அரபு பிராந்தியத்தில் பெட்ரோலிய வளம் மிக்க நாடுகளோ தத்தம் நாடுகளுக்கு பங்கம் வராமல் இருந்தால் போதும், ஈரான், ஈராக், லிபியா, பாலஸ்தீனம் அழிந்தால் நமக்கென்ன என்று சுயநல அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. மிக முக்கியமான காரணம், அங்கெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் இல்லை, பாரம்பரிய மன்னர் ஆட்சி அதாவது சர்வாதிகார ஆட்சிகள் நடக்கின்றன. தலைதூக்கிய ஓரிரண்டு ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள் நசுக்கப்பட்டன. அவ்வாறான குரல்கள் உடனடியாக நசுக்கப்படும்.
வெட்கம்கெட்ட அரபு நாடுகள் இப்போதாவது தம் மவுனத்தை கலைக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக அணி திரள வேண்டும். அமெரிக்க அரசியலும் இஸ்ரேலும் சேர்ந்து ஒட்டுமொத்த அரபு பிராந்தியத்தையும் அபகரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. மூன்றாவது உலகப்போர் உருவாகும் எனில் முழுமுதற்காரணம் இஸ்ரேலின் ரவுடித்தனமும் அமெரிக்காவின் ஆதரவும் மட்டுமே. பிரிந்து கிடந்ததன் பலன்தானே இராக்கும் லிபியாவும் அழிந்தது?
இங்கே இந்திய இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை அல்லது செயற்பாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இஸ் ரேலையும் அமெரிக்காவையும் கடுமையாக விமர்சனம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூகம் வெட்கங்கெட்ட சக அரபு நாடுகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
அடக்குமுறையின் எந்த ஒரு வடிவத்துக்கும், எந்த ஒரு சமூகம் நசுக்கப்பட்டாலும் வெறும் பிரார்த்தனைகள் பலன் தராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது அரசு பயங்கரவாதமாக இருந்தாலும் திட்டமிட்ட இயக்கங்களின் தாக்குதலாக இருந்தாலும் அப்படித்தான். தம் மீதான தாக்குதலை எதிர்ப்பதாக கருதி வீட்டுக்குள்ளும் வழிபாட்டு தலங்களுக்குள்ளும் புலம்பி, ஆவேசப்படுவதும் மணிக்கணக்கில் உரை ஆற்றுவதும் ஒரு பலனையும் தராது. எதிரி மிக மோசமான ஆயுதங்களுடன் வீதியில் இறங்கி அழித்துக்கொண்டு இருக்கும்போது பிரார்த்தனைகளால் என்ன பயன்?
...
அமெரிக்காவின் சுயநல சர்வதேச கார்ப்பரேட் அரசியலும் மத்திய கிழக்கின் பெட்ரோலிய அரசியலும் பாலஸ்தீன காஸா அரசியலின் மையமாக இருப்பதை இந்திய இஸ்லாமிய சமூகம் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 1908இல் ஈரானில் பெட்ரோல் வளம் கண்டறியப்படும் முன் மத்திய கிழக்கின் அரசியல் மதம், இனம் ஆகியவற்றை மையமாக கொண்டு இருந்தது உண்மைதான். 1908க்கு பின் மத்திய கிழக்கின் அரசியல் வெறும் மத இன அரசியல் மட்டுமே அல்ல. பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் , 1908க்கு முன்பான தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பெறாத கூட்டு சமூக வாழ்க்கை என்ற அரபு சமூகத்தின் முகம் 1908க்கு பின் முற்றாக மாறியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தன் மண்ணில் எடுக்கப்பட்ட பெட்ரோலுக்கு விலை நிர்ணயம் செய்த ஈரான் மன்னரை அமெரிக்கா படுகொலை செய்த நாளில் இருந்துதான் நவீன கால அரபு பிராந்திய அரசியலை பார்க்க வேண்டும். அதன் பிற்கால தொடர்ச்சிதான் மும்மர் கடாபியும் சதாம் உசேனும்.
ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் கண்டுபிடிப்பான மதம், பின்னர் அந்த அமைப்பை தக்க வைப்பதற்கு ஆன ஒரு கருவியாக இருந்தது மட்டுமின்றி அத்தகைய சமூக அமைப்போடு சேர்ந்து இணையாக வளர்ந்து தன்னை தக்க வைத்துக்கொண்டும் இருந்தது. இது அரபு நாடுகளுக்கும் பொருந்தும். 1908க்கு பின் ஆன அரபு சமூகத்தை பண்டைய நிலப்பிரபுத்துவம் சார்ந்த ஒட்டகம் மேய்க்கும் விவசாய சமூகம் என்று எளிதாக யாரும் கடந்து போக முடியாது என்பதற்கான ஒரே காரணம் பெட்ரோலிய வளம் கண்டறியப்பட்ட பின் எழுந்த பொருளாதார பேரெழுச்சியும் அதனை தொடர்ந்த சர்வதேச அரசியலும் சர்வதேச அரசியலில் பெட்ரோலியம் வகுத்த அதாவது அரபு நாடுகள் வகுத்த பங்கு பாத்திரமும் ஆகும். OPECக்கின் தோற்றம் சர்வதேச அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க முடியாது.
இந்த அரசியலை புரிந்துகொள்ள மறுக்கும் அல்லது தவறும் அல்லது புரிந்தும் எடுத்து சொல்ல முன்வராத எந்த ஒரு இயக்கமும் தன் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றுவது அன்றி வேறில்லை. இந்த மையமான அரசியலை இந்திய இஸ்லாமிய சமூகத்துக்கு எடுத்துச்சொல்லாத எந்த ஒரு மத அடையாளம் சார்ந்த அமைப்பும் வெறும் அடையாள அரசியல் நடத்தும் அமைப்பாகவே இருக்க முடியும். அவர்கள் தம் பின்னால் திரளும் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய பிரதமரும் இந்திய அரசும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய நாடுகளும் பகிரங்கமாக இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்தபின் இந்திய இஸ்லாமிய சமூகம் வெளிப்படையாக வீதிக்கு வந்தே ஆக வேண்டும். பாலஸ்தீன, காஸா மக்களுக்கு ஆதரவாக வீதிகளில் இயக்கம் நடத்தும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இந்திய இஸ்லாமிய சமூகம் கைகோர்க்க வேண்டும். காலத்தின் கட்டாயம் இது.
19.10.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக