வியாழன், நவம்பர் 21, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-5

19) 1989இல் போடி, தேவாரம் கலவரத்தில் தேவேந்திர சாதி மக்களுக்கு எதிராக நடந்த சாதிக்கலவரத்தில் இந்து முன்னணி இருந்தது.

20) வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினரும் அரசு நிர்வாகமும் சேர்ந்துகொண்டு ஆடிய வெறியாட்டம் அநாகரீகத்தின் எல்லைக்கும் அப்பாற்பட்டது என்பது வரலாறு. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கு மார்க்சிஸ்ட் கட்சியாலும் அதன் சக அமைப்பான தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தாலும்தான் நடத்தப்பட்டது. தீர்ப்பு வெளியான அன்று அம்மக்கள் வெடித்து அழுதார்கள், தொலைக்காட்சிகளில் பார்த்தோம். அதே போல் ஆதிக்கசாதியினரால் கட்டப்பட்ட  உத்தப்புரம் சாதிச்சுவரை உடைக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் புதுடெல்லியில் இருந்து வரவேண்டியிருந்தது. தலித்துக்களின்  சம்பந்தியும் தமிழன் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு தண்டவாளத்தில் தலைவைத்தவரும் பாம்புகள் பல்லிகள் நடுவினிலே சிறைவாசம் செய்தவரும்தான் அப்போது ஆட்சியில் இருந்தார். அங்கே தலித்துக்களுக்கு எதிராக திமுக, அ இ அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரண்டு வரிந்துகட்டி நின்றதையும் தலித்துக்களுக்கு எதிராக மலையில் குடியேறி போராடியதையும் அவர்கள் குடியிருந்த இடத்தை காலி செய்த பின் அங்கே சாராய பாட்டில்களும் பிரியாணியின் மிச்சங்களும் வண்டிவண்டியாக குவிந்து கிடந்த அசிங்கத்தையும் தமிழகம் பார்த்தது.

21) தொடர்ந்து பரமக்குடியில் தலித்துக்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் மோதலில் அரசு நிர்வாகமும் போலீசும் தேவர்கள் பக்கம் நிற்பதை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. தேவர் குருபூஜைக்கு போலீஸ் காவல் காப்பதும், இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்றால் முன்னதாகவே தலித் மக்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் துப்பாக்கி சூடு நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. ஒரு தலித் தலைவனுக்கு ‘குருபூஜை என்ற சொல்லைக் கூட ஆதிக்கசாதியினரால் தாங்க முடியவில்லை!

22) தென் தமிழகம் இப்படியெனில் வட, வடமேற்கு தமிழகம் எங்கும் தலித்துக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் அணியை திரட்டி வருபவர் நவீன மர்டர் மருத்துவர் ராமதாசு. அதாவது இப்பகுதிகளில் தமிழர்களை சாதீய அடிப்படையில் பிரித்து கலகம் செய்கின்றவர்களின் தலைவர் அவர். அதன் உச்சகட்டத்தை தர்மபுரியில் பார்த்தோம்; திவ்யா என்ற தமிழ்ப்பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார், இளவரசன் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டான். ‘2016ஆம் ஆண்டில் வன்னியர் ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’  என்ற நவீன மர்டர் மருத்துவர் கூரை ஏறி கொக்கறிக்கின்றார். அதாவது இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடாம், தமிழ்நாட்டில் ‘வன்னியர்கள் ஆள்வார்களாம்! கடல்கடந்த தனி ஈழத்தில் வன்னியர்களும் தலித்துக்களும் ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரு பாயில் படுத்து உறங்குவார்களாம்; தமிழ்நாட்டில் கோட்டையில் வன்னியன் கொடிகட்டி கோலோச்ச, தலித்துக்களுக்கு ரயில்தண்டவாளம்தான் அடைக்கலமாம்!  ஆஹா! இதுவல்லவோ ஆண்டபரம்பரையின் அற்புத தத்துவம்!


23) இப்போது விசயத்திற்கு வருவோம். நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவி உள்ளிட்ட இவர்களின் எந்த ஒரு அறிக்கையிலும் தொப்புள்கொடி தொப்புள்கொடி என்ற சொல்லை மலைபோல அடுக்கிக்கொண்டே போகின்றார்கள். அது என்ன தொப்புள்கொடி? 

தொடரும்...

செவ்வாய், நவம்பர் 19, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-4

14) இதனைத் தொடர்ந்து அதே மாவட்டத்தில் நடந்த புளியங்குடி கலவரத்திலும் தேவர்கள் போலீசோடு சேர்ந்து கொண்டு தேவேந்திர சாதி மக்களை தாக்கினர், அவர்களது வயல்களையும் வாழைத்தோப்புக்களையும் அழித்தனர். தேவேந்திரர்களை அரசு சிறையில் அடைத்தது. தீர்வு தேடிய தேவேந்திரர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து சகோதர சமத்துவ சங்கத்தை தொடங்கினர்.

15) 1982 ஜூன் 8 அன்று காயிதே மில்லத் பிறந்தநாள் விழாக்கொண்டாட்டத்தின்போது கலவரம் வெடித்தது. 15 தலித்துக்களும் 1 இஸ்லாமியரும் படுகாயம் அடைந்தனர். மறுநாள் 9ஆம் தேதி பேருந்துகளை நிறுத்தி தலித்துக்களையும் இஸ்லாமியர்களையும் தேவர்கள் தாக்கினர். 10ஆம் தேதி தேவர்கள் 1500 பேர் திரண்டு அய்யாபுரம், வெள்ளியக்கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களைத் தாக்கி வீடுகளுக்கு தீயிட்டனர், கொள்ளையடித்தனர், காவல்துறை வேடிக்கை பார்த்தது. (30 வருடங்களுக்குப் பிறகு தர்மபுரியிலும் இதுதான் நடந்தது, தேவர்கள் இடத்தில் வன்னியர்கள், அவ்வளவே). 15 வயதுப் பையன், ஆறு வயதுக்குழந்தை, ஒரு கைக்குழந்தை உட்பட 10 தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இத்தோடு நிற்காமல் அடுத்த நாளும் புளியங்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் தேவேந்திரர், இஸ்லாமியர் வீடுகள் தீயிடப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன. பல கிராமங்களில் தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கலவரம் தொடங்கிய நாள் முதல் திட்டமிட்ட வகையில் காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது, அதாவது கலவரக்காரர்களுக்கு உதவி செய்தது.

16) மேற்கூறிய அனைத்துக் கலவரங்களிலும் தலித்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஆதிக்க சாதியினரும் இடைச்சாதியினரும் இவர்களின் பிரதிநிதியான அரசு எந்திரமும் கூடவே மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர காங்கிரஸ், ஆர் எஸ் எஸ், அ இ அதிமுக, திமுக என அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர்.

17) இதனைத்தொடர்ந்து 1982இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவான  மண்டைக்காடு கலவரம். அங்குள்ள மீனவ கிராமம் புதூர். அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன. அங்குள்ள கிறித்துவ மக்களும் இந்துக்களும் சகோதரர்களாகவே வாழ்ந்து வந்தனர். கிறித்துவ மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினராகவே உபசரித்து வந்தனர். அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு  அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாகவே மக்கள் மனத்தில் பதிந்திருந்தார்கள். மதவெறியை அறியாத மக்களிடம் மண்டைக்காடு கலவரத்தின் மூலம் இந்துமுன்னணியும், ஆர் எஸ் எஸ்சும்  பிரிவினையை உருவாக்கின.

18) சென்னையில் இருந்த இல.கணேசன், இராமகோபாலன் போன்ற இந்துத்துவவாதிகள் மண்டைக்காடு கலவரத்திற்கு எட்டு மாதத்திற்கும் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் சுற்றித்திரிந்து ஆர் எஸ் எஸ் அமைப்பை உருவாக்கினர். ஆர் எஸ் எஸ் சாகாக்களில் மதவெறியும், பிற மதத்தவர் மீது பகையுணர்வும் பரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த திட்டமிட்ட சதியும் கூட்டுமுயற்சியும் விளைவுமே மண்டைக்காடு கலவரம்.    மண்டைக்காடு கலவரம் நடந்தபோது எம்ஜிஆர்தான் ஆட்சியில் இருந்தார். ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவா இயக்கங்களுக்கு அவர் மறைமுக ஆதரவு தந்தார். உள்ளூர் ஆட்களோடு  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியே இருந்தவர்களும் இக்கலவரத்தை திட்டமிட்டு செய்தார்கள். 

தொடரும்....

திங்கள், நவம்பர் 18, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-3

8) அதே மாவட்டத்தில் இளஞ்செம்பூர் கிராமத்தில் தேவர்-தேவேந்திரர் பகை 1949ஆம் ஆண்டு கலவரமாக வெடித்ததில் ஒரு தேவரும் நான்கு தேவேந்திரர்களும் கொல்லப்பட்டனர்.

9) அன்றைய திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செய்யூர் கிராமத்தில் 1950களில் தொடக்கத்தில் தம் ஆதிக்கத்திற்கு கீழ்ப்படிய மறுத்த இரண்டு தேவேந்திரர்களை தேவர்கள் 1953 ஏப்ரல் 26 அன்று படுகொலை செய்தார்கள்.

10) 1969, 1978ஆம் ஆண்டுகளில் இந்து மதத்துக்கே உரிய கொடுமையான தீண்டாமையில் இருந்து விடுதலை பெற இஸ்லாமியத்துக்கு மாறிய தேவேந்திரர்கள் கொலை செய்யப்பட்டனர்.

11) திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊரில் தேவேந்திர சாதியினரான சுமார் 180 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்) 1981 பிப்ரவரி, மே மாதங்களில் தேவர் சாதியினரின் கொடுமைகளை தாங்காது இந்துமதத்தில் இருந்து வெளியேறும் முகமாக இஸ்லாத்தை தழுவினர். இச்சம்பவம் சாதீயத்தையும் தீண்டாமையையும் கட்டிக்காக்கும் ஆதிக்கசாதியினரையும் இந்துதுவாவாதிகளையும் அச்சப்படுத்தியது. தொடர்ந்த வன்முறையில் 10 தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து தீவிரவாதிகள் மீனாட்சிபுரத்திற்குள் நுழைந்தனர். ‘மறுமதமாற்றம் என்ற முழக்கத்தோடு வி.இ.பரிஷத் அக்கிராமத்தில் இருந்த பார்ப்பன ஜமீன்தார் உதவியுடன் நுழைந்தது.

12) சாதி என்ற செங்கற்களால் கட்டப்பட்ட இந்துமதத்தின் அதிபிற்போக்குவாதம்தான் தீண்டாமை என்பதை சாமானிய இந்து மட்டும் அல்ல, எந்தக்காலத்திலும் நான் ரொம்ப முற்போக்கு இந்துவாக்கும் என்று சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு இந்துமதத்தலைவரும் கூட ஒத்துக்கொண்டதில்லை; தவிர தமது மதத்தின் பிடியில் இருந்து ஒரே ஒரு இந்து வெளியேறினாலும் பதட்டம் அடைகின்றார்கள்; சாதிக்கட்டுமானத்தில் இருந்து ஒரேஒரு செங்கல் உருவப்பட்டாலும் ஏற்படும் பதட்டமே இது. அரபு நாடுகளில் சம்பாதித்த பணத்தைக்காட்டி மதம் மாற்றியதாக (அக்காலகட்டத்தில் தமிழகத்தில் அத்தனை பிரபலம் ஆகாத) வாஜ்பேயி, சுப்பிரமண்யஸ்வாமி, அப்பகுதியின் ஆர் எஸ் எஸ் தலைவர் ரெங்கசாமித்தேவர் உள்ளிட்டோர் அசிங்கமான பிரச்சாரம் செய்தனர். ஆனால் மறுபுறம் வாஜ்பாய் போன்றோர் அந்த மக்கள் மீண்டும் இந்து மத்தை தழுவினால் ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினார்கள். இந்திய அரசு நியமித்த விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் அம்மக்கள்.  எனவே அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிட்டு இஸ்லாமிய மக்கள் மீதும் தலித் மக்கள் மீதும் ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்புக்கள் தேவர் சாதியினரை தூண்டிவிட்டு கலகங்கள் செய்தார்கள். ஒரு எளிய கேள்வியை ஆர் எஸ் எஸ் பரிவார் முன்பும் நவீன மர்டர் மருத்துவர் முன்பும் வைக்கின்றோம்:  இஸ்லாத்தில் இருந்தும் கிறித்துவத்தில் இருந்தும் இந்து மதத்திற்கு மாறினால் இருக்கின்ற ஆயிரம் சாதியில் எந்த சாதியில் கொண்டுபோய் வைப்பீர்கள்?

13) மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று இயற்கையாகவே பயந்த ஆர் எஸ் எஸ் தனது சூழ்ச்சிகர நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது. மக்களை மத அடிப்படையில் வெறியூட்டி, மத அடிப்படையில் ஒருங்கிணைப்பது என்ற யுக்தியை கையில் எடுத்தது ஆர் எஸ் எஸ்.   இராம.கோபாலனைக் கொண்டு இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தொடரும்....

ஞாயிறு, நவம்பர் 17, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-2

4) ஆதிஆந்திரர் தொடங்கி வேட்டுவன் வரையிலான 80க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்களும், ஆதியன் தொடங்கி உரளி வரையிலான 40க்கும் மேற்பட்ட பழங்குடியினரும், அகமுடையாரில் தொடங்கும் சுமார் 150 சாதிக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஆண்டிப்பண்டாரத்தில் தொடங்கி யோகீஸ்வர்ர் வரையிலான சுமார் 40 சாதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும், சுமார் 60 சாதி சீர்மரபினரும், 70க்கும் மேற்பட்ட முற்பட்ட சாதியினரும் (இந்தப் பட்டியலில் ஆண்ட பரம்பரையினரான வன்னியர், கவுண்டர், கொங்குவேளாளர், நாயக்கர், நாயுடு, கள்ளர், மறவர், சேர்வை, அகமுடையார் ஆகியோரும், காலம் காலமாக  அடக்கப்பட்ட பரம்பரையினரான  பள்ளர், பறையர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் உள்ளிட்ட பாவப்பட்ட ஜென்மங்களும், கூடவே தேர்தல் ஆதாயங்களுக்காகவும் உள்ளூர் ஆதாயங்களுக்காகவும் தீவிரவாதிகளாக்கப்படும் முஸ்லிம் மக்களும், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவரும் அடங்குவர்)    தமிழர்களே என்ற கோட்பாட்டை நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன் போன்றோர் ஏற்றுக்கொண்டால் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
5) பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்பு விழாவுக்கான அழைப்பில் தஞ்சை பெரிய கோவில் என்பது தமிழனுடைய வெற்றியின் ஒரு சின்னம், அது கலைக் கோவில் என்று கூறுகின்றார். நாம் பெரிய கோவிலின் கலை நுட்பத்தை வியந்து போற்றுவோம்; ஆனால் ராஜராஜ சோழன் ஒரு சைவ வெறியன் என்பது நெடுமாறன் அவர்கள் அறியாதது அல்ல; அவ்வாறிருக்க அது தமிழர்களின் பொதுச்சின்னமாக எப்படி ஆகும்? வெற்றிச்சின்னம்? நெடுமாறன் சொல்லும் ‘தமிழர்களில் யார் யாரெல்லாம் அடக்கம்? யாரை வென்ற வெற்றிச்சின்னம்? சாதீய சைவத்துக்கு எதிராக இருந்த சமணர்களையும் பிறரையும் ஒழித்துக்கட்டியதன் வெற்றிச்சின்னமா? இரண்டாம் ராஜராஜன் என்ற பட்டம் வேறு நெடுமாறனுக்கு சூட்டப்பட்டதாம்! ‘ஆண்ட பரம்பரை நாம் என்று நவீன மர்டர் மருத்துவரும் ஊர் கொளுத்தியும் வெறியுடன் பேசுவதுதான் இங்கு நினைவுக்கு வருகின்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற சாணிப்பால், சவுக்கடி, தீண்டாமை நிலப்பிரபுத்துவ சிந்தனையின் பிடியில் இருந்து நெடுமாறனும் விடுபடவில்லை என்று சொல்லலாமா?

6) தஞ்சையில் கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் உயிரோடு ஆதிக்கசாதியினரால் தீவைத்து கொல்லப்பட்ட சம்பவமும் இதுபோன்றதுதான்; கம்யூனிஸ்டுக்கள் தலித் மக்கள் பக்கம் நின்றனர்; கட்சிகள் வேறாக இருந்தாலும் தலித்துக்களின் எதிரிகள் என்ற ஒற்றைப்புள்ளி ஆதிக்கசாதிகள்  நிறைந்த அனைத்துக்கட்சியினரையும் ஓரணியில் வைத்த்து; நீதிமன்றமும் ‘கார் வைத்திருக்கின்ற ஒரு பெரிய மனுசன் தானே நேரடியாக தீவட்டி எடுத்துசென்று குடிசைக்கு தீ வைத்தது நம்பும்படியாக இல்லை என்று தீர்ப்பு சொன்னது; ‘செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா என்ற நவீன சினிமா டயலாக்குக்கு இந்த தீர்ப்புத்தான் அடிப்படையோ என்ற சந்தேகம் வருகின்றது. இது குறித்து இன்று ஒரே நேர்கோட்டில் நிற்கின்ற பழைய தொப்புள்கொடிகளான நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், புதிய தொப்புள்கொடியான பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து என்ன?

...தொடரும்

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-1


1) 2014ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத்தேர்தலுக்கான அணிசேர்க்கை தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை இந்தியா கண்டிராத ஒண்ணாம் நம்பர் ஊழல் அரசாக, மக்கள் விரோத அரசாக தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு பெயரும் புகழும் பெற்றுள்ளது. காசு கொடுத்தால் ஓட்டு தானாகவே வந்து விழும் என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து இந்த அரசை காங்கிரஸ் நடத்திக்கொண்டு போவதாகவே படுகின்றது.

2) தனது அணியில் இருந்து இரண்டு கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தன்னைக் கைகழுவிவிட்ட நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆர் எஸ் எஸ்சின் கொடுக்கான பிஜேபி வந்துள்ளது என்பதை நரமாமிச மோடிதான் பிரதமர் என்று அறிவித்துவிட்டு இப்போது திரும்பிய திசையில் எல்லாம் எதிர்வரும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிஜேபி திணறுவதில் இருந்து தெரிகின்றது. கார்ப்பொரேட்டுக்களின் பணப்பெட்டிகள் எப்போதும் திறந்தே இருப்பது, அச்சு ஊடகம், டிவி ஊடகம் என்ற இரண்டு பிரதான கருவிகளும் வெளிப்படையாகவோ பல்வேறு பினாமிகள் பெயரிலோ இதே கார்பொரேட்டுக்களின் கையில் இருப்பது, இந்த ஊடகங்களின் வழியே ஒரு பொய்யை பத்து முறை சொல்லி உண்மையாக ஆக்கிவிடலாம் என்ற ஆர் எஸ் எஸ்+பிஜேபியின் தத்துவ ஆசான் ஹிட்லரின் ஒண்ணாம் நம்பர் தத்துவம் ஆகிய மூன்று பெரும் நம்பிக்கைகள் மட்டுமே கார்ப்பொரேட்டுக்களின் கனவு நாயகனும் வளர்ச்சி புருஷனும் ஆன நரமாமிச மோடிக்கு தினமும் தூக்கத்தை தரும் அரும் மருந்துகள் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை.  ஆனால் இந்தியாவில் தேர்தல் முடிவுகளை கார்ப்பொரேட்டுக்களும் கூடுகின்ற கூட்டமும் மட்டுமே நிர்ணயித்துவிடவில்லை என்பதை கடந்த காலத்தில் மக்கள் மெய்ப்பித்துள்ளார்கள். தன் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையே பத்து இருக்க, உள்ளூர் கவுன்சிலர் தேர்தலில் வெறும் ஐந்து, ஆறு வாக்குகள் மட்டுமே பெற்று குடும்பச்சண்டை நாறிய வேட்பாளர்களும் இருக்கின்றார்கள் என்பது வேறு எதைக் காட்டுகின்றது?

3) பிஜேபி தலைமையில் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போது பிஜேபியை விட்டு விலகிய நிலையில் தமிழகத்தில் திமுக (காங்கிரஸை விட்டு திமுக விலகாது, 2ஜி தொப்புள்கொடி கன்னாபின்னாவென கழுத்தைச் சுற்றிக் கிடக்கின்றது. மத்தியில் மந்திரிசபையில் இருந்து விலகியபோதும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் திமுக இப்போதும் நடந்து வருகின்றது), அ இ அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளோடும் தேர்தல் உறவுக்கு வாய்ப்பில்லை என்று உறுதியான பின், உணர்ச்சிமயமான இலங்கை விசயத்தைக் கையில் எடுத்து இங்கே அரசியல் நடத்த பிஜேபி முயற்சி செய்து, தமிழருவி மணியனை முதலில் கைக்குள் போட்டது; அவர் வழியே வைகோவை வளைத்தது;  பிஜேபியின் இந்துத்துவா தீவிரவாதத்துக்கு முற்றிலும் உடன்பாடான சாதீயக்கோட்பாட்டுக்கு  தமிழகத்தில் முழுப்பாதுகாவலராக உள்ள ராமதாசு, 2104 தேர்தலுக்கான கூட்டணி திமுகவுடனும் இல்லை அ இ அதிமுகவுடனும் இல்லை என்று தெளிவான நிலையில் இலங்கைப்பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு இயல்பாக இந்த அணியில் இணைகின்றார்.  ஆக ஒரு புதிய தொப்புள்கொடி உறவுக்கு தமிழகத்தில் கால்கோள் இடப்பட்டுள்ளது. இந்த புதிய தொப்புள்கொடி அணி சேர்க்கையின் பின்னால் பிஜேபி உள்ளது என அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கின்ற எந்த ஒரு சாமானியனுக்கும் தெரியும். அவ்வாறிருக்க ஏதோ இலங்கைத்தமிழர், தொப்புள்கொடி, ஈழம் போன்ற உணர்ச்சிமிகு வார்த்தைகளைப்போட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் 2014 தேர்தலை மனத்தில் கொண்டு தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் அணிசேர்க்கைக்கு பந்தக்கால் நடும் நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான் போன்றோர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. தொடர்ந்து விஜயகாந்த் வருவார் என்றும் சொல்கின்றார்கள். 

தொடரும்...

திங்கள், நவம்பர் 04, 2013

ஆதாரின் பின்னால் மறைந்திருக்கும் அபாயங்கள்

1)                குற்றப்பரம்பரைச்சட்டம் (Criminal Tribes Act):

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டம் ஆகும்.
முதன்முதலாக 1871இல் இயற்றப்பட்ட இச்சட்டம் பெரும்பாலும் வட இந்திய சமூகத்தவரையே அதிக அளவில் குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். பின்னாளில் வங்கமாகாணத்திற்கும் 1876இல் அமலாக்கப்பட்டது. அதன்பின்  1911இல் சென்னை மாகாணத்தில் அமலாக்கப்பட்டு பல திருத்தங்களுக்கு உள்ளாகி கடைசியாக குற்றப்பரம்பரைச்சட்டம் (1924ஆம் ஆண்டின் ஆறாவது திருத்தம்) என இந்தியா முழுவதும் அமலானது.
குறிப்பிட்ட சமூகத்தவரை ஒடுக்கவும் குலத்தொழிலாக திருட்டு போன்ற சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவோரை சிறையில் அடைக்கவும் இச்சட்டம் வழிசெய்தது. இச்சட்டத்தின் கீழ் வரும் சமூகத்தவர் குழந்தைகள் தவிர்த்த ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் வாரம் ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் முக்குலத்தோர் என்று சொல்லப்படும் கள்ளர், மறவர், பிரமலைக்கள்ளர், வலையர், கேப்மாரி, அகமுடையோர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச்சட்டத்தின் பட்டியலில் இருந்தனர்.

2) கைரேகைச்சட்டம்:

குற்றப்பரம்பரைப்பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் 16 முதல் 60 வயதானவர்கள் காவல் கண்காணிப்பில் இருப்பார்கள்.அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் காவல்நிலையத்திலேயே தூங்குமாறும் அங்கேயே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டங்களில் தனிநபர்களும் இயக்கங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளனர், காவல்துறை அடக்குமுறையில் உயிர் இழந்துள்ளனர். இறுதியாக 1947 ஏப்ரலில் சென்னை மாகாண உட்துறை அமைச்சராக இருந்தவரும் பெரியாரின் ஆதரவாளரும் சுயமரியாதை இயக்கத்தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி.சுப்பராயன்தான் இக்கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்டமுன்வடிவை ஆளுனருக்கு சமர்ப்பித்து 1947 ஜூன் 5ஆம் நாளில் ஆளுனர் ஒப்புதலுடன் குற்றப்பரம்பரைச்சட்ட்த்தை ஒழித்தார்.

3)             தென் ஆப்பிரிக்காவில் ஆசியர்கள் பதிவுச்சட்டம் 1906 (The Asiatic Registration Act):

நூறு வருடங்களுக்கு முன்பான தென் ஆப்பிரிக்க வரலாறு இது. இச்சட்டத்தின்படி இந்தியர்களும் சீனர்களும் அரபு மக்களும் துருக்கியரும் ஆசியர்களாக கருதப்பட்டனர்; இவர்கள் ஒவ்வொருவரும் தம்மை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்; ஒரு அடையாள அட்டையில் கையின் பெருவிரல்ரேகை பதிவுசெய்யப்பட்ட சான்றிதழை எப்போதும் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
எட்டு வயதிற்கு மேற்பட்ட ஆசிய ஆண்கள் பெண்கள் ட்ரான்ஸ்வால் நகரில் குடியிருக்கவேண்டுமெனில் ஆசியர்களுக்கான பதிவாளரிடம் தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; அபராதம் விதிக்கப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள்.
மஹாத்மா காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்; 1906 செப்டம்பர் 11 அன்று காந்தி 3000 இந்தியர்களைத் திரட்டி இச்சட்டத்திற்கு எதிராக ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டினார். “இச்சட்டம் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை மையமாகக்கொண்ட்து; இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டால் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் வேரோடு அழிவார்கள்; இச்சட்டத்தை எதிர்ப்பதானது வாழ்வா சாவா என்ற போராட்டமேஎன அறிவித்தார். நீண்ட ஏழு வருடங்கள் போராட்டத்திற்குப்பின் ஜெனரல் ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டார்.
1871இல் இந்தியாவில் வந்த சட்டம், 1906இல் தென்னாப்பிரிக்காவில் வந்த சட்டம் இரண்டுமே மனிதர்களின் தன்மானத்தில் கைவைத்த அடக்குமுறைகளே; ஒரு மனிதனின் கைரேகை இன்னொரு மனிதனின் ரேகையை ஒத்திருப்பதில்லை; அடிப்படையில் கிரிமினல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் ஒரு உத்திதான் கைரேகை என்பது. ஒரு மனிதனின் கைரேகையை அடக்குமுறையால் அரசு ஆவணத்தில் பதிவுசெய்வது என்பது ‘நீ குற்றவாளியோ இல்லையோ, அது பற்றி கவலை இல்லை, உன் கைரேகை அரசிடம் உள்ளது, எனவே எல்லா நேரங்களிலும் அரசின் கண்காணிப்பில் உள்ளாய் என்பதை மறக்காதே; நீ குற்றவாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குற்றம் நடக்கின்ற இடங்களில் பெறப்படும் கைரேகையோடு உன் கைரேகையும் ஒப்பிட்டுப்பார்க்கப்படும்என்று அச்சுறுத்துவதோடு தனிமனிதனை அவமானப்படுத்துவதும் ஆகும். அதாவது எப்போதும் முதுகுக்குப்பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றுகொண்டு ஒரு மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதன்றி இது வேறில்லை.

4) ஆதார் அடையாள அட்டை:

தற்போதைய மன்மோஹன் சிங், சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா கும்பலால் நட்த்தப்படும் மத்திய அரசு ஆதார் அடையாள அட்டை என்ற ஒரு அட்டையை கூவிக்கூவி வாங்கச்சொல்கின்றது; கைரேகையோடு, கண்ணின் கண்மணியையும் பதியச்சொல்கின்றது; ஆதார் அடையாள அட்டை இல்லாமல் இனி எந்த ஒருமனிதனும் இந்தியாவில் சாப்பிட முடியாது,  மலஜலம் கழிக்க முடியாது, தூங்க முடியாது, தெருவில் நடமாட முடியாது, மனைவியுடன்/கணவனுடன் உறவுவைத்துக்கொள்வது கூட கஷ்டம்தான் என்ற ரீதியில் பரப்பப்படும் பிரச்சாரத்தை காணும்போது தலை சுற்றுகின்றது; ‘நாங்கள்தான் உலகத்திலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடுங்கோஎன்ற காதைக்கிழிக்கும் குடுகுடுப்பைச் சத்தம் வெறும் வெத்துவேட்டுச்சத்தம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகின்றது.   
-ஆதார் நாடாளுமன்ற நிலைக்குழுவால் (Parliament Standing Committee) நிராகரிக்கப்பட்ட ஒன்று
-ஆதார் என்பது கட்டாயம் அல்ல; அது தனி நபரின் விருப்பத்தைப் பொறுத்தது (It is voluntary) என்று ஆதார் குறித்த இணையதளமே சொல்கின்றது.
-ஆதார் அட்டையில் ஒரு நபரின் உயிரியல் கூறுகளான கைரேகையோடு கண்ணின் கண்மணியும் பதியப்படும்.

5) இந்திய அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது:

இந்திய அரசியலமைப்புச்சட்டம் சரத்து 21 கூறுவது: No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law.  ‘எந்த ஒரு மனிதருக்கும் அவர் உயிருடன் வாழும் உரிமையையோ அவரது சுதந்திரத்தையோ பறித்தலாகாது; சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளின் பேரில் மட்டுமே இந்த உரிமையோ சுதந்திரமோ மறுக்கப்படலாம்’.  ஆதார் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்படாத ஒரு அட்டை, ஆதார் நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே அல்ல என்ற நோக்கில் பார்த்தாலும் சரி, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்று, அரசு நிறுவனமே என்று வைத்துக்கொண்டாலும் கூட   இச்சரத்தின்படி ஒரு தனிமனிதனின் கைரேகையையோ கண்மணியின் பதிவையோ பதிவு செய்வது என்பது அவனது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதும் 21ஆவது சரத்தை மீறுவதும் ஆகும். இத்தகைய பின்னணியில் அடிப்படையான கேள்விகள் சில எழும்புகின்றன:
1.       ஆதார் அட்டை கொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனம் ஒரு அரசு நிறுவனமே இல்லை என்பது முக்கியம்; இத்தகைய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை கொள்கை அளவிலே கூட மத்திய நிதியமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்ட்து என்பதை அழுத்தமாக சொல்லவேண்டியுள்ளது.  இன்ஃபொசிஸ்           என்ற தகவல்தொழில் நிறுவனத்தில் வேலை செய்த நந்தன் நீல்கேணி என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவராம். அரசு நிறுவனமே இல்லை என்றால் இவர் அரசு ஊழியரும் இல்லைதானே? அப்படியெனில் இந்தியாவில் குடியிருக்கும் ஒவ்வொரு மனிதரின் கைரேகையையோ விழிப்பதிவையோ பதிவு செய்யும் உரிமையை அரசியலமைப்பு சட்டத்தை மீறி அவர் எங்கிருந்து பெறுகின்றார்?
2.       இந்த நீலகேணி என்ற தனிநபர் தான் திரட்டும் தகவல்களை எங்கே வைக்கின்றார்? தகவல்களைத் திரட்ட அவரால் நியமிக்கப்படும் நபர்களும் அரசு ஊழியர்கள் இல்லை என்றால் திரட்டப்படும் தகவல்களுக்கு இவர்கள் எந்த வகையில் எந்த அளவுக்கு பொறுப்பாளி ஆகின்றார்கள்?
3.       நீலகேணி உள்ளிட்ட இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகளிடம் இந்திய மக்களை வற்புறுத்தி கைரேகை விழிப்பதிவு ஆகியவற்றை பதிவு செய்யச்சொல்லும் அரசு சட்டத்தை மீறும் அரசு ஆகாதா?
4.       இந்த காண்ட்ராக்ட் தொழிலாளிகள் தாங்கள் திரட்டும் தகவல்களை பிற தனியார் நிறுவனங்களுக்கோ பிற நாடுகளுக்கோ விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
5.       போலீஸ், ராணுவம், உளவுத்துறை போன்ற அமைப்புக்கள் இத்தகைய தகவல்களைப் பெற முடியுமா? கேட்டும் கேட்காமலும் பெறலாம் என்றால் இத்தகவல்களை எதற்காகவெல்லாம் பயன்படுத்த முடியும்?
6.       தனது தனிபட்ட உயிரியல் தகவல்களைக் கொடுத்த ஒருவர் பிற்பாடு  தனது தகவல்களை அழிக்க வேண்டும் என விண்ணப்பித்தால் அழிக்கப்படுமா?

6) உச்சநீதிமன்றத்தீர்ப்பு:

ஆதார் அடையாள அட்டை பெறுவதை கட்டாயமாக்குவதை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த புட்டஸ்வாமி அவர்களும் பிறரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரியாகவே தீர்ப்புச்சொல்லியுள்ளது. அவர்களின் வாதம் இவ்வாறு இருந்தது:   ஆதார் என்பது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது, ஏனெனில் அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான உரிமையை வழங்குகின்ற  இந்திய அரசியலமைப்புச்சட்டம் சரத்து 21க்கு எதிரானது என்பதால் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரத்திற்குள் அத்து மீறுவதாகும்.  ஆதார் அட்டை வாங்குவது ஒருவரின் விருப்பத்தைப் பொருத்தது என்று அரசு ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே மறுபுறம்  உணவுப்பாதுகாப்பு, சமையல் எரிவாயு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ப்ராவிடெண்ட் ஃபண்ட்) நிதி, அரசு நிதி உதவி நேரடியாக பயனாளியின் கணக்கிற்கு வருகின்ற திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று சொல்வது முரணானது.

கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு சிலிண்டர் பெறவும், அரசின் உதவித்திட்டங்கள் பெறவும் கட்டாயமாக்குவது செல்லாது என்பதே அத்தீர்ப்பு. கட்டாயம் இல்லாத ஒரு அட்டையை சமையல் எரிவாயு பெற கட்டாயப்படுத்துவது மறைமுகமாக மானிய எரிவாயு சிலிண்டர்களையும், ரேசன் முறையையும், கல்விக்கடன், விவசாயிகளுக்கான கடன், இன்னபிற சாமானிய மக்களுக்கான அரசின் உதவித்திட்டங்களையும் ஒழித்துக்கட்டும் ஒரு முயற்சிதான் என்பதையும் எச்சரிக்கையுடன் கவனிப்போம்.

7)எட்வர்ட்  ஸ்னோடென்னும்  சல்மான் குர்ஷித்தும்:...

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.(CIA)யில் 2009 வரை தொழினுட்ப உதவியாளராக வேலை செய்தவர்; மேலும் அதிரகசிய அமெரிக்க உளவு நிறுவனமான நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி (NSA)யின் காண்ட்ராக்ட் கம்பெனிகளான பூஸ் ஆல்லன் ஹாமில்டன் உள்ளிட்டவற்றில் வேலை செய்தவர்; எட்வர்ட் ஸ்னோடென் ஒரு நாள் தன் வேலையை உதறிவிட்டு வெளி உலகுக்கு சொன்ன சேதிகள் அதிர்ச்சி அளிப்பவை: என் ஒரே நோக்கம் என்னவெனில் அமெரிக்க மக்களின் பெயரால் அமெரிக்க அரசு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது, உண்மையில் அவர்களுக்கு எதிராக அந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்”. ஒரு நிலையான வேலையும் நிறைவான ஊதியமும் அமைந்த வாழ்க்கையை உதறித்தள்ள முடிவு செய்ததற்கு அவர் சொன்ன காரணம்: “அனைத்தையும் உதறித்தள்ள நான் தயார்; இப்படியான ஒரு பிரமாண்டமான ரகசிய ஒற்றறியும் அரசு எந்திரத்தை உருவாக்கி, உலக மக்கள் அனைவரது அடிப்படை சுதந்திரத்தையும் தனிநபர் விவகாரங்களையும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்கள் எதிரிகள் என யாரையும் விட்டுவைக்காமல் அவர்களை எப்போதும் உளவு பார்த்துகொண்டே இருக்கின்றது; தன் சொந்த நாட்டு மக்களையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. இத்தகைய ஒரு பணியில் அமெரிக்காவுக்கு உதவ என் மனச்சாட்சி இடங்கொடாது”. ஸ்னோடென் இப்போது அமெரிக்காவால் வேட்டையாடப்படும் ஒரு நபர், ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
சமீபத்தில் ஜெர்மனிய அதிபரின் கைபேசியை பல வருடங்களாக அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக செய்திகள் வந்துள்ளன; உலக ரட்சகன் ஒபாமா இது குறித்து சற்றும் அலட்டிகொள்ளவில்லை; ‘அப்படியா?என்று கொட்டாவி விட்டுக்கொண்டுள்ளார்; உண்மையில் அவரது உத்தரவின்பேரில்தான் இந்த ஒட்டுகேட்கும் வேலைகள் நடந்துள்ளன; இப்படி ஒரு செய்தி வெளியானதும் நேரடியாக ஒபாமாவிடம் தொடர்பு கொண்ட ஜெர்மனிய அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், ஜெர்மன்-அமெரிக்க உறவுகளை புதிய ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்; ஐரோப்பிய யூனியனில் உள்ள பெரும்பான்மை நாடுகளும் இதேபோன்ற கவலையில் ஆழ்ந்துள்ளன.
ஃப்ரான்ஸ் நாட்டின் ஏழு கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் அமெரிக்க உளவு நிறுவனத்தால் ஒட்டுக்கேட்கப்பட்ட்தாக செய்திகள் வருகின்றன்; அதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து ஃப்ரான்ஸ் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இத்தாலிய மக்களின் தொலைபேசிகள், ஈமெயில்கள், எஸ் எம் எஸ் ஆகியவை அமெரிக்காவால் ஒட்டுக்கேட்கப்படுவதாக செய்திகள் வந்தபோது இத்தாலிய பிரதமர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
பிரேசில் நாட்டவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்ததாக செய்திகள் வந்தன; பிரேசில் குடியரசுத்தலைவர் டில்மா ரூசெஃப்பின் அலுவலகமும் இதில் இருந்து தப்பவில்லை என டேவிட் ஃப்ளீஸர் என்ற அரசியல் விஞ்ஞானி கூறுகின்றார். இதனைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த திட்டத்தையே பிரேசில் குடியரசுத்தலைவர் ரத்து செய்தார்.
இந்திய அரசின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களும், குறிப்பாக இந்திய விண்வெளித்துறை உள்ளிட்ட தேசப்பாதுகாப்பு தொடர்புடைய நிறுவனங்கள் அமெரிக்காவால் ஒற்றறியப்படுகின்றன, இந்தியாவின் முக்கிய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் ஆகியோரின் தொலைபேசிகளும் அவர்களது இ-மெயில் தொடர்புகளும் ஆன்லைனில் ஒற்றறியப்படுவதாக செய்திகள் வந்தன; மேலும் தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் இணையதள இணைப்புக்கள், ஈமெயில்கள் யாவும் நேரடியாக அமெரிக்காவால் உளவு பார்க்கப்படுகின்றன; அமெரிக்காவில் இருந்து இங்கு இறக்குமதியாகும் கம்ப்யூட்டர்கள், அதிலுள்ள முக்கிய சிப்கள் யாவற்றிலும் ரகசிய கட்டளைகள் பதியப்பட்டுள்ளன என்றும், இவற்றைப் பயன்படுத்துவோருக்கு இது குறித்து தெரியாது என்றும், இக்கம்ப்யூட்டர்களில் பதிவாகும் தகவல்களை தேவைப்படும் நேரத்தில் அமெரிக்க உளவு நிறுவனங்கள் இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்றும் தகவல்கள் வருகின்றன;  அமெரிக்காவால் அதிகம்  உளவறியப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாவதாக இந்தியா உள்ளதாக செய்திகள் வந்தபோது இது  உளவு வேலை இல்லை; செய்யப்பட்ட அழைப்புக்கள், அனுப்பப்படும் ஈமெய்ல்கள் பற்றிய ஒரு கம்ப்யூட்டர் பகுப்பாய்வு மட்டுமே; இத்தகைய ஆய்வின் உதவியால் கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் பல நாடுகள் மீது திட்டமிடப்பட்ட மோசமான தீவிரவாத தாக்குதல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளதுஎன இந்திய அரசின் வெளியுறவுத்துறை மந்திரியான சல்மான்குர்ஷித் அமெரிக்க வெள்ளைமாளிகையின் ஆகவிசுவாசமான ஒரு வேலையாள் போல கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தனது வீடு, அண்டை அயலார் வீடு என பாகுபாடு இல்லாமல் உளவறியும் நிலைமைக்கு அமெரிக்கா வந்துவிட்டால் அதன் நிலைமை உச்சகட்டப்பரிதாப நிலையில் உள்ளது என்றே பொருள், அதாவது ஒரு மனநோயாளியின் மனநிலைக்கு அமெரிக்க அதிபரும் அவரது உளவு நிறுவனங்களும் வந்துவிட்டார்கள் என்பதே பொருள்; இது மிக அபாயகரமான ஒரு திருப்பமாகும். ஒரு மனநோயாளியின் கையில் மிகப்பயங்கரமான ஆயுதங்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். கோழைகள்தான் ஆயுதங்களை தேவைக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டே போகின்றார்கள் என்பதை வரலாற்றில் நாம் படித்துள்ளோம்; காந்தியடிகளுக்கு ஒரு கைத்தடி நடப்பதற்கு மட்டும் தேவைப்பட்டது, நாதுராம் கோட்சே போன்ற கொலைகாரர்களுக்கே ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
தனது குடிமக்கள் மீதே நம்பிக்கையற்று ஒற்றறியும் ஒரு நாடு உலகமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகப் பார்ப்பதில் வியப்பேதும் இல்லை; அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் மட்டுமல்ல, வெளுத்ததெல்லாம்  கூட பேயாகத்தெரிகின்றது; உலக மக்கள் 400 கோடிப்பேரின் தனிப்பட்ட விவரங்கள், அங்க, உயிரியல் அடையாளங்கள் உலகரட்சகன் அமெரிக்காவுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படுகின்றது என்பதையே தொடர்ந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இத்தகைய ஒரு அடையாள அட்டையை அரசு கொண்டுவர முயற்சித்தபோது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

8. என்ன செய்ய வேண்டும்?

வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், சொத்துள்ளவர் எனில் அவரது சொத்துவரி ரசீது, ஊதியம் பெறுபவர் எனில் வருமானவரி எண் அட்டை (அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம்), வங்கிக்கணக்கு புத்தகம், பிறப்புச்சான்றிதழ், அரசு ஊழியர் எனில் அவரது நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை என எத்தனையோ அடையாள அட்டைகள் இந்தியாவில் இருக்க, பெறுவது கட்டாயம் இல்லைஎன்ற அளவில் உள்ள ஒரு சாதாரண அட்டையில் இந்திய மக்கள் ஒவ்வொருவருடைய  அடிப்படையான தனிப்பட்ட அடையாளங்கள், உயிரியல் விவரங்களை பதிவு செய்ய இந்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி அதனையும் ஒரு தனியார் நபரிடம் கொடுத்துள்ளது என்பது அபாயகரமான ஒன்றாகும்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1871இல் நிறைவேற்றப்பட்ட குற்றப்பரம்பரைச்சட்டம், அதன் துணைச்சட்டமான கைரேகைச்சட்டம், தென்னாப்பிரிக்காவில் கொண்டுவரப்பட்ட ஆசியர்களை இழிவுபடுத்தும் ஆசியர்கள் பதிவுச்சட்டம் ஆகியவை சகமனிதர்களை இழிவுபடுத்துகின்ற சட்டங்கள், நூறு வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில், அதாவது காலனிய ஆட்சிக்காலத்தில் தம்மை எதிர்த்துப்போராட்டங்களை நடத்திய மண்ணின் மைந்தர்களை அடக்கவும் ஒடுக்கவும் ஆக்கிரமிப்பாளர்களான அன்னியர்கள் கொண்டுவந்த சட்டங்கள் அவை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. எனில் உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடு நாங்களே என்று மார்தட்டிக்கொள்கின்ற நமது நவீனகால ஆட்சியாளர்களுக்கு சொந்த நாட்டின் மக்களுடைய கைரேகை, விழிப்படலம் உள்ளிட்ட பதிவுகள் எதற்கு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.    

இத்தகைய ஒரு சூழலில் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உயிரியல் அடையாளங்களை அரசுக்கு பதில் சொல்லவேண்டிய எந்த ஒரு பொறுப்பும் இல்லாத ஒரு நபரிடம் ஒப்படைப்பதானது எந்த அளவுக்கு அறிவார்ந்த ஒரு செயல், கட்டாயமற்ற ஒரு அட்டை எனில் இதன் உள்நோக்கம் என்ன, இத்தனை விளம்பரம் எதற்கு என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்; பதில் சொல்லுமாறு கட்டாயப்படுத்த வேண்டிய கடமை பொறுப்புள்ள அரசியல் கட்சிகளுக்கும் மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களுக்கும் உண்டு.

சனி, அக்டோபர் 12, 2013

இக்கதையின் மூலம் சொல்லவரும் நீதி யாவது...

1) இந்தியாவின் கடைசிதீவிரவாதிகளை பிடித்தாயிற்று; இனி எல்லாரும் நிம்மதியாய் தூங்கப்போகலாம் என்பதாக இருக்கின்றது தமிழக அரசின் அவசர நடவடிக்கைகள். சில கேள்விகள் எழவே செய்கின்றன:

2) பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து நான்கு நாட்கள் இதுவே முதன்மை செய்தி: சென்னையைத் தகர்த்திருப்பார்கள், மோடியை கொன்றிருப்பார்கள், திருப்பதி குடை ஊர்வலைத்தில் குண்டு வைத்திருப்பார்கள்... இப்படி எல்லாமே போலீஸ்துறை கொடுத்த தகவல்களை அப்படியே வாந்தி எடுத்தார்கள். காவல்நிலையத்தில் குற்றவாளிகள்/கைது செய்யப்பட்டவர்கள் கொடுக்கும் (உண்மையில் ’பெறப்படும்’ வாக்குமூலம்) வாக்குமூலம் சட்டப்படி செல்லாது, நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிந்தும் நம் ஊடகங்களுக்கு இந்த ‘வாக்குமூலத்’தை அவசரகதியில் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

3) இந்த ஆபரேசனில் ஈடுபட்ட காவலர்கள் அனைவருக்கும் சிறப்பு பதவி உயர்வு, 15 லட்சம், 5 லட்சம் என மக்கள் பணம் பரிசு. இப்படியான யாரும் எதிர்பாராத பெரும் பதவி உயர்வு பணத்தொகை பரிசளிப்பின் மூலம் தமிழக அரசு மக்களுக்கு என்ன சொல்கின்றது? ‘இந்தியாவின் கடைசி தீவிரவாதிகள் இவர்கள்தான்; இனிமேல் எல்லாம் சுகமே!’ என்பதா? அதாவது கொடுக்கப்பட்ட பதவி உயர்வு,பணப்பரிசு ஆகியவை ஒரு சாமானிய தமிழனின், தினம் 100 ரூபாய் கூலி சம்பதிக்கின்ற ஒரு தமிழனின் பார்வையில் அளவில் மிகமிகப்பெரியவை என்பதில் ஐயமில்லை; இத்தகைய ஒரு பரிமாணத்தை மக்கள் முன் வைப்பதன் மூலம், கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் ஆகப்பெரும் தீவிரவாதிகள் இஸ்லாமியர்களே என்ற ஒற்றைப்பரிமாணத்தை தமிழக மக்கள் மனத்தில் விதைப்பதாகாதா? இவ்விசயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் மவுனம் கள்ளத்தனமானது.

4) சரிதான். தர்மபுரியில் நத்தம் அண்ணாநகர் என தலித் மக்களின் வீடுகளை எரிக்க பெட்ரோல் மண்ணெண்ணெய் கேன்கள் சேகரிப்பு, கொள்ளை அடிக்கின்ற பொருட்களை அள்ளிச்செல்ல டெம்போ வேன் என நன்கு திட்டமிட்டு நிதானமாக பல மணி நேரங்கள் வன்னியர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியபோது கைகட்டி வேடிக்கை பார்த்த்து தமிழக காவல்துறைதான்; அத்தகைய திட்டமிடல் உளவுத்துறைக்கு தெரியாமல் போனது என்று சொல்ல முடியாது. தர்மபுரி காவல்துறைக்கு என்ன மாதிரியான பதவி உயர்வு, பணப்பரிசு கொடுக்கலாம்? அந்த சம்பவம் குறித்து வாய் திறக்கவே நம் முதல்வருக்கு சில நாட்கள் ஆயிற்று.

5) வாச்சாத்தி மலைவாழ் மக்கள் மீது கொடும் வன்முறையை ஏவிய தமிழக காவல்துறையை காப்பாற்ற திமுக அஇஅதிமுக என மாறி மாறி வந்த இரண்டு கட்சி ஆட்சிகளும் பெரும் பிரயத்தனங்கள் செய்தார்கள் என்பது வரலாறு. இறுதியாக இருபது வருடங்கள் கழித்து தீர்ப்பு வரும்போது இரண்டு கட்சிகளின் அய்யாவும் அம்மாவும் சிறு சலசலப்பும் குற்றமனப்பான்மையும் இன்றி எப்போதும் போலவே இருந்தார்கள் என்பதும் வரலாறு.

6) கோசங்கள் கோரிக்கைகள் தவிர வேறெந்த ஆயுதமும் இன்றி ஊர்வலம் வந்த 17 தமிழர்களின் உயிர் தாமிரபரணியின் நீரோடும் மணலோடும் என்றும் இரண்டறக் கலந்திருக்கும்; அன்றைய தினம் ஆறடி உயரக்கம்புகளோடும் துப்பாக்கிகளோடும் வெறியாட்டம் ஆடிய தமிழக போலீசுக்கும் அவர்களுக்கு வக்கீலாகவும் அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சாதிய வக்கீலாகவும் மாறி வாதாடிய அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும் மறந்திருக்கலாம், தமிழகமக்கள், குறிப்பாக திருநெல்வேலி மக்கள் அதை என்றும் மறக்க மாட்டார்கள்.

7) தேவர் குருபூசை என்றால் துப்பாக்கியோடு காவல் காப்பதும் இம்மானுவேல் சேகரன் குருபூசை என்றால் போஸ்டரை கிழிப்பதும் துப்பாக்கி சூடு நடத்துவதும்... இப்படியான நீண்ட நெடிய பெருமைக்குரிய சாதியப்பாரம்பரியம் தமிழக போலீசுக்கு உண்டு.

8)ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் இஸ்லாமியர்களுக்கு எதிராக திசைதிருப்ப ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பான பிஜேபி பகிரங்கமாக வேலை செய்கின்றது; பிற கட்சிகளும் தமிழகத்தின் திராவிடக்கட்சிகளும் அந்த அஜெண்டாவை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு தாங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதை செவ்வனே நிறைவேற்றுகின்றார்கள்; இப்போது இந்த வேலையை முன் எப்போதையும் விட அதி வேகமாகவும் வீச்சாகவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ‘நாங்கள் தொலைக்காட்சி வரலாற்றில் புதுமை செய்வோம், புதிய தலைமுறையை வளர்ப்போம்’ என்று பீற்றிக்கொண்டு வந்தவர்களை தமிழ் மக்கள் வரவேற்றார்கள்; திடீரென ஒரு நாள் இவர்களுக்கு நரமாமிச மோடியின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது என்ற கேள்வி எழும்போது மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கணங்களில் இந்த ஊடகங்கள் யார் பக்கம் நிற்பார்கள் என்பது தெளிவாகின்றது.

9) தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ளஇஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்கபயங்கரவாதமும், தமது உள்ளூர் வர்த்தக லாபங்களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும், இந்தஅஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.+ காங்கிரஸ், பிறகட்சிகளின் கள்ளக்கூட்டணியும், இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு,எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன. இந்த பிரச்சார அரசியலின் ஒருபகுதியாக, ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் (அரைகுறை அம்மண டான்ஸ், பன்ச் டயலாக், அடிதடி எதுவும் இல்லாமல் கவனமாக ஆக்கப்பட்ட) உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தை அக்டோபர் இரண்டு அன்று ஒளிபரப்பியதில் எந்த ஒரு உள்நோக்கமும் அரசியலும் இல்லை என்று நம்மை நம்பச்சொல்கின்றார்கள்.

10) தீவிரவாதிகள் எப்போதும் வெடிகுண்டுகளுடனும் துப்பாக்கிகளுடனும் திரிபவர்கள் என்ற ஒற்றைப்பிம்பத்தை நமது ஊடகங்கள் காலந்தோறும் பரப்பி வந்துள்ளன; அப்படி அல்ல; ஆயுதம் ஏதும் இன்றி, சுத்தமான சவரம் செய்யப்பட்ட முகத்துடன், வெள்ளை உடையுடன், சுத்தமான ஆங்கிலம் பேசி ரத யாத்திரை நடத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தி பல்லாயிரம் உயிர்கள் பலியாக காரணமாய் இருப்பவர்களும், ;இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்ட அனுமதியுங்கள், கை கை கட்டி வேடிக்கை பாருங்கள்’ என தம் காவல்துறைக்கு ஆணையிடும் முதல்வர்களும்’ இவர்களோடு எப்படியும் உறவுகொண்டு நாடாளுமன்றத்தில் சில எம்.பி. சீட்டுக்களையோ மந்திரிகளையோ பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பல கட்சிகளுக்கும் கடிதம் எழுதும் கலை கைவரப்பெற்ற கலைஞர்களும்; இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஐ.நா.சபை வரை பேசும் நீண்ட நாக்கு உள்ளவர்கள் ஆனால் தர்மபுரித்தமிழர்களை வன்னியன் தாழ்த்தப்பட்டவன் என கோடுபோட்டுப்பிரித்து 300 வீடுகளை எரித்து தலித்துக்களின் எதிர்காலத்தையே நாசம் செய்த பாட்டாளி கட்சியினரும் தீவிரவாதிகள் இல்லை எனில் அவர்களுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்கலாம்?

ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

அழிவுப்பாதையில் தமிழருவி மணியன்


1)தமிழருவி மணியன். தனது வளமான சிந்தனையாலும் வலிய தமிழ்ப்பேச்சாற்றலாலும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவர். காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர். ஆம், காந்திய இயக்கம். இன்றைய தி ஹிந்து செய்தியேட்டின் முதல் பக்க செய்தி: இந்திய மக்களின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் தீ வைத்துக்கொளுத்துவதே தம் முக்கிய  பணியாக சபதம் ஏற்றுள்ள பிஜேபி தலைவர் ராஜ்னாத் சிங்கை மணியன் அவர்கள் சந்தித்ததாகவும் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பிஜேபி அணியில் விஜயகாந்த் கட்சி, வைகோ, வன்னியர் ராம்தாசு கட்சிகளை கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

2)இதற்கு இவர் சொல்லும் காரணம்: திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்றாக பிஜேபி அணியாம்! இது நியாயமான காரணமா? நாடாளுமன்றத்துக்கான தேர்தல் எனில் காங்கிரஸ், பிஜேபிக்கு மாற்று என்று யோசிப்பதுதானே சரியான சிந்தனையாக இருக்கும்? பிஜேபி மதவாத அதிதீவிர இந்துத்துவா கட்சி என்பதும் காங்கிரஸ் ஒரு மிதவாத இந்துத்துவா கட்சி என்பதும் மணியன் அவர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை; ஆனால் தெருவில் இந்த இரண்டு கட்சிகளும் ஏதோ பரம்பரை எதிர்களைப்போல் கட்டிப்புரண்டாலும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் பிஜேபி ஆதரித்தே இன்று வரை வாக்களித்து வந்துள்ளது என்பதும், நாட்டின் பொருளாதார அஸ்திவாரத்தை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே அரித்து நாசம் செய்து வருகின்றன என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆக உண்மையில் காங்கிரஸ் பிஜேபிக்கு எதிரான ஒரு அணியைக்கட்ட வேண்டும், அதற்குத்தான் மணியன் போன்ற காந்திய சிந்தனையாளர்கள் உதவி செய்ய வேண்டும்.

3)மேலும் தமிழகத்தில் மிகப்பெரும் சாதீய பிரிவினை சக்தியாக, தலித் மக்களின் விரோதியாக உருவெடுத்துள்ள பாமகவையும் இந்த அணிக்கு அழைத்துள்ளதாகவும் மணியன் அவர்கள் கூறியுள்ளார். இவை யாவும் உண்மை எனில் மணியன் அவர்கள் உண்மையில் மக்கள் விரோத காங்கிரசுக்குத்தான் (குறைந்த பட்சம் தமிழக அளவில்) மறைமுகமாக உதவி செய்கின்றார் என்பது பட்டவர்த்தனம்.

4)தன் வாழ்நாளெல்லாம் இந்து முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை போதித்து வந்தவரும் அந்த காரணத்துக்காகவே (பிஜேபியின் தாய்க்கழகமான) இந்து மகா சபையை சேர்ந்த கொடியவன் கோட்சேயால் கொல்லப்பட்டவருமான காந்தியடிகளின் பேராலான இயக்கம் பிஜேபி அணிக்கு ஆள் திரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று மணியன் அவர்கள் விளக்க கடமைப்பட்டுள்ளார்; ஆசிய யூத இன மக்களை எதிரிகளாக பிரகடனம் செய்து லட்சக்கணக்கான யூத மக்களை கொன்று குவித்த ஹிட்லரை தம் லட்சிய புருஷனாகவும் அவனது கொள்கைகளை தம் லட்சியமாகவும் அவனது சின்னமான ஸ்வஸ்திக்கை தம் சின்னமாகவும் ஏற்றுக்கொண்டுள்ள ஆர் எஸ் எஸ்சின் கிளையான பிஜேபி; ஹிட்லரின் மறுவடிவமான நரேந்திரமோடி, அத்வானி வகையறா. காந்தியத்துக்கும் பிஜேபிக்கும் என்ன அய்யா தொடர்பு? மணியன் அவர்களே, உண்மையில் நீங்கள் யாருக்கு உதவி செய்கின்றீர்கள் என்பது உங்கள் மனதறியும்; ஆனால் தமிழகத்தில் காலூன்ற பிஜேபி கடந்த காலத்தில் திமுக அதிமுக கட்சிகளிள் தோளில் சவாரி செய்த்தும் அந்த இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற சக்திகளின் விமர்சனத்துக்கு ஆளானதும் தாங்கள் அறியாதது அல்ல; அதே விமர்சனத்துக்கு நீங்களும் ஆளாகின்றீர்கள்; தமிழக வரலாற்றில் உங்களது இந்த வேலை கரும்புள்ளியாக காலத்துக்கும் நிற்கும்.

5)ஒரு விசயம் இங்கே பொருத்தமாகப்படுகின்றது: தனது குறிப்பிட்ட கால கட்ட திரைப்படங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை பாகிஸ்தானிய உளவாளிகளாகவும் வெடிகுண்டு தீவிரவாதிகளாகவும் சித்தரித்து தமிழக மக்கள் மனத்தில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த்; இது அப்பட்டமான ஆர் எஸ் எஸ்,பிஜேபி பிரச்சாரமே. இந்த கருத்தாக்கத்தை இன்று வரையிலும் கூட பொதுவில் நியாயமாக சிந்திக்கின்ற இந்து சகோதரர்கள் மனத்தில் இருந்து துடைக்க முடியவில்லை; வாஜ்பேயி அரசு இஸ்லாமிய மக்களை மனத்தில்கொண்டு வரைந்ததுதான் பொடா; இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூச்சைப்பிடித்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மணி நேரம் சங்கொலி செய்தவர் வைகோ; பொடாவின் முதல் பலியே அவர்தான் என்பது வரலாற்றுப்பாடம்! பிஜேபியின் அதிதீவிர இந்துத்துவா சிந்தனை மனு தர்மத்தில் இருந்து எழுவது; மனு தர்ம்ம் சாதீயத்தை கெட்டியாக பிடிக்கின்றது போதிக்கின்றது; தமிழகத்தில் மனுவின் நவீன அவதாரம் மருத்துவர் ராமதாஸ். இந்த மூன்றுபேரும் பிஜேபி அணியில் இருப்பது மிகவும் பொருத்தமானதே. அந்த வகையில் உங்கள் முயற்சி ஒரு அடையாளம் காட்டும் முயற்சிதான்.


6) இறுதியாக: நரவேட்டை மோடி திருச்சியில் தன் திருவாயால் ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டுஎன்ற நாமக்கல் கவிஞரின் பாடலை (யாரோ எழுதித்தந்ததை) வாசித்ததாக செய்தி. நாமக்கல் கவிஞரின் மற்றுமொரு பாடலை மணியன் அவர்களுக்கு நாம் நினைவூட்டுவோம்: ‘புத்தரையும் கர்த்தரையும் நபிகள் எனும் நாயகரையும்  கற்றும் கேட்டும் அறிந்திட்டோம்; அப்படியொரு உத்தமரை மகாத்மாவின் வடிவிலே கண்டுவிட்டோம்’. மணியன் அவர்களே, எந்த மாமனிதரின் பேரால் நீங்கள் இயக்கம் நடத்துகின்றீர்களோ அந்த மனிதரை குண்டுகளால் துளைத்த ஆர் எஸ் எஸ்சின் கோட்சேவின் இன்றைய வடிவமான நரவேட்டை மோடிக்கும் அப்பேர்வழியின் கட்சிக்கும் உங்கள் இயக்கமும் சிந்தனையும் துணைபோகின்றது; இக்கட்சி மொழிவாரி மாநிலங்கள் என்ற கோட்பாட்டையும் பல்வேறு கலாச்சாரங்கள் என்ற உண்மையையும் பல்வேறு மதங்கள், வழிபாடுகள் என்ற உண்மையையும் நிராகரிக்கின்றது. ‘இந்து, இந்தி, அகண்டபாரதம்’ என்ற ஒற்றைவாதத்தை முன்வைக்கின்றது; இத்தகைய பிற்போக்கு சக்திக்கே  உங்கள் இயக்கமும் சிந்தனையும் துணைபோகின்றது;தமிழக மக்கள் கடந்த காலத்தைப்போலவே நாளையும் மதவாதசக்திகளோடு உங்கள் இயக்கத்தையும் சேர்த்தே புறக்கணிப்பார்கள்; நீங்கள் உணரும்போது காலம் கடந்திருக்கும்.