திங்கள், பிப்ரவரி 13, 2023

வாணிஜெயராம்... பொங்கும் கடலோசை

1979. மதுரை செல்லூரில் இருந்து இடதுபுறம் திரும்பி கோரிப்பாளையம் செல்லும் அந்த வளைவில் இருந்த டீ கடைக்கு மாலை 4 மணிக்கு நண்பர்களுடன் சென்றால் உடனடியாக கடைக்காரர் செய்வது இதுதான்:  எச் எம் வி கிறாமபோனில் எந்த பாட்டு ஓடிக்கொண்டிருந்தாலும் நிறுத்திவிட்டு அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தின் பளபளக்கும் கருப்பு எல் பி ரிகார்டை மிக ஸ்டைலாக எடுத்து கச்சிதமாக இசைதட்டு மேடையில் வைத்து தட்டின் விளிம்பில் ஊசி முனையை வைப்பார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இதை கவனிப்போம். அந்த ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தை தொடர்ந்து கிடார் ஒலிக்க தொடங்கும். நாங்கள் பாட்டுக்குள் போக அவர் டக் டக் என பலகையில் வரிசையாக நான்கு டீ கிளாஸ்களை வைத்து டீ போடும் வேலைக்குள் நுழைவார். டிகாக்சன் வடிகட்டியில் இறங்கும் நேரம் நானே நானா யாரோதானா என வாணி பாடத் தொடங்குவார். தேநீரும் வாணியும் சேர்ந்து கலந்து மெல்ல மெல்ல இறங்க இறங்க, கோரிப்பாளையம் சந்திப்பின் பரபரப்பான போக்குவரத்து எல் பி ரிகார்டின் மெல்லிய ஏற்ற இறக்கத்துக்குள் மறைந்து வேறு ஒரு உலகத்துக்குள் நாங்கள் இருப்போம்.

இது தினமும் நடக்கும் ஒரு சடங்காக பல நாட்கள் தொடர்ந்தது.

.....

அதற்கு முன் இலங்கை வானொலியில் தினமும் பலமுறை ஒலித்தது மல்லிகை என் மன்னன் மயங்கும் ....தான். 1974இல் வெளியான தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற பாடல், எம் எஸ் விஸ்வநாதன் வழங்கிய அந்த வாய்ப்பு தமிழில் அவருக்கான பெரும் கதவை திறந்துவிட்டது. ஒரு நாளில் பலமுறைகள் இலங்கை வானொலியில் ஒலித்த பாடல் அது. அதற்கு முன்பே வீட்டுக்குவந்த மருமகள்(1973) என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசையில் ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலை பாடியிருந்தார் அவர். 

30.11.1945 அன்று தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்தவர் வாணி. துரைசாமி ஐயங்கார் பத்மாவதி தம்பதியரின் ஒன்பது பிள்ளைகளில் ஆறு பேர் பெண்கள், அவர்களில் ஒருவர் கலைவாணி. அவரது அம்மா முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர். மூன்று வயது நிரம்பிய கலைவாணியால் ராகங்களை அடையாளம் கண்டு சொல்ல முடிந்ததால் அவர் மீது தனிப்பட்ட சிறப்பு கவனம் எடுத்துக்கொண்ட பெற்றோர் அவரை முறையாக சங்கீதம் கற்க அனுப்பினார்கள். ஐந்து வயதில் சரளிவரிசையை கற்காமலேயே நேரடியாக முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளை பாடும் அளவுக்கு கலைவாணி திறமை பெற்று இருந்துள்ளார். அவை அபூர்வமான ராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் எட்டாவது வயதில் சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் பாடியுள்ளார். சென்னையில் க்வின் மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணியில் சேர்ந்துள்ளார். ஜெயராமுடன் திருமணம் ஆன பின் பம்பாய் சென்றுள்ளார். அவரது கணவர் இரண்டு எம் ஏ பட்டங்கள் படித்தவர். London Institute of Management இல் படித்தவர். உயர்பதவியில் இருந்த அவர் வாணியின் இசைத்திறனை மேலும் ஒளிரச்செய்யும் வண்ணம் அதற்கான அடுத்த கட்ட பயிற்சிகள், வாய்ப்புகளுக்காக தன் வேலையை உதறிவிட்டு வாணியின் நலைனில் முழுமையாக கவனம் எடுத்துக்கொண்டார். வாணியும் தன் வங்கிப்பணியில் இருந்து விலகினார்.

அதன் அடுத்த கட்டமாக உஸ்தாத் அப்துல் ரஹ்மான்கான் அவர்களிடம் இந்துஸ்தானி சங்கீதம் கற்றார். வாய்ப்பாட்டிசையின் பலவேறு வடிவங்கள் ஆன தும்ரி, கஜல், பஜன் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். அவரது முதல் இசை அரங்கேற்றம் 1969இல் நடந்தது. அன்றையபுகழ்பெற்ற இந்தி திரைப்படஇசையமைப்பாளர் வசந்த் தேசாய் அவர்களிடம் வாணியை உஸ்தாத் அறிமுகப்படுத்தி வைக்க, மறுநாளே ஒரு மராட்டிய நாடகம் ஒன்றுக்கு பாடும் வாய்ப்பை வாணிக்கு தேசாய் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு வந்ததுதான் வாணிக்கான கலையுலக வாழ்வின் பெரும் திருப்பமாக அமைந்தது. ஆம், 1971இல் வசந்த் தேசாய் தான் இசையமைத்த Guddi படத்தில் மூன்று பாடல்களை பாடும் வாய்ப்பை வாணிக்கு வழங்கினார். அவற்றுள் Bole re papihara என்ற துள்ளல் பாடல் மிகவும் புகழ்பெற்றதானது. 

இதன் பின் இந்தி திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அன்றைய மெட்றாசில் வாணி பாடிய இந்தி பாடல்களின் இசை நிகழ்ச்சி மியூசிக் அகாடெமியில் நடைபெற்றது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அங்கே வந்திருக்கிறார். வாணியின் திறனை அறிந்து தாயும் சேயும்  என்ற படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார், ஆனால் படம் வெளியாகவில்லை.

அதேபோல் இரண்டாம் நாள் பயிற்சியில்  ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது புகழ்பெற்ற இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. 1973இல் ஸ்வப்னம் என்ற படத்தில் சவுரயுதத்தில் விடர்னொரு கல்யாண சவுகந்திகமானீ பூமி... என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட இசைக் கோர்வையுடன் ஆன சலீலின் பாடலை பாடினார். யுத்த பூமி (1976) என்ற படத்தில் ஆஷாட மாசம் ஆத்மாவில் மோகம்... என்ற பாடல் ஆர் கே சேகரின் இசையில் அவருக்கு வாய்த்தது. ஏ ஆர் ரஹ்மானின் தந்தைதான் ஆர் கே சேகர். 

நிகழ்ச்சி ஒன்றில் வாணியின் திறன் கண்டு மகிழ்ந்த எம் எஸ் விஸ்வநாதன் 1973இல் அவருக்கு சிறப்பான இடத்தை வழங்கினார். தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற மல்லிகை என் மன்னன் மயங்கும்... ... என்ற பாடலே அது. பத்தினிப்பெண் என்றொரு திரைப்படம். எம் எஸ் விஸ்வநாதன் இசை. பாடல் பதிவு முடிந்தபின் கேட்டுப்பார்க்க பாடல் பதிவறைக்கு வந்த வாணியை எம் எஸ் வி அழைத்தார். ஆஹா, நாம் சரியாக பாடவில்லை, இன்னொரு டேக்கா என்று சந்தேகப்பட்ட வாணிக்கு எம் எஸ் வி கொடுத்த அதிர்ச்சி இன்பம் இதுதான்: "நான் பதினைந்து நாட்கள் மண்டையை உடைத்துபோட்ட ட்யூன் இது. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கிற மாதிரி பாடிட்டு போய்ட்டீங்களே!"

வாணி பத்தொன்பது மொழிகளில் பாடியுள்ளார். அவரது சிறுவயதில் விவித்பாரதியில் bianca geetmala ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு ஒலிபரப்பாகும். "இந்தியில் வெளியான புகழ்பெற்ற 16 திரைப்பட பாடல்களை ஒலிபரப்புவார்கள். இதே நிகழ்ச்சியில் என் பாடலும் வரும் என்று நான் சொல்வேன், கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒருநாள் bole re papihare அதே நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது, கேட்டு அழுதுவிட்டேன்" என்று சொன்னார் வாணி. 

... ... ...

