திங்கள், ஜூலை 24, 2023

வடகிழக்கு கலவரங்களின் மையமான ஒன்றிய பி ஜெ பி அரசு+கார்ப்போரேட் கூட்டணி


1

கடந்த மார்ச் மாதம் மணிப்பூரின் மலைப்பிரதேச மக்களை அவர்களின் பாரம்பரிய காடுகளில் இருந்து மாநில பிஜேபி அரசு வெளியேற்றியது.  அரசு கூறிய ஒரே காரணம்: இக்காடுகள் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள். 

அதே மார்ச் மாதம் பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவை செய்தது. அதன் பெயர் Forest Conservation (Amendment) Bill, 2023.

பல்லுயிர்பெருக்கம் மிக அதிகமான அளவில் கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு மாநிலங்களில், அதே வனங்களில் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக வனங்களோடும் இயற்கையோடும் தம் வாழ்வை பிணைத்துக்கொண்டு வாழும் பழங்குடியினர் பகுதிகளில் இப்படி ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய வேண்டியதன் பின்னணி என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற Forest Conservation Act, 1980இல் திருத்தத்தை கொண்டுவருவதே இந்த முன்வரைவு. அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. விந்தை என்னவெனில் அந்த குழுவில் இருந்த அனைத்து எம்.பி.களும் பிஜேபி கட்சியினர். நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பாமல் இகுழுவுக்கு அனுப்பியதில் உள்நோக்கம் இருந்தது. இக்குழு பொதுமக்கள் கருத்தை அறிவதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து விளம்பரம் செய்தது. அதாவது 2023 மே 18 இறுதி நாள் என்று அறிவித்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இக்குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கும். இப்போது நடந்து கொண்டு இருப்பது அந்த மழைக்கால கூட்டத்தொடர்தான்.

FCA 1980 சட்டம் சுற்றுச்சூழலுக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக இருப்பதால் இச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவது அவசியம் என்று  ஒன்றிய பிஜேபி அரசு கூறிக்கொண்டாலும் உண்மை என்ன? வடகிழக்கு மாநில மக்களின் நிலங்கள் முழுவதையும் அந்த மக்களிடம் இருந்து பறிமுதல் செய்து கார்பொரேட் முதலைகளிடம் ஒப்படைப்பது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே இதில் ஒளிந்துள்ளது. அதனை மறைக்க பிஜேபி அரசு வளர்ச்சி, மக்கள் நலன் என்று பகட்டான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் நிலம், இயற்கை வளம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்ற்றின் மீதான அம்மக்களின் உரிமைகளுக்கு நம் அரசியமைப்புசட்டம் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

ஒன்றிய அரசு முன்வைத்துள்ள இந்த முன்வரைவோ வடகிழக்கு மக்களின் உரிமைகளை முற்றாக நிராகரிக்கிறது, மாறாக பல லட்சம் ஹெக்டேர் காடுகளை அவர்களிடம் இருந்து பறித்து கார்பொரேட் வசம் கொடுக்கவும், காடுகள் சாராத பிற வணிகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் எளிதில் வழி செய்கின்றது.

உதாரணமாக, இப்போது நடைமுறையில் உள்ள வனப்பாதுகாப்பு சட்டத்தின் மிக கடுமையான ஷரத்துகளில் இருந்து இந்த திருத்தம் முழுமையாக விலக்கு அளிக்கிறது. உதாரணமாக, சர்வதேச எல்லைகளில் இருந்து, கட்டுப்பாட்டு கோட்டில் LOC அல்லது LAC யில் இருந்து 100 கிமீ தூரத்துக்குள் இருக்கின்ற எந்த ஒரு நிலத்தையும் அரசு கைப்பற்றி கொள்ளலாம். 

வடகிழக்கு மாநிலங்கள் சீனா, திபெத், மியான்மர், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் எல்லையை கொண்டவை. நாகாலாந்து மாநிலத்தின்  90% நிலங்களையும் இந்த சட்டத்திருத்தம் பாதிக்கும். கூடவே அருணாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் காடுகளையும், மேகாலயா, மிஜோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் 100% நிலங்களையும் பாதிக்கும். 

Godavarman வழக்கில் உச்சநீதிமன்றம்1996இல் வழங்கிய தீர்ப்பின்படி வனங்களை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆன விதிகள் அனைத்து காடுகளுக்கும் சமமாக பொருந்தும். அந்த நிலத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும், அது என்ன வகையான காடாக இருந்தாலும்.

இமயமலை தொடரில் உள்ள 15,000 கி.மீ சர்வதேச எல்லை, வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்நிக்கோபார் தீவுகள், மேற்குத்தொடர்ச்சி மலைகள் ஆகிய நிலப்பரப்பில் உள்ள காடுகள் அனைத்தையும் பாதுக்காக்க தக்க வகையில் இதுகாறும் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இப்போது கொண்டுவரப்பட்ட சட்ட முவரைவு கைவிட சொல்கிறது.


2

1980 சட்டமானது, நாகாலாந்து, மிஜோரம் சட்டமன்றங்களுக்கு நிலம், இயற்கை வளம், அரசியல்-கலாச்சார உரிமைகள் மீதான தமது சொந்த சட்டங்களை இயற்றிக்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. 2023 திருத்தமோ அரசியலமைப்பு சட்டம் பிரிவு371ஐ நீர்த்துபோக செய்யுமா அல்லது முற்றாகவே துடைத்து போட்டு விடுமா என்பதுதான் நாகா மக்களின் இன்றைய கேள்வி.

பல்லாயிரம் வருடங்கள் ஆக வனங்களில் குடியிருந்த, கூடியிருக்கும் பழங்குடியினர்தான் வனங்களை உண்மையில் பாதுகாக்கின்றார்களே தவிர அரசோ அரசின் சட்டங்களோ அதிகாரிகளோ அல்லர். அரசு என்ற ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே பழங்குடியினர்தான் வனங்களை பாதுகாத்து வந்துள்ளனர் என்பதே எளிய உண்மை. 

ஒன்றிய பிஜேபி அரசு 2021இல் National Mission on Edible Oils-Oil Palm NMEOOP என்ற திட்டத்தின் கீழ் 11040 கோடி ரூபாய் ஒதுக்கியது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் குறிவைக்கப்பட்டன. இந்த பகுதிகள்தான் இந்தியாவின் முக்கியமான பல்லுயிர்பெருக்க பகுதிகள், உலகின் தலையாய மூன்று பல்லுயிர்பெருக்க பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பவை. மிக அரிய விலங்கினங்கள், பறவைகள், அரிய மருத்துவ குணங்களை கொண்ட தாவரங்கள், காடுகளில் மட்டுமே விளையக்கூடிய உணவுப்பயிர்களை உள்ளடக்கிய பாதுக்காக்க பட்ட வனங்களை கொண்ட பிரதேசங்கள்.

2021 திட்டப்படி இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.    இக்காடுகளில் பாமாயில் மரங்களை பயிரிட்டால் இக்காடுகளின், இந்த மாநிலங்களின் சுற்றுச்சூழலும் காடு சார்ந்த வாழ்வை ஒட்டிய அம்மக்களின் கலாச்சார பாரம்பரியமும் அழியும் என்று நன்கு தெரிந்தே அசாமிலும் அருணாச்சல பிரதேசிலும் 2021க்கு முன்பே அதாவது 2004 தொடங்கியே பாமாயில் மரங்கள் பயிரிடப்பட்டன. கோத்ரெஜ், சங்கி சாமியார் ராம்தேவின் பதஞ்சலி, 3F Oil palm Agrotech ஆகிய கம்பெனிகள் மாநில அரசின் உதவியுடன்

விவசாயிகளை அணுகி கொள்ளை லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி பாமாயில் பயிரிட தூண்டின. ஏற்கனவே இருந்த இயற்கையான காடுகள் அழிக்கப் பட்டன, அந்த இடங்களில் பாமாயில் பயிரிடப்பட்டது. இதுவரை கண்டிடாத அளவுக்கு தாராள மானியம், இலவச மரக்கன்றுகள்,  விளைபொருட்களை சந்தையில் விற்க உதவி, உள்நாட்டில் இதனால் வளர்ச்சி என்று பல்வேறு ஜிகினா விளம்பரங்கள் செய்யப்பட்டன.

இதன் பின்விளைவுகள் மிக பயங்கரமானவை என்று மக்கள் பின்னர் உணர்ந்தார்கள். ஆனால் அந்த அழிவை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியவில்லை.


3

ஒரே நிலத்தில் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிரிடுவதுதான் மண்ணின் வளத்தை பெருக்கும். பணப்பயிர் ஆன பாமாயில் மரத்தை மட்டுமே பயிரிடுவதால் அதாவது  ஒற்றைப்பயிர் விவசாயம் செய்வதால் monoculture எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கேடுகள், உணவு உத்தரவாதத்துக்கு நேர்ந்துள்ள அபாயம் ஆகியவற்றை அரசும் கார்பொரேட் நிறுவனங்களும் பழங்குடியின மக்களிடம் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. 

மிஜோரம் மாநிலத்தில் 2004 தொடங்கி ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் மட்டுமே பயிரிட்டதால் ஏற்பட்ட சேதாரம் ஆனது வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும். அவற்றை பட்டியல் இடலாம்:

* Food and Agricultural Organization வெளியிட்ட வரைபடங்களின்படி வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல.

* மிஜோரம் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்களின் நிலம் பாமாயில் விவசாயத்துக்கு ஏற்றவை அல்ல. ஒரு பாமாயில் மரம் ஒரு நாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அதாவது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ஒரு நாளைக்கு 40000-50000 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதாவது இரண்டு ஹெக்டேர் பாமாயில் மரங்களுக்கு தேவையான தண்ணீர் ஆனது ஒரு மிஜோர குடிமகன் ஒரு வருடம் முழுவதும் உட்கொள்ளும் குடிநீருக்கு சமம்.

 வடகிழக்கு மாநிலங்களில் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும்.  ஆக இருக்கும் நிலத்தடி நீரையும் பெய்யும் மழை நீரையும் ஒட்டுமொத்தமாக பாமாயில் மரங்கள் உறிஞ்சி எடுத்துவிட, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

* பாமாயில் மரங்களுக்கு உரமும் பூச்சி மருந்தும் அதிகம் தேவை என்பதால் வடகிழக்கு மாநிலங்களின் காடுகள் தம் இயற்கையான மண்ணின் வளத்தை இழந்தன.

* அறுவடை செய்யப்பட்ட பாமாயில் பழங்களை 24 மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்தி எண்ணெய் எடுக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பிழிவு ஆலைகளுக்கு பழங்களை கொண்டு செல்லத்தக்க சாலை வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கொள்முதல் மையங்கள் எதுவும் இல்லாததால் பழங்கள் அழிந்து நட்டத்தில் முடிந்தது.

* அவ்வாறு அழிந்து போன பழங்களால் நிலம் மேலும் நாசமானது.

* பாமாயில் மரத்தின் அடிப்பாகம் மிக மிக பெரிதாக வளரும் என்றும் வருடத்திற்கு நான்கு முறை இந்த மரங்களை சீராக்க வேண்டும் என்றும் அதற்கென கூலியாட்களை நியமித்து கூலி கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நஷ்டம் அடைந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

* பாரம்பரிய காடுகளில் பன்னெடுங்காலமாக விளைந்த அல்லது விளைவிக்கப்பட்ட உணவுதான்ய, தாவர வகைகளை உண்பதை தமது உணவுப்பண்பாடாக கொண்டிருந்த பழங்குடியினர், ஒற்றைப்பயிர் ஆன பாமாயில் விவசாயத்தால் தமக்கான உணவு உத்தரவாதத்தை இழந்தனர். அதாவது தம் உணவுப்பண்பாட்டை கைவிடும் அவலம் நேர்ந்தது.

* இக்காடுகளில் இயற்கையாக விளைந்த உணவுப்பயிர்கள், மருத்துவ தாவரங்கள், தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆகியவை அளிக்கப்பட்டு, தேயிலை, காபி, ஏலக்காய் ஆகியன பயிரிடப்பட்டதால் மக்களுக்கான உணவு உத்தரவாதம் இல்லாத அவலநிலை ஏற்பட்டது. இது நீண்டகால பாதிப்பு ஆகும்.

* ஒரு ரூபாய் வருமானமோ லாபமோ கிடைக்காத ஒரு விவசாயி நாளடைவில் தன் நிலத்தை பாமாயில் பயிர் செய்ய தூண்டிய கார்பொரேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டு வெளியேறுவார். அவ்வாறு வெளியேறியுள்ளார்கள். அதன் பின் தம் பாரம்பரிய நிலங்களில் கார்பொரேட் கம்பெனிகளின் கூலிகளாக உழைத்தார்கள். ஆக கார்ப்பரேட் முதலைகளுக்கு வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கிட்டத்தட்ட இலவசமாக கொடுத்துவிடும் பிஜேபி அரசின் திட்டம் இப்படி நிறைவேறுகிறது.

* ஒன்றிய, மாநில அரசுகளின் அடாவடி சட்டங்கள், சட்ட திருத்தங்களால் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட நிலங்களின் மீது கிராம பஞ்சாயத்துக்களோ பிற கிராம சமூக கவுன்சில்களோ எந்த உரிமையும் கொண்டாட முடியாத கையறு நிலை ஏற்பட்டது.


* காடுகளின் அல்லது வடகிழக்கு மாநிலங்களின் பல்லுயிர்பெருக்கம் நாசமானது. 


* உண்மையில் காடுசாரா வணிக நடவடிக்கைகளின் பொருட்டே வடகிழக்கு மாநிலங்களின் காடுகளை கார்பொரேட் நிறுவனங்கள் கைப்பற்றின. காட்டு சுற்றுலா, வனவிலங்கு காட்சிசாலைகள், சபாரி ஆகிய தொழில்களை இக்காடுகளில் தொடங்கி நடத்த கார்பொரேட் முதலைகளுக்கு குத்தகை விடலாம் என்றுதான் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள 2023 சட்ட முன்வடிவு கூறுகிறது. 

* ஒருமுறை பாமாயில் பயிர் செய்தால் அந்த மண்ணில் வேறு விவசாயம் செய்ய முடியாது.

* உலகின் இரண்டாவது பெரிய பல்லுயிர்பெருக்க பிரதேசம் ஆன வடகிழக்கு மாநிலங்கள் இந்த கார்பொரேட், அரசுகள் கூட்டணியால் தம் இயற்கை சூழலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக அழிந்து போனதாக கருதப்பட்ட Bugun Liocichla என்ற பறவை வடகிழக்கில் மட்டுமே கண்டறியப்பட்டது.


4

மிஜோரம் மாநில அரசு New Land Use Policy NLUP என்ற திட்டத்தை நடைமுறை படுத்தியே தன் மாநிலத்தில் பாமாயில் விவசாயத்தை ஊக்குவித்தது. பாமாயில் விவசாயம் அதாவது ஒற்றைப்பயிர் விவசாயம் மிஜோரத்தில் மிக மோசமாக தோல்வி அடைந்ததை கண்ட மணிப்பூர் விவசாயிகள் அதாவது மலைவாழ் குக்கி மக்கள் தம் மாநில அரசு மிஜோரம் அரசின் NLUP ஐ நகல் எடுப்பதை 2014இலேயே எதிர்த்தார்கள். பாரம்பரிய, இயற்கை சார்ந்த  ஜூம் jhum சுழற்சி விவசாய முறையே சிறந்தது என்ற தம் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் பாமாயில் விவசாயத்தின் அனுபவம் என்ன?

வளர்ந்து வரும் நாடுகள் ஆன தென் கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் விவசாயம் என்பது மிகப்பெரிய எதிர்மறையான அனுபவத்தை அவர்களுக்கு கொடுத்தது என்பது வரலாறு. 

இந்த நாடுகள் தமது கசப்பான பாமாயில் விவசாய அனுபவங்களை பிறகு Round Table On Sustainable Palmoil என்ற அமைப்பை ஏற்படுத்தி பாமாயில் விவசாயத்தை மிக கவனமாக முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நலம் பேணும் அரசுகளால் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். தவறு செய்வதையே கொள்கையாக கொண்ட அரசால் நாடு நாசமாவது மட்டுமே நடக்கும்.


5

ஒன்றிய பிஜேபி அரசின் பிரதமரும் அமைச்சர்களும் கடந்த பத்து வருடங்களில் மிகப்பல முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தது ஏன் என்ற கேள்வியையும் இப்போது நடக்கும் மணிப்பூர் கலவரங்களின் பின்னணியையும் மேலே சொல்லப்பட்ட ஒன்றிய அரசு, கார்பொரேட் கூட்டணி மேற்கொண்டுள்ள மக்கள் விரோத கொள்கைகளோடு இணைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது. 

ஒருபுறம் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கும் இந்து மத மக்களுக்கும் இடையே கலவரங்களை தூண்டி விடுவது; மறுபுறம் அதானி, அம்பானி, நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பெரும் கார்பொரேட் முதலைகள் தம் சொத்தை பல நூறு மடங்கு பெருக்கி கொள்ள ஏதுவாக வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதும் பல லட்சம் கோடி மதிப்புக்கு கார்பொரேட் வரியை தள்ளுபடி செய்வதும் வங்கிகள் திவால் ஆவதை அனுமதிப்பதும் மிகத்தீவிரமாக தெளிவாக பிஜேபி அரசால் நடத்தப்படுகிறது. 

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டுமே 4500 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள கட்சிதான் பிஜேபி. கொரோனாவின் பேரால் மக்களிடம் திரட்டப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கும் அதே கட்சியின் பிரதமர்.

தன் தேசத்தின் ஒரு மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஓராயிரம் ஆண்களால் நிர்வாணமாக வீதிகளில் நடத்தப்பட்டது தெரிந்தும் கூட அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது போல, அது பற்றி கடுகளவும் கவலை இன்றி அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர் மனைவிகளுக்கு வைரமோதிரம், சேலை ஆகிய பரிசுபொருட்களை தேர்வு செய்யும் வேலையில் கவனமாக இருந்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெருத்த வாய்வீச்சு வீரராக திறந்து வைத்த இந்த தேசத்தின் பிரதமர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வந்து மணிப்பூர் பற்றி பேச அச்சப்படுகிறார்.

இந்த பின்னணியில் பார்க்கும்போது மணிப்பூர் கலகங்களை இரண்டு மக்கள் பிரிவினருக்கு இடையே ஆன கலவரம் ஆக பிஜேபியும் ஆர் எஸ் எஸ் சார்பு ஊடகங்களும் சித்தரிக்க முயல்கின்றன, ஒன்றிய பிஜேபி அரசு+கார்பொரேட் கூட்டணி கொள்ளையை  திட்டமிட்டு மறைக்கின்றன என்பது தெளிவு.

இதை புரிந்துகொண்டு மெய்தெய் இன மக்களும் குக்கி இன மக்களும் கைகோர்த்து, வடகிழக்கின் இந்து, முஸ்லிம், கிறித்துவ, புத்த சமய மக்களும் கைகோர்த்து பிஜேபி ஒன்றிய அரசு + கார்பொரேட் கூட்டணியை எதிர்க்க வேண்டும். வடகிழக்கில் அமைதியும் சமாதானமும் திரும்ப வேண்டும் எனில் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் மதசார்பற்ற சக்திகளும் அமைதியை விரும்பும் இயக்கங்களும் வடகிழக்கு மக்களிடையே இந்த பின்னணியை வலுவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். 

இந்திய நாடு ஒருசில கார்பொரேட் கம்பெனிகளின் சொத்து அல்ல என்பதிலும் மக்களிடையே பிளவை உருவாக்கி தந்திரமாக நாட்டை ஒருசில கார்பொரேட்டுகளுக்கு விற்பனை செய்யும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலை அம்பலப்படுத்துவதே நம் முன் உள்ள உடனடியான பெரும் கடமை என்பதிலும் உறுதியாக இருப்போம்.

... ...

கருத்துகள் இல்லை: