சனி, செப்டம்பர் 29, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 1 (குஷ்வந்த் சிங்)





(டிரெய்ன் டு பாகிஸ்தான் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங். 1956 ல் வெளியிடப்பட்டது. 1947 ல் தேசப்பிரிவினையின் போது, வடக்கிலும் வடமேற்கு எல்லையிலும் சிந்திய குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் பல லட்சம் அவற்றில் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற பாகுபாடு ஏதுமில்லை. எல்லைப்புறத்தின் ஒரு கிராமத்தில் தேசப்பிரிவினையின் பின்புலத்தில் நிகழும் கண்ணீர் கசியும் சம்பவங்களே இப்புதினத்தின் மையமாக நிற்பவை. இனி, புதினத்தின் சில பக்கங்களிலிருந்து..)
*****************************************************************
அந்த 1947-ன் கோடைகாலம், இந்தியாவின் வழக்கமானதொரு கோடைகாலமாக இல்லை. பருவநிலை கூட அப்போது வழக்கத்தைவிட உஷ்ணமாகவும், காய்ந்து போயும், புழுதி கிளப்பியபடியுமாக இருந்தது. கோடைகாலம் நீண்டதாகயிருந்தது. மேகங்கள் தென்பட்டன. ஆனால் மழையில்லை. தங்களது பாவங்களுக்காக ஆண்டவன் தண்டித்துக் கொண்டிருப்பதாக ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள்.

தாங்கள் பாவம் செய்துவிட்டதாகப் புலம்புவதற்கு அவர்களிடம் போதிய காரணங்கள் இருந்தன. இந்தக் கோடைக்கு முன்புதான், தேசம் இரண்டு கூறுகளாக இந்து இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என பிரிக்கப்பட இருப்பதாகச் செய்திகள் கசிந்தன. விளைவு, கல்கத்தாவில் மதக்கலவரம் வெடித்தது. ஒருசில மாதங்களிலேயே சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது. இந்துக்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக முஸ்லிம்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் திட்டமிட்டுத் தங்களைக் கொன்றதாக இந்துக்கள் கூறினார்கள். இரண்டு தரப்புமே ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றார்கள், கத்தியால் குத்தினார்கள், வெட்டினார்கள், மோதினார்கள். இரண்டு தரப்புமே சித்திரவதையில் இறங்கினார்கள். இரண்டு தரப்புமே பெண்களைச் சூறையாடினார்கள். கல்கத்தாவிலிருந்து, கலவரம் வடக்கு, கிழக்கு, மேற்காகப் பரவியது. கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் இந்துக்களை முஸ்லிம்கள் படுகொலை செய்தார்கள். பிஹாரில் முஸ்லிம்களை இந்துக்கள் படுகொலை செய்தார்கள்.

பஞ்சாபிலும் எல்லை மாகாணத்திலும், பெட்டிகளில் மண்டையோடுகளை வைத்துக்கொண்டு அவை இந்துக்களால் கொல்லப்பட்ட பிஹார் முஸ்லிம்கள் என்று கூறித் திரிந்தார்கள். பல நூறு வருடங்களாக வடமேற்கு எல்லையில் வசித்து வந்த இந்துக்களும் சீக்கியர்களும் தங்கள் சொத்துக்களைத் துறந்து, கிழக்கே தங்களது சமூக மக்களைத் தேடி அலைஅலையாய்ப் புறப்பட்டார்கள். கால்நடையாக, மாட்டு வண்டிகளில், லாரிகளில், ரயில்களின் கூரைகளில், ஓரங்களில், அங்கே இங்கே என்று பயணித்தார்கள். தங்களது பயணவழிகளில், தண்ணீர்த் துறைகளில், ரயில் நிலையங்களில், சாலைச் சந்திப்புகளில், அவர்களைப் போலவே கிழக்கு நோக்கிப் பாதுகாப்புத் தேடி சாரைசாரையாகப் பயணிக்கின்ற முஸ்லிம்களை எதிர்கொண்டார்கள். கலவரம் காற்றைப் போல இரைந்து கர்ஜித்தது.

பாகிஸ்தான் என்ற புதியதேசம் முறைப்படி அறிவிக்கப்பட்ட அந்த 1947-ன் கோடையில், முஸ்லிம்களும் இந்துக்களும் சீக்கியர்களுமாக ஒருகோடி பேர் எதிரெதிர்த் திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பருவமழை தொடங்கியபோது, அநேகமாக அவர்களில் பத்துலட்சம் பேர் உயிரிழந்திருந்தார்கள். வட இந்தியா கலவரத்திலும் வன்முறையிலும் அச்சத்திலும் மூழ்கியிருந்தது. பாலைவனச்சோலை போல, எல்லையின் மிக நீண்டதூரத்தில் சிதறிக் கிடக்கின்ற ஓரிரண்டு கிராமங்களில் மட்டுமே அமைதி நிலவியது. மனோமஜ்ராவும் அத்தகைய கிராமங்களில் ஒன்று.

மனோமஜ்ரா சிறிய கிராமம். செங்கல் வீடுகள் மொத்தமே மூன்றுதான். அதில் ஒன்று வட்டிக்குப் பணம்தரும் லாலாராம் லாலின் வீடு. மற்ற இரண்டு, சீக்கிய குருத்வாராவும் முஸ்லிம்களின் மசூதியும்தான். அந்த மூன்று கட்டிடங்களுமே ஒரு முக்கோணத்தை உருவாக்கியிருந்தன. நடுவில் ஒரு அரசமரம். மொத்தம் எழுபது குடும்பங்கள். லாலாராம்லாலின் குடும்பம் மட்டுமே இந்துக்கள். மற்றவர்கள் சீக்கியர்களும் இஸ்லாமியர்களும் சம அளவில். கிராமத்தின் நிலம் அனைத்தும் சீக்கியர்களிடம் இருந்தன. இஸ்லாமியர்கள் குத்தகைதாரர்களாக இருந்தார்கள். நகர சுத்தித் தொழிலாளர்களாக இருந்த சிலரின் மதமோ என்னவென்றே தெரியவில்லை.

***

மனோமஜ்ராவின் ரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நிற்பதில்லை. வேகம் குறைந்த பாசஞ்சர் ரயில்கள் இரண்டு மட்டுமே அங்கே நிற்பவை. காலையில் டெல்லியிலிருந்து லாகூருக்குச் செல்லும் ரயிலும், மாலையில் லாகூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயிலும், மனோமஜ்ராவில் ஓரிரண்டு நிமிடங்கள் நின்று செல்பவை. எப்போதுமே அங்கே வரும் வாடிக்கையாளர்என்றால் அவை சரக்கு ரயில்கள் மட்டுமே. மனோமஜ்ராவிற்கு சரக்குகள் வருவதுமில்லை, அங்கிருந்து செல்வதுமில்லை. என்றாலும், ரயில் நிலையத்தில் எப்போதும் சரக்கு வண்டிகளின் அணிவகுப்பு இருந்துகொண்டே இருக்கும். வருகின்ற சரக்கு ரயில்கள் சரக்கு வண்டிகளைக் கழற்றி விடுவதும், இருக்கின்ற வண்டிகளை இணைத்துக் கொண்டு செல்வதுமாக மணிக்கணக்கில் அந்த வேலை நடக்கும். கிராமம் ஆழ்தூக்கத்தில் உறைந்திருக்கும்போது, அந்த மையிருட்டில், எஞ்சின்களின் விசில் சத்தமும், மூச்சிரைக்கும் வேகமும், சரக்குகளின் சத்தமும், வண்டிகளை இணைக்கும் கப்ளிங்குகளின் சத்தமும் காலை வரை தொடரும்.

* * *

அந்த செப்டம்பர் தொடக்கம் முதலே, மனோமஜ்ராவிற்கு ரயில்கள் வரும்நேரம் தாறுமாறாக இருந்தது. ரயில்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை, வழக்கத்துக்கு மாறாக இரவு நேரங்களிலும் ரயில்கள் ஓடுவதைக் கேட்க முடிந்தது. சரக்கு ரயில்கள் ஓடுவது சுத்தமாக நின்றுவிட்டது. ஆனால் அடையாளமற்ற ரயில்கள் அர்த்த ராத்திரி முதல் விடிகாலை வரை ஓடத் துவங்கின. மனோமஜ்ராவின் கனவுகள் கலையத் தொடங்கின....


(தொடரும்)

சனி, ஆகஸ்ட் 11, 2012

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே? (2)


ஜப்பானியப் படைக்குவிப்பில் மிகப்பெரியதும் மிகப்பலம் வாய்ந்ததுமான இராணுவப்பிரிவு மஞ்சூரியாவில் குவிக்கப்பட்டிருந்த குவாண்டுங் இராணுவம்தான்.  படைவீரர்கள் மட்டுமே பத்து லட்சத்துக்கும் மேல். இது தவிர ஆயிரக்கணக்கான பீரங்கிகள், டாங்குகள், விமானங்கள்... ஆசியாவில் தங்களது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த ஜப்பானிய ஏகாதிபத்தியம் இப்படையின் மீதுதான் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது.

1945 ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெற்ற போட்ஸ்டாம் மாநாட்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 முதல் சோவியத் யூனியன் ஜப்பானுக்கு எதிராக யுத்தத்தில் இறங்கும் என்று பிரகடனம் (ஆகஸ்ட் 8) செய்தது.  “...ஜெர்மனி அனுபவித்ததைப் போன்ற அபாயங்கள், பேரழிவுகளில் இருந்து தப்பிக்கவும் ஆன வாய்ப்பை ஜப்பானிய மக்களுக்கு அளிக்கவும் வல்ல ஒரே வழி இதுதான் என்று கருதுவதாகஅப்பிரகடனம் கூறியது.

ஆகஸ்ட் 9 அன்று உயர்மட்ட இராணுவ கவுன்சில் கூட்ட்த்தில் ஜப்பானியப்பிரதமர் கண்டாரோ கட்சுகி கூறியது: “இன்று காலையில் சோவியத் யூனியன் போரில் இறங்கியதானது, இனி மேற்கொண்டு நாங்கள் யுத்த்த்தை தொடர முடியாத நம்பிக்கையற்ற சூழலில் எங்களை தள்ளியுள்ளது”.
ஆகஸ்ட் 6 அன்று வீசப்பட்ட அணுகுண்டு பேரழிவுக்குப்பிறகும் ஜப்பான் போரைத் தொடரத்தான் உறுதியாக இருந்தது; நேசநாடுகளுக்கு எதிராக தனது இராணுவத்தை உபயோகப்படுத்துவதில் நம்பிக்கையும் உறுதியும் பூண்டு இருந்தது.  ஆனால் சோவியத்தின் போர்ப்பிரகடனம்தான் ஜப்பானைப் பின்வாங்கி சரணடைய செய்தது.  அவ்வாறானால் அமெரிக்கா அணுகுண்டு வீசவேண்டிய அவசியம் என்ன? அமெரிக்க அணுகுண்டுதான் நீண்ட போரை முடிவுக்கு கொண்டு வந்ததா?
ட்ரூமனும் அவரது இராணுவமும் வகுத்த திட்டம் இதுதான்: போட்ஸ்டாம் மாநாடு நடந்து முடிந்தவுடன் ஜப்பான் மீது ஒரு அணுகுண்டை வெடிப்பது; உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் சோவியத் யூனியனின் மகத்தான பங்கையும், தூரக்கிழக்கு நாடுகளில் சோவியத்தின் பங்கையும் இருட்டடிப்பு செய்வது, சிறுமைப் படுத்துவது; ஆனால் தட்பவெப்ப நிலை அல்லது தொழினுட்பக் காரணங்களால் இது தடைப்படும் எனில் ஜப்பானின் க்வாண்டுங் படைகள்  மீது சோவியத் தாக்குதலைத் தொடங்கும் முன்பாகவே முந்திக்கொண்டு ஜப்பான் மீது அணுகுண்டை வெடிப்பது.

இதற்கு மேலும் சந்தேகம் எழுப்புவோர்க்கு ட்ரூமன் தனது நாட்குறிப்பில் (டைரி) எழுதியதே சரியான சான்று. பெர்லினில் இருந்து (போட்ஸ்டாம் மாநாட்டில் இருந்து) புறப்பட்ட பின்னர் ட்ரூமன் தன் நாட்குறிப்பில் எழுதியது: “போட்ஸ்டாம் மாநாட்டில் நான் கற்றுக்கொண்ட்து என்னவெனில் ஜப்பானியருக்கு எதிரான போரில் அவர்களது (ரஷ்யாவின்) கை ஓங்கிவிட அனுமதிக்கக் கூடாது என்பதுதான். அடி கொடுத்தால் மட்டுமே அவர்கள் (ரஷ்யர்கள்) உணர்வார்கள்.

பிரிட்டனின் சர்ச்சில், அமெரிக்காவின் ஐசன்ஹோவர், மேற்கத்திய நாடுகளின் பிரபலப்புள்ளிகள் அனைவருமே ஒரு விசயத்தை ஒத்துக்கொள்கின்றார்கள் – அமெரிக்க மக்களைக் காப்பதற்காகவோ நீண்டகாலப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவோ ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்படவில்லை. ட்ரூமன் கூறிய பேரழிவு விளைவிக்கும் அந்தப் ‘புதிய ஆயுதத்தை’ (At Potsdam Conference, however, President Truman chose to tell Stalin only that the U.S. possessed "a new weapon of unusual destructive force - http://www.dannen.com/decision/potsdam.htmlகையில் ஏந்திக்கொண்டு முக்கியமாக சோசலிச சோவியத்தையும் உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டவும், தனது ஏகாதிபத்திய எல்லைகளை விரிவுபடுத்தவுமே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஜப்பானிய மக்களின்  விலைமதிப்பற்ற உயிர்கள் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரெஞ்சு அறிஞன் மாண்டெஸ்க்யூ, ஒரு ராணுவ சர்வாதிகாரி பற்றி இப்படிக் கூறினான்: அவன் நினைத்துக் கொள்கின்றான், வரலாற்றில் இருந்து அவன் பிரிக்கப்பட முடியாதவன் என்றுஎனவேதான் அவன் எங்கே நின்று விடுகின்றானோ அங்கேயே வரலாறும் முற்றுப்பெற்று விடுவதாக கற்பனையில் மிதக்கின்றான்”.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிட்லரும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது முடிவை இறுதியில் அவனேதான் தேடிக்கொண்டான். அமெரிக்காவின் அதிபர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள், தாங்கள் இயங்கும் போது இந்த உலகம் இயங்குவதாகவும், தாங்கள் நின்றுவிடும்போது இந்த உலகமும் நின்றுவிடுவதாகவும். ஹிட்லரின் வரலாற்றை அவர்கள் வாசிக்க வேண்டும்.

(புகைப்படத்தில் சர்ச்சில்,ரூஸ்வெல்ட்,ஜோசப் ஸ்டாலின்) 
(முற்றும்)

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே? (1)



ஆயிரம் சூரியன்கள் ஒரு சேர உதித்தனவோ? – ராபர்ட் ஓப்பன்ஹீமர் (அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைப்பற்றி அதிர்ச்சியடைந்து கூறியது)

“ராட்சத தீப்பந்து ஒன்று – ஒரு மைல் விட்டம் இருக்கும் – கிளம்பி மேலே மேலே சென்றது. தனது நிறத்தை மாற்றிக்கொண்டே சென்றது.  ஆழ் ஊதாவில் இருந்து ஆரஞ்சுக்கு. இன்னும் விரிந்து...விரிந்து...உயரே உயரே...பல நூறு கோடி வருடங்கள் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டிருந்த ஏதோ ஒரு சக்தி திடீரென விடுவிக்கப்பட்டதைப்போல் ஆவேசத்துடன் மேலே மேலே... இந்த பூமிதான் இரண்டாகப் பிளந்த்தோ? அல்லது வானம்தான் உடைந்து போனதா? இப்போது ஒரு மேகக்கத்தை புமியில் இருந்து புறப்பட்டு சூரியனை நோக்கி சென்றது, முதலில் ஒரு ராட்சத தூண் போலத்தான் இருந்தது, ஆனால் விரைவிலேயே இந்த உலகத்துக்கெல்லாம் கட்டுப்படாத ஒரு ராட்சதக்காளானாக  (Giant Mushroom) அவதரித்தது. பல கோடி வருடங்களானாலும் உருவாக்க முடியாத ஒரு பிரமாண்ட மலை ஒரு சில வினாடிகளில் உண்டானாற்போலும்...மேகங்களைக் கிழித்துக்கொண்டு இன்னும் மேலே, நாற்பத்து ஓராயிரம் அடி உயரத்தை தொட்டது – இவ்வுலகின் மிக உயர்ந்த மலைச்சிகரத்தை விடவும் கூடுதலாக பன்னிரெண்டாயிரம் அடி அதிக உயரத்தைத் தொட்டு நின்றது. இவை யாவும் அமைதியாக மிக அமைதியாக நடந்தேறின. அதன் பின்னர்தான் அந்த இடிச்சத்தம் எழுந்தது – ஆயிரமாயிரம் கோர வெடிகுண்டுகள் ஒருசேர எழுந்து வெடித்தாற்போல்... – முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை 1945 ஜூலை 16 காலை 5.30 மணிக்கு நட்த்தப்பட்டது. இடம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனம், அல்மோகோர்டோ விமானத்தளம். இதனை நேரில் பார்த்து எழுதுவதற்காக பெண்டகான் நிர்வாகத்தால் வரவழைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் வில்லியம் லாரென்ஸ் என்பவர்தான் மேலே கூறப்பட்டதை எழுதினார்.

இந்த அணுவெடிச்சோதனைக்காக அமைக்கப்பட்டிருந்த முப்பது மீட்டர் எஃகு கோபுரம் காற்றில் கரைந்து போனதாம்! இத்திட்டத்துக்கு மான்ஹாட்டன் திட்டம் என்று பெயர். இதன் முக்கிய ஆலோசகர் விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர் இச்சோதனையின் பேரழிவுசக்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படிக்கூறினாராம்: நான்தான் மரணம் – உலகங்கள் யாவற்றையும் அழிப்பவன்” (I am become Death, destroyer of the worlds). இவ்வாசகம் பகவத்கீதையில் உள்ள வாசகம்.

இப்பேரழிவு சாதனமான அணுகுண்டை ஆகஸ்டு 6,9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் வீசியதன் மூலம் மனிதகுலத்தின் ஆகப்பெரும் முதல் நாசத்தை அமெரிக்கா தொடங்கி வைத்தது.
அணுகுண்டு வீச வேண்டிய அவசியம் நிச்சயம் இருந்ததா? அல்லது அமெரிக்காவின் அணுகுண்டு மட்டுமே நீண்ட ஐந்து வருடங்களாக நடந்து வந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததா? இல்லையேல் எதனால் யாரால் முடிவுக்கு வந்த்து?

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள்,போட்டிகளின் காரணமாகப் பிறந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை சோவியத்தின் செஞ்சேனையையே சாரும். 1945 மே 8 அன்று, நாஜி ஜெர்மனி சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. ஜெர்மனியின் ரீச்ஸ்டாக் மாளிகையின் உச்சியில் பாட்டாளிவர்க்கத்தின் செங்கொடி உயரப்பறக்கவிடப்பட்டது.

இதற்கு முன்னரே 1944ஆம் ஆண்டு ஆல்சோஸ் எனப் பெயரிடப்பட்ட திட்டமொன்று, ஜெர்மனியிடம் அணுகுண்டு உள்ளதா என்று கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவால் நிறுவப்பட்ட்து. சாமுவேல் கவுட்ஸ்மிட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான இக்குழு, ஜெர்மனியிடம் அணுகுண்டு இல்லை என்ற முடிவுக்கு வந்த்து.
புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், லியோசிலார்ட், நீல்ஸ்போர், வானெவர் புஸ், ஜேம்ஸ் கானண்ட், பொருளாதார நிபுணர் அலெக்சாண்டர் சாக் ஆகிய அனைவருமே அணு ஆயுத உபயோகத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்கள். நீல்ஸ்போர், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டையும், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் நேரில் சந்தித்து புதிய ஆயுதத்தை மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஜெர்மனியை சரணடையுமாறும் வேண்டினார்.

பெரும்போரைத் தொடங்கிய (அணுகுண்டு எதும் இல்லாத) ஜெர்மனி சரணாகதி அடைந்த பின் – அல்லது ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்கூட போரைத்தொடங்கிய நாஜி ஜெர்மனி மீதுதானே குண்டு வீசியிருக்க வேண்டிய அணுகுண்டை - ஆசியப்பகுதியில் ஜப்பான் மீது வீசி ஐந்து லட்சம் மக்களை ஏன் கொல்ல வேண்டும்? வரலாற்றில் இக்கேள்விக்கான பதில் உள்ளது, அப்பதிலில் நீண்டகால அரசியல் உள்நோக்கத்தை உள்ளடக்கிய காரணம்  உள்ளது.

பிரிட்டிஷ் பேராசிரியர் ப்ளேக்கெட் கூறினார்: இந்த குண்டு வீச்சுக்கள் இரண்டாம் உலகப்போரின் கடைசி ராணுவ நடவடிக்கையாக இருக்கவில்லை; மாறாக சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான (அமெரிக்க) ராஜதந்திர கெடுபிடி யுத்த்த்தின் முதல் நடவடிக்கையாகவே இருந்தன.

1945ஆம் ஆண்டு சீனாவில் அமெரிக்க ஜெனரல் சேனல்ட், நியூயார்க் டைம்ஸ் (15.8.1945) பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணல்: “ஜப்பானுக்கு எதிரான யுத்தத்தில் சோவியத் யூனியன் இறங்கியதென்பது, பசிபிக் சமுத்திரத்தில் யுத்தம் முடிவுக்கு வருவதை துரிதமாக்கிய  தீர்மானகரமான காரணியாக அமைந்தது.  அணுகுண்டுகள் வீசப்படாமல் இருந்திருந்தாலும் கூட யுத்தம் நிச்சயம் முடித்திருக்கும்.  சோவியத் செஞ்சேனை ஜப்பான் மீது தொடுத்த உறுதியான தாக்குதல்தான் முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, ஜப்பானை மண்டியிட செய்தது.

சோவியத் ரஷ்யாவை நாஜிகள் தாக்கியபோது அப்போது அமெரிக்க செனட்டரான இருந்த ஹாரி ட்ரூமன் கூறினார்: “ஜெர்மனி இப்போரில் வெற்றி பெற்றால் நாம் ரஷ்யாவுக்கு உதவி செய்வோம்; ரஷ்யா வெற்றி பெற்றால் நாம் ஜெர்மனிக்கு உதவி செய்வோம். எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகட்டும்-எவ்வளவு முடியுமோ அவ்வளவு”. அமெரிக்க விசுவாசிகள் ட்ரூமனின் இந்தக்கேவலமான எண்ணத்துக்கு பதில் சொல்லவேண்டும்.  ரூஸ்வெல்ட் 1945 ஏப்ரல் 12 அன்று இறக்கின்றார், தொடர்ந்து ட்ரூமன் ஜனாதிபதி ஆகின்றார். ஜூலை 16 அன்று முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்படுகின்றது.

1945 ஜூலை 24க்குப் பிறகு சோவியத் தலைவர் ஸ்டாலினுக்கு ட்ரூமன் ஒரு கடிதம் எழுதுகின்றார். அமெரிக்கா ஒரு ‘புதிய ஆயுதத்தைகண்டுபிடித்துள்ளதெனவும் அது அசாதாரணமான பேரழிவு சக்திகொண்டது எனவும் கூறுகின்றார்.  ஆனால் ஸ்டாலின் இக்கடிதம் பற்றி மேற்கொண்டு எக்கருத்தும் கேட்டுக்கொள்ளாமல் மவுனமாக இருந்து விடுவது கண்டு ட்ரூமன் அதிர்ச்சி அடைகின்றார்.  ஸ்டாலின் நடப்பது என்ன என்று ஊகித்துக் கொண்டவராக அன்று மாலையே சோவியத் அணுசக்தி ஆராய்ச்சியை துரிதப்படுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு ஆணை இடுகின்றார்.

...2

வெள்ளி, ஜூலை 27, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 6)



உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற சர்வதேசப் பெருநோய்களின் பிறப்பிடமாக அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி போன்ற ஏகாதிபத்திய சாக்கடைகள் உள்ளன. உண்மையில், பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் எங்கெல்லாம் தமது காலனிககளை ஏற்படுத்தி இருந்தனவோ அந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஓகோவென நிகழ்ந்து 'அந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆள்கின்றார்கள்! சூப்பர் ஜனநாயகம் பாரீர்!' என்பதெல்லாம் கடைந்தெடுத்த டூப் என்பதை வரலாறு தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றது. தொடர்ந்து இந்த நாடுகளில் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய, சர்வதேச முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருப்பதை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க, மூன்றாம் உலக நாடுகள் மட்டும் அல்ல, நரசிம்மராவ் தொடங்கி மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, கடப்பாரை அத்வானிஜி, சாஃப்ட்மேன் வாஜபேயிஜி, காங்கிரஸ், பாரதீய ஜனதா, இவர்களது தொங்குசதைகளும் உள்ளூர் ஏஜெண்டுகளும் ஆன உதிரிக்கட்சிகள் எல்லோரும் சர்வதேச முதலாளிகளின் ஏவலாளிகளே. இவர்களின் கைவிரல் அசைவுக்கு காத்திருந்து சேவகம் செய்யவே போலீஸ், ராணுவம், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புக்கள்.

ஹோண்டா முதலாளி விட்டெறிந்த காசைப் பொறுக்கிக் கொண்டு, ஹோண்டா தொழிலாளிகள் மீது கற்பனை செய்ய இயலாத காட்டேறித்தாக்குதலை நடத்திய ஹா¢யானா மாநில அரசையும் அதன் போலீசையும் எப்படி அழைப்பது? சென்னைப்புறநகா¢ல் பெரும் பரப்பளவில் அமைந்துள்ள ஹ¥ண்டாய் தொழிற்சாலையில் நிரந்தரத்தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு, பெரும் பகுதி கான்ட்ராக்ட் தொழிலாளர்களே. இவர்கள் இந்தியாவின் புனிதமான சட்டங்களுக்கு உட்பட்டு தொழிற்சங்கம் தொடங்குவது கூட நிர்வாகத்துக்கு கசக்கின்றது; அவர்களை டிஸ்மிஸ் செய்கின்றது. போலீசை ஏவி அடிக்கின்றது, சிறையில் அடைக்கின்றது.

தமிழ் மக்களின் தானைத்தளபதி, உண்மையில் கொரிய நாட்டு முதலாளியின் படைகளுக்கு லோக்கல் தளபதியாக இருக்கின்றார் என்பது தொடர்ந்து மெய்ப்பிக்கப்படுகின்றது. இவையன்றி, பெப்சி, கோககோலா போன்ற ஏகாதிபத்திய பானங்களில் விசமருந்துகள் இருப்பதாக மெய்ப்பிக்கப்பட்ட பின்னரும் கூட மைய அரசு இந்தியாவில் அவற்றை அனுமதித்திருக்கின்றது எனில், மைய அரசு யாருடைய ஏவலாளாக இருக்கின்றது?

25 வருடங்களுக்கு முன்பு போபாலில் நடந்த மீதைல் ஐசோ சயனைட் என்ற விசவாயுக்கசிவு விபத்தால் (?) ஆயிரக்கணக்கான மக்கள் செத்து விழுந்தனர். குற்றவாளியானஅமெரிக்க கம்பெனியான யூனியன் கார்பைட் கம்பெனி மீது பெரிய வழக்கெல்லாம் போட முடியவில்லை. நைஜீரிய மக்களுக்கு இருக்கின்ற மான உணர்ச்சி, சூடு, சொரணை, கோபம் மிகப்பெரிய இந்திய அரசுக்கு இல்லை.
கடந்த ஐந்து வருடங்களாக "இடதுசாரிகள் ஆதரவிலான ஒரு அரசு" என்பதை சகித்துக்கொள்ள முடியாமல், தொண்டையிலேயே இருந்த கசப்பு மருந்து போல, ஆனால் துப்பவும் முடியாமல் எரிச்சலுடன் காலத்தை தள்ளியது காங்கிரஸ். நினைத்தபடியெல்லாம் பொதுத்துறையை விற்பது, அமெரிக்கா இருக்கும் திசையைப் பார்த்து தூங்கும்போதும் கும்பிட்டபடியே இருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இடதுசாரிகள் 'சொட்டை, சொள்ளை' என்று 'குறை' சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, அத்வானி, வாஜபேயி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கும்பலுக்கும், இவர்களுக்குள் உறவுப்பாலமாக விளங்கும் அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், அவர்களது எஜமானன் ஆன அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி ஆகிய சர்வதேச கொள்ளையர்களுக்கும் இது மிகப்பெரும் எரிச்சலாகவே இருந்தது. இடதுசாரிகளை ஒழித்துக்கட்டவும், குறைந்த பட்சம் அவர்களது செல்வாக்கையாவது குறைக்கவும், லஞ்சலாவண்யத்தில் சிக்காதவர்கள் என்ற நல்ல பெயரைக் களங்கப்படுத்தவும் என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் இந்த கும்பல் கூட்டுச் சேர்ந்து செய்து வருகின்றது. கேரளாவில் ஊழல் புகார், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுக்கள்+மம்தா பானர்ஜி+காங்கிரஸ்+பா.ஜ.க. கூட்டணி போன்றவை எல்லாம் தற்செயலாக திடீர் என நடப்பவை அல்ல என்று உறுதியாகக் கூற முடியும். 

இப்போது தனிப்பலத்துடன் ஆட்சியில் ஏறியுள்ள காங்கிரஸ், தனது எஜமானுக்கு விசுவாசமாக இட்ட கட்டளைகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஜூலை மாதம் வரும் பட்ஜெட் இதை உறுதிப்படுத்தும். எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் வீதியில் வைத்து ஏலம் விடப்படும்; ஷெல் போன்ற கம்பெனிகளை நிறையப் பார்க்க முடியும்; அடிப்படை ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் மேலும் நசுக்கப்படும். ஹோண்டா, ஹூண்டாய் போல் பல சம்பவங்கள் நிகழலாம்; பல்வேறு கென் சாரோக்களை நாம் இங்கே பலிகொடுக்க நேரலாம். ஷெல் போன்ற கம்பெனிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நமது ஆட்சியாளர்களுக்கு ஏராளமாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்; நமக்கோ நைஜீரிய டெல்டா ஓகோனி மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளன.







(முற்றும்)

ஞாயிறு, ஜூலை 22, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம்-5)



இதற்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷெல் நானூறு கோடி டாலர் மதிப்பிலான திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை நைஜீரியாவில் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை நைஜீரிய அரசுடன் செய்து கொண்டது.

சிறையில் இருந்தபோது சாரோ விவா இப்படி கூறியிருந்தார்: "எந்தவிதமான சலசலப்பும் இன்றி 'அமைதியாக' தமது எழுத்துப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நேற்கத்திய எழுத்தாளர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். ஒரு எழுத்தாளன் சும்மா ஒரு கதைசொல்லியாக மட்டுமே இருந்துவிட முடியாது; சமூகத்தின் பலஹீனங்கள், கேடுகள், துயரங்களை அப்படியே எக்ஸ்-ரே எடுத்துக்காட்டுவதோடும் ஒரு எழுத்தாளனின் பணி முடிந்துவிடுவதில்லை. ஒரு எழுத்தாளன், ஆணோ பெண்ணோ, இன்றைய சமூகத்தை மட்டுமல்ல, நாளைய சமூகத்தையும் சீர்படுத்தும் பணியில் களத்தில் நின்று போராடுபவனாக இருக வேண்டும்".

சாரோ உள்ளிட்ட ஒன்பது ஓகோனியர்களைக் கொன்றதுடன் தனக்கு எதிரான குரல்களை அடக்கிவிட்டதாக ஷெல் நினைத்தது, ஆனால் வரலாறு கார்ப்பொரேட்டுக்களால் மட்டுமே எழுதப்படுவதில்லையே! அடிப்படை உரிமைகளுக்கான மையம் (Centre for Constitutional Rights - CCR), புவிக்கான சர்வதேச உரிமைகள் கழகம் (Earth Rights International-ERI) போன்ற அமைப்புக்களும் மனித உரிமைகளுக்கான பிற அமைப்புக்கள், ஆர்வலர்களும், 1996 தொடங்கி ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சர்வதேச அளவில் நடத்தி பிரச்சாரம் செய்துவந்தார்கள். கொல்லப்பட்ட சாரோவின் இரண்டு மகன்களும் இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து ஷெல்லின் சதிகள், ஓகோனி மக்களின் வாழ்க்கை பறிப்பு என அனைத்தையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார்கள். கடந்த மே மாதம் PEN என்ற சர்வதேச எழுத்தாளர் அமைப்பு நடத்திய கூட்டத்தில், சாரோவின் மகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்: "ஷெல் கம்பெனியின் கைரேகைகள் (தந்தையின்) விசாரணை எங்கிலும் படிந்திருந்தன; வழக்கு விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லஞ்சலாவண்யம் உட்பட, ஷெல் கம்பெனி செய்தது என்பது உறுதி."

பதினான்கு ஆண்டுகள் நீண்ட போராட்டங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் பிறகு, அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ராயல் டச்சு ஷெல் கம்பெனிக்கு எதிரான, கென் சாரோ உள்ளிட்ட கொல்லப்பட்ட ஒன்பது பேர், மற்றும் பாதிக்கப்பட்ட ஓகோனி மக்கள் அனைவர் சார்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்கு, 2009 மே 26 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விசாரணையை எப்படியாகிலும் நிறுத்திவிட வேண்டும் என ஷெல் வழக்கம் போல தலைகீ£ழாக நின்றது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக, இணையதளங்களின் தகவல்படி, ஒரு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம் டாலர் (சுமார் எழுபத்தொரு கோடி ரூபாய்) இழப்பீட்டுதொகை அளிப்பதாக ஷெல் ஒத்துக்கொண்டுள்ளது. ஷெல்+நைஜீரிய ராணுவக் கூட்டணியின் கொலைபாதக தாக்குதல்களால் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்த ஓகோனிய மக்களுக்கு இழப்பீடாக மட்டுமின்றி, சர்வதேச கம்பெனியான ஷெல், நைஜீரியாவின் இயற்கைவளங்களை அழித்து சுடுகாடாக ஆக்கி, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேட்டை விளைவித்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காகவும் இந்த அபராதத்தொகையை ஷெல் செலுத்துகின்றது என்பது முக்கியமானதாகும்.

1996இல் இந்த வழக்கைத்தொடுத்த அடிப்படை மனித உரிமைகளுக்கான மையத்தின் வழக்கறிஞர் ஜெனீ க்¡£ன், "தாங்கள் நினைத்தபடியெல்லாம் நாடுகடந்து கொள்ளையடிக்கலாம், கண்ணை மூடிக்கொண்டு சுற்றுச்சூழலை நாசமாக்கலாம், அடிப்படை மனித உரிமைகளை மீறலாம், எவனும் கேட்கமாட்டான் என்ற சர்வதேச பகாசூரக் கம்பெனிகளின் அலட்சிய நடத்தைகளுக்கும் அநியாயங்களுக்கும் இந்த வழக்கும் இழப்பீடும் ஒரு பாடமாக, ஒரு அடியாக அமைந்ததால் இந்த வழக்கு உண்மையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கின்றார். ஷெல் போன்ற எல்லைகடந்த கொள்ளை முதலாளிகளுக்கு எதிராக வழக்குத்தொடுத்து வெற்றி பெறவும் முடியும் என்பதையும் சொல்ல வேண்டும். அது மந்திரத்தால் நடக்காது, சாமானிய ஓகோனி மக்களும் அறிவுஜீவிகளும் ஒன்றிணைந்து மனம் தளராமல் முன்னெடுத்துச் சென்ற போராட்டம்தான் இறுதி வெற்றியைத் தந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இழப்பீட்டுத்தொகையில் 50 லட்சம் டாலர் தொகையில் கிஷி (kissi) (முன்னேற்றம்) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நைஜர் டெல்டாவில் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இன்றைய தேதியில் ஓகோனியில் தனது எண்ணெய் ஆலைப் பணிகளை ஷெல் நிறுத்தி வைத்துள்ளது; ஆனால் தென்கிழக்கு நைஜீரியாவில் தனது எண்ணெய் எடுக்கும் வேலைகளை பரந்த அளவில் செய்துகொண்டுதான் இருக்கின்றது.




ஷெல் என்ற சர்வதேச பகல்கொள்ளையனுக்கு எதிரான ஓகோனி மக்களின் போராட்டம் சுபமாக முடிந்தது என்ற  ரீதியில் 'இது ஒரு நல்ல கதை' என்று நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர முடியாது.

...6

திங்கள், ஜூலை 16, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 4)


நைஜீரிய மக்களின் எதிர்ப்பும் இயக்கங்களும்:
சர்வதேச எண்ணெய்க்கம்பெனிகள், குறிப்பாக ஷெல், தமது வாழ்வை முற்றிலும் நாசமாக்கிவிட்டதை உணர்ந்த ஓகோனி மக்கள் தமக்கான உரிமைப்போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1990ஆம் ஆண்டு மோசோப் இயக்கத்தைத் தொடங்கினார்கள் (Movement for the Survival of the Ogoni People - ஓகோனி மக்கள் உயிர்வாழும் உரிமைக்கான இயக்கம்). 1993ஆம் ஆண்டில் ஓகோனி மக்களில் பாதிப்பேருடைய ஆதரவு இந்த இயக்கத்துக்கு கிடைத்தது. இந்த இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர் கென் சாரோ-விவா (Kennule Beeson Saro-Wiwa). 1941 அக்டோபர் 10ஆம் நாள் பிறந்தவர். எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பல நூல்களின் ஆசிரியர், குறிப்பாக நைஜீரிய மக்களின் வரலாறு குறித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் ஓகோனி மக்களின் வாழ்க்கை நாசமானது குறித்தும் நிறையவே நூல்கள் எழுதினார்.

1993 ஜனவரியில் மூன்று லட்சம் ஓகோனி மக்களைத் திரட்டிய சாரோ-விவா, "எண்ணெய்க்கம்பெனிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; கடந்த காலத்தில் செய்த நாசங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்; (நைஜர் டெல்டாவில் சம்பாதித்த) வருமானத்தில் ஓகோனி மக்களுக்கான பங்கைத் தர வேண்டும்; மத்தியில் (உள்ள அரசுக்கு மாற்றாக) அரசியல் சுயாட்சி வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் வன்முறையற்ற ஊர்வலம் ஒன்றை நடத்தினார்.


ஷெல்லும் நைஜீரிய அரசாங்கமும் கைகோர்த்து இந்த இயக்கத்தை நசுக்கவும் சாரோவை எப்படியாவது சிறையில் தள்ளவும் சதி செய்தனர். ஷெல் கம்பெனியின் வீட்டு வேலையாட்கள் போல் ராணுவமும் போலீசும் கேவலமாக நடந்து கொண்டன. ராணுவத்துக்கு பணமும் வாகன வசதிகளும் ஆயுதங்களும் துப்பாக்கி ரவைகளும் கூட ஷெல் கம்பெனி வாங்கிக்கொடுத்ததாக மிகப்பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன, சாட்சிகளோடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஷெல்லின் எச்சிலிலையைப் பொறுக்கித்தின்ற அரசு ஷெல்லுக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டது. மோசோப் இயக்கம் தொடர்ந்து வலுப்பெறவே, இந்த கிரிமினல் கூட்டணி, மோசோப்புக்கு எதிரான பொய்ப்பிரசாரத்திலும் இறங்கியது. சாரோவும் மோசோப்பும் ஆட்கடத்திகள், விமானக்கடத்திகள், வன்முறையாளர்கள் என்று பிரச்சாரம் செய்தது. எதுவும் எடுபடாததால் சாரோ உள்ளிட்ட 'ஒன்பது ஓகோனியர்களை' (Ogoni Nine) (கென் சாரோ-விவா, இளைஞர் தலைவர் ஜான் பூனன், டாக்டர் பாரினெம் கியோபெல், சாட்டர்டே டூபீ, நோர்டு எவோ, டேனியல் போக்கூ, பால் லீவரா, ஃபெலிக்ஸ் நுவேட், பாரிபோர் பேரா) படுகொலை செய்ய ஷெல்+அரசு கூட்டணி சதித்திட்டம் தீட்டியது.

1993இன் தொடக்கத்தில், ஓகோனி வழியாக, அதாவது மக்கள் குடியிருப்பு, வயல்கள் வழியாக, ஒரு எண்ணெய்க்குழாயைக் கொண்டு செல்லும் வேலையை நைஜீரிய ராணுவத்தின் துணையோடு ஷெல் செய்தது. காராலூலு கோக்பாரா என்ற பெண்மணியின் வயலில் விளைந்திருந்த தானியங்களை புல்டோசர் கொண்டு அழித்தபோது அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்தார். உடனடியாக ராணுவம் சுட்டதில் அவரது ஒரு கை பலத்த சேதமானது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

1994இல் சாரோவின் சகோதரான ஓவன்ஸ் விவா மீது பொய்க்குற்றம் சுமத்தி பல முறை அவரை சிறையில் தள்ளி, அடித்து உதைத்தனர். மைக்கேல் வைசர் மீது அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டதாக 'குற்றம்'சாட்டி சிறையில் தள்ளினர்; அவரது மகளை வன்புணர்வு செய்தனர். பல பொய்க்குற்றங்களை ஒத்துக்கொள்ளுமாறு அவரை சித்ரவதை செய்தனர். அவரது மகன் அவருக்கு உணவு கொண்டுவந்தபோது அவரையும் அடித்து உதைத்தனர்.

1994இல் கென் சாரோ உள்ளிட்ட தலைவர்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் அதே கூட்டத்தில் நான்கு ஓகோனிய தலைவர்களை ஷெல்+ராணுவக்கூட்டணி கொன்றது. வேடிக்கையாக, இவர்கள் சாவுக்கு சாரோதான் காரணம் என ராணுவ கவர்னர் அறிவித்து, சாரோவையும் பிறரையும் சிறையில் தள்ளினார். இதையே சாக்காக வைதுக்கொண்டு ஓகோனியில் 60 நகரங்களில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி மோசோப் உடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தி பல நூறு பேரை சித்ரவதை செய்தது.

மூன்று நபர் விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்தது. இந்த மூன்று பேரும் எச்சக்கலை நாய்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமது தரப்பு வாதங்களை முன்வைக்கக்கூட ஒன்பது பேருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை, அத்தனை அவசரம் ஷெல்+ராணுவக்கூட்டணிக்கு. வழக்கு விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஷெல் பின்னால் இருந்து இயக்கியது. சாரோவையும் மோசோப்பையும் ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று அரசு தனது எஜமானன் ஆன ஷெல்லுக்கு உறுதி அளித்திருந்தது. வழக்கு விசாரணைக்கு முன்பாகவே, ஷெல் தனது தலைமை அலுவலகத்துக்கு இவ்வாறு உறுதி அளித்திருந்தது: "சாரோ தண்டிக்கப்படுவார், உயிருடன் திரும்பமாட்டார்". சாட்சிகளிடமே கூட நேரடியாக ஷெல் இப்படி சவால் விடுத்திருந்ததாக சாட்சிகள் கூறினார்கள். உச்சகட்டமாக, அன்றைய நைஜீரிய ராணுவ சர்வாதிகாரி சானி அபாகாவை ஷெல் அதிகாரிகள் நேரே சந்தித்து விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என கட்டளை இட்டிருந்தார்கள். வெளிநாட்டு வழக்கறிஞர் வாதாடுவதற்கான விசேச சட்டத்தின் கீழ் ஷெல்லின் வழக்கறிஞரே கடல்கடந்து வந்து ஷெல்லுக்காக வாதாடினார் (எல்லாமே ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை என்பதை சொல்ல வேண்டியதில்லை). ஷெல்லின் நைஜீரிய மானேஜிங் டைரக்டர் பிரியன் ஆண்டர்சன், சாரோவின் சகோதரர் ஓவன்ஸ் விவாவிடம், "ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை உங்கள் சகோதரர் நிறுத்தினால் அவரை விடுதலை செய்ய எங்களால் முடியும்" என்று பேரம் பேசினார். விசாரணையில் சாரோவுக்கு எதிராக சாட்சியம் சொன்ன இரண்டு பேர், "ஷெல் வழக்கறிஞர் முன்னால் தங்களுக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும், ஷெல் கம்பெனியில் வேலை தரப்படும் என்று ஆசைவார்த்தை காட்டப்பட்டதாகவும், இதனால் சாரோவுக்கு எதிராக தாங்கள் சாட்சியம் அளித்ததாகவும்" பின்னர் ஒப்புக்கொண்டனர்.

விசாரணையின்போது கென் சாரோ-விவா உறுதிபடக் கூறினார்: "இறுதித்தீர்ப்பு நாள் வந்தே தீரும்; ஓகோனி மக்களுக்கு எதிராக ஷெல் செய்த கொலைபாதகங்களுக்கு ஷெல் பதில் சொல்லும் நாள் வந்தே தீரும்; ஷெல் தண்டிக்கப்படும்." இறுதியில் 1995 நவம்பர் 10 அன்று 'ஓகோனியர் ஒன்பது' பேரும் தூக்கில் போடப்பட்டனர். பணம் பாதாளம் மட்டும் பாயும், கார்ப்பொரேட் பணம் தூக்குமேடை வரையும் பாயும். சாரோவின் உடலை அமிலம் ஊற்றி எரித்த ராணுவம், எஞ்சிய உடலை அடையாளம் தெரியாத இடத்தில் வீசி எறிந்தது.

இதற்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு...


...5