால் அந்த உரிமையை நாங்கள் தக்க வைத்துக் கொண்டோம். 

இந்த சுரங்க திட்டம் அடிப்படையிலேயே தவறானது, மீறி செயல் படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என்று 3.10.23அன்று ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டோம்.

ஒன்றிய நிலத்தியல் - சுரங்க ஆணையர் மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தில் சுரங்கம் அமைய உள்ள நிலவரம்பு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அரிட்டாபட்டி கிராமம் பல்லுயிர் பெருக்கம் அமைந்த பாரம்பரிய கிராமம் என்று ஒன்றிய அரசுக்கு மாநில அரசு தெரிவித்ததையும் மீறி ஒன்றிய அரசு ஏல நடவடிக்கையை மேற்கொண்டது.

தமிழக முதல்வர் பிரதமர் மட்டத்தில் இந்த பிரச்சனையை எடுத்து சென்ற பின் சுரங்கம் அமைய உள்ள உத்தேச பரப்பளவை மறு பரிசீலனை செய்ய ஒன்றிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள ஏல உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்."

...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்த வேதாந்தா குழுமத்தின் ஒரு கம்பெனி என்பது குறிப்பிடத்தக்கது.

26.12.2024

ஞாயிறு, டிசம்பர் 21, 2025

மீளவும் வருமோ அந்த இசைக்காலம்?

மதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனல் இசை நிகழ்ச்சி குறித்து 10 நிமிட விடியோ பதிவொன்றை பதிந்துவிட்டு என் போன்றவர்களை 40 வருடங்கள் பின்னால் பயணிக்க வைத்துள்ளார். எனது பின்னோக்கிய பயணத்தில் நீங்களும்...

சரியாக எனது 10 வயதில் என் அப்பா ஒரு ஃபிலிப்ஸ் பிலெட்டினா ட்ரான்சிஸ்டர் வாங்கினார்; அதன் ப்ரவுன் கலர் தோல் கவசத்தின் வாசம் இப்போதும் நுரையீரலில் பரவியுள்ளது; அப்பாவும் அண்ணனும் இல்லாத போது கவசத்தை கழற்றி வெள்ளியின் பளபளப்போடு மின்னும் அந்த வானொலிப்பெட்டியை மடியில் போட்டு ஆசை தீரப்பார்த்துக்கொண்டே இருப்பேன்; ஒரு வானொலிப்பெட்டியை காதலிபோல் நேசித்ததற்கு ஒரு காரணம் ஒரே காரணம் மட்டுமே இருந்தது – அது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பை கடல்கடந்து வந்து என் இதயத்தோடு கரைத்தது.

அந்த வயதில் நான் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்தது படிப்பதற்கு அல்ல, அய்யய்யா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன், தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்.. என்று என்னை  பி.சுசீலா தாலாட்ட வேண்டும்; தொடர்ந்து நாஹூர் அனிபா, சீர்காழி, டி.எம்.எஸ் எனக்காக என் தலைமாட்டில் உட்கார்ந்து பாடுவார்கள். அந்த மயக்கத்தில் இருந்து மீள்வதற்குள் ‘நெஞ்சில் நிறைந்தவை’யாக தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப்பா, தண்டபாணிதேசிகர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், கே.பி.சுந்தராம்பாள், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, பெரியநாயகி (கனவிலும் நினைவிலும் இணை பிரியாத தெய்வீகக்காதலுக் கிணையேது...),கோமளா, எம்.எல்.வசந்தகுமாரி...என 10 வயசுப்பையனுக்காக ஒரு பெரியவர் கூட்டம் இலங்கையில் இருந்து வந்து வரிசையில் நிற்கும் (அருள்தாரும் தேவ மாதாவே! ஆதியே எங்கள் ஜோதியே!...)  அள்ளித்தெளித்த இசைக்கோலம், அடடா! மீளவும் வருமோ அது ஒரு இசைக்காலம்!

பிறந்தநாள்...இன்று பிறந்தநாள்...நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...என டி.எம்.எஸ்.சின் ‘நான்குசுவர்கள்’ (பாலச்சந்தர்) படத்தின் பாடலின் முதல்வரிகளோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அம்மா அப்பா அம்மம்மா அப்பப்பா மாமா மாமி சித்தப்பா பெரியப்பா பெரியமாமா...இப்படி மூச்சுவிடாமல் சுற்றங்கள் சூழ...பிறகு வருவதோ பொங்கும் பூம்புனல்...அந்த சிக்னேச்சர் ம்யூசிக்..அடடா! முழுதாக நான் அதைக்கேட்டிருக்கின்றேன், அது பெண்களின் குரலில் ஒலிக்கும் ஒரு கோரஸ் ஒலிக்கோர்வை! மெதுவாக தொடங்கி அப்படியே வேகம் பிடித்து...ஒரு அடர்காட்டின் எல்லையில் தயக்கத்துடன் காலடி எடுத்து வைக்கும் ஒருவனை அப்படியே தனக்குள்ளே இழுத்துப்போட்டுக்கொள்ளும் காடாக அந்த சிக்னேச்சர் ம்யூசிக்!

வானவில், இருவர்குரல், ஒன்றோடொன்று, இந்திப்பாடல்கள் (பாபி அல்ல, ‘பபி’ படத்தில் இருந்து ஷைலேந்திரசிங் பாடியது...மே ஷாயர்...), பொப் இசைப்பாடல்கள், ஈழத்துப்பாடல்கள் (இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன், ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே.,கள்ளுக்கடைப்பக்கம் போகாதே .), மரணச்செய்திகள் (அன்னாரின் ஜனாசா....), சரி...இப்படி காலநேரம் பார்க்காமல் வானொலியே கதி என்று கிடந்தால் தூங்கப்போக மாட்டாயா? தொடர்வது ‘இரவின் மடியில்’...அதன் பின்புதான் தூக்கம். மயில்வாகனம் சர்வானந்தா, சில்வஸ்டர் பாலசுப்ரமண்யம், ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது,jஜோசப் ராஜேந்திரன்...எல்லோரும் என் சொந்தக்காரர்கள்! ஒரேஒருநாள் இக்குரல்களைக்  கேட்காவிட்டாலும் வாழ்க்கையை முற்றாக இழந்த்துபோல்தான்!  என்னவொரு காலம் அது! மீண்டும் வருமோ?

வானொலிக்குறுக்கெழுத்துப்போட்டி..என் முதல் குறுக்கெழுத்து அனுபவம் பத்திரிக்கைகளில் அல்ல, இலங்கையில் இருந்து கடல் கடந்து ராஜேஸ்வரி சண்முகம் கேள்விகளைக் கேட்க, தொடரும் பாடல் வரிகளை கவனமாக ‘அவதானித்து’ சரியான விடைச்சொல்லை தேர்வு செய்து (மதுரையில் இருக்கும் நான் தயாராய் கட்டம் போட்டு வைத்திருக்கும் தாளில் இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் என crossword puzzle ஐயா!) விடைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய நான் என்றும் தவறியதே இல்லை! ’நீங்கள் அனுப்பவேண்டிய முகவரி...’ எங்கே அனுப்புவது? கையில் காசு இல்லாத சிறுவன் நான்! எனக்கு நானே சந்தோசம் அல்ல, பெருமைப்பட்டுக்கொள்வேன்! ஞாயிறு பிறந்ததா? ‘அம்பிகா ஜூவல்லர்சின் பாட்டுக்குப்பாட்டு’...’தொடர்ந்து 100 வாரங்களாக முதல் இட்த்தில் ‘என்னடி மீனாட்சி...நீ சொன்னது என்னாச்சு?’ தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ‘மீன் கொடித்தேரில் மன்மதராஜன்...’ நான் இப்போதும் எப்போதும் சொல்வது இதுதான்: என் முதல் தமிழ் ஆசிரியனும் முதல் நண்பனும் இலங்கை வானொலிதான்; இரண்டாவது மூன்றாவது இடங்களில் சிவாஜி கணேசன், டி.எம்.எஸ், சீர்காழி...இவர்கள் இருந்தார்கள்.  

.

முகநூல் பதிவு 21.12.2015

சனி, டிசம்பர் 13, 2025

வனப்பேச்சி என்ற பேரண்டச்சி (பேசும் புதிய சக்தி, டிசம்பர் 2025)

சென்னைக்கலைக்குழுவின் தயாரிப்பில் பிரளயன் நெறியாளுகையில் வனப்பேச்சிஎன்ற நாடகம் நவம்பர் 2ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு சென்னை மியுசிக் அகாடெமியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இராட்சசகுலப் பெண் ஆன தாடகையின் கணவன் சுந்தன் என்பவன் மிகப்பெரிய வலிமை பெற்றவன். அகத்திய முனிவனின் ஆசிரமத்தை அடைந்த அவன் அவருக்கு தொந்தரவு செய்ததால் தனது விழிகளின் வெப்பத்தால் அவனை சுட்டெரித்து விடுகிறான் அகத்தியன். இதனைத் தட்டிக்கேட்கச் சென்ற தாடகையை நோக்கி நீ அரக்கி ஆகுகஎன்று சாபம் இட்டதால் அழகிய தாடகை அவலட்சணம் பொருந்திய அரக்கி ஆனாள்.

அங்க நாட்டிலுள்ள காமன் ஆசிரமத்தின் சிறப்பை வனவாசமேகிய இராம லட்சுமணன் இருவருக்கும் எடுத்துச் சொல்கிறார் விசுவாமித்திர முனிவர். குளிர்ச்சி பொருந்திய  வனத்தில் பிராமணர்கள் யாக குண்டங்களை வளர்த்து ஏராளமான வனவிலங்குகளைக் கொன்று தீயில் வீசுகின்றார்கள். மட்டுமின்றி வனமகளாகிய தாடகை வனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு இடுகின்றார். இந்தத்தகராறு முற்ற, தாடகை மீது அம்பெய்து கொல்ல ராமலட்சுமணர் இருவருக்கும் கட்டளை இடுகின்றான் விசுவாமித்திரன்.

அவள் நமது யாகங்களுக்கு இடையூறு செய்பவள், கொடியவள், பெண் என்று பாராதே ராமா! அவளைக் கொன்று விடு! இருட்டியபின் அரக்கர்களை வீழ்த்த முடியாது, இருட்டுவதற்கு முன் அவளைக் கொன்று விடு!” என்று கட்டளை இட, ராமனும் அவ்வாறே அம்பெய்து அவளைக் கொன்று விடுகிறான். இந்திரன் உள்ளிட்ட வானுகிலனர் ராமனைப் பாராட்டுகின்றனர்.  கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் ஆகியவை பன்னெடுங்காலமாக நமக்கு உபதேசிப்பது இதுதான்.

தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் மாணவர்கள் பாதுகாக்கப்பட்ட வனம் ஒன்றிற்கு சுற்றுலா செல்வதுடன் தொடங்குகிறது. வன உயிரினங்கள் பற்றி அறிந்து செயல்திட்ட அறிக்கை எழுதுவதுதான் அவர்களது நோக்கம். வனத்தில் புலிக்குட்டிகளைக் கண்ட மாணவன் சதீஷ், புலிக்குட்டிகளை அருகில் பார்க்கும் ஆவலில் புலிகள் பதுங்கி இருக்கும் பாறை மீது கல் எறிகிறான். வனச்சட்டப்படி இது குற்றம் என்பதால் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி உறுதியாக சொல்லி சுற்றுலாக்குழுவை அங்கிருந்து வெளியேற்றுகிறார். ஆனால் சதீஷும் அவனது தோழி கௌரியும் வனத்தில் தொலைந்து போகிறார்கள். இருள் சூழும் நேரம் என்பதால் ஆசிரியர்களும் வன ஊழியர்களும் சக மாணவர்களும் பதட்டம் அடைகின்றார்கள். ஆசிரியர்களும் வன ஊழியர்களும் இருவரையும் தேடி வனத்துக்குள் செல்கின்றார்கள். பள்ளி நிர்வாகத்துக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.  இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லைஎன்பதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், இந்த செய்தி வெளியே தெரிந்தால் தமது பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பதட்டம் அடைந்து இருவரது உடலில் இருந்தும் பள்ளிச் சீருடையை களைந்துவிட்டு சாதாரண உடையை அணிவித்து விடுமாறுஆசிரியர்களுக்கு உத்தரவு இடுகின்றது. இந்தப் பொறுப்பற்ற அணுகுமுறையை சக ஆசிரியை ஒருவர் அங்கேயே கண்டிக்கிறார்.

 

இருளில் வழி தவறிய இருவரும், வனத்தினுள் தன்னை இலைதழைகளால் அல்லது தோலால் ஆன போர்வையைப் போர்த்திக் கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியை சந்தித்து வியப்புற்று, ‘தனியாக இந்த அடர்வனத்தில் இருக்கும் நீங்கள் யார்?’ என்று கேட்க, ‘என்னைப்பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை; இந்த வனத்துக்கும் உங்களுக்கும் யாதொரு உறவும் இல்லை, நீங்கள் வெளியேறுங்கள்என்று பெண்மணி அவர்களுக்கு உத்தரவு இடுகின்றார். போர்த்தியுள்ள ஆடையை விலக்கும்போது அப்பெண்ணின் முதுகிலும் மார்பிலும் அம்புகள் துளைத்தவாறு நீட்டிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறார்கள். மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க அவள் தன் கதையை சொல்கிறாள்.

 

இராட்சசமும் இரட்சகமும்

என் பெயர் தாடகை. என்னை இராட்சசி என்று சொல்கிறார்கள். உண்மையில் இரட்சகம், அதாவது இரக்கம், தன்னை நாடி வந்தவர்களுக்கு கருணை காட்டுவது என்ற பொருள் தரும் அந்தச் சொல்லை இழிவான பொருள்படும் அரக்கி என்று வலிந்து திணிக்க முற்படுவது வேறு யாரும் அல்லர், உங்களைப்போன்ற நாட்டுவாசிகள்தான்; இந்த வனம் எங்களது வாழிடம். இந்த வனத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், மரங்கள், தாவரங்கள், வனத்தின் கல் மண் என அனைத்தும் எங்களுக்குச் சொந்தம், அதே போல நாங்களும் இவை அனைத்துடைய சொந்தங்கள். எங்களை இந்த வனத்தில் இருந்து வெளியேற்றி வனத்தின் இயற்கை செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நாகரிகம் அடைந்த நாட்டு மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அதற்கு ஆயிரம் பொய்யான காரணங்களைக் கற்பிக்கின்றீர்கள்;  காடுகளிலும் மலைகளிலும் பல லட்சம் ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொள்ளையடிப்பதை மறைப்பதன் பொருட்டு தொழில் வளர்ச்சி, தாதுப்பொருள் எடுப்பது, அணை கட்டுவது, மின்சாரத் திட்டங்களை நிறுவுவது போன்ற மினுக்கும் பெயர்களை சூட்டுகிறீர்கள், இந்த சதித்திட்டங்களுக்கு நாங்கள் இடையூறாக இருப்பதால் மறுவாழ்வு, முன்னேற்றம் என்ற பெயரில் எங்களை பலவந்தமாக அப்புறப்படுத்துகிறீர்கள்.  இது நேற்று இன்று தொடங்கி வைக்கப்பட்ட சதி அல்ல, கேளுங்கள்என்று வரலாற்றின் பின்னோக்கிச் செல்லும் அவர்களது உரையாடலில், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளின் பிரதிகள் மறுவாசிப்பு செய்யப்படுகின்றன.

 

மந்திரமும் சூழ்ச்சியும் 

அகத்திய முனிவர், தனது சிஷ்யரான விஸ்வாமித்திரனிடம் சொல்கின்றார்: “நமது மந்திரங்களால் ஒரு புல்லைக்கூடப் பிடுங்க முடியாது.” “எனில் மக்கள் நம்புவதும் நமது மந்திரங்களுக்கு அஞ்சுவதும் எவ்வாறு?” என்று விஸ்வாமித்ரன் வினவ, “அவ்வாறு நாம் அவர்களை நம்ப வைத்து இருக்கின்றோம்; மந்திரம் கால் மதி முக்கால்என்று அகத்தியர் உண்மையை உடைக்கிறார்.

தாடகையை அழித்துக் குளிர்ச்சி தரும் வனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் நேரடியாக ஈடுபடாத விஸ்வாமித்திரன், ஷத்திரியர்கள் ஆன தசரதனின் மைந்தர்களான இராமன், இலட்சுமணன் இருவரையும் தூண்டி விடுகிறான். வனத்தின் உள்ளே தாடகை இருக்கும்வரை அவளை வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்த அவன், தாடகையை வனத்தில் இருந்து வெளியே வரவழைத்து சமவெளியில் போர் புரியத்தூண்டினால் அவளைக் கொன்று விட முடியும் என்று திட்டம் தீட்டுகிறான். அதுவும் நிறைவேறாதபோது அவளது அழகிய முகத்தை சிதைத்து விடலாம், அவ்வாறு செய்தால் அவலட்சணம் பொருந்திய அவளது சொல்லுக்கு வனவாழ்மக்கள் கட்டுப்பட மாட்டார்கள் என்றும் அடுத்த திட்டத்தை தீட்டுகிறான்.

ராமனையும் இலட்சுமணையும் பார்த்த தாடகை, “உங்களைப் பார்த்தால் எனது பிள்ளைகள் போல இருக்கிறீர்கள், இந்த முனிவனின் பேச்சைக்கேட்டு என் மீது தாக்குதல் நடத்த முற்பட்டால் நீங்கள் அழிவது உறுதி, எனது ஓர் அறையைக் கூடத் தாங்க மாட்டீர்கள், பிழைத்துப்போய் விடுங்கள்என்று தனது உறைவாளை உறையில் இட்டுத் திரும்புகிறாள். பார்ப்பனீயம் பல நூறு வருடங்களாக லோககுரு என்று தூக்கிப்பிடிக்கும் விஸ்வாமித்ரனை நோக்கி, “பிராமணர்கள் ஆகிய நீங்கள் எந்தக் காலத்தில் நேரடியாக வந்தீர்கள்?” என்று கேள்வியை வீசுகிறாள் தாடகை. உழைக்கும் மக்களுடன் என்றைக்கும் நேருக்கு நேர் மோத முன்வராத, சாதீய அடுக்கின் உச்சியில் கோலோச்சும் பிராமணீயம், சாதீய அடுக்கில் தனக்குக் கீழ் உள்ள அதே உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினரை தன் கைக்குள் வைத்துக்கொள்வதற்கான அனைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும், தந்திரோபாயங்களையும் பல நூறு வருடங்களாகத் திட்டமிட்டுச் செய்து வருவதை இங்கே காட்சிப்படுத்துகிறார் நெறியாளுநர் பிரளயன். வரலாற்று நோக்கில் இந்தக் கேள்வி மிகச்சரியானது என்பதை பார்வையாளர்களின் நீண்ட கரவொலி உறுதிபடச் சொன்னது.

வால்மீகியின், கம்பனின் ராமாயணத்தில் ராமனும் இலட்சுமணனும் குருவின் சொல் மந்திரம் என்று பணிந்து தாடகையைக் கொன்று விடுவார்கள். ஆனால் அந்த இராமாயணங்களில் இலட்சுமணன் பேசாத ஒரு வசனம் இந்தக் காட்சியில் இடம்பெறுகிறது.  தாடகையைக் குறி பார்த்த அம்பைக் கீழே தாழ்த்தி, “இந்த முனிவர் சொல்வதில் எனக்குச் சந்தேகம் வருகிறது, நம்மை ஏதோ ஒரு பெரிய சதியில் சிக்க வைக்க இவர் திட்டமிடுகின்றார்என்று அண்ணன் இராமனிடம் உரையாடுகிறான் இலட்சுமணன்.  இதனை செவிமடுக்காத இராமன், குரு சொல்லுக்குக் கட்டுப்படுகின்றான். வழக்கத்துக்கு மாறான உலோகமுனையுடன் கூடிய கொடிய விசம் தோய்ந்த அம்பை இராம இலட்சுமணர்களின் வில்லில் இருந்து பிரித்து விஸ்வாமித்திரன் தனது கைகளால் ஏந்தி தாடகையின் முதுகில் செலுத்துகிறான்.

வலதுசாரி இந்துத்துவா அடிப்படைவாத சக்திகளின் தத்துவார்த்த தலைமைப்பீடம் பிராமணர்கள், பனீயாக்களால் நிரம்பி இருக்க, அவர்களது செயல் திட்டங்களைக் களத்தில் செயல்படுத்தும் செயல்பாட்டாளர்களாக சாதீய அடுக்கில் கீழே உள்ள பிற சாதி மக்கள் இருப்பதை இக்காட்சி தோலுரிக்கிறது. மட்டுமின்றி இந்தச் சதிக்குப் பலியாகும் உழைக்கும் மக்கள் எழுப்ப வேண்டிய குரலாகவே இலட்சுமணனின் குரல் இருக்கிறது.  

யாருக்கான வளர்ச்சி?

அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட கார்பொரேட்டுக்களின் நலன் பொருட்டு அவர்களின் சேவகன் ஆன ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்த மக்களை அவர்களின் பல நூற்றாண்டு கால வாழிடங்களில் இருந்து வெளியேற்ற தொழில் வளர்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். “வேள்வி என்ற பெயரில் வன விலங்குகளை ஆயிரக்கணக்கில் கொன்று தீயில் இட்டு அழிப்பது நீங்கள் அல்லவா? எமது வயிற்றுப் பசியின் தேவைக்காக அன்றி நாங்கள் ஒருபோதும் ஒரு விலங்கையோ பறவையையோ கொல்வது இல்லை. எமது தேவைக்காக அன்றி ஒரு மரத்தின் கிளையைக் கூட நாங்கள் ஒடிப்பது இல்லை. இந்தக் காடு எனது காடு, வெளியேற வேண்டியது நீங்கள்தான்என்று விஸ்வாமித்ரனுக்கு கட்டளை இடுவது தாடகையின் குரல் அல்ல, அந்தக்குரல் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, கர்னாடகா, நிக்கோபார் தீவு உள்ளிட்ட பல மாநிலங்களின் வனவாசிகளின், பழங்குடி மக்களின் குரலாகும்.

தாழ்கையள் என்ற தாடகை

தெளிந்த சிந்தனையும் அறிவும் படைத்த சுகேது மன்னனுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கப் பெறாததால் பிரம்மனை நோக்கிச் செய்த தவத்தின் பயனால் பிறந்த தாடகை, மயில் போன்ற பேரழகும் ஆயிரம் யானையின் வலிமையும் பெற்றவள். இயக்கர் குல மங்கை அவள். தாடகை என்ற சொல்லுக்கு தடாகம், நீர் நிலையின் கரை ஆகிய பொருள் உண்டு. தென்னை அல்லது பனை போன்ற நீண்ட கரங்களைக் கொண்டவள் தாழ்கையள்அதாவது தாடகை என்று அவளது தோற்றப் பொலிவுக்கு ஏற்பவும் அழைக்கப்பட்டாள் எனலாம். மலையில் சஞ்சரிப்பவள், மந்திர மலையைப் போன்ற கைகளை உடையவள் என்றும் பொருளுண்டு. தாடகை நமது ஆதித்தாயின் வடிவம், குறியீடு. தாடகை என்பவள் ராவணனின் பாட்டி, ராவணனின் அம்மாவைப் பெற்றவள்! திருப்பனந்தாள் கோவில் என்ற தாடகையீச்வரத்தில், தாடகைக்காக சிவலிங்கமே தலைதாழ்த்தி அவளிட்ட மாலையை வாங்கிக்கொண்டதாக கதை உள்ளது.