"ஒவ்வொரு வார்த்தையை மட்டும் அல்ல, ஒவ்வொரு எழுத்தையும் கூட தேவையான அளவுக்கு அழுத்தம் கொடுத்து, தேவைக்கு அதிகம் இல்லாத அழுத்தம் கொடுக்காமல் பாட வேண்டும். அது கிராமியப்பாடல், காதல் பாடல், கர்நாடக சங்கீதம், கஜல், காதல், டிஸ்க்கோ என்று எந்த வடிவில் இருந்தாலும் இதுதான் வரையறை. இப்படி அனுபவித்து உணர்ந்து பாடுவதால் எனக்கு எந்த ஒரு பாடலும் கஷ்டமாக இருந்தது இல்லை" என்பார் அவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, மார்வாரி, ஹரியான்வி, வங்காளம், ஒரியா, ஆங்கிலம், போஜ்புரி, ராஜஸ்தானி, படகா, உர்து, பஞ்சாபி, துலு, சம்ஸ்கிருதம்என 19 மொழிகளில் பாடியுள்ள அவர் குஜராத், தமிழ், ஒரிசா ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த பாடகர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்.

அவர் தமிழில் பாடியவற்றுள் பொங்கும் கடலோசை, ஏழு சுரங்களுக்குள், நாதமெனும் கோவிலிலே, என்னுள்ளில் எங்கோ , எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது, கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம், என் கல்யாண வைபோகம், நானே நானா யாரோதானா, பாரதி கண்ணம்மா, நினைவாலே சிலை செய்து ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

பாலைவனச்சோலை படத்தில் வந்த மேகமே மேகமே பாடல் கஜல் வடிவிலான பாடல். இறப்பது உறுதி என்று தெரிந்துகொண்ட இளம்பெண் ஒருத்தி பாடும் கழிவிரக்கம் மிகும் பாடல் அது. என் கல்யாண வைபோகம்உன்னோடுதான் பாடலின் இரண்டாவது சரணத்தில் சுகங்கொண்ட சிறுவீணை என்ற சொல்லை அவர் உச்சரிக்கும் விதம் பாடலின் உச்சம். புனித அந்தோணியார் படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதை ஆகும் என்று தொடங்கும் கிறித்துவ நம்பிக்கை சார்ந்த பாடல் எல்லோருக்கும் எப்போதும் பிடித்த பாடல். நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம்பெற்ற யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது என்ற பாடலை வேறு யாராவது பாடி இருக்கும் இத்தனை அழகாக இருந்திருக்குமா என்பது ஐயமே. மார்கழிப்பூக்கள் என்னைத் தீண்டும் நேரமே வா... தாமரை ஓடை...இன்ப வாடை... ஆகிய இடங்களின் நெளிவுசுழிவுகளை எத்தனை முறை கேட்டாலும் செவிகள் அலுப்படையா. சங்கர் கணேஷின் இசையில் மிக குறிப்பிடத்தக்க பாடல்.  பாடல் காட்சியை அவர் பாடிய அழகுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் படு மோசம். 

மீனவ நண்பன் படத்தின் பொங்கும் கடலோசை என்ற பாடல் கடலலையின் ஏற்ற இறக்கங்களை பாட்டில் கொண்டு வருவதாகும். அப்பாவியான கணவனை ஏமாற்றி வேறு ஒருவனது நெருக்கத்தில் மலையில் பயணிக்கும் ஒருத்தியின் உள்ளக்கிடக்கையை காம வேட்கையை வெளிப்படுத்தும் என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம். 

வெளிவராத படமான நிஜங்கள் எம் பி சீனிவாசன் இசையில் அமைந்த பாடல். பாரதிதாசன் எழுதிய அம்மா உந்தன் கை வளையாய் ஆக மாட்டேனா என்ற பாடல் அரிதான ஒன்று. 

இவை தமிழில் என்றால் கே விஸ்வநாத்தின் இயக்கத்தில்  கே வி மகாதேவன் இசையில் வெளியான  தெலுங்குப்படமான சங்கராபரணம் வாணியின் இசைத்திறனின் இன்னொரு பக்கத்தை காட்டியது.

சொல்வதற்கு நிறையவே இருந்தாலும் அதிகம் கேட்கப்படாத ஆனால் துயரின் அடியாழத்தில் பெண்களின் வாழ்க்கை பற்றி சொல்லும் ஒரு பாடலை இங்கே பகிர விரும்புகிறேன். எம் பி சீனிவாசன் இசையில் ஜெயகாந்தன் எழுதிய பாடல் இது. வெளிவராமல் போன புதுச்செருப்பு கடிக்கும் படத்தில் அவர் பாடியது. இசைக்கருவிகளின் ஆதிக்கம் குறைந்து  பாடலின் ஆழத்துக்கும் வாணியின் குரலுக்கும் இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. துயரின் நிழல் படிந்த வீணையும் தபேலாவும் டைமிங்கும். உடல் என்பார் எனதுயிர் என்பார் கடல் என்பார் உன் கண் என்பார் என்று தொடங்கும் அப்பாடல்.

துயிலினிலே நல்ல கனவு வரும்

துயில் நீங்கி அந்த நினைவு வரும்

துயரம்... அது துயரம்

இது அதே பாடலின் ஒரு சரணம்.

... ...

"ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகின்றேன்!

அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவும் அருகினில் இருந்திட வேண்டுகின்றேன்!"

இது அவர் பாடியவற்றுள் அவருக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று சொல்வார்.

துயரிலும் மகிழ்விலும் எப்போதும் உங்கள் நினைவு வாணி! வழியனுப்புகின்றோம்!

செவ்வாய், டிசம்பர் 27, 2022

காவி

ஒரே மேய்ச்சல் நிலத்தில் ஒன்றாய் மேய்ந்து கொண்டிருந்தன ஆடுகள்

ஒன்றின் இடத்தில் இன்னொன்று போட்டிக்கு வருவதில்லை

ஆனாலும் மேய்ச்சல் நிலம் ஒன்றுதான்

ஒன்றாய் வருவதும் ஒன்றாய் போவதும்

ஒன்றாய் மேய்வதுமாக 

சச்சரவு சண்டை ஏதுமில்லை

அமைதியாக வாழ்க்கை நகர்ந்தது


நிறமாக இருந்த காவி கொடியாக மாறியது

மேய்ச்சல் நிலத்துக்குள் நுழைந்தது


ஆடுகளுக்கு அன்றிலிருந்து கொம்புகள் முளைத்தன

நாளடைவில் கூர்மை அடைந்தன

கொம்புகள் அதிவேகமாக வளர்ந்தன

கொம்புகள் தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக் கொண்டன


மந்தைக்குள் உறுமல் சத்தம் கேட்கத் தொடங்கியது

ஆடுகள் ஒன்றையொன்று உரசி மூர்க்கமாக விலக்கத் தொடங்கின

ஒன்றின் இடத்தை இன்னொன்று ஆக்கிரமிக்க சண்டைகள் பிறந்தன


சரி, இதுவரை நீங்கள் மேய்ந்தது போதும்,

இனி மேய்வதற்கான உரிமை எங்களுடையது என்றன கொம்புகள் 


பச்சைப்புல்வெளி எங்கும் கொப்பளித்து ஓடிய ஆடுகளின் குருதியை

சுவைத்து நிமிர்ந்தன,

கொம்புகளில் இருந்து ஆவேசமாக நீண்ட காவி நிற நாக்குகள்.


புதன், நவம்பர் 02, 2022

நீங்களும் நாங்களும்

 

நீங்களும் நாங்களும்
 
 
நாங்கள்
பிணங்களால் உயிர்வாழும் அற்ப ஜீவிகள்
 
நீங்கள்
சூரியக்கதிர்களின் சுகமான வருடலில் கண் விழிப்பவர்கள்
நாங்கள்
இழவு வீடுகளின் இரங்கற்பாக்களில் இரவைக் கழிப்பவர்கள்
 
நீங்கள்
குடும்பங்களின் ஜீவிதம் நாடி கருவிகளைத் தீட்டுபவர்கள்
நாங்கள்
அமைதியின் ஆன்மாவை அழிக்க ஆயுதம் தீட்டுபவர்கள்
 
நீங்கள்
சகமனிதனின் சமாதானம் வேண்டி பாதை சமைப்பவர்கள்
நாங்கள்
மானுட அமைதியின் வீழ்ச்சிக்காக பள்ளம் பறிப்பவர்கள்
 
நீங்கள்
மத அடையாளங்களை மறந்து மனித இதயத்தைத் காண்பவர்கள்
நாங்கள்
மனித இதயங்களைப் பிளந்து மத அடையாளத்தை சந்தையில் விற்பவர்கள்
 
நீங்கள்
உங்கள் உணவை சகபயணியுடன் பகிர்ந்து அன்பை ருசிப்பவர்கள்
நாங்கள்
சேர்ந்து பயணிக்கும் உங்கள் அன்பு வாகனத்தின் அச்சை முறிப்பவர்கள்
 
நீங்கள்
ஆபத்துக் காலங்களில் அடையாளம் கேட்காமல் குருதியைக் கொடுப்பவர்கள்
நாங்கள்
எல்லாக் காலங்களிலும் உங்கள் குருதியை வீதியில் சிந்த விலை பேசுபவர்கள்
 
நீங்கள்
மதம் மொழி இனம் எல்லை என தடைகள் யாவற்றையும் உடைப்பவர்கள்
நாங்கள்
மனிதர்களைப் பிரிக்கும் புதிய புதிய வேலிகளை சிந்தித்துக் கட்டமைப்பவர்கள்
 
நாங்கள் பன்னெடுங்காலமாய் சிந்தையைக் கசக்கி
எங்கள் எஜமானர்களின் கஜானாக்களை நிரப்பத் திட்டமிட்டு
வீதிகளில் செயற்படுத்தும் ஒவ்வொரு ரத்தக்களறியையும்
ஒற்றுமை சமாதானம் என்னும் எளிய ஆயுதங்களால்
நீங்கள் எளிதில் முறியடித்துவிடுகின்றீர்கள்
ஒவ்வொரு முறையும் வென்றுவிடுகின்றீர்கள்
 
எனவே
எங்கள் அடுத்த திட்டமிடுதலின் மையம் இதுதான்:
அன்பு
சமாதானம்
அமைதி
இம் மூன்றையும் சட்டப்பூர்வமாகவே ஒழித்து விடுவது
 
நீங்கள் புன்னகைக்கின்றீர்கள்,
என்ன செய்ய, எரிச்சலாகத்தான் இருக்கின்றது
எங்களிடம் இல்லாத ஒன்றும்
வரலாறு எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டவற்றுள் முக்கியமானதும் அது
விரைவில் அஜெண்டாவை மாற்றி வைப்போம்,
ஒழிக்கப்பட வேண்டியவற்றின் பட்டியலில் புன்னகையை முதலில் சேர்ப்போம்.

ஞாயிறு, அக்டோபர் 23, 2022

இந்தியாவின் முதல் ராக்கெட்டும் கர்த்தரும்

நிஜமான ராக்கெட் பார்த்தேன் மக்கா,  நேத்து நைட் 12.07 மணிக்கு, வீட்டு மாடியில் இருந்து! இரவு வானில் அது சில நொடிகளே வாய்த்த மிக மிக அற்புதமான காட்சி. வெறுங்கண்ணால் பார்த்து ரசிப்பதே பேறு.


LVM3/M2. ISRO ஏவிய ராக்கெட்டுக்களில் இதுவே மிகக்கனமானது. 36 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்றது.


90களில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்துக்கு அலுவலக தொடர்பாக சென்றேன்.அப்போது ஒரே ஒரு ஏவுதளம் மட்டுமே இருந்தது. இரண்டாம் தளம் கட்டப்பட்டு வந்தது. அப்போது ஒரு ஏவுவாகனத்தை கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஏவுவாகனத்தை அது ஏவப்படும் இடத்திலேயே கட்ட வேண்டும். எனவே மிகப்பிரமாண்டமான எல்ஐசி கட்டிட உயரத்துக்கு ஒரு நகரும் தொழிற்சாலையினுள் இருந்து கொண்டுதான் தொழிலாளர்களும் விஞ்ஞானிகளும் ஏவுவாகனத்தை கட்டுகின்றார்கள். இறுதியில்தான் ஏவப்பட உள்ள செயற்கைக்கோள்கைகளை முனையில் பொருத்துகின்றார்கள். உச்சிவரை சென்று பார்த்தேன்.


ராக்கெட் ஏவுதளம் கட்டப்படும் முன் ஏற்கனவே அங்கே வாழ்ந்துவந்த நயாடி எனப்படும் பழங்குடி மக்கள் இப்போதும் இஸ்ரோ வளாகத்துக்குள் வசிக்கின்றார்கள். நான் அவர்களைப் பார்த்தேன். அவர்களின் வாழ்க்கையை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்கு உதவுகின்றது இஸ்ரோ.


இஸ்ரோவின் முதல் தலைவர் விக்ரம் அம்பாலால் சாராபாய். குஜராத்தைச் சேர்ந்தவர். கேரளாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் மிருணாளினியை திருமணம் செய்துகொண்டார். புகழ்பெற்ற நடனக்கலைஞர் மல்லிகா சாராபாய் இவர்களது மகள்.


மிருணாளினியின் அக்கா விடுதலைப் போராட்ட வீரரும் நேதாஜி படையின் பெண்கள் படைத்தளபதியும் ஆன கேப்டன் லட்சுமி அவர்கள். இவர்களின் பெற்றோர் தமிழர் ஆன டாக்டர் சுப்பாராம சுவாமிநாதன், மலையாளி ஆன அம்மு. 


கேரளாவில் திருவனந்தபுரம் தும்பாவில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளத்துக்கான இடத்தை அரசு கேட்டபோது மனமுவந்து கொடுத்தவர்கள் கிறித்துவ மிஷனரி என்பதை சொல்ல வேண்டும். பூகோள அமைப்பின்படி அந்த முனையில் இருந்து ராக்கெட்டை அனுப்புவது பல வகையிலும் பயனுள்ளதாக இருந்ததாக கண்டுபிடித்தார்கள். இப்போது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தின் குலசேகரபட்டினம் அதனினும் சிறந்த முனை என்று கண்டறிந்து அங்கே ஏவுதளம் கட்ட உள்ளார்கள்.


முதல் சோதனை ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண அன்றைய பிரதமர் இந்திரா நேரில் அங்கே வந்திருக்க, ராக்கெட்டின் முனையில் பொருத்தப்பட வேண்டிய கூம்புவடிவ மூடியை கடற்கரை மணலில் சைக்கிளில் வைத்து இரண்டு விஞ்ஞானிகள் தள்ளிக் கொண்டுபோகும் புகைப்படத்தை பார்த்துள்ளேன்.


தும்பாவில் முதல் ராக்கெட்டை உருவாக்கி கட்டவும் பின்னர் ஏவுவதற்கும் உழைத்த விஞ்ஞானிகள், தொழிலாளர்களின் பாடுகளை வாசித்திருக்கின்றேன். அது கற்பனைக்கு அப்பாற்பட்டது. அநேகமாக பொதுவெளியில் கிடைக்காதது, வாசிக்கப்படாதது. பிரமிக்கச் செய்யும். பின்னர் பதிவு செய்வேன். விக்ரம், சதீஷ் தவான், ப்ரம் பிரகாஷ், அப்துல்கலாம், சாண்ட்லாஸ் போன்ற விஞ்ஞானிகள் வாழைப்பழத்தையும் வடையையும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கும் போகாமல் அங்கேயே படுத்துறங்கி உழைத்துள்ளார்கள். 


கலாமின் அப்பா ஜெயினுலாபுதீன் மரைக்காயர் ராமேஸ்வரத்தில் இருந்து பஸ்ஸில் வந்து மகனைப் பார்த்துள்ளார். ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலையில் இருந்த கலாமை சதீஷ் தவான் அழைத்து மதுரை வரை அப்பாவுடன் சென்று வழியனுப்பி வைக்க பணித்துள்ளார். சரி என்று சொல்லிவிட்டு சென்றவர் சில மணி நேரங்களில் மீண்டும் ஆய்வுவேலையில் இருந்திருக்கிறார். ஏன்யா அப்பா கூட போகலியா? என்று கேட்டதற்கு திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்டில் அவரை ஏற்றிவிட்டு திரும்பி வந்ததாக சொல்லியிருக்கிறார்.


முதல் எஸ்.எல்.வி.ராக்கெட் ப்ராஜெக்டின் தலைவர் கலாம். ராக்கெட் கடலில் விழுந்தது. பல நூறு கோடிகள் வீணானதாக பத்திரிக்கைகள் கிண்டல் அடித்தன. இஸ்ரோ தலைவர் தவான் கலாமையும் பிற விஞ்ஞானிகளையும் பின்னே தள்ளிவிட்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தோல்விக்கு பொறுப்பேற்றார். அடுத்த சில வாரங்களில் எஸ்.எல்.வி.வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இப்போது தவான் பின்னே நின்றுகொண்டு கலாமை முன்னே தள்ளி பத்திரிக்கையாளர்களை சந்திக்கச் செய்தார். மனுசன்யா! எழுதும் எனக்கு புல்லரிக்கின்றது.


நேற்றிரவு 12.07 மணிக்கு மொட்டைமாடியில் நின்று பார்த்தபோது காரிருள் வானில் பிரகாசமாக ஒளிர்ந்து புகை கக்கிய ராக்கெட்டில் தவானின், சாராபாயின் முகங்களைக் கண்டேன்.


ஒவ்வொரு முறையும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும் முன் மாதிரிகள் திருப்பதியில் வைத்து பூஜை செய்யப்படுவதும் தேங்காய் உடைப்பதும் சர்ச்சையை கிளப்புகின்றது. போகட்டும். முதல் எஸ்.எல்.வி.ராக்கெட் தும்பாவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது கர்த்தரின் அருள்தானா?

...... ....

(படம் இணையத்தில் எடுத்தது. பதிவுக்கு தொடர்பில்லை. வெறுங்கண்ணால் பார்ப்பதே பெரும்பேறு).

செவ்வாய், அக்டோபர் 11, 2022

ஓ மாஜிரே!

 


ஓ மாஜிரே! (ஓ படகோட்டியே!)

கரையை நெருங்கும் எவரும் அறிவார்
காகிதப் படகுக்கு கரையென்று இல்லை
கரை எதுவாயினும்
எங்கே ஒதுங்குகின்றேனோ அதுவே என் கரை
வாழ்க்கையில் பற்றிக்கொள்ளவென சில ஆறுதல்கள் கிடைக்கலாம்
ஆனால் அவை உண்மையல்ல,
காகிதக் கப்பல்கள் போல,
தண்ணீரில் அடித்துச் செல்லப்படும்
உண்மையான ஆதரவு என்பது
உன்னோடு எப்போதும்கூட வருவதுதான்,
படகோட்டியே,
அந்த ஆறுதலைத் தருபவன் நானே
இந்த நீரால் அடித்துச் செல்லப்பட்ட கரைகள்
தூர்ந்து போன கரைகள் ஏராளம்
இதற்கு முன் காணாமற்போன அத்தனை ஆதரவுகளும்
மீண்டும் வரக் காண்பாய்
ஆனால், படகோட்டியே,
ஆற்றின் நடுவே உனக்குக் கிடைக்கும்
ஒரே ஆதரவு எனில் அது எனதே
மக்கள் வருவார்கள், போவார்கள்,
உன்னைச் சந்திப்பார்கள்
ஆனால், படகோட்டியே,
புரிந்து கொள்,
உனது இக்கட்டான இடர்மிகு சோதனைக்காலங்களில்
யார் உனக்கு ஆதரவாக நிற்பார்களோ
அவர்களே உனக்கான உண்மையான மனிதர்கள்.
....
இந்தித்திரைப்பட உலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் குல்சார் அவர்கள் எழுதிய பாடல் இது. ஓ மாஜிரே... அப்னா கினாரா.... நதியா கி தாரா ஹே...என்ற பாடல் அது.1975 இல் வெளிவந்த குஷ்பூ என்ற படத்தில். கிஷோர்குமார் பாடினார், ஆர்.டி.பர்மன் இசையில். மாஜி என்ற சொல்லை படகோட்டி, ஓடக்காரன் என்று எப்படியும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலவழித் தமிழாக்கம் நான் செய்தேன்.
மாஜியை நோக்கிப் பாடுவதாக இருந்தாலும் உண்மையில் பாடுபவன் தன்னை சுயபரிசோதனைக்காக உட்படுத்திக்கொள்வதே இந்த அழைப்பு. தனக்குத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கேள்விகளை எழுப்புவது. இதில் நதி என்பது வாழ்க்கையின் ஓட்டம். நம் உடலுக்குள் ஓடும் சக்தியின் அடையாளம். கினாரா என்பது நாம் பற்றிக்கொள்ளும் ஆதரவு, அன்பு, பாதுகாப்பு.
இந்தப் பாடல் சிந்தனைக்கும் ஆன்மாவுக்கும் இடையே ஆன உரையாடல். மூளை எப்போதும் கேள்விகளுக்கான பதிலைத் தேடுகின்றது. ஆதரவை நாடுகின்றது. ஆன்மா சொல்கின்றது, வாழ்க்கையின் உயிரோட்டமே உண்மையான ஆதரவு என்று.
... .... ....
பட்டியாலி bhatiyali என்ற நாட்டார் இசைவடிவம் பங்களாதேஷிலும், மேற்கு வங்கத்திலும் இசைக்கப்படுகின்றது. குறிப்பாக நதியில் கரைக்குத் திரும்பும் படகோட்டிகளால் பாடப்படுவது. பட்டா என்ற சொல் எழுச்சித் தணிவை, அதாவது கடல்நீர் தரையைவிட்டு வடியும் வேளையை, கடல் நீரின் பின்னடைவு நேரத்தைக் குறிப்பது. மனிதனின் உணர்வுகள் தணிந்து மறையும் வேளையை அடையாளப்படுத்தும் இயற்கை நிகழ்வு.
பொதுவாக ஆற்றையும் நீரையும் பாடுபவை, நீரோடு வாழ்க்கையை நடத்தும் மீனவர்களின், படகோட்டிகளின் வாழ்வைப் பாடுபவை பட்டியாலி இசை வடிவம். மையமாக இருப்பது 'பிரக்ருதி தத்துவம்', அதாவது இயற்கையைப் பாடுவது.
வங்காள டெல்டா பகுதியின் பல பகுதிகளில் பாடப்படுகின்றது. இன்றைய பங்களாதேஷின் மேமன்சிங் மாவட்டமே இதன் பிறப்பிடம் என்று சொல்லப்படுகின்றது.
வங்கக்கவிஞர் ஜசிமுத்தீன் எழுதிய "அமே(ய்) பாஷாய்லி ரே, அமே(ய்) டுபாய்லி ரே" என்ற புகழ்பெற்ற பட்டியாலி பாடலை பாடகர் அப்பாஸ் உத்தின் அகமத் என்பவர் பாடிப் புகழ்பெறச் செய்தார். பங்களாதேஷை சேர்ந்த மற்றொரு பாடகர் ஆன ஆலம்கீர் என்பவர் 1970களில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு (கராச்சி) குடிபுகுந்தார். இதே பாடலை பாகிஸ்தானில் பாட, அங்கே மக்கள் மத்தியில் மிகப் புகழ்பெற்ற பாடலாகி விட்டதாம்.
... .... ....
கங்கா ஆயே கஹான் சே Ganga aye kahan se என்ற பட்டியாலி பாடல் 1961இல் வெளிவந்த காபூலிவாலா படத்தில் சலீல் சவுத்ரி இசையில் ஹேமந்த்குமார் பாடி இடம்பெற்றது. 'கங்கை எங்கேயிருந்து வருகின்றாள்? கங்கை எங்கே போகின்றாள்?' என்று தொடங்கும் பாடல். இந்த வங்கப்பாடலின் மையமான ஆன்மாவை எடுத்துக் கொண்டு இந்தியில் குல்சார் எழுதியதுதான் தொடக்கத்தில் நான் சொன்ன ஓ மாஜிரே! பாடல்.
தை பிறந்தால் வழிபிறக்கும் படத்தில் இடம்பெற்ற ஆசையே அலைபோல, நாமெல்லாம் அதன் மேலே என்ற பாடல் இந்தச் சாயலை ஓட்டியது.
'ஆசையே அலைபோல, நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்களிலே
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?'
என்று திருச்சி லோகநாதன் பாடினார். கண்ணதாசன் எழுத கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.
கோவலனும் கண்ணகியும் புகார் நீங்கி மதுரை செல்ல முடிவு செய்கின்றார்கள். செல்வங்கள் அனைத்தையும் இழந்து வாணிபம் செய்து வாழும் பொருட்டு மதுரை செல்கின்றான், உடன் கண்ணகியும். வழியில்தான் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண்துறவியை சந்திக்க நேர்கின்றது. அவர் பெருமான் அருகனை வழிபடும் பொருட்டு மதுரை செய்கின்றார். மூவரும் இணைந்தே மதுரை செல்கின்றனர். படகில் செல்லும் போது அவர் பாடும் பாட்டு அவனுக்கென்றே எழுதப்பட்டதுபோல் உள்ளது.
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதிலே
மறக்க ஒண்ணா வேதம்
வாலிபம் என்பது கலைகின்ற வேடம்
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்
வரும் முன் காப்பவன்தான் அறிவாளி
புயல் வரும் முன் காப்பவன்தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி
துடுப்புக்கள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும்
தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்தப்படகின் நிலை போலே ஆகும்
அந்தப்படகின் நிலை போலே ஆகும்'
மு கருணாநிதி எழுத, ஆர் சுதர்சனம் இசையில் கே.பி.சுந்தராம்பாள் கவுந்தி அடிகளாகப் பாடினார். படம் பூம்புகார் (1964).
நாயகன் படகில் வருகின்றான். அவனது மனவோட்டத்தை அறிந்தவன்போல பெருங்குரலெடுத்து படகோட்டி பாடுகின்றான்.
'ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே....ஓ
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
ஆசை என்னும் மேடையிலே
ஆடிவரும் வாழ்வினிலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே
கூட்டுக்குள்ளே குயிலிருக்கும்
பாட்டு வரும் வெளியினிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லே'
கண்ணதாசன் எழுத, விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.
வங்க மண்ணைச்சேர்ந்த சலில் சவுத்ரி கேரளத்துக்கு வருகின்றார். மலையாளிகள் அவரை அணைத்துக் கொண்டாடுகின்றார்கள். கடற்புரத்து கரையில் மலர்ந்த காதலரின் கதைக்கு அத்தனை அற்புதமாக இசையமைத்து இருந்தார். தகழியின் செம்மீன் அது.
ஏதோ ஒரு சொப்னம் என்ற மலையாளப்படத்தில்தான் அற்புதமான அந்தப் படகோட்டிப்பாட்டு சலீல் சவுத்ரியின் இசையில் மலர்ந்தது. பூமானம் பூத்துலங்ஙே என்ற பாடல். யேசுதாஸின் கம்பீரமான குரலில்.
துலாபாரம் என்ற தோப்பில் பாஷியின் கதை. ஜி தேவராஜன் இசையமைத்தார். கண்ணதாசன் எழுதினர். படகோட்டிக்காக கே.ஜே.யேசுதாஸ் பாடுகின்றார்.
"காற்றினிலே பெருங்காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலமென்னும் கடலிலே
சொர்க்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ?'
.... .... ....
மாநிலங்கள் மொழிகள் பிற எல்லைகள் என அனைத்து தடைகளையும் பிரிவினையையும் ஓடக்காரர்கள் என்னும் உழைப்பாளிகள் தம் பாசாங்கற்ற சொற்கட்டால் அமைந்த எளிய பாடல்களால் உடைத்துவிடுகின்றார்கள். தத்துவ விசாரணை செய்கின்றார்கள் .

ஓ மாஜிரே பாடலின் இணைப்பு

https://www.youtube.com/watch?v=KsBnr89VRPY

பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி அனுமதியின் பின் ஒளிந்திருப்பது அம்பானியின் நலனே


2016 வர்தா பெரும்புயலில் அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு மக்கள் திண்டாடியபோது ஒரே ஒரு செல்பேசி நிறுவனத்தின் சமிக்ஞைகள் மட்டும் ஓரளவு வேலை செய்தன. அது பிஎஸ்என் எல்.

2004 சுனாமி பேரழிவுக்குப் பின் தகவல்தொடர்புத்தளத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை நோக்கில் ஒரு கொள்கையை பிஎஸ்என்எல் வரைந்தது. இமயம் முதல் குமரி வரையிலும் இந்தியாவின் தென்முனை ஆன நிக்கோபார் தீவு வரையிலும், அருணாச்சலப்பிரதேசம் முதல் குஜராத் வரையிலும், மேற்கு எல்லை ஆன லட்சத்தீவுகளிலும் அடிப்படை தொலைத்தொடர்பு கட்டமைப்பையும் கோபுரங்களையும் நிறுவியது பி எஸ் என்எல்தான். ஏனெனில் அது மக்கள் பணத்தில் உருவான, வளர்ந்த அரசின் பொதுத்துறை நிறுவனம். மிகத் தொலைவில், எல்லைப் புறங்களில், காடுகளில், மலை உச்சிகளில், இமயமலையில் மக்கள் தொகை மிகக் குறைந்த பகுதிகளிலும் தொடர்புக் கோபுரங்களை மக்கள் பணத்தில் நிறுவியது பி எஸ் என்எல்தான். மேலும் நாட்டின் பாதுகாப்பு என்ற நோக்கில் தனியார் நிறுவனங்களையும் அவற்றின் தகவல்தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவது அறிவார்ந்த செயலும் அல்ல.
கவனிக்க வேண்டியது என்னவெனில் TRAI ஒப்பந்தத்தின் கீழ், கம்பெனி வேறுபாடின்றி செல்போன் வாடிக்கையாளருக்கான தொலைபேசித் தொடர்பை தடையின்றித்தர அனைத்து கம்பெனிகளும் உடன்படவேண்டும். அதாவது லட்சத்தீவில் உள்ள ஒரு ஜியோ வாடிக்கையாளர், அவர் பகுதியில் ஜியோ கோபுரம் இல்லை என்றாலும் பிஎஸ்என்எல் கட்டமைப்பின் கோபுரம் வழியே தடையற்ற சேவையைப் பெறுவார். அந்தவகையில் நான் மேலே சொன்ன நிக்கோபார், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லே, லடாக் பகுதிகளில் மக்கள் நலன்கருதி மக்கள் பணத்தில் நிறுவப்பட்ட பி எஸ் என் எல்கட்டமைப்பும் கோபுரங்களும்தான் அதிகம், சரியாகச் சொன்னால் லாப நோக்கம் மட்டுமே உள்ள தனியார் நிறுவனங்கள் இப்பகுதிகளில் கட்டமைப்போ கோபுரங்களோ அமைப்பதில்லை. காரணம் முதலீடு. முதலீட்டுக்கு ஏற்ற வருவாயும் லாபமும் திரும்ப வராது. ஆனால் பிஎஸ்என்எல் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு தம் வருமானத்தைப் பெருக்கிக்கொள்கின்றார்கள்.
வர்தா பெரும்புயலில் எனது தொலைபேசித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் புயலுக்குப் பின் இரண்டு பிஎஸ்என்எல் இணைப்புக்கள் வாங்கினேன். அது 3ஜி. எனது அலுவலகத்தின் உள்ளே பி எஸ் என் எல் சமிக்ஞை மட்டுமே கிடைக்கின்றது. மற்றொரு தனியார் நிறுவன சிம்மில் சமிக்ஞை பூஜ்யமே.
அரசு நிறுவனங்களின் முதன்மைக் குறிக்கோள் சேவையே. வருமானமும் லாபமும் இரண்டாம் பட்சமே. பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களின் வரவு செலவுத்திட்டங்களால் செயல்படுத்தப்படுவதே அரசமைப்பு நிர்வாகம். ஒன்றில் நட்டம் எனில் மற்றொன்றில் லாபம் வரும். சரியாகச் சொல்வதெனில் அரசின் சேவைத் துறைகளில் நட்டம் என்ற சொல் நடைமுறைக்கு ஒவ்வாது. சேவை சேவைதான். சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் இடப்படும் முதலீடு, முற்றிலும் நாட்டு மக்களின் நலன், ஆரோக்கியமான வளமான அறிவார்ந்த எதிர்காலத்திற்கான அஸ்திவாரமே, இதில் செலவு, லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பிஎஸ் என் எல்லும் அவ்வாறே.
தகவல்தொடர்பு என்பது மென்பொருள் நிறுவனங்களின் தொழில்சார் நடவடிக்கை மட்டுமே என்ற நிலை இல்லை. பள்ளிக் கல்வி தொடங்கி மக்களின் அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் இணையம் இன்றி இயங்க முடியாது என்ற நிலைதான் யதார்த்தம்.
இத்தகைய பின்னணியில் தகவல் தொடர்புத்துறையில் நாளொரு புதியவளர்ச்சியும் புதிய கருவிகளும் மென்பொருட்களும் அலையென அறிமுகம் ஆகும் சூழலில் 3ஜியைத் தாண்டி 4ஜிக்கு கூட பிஎஸ் என்எல்லுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் 4ஜியை தாண்டி தனது நண்பரான அம்பானியின் ஜியோவுக்கு 5 ஜி அனுமதி வழங்குகிறார் வாய் வீச்சு வீரர் மோடி. பிஎஸ்என் எல்லின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப்பதில் பிஎஸ் என் எல்லை அழித்து அம்பானியின் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை நோக்கி மக்களைத் தள்ளுகின்றார். ஜியோ அறிமுகம் ஆன புதிதில் இலவசமோ இலவசம் என்று தெருவில் நின்று அம்பானி கூவிய போது அதனை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தவில்லை. மக்கள் ஜியோவை நோக்கி ஓடினார்கள். இப்போது எங்கே போனது ஜியோவின் இலவசம்? கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வலைக்குள் சிக்க வைத்த பின் இலவசம் என்னும் குச்சிமிட்டாயை தூக்கி எறிந்தது ஜியோ.
இப்போது திடீரென பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அனுமதியும் விரைவில் 5ஜி அனுமதியும் வழங்குவது என்பது பிஎஸ்என்எல் நலன்காக்க அல்ல. 4 ஜி, 5 ஜி ஆக தரம் உயர்த்தப்பட உள்ள பிஎஸ்என்எல்லின் அடிப்படைக் கட்டமைப்பையும் கோபுரங்களையும் 5ஜி சிக்னல் அனுமதிக்கப்பட்டுள்ள ஜியோ பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே இதன் உள்நோக்கம். வேறு எதுவும் இல்லை. பிஎஸ்என்எல்லின் நலனோ வாடிக்கையாளர் நலனோ ஒரு துளியும் இல்லை. முழுக்கவும் பிரதமரின் உயிர் நண்பர்அம்பானியின் பாக்கெட்டை நிரப்புவது மட்டுமே குறிக்கோள். அதற்கான பணத்தையும் முதலீட்டையும் மக்கள் பணத்தில் உருவான பொதுச் சொத்தான பிஎஸ்என்எல்லில் இருந்து கொடுப்பதே மோடி அரசின் மோசடித்தனமான கொடுஞ்செயல்.

வியாழன், அக்டோபர் 06, 2022

இந்த மழைக்காலம் பொழிந்த நீரால் ...

இந்த மழைக்காலம் பொழிந்த நீரால்

என் கண்கள் நிரம்பி வழிகின்றன
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
தடுமாறும் என் இதயமே,
என்ன விதமான விளையாட்டு இது, அறியேன்
என் உதடுகள் பாடும் இந்தக் கொடுங்கீதம்
எங்கிருந்து வந்தது, அறியேன்
இது எங்கோ தொலைதூரத்துக்கு என்னை தூக்கிச் செல்கிறது
நான் மறந்துவிட்ட கீதம்தான்,
ஆனால் எப்படியோ இன்னும் என் நினைவில் உள்ளது
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
அது பேசி ஓய்ந்த பழங்கதைதான்,
நீ அதை மறந்திருப்பாய் என்றே நினைக்கின்றேன்
ஆனால்
கண்ணாமூச்சி ஆடிய அந்த மழைக்காலத்தை
என்னால் மறக்க முடியாதே !
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
வருடங்கள் பல ஓடிவிட்டன நாம் பிரிந்த பின் சந்தித்து
கடந்த காலம் இந்த மழைக்காலமின்னலில் பளிச்செனத் தெரிகின்றது
அதில் நான் உன்னைப் பார்க்கின்றேன்
நம்பிக்கையும் நிராசையும் என் இதயத்தில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
இந்த மழைக்காலம் பொழிந்த நீரால்
என் கண்கள் நிரம்பி வழிகின்றன
ஆனாலும்
இதயம் தாகத்தால் வறண்டு கிடக்கின்றது
....
இந்தி மூலம்: கவிஞர் ஆனந்த் பக்ஷி
தமிழில் மு இக்பால் அகமது
........
மெஹ்பூபா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். ஆர் டி பர்மன் இசை. ஒரு துன்பியல் பாடலுக்கு மிகப்பல இசைக்கருவிகளைக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ரேசன் அமைத்திருந்தாலும் ஒவ்வொரு சொல்லின் உள்ளேயும் உறைந்து கிடக்கும் துயரின் பிழிவை செதுக்கிச் செதுக்கி பாடுகின்றான் பாடகன். இசைக்கருவிகளுக்கும் அவனுக்குமான போட்டி நடக்கின்றது. வெற்றிபெற்றது யார்? பாடியவர் கிஷோர் குமார்.

லிங்க் https://www.youtube.com/watch?v=_4Ccxj_A4UU

பாண்டியர்கள், சோழர்கள் -பார்ப்பனிய வளர்ப்பு-பெளத்த சமண அழிப்பு

(1)

திருவங்காடு கிருஷ்ண குறுப்பு எழுதுகின்றார்:

சோழமண்டலத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீர்காழி என்ற இடத்தில் சம்பந்தமூர்த்தி என்ற பேச்சாற்றலும் திறமையும் வாய்ந்த வைதீக பார்ப்பனர், கி.பி.640 இல் பாண்டியநாட்டின் தலைநகரான மதுரை வந்தார். பாண்டிய மன்னரின் அமைச்சரை அவர் முதலாவதாக வசீகரித்தார். அமைச்சர் மூலமாக பட்டத்து ராணியையும் இவர்கள் இருவர் மூலமாக மன்னரையும் விரைவிலேயே கவர்ந்தார். ...
மதுரையின் மேற்குப் பாகத்தில் இருந்த எட்டு மலைகளிலும் வாழ்ந்துவந்த எட்டாயிரம் சமணத்துறவிகளையும் பாண்டிய படைவீரர்களை அனுப்பி மதுரைக்கு அழைத்து வரச்செய்தார். பட்டத்து அரசியும் அமைச்சரும் சம்பந்தனும் சேர்ந்து மன்னரைத் தூண்டியதன்படி மன்னர் இந்த சமணத்துறவிகளை சம்பந்தருடன் மதவிவாதத்தில் ஈடுபடச்செய்தார். விவாதத்தில் தோல்வியுறும் கட்சியினர் கொல்லப்படுவர் என்பது ஒப்பந்தம். வாதத்தில் சம்பந்தன் தோற்றான். ஆனால் சில செப்படி வித்தைகளைக் காட்டியதன் விளைவாக சமணத்துறவிகள் தோற்றதாக தீர்ப்புக்கப்பட்டது. சம்பந்தனின் தலைமையில் எவ்வித தயக்கமும் இன்றி மதுரை வைகை நதிக்கரையில் சூலங்களை நட்டு, 8,000 சமணத்துறவிகளையும் உயிரோடு ஏற்றிக் கொன்றனர். தேவாரத்தில் சம்பந்தன் எழுதிய 'ஆலவாய் பதிகம்' இந்நிகழ்ச்சியைத் தான் பாடுகின்றது. மிகக்கொடிய இந்தச் சித்ரவதையின் நினைவாக, வைதிக பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் மதுரையில் 'கழுவேற்றித் திருவிழா' என்று இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
... .... ....
அடுத்தது வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பரின் பதிவு:
"சமுதாய, பொருளாதார வாழ்க்கையின் மய்யம் - குறிப்பாக கிராமங்களில் கோயில் தான். கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் அளிக்கப்பட்ட கொடைகளே. எனவே அவை பெரும்பாலும் தலைநகரில் அமைந்தவை, அரண்மனையுடன் தொடர்பு கொண்டவை. தஞ்சாவூரில் உள்ள ராஜராஜேஸ்வரம் கோயில் அப்படிப்பட்டதே. இவை கிராம வாழ்வின் மய்யமாக விளங்கின. கிராமக் கூட்டங்கள் கூடுகின்ற இடமும் கிராமப் பாடசாலையும் அதனுடன் இணைந்திருந்தன.
பெரியகோவில்கள் கட்ட பல்லாண்டுகள் தேவைப்பட்டன. பிற்காலத்திய பெரிய நிறுவனங்களுக்கான ஒப்பானவருவாயைக் கொண்டிருந்தன இந்தக் கோயில்கள். ஒருவேளை மிகப்பெரிய கோவில் தஞ்சாவூரில் உள்ளதாகவே இருந்திருக்கலாம். 500 ராத்தலுக்கும் அதிகமான கற்களும், 600 ராத்தல் வெள்ளியும் இக்கோயிலின் வருமானம் நன்கொடைகள், வசூல் ஆகியவற்றின் வழியாகவே அவை கிடைத்தன. நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து கிடைத்த வருமானத்திற்குமேல் இவை கிடைத்தன. போக போக்கியங்களுக்காக 400 பெண்(தேவதாசி )களையும் 212 ஊழியர்களையும் 57 பாட்டுக்காரர்களையும் நியமித்திருந்தனர்.
தேவதாசிகள் (கடவுளுடைய அடிமைப்பெண்கள்) சோழ காலகட்டத்தில் எல்லாக் கோயில்களிலும் காணப்பட்டனர். பிறந்தவுடனோ குழந்தைப்பருவத்திலோ கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டனர். அதிக திறமையுள்ளவர்களை பரதநாட்டிய ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் இதன் பிறகு பெரும்பாலான கோயில்களிலும் தேவதாசிகள் வஞ்சிக்கப்பட்ட வேசிகளாக தரம்தாழ்ந்தனர்.""
நூல் : பிராமண மதம், ஜோசப் இடமருகு, அலைகள் வெளியீட்டகம், 1995
... .... ....

(2)
"சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மைகள்...
வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோவில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தம் உரிமையை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயம் (பிராமணர்களின் உடைமை) ஆக மாற்றினார்கள். ஆகவே நிலவுடைமை கோவிலுக்கோ கோவில் நிர்வாகத்தில் ஆதித்தம் செலுத்திய மேல்வர்க்கங்களுக்கே மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல, போர்களுக்கும் கோவில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள். வரி கோவிலுக்கென்று வசூலிக்கப்பட்டதால் வரிகொடாதவர்களுக்கு 'சிவதுரோகி' என்று முத்திரை குத்தி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தின் ஒரு பகுதியை விற்று 'தண்டம்' என்ற பெயரால் கோவிலுக்கு எடுத்துக்கெண்டார்கள். இத்தகைய சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக்கொள்கைகளின் அனுசரணையுடனும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.
இச்சுரண்டல் முறையை மக்கள் எப்போதும் சகித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. துயரங்களும் கொடுமைகளும் அளவு மீறும்போது அவர்கள் போராடினர். அவை வர்க்கப் போராட்டங்களே.
தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் கிடைத்த கல்வெட்டு கூறுவது:அக்கோவிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்டநிலத்தை ஊர்ச்சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப்பார்த்தனர். பயனில்லை. அவ்வநீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்து தீயில் இறங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.
.......
தேவரடியார்களில் இருவகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பத்தினரை சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். இவர்களது பெயர்களுடன் அதிகாரிகளின் பட்டங்களும் சேர்த்து வழங்கப்படும்.
இன்னொரு வகையினர் ஏழைப்பெண்கள். பஞ்சக் காலத்தில் நிலம் இழந்தவர்களும் வெள்ளக்காலத்தில் நிலம் இழந்தவர்களும் தங்களுடைய பெண்களைக் கோவில்களுக்கு விற்றுவிடுவார்கள். அவர்களுக்கான விலையை நிலமாக அவர்களுக்கே ஜீவிதமாகக் கொடுப்பார்கள். இப்பெண்களின் தந்தையோ தமையனோ உறவினனோ அதனைக்காணியாக அனுபவிப்பர். இவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகும்போது கோவில் செலவு அதிகமாகும். அதனைக்குறைக்க சபையாரும் அரசனும் முயற்சி செய்வார்கள்.அவர்களுடைய ஜீவிதங்களைப் பறித்து கோயில் செலவில் உணவு மட்டும் அளிக்க முற்படுவர். அச்சமயங்களில் உழவர்களான தேவரடியாரின் உறவினர்கள் நிலமிழப்பார்கள்.
இக்கொடுமையை எதிர்த்து நடந்த ஒரு நிகழ்வை கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது: தேவரடியாரது ஜீவித நிலங்களைக் கைப்பற்றிக்கொள்ளும்படி நாடாளும் சோழ மன்னனின் அதிகாரி கட்டளை அனுப்ப, சபையாரும் கட்டளையை நிறைவேற்றினர். இதனை எதிர்த்து உழவர்கள் போராட்டம் தொடங்கினர். இவர்களை ஆதரித்து ஏழைத் தேவரடியார் ஆன 'திருவீதிப்பணி செய்வாரும் 'திரண்டனர். தமது போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத்திரட்ட சதுரிமாணிக்கம் என்ற தேவரடியாள் முன்வந்தாள். தனது வர்க்கத்தாரின் உரிமையை நிலைநாட்ட கோவில் கோபுரத்தின் மேல் ஏறி விழுந்து உயிர்விட்டாள்.
......
ஆட்சியின் அநீதியையும் நில உடைமையாளரின் கொடுமையையும் எதிர்க்க மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடியும் இருக்கிறார்கள். அரசனது ஆணைகளும் சபையாரின் முடிவுகளும் கோவில் சுவர்களில் எழுதிவைக்கப்பட்டு இருந்ததால் இந்த முடிவுகளை எதிர்ப்பதற்கு அடையாளமாக சில நேரங்களில் மக்கள் கோவில் சுவர்களை இடித்து கல்வெட்டுக்களை அழித்திருக்கிறார்கள்.
நூல்: தமிழர் வரலாறும் பண்பாடும், நா.வானமாமலை, என்.சி.பி.எச்., 1996

செவ்வாய், ஜூலை 05, 2022

தீக்கதிரும் என் எழுத்தும்

பள்ளிப் பருவத்திலேயே மூத்த அண்ணன் சோவியத் நாடு, ஸ்புட்னிக், தீக்கதிர், சிகரம், செம்மலர், கல்பனா M என்று அறிமுகம் செய்து வைத்தார். தீக்கதிர் வாரப்பத்திரிக்கையாக வெளிவந்தது நினைவில் உள்ளது. மதுரையின் தெருவோர வாசகசாலைகள், செல்லூர் கலைவாணர் என்.எஸ்.கே படிப்பகம், செல்லூர் கிளை நூலகம், மதுரை மத்திய நூலகம், வாத்தியார் சுந்தரராஜன், பின்னர் சிஐடியூ கைத்தறி நெசவாளர்சங்கம் இப்படி பலரும் பல சூழல்களும் என் வாசிப்புப் பழக்கம் மேம்பட பெரிதும் காரணமாக இருந்தார்கள். 


இன்றைய இணையதள காலம் இல்லை அது. தினசரி பத்திரிக்கைகள், வார, மாத இதழ்களும் நூலகங்களும் தெருவோர தேநீர்க் கடைகளும்தான் நமக்கான வாசிப்புக்கு தளம் அமைத்துக் கொடுத்தன. இப்படித்தான் தமிழின் புகழ்பெற்ற அல்லது பெறாத எழுத்தாளர்கள் பலரை நான் அறிந்துகொண்டேன்.

வேலைக்காக சென்னை வந்தபின் நூல்களை வாங்குவது, சேகரிப்பது என அடுத்த கட்டம். பபாசி நடத்தும் ஜனவரி மாத புத்தகக் கண்காட்சி வாசிப்பின் எல்லையை விரிவாக்கியது எனில் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கம் புரிதலுக்கான வழியைக் காட்டியது. ஒரு கட்டத்தில் அதுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்த மிகப்பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அந்நியமாகப் படவே என்னிடம் இருந்து விலகத் தொடங்க, பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை மனசுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்.

மாநகராட்சிப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவன் நான், ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பினேன். The Hindu தொடர்ந்து வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். Frontline வெளியானது, முதல் இதழில் இருந்து வாசித்தேன். 

இப்படி போய்க்கொண்டு இருந்தது.  வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமிக்க நண்பர்கள் சேர்ந்து அலுவலகத்தில் தமிழ்ச்சங்கம் தொடங்கி, 'முல்லை' என்ற கையெழுத்து ஏடு ஒன்றையும் நடத்தினோம். நானும் எழுதிக்கொண்டு இருந்தேன்.

இயக்கம் என்னை நான் பணிபுரிந்த நிறுவனத்தின் தொழிற்சங்கத்தில் நிர்வாகியாக ஆக்குவதென முடிவு செய்தது. துணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என 13 ஆண்டுகள் வேலை செய்தேன். தீக்கதிர் சந்தா கட்டினேன்.
தி ஹிந்து'வில் வந்த சிறு செய்தி ஒன்றை வாசித்து மனம் வெதும்பி அதை தமிழில் மொழிபெயர்த்து தீக்கதிருக்கு அனுப்பி வெளியிட வேண்டினேன். குவைத்தில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது அரபு ஷேக்குகள் நடத்தும் சாட்டையடி தண்டனை பற்றிய செய்தி அது. நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு தீக்கதிர் தபாலில் வந்தது. பிரித்து வாசிக்கும்போது பார்த்தேன், நான் அனுப்பிய செய்தி அச்சில் வந்திருந்தது. நாள் 16.11.1991. அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது தீக்கதிர் மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்தது. 1993 இல்தான் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. 1991 டிசம்பரில் மதுரை தீக்கதிர் அலுவலகத்துக்கு சென்றேன், இரண்டு கட்டுரைகளுடன். ஆசிரியர் குழுத்தோழர்கள் அழைத்துக்கொண்டு மாடியில் இருந்த மூத்த தோழர் கே.முத்தையா முன்நிறுத்தினார்கள். அறிமுகம் செய்த பின், 'நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க' என்று முகம் நிறைந்த புன்னகையுடன் வாழ்த்தினார். அதன் பின் பிற ஆங்கில பத்திரிக்கைகளில் இருந்து கட்டுரைகளை மொழி பெயர்த்ததுடன், நானே கட்டுரைகளையும் எழுதினேன். திருத்தல், நீக்குதல் போன்ற தணிக்கைகள் ஏதும் இன்றி அனைத்தும் வெளிவந்தன.

1993 இல் தீக்கதிர் சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. (வட)சென்னை தமுஎசவில் இயங்கிக்கொண்டு இருக்கவே, தமுஎச மாநில மையப்பொறுப்பிலும் தீக்கதிர் ஆசிரியர் குழு விலும் இருந்த தோழர்  அ.குமரேசன் அறிமுகம் ஆனார். கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் என எழுதி அவரிடம் கொடுக்கத் தொடங்கினேன். அவை வண்ணக்கதிரில் வெளியாகும். வண்ணக்கதிர் அவர் பொறுப்பில் இருந்தது. நன்றி சொன்னால் அவர் 'உங்க நன்றியை இன்னொரு கட்டுரை மூலம் சொல்லுங்கள்' என்பார். அடுத்த கட்டமாக நடுப்பக்க அரசியல் கட்டுரைகள் எழுதினேன். இப்படித்தான் என் எழுத்தினை மேம்படுத்திக்கொள்ளவும் அரசியல் பார்வையை கூர்மைப்படுத்திக்கொள்ளவும் தீக்கதிரும் தோழர் அ.கு.வும் காரணமாக அமைந்தார்கள். நான் பொறுப்பில் இருந்த ஆவடி தமுஎசவின் பல நிகழ்வுகளில் அ.கு. பங்குபெற்று சிறப்பித்தார். இயக்கம், எழுத்து ஆகியவற்றைக் கடந்த அன்பும் பிரியமும் அவரிடம் இப்போதும் எனக்கு உண்டு.

2001 தேர்தல்காலத்தில் சிந்தாதிரிப்பேட்டை தீக்கதிர் அலுவலத்திலேயே நேரடியாக பகுதிநேரம் பணியாற்றும் பெருவாய்ப்பு கிடைத்தது. அன்றைய தீக்கதிர் ஆசிரியர்  தோழர் வே. மீனாட்சிசுந்தரம். அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதினேன், மொழிப்பெயர்ப்பு வேலைகள் செய்தேன். மகிழ்ச்சியான நாட்கள் அவை.  மாலை ஆறு மணி அளவில் ஒரு இடைவெளியில் வெளியே சென்று அ.கு.வும் நானும் அவரது வாடிக்கையான கடையில் தேநீர் அருந்துவோம். பணி முடித்த பின் இருவரும் சென்ட்ரல் வந்து மின்சார ரயில் பிடிப்போம், நான் ஆவடியில் இறங்குவேன், அவர் செவ்வாப்பேட்டை. சில நேரங்களில் தோழ சு.பொ.அகத்தியலிங்கம் கூட வருவார். அவர் வீடும் செவ்வாப்பேட்டையில்தான். தீக்கதிரில் எழுத்துப்பணி செய்த அந்த நாட்களில் இரவு தூக்கம் பிடிக்க வெகுநேரம் ஆகும், அன்று எழுதிய எழுத்துக்கள் அச்சில் வெளியாகும், மறுநாள்  தமிழகம்  எங்கும் என் எழுத்து வாசிக்கப்படும், பேசப்படும் என்ற மகிழ்ச்சியான நினைவுகள் தூக்கத்தை துரத்தி விடாதா!

தோழர் மயிலை பாலுவின் அறிமுகத்தால் அலைகள் சிவம் அவர்களை சந்தித்தேன். கான்ராட் உட் எழுதிய ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பை சிவம் எனக்கு அளித்தார்.  மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்ற மொழிபெயர்ப்பு நூல் 2006 இல் வெளியானது. தொடர்ந்து விடியல் - அலைகள் இணைந்து மாவோ படைப்புக்களை வெளியிட்டனர், தொகுதிகள் 5, 9 இரண்டையும் மொழிபெயர்த்தேன். ஸ்டாலின் படைப்புக்களில் ஏழாவது தொகுதியை மொழிபெயர்த்தேன். 'வேலிகளுக்கு அப்பால்' என்ற என் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகின்றேன். எனது சொந்த கட்டுரைகள் 'வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரிட்டா பிஸ்ஸாவும்' என்னும் நூலாக 2022 பிப்ரவரியில் வெளியானது. 

அயோத்தி, ஆர்எஸ் எஸ், BCCI வங்கி மோசடி, பங்குச் சந்தை மோசடி, போபால் விசவாயு கசிவு, அமெரிக்க அரசியல், CIA, சார்லி சாப்ளின் திரைப்படங்கள், போர்க்கப்பல் போடம்கின்,  2001 செப்டம்பர் 11, ஈராக் மக்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஜோதிபாசு, புத்ததேவ் ஆகியோருடன் பேரா.முசிருல் ஹசன் நடத்திய டயில் நேர்காணலின் தமிழாக்கம், ஆர்.கே.நாராயணின் நான்கு ரூபாய், குற்றமும் தண்டனையும் ஆகிய கதைகள் (தமிழாக்கம்), வண்ணக்கதிரில் எழுதிய அரசியல் நையாண்டிக் கட்டுரைகள், நடுப்பக்க அரசியல் கட்டுரைகள் என நான் எழுதியவற்றை தீக்கதிர் வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது என நன்றியுடன் குறிப்பிடுகின்றேன். என் பள்ளித்தோழன் ப முருகன் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் உள்ளார் என்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி எனக்கு.

பொலிவியாவில் கொச்சபம்பாவில் குடிநீர் எடுப்பதும் விற்பதும் அமெரிக்க தனியார் கம்பெனிகளின் கையில் கொடுத்தது அரசு. வீட்டின் கூரையில் விழும் மழைத்தண்ணீரைக்கூட சேமிக்க கூடாது என்றும் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றும் கெடுபிடி செய்தார்கள். கொடுமையின் உச்சத்தில் பொதுமக்களும் ராணுவமும் தெருவில் நேருக்கு நேர் மோதிக்கொள்ள பெரும் கலவரங்கள் வெடித்தன. விந்திய இமாசல யமுனா கங்கா என்ற என் கட்டுரை 29.1.2012 வண்ணக்கதிரில் வெளிவந்தது, இந்தியாவில் அது போன்ற முடிவுகளை அரசு செய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தேன். இப்போது மோடி அரசின் ஜல்சக்தி அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் நம் வீட்டு கிணற்றில் நாம் தண்ணீர் எடுக்க அரசுக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தீக்கதிரின் அரசியல்ஞானச்செவ்வொளி விரிந்து பரவட்டும்!

வெள்ளி, மே 27, 2022

கொரோனா பெருந்தொற்றால் கல்லாவை நிரப்பியவர்கள் யார்?

அதிர்ச்சி ஊட்டும் ஆக்ஸ்பாம் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றால் கல்லாவை நிரப்பியவர்கள் யார்?
 
கோவிட் தொற்று காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதி* உருவானார் (*நிகற்புதம்= 100 கோடி, அதாவது 1 பில்லியன்).
 
கொரோனா காலம் இந்த உலகில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதியை உருவாக்கி உள்ளதாக ஆக்ஸ்பாமின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. 
 
டாவோசில் நடக்கவுள்ள உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்துக்கு முன் ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள Profiting from pain என்ற குறிப்பில் பல அதிர்ச்சி ஊட்டும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
மிக முக்கியமானது: தொற்று காலத்தில் புதிதாக 40 புதிய நிகற்புதாதிபதிகள் உருவானார்கள். மாடெர்ணா, ஃபைசர் போன்ற பகாசூர மருந்து கம்பெனிகள் ஈட்டிய லாபம் மட்டும் ஒவ்வொரு வினாடிக்கும் 1000 டாலர்கள், அதாவது 77000 ரூபாய், ஒரு நிமிடத்துக்கும் ரூ.46,20,000, ஒரு மணி நேரத்தில் ரூ.27 கோடியே 72 லட்சம் லாபம் மட்டும். வருமானம் தனி.
 
கோவிட் தொற்று காலத்தில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய நிகற்புதாதிபதி உருவானார், மொத்தம் 573 புதிய நிகற்புதாதிபதிகள் இப்படி உருவானார்கள். எதிர்முனையில் இந்த 2022இல் ஒவ்வொரு 33 மணி நேரத்திற்கும் 26.30 கோடி மக்கள் கொடும் வறுமையில் வீழ்வார்கள் என்று ஆக்ஸ்பாம் எச்சரிக்கின்றது.
 
தொற்று கண்டறியப்பட்ட 2019 டிசம்பருக்கு முந்தைய23 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2019 டிசம்பருக்கு பின் இந்த நிகற்புதாதிபதிகளின் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகின் ஒட்டுமொத்த நிகற்புதாதிபதிகளின் சொத்து மதிப்பு, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 13.9%! அதாவது 2000ஆவது ஆண்டில் இவர்களின் சொத்து மதிப்பு 4.4%, எனில் இப்போது மூன்று மடங்கு.
 
2020க்கு பிறகு 2668 நிகற்புதாதிபதிகள் தோன்றியுள்ளார்கள், இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 12.7 கற்பம் (1 கற்பம்=1 லட்சம் கோடி, ஒரு ட்ரில்லியன்). அதே நேரத்தில் உலகின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, உலகின் அடிமட்ட சாமான்ய மக்களின் 40% பேரின் சொத்தை விடவும் அதிகமாம். 
 
மருந்து கம்பெனிகள் தமது கொரோனா தடுப்பூசி வாக்சின் மருந்தின் அதிகபட்ச விலையை விடவும் 24 மடங்கு விலைக்கு உலக நாடுகளின் அரசுகளுக்கு விற்றுள்ளார்கள், ஆனால் பொருளாதாரத்தில் அடிமட்ட நிலையில் உள்ள நாடுகளில் உள்ள 87% மக்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி பெறவில்லை என்றும் ஆக்ஸ்பாம் சொல்கின்றது. 
 
இந்த கொடூர கொள்ளையில் மருந்துகம்பெனிகள் மட்டுமே ஈடுபட்டன என்பதும் இல்லை. எரிசக்தி, உணவு கம்பெனிகளும் கொடூர வருமானம், லாபம் அடித்துள்ளன. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், டோட்டல் எனெர்ஜீஸ், எக்ஸான், செவ்ரோன் ஆகிய பெரிய எரிசக்தி கம்பெனிகள் மொத்தமாக அடித்த லாபம் மட்டும் ஒவ்வொரு விநாடிக்கும் 2600 டாலர்கள், அதாவது ஒவ்வொரு மணிக்கும் ரூ.72 கோடிக்கும் மேல். வாசிக்கும் நீங்கள் கணக்கு போட்டுப்பாருங்கள், இரண்டு வருடங்களில், அதாவது 17520 மணி நேரத்தில் அவர்கள் அடித்த கொள்ளை எவ்வளவு? சுமார் ரூ.12,61,440 கோடி. இதே காலகட்டத்தில் உணவு உற்பத்தி துறையில் புதிதாக 62 புதிய நிகற்புதாதிபதிகள் உருவெடுத்து உள்ளனர். 
 
கார்கில் கம்பெனிக்கு சொந்தமாக மேலும் 3 கம்பெனிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கார்கில் கம்பெனி உலகின் விவசாய துறையில் 70% மார்க்கெட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன் கார்கில் குடும்பத்தில் 8 நிகற்புதாதிபதிகள் இருந்தார்கள், கொரோனா தொற்றுக்கு பின் அக்குடும்பத்தில் 4 புதிய நிகற்புதாதிபதிகள் பிறந்தார்கள்.
 
கொரோனா காலத்துக்கு பின், இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் வரலாறு கண்டிடாத அளவுக்கு விலைவாசி அதிகரிப்பும் அரசியல் குழப்பமும் நிலவுகின்றன. உலகின் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் 60% நாடுகள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டு விட்டன.