வெள்ளி, ஜூலை 21, 2023

மணிப்பூர்: பின்னோக்கிய பார்வையும் கலவரங்களுக்கான காரணங்களும்

 

1

வடகிழக்கு மாநிலங்கள் ஏழு. ஏழு சகோதரிகள் அதாவது seven sisters என அழைக்கப்படும் ஏழு மாநிலங்கள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி அசாம், திரிபுரா, மணிப்பூர், சிக்கிம் ஆகியவற்றில் இந்து மத மக்கள் பெரும்பான்மையினர்; மேகாலயா, நாகாலாந்து, மிஜோரம், அருணாசல பிரதேஷ் ஆகியவற்றில் கிறித்துவ மக்கள் பெரும்பான்மையினர். அசாமில் குறிப்பிடத்தக்க அம்சம் அங்கே மட்டும் ஒரு கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள், அதாவது வட கிழக்கின் 93% இஸ்லாமிய மக்கள் அசாமில் வாழ்கின்றனர். 

இந்தியாவின் கிறித்துவ மக்களில் 30% பேர் வடகிழக்கு மாநிலங்களில்தான் வாழ்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க அளவில் புத்த மத மக்கள்

திரிபுரா, சிக்கிம், அருணாசல பிரதேஷ், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் வாழ்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் ஏறத்தாழ 50 சிறுபான்மை இனக்குழுக்களும், 10 பெரும்பான்மை இனக்குழுக்களும் உள்ளன என்று சொல்லப்பட்டாலும் அது சரியான கணக்கும் அல்ல, ஏனெனில் நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. 

பேராசிரியர் பிபன் சந்திரா எழுதிய India after Independence 1947-2000 (1999, Penguin)

என்ற நூலில் கூறுகிறார்: "1971 மக்கள்தொகை கணக்கின்படி இந்திய மக்கள்தொகையில் நானூறுக்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் இருந்துள்ளன. அன்றைய கணக்கின்படி 38 மில்லியன் அதாவது 3 கோடியே 80 லட்சம் பழங்குடி மக்கள் இருந்துள்ளனர். அதாவது அன்றைய மக்கள்தொகையில் 6.90 விழுக்காடு.

பழங்குடி மக்கள் மத்திய பிரதேசம், பிஹார், ஒரிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகியமாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில்தான் ஒட்டுமொத்த வடகிழக்கு மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தார்கள். மலைகளிலும் காடுகளிலும் வசித்த பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்க்கை கூறுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், அன்றாட வாழ்வியல் ஆகிய அனைத்தும் பிற மக்களின் அதாவது பழங்குடியினர் அல்லாத மக்களின் வாழ்க்கை கூறுகளில் இருந்து பெரிதும் மாறுபட்டவை.

இந்த அடிப்படையான முக்கியமான மானுடவியல் கூற்றினை, விஞ்ஞான அடிப்படையில் ஆன உண்மையை, சமூக வரலாற்றை எவர் ஒருவர் புரிந்துக்கொள்ள முற்படுகிறாரோ, புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்கின்றாரோ அவரால் மட்டுமே பழங்குடி மக்களின் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மக்களின் வாழ்வியலை, அரசியல் பொருளாதார நிலையை அல்லது மாற்றங்களை புரிந்துகொள்ள முடியும், சரியான கோணத்தில் அணுக முடியும்.

1952இல் பிரதமர் நேரு இவ்வாறு எழுதினார்: வடகிழக்கு எல்லைப்பிரதேசம் ஆனது அரசாங்கங்களின் சிறப்பு கவனத்திற்கு மட்டுமே உட்பட்டது அல்ல, மாறாக இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட கவனத்துக்கும் உரியதாகும். அந்த மக்களுடன் நமது தொடர்பானது நமக்கு அதாவது எஞ்சிய பகுதி இந்திய மக்களுக்கு நன்மைபயக்கும் என்பதுடன் வடகிழக்கு பிரதேச மக்களுக்கும் நன்மை பயப்பதாகும். இந்தியாவின் கலாச்சார வல்லமைக்கும் கலாச்சார பன்முகத்தன்மைக்கும் வளமைக்கும் வடகிழக்கு பிரதேச மக்கள் சிறப்பான பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்கள்".

நேருவின் இந்தப் பார்வையை அரசியலமைப்பு சட்டத்தின் ஆறாவது செட்யூலில் நம்மால் உணர முடியும். ஆறாவது செட்யூல் அசாமின் பழங்குடி மக்களுக்கு மட்டுமே பொருந்தியதாகும். பழங்குடி மக்கள் தம்மைத்தாமே ஆண்டுகொள்ளும் உரிமையை வழங்குகிறது; சுயாட்சி பெற்ற மாவட்டங்கள், மாவட்ட-பிரதேச கவுன்சில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு அவை அசாம் மாநில சட்டமன்ற அதிகாரத்தை மீறாத வகையில் சில சட்டங்களையும் நீதி நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கிக் கொள்ள வகை செய்தது.

நேருவின் இந்த அணுகுமுறைகள் அசாமின் எல்லைப்பிரதேசங்களை உள்ளடக்கிய North East Frontier agency அதாவது NEFA 1948இல் உருவாகக்காரணமானது. அது ஒரு யூனியன் பிரதேசமாக தனிப்பட்ட நிர்வாக அமைப்புக்கு உட்பட்டு இருந்தது. 1987இல்தான் NEFA ஆனது அருணாசல பிரதேசம் ஆக மாறி தனிமாநிலம் ஆனது.

இதன் பிறகு அசாம் மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த பழங்குடி மக்களுக்கும் சமவெளிப்பகுதிகளில் இருந்த அசாம், வங்காளி மக்களுக்கும் இடையே பிரச்னைகள் தோன்றின, முக்கிய காரணம்: பழங்குடி மக்களின் கலாச்சார பழக்க வழக்கங்களும் அசாமிய, வங்காள மக்களின் கலாச்சார பழக்கவழக்கங்களும் ஒத்துபோகவில்லை. தமது தனிப்பட்ட கலாச்சார அடையாளங்கள் மறைந்து விடுவதாக, அல்லது பழங்குடி அல்லாத மக்களால் அழிக்கப்படுவதாக பழங்குடி மக்கள் அச்சம் அடைந்தார்கள்.

இப்பிரச்சினை பெரிதாகி 1950களின் நடுவே தமக்கான தனிப்பட்ட மலையக மாநிலம் வேண்டும் என்று பழங்குடியினரின் ஒரு பிரிவினர் கோரிக்கை எழுப்பினார்கள். ஆனால் மிக வலிமையாக இக்கோரிக்கை வற்புறுத்தப் படவில்லை, ஒன்றிய அரசு இக்கோரிக்கையை கண்டுகொள்ளவும் இல்லை. தொடர்ந்து அசாம் மாநிலத்துக்குள்ளேயே பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர்.

1960இல் ஒரு திருப்பமாக அசாமிய தலைவர்கள் ஒன்றுகூடி அசாமிய மொழிமட்டுமே மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைக்க, மலைப்பிரதேசத்தின் பல அரசியல் கட்சிகள் ஒன்று கூடி  All party hill leaders conference (APHLC) என்ற ஒற்றை அமைப்பின் கீழ் திரண்டு இந்திய அரசுக்குள்ளேயே தமக்கான தனிப்பட்ட மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.

போராட்டங்கள், கடை அடைப்பு என பழங்குடி மக்களின் கோரிக்கை தீவிரம் அடைந்தது. 1962 சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்த பழங்குடி மக்களின் தலைவர்கள்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வென்றனர்! அசாம் சட்டமன்றத்தை புற க்கணிப்பதாகவும் அவர்கள் பிரகடன்ம்செய்தார்கள். 

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன, இது குறித்து விவாதித்துமுடிவு செய்ய பல கமிஷன்கள், கமிட்டிகள் நியமிக்கப்பட்டன.

1969இல் அரசியமைப்புசட்டம் திருத்தப்பட்டது. அசாமுக்குள் ஒரு மாநிலமாக மேகாலயா உருவாக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களை மறு வரைவு செய்யும் திட்டத்தின் கீழ் 1972இல் மேகாலயா தனி மாநிலம் ஆனது.  Garo, Khasi, jaintia பழங்குடி மக்களை உள்ளடக்கியது மேகாலயா.

தொடர்ந்து மணிப்பூர், திரிபுரா ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக உருவாகின.

...

2

மணிப்பூரின் எல்லைகள்: வடக்கில் நாகாலாந்து, தெற்கில் மிஜோரம், மேற்கில் அசாம், கிழக்கில் பர்மாவின் (மியான்மர்) Sagaing பிரதேசமும் அதே தென்கிழக்கில் பர்மாவின் ச்சின் Chin மாகாணமும் எல்லைகள். 

மொழி: அதிகாரப்பூர்வ மொழி மணிப்புரி. யதார்த்தத்தில் அது மெய்த்தேய் Meitei மொழி. Sino-Tibetan மொழிகள் பேசும் மக்களும் உள்ளார்கள். Sini-Tibetan மொழிக்குடும்பம் ஏறத்தாழ 400 மொழிகள் கொண்ட பெரிய குடும்பம்.

விடுதலைக்கு முந்தைய காலத்தில் மணிப்பூர் மன்னராட்சியின் கீழ் இருந்துள்ளது. 1930களில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 1939இல் இரண்டாவது உலகப்போர் தொடங்கிடவே பேச்சுவார்த்தை தொடரவில்லை. மன்னராட்சி இருந்தபோதும் 1948இல் ஒரு சட்டப்பேரவை நிறுவப்பட்டது. 1941 முதல் 1955 வரை மன்னராக இருந்த மஹராஜா புத்தசந்திரா 1949 செப்டம்பர் 21 அன்று இந்திய அரசுடன் மணிப்பூரை இணைத்த்துக்கொள்ள முடிவு செய்தார். 1949 அக்டோபர் 15 அன்று இந்திய அரசுடன் முறையாக இணைந்தது.

இங்கே ஒரு நிகழ்வை குறிப்பிடவேண்டும். மஹராஜா புத்தசந்திரா அசாம் கவர்னரை சந்தித்து மணிப்பூரின் சட்ட ஒழுங்கு நிலவரம் பற்றி பேசும்பொருட்டு ஷில்லாங் சென்றதாகவும் ஆனால் ஷில்லாங்கில் அவரை நிர்ப்பந்தம் செய்து இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட செய்ததாகவும் வரலாறு சொல்கிறது. சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.L

இந்த இணைப்பு பற்றி மணிப்பூர் சட்டமன்றத்தில் பேசவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை என்பதுடன் மணிப்பூர் மக்களின் ஒப்புதலும் இல்லை என்பது மணிப்பூரில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, மணிப்பூர் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணினார்கள். ஆக அரசுக்கும் மணிப்பூர் மக்களுக்கும் இடையே ஆன கசப்புணர்வு 1949இலேயே தோன்றிவிட்டது எனலாம். 1949க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் யூனியன் பிரதேசமாக இருந்தது. அதன் பின் ஆன காலம் முழுவதும் அங்கே 

 ஆயுதம் ஏந்திய பல குழுக்கள் முளைத்து தொடர்ந்து அரசியல் சிக்கல்கள் நீடிக்கும் மாநிலம் ஆக மணிப்பூர் உள்ளது.

... 

"அரசியல் சட்டப்படி வரையறுக்கப்பட்ட" நிபந்தனைகளுக்குள் ஒரு சமூகம் அல்லது சமூகக்குழு வருமாயின் அச்சமூகத்தை சார்ந்தவர் பழங்குடி அதாவது scheduled tribe என்ற உரிமை பெற்றவர் ஆகிறார்.

மணிப்பூரின் Meitei மெய்த்தேய் இனத்தை சேர்ந்த (பெரும்பான்மை மக்கள்) தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்டகாலமாக வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் மக்களில் சிறுபான்மையினர் ஆன ஏற்கனவே பழங்குடியினர் ஆக உள்ள மலைவாழ்மக்கள் ஆன குக்கி சமூகத்தினர் மெய்த்தேய் மக்களின் இக்கோரிக்கையை அடியோடு எதிர்க்கிறார்கள். காரணங்கள் பல.

.....

3

மணிப்பூர் இரண்டு முக்கியமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு மணிப்பூரின் பரப்பளவில் 10% நிலப்பரப்பு ஆகும். மெய்த்தேய் வகுப்பினர் இப்பள்ளத்தாக்கில் வாழ்கிறார்கள். இவர்கள் சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OBC. மணிப்பூர் மக்கள்தொகையில் இவர்கள் 64%க்கும் அதிகம். மணிப்பூரின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் 60, இப்பள்ளத்தாக்கில் மட்டும் 40 தொகுதிகள் உள்ளன. அதாவது மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் பலம் வாய்ந்த இடத்தில் மெய்த்தேய் மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ பிரிவை சேர்ந்த இந்து மத மக்கள். இசுலாமிய மக்களும் இருக்கிறார்கள்.

மற்றொரு பகுதி மலைப்பகுதி. குக்கி பழங்குடி மக்கள் வாழும் பகுதி. மணிப்பூரின் பரப்பளவில் 90% நிலப்பரப்பு ஆகும். அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி மக்களில் 35%க்கும் மேல் இந்த 90% நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் சட்டமன்றத்தின் 20 தொகுதிகள் மட்டுமே இங்கே உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 33 பழங்குடி இனமக்கள் முக்கியமான இரு பிரிவுகளுக்குள் அடங்குவர்: நாகா பழங்குடியினர், குக்கி பழங்குடியினர்.  Kuki-Chin-Mizo சமூக மக்கள்.

 இவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ மக்கள். இவர்கள் சட்டப்படி செட்யூல்ட் பழங்குடியினர் Scheduled Tribes.

இரு பிரிவு மக்களும் சமூக, கலாச்சார அடிப்படையிலும் பூகோள ரீதியான வரலாற்று கூறுகள் அடிப்படையிலும் இவ்வாறு OBC, ST என வரையறுக்கப்பட்டுள்ளனர்.

....

4

1963 முதல் 2017 வரையில் ஆன காலகட்டத்தில் பெரும்பாலான காலங்களில், ஒன்பது முறை, காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. 1977-79 காலத்தில் ஜனதா கட்சியும் 2001இல் சுமார் நான்கு மாதங்கள் சமதா கட்சியும், இடைப்பட்ட காலங்களில் மாநிலத்தில் உள்ள கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன.

2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையும், அதன் பின்னும் பி ஜெ பி ஆட்சி செய்கின்றது. இரண்டு ஆட்சியிலும் நாங்தோம்பாம் பிரேன் சிங் முதலமைச்சராக உள்ளார். 2007இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் 2016இல் விலகுகின்றார். அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கு எதிராக கிளர்ச்சி செய்து கட்சியில் இருந்து வெளியேறி பி ஜெ பியில் சேர்கிறார். 2017 தேர்தலில் பி ஜெ பி (முதல் முறையாக) ஆட்சி அமைக்கிறது. பிரேன் சிங் முதல்வர் ஆகிறார். 

...

5

கலவரங்களுக்கான காரணங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் பழங்குடி மக்களுக்கு என பல சிறப்பான உரிமைகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே முன்னேறிய சமூகத்தினர் பழங்குடி சமூக மக்களை எந்த விதத்திலும் சுரண்டிவிடாத அளவுக்கு பழங்குடிகளை பாதுக்காக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. பழங்குடியினர்க்கு உரிமையான நிலப்பகுதிகளை பழங்குடி அல்லாத ஒருவர் விலைக்கு வாங்க முடியாது, உரிமை கொண்டாடவும் முடியாது.

அரசியல் சட்டம் பிரிவு 371(c) இன்படி மணிப்பூரின் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்க பட்டுள்ளன. பழங்குடி அல்லாத மக்களுக்கு மணிப்பூர் பழங்குடி மக்களின் நிலங்களை கைமாற்றவோ விற்கவோ முடியாது. மேலும் அரசு வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீடு இப்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Lol

2015ஆம் ஆண்டு அப்போது இருந்த காங்கிரஸ் அரசு சட்ட மன்றத்தில் மூன்று சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தது: The Manipur Land Revenue and Land Reforms (Seventh) Amendment Bill, 2015; The Protection Of Manipur People's Bill, 2015; The Manipur Shops and Establishments Act (Second) Amendment Bill, 2015 ஆகிய மூன்று மொழிவுகள்.

இந்த மூன்று சட்டமுன்வடிவுகளையும் பழங்குடி குக்கி மக்கள் எதிர்த்தார்கள். திரும்ப பெற வலியுறுத்தினார்கள். 

காரணங்கள்: 1. இந்த சட்டமுன்வடிவுகள் மெய்த்தேய் மக்களை பழங்குடியினர் ஆக அங்கீகரிக்கும் அம்சங்களை கொண்டுள்ளன. அவ்வாறு செய்தால் மாநிலத்தின் பொருளாதாரமும் அரசியலும் மெய்த்தேய் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். ஏற்கனவே தமது மலைப்பகுதிகளுக்கு அதாவது பழங்குடியினர் நலத்திட்டங்களுக்கு அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் பள்ளத்தாக்கு மக்களுக்கு அதாவது மெய்த்தேய் மக்களுக்கு மடை மாற்றி விடப்படுவதாகவும் தம் நலன்களுக்கு அரசு போதிய அளவு நிதி ஒதுக்குவது இல்லை என்றும் குக்கி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

2. மூன்று சட்டமுன்வடிவுகளும் 'மணிப்புரி' அல்லாத ஒருவர் அந்த மாநிலத்துக்குள் நுழைய வேண்டும் எனில் அதற்கான பிரத்யேக பயண நுழைவு அனுமதியை அரசிடம் இருந்து பெற வேண்டும் என்று சொல்கின்றன. Inner Line Permit என்று அழைக்கப்படும் அனுமதி அது. இதே போன்றதொரு அனுமதிக்கான நிபந்தனை அருணாசல பிரதேஷ், மிஜோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உண்டு.

3. இந்த முன்வடிவுகள் சட்டமானால் சமவெளிப்பகுதிகளில் வாழும் மெய்த்தேய் இன மக்கள் தமது (குக்கி) வாழிடமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிக்கவும் தமது பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து கைப்பற்றிக்கொள்ளவும் வழி ஏற்படும் என்று குக்கிகள் ஆவேசம் அடைந்தார்கள், போராட்டங்கள் வெடித்தன.

மறுபுறம் மெய்த்தேய் மக்கள் இந்த சட்ட முன்வடிவுகளை வரவேற்று அவற்றை சட்டமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினார்கள்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்வடிவுகளை அன்றைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பினார்கள். The Protection Of Manipur People's Bill, 2015 என்ற சட்ட முன்வடிவில் 'மணிப்புரி' என்ற வரையறைக்கு தெளிவான விளக்கம் இல்லை என்று கருத்து கூறி அதை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார், மற்ற இரண்டு முன்வடிவுகளையும் மாநில அரசின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார்.

...

6

2017இல் பி ஜெ பி ஆட்சி அமைந்தது, பிரேன் சிங் முதல்வர் ஆனார். மெய்த்தேய் மக்கள் பழங்குடியினர் ஆக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று பி ஜெ பி தேர்தல் வாக்குறுதி கொடுத்து இருந்தது. எனவே இக்கோரிக்கையை மெய்த்தேய் மக்கள் கையில் எடுத்தார்கள். குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வடிவுகளுக்கு உயிர் கொடுத்து மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தார்கள்.

மெய்த்தேய் மக்களின் நீண்ட கால கோரிக்கையான இது, The Protection Of Manipur People's Bill, 2018 என்ற வடிவத்தில் பி ஜெ பி ஆளும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குக்கி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மிக எளிதாக இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது, ஏனெனில் 60இல் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஜெ பி கட்சிக்காரர்கள்!

The Protection Of Manipur People's Bill, 2018 என்ற சட்டமுன்வடிவின்படி 1951க்கு முன்புவரை மணிப்பூரில் வாழ்ந்தவர்கள், 1951க்கு முன்பே இருந்து இப்போதும் வாழ்கின்றவர்களுக்கு 'அந்த மண்ணின் பூர்வகுடிகள்' அதாவது indigenous people என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.  ஆக பாங்கல் Pangalaa இசுலாமியர்கள், மணிப்பூரின் ST மக்கள், மேலும் 1951க்கு முன்பான காலத்தில் இருந்து மணிப்பூரில் வசிக்கும் இந்தியக்குடிமக்கள் அனைவரும் 'மணிப்புரிகள்' அதாவது மணிப்பூரின் பூர்வகுடிமக்கள் என்று வரையறுக்கப்பட்டது.

இந்த வரையறைக்கு உட்படாத எவரும் மணிப்புரி அல்லாதவர் Non-Manipuri என்றும் ஒருமாத காலத்துக்குள் அவர்கள் தமது பெயரை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கட்டளை இட்டது. 

மிக முக்கியமான பிரச்சனைக்கு உரிய அம்சம் அல்லது தந்திரம் இந்த சட்ட முன்வடிவில் உள்ளது என்று குக்கிகள் குற்றம்சாட்டியது எது எனில் National Register for Citizens, 1951 தேசிய குடிமக்கள் பதிவேட்டிலோ Village Directory, 1951 கிராம பதிவேட்டிலோ குக்கி பழங்குடி மக்களின் பெயர்கள் இருக்காது அல்லது சரியான துல்லியமான தகவல்கள் இருக்காது. மணிப்பூர் என்ற மாநிலம் உருவானது 1972 ஜனவரி1 என்பதால் 1972க்கு முன்பு என்ற காலக்கெடுதான் நியாயமானதாக இருக்கும் என்று Joint Action Committee against Anti-Tribal Bills என்ற அமைப்பு (பழங்குடி மக்களுக்கு எதிரான சட்ட முன்வடிவுகளுக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பு) வலியுறுத்தியது. குக்கிகளை அடையாளப்படுத்த தக்க 

வாக்காளர் பட்டியல், நிலவுடைமை பத்திரம் உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் 1951க்கு முன்பான காலத்தில் இருக்காது. எனவே இந்த நிபந்தனை அல்லது காலக்கெடு குக்கி இன பழங்குடி மக்களை அவர்களின் பாரம்பரிய மலைப்பகுதியில் இருந்தும் வாழிடங்கள், காடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் தந்திரம் இதில் அடங்கியுள்ளதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.

.....

7

பிரச்சினையின் பிற வடிவங்கள்:

1. குக்கி பழங்குடியினர் வாழும் பகுதியில் மெய்த்தேய் மக்களோ பிறரோ நிலம் வாங்க முடியாது. ஆனால் மெய்த்தேய் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலங்களை பிற பகுதி மக்கள் வாங்க முடியும்.

2. Reserve forest எனப்படும் காப்புக்காடுகள் என்று அரசு அறிவித்த பகுதிகளில் இருந்து குக்கி பழங்குடியினர் மக்களை அரசு வெளியேற்றிய நடவடிக்கை குக்கி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

2020இல் ஏறத்தாழ 1346 வீடுகளை Langol காப்புக்காடு பகுதியில் இடிக்க அரசு முடிவு செய்தது, 95 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்தன. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது. Langol பகுதி இம்பால் நகரின் மலையடிவாரத்தில் உள்ளது.

3. வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் பழங்குடியினர் வாழிடங்களை அரசு பறிமுதல் செய்வதும் சில ஆயிரம் ரூபாய் பணத்தை இழப்பீடு என்ற பெயரில் கொடுப்பதும் "பழங்குடி மக்கள் மீதான சட்டப்பூர்வமான தாக்குதல்" அன்றி வேறில்லை.

4. ஓபியம் எனப்படும் கசகசாவை போதைப்பொருள் ஆக பயிரிடுவது மணிப்பூரின் ஆகப்பெரிய சமூகக்கேடு. ஒரு காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பூமியாக இருந்த நிலைமாறி மணிப்பூர் இப்போது ஓப்பியத்தின் உற்பத்திக்களனாக மாறி விட்டது. போதைப்பொருட்களுக்கு எதிரான அரசு நிர்வாக அமைப்பான Narcotics and Affairs of Border இன் தகவல் படி  மணிப்பூரில் 2017-23 கால இடைவெளியில் 15,400 ஏக்கர் பரப்பில் ஓபியம் பயிரிடப்பட்டுள்ளது. 2,518 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களை தம் பாரம்பரிய வாழிடங்களில் இருந்து வெளியேற்றவே போதைப்பொருளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒரு போர்வையாக பி ஜெ பி அரசு ஏவுகிறது என குக்கி பழங்குடியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்ட நாள் அன்று சுராசந்த்பூரில் போராட்டம் உடனடியாக வெடித்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். 11 வயது சிறுவனும் ஒருவன். குக்கிகள் அவனது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 632 நாட்கள் வைத்திருந்தார்கள்.

....

அரசுகள் சொல்வது போல் இது வெறும் இரண்டு குழுக்களுக்கு இடையே, அதாவது பழங்குடியினர், பழங்குடி அல்லாதவர்கள் இடையே ஆன பிரச்னை மட்டுமேதானா? உண்மை அங்கே முற்றுப்பெறுகிறதா?

இல்லை. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370ஐ அவசரகதியில் பி ஜெ பி அரசு நீக்கிய உடன் அங்கே நிலங்களை வாங்கிட இந்தியாவின் பிற பகுதிகளின் சாமான்ய மக்களில் எத்தனை பேர் அங்கே நிலங்களை வாங்கி குவித்து விட்டார்கள்? இத்தனை வருடங்களுக்கு பிறகு அங்கே லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வெகு விரைவில் இந்திய, சர்வதேச கார்பொரேட்டுகளுக்கு காஷ்மீரின் கதவுகளை அகலமாக திறப்பார்கள். மேலும் UAE ஐ சேர்ந்த ஒரு பெரிய கார்பொரேட் கம்பெனி அங்கே மால் தொடங்கிட அனுமதி பெற்றுள்ளதாம்.

அதே போல் மெய்த்தேய் இன மக்களில் பெரும்பாலோர் குக்கி பழங்குடியினர் வாழும் பகுதிகளை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதும் தெளிவான உண்மை! எனில் மெய்த்தேய் மக்களின் பேரால் இந்த கோரிக்கையை பின்னால் இருந்து தூண்டி விடுவோர் ஆதிக்க வர்க்கத்தின் பிரதிநிதிகளே. பணம் படைத்த கார்பரேட் கும்பலின் ஏஜெண்டுகள் ஆன மெய்த்தேய் ஆதிக்கவர்க்கத்தின் கோரிக்கைதான் அது. 

கடந்த மார்ச் 29 அன்று வனப்பாதுகாப்பு சட்டம்,1980இல் ஒன்றிய பி ஜெபி அரசு கொண்டுவந்த திருத்தம் இது:  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டின் பாதுகாப்பு-ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின்கீழ் முன்அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணப்பயிர் வேளாண்மை செய்யவும், காடுகளுக்கு அடியில் உள்ள வளங்களை கொள்ளையிடவும் அனுமதி அளித்தது. அத்திருத்தத்தின் மூலம் வனப்பாதுகாப்பு சட்டத்தை ஒழித்துக்கட்டி இயற்கை வளங்களை கார்பொரேட் டுகள் கொள்ளையடிக்க  வழி செய்து கொடுத்தது மோடியின் ஒன்றிய அரசு. இதை நன்கு புரிந்துகொண்டுள்ள குக்கி இன பழங்குடியினர் தம் போராட்டங்களை கார்பொரேட் முதலைகளுக்கு எதிராகவும் நடத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளார்கள். 

...

9

ஆப்பசைத்த குரங்கின் கதை


குக்கி அமைப்புகள் 2000ஆவது வருடத்திற்கு முன்பே தமக்கான தனி குக்கி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வந்தார்கள். ஒரு உடன்பாட்டுக்கு வரும் விதமாக Kuki land territorial council என்ற நிர்வாக அமைப்பு குக்கி பழங்குடியினரின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட ஒத்துகொண்டார்கள். மணிப்பூர் அரசு, மணிப்பூர் சட்டமன்றம் ஆகியவற்றின் நிர்வாக, நிதி அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுன்சில் ஆக இது இருக்கும்.

2008 ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது. முக்கியமாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நிறுத்திவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்ற நிலையை ஏறத்தாழ 25 ஆயுதம் தாங்கிய குக்கி அமைப்புகள் ஏற்றுக்கொண்டார்கள். அப்படியான ஆயுதம் ஏந்திய அமைப்புகள் ஏறத்தாழ 32 இருந்தன. இந்த உடன்படிக்கை Suspension of Operations (SoO) என்று அழைக்கப்பட்டது.

இந்த உடன்பாடு ஒரு வருட காலத்துக்கு செல்லும், அதன்பின் ஒவ்வொரு வருடமும் உடன்படிக்கையை நீட்டித்துக்கொண்டு வந்தார்கள்.

இந் SoOஇன் படி UPF என்ற United Peoples Front, KNO எனப்படும் Kuki National Organization ஆகிய ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புகள் தம் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக கையெழுத்து இட்டனர், ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. Kuki Zo சமூகத்தின் மிகப்பெரிய குழுக்களில் ஒன்றான United People's Front ஒன்பது வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கியது, ஏறத்தாழ 2,000 கிளர்ச்சியாளர்களை கொண்டது. KNO 23 ஆயுதம் ஏந்தி ய குழுக்களை உள்ளடக்கியது, இங்கேயும் ஏறத்தாழ 2,000 கிளர்ச்சியாளர்கள் உள்ளனர்.

இது ஒரு முத்தரப்பு உடன்படிக்கை அதாவது Tripartite agreement. ஒன்றிய அரசு, மாநில அரசு, குக்கி கிளர்ச்சியாளர் அமைப்புகள் ஆகிய மூன்று தரப்பினரும் ஏற்றுக்கொண்ட உடன்படிக்கை. மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் பகுதிகளில் 14 கண்காணிப்பு முகாம்களை நிறுவி அமைதியை கொண்டு வர முயற்சி செய்வது இதன் நோக்கம்.

ஆனால் மெய்த்தேய் சமூகத்திற்கு ஆதரவான People's Alliance for Peace and Progress என்ற அமைப்பு SoO உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வற்புறுத்தியது. அதற்கு அந்த அமைப்பு சொன்ன காரணங்கள்:

1. இந்த சமாதான கால இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு  ஆயுதம் ஏந்திய குக்கி அமைப்புகள் தம்மை பலப்படுட்கள் கொள்கின்றனர்.

2. மியான்மரில் (பர்மா) இருந்து குக்கி இன மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரவைத்து தம் அமைப்புகளில் இணைத்துக் கொள்கிறார்கள்.

3. ஓபியம் பயிரிடுவது, ஆயுதக்கடத்தல் ஆகியவற்றுக்கு சட்டவிரோதமாக எல்லைதாண்டி வரும் குக்கிகளை ஈடுபடுத்துகிறார்கள்.

4. SoO உடன்படிக்கையை பயன்படுத்தி காடுகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் குக்கிகள் ஆக்கிரமிக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனை மூலமாக பணத்தை பெருக்குகிறார்கள்.

...

இந்த முத்தரப்பு உடன்படிக்கை ஒப்பந்தம் மாநிலத்தில் அமைதியை கொண்டுவந்தது என குக்கிகள் உறுதியாக நம்பினார்கள். "ஆனால்  சமாதானமம் அமைதியும் முற்றிலுமாக திரும்புவதற்கு முன்பாக SoS உடன்படிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மெய்த்தேய் வலியுறுத்துவதற்கு ஒரே காரணம் குக்கிகளுக்கு எந்த பலனும் கிடைக்க கூடாது என்பதே."

பி ஜெ பி முதலமைச்சர் பிரேன் சிங் செய்த தவறு ஆப்பசைத்த குரங்கின் கதையாக ஆனது. இந்த SoS உடன்படிக்கையை மேலும் வலுவாக்குவதற்கு பதிலாக மெய்த்தேய் குழுக்களின் நிர்ப்பந்ததிற்கு அடிபணிந்தார். 2023 மார்ச் 10 அன்று அமைச்சரவையை கூட்டி SoO உடன்படிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதாவது உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது என்று பொருள். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம், முதலமைச்சர் பிரேன் சிங் மெய்த்தேய் சமூகத்தை சேர்ந்தவர்.

ஒன்றிய அரசுக்கும் இதனை தெரிவித்தார். ஆனால் ஒன்றிய பி ஜெ பி அரசு மாநில பிஜேபி அரசின் இந்த முடிவை ஏற்பதில் தயக்கம் இருப்பதாக தெரிவித்தது. 

மாநில முதல்வரின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கை எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒரு உடன்படிக்கையை கைவிடுவதால் விளையக்கூடிய  கேடுகளை கூட ஒரு முதல்வரால் முன்னுணர முடியவில்லை என்று சொல்லிவிட முடியாது. 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டால் 40 எம் எல் ஏ க்களை கொண்ட பெரும்பான்மை சமூகத்தின் நிர்ப்பந்தத்துக்கு அவர் அடிபணிந்து போனதில் வியப்பில்லை.

....

10

இந்த நேரத்தில் மலைப்பிரதேசமான சுரசாந்த்பூர், தெங் நூபல் Tengnoupal ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்தன. இப்போராட்டங்களை ஒருங்கிணைத்தது Indigenous Tribal Leaders Forum என்ற அமைப்பு.  இந்த கிளர்ச்சிகளுக்கான காரணம்: குக்கிகள் வாழும் பகுதிகளில் பல வீடுகளை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. பல கிறித்துவ சர்ச்சுகளுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்ட து. அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதாக காரணம் சொன்னது. இந்த போராட்டங்களுக்கு பின் குக்கி ஆயுத கிளர்ச்சி அமைப்புகள் இருப்பதாக அரசு கருதியது. இப்போராட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை, சட்ட விரோதமானவை என்று அறிவித்தது மட்டுமின்றி இந்த போராட்ட ஊர்வலங்களை அனுமதித்த டெபுடி கமிஷனர், எஸ் பி ஆகியோருக்கு விளக்கம் தருமாறு நோட்டிஸ் அனுப்பியது.

இந்த கெடுபிடிகள் யாவும் தங்களை ஒடுக்குவதற்கான மாநில அரசின் நடவடிக்கை என்றே குக்கி மக்கள் கருதியதில் வியப்பில்லை. மூன்று கிறித்துவ ஆலயங்களை மாநில அரசு இடித்து தள்ளியப்பின் மாநில அரசு இந்து மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட மெய்த்தேய் சமூகத்துடன் கைகோர்த்து இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மணிப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (மணிப்பூரின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்) ஆன Kim Kangte  கூறுவதை கேட்போம் (News click, 5.7.2023):

கலவரகும்பல்களுடன் சேர்ந்து சாதாரண சிவிலியன் மக்களும் கலவரம் செய்தார்கள், உண்மைதான். ஆனால் Arambai Tenggol அமைப்பினர் சீருடை அணிந்து இந்த கலவரத்துக்கு தலைமை தாங்கியதை நான் என் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தேன். (Arambai Tenggol என்ற அமைப்பு பெரும்பான்மை மெய்தெய் மக்களின் அமைப்பு). இந்த சம்பவங்கள் யாவும் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இல்லையெனில் மே 3, 4, 5 ஆகிய மூன்று நாட்களும் குக்கி வாழும் பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்தது எப்படி?l

Arambai Tenggol, Meitei Leepun (மெய்த்தேய் ஆயுதகுழுக்கள்) ஆகிய இரண்டும் ஆர் எஸ் எஸ்ஸால் உருவாக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

நடக்கும் கலவரங்களுக்கு பின்னால் மதம் உள்ளது. சர்ச்சுகளை எரித்தார்கள், வீடுகளை எரித்தார்கள், பின்னர் மனிதர்களை கொலை செய்தார்கள். ஆக இப்போது மெய்த்தேய்க்கும் குக்கிகளுக்கும் இடையே ஆன கலகம் என்று சித்தரிக்கிறார்கள். இது உண்மை இல்லை. உண்மையில் பெரும்பாலான மெய்த்தே சர்ச்சுகளை எரித்தவர்கள் மெய்த்தேய் அமைப்பான Arambai Tenggol இன் ஆட்களே.

....

Kim Kangte யின் கூற்றுக்கு வலு சேர்க்கும் செய்திகள் உள்ளன.

Bangalore Manipur Students Association என்ற அமைப்பு பெரும்பான்மை மெய்த்தேய் சமூக இளைஞர்களை கொண்ட அமைப்பு. மே 3 கலவரங்களுக்கு பின் இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதன் இந்துத்துவா பின்னணியை அம்பலமாக்குகிறது: "இந்து கிராமங்களை குக்கி ஆயுத கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு எரிப்பதால் அப்பாவிகள் சாகின்றார்கள்... குக்கி ஆயுத போராட்டகாரர்களும் சட்ட விரோத பர்மிய குடியேறிகளும் போதை வஸ்து மாஃபியாக்களால் ஆதரிக்கப்படுவோர் ஆவர். இந்த குக்கிகள்தான் முற்றிலும் அமைதியான இந்து மணிப்புரி குடியிருப்புகளை தீயிட்டு அழித்தார்கள்".

 அப்பட்டமான ஆர் எஸ் எஸ் சொல்லாடல் அன்றி வேறென்ன? 'அப்பாவிகள்' யார்? மெய்த்தேய் இன மக்களுக்குள், அவர்களது அமைப்புகளுக்குள் ஆர் எஸ் எஸ் நுழைந்து விட்டது அல்லது அந்த அமைப்புக்களே ஆர் எஸ் எஸ் அமைப்புகள்தான் என்று சொல்லலாம். இப்போது மணிப்பூர் பற்றி எரிவதற்கான காரணம் வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளே. 

Forum of Religious for Justice and peace என்ற அமைப்பு சொல்கிறது: இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான ஒரு பிரச்சனை இப்போது கிறித்தவர்களுக்கு எதிரான ஒரு விசயமாக மாற்றப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் உள்ளிட்ட அனைத்து கிரித்துவர்களும் இப்போது மணிப்பூரில் கலவரங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மெய்த்தேய், மார்ஸ், மிஜோஸ், ச்சின் இனங்களை சேர்ந்த அனைத்து கிறித்துவர்களும் இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Arch Bishop Lumon: அரசியல் சட்ட விழுமியங்களுக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் விரோதமான, ஒளிவுமறைவான மதவாத சதிகளும் பிற்போக்கு சித்தாந்தங்களும் இப்பிரதேசத்தில் நுழைந்து மாநிலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே, சமாதானத்துடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த மக்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளன.

Father Velickagam, Vicar General, இம்பால்: அவர்கள் எங்களை திட்டமிட்டு துல்லியமாக இலக்கு நிர்ணயித்து தாக்குகிறார்கள், எங்கள் சர்ச்சுகளையும் நிறுவனங்களையும் தாக்குகிறார்கள். கத்தோலிக்க மக்களை எளிதில் அடையாளம் கண்டு தாக்குகிறார்கள்.

நாங்கள் போலீசை தொலைப்பேசியில் மீண்டும் மீண்டும் அழைத்தாலும் பதில் இல்லை. கலவரம் செய்த குற்றவாளிகளோ தெருக்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். எமது Pastoral Training Centre ஐ தாக்கினார்கள். சர்ச்சுக்குள் தீ வைத்தார்கள்... சர்ச்சுகள், பிற சொத்துக்கள் என  20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்ட்டுள்ளன. இந்த இழப்புக்கு ஈடு செய்ய அரசும் இதுவரை முன்வரவில்லை. கலாச்சார காவலர்கள் என்ற பேரில் மதவாத சக்திகள் கிறித்தவ மதத்தை அழிக்கும் முயற்சியில் எங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றார்கள்.

குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை இந்து மத மக்களுக்கு எதிரானவர்களாக இஸ்லாமிய மக்களை சித்தரித்து தன் வாக்கு வங்கி அரசியலை நடத்திக்கொண்டு இருக்கும் ஆர் எஸ் எஸ் சின் உறுப்புகள் ஆன பி ஜெ பி, விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தல், வனவாசி கல்யாண் போன்ற அமைப்புகள் இதுவரை தாம் நுழைய முடியாத வடகிழக்கு மாநிலங்களில் கால் பதிக்கவே பல பத்தாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே பகைமையை மூட்டி கலவரங்களை தூண்டுகிறது. 

....

11

மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட கலவரங்களில் 150க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் அண்டை மாநிலங்களுக்கும், எல்லை கடந்து மியான்மர், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்து இருப்பதாக வாசிக்கும் செய்திகள் சொல்கின்றன. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் உண்மையான கள நிலவரத்தை யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை. மாநிலத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியுள்ளது காவல்துறை. அவரோ ஹெலிகாப்டரில் பறந்து சென்று நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து வந்தார்.

சி பி எம், சி பி ஐ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர் நிவாரணமுகாம்களில் தங்கியுள்ள மக்களையும் மாநில கவர்னரையும் சந்தித்து வந்த பின் "தமது மாநில முதல்வர் மீது நம்பிக்கை இழந்துள்ளனர், பிரதமரின் மவுனத்தை கேள்வி கேட்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்கள். 

மணிப்பூருக்கு சென்ற உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினர்கள் ஆன ஆனி ராஜா, நிஷா சித்து, தீக்ஷா த்விவேதி ஆகியோர் மீது ஜூலை 8 அன்று எப் ஐ ஆர் பதிவு செய்துள்ளது காவல்துறை.

அண்டை மாநிலம் ஆன மிஜோரத்தின் பி ஜெ பி துணைத்தலைவர் ஆர்வன்ராம் சுவாங்கா இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்: மணிப்பூரில் சர்ச்சுகள் எரிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்பது கலவரங்களுக்கு ஆதரவு அளிப்பதே. 357 சர்ச்சுகள், கிறித்துவ போதகர்களின் வீடுகள், சர்ச் அலுவலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கிறித்துவர்களுக்கும் கிறித்துவ மதத்துக்கும் எதிராக இழைக்கப்படும் இந்த குற்றச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில துணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்".

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஏவல் துறைகளையும் கவர்னர்களையும் ஏவி சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல், தான் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் பெயரளவுக்காவது சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியாமல் போனது மிக மிக கேவலமானது.

கடந்த ஒன்பது வருடங்களில் முப்பது தடவைக்கும் மேல் நம் பிரதமர் வட கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் சென்றுள்ளார். 80 நாட்களுக்கு மேல் பற்றி எரியும் ஒரு வடகிழக்கு மாநிலம் பற்றி இதுவரை ஒரே ஒரு சொல்லைக்கூட அவர் உதிர்த்து விடாமல் மிக கவனமாக இருக்கிறார். கலவரத்தில் ஈடுபடுவோரை ஒரே ஒரு சொல்லாலும் கூட கண்டனம் செய்யவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் ஆதரவை வெளிப்படுத்தும், நம்பிக்கை தரும் ஒரே ஒரு சொல்லை கூட இதுவரை உதிர்க்கவில்லை. அவர் சார்ந்துள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பு எவ்வாறு திட்டமிடுகிறதோ எவ்வாறு கட்டளை இடுகிறதோ அவ்வாறே அவர் நடந்து கொள்கிறார்.

மே  மாத முதல் வாரத்தில் ஒரு பெரிய ஆண்கள் கூட்டம் இரண்டு குக்கி இன பெண்களை உடலில் இருந்த ஆடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு நிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக நடத்தி சென்ற காட்சி இன்று வெளியாகிட நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைர மோதிரம் தேர்வு செய்வதிலும் பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு சேலை தேர்வு செய்வதிலும் இந்திய பிரதமர் தன் பொன்னான நேரத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறார். 

....

20.7.2023

வியாழன், ஜூலை 20, 2023

மேரி மக்தலீனாவின் அருளாசியும் இந்திய விண்வெளி சாதனைகளும்


இந்தியாவில் முதன்முதலாக ஒரு ராக்கெட் ஏவப்பட்டது கேரளாவில் திருவனந்தபுரத்தில் தும்பா என்ற கடற்கரை ஓர மீனவ கிராமத்தில் இருந்துதான்.

அப்போது ISRO கிடையாது. 1962இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு National Committee for space research என்ற ஆய்வு நிறுவனத்தை அணுசக்தி துறையின்கீழ் நிறுவினார். அவருக்கு தூண்டுதலாக இருந்தவர் குஜராத்தை சேர்ந்த விக்ரம் சாராபாய் என்ற விஞ்ஞானி. ISRO முறையாக நிறுவப்பட்டது 15.8.1969 அன்று.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா, 1975இல் அதை விண்ணில் ஏவியது சோவியத் யூனியன்.

திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிமீ வடக்கில் உள்ள கடற்கரை மீன்பிடி கிராமம்தான்

தும்பா. புனித பிரான்சிஸ் சேவியர் பதினாறாம் நூற்றாண்டில் கேரளாVவுக்கு வந்தபோது தங்கியிருந்த கிராமம் அது. மண் சுவராலும் தென்னை ஓலைகளாலும் ஒரு தேவாலயத்தை புனித பிரான்சிஸ் கட்டுகின்றார். ஏறத்தாழ100 வருடங்களுக்கு பிறகு புனித பார்தலோமியோவ்வுக்கானஆலயமாக மண்சுவர் அகற்றப்பட்டு நிலையான கட்டிடம் கட்டப்பட்டது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த ஆலயம் மேரி மக்தலீன் ஆலயமாக மாறியது. ஆலய கட்டுமானம் நடந்துகொண்டு இருந்தபோது கடற்கரையில் ஒதுங்கிய மிக அழகிய சந்தனமர சிலைதான் அந்த மேரி மக்தலீன் உருவச்சிலை. அதுவே ஆலயத்தின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகியது. அதுவரை காணப்படாத மிகப்பெரிய மரம் ஒன்று அதே கரையில் ஒதுங்க, அதுவே ஆலயத்தின் கொடிமரமாக ஆக்கப்பட்டது. மரித்த யேசு உயிர்த்து எழுந்தபோது மேரி மக்தலீனுக்கே முதலில் காட்சியளித்தார் என்பது கிறித்துவ மக்களின் நம்பிக்கை.

... ...

இந்தியாவுக்கான ராக்கெட் ஏவுதளத்தை எங்கே நிறுவலாம் என்ற கேள்வி எழுந்தபோது புவியின் காந்தப்புல நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த தும்பா சிறந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டது. 

அன்று விக்ரம் சாரா பாயும் ஹோமி பாபாவும் திட்டமிட்டபடி சாராபாய் மேரி மக்தலீன் ஆலயத்தின் பிஷப் ஆக இருந்த ரெவரெண்ட் பீட்டர் பெர்னார்டு பெரீராவை சந்திக்கிறார். அது ஒரு சனிக்கிழமை. தும்பாவின் அருமையை பிஷப்புக்கு எடுத்துச்சொல்லி சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஆலயம், நிலம் அனைத்தையும் அரசுக்கு விட்டுத்தருமாறு சாராபாய் வேண்டுகிறார். பிஷப் புன்னகை புரிந்து மறுநாள் வர சொல்கின்றார். 

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டுக்கூட்டத்தில் கூடியுள்ள கிறித்துவ மக்களிடையே பிஷப் உரையாற்றுகிறார்: என் குழந்தைகளே! இங்கே புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி வந்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்காக நமது ஆலயத்தையும் நான் வாழும் வீட்டையும் விட்டுக்கொடுக்குமாறு அவர் நம்மிடம் வேண்டுகிறார். விஞ்ஞானம் உண்மையை தேடுகிறது, அது தனிமனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்துகிறது. மதத்தின் உயரிய வடிவம் என்பது ஆன்மீகமே. ஆன்மீகவாதிகள் கடவுளிடம் எதை வேண்டுகிறார்கள்? மனித மனங்களில் அமைதியை வேண்டுகிறார்கள். சுருக்கமாக சொல்வேன் - நானும் விக்ரமும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம் - விஞ்ஞானமும் ஆன்மீகமும் கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டுகின்றன, எதற்கு? மனிதனின் சிந்தனையும் உடலும் வளம் பெற வேண்டும் என்பதற்கே. ஆக, குழந்தைகளே, கடவுளின் ஆலயத்தை ஒரு நெடுங்கால விஞ்ஞான திட்டத்திற்காக ஒரு விஞ்ஞானி கேட்கிறார், கொடுத்து விடலாமா?

கூட்டத்தில் பெரும் அமைதி நிலவுகிறது. ஒருசில நொடிகள் மட்டுமே. அதன்பின் ஒட்டுமொத்த சபையும் 'ஆமென்' என்று முழங்க அந்த நொடியில் இருந்து தொடங்குகிறது எதிர்கால இந்தியாவுக்கான விண்வெளி ஆய்வு.

... ....

Thumba Equatorial Rocket Launching Station என்ற இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமும் முதல் ராக்கெட் ஏவுதளமும் கிறித்துவ மக்கள் மனமுவந்து அளித்த இடத்தில்தான் அமைந்தது. தேவாலயமும் சுற்றி இருந்த மீனவ மக்களின் வீடுகளும் காலி செய்யப்பட்டன. ஆலயத்தின் மேரி மக்தலீன் பீடத்திற்கு முன்புதான் இந்தியாவின் முதற்கட்ட ராக்கெட்டுகள் பலவும் வடிவமைக்கப்பட்டன, உருவாக்கப்பட்டன. அமெரிக்கா NASAவில் செய்யப்பட்டு இந்தியா வாங்கிய Nike-Apache ராக்கெட் மேரி மக்தலீனுக்கு முன்புதான் ஒருங்கிணைக்கப்பட்டது. 

ஆலயத்தின் மையமான இடத்தில் TERLS நிர்வாக அலுவலகம் இயங்கியது. பின்னர் ராக்கெட் கட்டுமானத்திற்கு என தனி கட்டிடம் கட்டப்பட்டபோது ராக்கெட் பணிகள் அங்கே மாற்றப்பட்டன. அதன்பின் ஆலயமும் பிற கட்டிடங்களும் விஞ்ஞானிகள், தொழிலாளர்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டன. ஏவுதளத்தின் பக்கத்தில் இருந்த ஒரு தொடக்கப்பள்ளிதான் ஏவுதள அலுவலகம் ஆக இருந்துள்ளது. பின்னர் அது நூலகமாக மாற்றப்பட்டது.

மிக உயர்ந்த அழகிய ஆலயத்தின் கட்டுமானத்திற்கோ மேரி மக்தலீன் உருவச்சிலைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழி பாதுகாக்கப்பட்டது. 

கிராமத்தின் மீனவ மக்கள் கடற்கரையின் மீதான தம் உரிமையை எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை. தமது மீன்பிடித்தொழில் நடவடிக்கைகள், வலைகளை காய வைப்பது ஆகிய அன்றாட வாழ்க்கையை இதே கடற்கரையில்தான் நடத்தி வந்தார்கள். ராக்கெட் ஏவும் முன்பு அறிவிக்கப்பட்டால் கடற்கரையில் தமது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்து ஒத்துழைப்பார்கள்.

விண்வெளி ஆய்வின் தொடக்க காலத்தில் வெளிநாடுகளில் இருந்த தலைசிறந்த விஞ்ஞானிகளை அரசு தேர்வுசெய்து இங்கே வரச்செய்தது. அப்படி வந்த விஞ்ஞானிகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கி நேராக ராக்கெட் ஆய்வு மையத்திற்கு வந்தால் ஆலயத்தில் இருந்த 'குடியிருப்பு' பகுதிக்கு செல்வதும் அதன் பின்னர் வந்து சேரும் குடும்பத்தினரும் இந்த 'குடியிருப்பு' பகுதியில்தான் வசிக்க வேண்டும். 

ஆலயத்தை சுற்றி இருந்த பழைய செங்கல் கட்டிடங்களும் கூட பயன்பாட்டில்தான் இருந்துள்ளன. ராக்கெட் கட்டுமான பிரிவு, காவலர் பிரிவு, உணவகம் உள்ளிட்ட பல துறைகள் இயங்கியுள்ளன. பிஷப்பின் இல்லத்தில்தான் TERLS இன் இயக்குனருக்கும் பிற மூத்த விஞ்ஞானிகளுக்கும் ஆன அலுவலகம் ஆக இருந்துள்ளது.

1985இல் தும்பா ஏவுதளமும் குடியிருப்பு பகுதிகளும் நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்த பின்னர், ஆலயம் விண்வெளி ஆய்வுக்கண்காட்சியாகமாக மாறியது.

... ...

இந்தியாவின் முதல் SLV3 ஐ வடிவமைத்தவர் அப்துல்கலாம். ரோஹிணி செயற்கைக்கோளை சுமந்து சென்றது. நாள் 18.7.1980.

அப்துல் கலாம், சின்யா ராமச்சந்திர ராவ் சத்யா ஆகியோரால் அங்கே வடிவைக்கப்பட்ட ஒரு எந்திரத்தை 1968 பிப்ரவரி 2 அன்று அன்றைய பிரதமர் இந்திரா இயக்கி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் Centaur rocket ஐ மாலை 6 மணிக்கு இந்திராவே இயக்கி ஏவுவதாகவும் திட்டமிடப்பட்ட து. மிக அபாயகரமான ஒரு வேதிப்பொருள் அடங்கிய ஒரு சாதனத்தை அந்த ராக்கெட்டுடன் இணைக்கும் வேலையில் விஞஞானி சி ஆர் சத்யா ஈடுபட்டு வருகிறார். நேரமோ ஓடிக்கொண்டிருக்க, மூன்று கி மீ தொலைவில் இருந்தவர்களுக்கு ஜீப் அனுப்பி வைக்க நிர்வாகம் மறந்துவிட்டதே!  வேறு வழியின்றி சத்யாவும், வேலப்பன் நாயரும் சைக்கிளில் காரியாரில் வைத்து தள்ளிக்கொண்டு போன காட்சியை கருப்பு வெள்ளை யில் படம் ஆக்கியவர் உலகப்புகழ் பெற்ற Henri Cartier Bresson!!! 

விக்ரம் சாராபாய் 1942இல் மிருணாளினியை மணம் புரிந்தார், அவர்களது மகள் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய். கேப்டன் லட்சுமி அவர்களின் இளைய சகோதரிதான் மிருணாளிணி. 

... ...

இன்று பிற்பகல் 2.30க்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து

ஏவப்பட்ட சந்த்ராயன் 3 விண்கலத்தை விண்ணுக்கு எடுத்துக்கொண்டு சென்ற ஏவுவாகனம் LVM3. 

சந்த்ராயன் 3 வெற்றி பெறட்டும்! ஆமென்.

...

ஞாயிறு, ஜூன் 04, 2023

விபத்தும் 'திட்டமிடப்பட்ட' விபத்தும்

எதிர்பாராது நடப்பவை விபத்துக்கள் என்ற கோட்பாடு எப்போதும் பொருந்துமா?

இந்திய ரயில்வேயின் குறிக்கோள் "நியாயமான கட்டணத்தில் மக்களின் பாதுகாப்பு, விரைவான பயணம்" safe, fast train services at affordable cost.

உலகின் நான்காவது பெரிய ரயில்வே நிறுவனம் இந்திய ரயில்வேக்கு 1,21,000 கிமீ ரயில்பாதை சொந்தமானது. இதன் பொருள் இந்த 121000 கிமீ ரயில்பாதை மக்களின் பணத்தில் கட்டப்பட்டது என்பதே. ஒரு வருடத்திற்கு 8,10,700 கோடி பயணிகளையும் நூற்றுப்பத்து கோடி டன் சரக்குகளையும்கையாளுவது இந்திய ரயில்வே துறை. அதாவது ரயில்வேயில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்பும் மக்கள் பணத்தில் உருவான கட்டமைப்பும் இதை சாத்தியப்படுத்தி உள்ளது என்று பொருள்.

தோழர் ஆர் இளங்கோவன், DREU ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜூன் 2022இல் ஒரு கூட்டத்தில் ஆற்றிய உரையின் சாரம் கீழே:

1950களில் நாட்டின் மொத்த சரக்குப்போக்குவரத்தில் 84% இந்திய ரயில்வே மூலம் நடந்தது. இப்போது இது 28% மட்டுமே. அப்போது 78% பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினார்கள், இப்போது இது 12% ஆக குறைந்து விட்டது. இப்போது சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 25 கிமீ, பயணிகள் ரயிலின் சராசரி வேகம் 50 கிமீ, அவ்வளவுதான். சீனாவில் இது முறையே 200-300கிமீ, 400கிமீ.

ஒவ்வொரு வருடமும் 4500 கிமீ ரயில்பாதையை புதுப்பிக்க வேண்டும், ஆனால் 2022 வருட கணக்கின் படி 11000 கிமீ பாதை புதுப்பிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் 200 ரயில் நிலையங்கள் புதுப்பிக்க வேண்டும், ஆனால் உண்மையில் 100 மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன. 

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பல நூறு பாலங்கள் இப்போதும் அப்படியே பயன்பாட்டில் உள்ளன. CAG அறிக்கை கூறுகிறது: கட்டமைப்புகளை புதுப்பிக்க 1,14,000 கோடி ரூபாய் நிதி தேவை, ஆனால் அவ்வாறு செலவு செய்யப்படவில்லை, எனவே பாதுகாப்பு, வளர்ச்சி இரண்டும் சிக்கலில் உள்ளன.

பி ஜெ பி அரசின் National Monetization Pipeline திட்ட வரைவின் படி, 150 பயணியர் ரயில்களில் 60% ரயில்கள் அதாவது 90 ரயில்கள் தனியார்மயம் ஆக்கப்படும். 

உண்மை என்ன? தனியார் கம்பெனிகளுக்கு சரக்குபோக்குவரத்தில்தான் குறி அதிகம், அதில்தான் லாபம் கொட்டும்.  பி ஜெ பி அரசின் Dedicated Freight Corridor அதற்கு வழி செய்கிறது. இத்திட்டம் தனியார் கம்பெனிகள் ஒட்டுமொத்தமாக இந்திய ரயில்வேயை கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே தீட்டப்பட்ட 'தொலைநோக்கு' திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி ரயில்வே அடிப்படை கட்டமைப்புகளில் 10% மட்டுமே முதலீடு செய்யப்படும். 2022இல் ஒரு வருடத்திற்கு 1160 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டார்கள் எனில் 2051இல் 6585 மி டன் ஆக இது உயரும். ஆனால் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் அரசின் முதலீடு இலை எனில் இந்த இலக்கை சமாளிக்க முடியாது, இது அரசுக்கும் பிரதமர், ரயில்வே அமைச்சர் அனைவருக்கும் தெரியும். 

எனவேதான் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் அரசு முதலீடு என்பதற்கு பதிலாக ரயில்வே சொத்து அனைத்தையும் தனியாரிடம் விற்று விட திட்டமிடுகின்றது பி ஜெ பி அரசு. அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்தில் பல பத்தாண்டுகளாக கட்டி அமைக்கப்பட்ட பலமான இந்திய ரயில்வே துறையை அதானி, அம்பானி, டாடா, மஹிந்திரா ஆகிய நண்பர்களுக்கு தானமாக கொடுப்பார் நம் பிரதமர்.

National Infra Pipeline என்றொரு திட்டம், அதுவும் பி ஜெ பி அரசின் திட்டமே. 2025இல் 500 பயணிகள் ரயிலும், 80 ரயில் நிலையங்களும், 30% சரக்கு ரயில்களும் தனியார் வசம் கொடுக்கப்படும் என்பதுதான் இந்த திட்டம். National Rail Plan திட்டம் என்ற மற்றொரு திட்டத்தின் படி, 2031இல் அரசுக்கு சொந்தமாக சரக்கு ரயில் ஒன்று கூட இருக்காது. அதாவது அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டாவிடம் விற்றப்பின் விமான நிறுவனம் இல்லாத அரசுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது போல் சொந்தமாக சரக்கு ரயில்கள் இல்லாத நாடு என்ற சாதனையை பி ஜெ பி அரசு செய்யும், ஆனால் அந்த சாதனை இந்திய மக்களின் ரத்தமும் சதையும் உயிரும் ஆன இந்திய ரயில்வே துறையை விற்று செய்யும் மோசடியாக இருக்கும்.

இதனை ஒரு எளிய புள்ளி விவரம் மூலம் புரியவைத்து விடுகிறார் தோழர் ஆர் இளங்கோவன். CAG அறிக்கையின்படி சரக்குபோக்குவரத்தில் 28000 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது அரசு. 64000 கோடி ரூபாய் பயணிகள் போக்குவரத்தில் நஷ்டம் என்றது. ஆக நிகர நஷ்டம் 36000 கோடி எனில், சரக்குபோக்குவரத்தில்தான் லாபம் என்பது தெளிவு. 36000 கோடி நஷ்டம் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து குறைகளை களைய அரசால் முடியும். ஆனால் சரக்குபோக்குவரத்தில் மட்டுமே லாபம் என்ற நிலையை அல்லது பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த சரக்குபோக்குவரத்தை தனியாரிடம் கொடுப்பது அல்லது விற்பது என்பது நாட்டு மக்களுக்கு இந்த அரசு செய்யும் ஆகப்பெரிய துரோகம் ஆகும்.

இதன் விளைவு என்ன ஆகும்? ரயில்வேயில் சரக்குபோக்குவரத்து முற்றாக இல்லை எனில் ரயில்வே தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லை, ஓய்வூதியம் இல்லை என்பது துறைசார்ந்த சிக்கல் ஆக, தொழிலாளர்கள் பிரச்சினை ஆகும், தொழில் அமைதி சீர்குலையும், இதனையே காரணம் காட்டி ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் அதாவது பயணிகள் போக்குவரத்து உட்பட அனைத்தையும் தனியாருக்கு விற்று விடலாம். ஏற்கனவே 68% ரயில்வே தொழிலாளர்கள் எந்த வித உத்தரவாதமும் இல்லாத புதிய பென்சன் திட்டத்தின்கீழ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனில், மறுபக்கத்தில் தனியார் நிறுவன முதலாளிகள் சரக்குபோக்குவரத்துக்கு குறிப்பாக விவசாய விளைபொருட்கள், உணவு தானியங்கள், காய் கறிகள், உரம், பூச்சி மருந்து போன்றவற்றுக்கு ஆன கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துவார்கள், அதில் அரசின் கட்டுப்பாடு ஏதும் இருக்காது எனில் பொதுசந்தையில் உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை எங்கே போகும்? சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் போக்குவரத்து கட்டணத்தை தனியார் ரயில் முதலாளிகள் தாறுமாறாக உயர்த்துவார்கள் எனில் நிலை என்ன ஆகும்?

... ...

லாபம், லாபம், லாபம் ஒன்றே குறிக்கோள் ஆக கொண்ட தனியார் முதலாளிகளுக்கு சமூகப்பார்வை, சமூக அக்கறை, சேவை மனப்பான்மை என்பது அறவே தேவை இல்லாத ஒன்று.

ஏற்கனவே  இந்தூர்-காசி இடையே ஓடும் காசி மகாகால் எக்ஸ்பிரஸ், அகமதாபாத் மும்பை இடையே ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ், டில்லி லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் ஷீர்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை 100% தனியார் ரயில் என்பதே பலர் அறியாத ஒன்று. 

போபாலில் ஹபீப்கஞ்ச் ரயில்வே ஸ்டேஷன் 2017இலேயே தனியார்மயம் ஆக்கப்பட்டது. 

வரும் நாட்களில் 150 ரயில்களை தனியார் முதலாளிகள் இயக்குவார்கள்.

எதிர்கால ரயில் பயணம் எப்படி இருக்கும்?

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19, இந்திய மக்கள் இந்த நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக சென்று வர உரிமை அளிக்கிறது. மட்டுமின்றி, மக்களால் தாங்க முடிகிற, மலிவான செலவில் பயண வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.

நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒருங்கிணைக்கப்படாத உதிரி தொழிலாளர்கள், உடல் உழைப்பாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று உழைக்கிற தொழிலாளர்கள்,

மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து சென்று உழைத்து தோலை தூரங்களில் இருக்கிற தம் குடும்பங்களை காப்பாற்றுகிற உழைப்பாளர்கள், குறைந்த பட்ச கூலி சட்டத்துக்குள் வராத பல கோடி தொழிலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் தம் போக்குவரத்துக்கு நம்பி இருப்பது அரசின் ரயில் வண்டிகளை மட்டுமே. 

கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு இருந்த ஒரே போக்குவரத்து சாதனம் ரயில்கள் மட்டுமே. அந்த நேரத்தில் ஆக்சிஜன் நிரம்பிய டேங்கர்களை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சென்றவை ரயில்கள்தான். அனைத்தும் அரசின் வசம் இருந்ததால் இவை சாத்தியம் ஆனது.

ஒட்டுமொத்த ரயில்வே துறையும் monopoly ஆக தனியார் முதலைகள் வசம் சென்றால் அவர்கள் வைத்ததே ரயில் கட்டணங்கள். ஏற்கனவே பிரிமியம், பிரிமியம் தட்கல் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடியை ஐ ஆர் சி டி சி செய்துகொண்டு இருக்கிறது. 

உடைமை, பராமரிப்பு, கட்டமைப்பு, மக்கள் சேவை இவை அனைத்தையும் ஒன்றிணைத்து பார்க்க மக்கள் நல அரசால் மட்டுமே முடியும், எந்த ஒரு தனியார் முதலாளிக்கும் இந்த நான்கு தலையாய கோட்பாடுகளை விடவும் முதன்மையாக இருப்பதும் எக்காலத்திலும் இருக்கப்போவதும் லாபம் லாபம் மட்டுமே. மக்களின்,பயணிகளின் பாதுகாப்பு என்பது இரண்டாம் பட்சம் கூட இல்லை, அது அவர்களின் அஜெண்டாவில் என்றுமே இருக்காது என்பதற்கு போபால் விசவாயு, என்ரான், ஸ்டெர்லைட் என நிறைய உதாரணங்கள் உள்ளன.

ஏற்கனவே 46க்கும் மேற்பட்ட அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்ட பி ஜெ பி அரசு இந்தியாவின் மிகச்சிறந்த, மிகப்பெரிய, பல பத்தாண்டுகள் பழமையான மக்கள் சொத்தான ரயில்வே துறையையும் அம்பானி, அதானிகளுக்கு விற்றுவிட மிக விரிவான திட்டங்களை தீட்டி உள்ளது. மக்களின் கவனத்தை இவற்றில் இருந்து திசை திருப்பவோ மதக்கலவரம், ராம், மந்திர், அயோத்தி, ஹிஜாப், ஜிஹாத், எல்லை தாண்டிய பயங்கரவாதம், புதிய நாடாளுமன்றம், 2000 ரூபாய் நோட்டு என  ஏகப்பட்ட வெத்துவேட்டுகளை வெடிக்கிறது.

....

(2.6.2023 அன்று ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தின் பின் எழுதியது)


எல்லாம் சுகமே

நம் இளைஞர்களின் சமூக உணர்வுக்கு இந்த உரையாடல் உரைகல்லா?

உணவகம் ஒன்றில் கேட்க நேர்ந்த உரையாடல் இது.

மாட்டுக்கறி தவாக்கறி அந்த கடையில் படு சூப்பர். மாலையில் பரோட்டா, இடியாப்பம், இதர புலால் ஐட்டங்கள் படு ஓட்டம். சில நாட்கள் முன் அதாவது மே 5 வணிகர் தினம் அன்று மாலை நேரம் சென்றிருந்தேன், பல ஹோட்டல்கள் மூடி இருந்ததால் அன்று கூட்டம் அதிகமாக இருந்தது. 

கல்லாப்பெட்டியில் இருந்த உரிமையாளர் ஆன இளம்பெண்ணுக்கும் மாட்டுக்கறி தவாக்கறி வாங்க வந்த ஒரு இளைஞனுக்கும் நடந்த உரையாடல்:

என்னங்கண்ணா, பார்த்து ரொம்ப நாளாச்சு?

நான் எங்கே இங்கே இருக்கேன், குஜராத்லய்ல இருக்கேன், வேலை அங்கே, வீடும் அங்கேதான்

வெக்கேசனுக்கு வந்தேன்... அப்பா அங்கே வந்தப்போ ரொம்ப கஷ்டப்பட்டாரு

ஏண்ணா?

ஆமா, அங்கே பீப்லாம் நெனெச்சே பாக்க முடியாது. சுத்தமா கெடையாது. அப்பா இஷ்டமா சாப்டுவாரு, பாவம் இருந்த ஆறு மாசமும் அவஸ்தைதான்

ஓ! மத்தப்படி அங்கே எல்லாம் ஓகேயா அண்ணா?

அய்யோ, படு சூப்பர்! ஒரு கொறைச்சலும் இல்ல (ஆகப்பெரிய பெருமிதமும் பெருமையும் அவன் முகத்திலும் உடல் அசைவிலும் இப்போது)

... ...

கல்லாப்பெட்டியில் இருந்த உரிமையாளர் ஆன இளம்பெண் இஸ்லாமியர். அந்த இளைஞன் இஸ்லாமியர் அல்லாத பெரும்பான்மை மதத்தவர்.

எல்லாம் சரியாக இருக்கிறதா நண்பா என்று நான் கேட்டு விட முடியும்தான், ஆமா சரியாகத்தான் இருக்கு, என்ன இப்போ என்றுதான் அவனும் சொல்லியிருப்பான். ஆனால் அந்த இளம்பெண் தன் எளிய கேள்வியால் அவனை வீழ்த்தி நகையாடி விட்டாள் என்பது அவனுக்கே தெரியவில்லை! "மத்தப்படி அங்கே எல்லாம் ஓகேயா அண்ணா?"

3000 மக்களின் குருதி அந்த மாநிலத்தின் தெருக்களில் அன்றைக்கு ஓடியபோது வேடிக்கை பார்த்தவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? அல்லது இனிமேல் ஓடினால் வேடிக்கை பார்க்கப்போவது யாராக இருப்பார்கள்?

நமக்கு தேவை ஒரு பிளேட் பீப் தவாக்கறி, அவ்வளவே, எல்லாம் சுகமே..

புதன், ஏப்ரல் 19, 2023

விடுதலை திரைப்படத்தின் அரசியல்

விடுதலை திரைப்படத்தின் அரசியல்
 
அரசு The State என்பது என்ன? அதன் தன்மை யாது? பொருள் என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவ த்தை அறவே தூக்கி எறிய போராடும் தொழிலாளிவர்க்க கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பற்றி கொள்ள வேண்டிய அடிப்படை யான உறவு நிலை யாது?
 
"வன்முறைகளை பயன்படுத்தும், வன்முறைக்கு மக்களை கீழ்ப்படுத்தும் முறையான தனி எந்திரமே அரசு. ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் எந்திரம்தான் அரசு."
மாறாக "அரசு என்பது தெய்வீகமானது, இயற்கைக்கு அப்பாற்பட்டது, தெய்வத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒருசக்தி, அதாவது மனிதனுடையது அல்லாத ஒன்றை அவனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றால் கொடுக்கப்பட்டதை அது தன்னோடு கொண்டு வருகிறது; மக்களுக்கு அதனை வழங்குகிறது அல்லது வழங்குவதற்காக வைத்துள்ளது" என்ற போதனையோ சுரண்டும் வர்க்கங்களின், அதாவது நிலப்பிரபுகள், முதலாளிகளின் நலன்களோடு மிக மிக நெருக்கமாக பிணைக்கப் பெற்றுள்ளது. அவர்களின் நலன்களுக்காக மிக நன்றாக சேவை செய்கின்றது.
... ....
அரசு என்பது எல்லாக் காலங்களிலும் இருந்தது இல்லை. அரசு இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது. எங்கெங்கே எவ்வெப்போது சமுதாயத்தில் வர்க்கப்பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகின்றார்களோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசும் தோன்றுகிறது.
... ...
ஆதியில் இருந்த சமூக அமைப்பு தந்தைவழிக்குடும்ப அமைப்பு. அதாவது குலம், தலைமுறை clan ஆகியவற்றுக்கு இணங்கி மக்கள் கூடிவாழும் முறை. இது ஆதிகாலக்கம்யூனிசத்தை ஓரளவு ஒத்திருக்கும் காலம். அதாவது அரசு என்ற ஒரு எந்திரம், அடக்குமுறை எந்திரம் இல்லாது இருந்த காலம். சரியாக சொல்வது எனில் ஒடுக்குபவனும் இல்லை ஒடுக்கப்படுவோனும் இல்லை , வர்க்கப்பிரிவினை இல்லாத சமூகம். Original patriarchal, primitive society.
இதன் பின்னர் தோன்றிய ஆண்டான் அடிமை சமூகமே முதல் வர்க்கப்பிரிவினை தோன்றிய சமூகம். Slave owners and slaves.
மூன்றாவதாக நிலப்பிரபுத்துவ சமூகம். சுரண்டும் நிலப்பிரபுக்கள், சுரண்டப்படும் பண்ணையடிமைகள். Feudalistic society. நடைமுறையில் இவ்வடிவம் வேறு எல்லா நாடுகளையும் விடவும் ருஷ்யாவில் நீண்டகாலமாகவும் மிகவும் கொடூரமான வடிவங்களுடனும் நீடித்தது என்று லெனின் குறிப்பிட்டார்.
பண்ணையடிமை, அதாவது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வாணிகம் வளர்ச்சியுற்று உலகச்சந்தை தோன்றி பணப்புழக்கம் வளர்ச்சியுறும்போது ஒரு புதிய வர்க்கம் தோன்றியது, அதுவே இன்று நாம் காணும் நான்காவதான முதலாளித்துவ சமுதாயம், மூலதனத்தின் ஆதிக்கம் கோலோச்சும், பாட்டாளிகள் என்ற எதிர்த்தரப்பின் உழைப்பில் தன் மூலதனத்தை பெருக்கி கொண்டே செல்லும் முதலாளி வர்க்கம் தோன்றிய சமூக அமைப்பு.
... ...
சமுதாயம் வர்க்கங்களாக பிரிவதற்கு முன் அரசு என்ற நிறுவனம் இருந்தது இல்லை.
 
எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாக பிரிகின்றதோ, சுரண்டுபவன் சுரண்டப்படுபவன் என்ற இரு பிரிவுகளாக பிரிகின்றதோ அங்கு அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் தனி எந்திரமாக தோன்றியது என்பதை வரலாறு சொல்கிறது. வர்க்கப்பிரிவினை உண்டாகி உறுதியாக வேரூன்றிவிட்டபோது, வர்க்கச்சமுதாயம் தோன்றிவிட்டபோது, அரசு என்பதும் கூடவே தோன்றி, உறுதியாகவும் வேரூன்றிவிட்டது.
 
அரசு என்பது மனித சமுதாயத்திற்கு முழுமையாக புறத்தே நிற்கும் ஆளுவதற்கான எந்திரம். ஆளுவதை மட்டுமே தொழிலாக கொண்ட ஒரு தனிப்பிரிவினர் தோன்றும்போது, பிறருடைய சித்தத்தை கட்டாயப்படுத்துவதற்கும் கீழ்ப்படுத்துவதற்கும், அவர்களை ஆளும்பொருட்டு அரசு என்னும் வடிவம் தோன்றுகிறது. அந்த தனி எந்திரத்தின் அங்கங்கள்தான் சிறைச்சாலை, ராணுவம், பிற ஆயுதப்படைகள், இவற்றின் மென்மையான வடிவங்கள் ஆன சிவில் நிர்வாகம் ஆகியன. அந்த எந்திரத்தை எதிர்த்து எப்போதெல்லாம் வெகுமக்கள் எதிர்குரல் எழுப்புகின்றார்களோ அல்லது கிளர்ச்சியில் இறங்குவார்களோ அல்லது கிளர்ச்சியில் இறங்க முற்படுகின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களை அடக்கி ஒடுக்க ஏவப்படும் அடக்குமுறை எந்திரங்கள்தான் சிறைச்சாலை, இராணுவம், தனிப்பட்ட படைப்பிரிவுகள் அதாவது போலீஸ், துணை ராணுவம், அதன் 'மென்மையான' வடிவங்களோடு இயங்கும் சிவில் நிர்வாகம், சட்ட நீதி அமைப்புகள் ஆகியவை, இவை அனைத்துமே அரசின் வடிவங்கள்தான், அங்கங்கள்தான்.
அரசு என்ற அந்த எந்திரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் உள்ளது. ஆதிகாலத்து குண்டாந்தடியாக, ஆண்டான் அடிமை சமூகத்தின் சற்று மேம்பட்ட ஆயுத வகைகளாக, மத்தியக்காலத்தின் துப்பாக்கி போன்ற சுடுகருவிகளாக, விஞ்ஞான தொழிநுட்பம் வெகுவாக முன்னேறிவிட்ட இன்றைய நவீன காலத்தின் புதுவகை ஆயுதங்களாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.
 
சுருக்கமாக, சொத்து ஏதும் அற்ற மக்கள்திரளின் தாக்குதலில் இருந்து சொத்துடைமையோரின் சொத்துக்களை பாதுகாப்பதே அரசு என்ற நிறுவனத்தின் ஒற்றை நோக்கம். ஆனால் சொத்து இருப்பவனும் உழைப்புசக்தியை தவிர வேறு எந்த சொத்தும் இல்லாதவனும் சட்டத்தின்படி சரிநிகர் சமானம், எல்லோரும் சமம் என்று போதிக்கப்படும், இந்த போலி கட்டமைப்பை உண்மை என்று நம்ப வைப்பதற்கு ஆன அனைத்தும் மக்கள் மத்தியில் செய்யப்படும், அவை நலத்திட்டங்கள் என்று சொல்லப்படும், அந்த அரசு welfare State என்றும் அழைக்கப்படும். 
 
இந்த அமைப்புக்குள் அல்லது நம்பிக்கைக்குள் செயல்படும் அல்லது இந்த அமைப்பை ஒத்துக்கொண்டு அதன் கட்டமைப்புக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாத வகையில் செயல்படும் 'அரசியல்' இயக்கங்கள், 'அரசியல்' கட்சிகளுக்கு அரசு என்ற நிறுவனம் முழு அனுமதி அளிக்கும், அத்தகைய இயக்கங்களின் 'போராட்ட' வடிவங்களுக்கும் அனுமதி அளிக்கும். குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் அத்தகைய 'போராட்டங்கள்' 'ஆர்ப்பாட்டங்கள்'' அரசின் அனுமதி பெற்று நடத்தப்படும் 'ஜனநாயக' வழி போராட்டங்கள் ஆக இருக்கும். ஏனெனில் இந்த அரசின் கீழ் இயங்கும் 'அரசியல் கட்சிகள்', இந்த அரசால் வரைந்து நிலையாக்கப்பட்ட அரசியல் சாசனத்துக்கு விசுவாசமாக இருப்பதாகவும் அதற்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படுத்த முனைவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கட்சிகள். எனவே அரசு என்ற நிறுவனத்தின் பகுதியாகவோ அதன் தொங்கு தசையாகவோ ஆகிவிட்ட இயக்கங்கள் அல்லது கட்சிகள்.
 
சொத்து ஏதும் அற்ற மக்கள்திரளின் தாக்குதலில் இருந்து சொத்துடைமையோரின் சொத்துக்களை பாதுகாப்பதே அரசு என்ற நிறுவனத்தின் ஒற்றை நோக்கம். தனது நோக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு சிறு அசைவும் வெகுமக்கள் திரளில் இருந்து பிறக்கும் எனில் அல்லது அந்த மக்கள் திறளை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு இயக்கத்தின் செயற்பாடுகளால் அந்த நோக்கத்திற்கு ஊறு விளையும்
எனில் மேலே குறிப்பிட்ட சிவில் நிர்வாகம், ஆயுதப்படைகள் ஆகியவை களத்தில் இறக்கப்படும்.
 
- மு இக்பால் அகமது

செவ்வாய், மார்ச் 28, 2023

புரட்சியாளன் பகத்சிங்கை நினைவுகூர்ந்து சில கடிதங்கள்

புரட்சியாளன் பகத்சிங்கை நினைவுகூர்ந்து சில கடிதங்கள்

(1)

3 மார்ச் 1931

என் அன்பு குல்தார்,
கண்களில் கண்ணீர் வழிய இன்று நான் உன்னை பார்க்கும்போது வருத்தமடைந்தேன். இன்று உன் பேச்சில் ஆழமான வலி இருந்தது. நீ அழுது என்னால் பார்க்க முடியவில்லை.
என் செல்லமே, உன் படிப்பை தொடர்வதில் கவனம் செலுத்து, உன் உடல் நலத்தில் கவனமாக இரு.
மனதில் உறுதி வேண்டும். வேறு என்ன... சொல்ல? (வேறு என்ன எழுத முடியும்?)... என்னால் என்ன கவிதை பாடிவிட முடியும்? கேள்:
அடக்குமுறையின் புதிய புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் எப்போதும் முனைப்பாக இருக்கின்றார்கள்

அடக்குமுறையின் எல்லைதான் என்ன என்று தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கின்றோம்

நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்?
இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
என் சக பயணிகளே, நான் இங்கே ஒரு தற்காலிக விருந்தாளி, அவ்வளவுதான்,
நான் ஒரு விளக்கு, விடியும்வரை எரிவேன், அணைக்கப்படும் நேரத்தை எதிர்பார்த்து இருப்பேன்.
வீசும் தென்றல் என் சிந்தனையின் சாரத்தை எங்கெங்கும் எடுத்துச்செல்லும்
இந்த உடலோ கையளவு மண் அன்றி வேறில்லை, எங்கு வாழ்ந்தாலும் எங்கே மடிந்தாலும்.
சரி, செல்கின்றேன்.
நாட்டு மக்களே, மகிழ்ச்சியுடன் இருங்கள், பயணத்தை தொடங்கி விட்டேன்.
துணிச்சலுடன் வாழுங்கள்.
வணக்கம்.
உன் சகோதரன்,
பகத் சிங்.
....
1931 மார்ச் 3 அன்று சிறையில் அவர் குடும்பத்தினர் கடைசியாக அவரை சந்தித்தார்கள். இளைய சகோதரன் குல்தார் கண்ணில் நீர் வழிய நின்ற காட்சியை பகத் சிங்கால் தாங்க முடியவில்லை. குல்தாருக்கு பகத் எழுதிய கடிதமே இது.
.... ......

(2)
(ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் எனது)

லாஹூர் மத்திய சிறைச்சாலை
24.7.30
என் அன்புக்குரிய ஜெய்தேவ், 1
த்வாரகதாஸ் நூலகத்தில் இருந்து கீழே கண்ட புத்தகங்களை பெற்று குல்விர் Kulvir மூலம் வரும் ஞாயிறு அன்று அனுப்பி வைப்பாயாக:
Militarism (Karl Liebknecht)
Soviets at Work
Left-Wing Communism
Fields, Factories and Workshops
Land Revolution in Russia
Why Men Fight (B. Russel)
Collapse of the Second International
Mutual Aid (Prince Kropotkin)
Civil War in France (Marx)
Spy (Upton Sinclair)
பஞ்சாப் பொது நூலகத்தில் இருந்து Historical Materialism (Bukharin) என்ற நூலையும் பெற்று எனக்கு அனுப்பு. போர்ஸ்ட்டால் சிறைக்கு Borstal Jail ஏதாவது புத்தகங்கள் அனுப்பப்பட்டனவா என்பதை நூலகரிடம் கேட்டு உறுதி செய். அங்கே புத்தகங்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது. அவர்கள் தமக்கு தேவையான புத்தகங்களை பட்டியலிட்டு சுக்தேவின் சகோதரர் ஜெய்தேவ் மூலம் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். ஆனால் இன்றுவரை அவர்களுக்கு ஒரு புத்தகமும் கிடைக்கவில்லை. அப்படி அவர்களுக்கு கிடைத்து இருந்தால், புத்தகங்களின் பட்டியல் எதுவும் இல்லாமல் இருந்தால், லாலா பிரோஸ் சந்த்திடம் Lala Firoz Chand சொல்லி அவருக்கு விருப்ப uiமான புத்தகங்கள் சிலவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள். வரும் ஞாயிறு நான் அங்கே செல்வேன், அதற்கு முன்பாக புத்தகங்கள் அவர்களுக்கு சென்று சேர வேண்டும். இதை நீ கண்டிப்பாக செய்ய வேண்டும். நினைவில் கொள்க.
Darling இன் Punjab Peasants in Prosperity and Debt என்ற புத்தகத்தையும் அதே போன்ற 2 அல்லது 3 புத்தகங்களையும் டாக்டர் ஆலம் அவர்களுக்காக அனுப்பி வை. இப்படி ஒரு சிரமத்தை கொடுப்பதற்கு நீ என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன். இனிமேல் இப்படியான தொந்தரவுகள் தர மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பை தெரிவிக்கவும், லஜ்ஜாவதிக்கு என் மரியாதையை தெரிவிக்கவும். தத்தின் Dutt சகோதரி வந்தால் என்னை வந்து பார்க்க மறக்க மாட்டார் என்பதை நான் அறிவேன்.
அன்புடன்
பகத் சிங்
...
1 ஜெய்தேவ் குப்தா பகத்சிங்கின் நெருங்கிய நண்பர், பள்ளித்தோழன்
... ...

(3)

மார்ச் 22, 1931
தோழர்களே,
வாழ வேண்டும் என்ற வேட்கை இயற்கையானது. எனக்கும் அந்த வேட்கை உண்டு. நான் அதை மறைக்க விரும்பவில்லை. ஆனால் அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஒரு கைதியாகவோ கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டோ நான் வாழ விரும்பவில்லை. எனது பெயர் இந்தியப்புரட்சியின் ஓர் அடையாளமாக மாறிவிட்டது. புரட்சிகர கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும்தான் என்னை அந்த உயரத்துக்கு கொண்டு சென்றன, நான் உயிரோடு இருந்தால் அந்த உயரத்தை தாண்டி எப்போதும் போக முடியாது.
எனது பலஹீனங்கள் எவை என்பதை இப்போது யாரும் அறிய மாட்டார்கள். ஆனால் தூக்கில் இருந்து நான் தப்பிப்பேன் எனில் எனது அந்த பலஹீனங்கள் வெளிச்சத்துக்கு வரும், புரட்சியின் அடையாளம் என்ற பெருமை சிதைக்கப்படும், ஒருவேளை ஒட்டுமொத்தமாக அது கரைந்துபோகவும் கூடும். மறுபுறம் நான் புன்னகையுடன் தூக்குக்கயிற்றை ஏற்பேன் எனில் இந்திய தாய்மார்கள் உற்சாகம் பெறுவார்கள், தம் குழந்தைகள் பகத்சிங்காக மாற வேண்டும் என உறுதி பூணுவார்கள். ஆக நம் தேச விடுதலைக்கான போராட்டத்தில் தம் உயிரை தியாகம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும். அதன் பின் புரட்சி எனும் பேரலையை எதிர்கொள்வது ஏகாதிபத்தியத்துக்கு சவாலாக மாறும், அவர்களின் அனைத்து சக்தியையும் சாத்தான் போன்ற முயற்சிகளையும் திரட்டி எதிர்த்தாலும் புரட்சியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது.
ஆம், ஒரே ஒரு விசயம் நெருடலாக உள்ளது. மனித சமூகத்திற்கும் எனது நாட்டிற்கும் ஏதாவது செய்து விட வேண்டும் என்ற பேரவா என் இதயத்தில் நிரம்பியுள்ளது. ஆனால் அந்த இலட்சியங்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. வாழ்வேன் ஆயின் ஒருவேளை அவற்றை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்று ஒருவேளை நான் விரும்புவேன் எனில் அது இதன் பொருட்டாகத்தான் இருக்கும்.
இப்போதெல்லாம் நான் என்னை நினைத்துப் பெருமைப்படுகின்றேன், இறுதிச்சோதனைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளேன். அந்த நாள் விரைவில் வரட்டும்.
உங்கள் தோழமைமிகு
பகத் சிங்
...
இது பகத்சிங்கின் கடைசி கடிதம், தூக்கில் இடப்பட்ட நாளுக்கு முன் அவர் எழுதியது. சிவ வர்மா கூறுகிறார்: வார்டு எண் 14இல் இருந்த (மரண தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த செல் அருகில்) இரண்டாவது லாஹூர் சதி வழக்கு கைதிகள் பகத்சிங்குக்கு ஒரு குறிப்பு எழுதி 'வாழ்வதற்கு விருப்பம் உள்ளதா?' என்று கேட்கின்றனர். பகத்சிங் எழுதிய பதிலே இது. நாள் மார்ச் 22, 1931. இக்கடிதத்தை உருது மொழியில் பகத் எழுதினார்.
... ...

(4)

பெறுநர்
பஞ்சாப் கவர்னர்
ஐயா (Sir),
கீழே கண்ட கோரிக்கையை தகுந்த மரியாதையுடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
இந்திய பிரிட்டிஷ் அரசின் தலைவரான வைசிராய் உத்தரவின்பேரில் சிறப்பு எல்சிசி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் எல்சிசி டிரிப்யூனல் 1930 அக்டோபர் 7 ஆம் தேதி அன்று எங்கள் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எங்கள் மீது சாற்றப்பட்ட முதன்மையான குற்றச்சாட்டு என்னவெனில் இங்கிலாந்து மன்னர் மரியாதைக்குரிய ஜார்ஜ் அவர்களுக்கு எதிராக போரை நடத்தினோம் என்பதே.
நீதிமன்றத்தின் மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் இரண்டு விசயங்களை ஒத்துக்கொள்வதாக உள்ளன:
பிரிட்டிஷ் தேசத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே ஒரு போர் நடந்துகொண்டு இருக்கின்றது என்பது முதலாவது. நாங்கள் அந்தப் போரில் நேரடியாக ஈடுபட்டோம், எனவே நாங்கள் போர்க் கைதிகள் என்ற தகுதி படைத்தவர்கள் ஆகின்றோம், இது இரண்டாவது. இரண்டாவது சற்றே மிகையாக தெரிந்தாலும் அதனுள் பொதிந்துள்ள உள்நோக்கம் எதுவாயினும் நாங்கள் அதை மறுக்கப்போவதில்லை.
முதலாவது விசயத்தை பேச வேண்டும் எனில் நாங்கள் கட்டாயமாக சிலவற்றை விளக்கியாக வேண்டும். அந்த சொற்றொடரில் சொல்லப்பட்டதை போல் அப்படி ஒரு போர் எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவு. இருப்பினும் அந்த தீர்மானத்தில் அடங்கியுள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள எங்களை நீங்கள் அனுமதித்தே ஆக வேண்டும், அது எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அப்படியே. ஆனால் அதனை மிகச்சரியாக புரிந்துகொள்ள வேண்டும் எனில் அதனை நாங்கள் இன்னும் விரிவாக விளக்க வேண்டும். ஆம் போர் நடக்கிறது, போர் இன்னும் நடக்கும், இந்திய பாட்டாளிமக்களும் அவர்களது இயற்கை மூலாதாரங்களும் ஒரு சில ஒட்டுண்ணிகளால் சுரண்டப்படுவது நீடிக்கும் வரை இந்தப்போர் நீடிக்கும் என்று நாங்கள் பிரகடனம் செய்கின்றோம். இந்த ஒட்டுண்ணிகள் முழுக்கவும் பிரிட்டிஷ் முதலாளிகளாக இருக்கலாம், அல்லது பிரிட்டிஷ் இந்திய முதலாளிகளின் கூட்டணியாக இருக்கலாம், அல்லது முழுக்கவும் இந்திய முதலாளிகளாக இருக்கலாம். அவர்கள் தமது இழிவான சுரண்டலை கூட்டணியான அல்லது முழுக்கவும் இந்திய அரசாங்க எந்திரத்தின் வழியே நடத்திக்கொண்டு இருக்கலாம். எப்படி ஆயினும் அவற்றுள் வேறுபாடு எதுவும் இல்லை. இந்திய சமூகத்தின் மேல்தட்டு வர்க்க தலைவர்களுக்கு சில சில்லறை சலுகைகள், சமரசங்களை கொடுப்பதன் மூலம் உங்கள் அரசு அவர்களை தம் பக்கம் வென்றிருக்கலாம், அதன் மூலம் விடுதலை இயக்கங்களின் நம்பிக்கை மீது ஒரு மனச்சோர்வு ரீதியான ஒரு தாக்குதலை ஏற்படுத்தியும் இருக்கலாம். இந்திய இயக்கத்தின் தலைமை, புரட்சிகர கட்சி இந்தப்போரின் அலையில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம். போகட்டும்.
எங்கள் மீது இரக்கம் கொண்டு எம்மீது கவலைகொண்டுள்ள தலைவர்கள் மீது நாங்கள் பெரிதும் மரியாதை வைத்துள்ளோம். ஆனால் அந்த தலைவர்கள் என்ன செய்தார்கள்? அந்த வீடற்ற, நண்பர்கள் அற்ற, வாழ வக்கற்ற பெண் உழைப்பாளிகள், புரட்சிகர கட்சியை சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இந்த பெண் உழைப்பாளிகளையும், தம்மையும் தம் நேசத்துக்குரிய கணவர்கள், சகோதரர்கள், இன்னும் தமது உயிருக்கு நிகரான அனைத்து சொந்த பந்தங்களையும், ஏன், தங்களையும் இந்தப் போரில் தத்துக்கொடுத்து தியாகம் செய்த வீர மங்கைகளையும் தமது அஹிம்சாவாத கற்பனா உலகின் (இந்த உலகம் ஏற்கனவே காலாவதியான உலகம் என்பது ஒருபுறம்) எதிரிகள் என்று குற்றம்சாட்டிய அந்த தலைவர்களை நாங்கள் எப்படி மறப்போம்? இந்த போராளிகளை உங்கள் அரசாங்கம் சட்டவிரோதிகள் என்று அறிவித்தது. ஆனால் இந்த தலைவர்களோ இவர்களை ஒட்டுமொத்தமாக மறந்தார்கள், தாங்கள் முன்னெடுத்த சமாதான பேச்சுவார்த்தைகளில் அவர்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிட மறந்தார்கள்.
சிறு கரும்புள்ளியும் இல்லாத இவர்களின் மாண்பை, இவர்களது கட்சியின் மாண்பை குலைக்கும் வண்ணம் உங்கள் ஏஜெண்டுகள் மிக கீழ்த்தரமான ஆதாரங்கள் அற்ற கட்டுக்கதைகளை பரப்பிவிடலாம், போகட்டும். இந்தப்போர் தொடர்ந்து நடக்கும் என்பதை சொல்லிக்கொள்கின்றோம்.
இந்தப்போர் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கலாம். வெட்டவெளிச்சமான, மறைவான, முழுவதும் கிளர்ச்சி வடிவிலான, வாழ்வா சாவா என்ற இக்கட்டான போராக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது ரத்தம் சிந்தக்கூடிய போரா அல்லது அமைதி வழியிலான போரா, எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது, நாங்கள் அல்ல, நீங்கள்தான். உங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே நடக்கட்டும். ஆனால் அந்தப்போர் இடைவிடாது நடக்கும், சில்லரைத்தனமான.... (1), அர்த்தமற்ற நியாய வாதங்கள் போன்றவற்றை தள்ளிவைப்போம். அந்தப்போர் புதிய சக்தியுடன், மகத்தான , வளைந்து போகாத உறுதியுடன் தொடர்ந்து நடக்கும், சோசலிச குடியரசு நிறுவப்படும் வரை, இன்றைய சமூக கட்டமைப்பு முற்றாக துடைக்கப்பட்டு புதிய சமூக கட்டமைப்பு நிறுவப்படும் வரை, சுரண்டலின் அனைத்து வடிவங்களும் ஒழிக்கப்பட்டு நியாயமான வளமான நிரந்தர அமைதி நிலவும் ஒரு சமூக அமைப்புக்குள் மனித சமூகம் நுழையும் வரை இந்தப்போர் நடக்கும். வெகு விரைவிலேயே இறுதிப்போர் நடக்கும், இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்படும்.
முதலாளித்துவ, ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப்போர் எங்களால் தொடங்கப்பட்டதும் அல்ல, எங்கள் வாழ்நாளில் முடியப்போவதும் இல்லை. வரலாற்றுப் போக்கின் தவிர்க்க முடியாத தொடர் விளைவுகளும் அன்றைய சூழலுமே இந்தபோரை தீர்மானிக்கின்றன. எங்களது சிறிய தியாகங்கள் யாவும் இந்தப்போர் என்னும் சங்கிலித்தொடரின் ஒரு கண்ணி என்றே நாங்கள் கருதுகின்றோம். திரு.தாஸ் அவர்களின்ஈடு இணையற்ற தியாகம், தோழர் பகவதி சரண் அவர்களின்
வருந்தத்தக்க ஆனால் மதிப்பற்ற தியாகம், எங்கள் அன்புக்குரிய போராளி ஆசாத்தின் வீர மரணம் ஆகிய அனைத்தும் இந்தக் கண்ணியை மிகப்பொருத்தமாக அழகு படுத்தியுள்ளன.
எங்கள் மரணம் பற்றி நாங்கள் சொல்கின்றோம், அனுமதியுங்கள். எங்களை கொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள், கண்டிப்பாக செய்வீர்கள். உங்களிடம் அதிகாரம் உள்ளது, இந்த உலகின் மிகப்பெரிய நியாயம் என்னவென்றால் அதிகாரம் என்பதுதான். "வலிமை எதுவோ அதுவே நியாயமானது" என்ற சொலவடைதான் உங்களின் வழிகாட்டி என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் மீதான விசாரணை எப்படி நடந்தது என்பதே அதற்கு போதுமான சான்றாகும்.
நாங்கள் குறிப்பாக சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி நாங்கள் ஒரு போரை நடத்தினோம், எனவே நாங்கள் போர்க்கைதிகள். எனவே உங்கள் தீர்ப்பின்படியே நாங்கள் நடத்தப்பட வேண்டும், அதாவது எங்களை தூக்கில் இட்டு கொல்வதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டும். உங்கள் நீதிமன்றம் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்பதை இப்போது நீங்கள்தான் உறுதிசெய்ய வேண்டும்.
உங்கள் ராணுவத்தின் படைப்பிரிவை அனுப்பி எங்கள் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு இடுவீர்கள் என்று வேண்டுகின்றோம், அவ்வாறே நம்புகின்றோம்.
உங்கள்,
பகத்சிங்
ராஜ்குரு
சுக்தேவ்
... ...
(1) தெளிவற்ற எழுத்து

Bhagat Singh, The Jail Notebook and Other Writings,
Chaman Lal,
LeftWord

(ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் எனது)

திங்கள், பிப்ரவரி 13, 2023

வாணிஜெயராம்... பொங்கும் கடலோசை

1979. மதுரை செல்லூரில் இருந்து இடதுபுறம் திரும்பி கோரிப்பாளையம் செல்லும் அந்த வளைவில் இருந்த டீ கடைக்கு மாலை 4 மணிக்கு நண்பர்களுடன் சென்றால் உடனடியாக கடைக்காரர் செய்வது இதுதான்:  எச் எம் வி கிறாமபோனில் எந்த பாட்டு ஓடிக்கொண்டிருந்தாலும் நிறுத்திவிட்டு அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் பளபளக்கும் கருப்பு எல் பி ரிகார்டை மிக ஸ்டைலாக எடுத்து கச்சிதமாக இசைதட்டு மேடையில் வைத்து தட்டின் விளிம்பில் ஊசி முனையை வைப்பார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இதை கவனிப்போம். அந்த ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தை தொடர்ந்து கிடார் ஒலிக்க தொடங்கும். நாங்கள் பாட்டுக்குள் போக அவர் டக் டக் என பலகையில் வரிசையாக நான்கு டீ கிளாஸ்களை வைத்து டீ போடும் வேலைக்குள் நுழைவார். டிகாக்சன் வடிகட்டியில் இறங்கும் நேரம் நானே நானா யாரோதானா என வாணி பாடத் தொடங்குவார். தேநீரும் வாணியும் சேர்ந்து கலந்து மெல்ல மெல்ல இறங்க இறங்க, கோரிப்பாளையம் சந்திப்பின் பரபரப்பான போக்குவரத்து எல் பி ரிகார்டின் மெல்லிய ஏற்ற இறக்கத்துக்குள் மறைந்து வேறு ஒரு உலகத்துக்குள் நாங்கள் இருப்போம்.

இது தினமும் நடக்கும் ஒரு சடங்காக பல நாட்கள் தொடர்ந்தது.

.....

அதற்கு முன் இலங்கை வானொலியில் தினமும் பலமுறை ஒலித்தது மல்லிகை என் மன்னன் மயங்கும் ....தான். 1974இல் வெளியான தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற பாடல், எம் எஸ் விஸ்வநாதன் வழங்கிய அந்த வாய்ப்பு தமிழில் அவருக்கான பெரும் கதவை திறந்துவிட்டது. ஒரு நாளில் பலமுறைகள் இலங்கை வானொலியில் ஒலித்த பாடல் அது. அதற்கு முன்பே வீட்டுக்குவந்த மருமகள்(1973) என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலை பாடியிருந்தார் அவர். 

30.11.1945 அன்று தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்தவர் வாணி. துரைசாமி ஐயங்கார் பத்மாவதி தம்பதியரின் ஒன்பது பிள்ளைகளில் ஆறு பேர் பெண்கள், அவர்களில் ஒருவர் கலைவாணி. அவரது அம்மா முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர். மூன்று வயது நிரம்பிய கலைவாணியால் ராகங்களை அடையாளம் கண்டு சொல்ல முடிந்ததால் அவர் மீது தனிப்பட்ட சிறப்பு கவனம் எடுத்துக்கொண்ட பெற்றோர் அவரை முறையாக சங்கீதம் கற்க அனுப்பினார்கள். ஐந்து வயதில் சரளிவரிசையை கற்காமலேயே நேரடியாக முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளை பாடும் அளவுக்கு கலைவாணி திறமை பெற்று இருந்துள்ளார். அவை அபூர்வமான ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் எட்டாவது வயதில் சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் பாடியுள்ளார். சென்னையில் க்வின் மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணியில் சேர்ந்துள்ளார். ஜெயராமுடன் திருமணம் ஆன பின் பம்பாய் சென்றுள்ளார். அவரது கணவர் இரண்டு எம் ஏ பட்டங்கள் படித்தவர். London Institute of Management இல் படித்தவர். உயர்பதவியில் இருந்த அவர் வாணியின் இசைத்திறனை மேலும் ஒளிரச்செய்யும் வண்ணம் அதற்கான அடுத்த கட்ட பயிற்சிகள், வாய்ப்புகளுக்காக தன் வேலையை உதறிவிட்டு வாணியின் நலைனில் முழுமையாக கவனம் எடுத்துக்கொண்டார். வாணியும் தன் வங்கிப்பணியில் இருந்து விலகினார்.

அதன் அடுத்த கட்டமாக உஸ்தாத் அப்துல் ரஹ்மான்கான் அவர்களிடம் இந்துஸ்தானி சங்கீதம் கற்றார். வாய்ப்பாட்டிசையின் பலவேறு வடிவங்கள் ஆன தும்ரி, கஜல், பஜன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். அவரது முதல் இசை அரங்கேற்றம் 1969இல் நடந்தது. அன்றையபுகழ்பெற்ற இந்தி திரைப்படஇசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவர்களிடம் வாணியை உஸ்தாத் அறிமுகப்படுத்தி வைக்க, மறுநாளே ஒரு மராட்டிய நாடகம் ஒன்றுக்கு பாடும் வாய்ப்பை வாணிக்கு தேசாய் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு வந்ததுதான் வாணிக்கான கலையுலக வாழ்வின் பெரும் திருப்பமாக அமைந்தது. ஆம், 1971இல் வசந்த் தேசாய் தான் இசையமைத்த Guddi படத்தில் மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பை வாணிக்கு வழங்கினார். அவற்றுள் Bole re papihara என்ற துள்ளல் பாடல் மிகவும் புகழ்பெற்றதானது. 

இதன் பின் இந்தி திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அன்றைய மெட்றாசில் வாணி பாடிய இந்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அங்கே வந்திருக்கிறார். வாணியின் திறனை அறிந்து தாயும் சேயும்  என்ற படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார், ஆனால் படம் வெளியாகவில்லை.

அதேபோல் இரண்டாம் நாள் பயிற்சியில்  ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது புகழ்பெற்ற இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. 1973இல் ஸ்வப்னம் என்ற படத்தில் சவுரயுதத்தில் விடர்னொரு கல்யாண சவுகந்திகமானீ பூமி... என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட இசைக் கோர்வையுடன் ஆன சலீலின் பாடலை பாடினார். யுத்த பூமி (1976) என்ற படத்தில் ஆஷாட மாசம் ஆத்மாவில் மோகம்... என்ற பாடல் ஆர் கே சேகரின் இசையில் அவருக்கு வாய்த்தது. ஏ ஆர் ரஹ்மானின் தந்தைதான் ஆர் கே சேகர். 

நிகழ்ச்சி ஒன்றில் வாணியின் திறன் கண்டு மகிழ்ந்த எம் எஸ் விஸ்வநாதன் 1973இல் அவருக்கு சிறப்பான இடத்தை வழங்கினார். தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற மல்லிகை என் மன்னன் மயங்கும்... ... என்ற பாடலே அது. பத்தினிப்பெண் என்றொரு திரைப்படம். எம் எஸ் விஸ்வநாதன் இசை. பாடல் பதிவு முடிந்தபின் கேட்டுப்பார்க்க பாடல் பதிவறைக்கு வந்த வாணியை எம் எஸ் வி அழைத்தார். ஆஹா, நாம் சரியாக பாடவில்லை, இன்னொரு டேக்கா என்று சந்தேகப்பட்ட வாணிக்கு எம் எஸ் வி கொடுத்த அதிர்ச்சி இன்பம் இதுதான்: "நான் பதினைந்து நாட்கள் மண்டையை உடைத்துபோட்ட ட்யூன் இது. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கிற மாதிரி பாடிட்டு போய்ட்டீங்களே!"

வாணி பத்தொன்பது மொழிகளில் பாடியுள்ளார். அவரது சிறுவயதில் விவித்பாரதியில் bianca geetmala ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு ஒலிபரப்பாகும். "இந்தியில் வெளியான புகழ்பெற்ற 16 திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவார்கள். இதே நிகழ்ச்சியில் என் பாடலும் வரும் என்று நான் சொல்வேன், கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒருநாள் bole re papihare அதே நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது, கேட்டு அழுதுவிட்டேன்" என்று சொன்னார் வாணி. 

... ... ...

"ஒவ்வொரு வார்த்தையை மட்டும் அல்ல, ஒவ்வொரு எழுத்தையும் கூட தேவையான அளவுக்கு அழுத்தம் கொடுத்து, தேவைக்கு அதிகம் இல்லாத அழுத்தம் கொடுக்காமல் பாட வேண்டும். அது கிராமியப்பாடல், காதல் பாடல், கர்நாடக சங்கீதம், கஜல், காதல், டிஸ்க்கோ என்று எந்த வடிவில் இருந்தாலும் இதுதான் வரையறை. இப்படி அனுபவித்து உணர்ந்து பாடுவதால் எனக்கு எந்த ஒரு பாடலும் கஷ்டமாக இருந்தது இல்லை" என்பார் அவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, மார்வாரி, ஹரியான்வி, வங்காளம், ஒரியா, ஆங்கிலம், போஜ்புரி, ராஜஸ்தானி, படகா, உர்து, பஞ்சாபி, துலு, சம்ஸ்கிருதம்என 19 மொழிகளில் பாடியுள்ள அவர் குஜராத், தமிழ், ஒரிசா ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த பாடகர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்.

அவர் தமிழில் பாடியவற்றுள் பொங்கும் கடலோசை, ஏழு சுரங்களுக்குள், நாதமெனும் கோவிலிலே, என்னுள்ளில் எங்கோ , எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம், என் கல்யாண வைபோகம், நானே நானா யாரோதானா, பாரதி கண்ணம்மா, நினைவாலே சிலை செய்து ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

பாலைவனச்சோலை படத்தில் வந்த மேகமே மேகமே பாடல் கஜல் வடிவிலான பாடல். இறப்பது உறுதி என்று தெரிந்துகொண்ட இளம்பெண் ஒருத்தி பாடும் கழிவிரக்கம் மிகும் பாடல் அது. என் கல்யாண வைபோகம்உன்னோடுதான் பாடலின் இரண்டாவது சரணத்தில் சுகங்கொண்ட சிறுவீணை என்ற சொல்லை அவர் உச்சரிக்கும் விதம் பாடலின் உச்சம். புனித அந்தோணியார் படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதை ஆகும் என்று தொடங்கும் கிறித்துவ நம்பிக்கை சார்ந்த பாடல் எல்லோருக்கும் எப்போதும் பிடித்த பாடல். நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம்பெற்ற யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது என்ற பாடலை வேறு யாராவது பாடி இருக்கும் இத்தனை அழகாக இருந்திருக்குமா என்பது ஐயமே. மார்கழிப்பூக்கள் என்னைத் தீண்டும் நேரமே வா... தாமரை ஓடை...இன்ப வாடை... ஆகிய இடங்களின் நெளிவுசுழிவுகளை எத்தனை முறை கேட்டாலும் செவிகள் அலுப்படையா. சங்கர் கணேஷின் இசையில் மிக குறிப்பிடத்தக்க பாடல்.  பாடல் காட்சியை அவர் பாடிய அழகுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் படு மோசம். 

மீனவ நண்பன் படத்தின் பொங்கும் கடலோசை என்ற பாடல் கடலலையின் ஏற்ற இறக்கங்களை பாட்டில் கொண்டு வருவதாகும். அப்பாவியான கணவனை ஏமாற்றி வேறு ஒருவனது நெருக்கத்தில் மலையில் பயணிக்கும் ஒருத்தியின் உள்ளக்கிடக்கையை காம வேட்கையை வெளிப்படுத்தும் என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம். 

வெளிவராத படமான நிஜங்கள் எம் பி சீனிவாசன் இசையில் அமைந்த பாடல். பாரதிதாசன் எழுதிய அம்மா உந்தன் கை வளையாய் ஆக மாட்டேனா என்ற பாடல் அரிதான ஒன்று. 

இவை தமிழில் என்றால் கே விஸ்வநாத்தின் இயக்கத்தில்  கே வி மகாதேவன் இசையில் வெளியான  தெலுங்குப்படமான சங்கராபரணம் வாணியின் இசைத்திறனின் இன்னொரு பக்கத்தை காட்டியது.

சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அதிகம் கேட்கப்படாத ஆனால் துயரின் அடியாழத்தில் பெண்களின் வாழ்க்கை பற்றி சொல்லும் ஒரு பாடலை இங்கே பகிர விரும்புகிறேன். எம் பி சீனிவாசன் இசையில் ஜெயகாந்தன் எழுதிய பாடல் இது. வெளிவராமல் போன புதுச்செருப்பு கடிக்கும் படத்தில் அவர் பாடியது. இசைக்கருவிகளின் ஆதிக்கம் குறைந்து  பாடலின் ஆழத்துக்கும் வாணியின் குரலுக்கும் இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. துயரின் நிழல் படிந்த வீணையும் தபேலாவும் டைமிங்கும். உடல் என்பார் எனதுயிர் என்பார் கடல் என்பார் உன் கண் என்பார் என்று தொடங்கும் அப்பாடல்.

துயிலினிலே நல்ல கனவு வரும்

துயில் நீங்கி அந்த நினைவு வரும்

துயரம்... அது துயரம்

இது அதே பாடலின் ஒரு சரணம்.

... ...

"ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகின்றேன்!

அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவும் அருகினில் இருந்திட வேண்டுகின்றேன்!"

இது அவர் பாடியவற்றுள் அவருக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று சொல்வார்.

துயரிலும் மகிழ்விலும் எப்போதும் உங்கள் நினைவு வாணி! வழியனுப்புகின்றோம்!

செவ்வாய், டிசம்பர் 27, 2022

காவி

ஒரே மேய்ச்சல் நிலத்தில் ஒன்றாய் மேய்ந்து கொண்டிருந்தன ஆடுகள்

ஒன்றின் இடத்தில் இன்னொன்று போட்டிக்கு வருவதில்லை

ஆனாலும் மேய்ச்சல் நிலம் ஒன்றுதான்

ஒன்றாய் வருவதும் ஒன்றாய் போவதும்

ஒன்றாய் மேய்வதுமாக 

சச்சரவு சண்டை ஏதுமில்லை

அமைதியாக வாழ்க்கை நகர்ந்தது


நிறமாக இருந்த காவி கொடியாக மாறியது

மேய்ச்சல் நிலத்துக்குள் நுழைந்தது


ஆடுகளுக்கு அன்றிலிருந்து கொம்புகள் முளைத்தன

நாளடைவில் கூர்மை அடைந்தன

கொம்புகள் அதிவேகமாக வளர்ந்தன

கொம்புகள் தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக் கொண்டன


மந்தைக்குள் உறுமல் சத்தம் கேட்கத் தொடங்கியது

ஆடுகள் ஒன்றையொன்று உரசி மூர்க்கமாக விலக்கத் தொடங்கின

ஒன்றின் இடத்தை இன்னொன்று ஆக்கிரமிக்க சண்டைகள் பிறந்தன


சரி, இதுவரை நீங்கள் மேய்ந்தது போதும்,

இனி மேய்வதற்கான உரிமை எங்களுடையது என்றன கொம்புகள் 


பச்சைப்புல்வெளி எங்கும் கொப்பளித்து ஓடிய ஆடுகளின் குருதியை

சுவைத்து நிமிர்ந்தன,

கொம்புகளில் இருந்து ஆவேசமாக நீண்ட காவி நிற நாக்குகள்.