வால்மீகி சொல்கின்ற தாடகையிடம் மாய சக்திகள் உள்ளன. ராமன் அவளது இரு கைகளையும் அம்பெய்து கொய்கிறான் எனில் இலட்சுமணனோ அவளது காதுகளையும் மூக்கையும் அறுக்கிறான். எனில் இலட்சுமணனால் முக அழகு சிதைக்கப்பட்ட சூர்ப்பனகையையும், இந்திரனால் கொல்லப்பட்ட மந்தரையையும், விஷ்ணுவால் கொல்லப்பட்ட பிருகு முனிவரின் மனைவி கியாதியையும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

வரலாறு என்பது இன்று வரையிலும் வெற்றி பெற்றவன் எழுதுகிற கதைதான்; தோல்வி அடைந்தவன்(ள்) அல்லது நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவன்(ள்) சொல் இன்றுவரை வீதிக்கு வரவில்லை, எனில் அம்பலம் ஏறுவது எப்போது? இந்த வரலாற்றுக் கடமையைத்தான் வனப்பேச்சி என்ற பேரண்டச்சி நாடகத்தை எழுதி நெறியாளுகை செய்துள்ள பிரளயன் நேர்மையாகவும் தீர்மானமாகவும் செய்துள்ளார். இயற்கை, வனம், மனிதன், விலங்கு, தாவரம், சமூகம் ஆகிய சொல்லாடல்களுக்கு இதுவரை கற்பிக்கப்பட்டு வந்துள்ள வரையறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை சொல்கிறார்.

தாடகை என்ற வனப்பேச்சியின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரைப்படக்கலைஞர் ரோஹிணி, கவின்மலர், அமலா மோகன், வெண்மணி உட்பட அனைத்துக் கலைஞர்களும் முதல் முறையாக அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று உணரமுடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள். உரையிடையிட்ட பாடல்களும் மிகுந்த பொருட்செறிவுடன் அமைந்துள்ளன. பாடகர்கள் மகிழினி மணிமாறன், மணிமாறன், கவின்மலர், இசைக்கலைஞர்கள் மணிமாறன், நிஷோக், ஷாஜஹான், பயிற்சியாளர்களும் தொழினுட்பக் கலைஞர்களும் ஆன விதுர் ராஜன், மெலோடி டோர்கஸ், ரேணுகா சித்தி, கிருஷ்ணா தேவானந்தன், சிவா, சாய், அறிவழகன், ஆலம் ஷா ஆகியோரின் கூட்டுழைப்பு நாடகத்தின் மேடை ஆற்றுகையை கூர்மையாக ஒருமுகப்படுத்தியுள்ளது. பிரதியின் மையக்கருத்தையும் காட்சிகளின் ஆழத்தையும் சைமோன் செலாத்தின் ஒளியமைப்பு ஆளுகை மேலும் வலிமையாக்கி உள்ளது, அவரது ஒளியமைப்பு தனியே ஒரு பாத்திரமாக மிளிர்கின்றது என்றால் மிகையில்லை.  தமிழ் நாடக வரலாற்றின் போக்கை பிரளயனின் வனப்பேச்சி புதிய திசைக்கு மாற்றுகிறாள், புராண இதிகாசங்களை அல்லது பாரம்பரியக் கற்பிதங்களையும் இயற்கை குறித்த வரையறைகளையும் காலச்சூழலுக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்ய நம்மை அழைக்கிறாள். 

(பேசும் புதியசக்தி டிசம்பர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை)