ஞாயிறு, நவம்பர் 17, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-2

4) ஆதிஆந்திரர் தொடங்கி வேட்டுவன் வரையிலான 80க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர்களும், ஆதியன் தொடங்கி உரளி வரையிலான 40க்கும் மேற்பட்ட பழங்குடியினரும், அகமுடையாரில் தொடங்கும் சுமார் 150 சாதிக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், ஆண்டிப்பண்டாரத்தில் தொடங்கி யோகீஸ்வர்ர் வரையிலான சுமார் 40 சாதி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும், சுமார் 60 சாதி சீர்மரபினரும், 70க்கும் மேற்பட்ட முற்பட்ட சாதியினரும் (இந்தப் பட்டியலில் ஆண்ட பரம்பரையினரான வன்னியர், கவுண்டர், கொங்குவேளாளர், நாயக்கர், நாயுடு, கள்ளர், மறவர், சேர்வை, அகமுடையார் ஆகியோரும், காலம் காலமாக  அடக்கப்பட்ட பரம்பரையினரான  பள்ளர், பறையர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் உள்ளிட்ட பாவப்பட்ட ஜென்மங்களும், கூடவே தேர்தல் ஆதாயங்களுக்காகவும் உள்ளூர் ஆதாயங்களுக்காகவும் தீவிரவாதிகளாக்கப்படும் முஸ்லிம் மக்களும், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் அனைவரும் அடங்குவர்)    தமிழர்களே என்ற கோட்பாட்டை நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன் போன்றோர் ஏற்றுக்கொண்டால் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
5) பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்பு விழாவுக்கான அழைப்பில் தஞ்சை பெரிய கோவில் என்பது தமிழனுடைய வெற்றியின் ஒரு சின்னம், அது கலைக் கோவில் என்று கூறுகின்றார். நாம் பெரிய கோவிலின் கலை நுட்பத்தை வியந்து போற்றுவோம்; ஆனால் ராஜராஜ சோழன் ஒரு சைவ வெறியன் என்பது நெடுமாறன் அவர்கள் அறியாதது அல்ல; அவ்வாறிருக்க அது தமிழர்களின் பொதுச்சின்னமாக எப்படி ஆகும்? வெற்றிச்சின்னம்? நெடுமாறன் சொல்லும் ‘தமிழர்களில் யார் யாரெல்லாம் அடக்கம்? யாரை வென்ற வெற்றிச்சின்னம்? சாதீய சைவத்துக்கு எதிராக இருந்த சமணர்களையும் பிறரையும் ஒழித்துக்கட்டியதன் வெற்றிச்சின்னமா? இரண்டாம் ராஜராஜன் என்ற பட்டம் வேறு நெடுமாறனுக்கு சூட்டப்பட்டதாம்! ‘ஆண்ட பரம்பரை நாம் என்று நவீன மர்டர் மருத்துவரும் ஊர் கொளுத்தியும் வெறியுடன் பேசுவதுதான் இங்கு நினைவுக்கு வருகின்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற சாணிப்பால், சவுக்கடி, தீண்டாமை நிலப்பிரபுத்துவ சிந்தனையின் பிடியில் இருந்து நெடுமாறனும் விடுபடவில்லை என்று சொல்லலாமா?

6) தஞ்சையில் கீழ்வெண்மணியில் 44 தலித் மக்கள் உயிரோடு ஆதிக்கசாதியினரால் தீவைத்து கொல்லப்பட்ட சம்பவமும் இதுபோன்றதுதான்; கம்யூனிஸ்டுக்கள் தலித் மக்கள் பக்கம் நின்றனர்; கட்சிகள் வேறாக இருந்தாலும் தலித்துக்களின் எதிரிகள் என்ற ஒற்றைப்புள்ளி ஆதிக்கசாதிகள்  நிறைந்த அனைத்துக்கட்சியினரையும் ஓரணியில் வைத்த்து; நீதிமன்றமும் ‘கார் வைத்திருக்கின்ற ஒரு பெரிய மனுசன் தானே நேரடியாக தீவட்டி எடுத்துசென்று குடிசைக்கு தீ வைத்தது நம்பும்படியாக இல்லை என்று தீர்ப்பு சொன்னது; ‘செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா என்ற நவீன சினிமா டயலாக்குக்கு இந்த தீர்ப்புத்தான் அடிப்படையோ என்ற சந்தேகம் வருகின்றது. இது குறித்து இன்று ஒரே நேர்கோட்டில் நிற்கின்ற பழைய தொப்புள்கொடிகளான நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், புதிய தொப்புள்கொடியான பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து என்ன?

...தொடரும்

கருத்துகள் இல்லை: