வியாழன், நவம்பர் 28, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-7




29) கவனித்துப்பார்த்தால் 
இவர்களின் புதிய
சகாவான ஆர் எஸ்
எஸ்சின் கொடுக்கான
பிஜேபியின் 
பொன்.ராதாகிருஷ்ணன்
 இதுவரை
கவனமாக தொப்புள்கொடி என்ற சொல்லை
பயன்படுத்தவில்லை என்பது புரியும். அவர்கள்
நிலையில் அவர்கள் சரியாக இருக்கின்றார்கள்: 
அவர்களுக்கு ஐந்து விதமான
தொப்புள்கொடிகளை மனு போதித்துள்ளான்: 
பிராமணன், ஷத்ரியன், சூத்திரன், வைசியன், 
பஞ்சமன் ஆகிய ஐந்து தொப்புள்கொடிகள். 
தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்குள்ளும்
இந்த ஐந்து வெவ்வேறு கிரேட்
தொப்புள்கொடிகள் உண்டு என பிஜேபியின்
பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வாரெனில்,
‘இல்லை இல்லை, இவை தொப்புள்கொடிகள்
அல்ல, மலக்குடல்கள் என இனமான
சிங்கங்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி,
சீமான் போன்றோர் சொல்வார்களெனில்
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம்
திறக்கப்பட்டபோது தொப்புள்கொடிகளும்
மலக்குடல்களும் எப்படி பிணைந்தன,
என்னவிதமான தத்துவ உறவு அது என்று
விளக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு
உள்ளது. இதுவரை பிஜேபியின் மறைமுக
ஏஜெண்டாகவும் சமீபத்தில் வெளிப்படையாகவே
அக்கட்சியில் சேர்ந்தவருமான சு.சாமியை
முற்றம் திறக்கும்போது ஏன் அழைக்கவில்லை
என்ற கேள்வி இக்கட்டுரையை பொருத்தவரை 
இரண்டாம் பட்சம்.  

30) மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவர்கள், சம்ஸ்கிருதமே இந்தியாவின் பொது மொழி, அதுவரை இந்தி இருந்துவிட்டுப்போகட்டும் என்று சொல்பவர்கள், கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரானவர்கள், ஒரே மதம், அது இந்து மதம், ஒரே இனம், அது ஆரிய இனம் என்று பிரகடனம் செய்பவர்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஒரு தொப்புள்கொடி உறவை ஏற்படுத்த வைகோவும் நெடுமாறனும் தமிழருவியும் ராமதாசும் முயற்சி செய்கின்றார்கள்.
 
31) மஹாராஷ்ட்ரா மாநிலம் கயர்லாஞ்சி: 2006 செப்டம்பர் 29. புத்தமதத்தை தழுவிய பய்யாலால் போட்மாங்கே குடும்பத்தினர் படுகொலை. ஆதிக்க சாதியினரின் கொடுமைகளை சகித்துக்கொள்ளாமல் சுயமரியாதையுடன் வாழ போராடியது, ஒரு தலித் குடும்பம் 4.74 ஏக்கரை சொந்தமாக கொண்டிருந்தது,  அக்குடும்பத்தில் படித்த தலித் பெண் இருந்தது ஆகிய பெரும் ‘குற்றங்களுக்காக அக்குடும்பத்தினர் நால்வர் கொல்லப்பட்டனர். குடும்பத்தலைவியும் அவரது மகளும் அதே குடும்பத்தின் ஆண்கள் கண் முன்னால் மானபங்கப்படுத்தப்பட்டனர், அனைவரும் கொல்லப்பட்டனர். தூரத்தில் மறைவில் இருந்து இக்கொடுமைகளை அக்குடும்பத்தின் தலைவர் ஆதரவற்ற நிலையில் பார்த்துக்கொண்டிருந்தார். 2008 செப்டம்பர் 24 அன்று பந்த்ரா மாவட்ட நீதிமன்றம், இக்குற்றத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரணதண்டனையும் 2 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தார். மாவட்ட நீதிபதி எஸ்.எஸ்.தாஸ் என்பவர் சாதீய அடக்குமுறையால் நிகழ்ந்த வன்கொடுமை அல்ல; இது வெறும் கொலை வழக்கு மட்டுமே என்று தீர்ப்பு சொன்னார். விசயம் என்னவெனில் குற்றம் நிகழ்ந்தபோதும் அதற்கு முன்பும் பின்பும் உள்ளூரில் காங்கிரஸ் பிஜேபி உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் அந்த தலித் குடும்பத்திற்கு எதிராக குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தன; இக்கட்சிகளும் அதன் தலைவர்களும் பொதுவிலும் தேர்தல் காலங்களிலும் இத்தேச நலனின் பொருட்டு ஒருத்தருக்கொருத்தர் கட்டிப்புரண்டு தெரு நாய்களைப்போல சண்டைபோடுவதாக காட்டிக்கொள்கின்றனர். 

32) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் மிகப்பெரும் அரசியல் படுகொலையை (காந்தியடிகள்) நடத்தியவர்கள், அதன் பின் ஆகப்பெரிய மதக்கலவரத்துக்கு வித்திட்ட ராமர் ரத யாத்திரையை நடத்தியவர்கள்; தமிழகத்தின் காமராஜர் மீது டெல்லியில் பெரும் தாக்குதல் நடத்தியவர்கள்;  ஒரிசாவில் கிறித்துவப்பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் வைக்கோல்போரில் தள்ளி உயிரோடு கொளுத்தியவர்கள்; கிறித்துவ கன்னியாஸ்த்ரீகளை மானபங்கம் செய்தவர்கள்; செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததற்காக இரண்டு தலித் ஆண்களை உயிரோடு எரித்தவர்கள் (மாடு கோமாதாவாம்! கேரளாவில் கோமாதா கோபிதா இறைச்சிதான் விலை மலிவு); இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களை நடத்த ஆயுதப்பயிற்சிப்பள்ளி நடத்துகின்றவர்கள்; பல பொது இடங்களிலும் இந்துமக்களின் வழிபாட்டுத்தலங்களிலும் தங்களது அலுவலகங்களிலும் தாங்களே வெடிகுண்டு வைத்துவிட்டு பழியை இஸ்லாமிய மக்கள் மீது சுமத்துகின்றவர்கள்; கருத்துசுதந்திரத்தை அனுமதியாத ஃபாசிஸ்ட்டுக்கள்; இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மாபெரும் ரத்தக்களறியை ஒரு முதலமைச்சரின் ஆணைப்படி நிதானமாக நிறைவேற்றிய கொலைபாதகர்கள்; ரத்தக்கறை என்றும் மறையாத அதே முதலமைச்சரை இந்தியாவின் எதிர்காலப்பிரதமராகக் காட்டுவதில் வெட்கமோ மானமோ கடுகளவும் இல்லாத சமூகவிரோதிகள்; உ.பி.யில் முசாஃபர்நகரில் சமீப நிகழ்வான கலவரத்தில் 32 பேர் கொல்லப்படக் காரணமாக இருப்பவர்கள்; உத்ரகாண்ட் வெள்ளத்தில்  சிக்கிய 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றியதாக கூச்சநாச்சம் ஏதுமின்றி பொய் சொல்பவர்கள்; பாரத்மாதா என்று கூவிக்கொண்டே அமெரிக்க கார்ப்பொரேட்டுக்களுக்கு பாரத்மாதாவின் சேலை வரை விற்றுக் காசு பண்ணும் வித்தை தெரிந்தவர்கள்...இப்படி முற்றுப்பெறாமல் நீண்டுகொண்டே போகும் ஒரு பட்டியலுக்கு சொந்தமான பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலின் தமிழகப்பிரதிநிதியான பொன்.ராதாகிருஸ்ணன் தமிழ் மக்களுக்கு எந்த வகையில் தொப்புள்கொடி ஆவார் என்று விளக்க வேண்டிய கட்டாயம் நெடுமாறன், வைகோ, காந்திய சிந்தனைவாதி தமிழருவி ஆகியோருக்கு உண்டு.

தொடரும்...

கருத்துகள் இல்லை: