சனி, அக்டோபர் 30, 2021

நன்மாறனும் பிற தோழர்களும் நமக்கு உணர்த்துவது என்ன?


திருக்குறளும் சித்தர்கள் பாடல்களும் இல்லாமல் அவரது உரையாடலோ மேடைப்பேச்சோ நிறைவு பெற்றதாக எனக்கு நினைவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து எங்கிருந்தோ ஒரு பாடல் வரியை திடீரென மேற்கோள் காட்டுவார், நமக்கு வியப்பாக இருக்கும். 'மனுசன் இதையெல்லாம் எப்படித்தான் ஞாபகம் வைத்திருக்கின்றாரோ!'

ஒரு யூடியூப் சானல் நேர்காணல். நாடெங்கும் பேசப்பட்ட அவரது 2020 நவம்பர் 20 ரூபாய் ஆட்டோ பயணத்தின் பின் நடந்தது. 'சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட பார்ச்சுன், இன்னோவா என்று கார்களில் பறப்பதும் பல கோடி சொத்துக்கள் சேர்ப்பதும் நடைமுறை ஆன காலத்தில், இரண்டு முறை எம் எல் ஏ ஆக இருந்த நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றீர்கள், பேருந்தில் பயணம் செய்கின்றீர்கள்.... என்ற கேள்விக்கு நன்மாறன் இப்படி பதில் சொல்கின்றார்: 

சித்தர்கள் எதன் மீதும் பற்றற்றவர்கள், உண்பது நாழி உடுப்பது முழம் என்று கூட சொல்ல மாட்டார்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள்.... எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் எத்தனை வீடு வாசல்கள் வைத்திருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 'போன' ஒரு மனிதனையாவது காட்ட முடியுமா? இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது, இதன் கோளாறுதான் அரசியல் வாழ்க்கையில் சம்பாதிப்பதும் 'செலவு செய்தால்தான் அரசியலுக்கு வர முடியும்'ங்கற கருத்தும்....

இவ்வாறு சொன்னவர், சித்தர்களின் பொருள் சார்ந்த பற்றற்ற வாழ்க்கை பற்றி குறிப்பிட்டு, சித்தர்கள் உண்பது நாழி.... என்று கூட சொல்ல மாட்டார்கள்  என்று முடிக்கின்றார். அப்பாடல் இது:

உண்பது நாழி! உடுப்பது நான்கு முழம்!

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமேதான்!

- ஒளவையாரின் நல்வழி

பொருள்: மனிதன் உண்பது ஒரு நாழி அளவே சோறுதான், உடுப்பதோ நான்கு முழத்துணி. ஆனால், மனதில் நிழலாகும் எண்ணங்கள் மட்டும் எண்பது கோடியாகப் பெருகி மனத்துன்பத்தைத் தருகின்றது. அகக்கண் குருடாக இருக்கின்ற மாந்தர்களின் குடிவாழ்க்கை ஆனது, தடம் மாறி கருத்தின்றி பயணித்தால், உள்ளதே போதும் என்ற மன அமைதி பெறாவிடில், எளிதில் உடைந்து விடும் மண் கலம் போலச் சாகும் வரை அவனுக்குத் துன்பமே அளிக்கும்!

... .... ....

கேட்பதற்கு இது ஏதோ ஆன்மிகவாதம் போல் முதல் பார்வையில் தோன்றக்கூடும். உண்மை அதுவல்ல.

உண்மையில் சித்தர்கள் பொருள்முதல்வாதிகள். ஆனால் தமக்கெனவும் எதிர்காலத்துக்கும் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்ளாத பெருந்தகைகள். இன்றிருப்பதை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு நாளைக் கழிப்பவர்கள். இந்த மனநிலை, தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சொத்தும் பொருளும் சேர்க்காத மனநிலை, தன்னலம் அற்ற கம்யூனிஸ்ட் மனநிலையன்றி வேறில்லை. அதுவே மறைந்த நன்மாறன் தன் காலம் நெடுகிலும், ஒரு சிறு பிரயத்தனமும் தனிப்பட்ட முயற்சியும் இன்றி, சாதாரணமாக கைக்கொண்டு இருந்த மனநிலையும் வாழ்க்கை நடைமுறையும்.

கேரளாவின் உயர்சாதி ஆன நம்பூதிரி வகுப்பில், பெரும் செல்வமிகு குடும்பத்தில் பிறந்தவர். பின்னர் அம்மாநில முதலமைச்சராக இருந்தவர். தனக்கு கிடைத்த குடும்ப  சொத்தின் பங்கு அனைத்தையும் கட்சிக்கு கொடுத்தவர் ஈ எம் எஸ் நம்பூதிரிப்பாட். அவரை நேர்காணல் கண்டு சுபமங்களாவில் எழுதினார் கோமல் சுவாமிநாதன். ஈ எம் எஸ் தேநீர் அருந்திய கோப்பையில் கீறல் விழுந்து இருந்தது என்று பதிவு செய்தார், வாசித்தது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது.

அவர் தந்தை ராமாயணத்துக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியவர், செல்வந்தர். இவர் வழக்கறிஞர். மதுரையில் செல்வந்தர்கள் விளையாடும் 'கிளப்'பில் டென்னிஸ் விளையாடுவார். கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தது. அனைத்தையும் உதறிவிட்டு திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் படுத்தும் உண்டும் உறங்கியும் தங்கியும் அவர்களுக்கான உரிமைபோரில் முன்னால் நின்று களம் கண்டார். அநேகமாக அவர்கள் அனைவரும் தலித் சமூக மக்கள்தான். மாட்டுக்கறி உண்டார். அவர் அமிர்தலிங்கம் ஐயரின் மகனான பாலசுப்ரமணியம். கூடவே எஸ் ஏ தங்கராஜன் என்ற அதிசயப்பிறவி. இவர் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன், 'ஊறல் குழியில் இருந்து....'. எங்கேயாவது இரண்டு நாள் சேர்ந்தால்போல் நிம்மதியாக தூங்கியிருக்கின்றாரா என்று நூல் முழுக்க தேடினேன், இல்லவே இல்லை. போலீஸ் ஸ்டேசன், ஜெயில், தடியடி, கற்பனைக்கும் எட்டாத சித்ரவதைகள். திண்டுக்கல் பேகம்பூர் இவர்களால் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

கர்நாடகாவில் இருந்து வந்த பிராமணர் அவர். சிவப்பு நிற  மேனியர். கட்சியின் கட்டளை, தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தை கட்டுகின்றார். தமிழ் தெரியாது. அடித்தால் திருப்பி அடி என்று கற்றுக் கொடுக்கின்றார். மாமிசம் உண்டார், அந்த  மக்களுடன் தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டார் பி ஸ்ரீனிவாச ராவ்.

கேரளாவில் பிறந்த சிண்டன் கட்சியின் கட்டளையை ஏற்று தமிழ்நாடு வருகின்றார். பாரதிதாசன் அவருக்கு சிந்தன் என்று பெயர் சூட்டுகின்றார். சமூக விரோதிகளின் கத்திகுத்துக்கு ஆளாகின்றார், 30க்கும் மேற்பட்ட கத்திகுத்துக்கள். அதிசயம், உயிர் பிழைக்கின்றார். ஹோட்டல் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள் என அடிமட்ட தொழிலாளர்களுடன் வாழ்க்கையை பிணைத்துக் கொள்கின்றார்.

பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பார் அட் லா பட்டம் பெற்றவர், சி பா ஆதித்தனார் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர், தன் வாழ்நாளின் இறுதியில் சென்னை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கே டி கே தங்கமணி. நான் முன்னுதாரணமாக இல்லை எனில் யார் இருப்பார் என்று மதுரை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டவர் மாணவர் இயக்கத்தில் இருந்து வந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த பி மோகன். வேட்டியை துவைத்து காயப்போட்டுள்ளேன், பொறுங்கள், கட்டிக்கொண்டு வருகின்றேன் என்று வாழ்ந்த ப ஜீவானந்தம். இப்போதும் வாழும் தியாக தீபங்கள் ஆன என் சங்கரய்யாவும் ஆர் நல்லக்கண்ணுவும்.

இவர்கள் சொந்த வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறு ஆக வாழ்ந்தார்கள் இல்லை. வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை, வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு வாழ்க்கை வாழவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமைக் கொள்கையை தம் சொந்த வாழ்விலும் மிக சாதாரணமாக வெற்றிகரமாக கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர்கள், காட்டுகின்றார்கள்.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இவர்கள் விட்டுச்செல்லும் செய்தியும் வாழ்க்கை நடைமுறையும் இதுவே. இது பாடம் அல்ல, வாழ்க்கையாக நாம் கைகொள்ள வேண்டியதும் பயில வேண்டியதும்.

.... ... .....

என் நன்மாறன் (13.5.1947 - 28.10.2021)



இரண்டு இருபது ரூபாய் தாள்களும் ஒற்றை செருப்பும்


2009இல் கொச்சியில் பணியில் இருந்தபோது சென்னை வருவதற்காக அதிகாலையிலேயே சென்று டட்கல் சீட்டு வாங்கிவிட்டு எர்ணாகுளம் வடக்கு ரயில்நிலையத்தை விட்டு வந்து மீண்டும் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தபோது ஒரு பெரியவர் எதிரே வந்து மிகுந்த தயக்கத்தோடு நின்றார். பார்த்தவுடன் தெரிந்தது தமிழர் என்று.  குளித்து சுத்தமாக தலைசீவி துவைத்த சட்டை கைலி கட்டி எதிரே நின்றார்.  வணங்கினார்.  நானும் தமிழன் என்று கண்டுகொண்டதால் இருக்கலாம்.  நானும் வணங்கி நின்று என்ன என்று பார்வையிலேயே வினவ, ‘பிள்ளைங்க சாப்பிடணும், ஒரு இருபது ரூபா கொடுங்கய்யா’ என்று மீண்டும் வணங்கினார்.  

அப்போதுதான் கண்டேன், சற்று தூரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் - பத்து வயதிற்குள் - ஒரு பெண்மணியும் நிற்க கண்டேன்.  அந்தப் பெண்ணோ மிகுந்த கூச்சத்துடன் தலை குனிந்தபடி நின்றிருந்தார்.  அவரும் குளித்து எண்ணெய் தேய்த்து படிய வாரி, குங்குமம் இட்டு, எளிய ஆனால் சுத்தமான ஆடை உடுத்தியிருந்தார்.  ‘எந்த ஊரு?’ என நான் கேட்க ‘திண்டுக்கல்’ என்றார் இவர். அடுத்து நான் கேட்கும் முன்னரே ‘கொத்தனார் வேலைக்கு வந்தேன், வர சொன்னவர போய் பாக்கணும், இப்போ காசு இல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுக்கணும், ஒரு இருபது ரூபா மட்டும் கொடுங்கய்யா, இன்னைக்கு வேல குடுத்துடுவாங்க’ என பணிவுடன மூன்றாம் மனிதர் காதில் விழுந்து விடமால் கவனமான பேசினார்.  ஊரை விட்டு ஊர் பிழைக்க போகும் குடும்பங்கள் எல்லாம் நடு ராத்திரியில்தான் ஊரை காலி செய்கின்றார்கள் என்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். தென்காசியில் இருந்து ஒரு நாள் நள்ளிரவில் என் ஏழாவது வயதில் எங்கள் குடும்பமும் மதுரை நோக்கி பிழைப்புக்காக இடம் பெயர்ந்தது நினைவுக்கு வந்தது.

என் தகப்பனைப் போலவே கறுப்பு நிறத்தில் நின்று கொண்டு கேவலம் ஒரு இருபது ரூபாய்க்காக என்னை வணங்கி நின்ற கோலம் என் கண்களில் எந்த தயக்கமும் இன்றி நீரை வர வைத்தது.   கொச்சி என்ற எர்ணாகுளத்தின் காஸ்ட்லி முகத்தை புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையானது திண்டுக்கல்காரருக்கு இன்னும் காட்டவில்லை ஆதலால் ஒரு இருபது ரூபாயில் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை உணவு கொடுத்துவிட முடியும் என்று நம்பிய அந்த அப்பாவியை என்னென்று சொல்ல!  நான்கு பேருக்கும் ஓரளவு சாப்பிடமுடிகின்ற ஒரு தொகையை அவர் கையில் கொடுத்தபோது அவர் கையெடுத்து வணங்க, சகிக்க முடியாமல் தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

.... .... ....

2020 நவம்பர் 27. மதுரை அரசுப்பொதுமருத்துவமனை எதிரே கருப்பாயூரணி செல்ல பேருந்தில் ஏறிய முதியவரின் ஒரு கால் செருப்பு கீழே விழுந்துவிட, அதனை எடுக்க கீழே இறங்கிய போது பேருந்து போய் விடுகின்றது. அமெரிக்கன் கல்லூரி காம்பவுண்ட் சுவர் ஓரம் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் ஒற்றை செருப்புடன் நடக்கும் முதியவரைப் பார்த்துவிட்டு, அவரிடம் விசாரிக்க முதியவர் நடந்ததை சொல்கின்றார். அவரை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு சைக்கிளில் வந்து தொலைந்த ஒற்றை செருப்பை மீட்டு வந்து அவரிடம் தருகின்றார். 

தற்செயலாக இதை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், முதியவரிடம் எங்கே போக என்று விசாரிக்கின்றார். கருப்பாயூரணியில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருகின்றார்கள், செல்ல வேண்டும் என்று முதியவர் சொல்ல, நான் கொண்டு சென்று விடுகின்றேன் என்று ஓட்டுநர் சொல்ல, என்னிடம் இருப்பது இருபது ரூபாய் மட்டுமே என்று இவர் சொல்ல, பரவாயில்லை, வாங்க, நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன் என்று முன்வந்து அவ்வாறே செய்கின்றார்.

இருபது ரூபாய் மட்டுமே பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் ஆட்டோவில் வந்தவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த என் நன்மாறன் என்று அறிந்து முகநூலில் திரு.பாண்டி பதிவு செய்ய, உலகம் எங்கும் அதுவே பேசு பொருளாக ஆனது. பல தொலைக்காட்சிகளும் யூடியூப் சானல்களும் நன்மாறன் அவர்களை வீடு தேடி சென்று நேர்காணல் செய்து ஒளிபரப்பினர். 

..... .... .....

நன்மாறன் பல்வேறு நேரங்களில் கூறியவற்றில் ஒரு சில:

ஆட்டோ ஓட்டுனரிடம் நான் முன்னாள் எம் எல் ஏ என்று சொல்லவில்லை. 2011 வரை இருந்தேன், இப்போதும் அதை சொல்லிக்கொண்டே திரிவது சரி அல்ல. 

என்னிடம் அரசு கொடுத்துள்ள இலவச பேருந்து அனுமதி சீட்டு உள்ளது, மாநிலம் எங்கும் பயணம் செய்யலாம், நான் பேருந்துகளில்தான் பயணம் செய்கின்றேன்.

அரசியலுக்கு வர தகுதி வேண்டாம், நல்ல எண்ணமும் சேவை செய்யும் மனதும்தான் வேண்டும். 

சமூகத்துக்கு நான் பயன்பட்டுள்ளேன், சமூகம் எனக்கு பயன்பட வேண்டும் என்பதில்லை. நாடு இப்போது ஒரு மோசமான சூழலில் சிக்கி உள்ளது, அதில் இருந்து விடுபட வேண்டும். அதற்காக நானும் வேலை செய்துகொண்டே இருக்கின்றேன். 

சட்டமன்றம் என்பது பணியாற்றக்கூடிய இடம்தானே அன்றி நம் சுகங்களை முன்னிட்டு போகின்ற இடம் அல்ல. நான் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடுமுறைதான், ஆனால் என் அறையில் நான் இருப்பேன், திறந்து வைப்பேன். பார்வையாளர்கள் வராத அந்த இரண்டு நாட்களில் அடுத்த வார சட்டமன்ற பணிகளுக்கான தயாரிப்புகளை செய்ய முடியும். பழைய கோப்புக்களை வாசிப்பது உட்பட. 

என் தந்தை ஹார்வி மில் தொழிலாளி. என் சிறு வயதில் மதுரை கீரைத்துறைப் பகுதியில் உள்ள சித்தர் சமாதிக்கு அழைத்து செல்வார். இரண்டு கரும்புகளுடன். நடந்தே செல்வோம். 'உண்பது நாழி, உடுப்பது முழம்' என்று கூட சொன்னதில்லை சித்தர்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள். "கோவிலாவது ஏனடா...." என்று கேட்டவர்கள் சித்தர்கள். கோவில்கள் பற்றி நிறைய ஆய்வு செய்துள்ளேன். என் தந்தையார் என்னை நூலகத்தில் கொண்டு போய் விட்டு 'நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். அவர்தான் எனக்கு முன்னோடி, inspiration. நூலகமே என் தாய் வீடு. அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் புத்தகம் வாசிக்க வேண்டும், முகநூல், வாட்சப் இதெல்லாம் போதாது.

காந்தியடிகள், பெரியார், அண்ணா, கம்யூனிஸ்ட் தலைவர்கள், கே பி ஜானகிஅம்மாள், எம் என் ராய் ஆகியோர் என்னை பாதித்தவர்கள். இந்தியாவுக்கு ஒரு அரசியல் சாசனம் வேண்டும் என்று முதலில் பேசியவர் ராய். ஜானகி அம்மாவின் வளர்ப்பு மகன் நான் என்று பெருமையுடன் சொல்வேன். 

எத்தனை ஏக்கர் வைத்து இருந்தாலும், எத்தனை வீடு வாசல்கள் வைத்து இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் சேர்ந்த ஒரு மனிதனையாவது நீங்கள் காட்ட முடியுமா? 

90களுக்கு பிறகான தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் கோட்பாடுதான் 'செலவு செய்பவனே அரசியலில் இருக்க முடியும்' என்ற நடைமுறையை உருவாக்கியது. "நீரளவே ஆகுமாம் ஆம்பல்". மக்கள் குணத்தைப் பொறுத்தே இன்றைய அரசியல்வாதிகள் பணத்தை வாரி இரைக்கின்றார்கள். இது மக்களுக்கும் நல்லது அல்ல, நாட்டுக்கும் நல்லது அல்ல. இல்லாத ஒன்றுக்காக ('கூடவே' வராத சொத்து சுகங்கள்) ஏங்குவதன் கோளாறுதான் அரசியல் வாழ்வில் சொத்து சேர்ப்பதும், செலவு பண்ணினால்தான் அரசியலுக்கு வர முடியும் என்கிற கருத்தும்.

... ... ...... .....

இங்கே ஆவடியை அடுத்த பட்டாபிராமில் முன்னாள் பிரதமர் ஒருவரின் சிலை ஒன்று உள்ளது. சிலையில் கல்வெட்டில் ஒருவர் பெயர் இப்படி உள்ளது: Ex-Parliament Candidate. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட்டாராம் அவர்! வெள்ளையர்களுக்கு மனுப்போட என்பதற்காகவே 1885இல் நிறுவப்பட்ட கட்சியை சேர்ந்தவர் இவர்.

... .....

என் நன்மாறன் (13.5.1947- 28.10.2021)


சனி, அக்டோபர் 09, 2021

1921 ரயில்பெட்டி கோர மரணங்கள் குறித்த விசாரணை மீது பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவு


1921 மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நவம்பர் மாதத்தில் ரயில்பெட்டியில் அடைத்து எடுத்துச்செல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் 70 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்கள். இக்கோர மரணம் குறித்து தனியே ஒரு பதிவு எழுதியுள்ளேன். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டது, விசாரணை அறிக்கையின் மீது பிரிட்டிஷ் அரசு என்ன முடிவுக்கு வந்தது என்பதை மலபார் துணை கலெக்டராக இருந்த திவான் பகதூர் சி கோபாலன் நாயர் தான் எழுதிய The Moplah Rebellion, 1921 என்ற நூலில் எழுதியுள்ளார். 1923 பதிப்பு. The train tragedy என்ற தலைப்பில் உள்ள எட்டாவது அத்தியாயத்தை இங்கே தமிழில் தருகின்றேன். அரசதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்கு சாதகமான அமைப்பாக இருக்கும் என்பதற்கு பிரிட்டிஷ் அரசின் இந்த நடவடிக்கை மிகச்சிறந்த உதாரணம்.

.... .... .... ....

கிளர்ச்சியின் போக்கில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது: 

"கிளர்ச்சியுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்ட 100 கைதிகள் (97 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள்) 1921 நவம்பர் 19 அன்று திரூரில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். MS&SM ரயில்வே சரக்குப்பெட்டி எண்1711இல் அடைக்கப்பட்டனர். கோழிக்கோட்டில் இருந்து மாலை நேரம் புறப்படும் ரயில் எண் 77இன் பின்னால் அப்பெட்டி இணைக்கப்பட்டது. போத்தனூர் ரயில்நிலையத்துக்கு வந்தபோது அனைத்துகைதிகளும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர். மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இறந்துவிட்டார் கள். உயிர் இருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு எடுத்துச்சென்றனர். இவர்களில் 6 பேர் கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் இறந்தார்கள். 13 பேர் கோயம்புத்தூர் சிவில் மருத்துவமனைக்கும் 25 பேர் மத்திய சிறைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். சிவில் மருத்துவமனைக்கு வந்தவுடன் இருவரும் பிற்பகலில் 4 பேரும் இறந்தார்கள். 26ஆம் தேதி இருவர் இறந்தார்கள். ஆக மொத்தம்70 பேர் இறந்தார்கள்.

மெட்றாஸ் அரசு இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைத்தது. குழுவின் அறிக்கை அடிப்படையில், 1922 ஆகஸ்ட் 30 அன்று இந்திய அரசு கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டது.

சரக்குப்பெட்டியை அத்தகைய ஒரு அவசர நிலையில் பயன்படுத்தியதை கண்டனத்துக்குரியது என்றோ மனிதாபிமானம் அற்ற செயல் என்றோ கூற முடியாது என்று விசாரணைக்குழு கூறுவதை அரசு அங்கீகரிக்கின்றது.

பயணிகள் பயணம் செய்வதற்கான பெட்டி இல்லை என்றாலும் கூட அவை மூடப்பட்ட டிரக்குகள் அல்ல, காற்றோட்டம் உள்ளவை, காற்றுத்துளைகள் மூடப்பட்டு இருக்கவில்லை, போதிய காற்றுத்துளைகள் இருந்தன என்பதால் கணிசமான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டு செல்ல தக்கவைதான்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக இத்தகைய பெட்டிகளை பயன்படுத்துவது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்க கூடாது, மாறாக அதற்கான முறையான விதிகளின் கீழ் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விசாரணைக்குழு கூறுவதையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது. இத்தகைய ஒருமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதாலேயே ராணுவ கமாண்டரை அதற்காக பொறுப்பாக்க முடியாது என்ற முடிவையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது.

கிளர்ச்சியின்போது திரு இவான்ஸ், திரு ஹிட்ச்காக் இருவரும் செய்த பணிகளை இந்திய அரசு பாராட்டுகின்றது. அவர்கள் செய்த பணியின் கடுமையை அரசு உணர்ந்துள்ளது. தகுந்த விதிகளின் கீழேயே  சரக்குப்பெட்டியில் கைதிகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்த இரண்டு அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை என்று அரசாங்கம் பெரிதாக வருத்தப்படவும் முடியாது. ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர், ஒரு சரக்குப்பெட்டியில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கைக்கு தேவையான காற்றோட்டம் அப்பெட்டியில் உள்ளது என்று ஒரு பொறுப்பான அரசு அதிகாரி முடிவு செய்ய வேண்டும் என விதிகளில் சொல்லப்பட்டு இருந்திருந்தால், அநேகமாக உயிரிழப்பு எதுவும் நடந்திருக்காது.

ஹிட்ச்காக், இவான்ஸ் இருவரில் ஆகப்பெரிய பொறுப்பு யாருக்கு இருக்கின்றது என்றால் இவான்சுக்குதான். திரூரில் தொடர்ந்து பொறுப்பில் இருந்தவர் என்ற முறையில், கைதிகளை கொண்டுசெல்வற்கான  ஏற்பாடுகளை கண்காணிப்பதில் இவான்ஸ் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த குறிப்பிட்ட ரயில்பெட்டியை தேர்வு செய்ததற்காக  சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்ஐ குறை சொல்ல முடியாது என்ற கமிட்டியின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில், ரயில்பெட்டியின் பாதுகாப்பு குறித்த பரிசோதனையுடன் அவர் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்க கூடாது, கைதிகளை கொண்டுசெல்வதற்கு தகுதியான ரயில்பெட்டிதான் என்றும் கூட அவர் தன்னளவில் திருப்தி அடைந்து இருக்க வேண்டும்.

பெட்டியில் இருந்து கைதிகள் எழுப்பிய கூச்சல், அவர்கள் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தார்கள் என்பதையே காட்டியது என்று நிரூபிக்க தனிப்பட்ட சாட்சியம் உள்ளது. கைதிகளின் பெருங்கூச்சலுக்கான சரியான காரணம் இன்னதுதான் என்று மிக உறுதியாக சொல்லமுடியவில்லை என்று கமிட்டி சொல்கின்றது. ஆனால் காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் கைதிகள் எழுப்பிய பெரும் ஓலம், சார்ஜென்டின், அவரது பாதுகாவலரின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. இந்த முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் என்பவர், வேண்டுமென்றேதான் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டார் என்று சொல்வதற்கில்லை என்ற கமிட்டியின் கருத்தில் இருந்து அரசு மாறுபடவில்லை. ஆனால் பெட்டியில் இருந்து கிளம்பிய பெருங்கூச்சலை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதற்கான காரணத்தை தெரிய முற்படாமல் அலட்சியம் செய்தது என்பது அசாதாரணமான ஒன்று,  தெரிந்தேதான் சார்ஜெண்ட் இத்தகைய தவறை செய்தார் என்ற கமிட்டியின் சொற்களை அரசு கவனத்தில் கொள்கின்றது. நடந்தவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு உள்ளூர் மொழியை நன்கு அறிந்துஇருந்த தலைமை காவலரும் பிற காவலர்களும் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்சிடம் தெரிவிக்க தவறியதால் மேற்படி கண்டனத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் மீதான விசாரணைக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என இந்திய அரசு மெட்றாஸ் அரசுக்கு அறிவுறுத்துகிறது. கமிட்டியின் மேற்கண்ட கண்டறிதல்களின் அடிப்படையில், தலைமைக்காவலர், பிற காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும். (மெட்ராஸ் மெய்ல்).

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், பிற காவலர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது, ஆனால் பின்னர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட னர்.

இறந்த 70 கைதிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 ரூபாய்  இழப்பீடு வழங்க மெட்ராஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. (ஆணை எண் 290, 1.4.1922)

புதன், அக்டோபர் 06, 2021

சரக்குரயில்பெட்டி எண் 1711 சந்தித்த கோர மரணம் (1921 நவம்பர்)

Maddy என்னும் நண்பர் historic alleys என்ற தன் வலைப்பூவில் (blog), 1921 நவம்பர் மாதம் மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்த ரயில்பெட்டி கோர மரணம் குறித்து நுட்பமான தகவல்கள் அடிப்படையில் விரிவாக எழுதியுள்ளார் (The tragedy in wagon 1711 - a complete picture). அதன் தமிழாக்கத்தை இங்கே தருகின்றேன்.
... ....
இதுவரையிலும் செய்தியேடுகளிலும் வெளிவந்த பலவிதமான தகவல்களும் உண்மைக்கு வெகுதொலைவில் இருப்பவை, முழுமையாநத்தம் அல்ல. இப்போது என்னிடம் ரயில்பெட்டி கோர மரண நிகழ்வு குறித்து போதிய தகவல்கள் உள்ளன என்பதால் அவற்றை முழுமையாக பதிவு செய்கின்றேன்.
மலப்புரத்தில் கைது செய்யப்பட்ட பெருமளவு கைதிகளுக்கு ராணுவ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. மலபாரின் சிறைகள் கொள்ளளவுக்கு மேலும் நிரம்பி வழிந்தன என்பதாலும் திரூரிலேயே அவர்களை சிறைவைக்க முடியாது என்பதாலும் கோயம்புத்தூர், வேலூர், பெல்லாரி சிறைகளுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கர்னல் Humphreys, காவல்துறை கண்காணிப்பாளர் Hitchcock, F B Evans ஆகியோருக்கு இப்பொறுப்பு தரப்பட்டது. ரயில் எண் 77 கோழிக்கோடு -மெட்ராஸ் பாசஞ்சர், 1921 நவம்பர் 19 அன்று ஒரு கோர நிகழ்வை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. நவம்பர்19 மாலை MS & SM சரக்குப்பெட்டி எண் 1711 அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. 100 கைதிகள் (97 முஸ்லிம்கள், 3 இந்துக்கள்) அந்த சரக்குப்பெட்டியில் ஏற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் கருவம்பலம், புலமாந்தோல் பகுதிகளை சேர்ந்தவர்கள். இக்கூடுதல் பெட்டி திரூரில் இருந்து (கர்நாடகாவின்) பெல்லாரிக்கு கைதிகளை கொண்டு செல்ல வரவழைக்கப்பட்டது. தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் அவ்வாறே பெட்டி எண் 1711ஐ ரயில் எண் 77உடன் இணைத்தார்கள். கோழிகோட்டில் இருந்து திரூருக்கு மாலை 6.45க்கு ரயில் வந்து சேர்ந்தது. சரக்குப்பெட்டியில் இருந்த பொருட்கள் கீழே இறக்கப்பட்டு சுத்தமாக்கப் பட்டன, நோய்ப்பரவல் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
அந்த பெட்டிக்கு போலீஸ்காரர்கள்தான் காவலாக சென்றிருக்க வேண்டும். கைதிகளை கோழிகோட்டில் இருந்து கண்ணூருக்கு கொண்டுசெல்லும் போது எப்போதும் அதுதான் நடைமுறை. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. (காங்கிரஸ் கட்சியின் கே கேளப்பனின் அனுபவம் அது, அப்படிப்பட்ட ஒரு ரயில் பயண அனுபவம் அவருக்கு இருந்தது, ஆனால் அவர் பயணித்த பெட்டியின் கதவு திறந்து இருந்தது, ஒரு போலீஸ்காரரும் காவல் இருந்தாராம்). மொயாரத் Moyarath சொல்கின்றார்: இதுபோ பயணங்களில் சாவு என்பது பொதுவாக நடப்பதுதான். இப்படிப்பட்ட ரயில்களும் பெட்டிகளும் மலபாரின் ரயில் நிலையங்களை கடந்து செல்லும்போது பொதுமக்கள் அவற்றை கடும்பீதியுடன்தான் பார்ப்பார்களாம். மூடப்படாத ரயில்பெட்டிகள்தான் கடந்தகாலத்தில் பயன்படுத்தபட்டன என்று மாதவன் நாயர் சொல்கின்றார். ஆனால் பின்னர் நடந்த விசாரணையின் போது ஹிட்ச்காக் அளித்த வாக்குமூலத்தில், "இந்த முறை நவம்பர் 20 அன்று அவ்வாறு செய்து இருந்தால் அது தவறில் முடிந்திருக்கும். திறந்த பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்த கிளர்ச்சியாளர்களை பொதுமக்கள் பார்த்து இருந்தால், அப்போது நிலவிய சூழ்நிலையின் பின்னணியில் ஆவேசம் கொண்டு திரண்டு கைதிகளை காப்பாற்ற முனைந்திருப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு இவ்வாறு கைதிகளை கொண்டுசெல்ல பயன்படுத்த ப்பட்ட பெட்டிகள் உண்மையில் கால்நடைகளை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டவைதான். ஹிட்ச்காக்கின் கருத்து என்னவெனில் நவம்பர் 21 அன்று பயன்படுத்தப்பட்ட ரயில்பெட்டி பாதுகாப்பானது என்பதே. Alfred Emanuel தான் எழுதிய New Outlook இல், 'அந்த ரயில்பெட்டிக்கு புத்தம் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்ததால் மிகச்சிறிய துளைகள் கூட அடைக்கப்பட்டு காற்று உள்ளே வருவது தடுக்கப்பட்டுவிட்டது' என்று சொல்கின்றார்! (பக்கம் 698). (இதற்கு முன் இப்படி கராச்சி ராணுவ ரயில்வண்டி ஒன்றில் இதேபோல ஆங்கிலேய படைவீரர்களை அனுப்பியபோது பலர் இறந்துபோன கசப்பான வரலாறு பிரிட்டிஷாருக்கு உண்டு!)
 
ரிசர்வ் போலீஸ் சார்ஜெண்ட் AH Andrews, தலைமைக்காவலர் O கோபாலன் நாயர், கான்ஸ்டபிள்கள் P நாராயண நாயர், K ராமன் நம்பியார், I Ryru, N T குஞ்ஞாம்பு, P கோரோடுண்ணி நாயர் ஆகியோர் இந்த ரயிலில் பாதுகாப்புக்காக சென்றவர்கள். சரக்குப்பெட்டி 1711இன் பின்னால் இருந்த பெட்டியில் தலைமைக்காவலரும் பிற காவலர்களும் பயணிக்க, ரயில் என்ஜினின் பின்னால் இருந்த இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டியில் சார்ஜெண்ட் பயணித்தார். அனைத்துக் கைதிகளையும் பெட்டியினுள் அடைத்தபின் கதவை வெளிப்புறம் தாழிட்டு தாழ்ப்பாளை ஒரு கம்பியாலும் கட்டினார்கள்.
மாலை 7 மணிக்கு ரயில் புறப்பட்டது. சோரனூர் ரயில்நிலையத்தில் அரை மணி நேரமும் ஒலவக்கோட்டில் கால் மணி நேரமும் ரயில் நின்றது. பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் அடுத்த பிளாட்பாரத்துக்கு வந்தபோது ரயில்பெட்டிக்குள் இருந்த கைதிகள் கத்தி கதறி கூச்சல் இட்டதை அவர்கள் கேட்டிருப்பார்கள். கதவை திறந்து காற்றோட்டத்துக்கு வழி செய்து குடிநீரும் கொடுத்திருந்தால் உயிருக்கு போராடிய கைதிகளை காப்பாற்றியிருக்க முடியும். இவ்வாறு ரயில் சென்ற வழியில் இருந்த அனைத்து நிலையங்களிலும் பெட்டிக்குள் இருந்து வந்த பெரும் கதறலை பலரும் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத காவலர்கள், போதனூரில் மட்டுமே கதவைத் திறப்பது என்று உறுதியாக இருந்துள்ளார்கள். திரூரில் இருந்து ஏறத்தாழ 111 மைல்கள் தொலைவில் உள்ளது போதனூர்.
மரணத்தின் பின் நடந்த விசாரணையில், செருவண்ணத்தூரில் ரயில் நின்றபின் கைதிகள் தண்ணீர் கேட்டு அலறியதை தன் காதால் கேட்டதாக சார்ஜெண்ட் சொல்லியிருக்கிறார். ஆனால் நேரம் கடந்து போனதால் கைதிகளின் கதறலை அவர் பொருட்படுத்தவில்லை. அதேபோல் ஒலவகோடு உள்ளிட்ட பல ரயில்நிலையங்களிலும் கைதிகளின் கதறலை காதால் கேட்டதாக பலர் சாட்சியம் அளித்தனர். காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடித்தவித்த அக்கைதிகள் பித்துப்பிடித்து புத்தி பேதலித்த நிலையில் இருந்ததாக சொல்கின்றார்கள்.
"கைதிகளுக்கு குடிநீர் வழங்குவதை இரக்கத்தின்பால் செய்யலாமே தவிர சட்டத்தில் அப்படி ஒன்றும் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சோரனூரிலோ ஒலவகோட்டிலோ கைதிகள் மீது இரக்கம் கொண்டு சார்ஜெண்ட் கதவை திறந்திருப்பார் எனில் கைதிகள் கோபம்கொண்டு ரயில்நிலையத்தை சூறையாடி இருப்பார்கள், அப்பாவி மக்களை படுகொலை செய்திருப்பார்கள். அவ்வாறு நடந்திருக்கும் எனில், காவலர்கள் தம் கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக தண்டனை பெற்றிருப்பார்கள்" என சென்னை குற்றப்புலனாய்வு துணை கண்காணிப்பாளர் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்தார்.
போதனூர் ரயில்நிலையத்துக்கு நள்ளிரவு, அதாவது அதிகாலை 1230 மணிக்கு ரயில்வந்து நின்றபோது, அதே ரயிலில் வந்த ஒரு பயணி குறிப்பிட்ட ரயில்பெட்டியில் இருந்து கதறல்கள் கேட்பதாக பெருங்கூச்சலிட்ட பிறகே சரக்குப்பெட்டியின் கதவு திறக்கப்பட்டது. அங்கே அதிகாரிகள் கண்டதென்ன? அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் மயக்கமுற்றுக் கீழே கிடந்தார்கள், பலர் ஏற்கனவே உயிரை இழந்திருந்தார்கள்.மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இழந்துகிடந்தார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர், கொண்டுசென்றபின் 2, பிற்பகலில் 4, 26ஆம்தேதி 2, ஆக மொத்தம் 70 பேர் இறந்துபோனார்கள்.
இறந்தவர்களின் உடலோடு அந்த சரக்குரயில்பெட்டி மீண்டும் திரூருக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் காலை மீதியிருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு கொண்டு சென்றார்கள். ரயில்வே பிளாட்பாரத்தில் 6 பேர் இறந்தனர். கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு 25 பேரை அனுப்பினார்கள். பொது மருத்துவமனையை அடையும் முன் 2 பேர் இறந்தனர். பிற்பகலில் 4 பேர் இறந்தனர். 26.11.1921 அன்று இருவர் இறந்தனர்.
 
நான் (Maddy) கூறுவது சரி எனில், தி ஹிந்து நாளிதழின் செய்தியாளர்தான் இச்செய்தியை கோயம்புத்தூரில் இருந்து முதலில் வெளியே தெரிவித்தார். நவம்பர் 22ஆம் தேதி காலை இக்கோரமரணம் பற்றி உலகுக்கு வெளியே சொன்னவர் அவர்தான்.
Moyarath கூறுவது என்ன? கோழிக்கோட்டை சேர்ந்த மஞ்சேரி ராம ஐயர் என்பவரின் வற்புறுத்தலால்தான் போதனூரில் ரயில்பெட்டி திறக்கப்பட்டது. உயிருடன் இருந்தவர்களுக்கு கோயம்புத்தூரில் சிகிச்சை அளித்த மருத்துவர் டாக்டர் T ராமன். (ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் வலைப்பூவில் இது குறித்து Maddy எழுதிய கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பிரேம்நாத் முர்கோத் என்ற நண்பர், அந்த டாக்டர் T ராமன் தன் தாத்தா என்றும் 1895இல் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார் என்றும் பதிவு செய்துள்ளார். தன் தாத்தாவின் புகைப்படம், அவர் பெற்ற பட்டத்தின் நகல் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளார். அவற்றை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.
ரயில்பெட்டியில் இருந்து உயிருடன் மீண்ட ஒருவரின் வாக்குமூலம் இது: பெட்டிக்குள் இருந்த அனைவரும் வியர்வையில் நனைந்தோம். காற்று இல்லாததால் சுவாசிக்க முடியவில்லை. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் எங்கள் துணியில் ஊறிய வியர்வையை பிழிந்து குடித்தோம். பெட்டியின் கதவில் இருந்த சிறுதுவாரங்களும் கூட அடைக்கப்பட்டு இருந்ததால் காற்று வரவில்லை. கதவை உடைக்க முயற்சித்தோம், முடியவில்லை.
பிரம்மதத்தன் நம்பூதிரி தன் நூலில் சொல்கின்றார்: இரண்டு கைதிகளுக்கு ஒரு விலங்கு என பூட்டியிருந்தனர். சாவின் பிடியில் சிக்கி மனம் பேதலித்த அவர்கள், ஒருவரை ஒருவர் நகத்தால் கீறியும் கடித்தும் தாக்கியும் இருந்தார்கள் என்பதை இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் சொன்னன.
MPS மேனன் எழுதிய MP நாராயண மேனன் என்ற நூலும் கான்ராட் உட் எழுதிய நூலும் பின்வரும் தகவலை தருகின்றன: 70 பேர்களில் 32 பேர் கூலிகள், 19 பேர் விவசாய தொழிலாளர்கள், 4 பேர் குர் ஆன் போதிப்பவர்கள், 2 பேர் தேனீர்கடைக்காரர்கள், 2 பேர் மசூதி ஊழியர்கள், 2 பேர் மத போதகர்கள், 2 பேர் சிறு வணிகர்கள், 2 பேர் வணிகர்கள், 1 மர வணிகர், 1 பொற்கொல்லர், 1 தச்சுத்தொழிலாளி, 1 முடித்திருத்திருத்துபவர். இவர்களில் 67 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள். 10 பேர் ஓரளவு வசதியான நிலவுடைமையாளர்கள்.
B C Scott அப்போது தென்னிந்திய ரயில்வே ஏஜென்ட் ஆக இருந்தவர். இந்த சரக்குப்பெட்டிகளை ரயில்வே அதிகாரிகளின் சம்மதத்துடன்தான் திரூருக்கு அனுப்பினார்களா என்று விசாரணை செய்தார். கைதிகளை கொண்டுசெல்ல சரக்குப்பெட்டிகளை பயன்படுத்தியதை மாவட்ட போக்குவரத்து கண்காணிப்பாளர் அறிவார் என்று தெரிந்தது. A R Knapp என்பவர் தலைமையில் இந்த கோர மரணத்தை விசாரிக்க மெட்ராஸ் அரசு விசாரணைக்குழு அமைத்தது. மேலும் இந்திய தண்டனை சட்டங்கள் பிரிவு 304A, இந்திய ரயில்வே சட்டம் பிரிவு, 1890 ஆகியவற்றின் கீழ் சார்ஜெண்ட் Andrews மீதும் பிற காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு மெட்ராஸ் அரசு உத்தரவிட்டது. அரசு நிர்வாகம், தொடக்கத்தில் இந்த விவகாரத்தை அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இக்கோர மரணங்கள் யாவும் 'சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்தவை, யாரையும் இதற்கு பொறுப்பாக்க முடியாது' என்றே சொன்னது. 'மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள்' என கோயம்புத்தூர் மருத்துவமனை அதிகாரி உறுதி செய்தார். ஆனால் 'வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள்' என்று திசைதிருப்ப அரசு முயன்றது. ஆனால் கோயம்புத்தூர் ராணுவசட்டத்தின் கீழ் இல்லாமல் இருந்ததால் இந்த கோரமரணம் பற்றிய செய்தி மக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பரவிவிட்டது.
விசாரணைக்குழுவின் முதல் அமர்வு கோயம்புத்தூரில் 28.11.1921 அன்று நடந்தது. உயிருடன் மீண்டவர்களின் வாக்குமூலங்களை இக்குழு கவனமாக பதிவு செய்தது. 34 சாட்சிகளை விசாரித்தது. பெட்டியில் அடைக்கப்பட்டவர்கள் பெருங்கூச்சலிட்டனர் என்பதை குழு ஒத்துக்கொண்டது. பின்னர் கோயம்புத்தூர் மாவட்ட மாஜிஸ்திரேட் H L Braidwood தலைமையில் விசாரணை நடந்தது. மெட்றாசின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்க்காகவும் குற்றம் சாட்டப்பட்ட பிறருக்காகவும் வாதாடினார்கள். இதற்கு முன் ஒன்பது முறை இதே போன்ற சரக்குப்பெட்டிகளில் கைதிகளை கொண்டுசென்ற அனுபவம் உள்ளவர் அவர், அப்போது இதுபோன்ற துயரங்கள் நிகழ்ந்தது இல்லை என்று வாதிட்டனர்.
ஐரோப்பிய ஆசியர் ஒருவரின் (கொதிகலன்களை உருவாக்குபவர்) வாக்குமூலத்தின்படி, சோரனூர் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் அவர் நின்றுகொண்டு இருந்தபோது மூடப்பட்ட ரயில்பெட்டியினுள் இருந்து 'வெள்ளம் வெள்ளம்' (தண்ணீர் தண்ணீர்) என்று கூக்குரல்கள் வந்தன. மற்றொருவர், 'நாங்கள் செத்துக்கொண்டு இருக்கின்றோம்' என்று ரயில்பெட்டியினுள் இருந்து குரல்களை கேட்டதாக சொன்னார்.
Robert Hardgrave: மூச்சுத்திணறல்தான் இந்த சாவுகளுக்கு முக்கிய காரணம், கூடவே வெப்பமும் சேர்ந்து கொண்டது என்று விசாரணை குழு முடிவு செய்தது. ரயில்பெட்டியை சோதனை செய்தபோது, கதவின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த காற்றுத்துளைகள் உட்புறமாக மூடப்பட்டிருந்ததும் அதன் மீது பூசப்பட்டு இருந்ததால் படிந்த தூசியும் சேர்ந்து ஒரு துளி காற்றும் உள்ளே வராமல் அடைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பெட்டி ஒரு காற்றுப்புகாத அறை ஆனது. தங்கள் பணியை முறையாக செய்யாத அரசு ஊழியர்களால் இந்த கோரமரணம் நேர்ந்தது என்றாலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள். Lord Willington 1922இல் சமர்ப்பித்த விசாரணைக்குழு அறிக்கையில் குற்றம் செய்தவர்களின் பெயரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் பரிந்துரையும் இருந்தன.
(இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை மீது பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் என்ன முடிவுக்கு வந்தது, என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை, அன்றைய கோழிக்கோடு டெபுடி கலெக்டர் ஆக இருந்த திவான் பகதூர் C Gopalan Nair தனது The Moplah Rebellion, 1921 என்ற நூலில் (1923 பதிப்பு) சொல்லியிருக்கிறார். அதனை அடுத்த பதிவில் தனியே மொழியாக்கம் செய்து பதிவேன்).
... ..... ..... ....
புகைப்படம்: திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கோர மரணத்தை நினைவுகூரும் ஓவியத்தை ரயில்வே துறை வரைய முடிவு செய்தது. ரயில்வேயின் அழைப்பின் பேரில் ஓவியர் பிரேம்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓவியத்தை வரைந்தார். வலதுசாரி சங்கிகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவ்வோவியத்தை ரயில்வே துறை அழிந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வின்போது, திரூர் பேருந்து நிலையத்தில் இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஓவியர் பிரேம்குமாரும் ஹர்ஷாவும் மக்கள் மத்தியில் வரைந்த ஓவியங்கள் இவை.

செவ்வாய், செப்டம்பர் 21, 2021

1921 மாப்பிளா கிளர்ச்சியும் அந்தமானும்


1921  பற்றி Conrod Wood எழுதிய Moplah rebellion and it's Genesis என் நூலை மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்று நான் தமிழாக்கம் செய்த நூல் 2007இல் அலைகள் பதிப்பக வெளியீடாக வந்தது.

அக்கிளர்ச்சி படுகொலைகள் மூலம் கொடூரமாக அடக்கப்பட்ட பின் சில ஆயிரம் மாப்பிளா மக்கள் அந்தமானுக்கு குடியேற்றம் செய்யப்பட்டார்கள். ஆறு வருடங்கள் முன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். கொடிய காலத்தின் சுவடான செல்லுலார் சிறையை பார்த்தேன். 60000 வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கடல் வழியே பயணித்த நம் மூதாதையர் அந்தமானில் குடியேறியதாக மானுடவியல் வரலாறு சொல்கின்றது. ஆறு ஆதிவாசி இன மக்கள் இப்போதும் அந்தமானில் வசிக்கின்றார்கள். இன்று நாம் சுற்றுலா தலமாக கருதும் அந்தமான், வெறும் கரடு முரடான பிரதேசமாக இருந்துள்ளது எனில் அத்தீவை செப்பனிட்டு செம்மையாக்கி மனிதன் வாழத்தகுந்த பூமியாக மாற்றியது யார் என்ற கேள்வி உள்ளது. Maddy என்னும் மலபார் நண்பர் ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் historic alleys என்னும் தன் வலைப்பூவில் மலபார், அம்மக்கள், பண்பாடு, மலபாரின் சில நூற்றாண்டு வரலாறு, மாப்பிளா கிளர்ச்சி, மாப்பிளா மக்கள் குறித்து மிகப்பல அரிய தகவல்களை ஆங்கிலத்தில் பதிவிட்டு வருகின்றார். அவரது ஒரு பதிவின் தமிழாக்கம் இது.

..... ...... ....

TSS மஹாராஜா என்ற அக்கப்பல் 1879இல் கட்டப்பட்டது. இம்முறை அக்கப்பல் இதுவரை சென்றிடாத ஒரு புது வழியில் பயணம் சென்றது. தெற்கில் மெட்றாஸ் நோக்கிய பயணம். கப்பலில் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இருந்தார்கள், அனைவரும் பிரிட்டிஷ் அரசால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள். கூடவே பெருமளவு மளிகை சாமான்களும் கல்கத்தாவி ஏற்றப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின், தபால் தந்தி துறையின் கடித மூட்டைகளும் இருந்தன. மெட்றாஸ் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, அழுக்கடைந்த வேட்டி கட்டிய ஒரு கூட்டம் ஏறியது. கூடவே அவர்கள் சுமந்துகொண்டு வரும் சுமைகள். அவர்களில் பெரும்பாலோர் பெல்லாரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாப்பிளா சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள். வெப்பம் மிகுந்த கப்பலின் கீழ்த்தளத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பலர் கப்பலில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார்கள். பரந்து விரிந்த நீலத்திரைக்கடலான வங்காள விரிகுடாவில் கப்பல் பயணத்தை தொடர்ந்தது. மாப்பிளாக்களில் சிலர், தங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay கொண்டு செல்கின்றனர் என்றும் வேறு சிலரோ சிங்கப்பூர் அல்லது மொரீசியஸ்க்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பேசிக்கொண்டார்கள். வேறு சிலரோ, தாங்கள் இனி என்றுமே திரும்பி வராத கருப்பு நீர்த்தீவுக்கு (காலாபாணி Kalapani, அதாவது ஹிந்தி மொழியில் கருப்பு நீர் என்றும் ஆயுளுக்கும் தண்டனை அனுபவிக்க போகின்றவர்கள் என்றும் பொருள்) சென்றுகொண்டிருப்பதாக உறுதியாக நம்பினார்கள். சிலர் கூண்டுகளில் அடைக்கப்பட்டார்கள், மற்றவர்கள் கப்பலின் தளத்திலோ காலி பங்கர்களிலோ உட்காரவோ படுத்துக்கொள்ளவோ அனுமதிக்கப்பட்டார்கள். மஹாராஜா தன் பயணத்தை தொடர்ந்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் ப்ளேயர் என்னும்   தண்டனைக்குடியேற்றம் நோக்கி, ஆயுளுக்கும் இனிமேல் மீண்டு வர முடியாத தண்டனை த்தீவை நோக்கி ஒருவழிப்பயணம் மேற்கொண்டார்கள்.

இங்கே இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மாப்பிளாக்கள், மலபாரின் எரநாட்டை சேர்ந்த மக்கள், தொடர்ந்து அத்தீவுகளில் வசிக்குமாறு காலம் கட்டாயப்படுத்தியபோது, தங்கள் சொந்த கேரள மண்ணின் ஊர்களின் பெயர்களையே இந்த ஊர்களுக்கும் சூட்டினார்கள் - காலிக்கட், வாண்டூர், மன்னார்கட், திரூர், மஞ்சேரி என.

இப்போதோ காலிக்கட் என்ற பெயர் வரலாற்று ஏடுகளிலும் மூத்த குடிமக்களின் நினைவிலும் மட்டுமே உள்ளது, ஏனெனில் கேரளாவின் காளிக்கட், கோழிக்கோடு என்று பெயரை மாற்றிக்கொண்டுவிட்டது. ஆக இப்போது உலக வரைபடத்தில் இருக்கின்ற காளிக்கட் என்ற ஊர் கேரளாவில் இல்லை, மாறாக தெற்கு அந்தமான் தீவுகளில் தலைநகர் போர்ட் ப்ளேயருக்கு வடக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது!

தமது அரசுக்கு தொந்தரவாக இருக்கின்றவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தனிமைப்படுத்த மட்டுமே 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கண்டுபிடித்த ஒரு தீவுதான் அந்தமான் தீவுகள். இரண்டாவது உலகப்போரின் போக்கில் 1942-45 காலகட்டத்தில் ஜப்பானியர் வசம் இத்தீவு இருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இத்தீவுக்கு வந்துள்ளார். இந்திய தேசிய ராணுவத்தின் INA கொடியை அங்கே ஏற்றினார். கோழிகோட்டின் எரநாடு மாப்பிளாக்களை ஆயுள்தண்டனை கைதிகளாக இங்கே குடியேற்றியது பிரிட்டிஷ் ஆட்சி. ஆக இத்தீவை தண்டனைக்குடியேற்றமாக மட்டுமே பிரிட்டிஷார் பயன்படுத்தினார்கள்.

தொடக்கத்தில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வெள்ளையர்களை ஆஸ்திரேலியாவில் உள்ள பாட்டனி வளைகுடாவுக்கு Botany Bay நாடு கடத்தினார்கள். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இந்தியர்களை அந்தமான் தீவுக்கும் கரக்பூர் அருகிலுள்ள ஹிஜிலி கேம்புக்கும் Hijli Camp அனுப்பினார்கள். அவை கொடும் தண்டனைக்குரிய சிறைகள். பின்னாட்களில் சிங்கப்பூருக்கும் பாட்டனி வளைகுடாவுக்கும் அனுப்பி அந்த பூமிகளை கைதிகளை கொண்டே செப்பனிட்டார்கள். கைதிகள் மிகக்கடுமையான உழைப்பை செலுத்தினர். இந்தியர்களின் காய் கால்களில் எப்போதும் இடப்பட்டு இருந்த சங்கிலிகள் எழுப்பிய க்ளிங் என்னும் ஓசை காரணமாக, இந்தியர்களை அங்கே இருந்தோர் க்ளிங் என்று அழைத்ததாகவும் தெரிகின்றது.

சாதிய மனநிலையில் ஊறிய இந்து மத்திய தர வர்க்க அரசியல் கைதிகள் உடலுழைப்பு அனுபவம் இல்லாதவர்கள். மேலும் இந்துமத நம்பிக்கை, கடல்கடந்து பயணிப்பது பாவம் என்று சொல்கின்றது. இவை இரண்டும் வெள்ளையர்கள் சிந்தனையில் 'இவர்களுக்கு இப்படி ஒரு தீவாந்தர தண்டனையை கொடுத்தால் என்ன' என்று சிந்திக்க தூண்டியது.

அந்தமானை ஒரு தண்டனைக்குடியேற்றமாக penal settlement மாற்றும் திட்டம், கிழக்கிந்திய பகுதியில் ஒரு கடல் வழியை கண்டறிந்தபின் 1789இல் தொடங்கியது. ஆனால் குடியேற்றத்துக்குப்பின் தீவில் சந்தித்த கொடும் நோய்கள், ஒத்துக்கொள்ளாத புதிய தட்பவெப்ப சூழல் ஆகியவற்றால் நிகழ்ந்த மரணங்களுக்கு பிறகு 1796இல் கைவிடப்பட்ட து. அடுத்த 60 வருடங்களும் சமகால மனிதர் தீண்டாத தனி தீவாகத்தான் அந்தமான் இருந்தது. 60000 வருடங்களுக்கு முன் அங்கே குடிபுகுந்த நம் மூதாதையர் ஆன ஆதிவாசிகள் ஏற்கனவே அங்கே இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்கின்றேன். 1857 சிப்பாய் கிளர்ச்சிக்கு பின் இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் போக்குகள் காரணமாக அரசியல் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, சிறைகளில் இடம் இல்லாமல் போனது. 1858க்கு பிறகு அந்தமானில் மீண்டும் குடியேற்றம் தொடங்கியது. மூன்றாம் வகுப்பு, அதற்கு கீழான நிலையில் இருந்த கைதிகள், அரசின் கஜானாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கைதிகளை கொண்டு தீவை செப்பனிட தொடங்கினார்கள். தீவின் பழங்குடிகளை அவர்களது பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற்றினார்கள். ஓரளவு கட்டுமானங்கள் உருவானபின் மூன்றாம் வகுப்பு கைதிகள் இரண்டாவது நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள், காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே உள்ள நிலப்பரப்பில் தங்கி வாழ அனுமதிக்கப்பட்டார்கள். இது சற்றே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கவே, இந்தியாவில் தங்கள் சொந்த ஊர் மக்களுக்கு இச்செய்தியை தெரிவிக்கவே, அந்தமானுக்கு குடிபுக கைதிகள் தாமாகவே முன்வந்தார்கள்! இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்காத நிர்வாகம், கெடுபிடிகளை அதிகரித்தது. இதன் பின்னர்தான் நட்சத்திர மீன் வடிவிலான செல்லுலார் சிறை கட்டும் திட்டம் உருவானது. இங்கே அரசின் ஆதரவில் மட்டுமே வாழ முடிந்த கைதிகளையும் கொடும் கிரிமினல் குற்றவாளிகளையும் அடைக்க திட்டமிட்டார்கள்.

1910இல் கட்டி முடிக்கப்பட்ட செல்லுலார் சிறையில் 698 தனியறைகள் இருந்தன. 15x9 அடி பரப்பளவு, 10 அடி உயரத்தில் ஒரு ஜன்னல். இங்கே ஒருமுறை வந்த எவரும் மீண்டும் வெளியே வருவதும் தீவில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதும் கனவிலும் நடக்காதது. 6 மாத தனிமைச்சிறை, பின் நான்கரை வருட கூட்டுழைப்பு, பின் 5 வருடக்கூலி உழைப்பு, அடுத்த 10-15 வருடங்களுக்கு தன்னைத்தானே சமாளிக்கும் திறனுடன் அரசின் உதவியோடு தீவில் வீடு கட்டிக்கொண்டு வசிப்பது, இதன் பின் சொந்த ஊருக்கு திரும்பலாம்.

பெண் கைதிகளுக்கு மூன்று வருட தண்டனை, அதன் பின் தீவிலுள்ள யாரையாவது திருமணம் செய்துகொள்ளலாம், அல்லது 15 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பலாம், அல்லது கணவனின் தண்டனைக்காலம் முடியும்வரை காத்திருக்கலாம். டேவிட் பாரி David Barry என்ற சிறை கண்காணிப்பாளர் மிக கொடூரமான மனிதனாக இருந்துள்ளான். குறிப்பாக அரசியல் கைதிகளை தொடக்க காலத்தில் மிகக்கொடுமையாக நடத்தியுள்ளான், தாங்கள் பிறந்ததே பாவம் என்று கைதிகள் குமைந்து வருந்தும் அளவுக்கு கொடுமைகள் இழைத்துள்ளான்.

1924 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிம்ப்சனுக்கு ரிச்சர்ட் அளித்த பதில்: கடந்த ஜூலையில் போர்ட்பிளேயரில் மட்டும் 1235 மாப்பிளாக்கள் இருந்தார்கள். 72 பேர் செல்லுலார் சிறையில், 12 பேர் விடலைகள், 40 பேர் விவசாயிகள், தங்கள் வாழ்க்கையை தாங்களே சமாளித்து கொள்பவர்கள், மீதியுள்ளோர் கைதிகள் அடைக்கப்படும் இடத்தில். மாப்பிளாக்களை பிற கைதிகளிடம் இருந்து பிரிக்கும் எந்த திட்டமும் இல்லை. ஆனால் தொடக்க காலத்தில் செல்லுலார் சிறைவாச காலம் அடிக்கடி குறைக்கப்பட்டது. அந்தமானில் வாழ்வதற்கு, தனியாகவோ குடும்பத்துடனோ, விருப்பப்பட்டால் அதற்கு அரசு அனுமதி வழங்கியது, தீவுக்கு வருவோரின் பயணச்செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 

மலபாரில் இருந்து அந்தமானுக்கு வந்தவர்கள் 1133 கைதிகள். இவர்களில் 379 பேருக்கு 'தம் வாழ்க்கையை தாமே சமாளித்துக்கொள்ளும் வல்லமை உடையவர்கள்' என்ற தகுதியை நிர்வாகம் 1926இல் வழங்கியது. அந்தமானை தண்டனை குடியேற்றம் என்ற நிலையில் இருந்து சுயவிருப்ப குடியேற்றம் voluntary settlement என்று பிரிட்டிஷ் அரசு உயர்த்தியது. மனைவியருக்கும் உறவினருக்கும் பயணக்கட்டணத்தை அரசே வழங்கியது. பண்டிகைகள் கொண்டாட, வழிபாட்டு தலங்கள் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அரசின் முதலாவது அறிக்கையின்படி, 1302 கைதிகளில் 90 பேர் இறந்தனர், 79 பேர் இந்தியாவில் சொந்த ஊருக்கு திரும்பினர், மீதி 1133 பேரில் 754 பேர் உடலுழைப்பு கைதிகள், 379 பேர் தங்களை தாங்களே சமாளித்து கொள்பவர்கள். மற்றொரு அறிக்கையின்படி 1932இல் மாப்பிளாக்கள் என்போர் 1885 கேரள முஸ்லிம்கள். இவர்கள் காலனிய அரசுக்கு எதிராகவும் இந்து மத நிலச்சுவான்தார்களுக்கு எதிராகவும் மாப்பிளா கிளர்ச்சியை நடத்தியவர்கள் (Dhingra, 2005:161). இவர்களை மறுசீரமைக்கவே 1921-26 காலக்கட்டத்தில் அந்தமானுக்கு கொண்டுவந்தார்கள், விவசாய நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள் (Mukhopadhyay, C, 2002:29). தம் சொந்த மதத்தை பின்பற்றவும் சொந்த ஊரின் பண்பாட்டை பின்பற்றவும் அனுமதிக்கபட்டார்கள். 1920களில் தம் சொந்த ஊரின் மலையாள மொழி உரையாடலின் சாயலையே இங்கும் பேசினார்கள் என சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றுள்ள அந்தமானில் நாம் பார்க்கும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையோர் மாப்பிளா சமூக மக்களே. 1921இல் தொடங்கிய இந்த இடப்பெயர்ச்சி 1926இல் முடிந்தது. 1931 மக்கள்தொகையின்படி, 1885 மாப்பிளாக்கள் இருந்துள்ளார்கள், 1171 ஆண்கள், 714 பெண்கள். பிற தகவல்கள், 2500 பேர் அங்கே குடியேறினர் என்று சொல்கின்றன. தண்டனைக்காலம் முடிந்த பிறகும் கூட கேரளா திரும்பாமல் தம் குடும்பங்களை அங்கே அழைத்துக்கொண்டனர். ஆக அந்தமான் தீவுகளை செப்பனிட்டு பல கிராமங்களை உருவாக்கியதில் மாப்பிளாக்களின் பங்கு மிகப்பெரியது.

ஒரு கைதி தன் தாயாருக்கு எழுதிய கடிதம் மூலம் ஒரு விசயம் தெரியவந்தது. 1925 ஜூன் 20 அன்று 25 மாப்பிளாக்கள் மலபாருக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந்தமானில் இருந்த தண்டனைக்கைதிகளின் குடும்பத்தை தேடி வந்தார்கள். விளைவாக 300 குடும்ப உறுப்பினர்கள் அந்தமானுக்கு இடம் பெயர்ந்தார்கள். அதே கைதி இரண்டு மாதங்களுக்கு பின் எழுதிய கடிதத்தில், பெங்களூருக்கு அருகில் உள்ள பெல்லாரி சிறையில் இருந்த 400 கைதிகள் தம் குடும்பத்தாருடன் அந்தமானுக்கு குடியேற விண்ணப்பித்த விவரம் உள்ளது. அந்தமானில் மவுண்ட் ஹாரிட் Mt.Harrit க்கு மேற்கே உள்ள கிராமங்களில் குடிபுகுந்தார்கள். தங்களது கிராமங்களுக்கு தமது சொந்த (கேரள) மண்ணின் கிராமப்பெயர்களையே சூட்டினார்கள் என்பதை தொடக்கத்தில் பார்த்தோம்.

தெற்கு அந்தமான் பகுதி இவ்வாறான கைதிகளால் குடியேற்றமானது. விரைவிலேயே மேலும் பல மாப்பிளாக்கள் இரண்டாம் தரத்துக்கு உயர்த்தப்பட்டு தங்களை தாங்களே சமாளித்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஆனால் கொடும் சிறைகொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து நிலைமை மோசமானது. 1939இல் நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபின்னும் போரில் ஜப்பான் 1941இல் இறங்கிய பின்னும் அந்தமானில் நிலைமை முற்றிலும் தலைகீழானது. போர்ட்பிளேயர் மீது ஜப்பானியர் 1942இல் குண்டு வீசினர். மார்ச் 1942இல் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியேறியது, ஜப்பானியர் வசம் வந்தது. அப்போது 6000 கைதிகளும் அந்தமானிலேயே பிறந்த 12000 குடிமக்களும் இருந்தார்கள். தொடக்கத்தில் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்த ஜப்பானியர் பின் வந்த நாட்களில் இந்தியர்களை கொடுமை செய்தனர். உணவுப்பற்றாகுறையை சரிக்கட்டவே இந்த கொடுமைகள் நடந்தன. இதற்கு Operation Baldhead என்று திட்டமிடப்பட்டது. பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரையும் ஜப்பானியர் சுட்டுக்கொன்றனர்.


காலம் ஓடியது. அந்தமானின் மக்கள்தொகையில் பெரும்பகுதியாக மாப்பிளாக்கள் இருந்தனர். சிலர் தமது கடந்தகால வரலாற்றை நினைவுகூர மற்றவர்கள் அது குறித்து பேச விரும்பவில்லை. மதமும் விவசாயிகள் போராட்டமும் பிணைந்து ஒரு கிளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்ல, விளைவாக பல அப்பாவிகள் உயிரையும் உடைமைகளையும் இழக்க, இறுதியாக தம் சொந்த மண்ணில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள தீவில் வந்து குடியேற, இக்கொடுங்கதையை நினைப்பதை விடவும் மறப்பது எளிது என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.

மிகச்சரியாக சொன்னால், அந்தமான் என்றாலே இப்போதும் அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியவர்களை நாடுகடத்தி சிறைவைக்க பயன்பட்ட ஒரு தீவாகவே அறிகின்றோம். ஆனால் Strange இன் கூற்று வேறுமாதிரி உள்ளது: அங்கே அரசியல் கைதிகளாக குடியேற்றப்பட்டவர்கள் சுமார் 500 பேர் மட்டுமே. அவர்களில் பலரும் பின்னர் மையப்பகுதி இந்தியாவுக்கு திரும்பிவிட்டார்கள். மாப்பிளா சமூகம் உள்ளிட்ட பிற சாதாரண கைதிகள் பல்லாயிரம் பேர்கள்தான் அந்தமானில் நிரந்தரமாக குடியேறியவர்கள், இன்று நாம் பார்க்கும் அழகிய தீவுகளை உருவாக்க உழைத்து சோர்ந்தவர்கள் இவர்கள்தான்.

- மு இக்பால் அகமது

புகைப்படங்கள்: அந்தமான் சிறையும் ஒரே நேரத்தில் மூவரை தூக்கில் இடக்கூடிய கொட்டடியும் (படங்கள் நான் எடுத்தவை)



சனி, செப்டம்பர் 11, 2021

மாப்பிளா கிளர்ச்சி (4)


(சலீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கத்தை தொடர்கின்றேன்)

5. கோணோம்பாற சீரங்கந்தோடி அரீப்புரம் பாரக்கல் சக்காரியாவின் பரம்பரை வீட்டுக்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜி, அவர் மகன் ஆயாமு, மகள் கடியாமு, மருமகன் நானத் இஞ்ஞாலி ஆகியோர். நோய்வாய்ப்பட்டு இருந்த ஹாஜி, பிரிட்டிஷாரின் கண்ணில் படாத இடத்தில் தன்னை மறைத்து வைக்குமாறு சொன்னார். நோயாளியான அவருக்கு பிரிட்டிஷார் துன்பம் தர மாட்டார்கள் என்றுதான் குடும்பத்தின் பிறர் எண்ணியதாக  ஆயாமுவின் பேத்தி பாத்திமா சொல்கின்றார். ஆயாமுவின் மகன் வாப்பு ஹாஜி (அப்போது இவருக்கு வயது 14)யும் நண்பன் நானத் குஞ்ஞாலாவியும் பெண் உடையணிந்து பிற பெண்களோடு கலந்து வைக்கப்பட்டதால் தப்பினர். 

வல்லிக்கடன் குடும்பத்தில் ஒருவர் மிக மோசமாக காயம் அடைந்துள்ளார். நான்கு நாட்களாக காயத்துடன் போராடியுள்ளார். பாப்பு ஹாஜி என்னும் சிறுவன், அவருக்கு குடிக்க நீர் கொடுத்துள்ளான். ஆனால் அருந்தி ய நீர் முழுமையாக வெளியேறிவிட, கவனிக்க யாருமற்ற நிலையில் நான்காம் நாள் உயிரிழந்தார், அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். காலம் ஓடிவிட்டது, அவரது கல்லறையும் மறந்துவிட்டது.

6. கோணோம்பாறவில் சந்தைக்கு பின்புறம் உள்ள அடக்க ஸ்தலத்தில் நரிப்பட்ட கபூர் குடும்பத்தை சேர்ந்த இருவர் அடக்கம் செய்யப்பட்டனர். நரிப்பட்ட கபூர் அகமது, அவர் மகன் போக்கர் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டபின் இருவரும் தப்பியோடி காய்ந்த சருகுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டனர். அகமதுவின் மற்றுமொரு மகன் குஞ்ஞாலாவி பிடிபட்டு அந்தமான் தீவுக்கு கொண்டுக்குச்செல்லப் பட்டார். அகமதுவின் பேரன் அலாவி (மொய்தீன் குட்டியின் மகன்) தன் குடும்பத்துடன் இங்கே வசிக்கின்றார்.

7. மேல்முறி வலியட்டபாடி நம்பன்குண்ணன் முகம்மது அலி வீட்டின் கொல்லையில் அவர் தாத்தாவின் தந்தை அலாவி அடக்கம் செய்யப்பட்டார். மிக வயதான அவரை வேறு யாரும் சுமந்து செல்ல மாட்டார்கள் என்று எண்ணியதால், சிறிய ஜன்னல் வழியே வெளியே வந்துள்ளார். பிரிட்டிஷாரின் கையில் பிடிபட்ட பின்னர் தன்னை சுட்டுக்கொல்வது உறுதி என்று தெரிந்த பின் தொழுகை நடத்த ஆயத்தம் ஆனார். தன்னை நீரால் சுத்தப்படுத்திக்கொண்டு மேற்குத்திசை நோக்கி நின்றார் என்று உறவினர் மொய்தீன் (87 வயது) கூறுகின்றார். பிரிட்டிஷாரின் பீரங்கிகள் தாக்கியதில் அங்கே இருந்த தென்னை மரங்கள் மொட்டையாக இருந்தன என்று அவர் சொல்கின்றார்.  சுட்டுக்கொல்லப்பட்ட  அலாவியின் உடலை, பெண்கள்தான் இரவில் குழி தோண்டி அடக்கம் செய்ததாகவும் இரண்டு அடி ஆழம் மட்டுமே அவர்களால் தோண்ட முடிந்தது என்றும் சொல்கின்றார்.

8. கபூர் உஸ்மானின் வீட்டு கொல்லையில் கபூர் குடும்பத்தின் இருவர், கபூர் இத்தீரும்மாவின் தந்தையின் சகோதரர், தாத்தா ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டனர். இத்தீரும்மாவுக்கு குழந்தைகள் இல்லை, சமீபத்தில்தான் அவர் காலமானார். இருவரும் முறையே கபூர் உஸ்மானின் தாத்தா ஆன இஸ்மாயில் என்ற இதேலுவின் சகோதரரும் மகனும் ஆவர். இத்தேலு பிடிபட்டார், ஆந்திராவில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார், அங்கேயே இறந்தார். அவர்களின் பரம்பரை வீட்டுக்கு பிரிட்டிஷார் தீ வைத்து அழித்தனர். வீட்டின் இடிபாடுகளை  இடித்தபோது பிரிட்டிஷாரின் துப்பாக்கி தோட்டாக்கள் சுவரில் புதைந்து இருந்ததை கண்டுபிடித்ததாக உஸ்மானின் தந்தை முகம்மது ஹாஜி நினைவுகூர்ந்துள்ளார்.

9. மேல்முறி முட்டிப்பாடி மத்திய தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள மடாம்பி உபையத்தின் வீட்டின் அருகே நான்கு பேர் அடக்கம் செய்யப்பட்டனர். மடாம்பி குஞ்ஞாரமு, மடாம்பி மாமுண்ணி, காடேறி மூஸா ஹாஜி, சேர்க்காடன் மொய்தீன் ஆகிய நால்வர். மடாம்பி குடும்பத்தின் பரம்பரை வீட்டின் முற்றத்தில் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் இந்த வீட்டை செப்பனிட்ட போது சுவர்களில் தோட்டாக்கள் புதைந்து இருந்ததை கண்டுபிடித்தார்கள். மூஸா ஹாஜியின் மகன் ஆன மம்முது ஹாஜிதான் இந்த நிலத்தை விலைக்கு வாங்கி, நிலம் பறிபோகா வண்ணம் அதை தன் தாயார் இயாத்துக்குட்டி ஹஜும்மாவின் பெயரில் ஆலத்தூர்பாடியில் உள்ள மசூதிக்கு வக்பு கொடையாக அளித்துள்ளார். இக்குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் உமர் மேல்முறி இத்தகவலை தருகின்றார்.

பெரும்கொல்லன் சாதியை சேர்ந்த சிலர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். தட்டாந்தோடி அருகே உள்ள வைஷ்யர்தோடியில் வசித்து வந்தார்கள். இவர்களின் தலைமுறையை சேர்ந்த மூவரை பிரிட்டிஷ் ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களின் வீட்டுக்கு தீ வைத்தது. வீட்டின் கிணற்றருகே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கல்லறைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று ஆலத்தூர்ப்பாடியை சேர்ந்த பி டி முகம்மது மாஸ்டர் கூறுகின்றார்.

.... ..... ...... .....

பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்திய படுகொலையின் நோக்கம் என்ன?

மலபார் கிளர்ச்சியின் தலைவர் அலி முஸ்லியாரின் செல்வாக்கு மேல்முறியிலும் அதிகாரித்தோடியிலும் பலமாக இருந்ததுதான் அப்பகுதிகளை பிரிட்டிஷார் தம் இலக்காக ஆக்கியமைக்கு காரணமாகும்.  தார் (Dar) எனப்படும் இஸ்லாமியக்கல்வி மையங்களை மேல்முறி பொடியாட் பரம்மலிலும் பின்னர் மேல்முறி ஆலத்தூர்ப்பாடியிலும் முஸ்லியார் நடத்திவந்தார். மூன்று வருடங்கள் இப்பகுதியில் அவர் இருந்தார் என்பதால் இயற்கையாகவே அப்பகுதி மக்களிடம் செல்வாக்கை வளர்த்து இருந்தார். காங்கிரஸ் கிலாபத் இயக்கத்தின் கோழிக்கோடு தாலுக்கா தலைவர் பழக்கம்தோடி அபூபக்கர் முஸ்லியார் மலபார் கிளர்ச்சி இயக்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், அவர் பொடியாட்டின் தாரில் இருந்த அலி முஸ்லியாரின் மாணவர் (A K Kodoor,  page 98). மலபார் கிளர்ச்சியின் பல தலைவர்கள் இளவயது அறிவாளிகள், அலி முஸ்லியாரின் மாணவர்கள்.

அலி முஸ்லியார் தவிர மற்றுமொரு குறிப்பிடத்தக்ககிளர்ச்சி த் தலைவர் வரியன்குன்னத் குஞ்ஞாகமது ஹாஜி, இவர் தலைமறைவாக இருந்தபோது மேல்முறிக்கு பலமுறை ரகசியமாக வந்து சென்றுள்ளார். தத்தையில் குடும்பத்தின் மாடம்பி முஹம்மது, தன் தந்தை தன்னிடம் கூறியதாக சொல்கின்றார்: குஞ்ஞாகமது ஹாஜி ஒருநாள் இரவில் வந்து அரிசிக்கஞ்சி கேட்டார்,கஞ்சி இல்லாமல் போகவே தேங்காய் சில்லுகளை வைத்துக்கொண்டு  பழைய சோறு மட்டுமே உண்டார். (Nisar Kaderi,  page 23). 

பிரிட்டிஷார் இப்பகுதியை குறிவைத்து தாக்கியமைக்கு பூக்கோட்டூர் போர்க்களம் மற்றொரு காரணம். 1921 ஆகஸ்ட் 21 அன்று நடந்த சண்டையில், மாப்பிளாகள் ஒருபுறமும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதப்படையான Leinster ரெஜிமெண்ட், சிறப்பு போலீஸ் படை ஆகியன மறுபுறமும் மோதியதில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாப்பிளாக்கள் முறியடிக்கப்பட்டார்கள். பூக்கோட்டூர் போர்க்கள வீழ்ச்சி என்பது ஒட்டுமொத்த மலபார் கிளர்ச்சியின் வீழ்ச்சியில் முக்கியமான பங்கை வகித்தது. இக்களத்தில் மாப்பிளாக்கள் பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்தார்கள் என்பது உண்மைதான் எனினும் பிரிட்டிஷ் அரசு இக்களத்தை மிகக் கவலையுடன்தான் பார்த்தது. காரணம், வேறொரு ராணுவம் அல்லது அரசின் உதவி ஏதும் இல்லாத நிலையில் மாப்பிளாகளால் இவ்வுலகத்தின் மிக வலிமையான ராணுவத்தை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடிந்தது என்பதே. பூக்கோட்டூர் கும்பல் எனப்பட்ட மாப்பிளா ராணுவ அமைப்பில் இருந்தவர்கள் முற்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்களுடைய திட்டங்களும் கிளர்ச்சியை ஒருங்கமைத்த விதமும் பூக்கோட்டூர் களத்தில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு மிகப்பெரும் சேதங்களை விளைவித்தது என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஆக இருந்த FB Evans மெட்ராஸ் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். Tottenham , page 48. 1921 அக்ட்டோபர் 20- நவம்பர் 10 இடைக்காலத்தில் கொண்டோட்டி, மஞ்சேரி, அரீகோட், மலப்புரம் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுதியாகவே மேல்முறி-அதிகாரித்தோடி படுகொலைகள் இருந்தன, அதன் உடனடி நோக்கம் பூக்கோட்டூர் கும்பலையும் ஆதரவாளர்களையும் வளைத்துப் பிடிப்பதுதான். Tottenham, page 40.

அவ்வாறெனில் உண்மையான நோக்கம் என்ன? பூக்கோட்டூர் கும்பலை ஒழித்துக்கட்டவே இந்த படுகொலைகள் என்று சொல்லிக்கொண்டாலும், கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெறாத மாப்பிளா மக்களை அச்சுறுத்துவதே இப்படுகொலையின் உண்மையான நோக்கம்.  கிளர்ச்சியில் தாங்கள் பங்கு பெறாததால் பிரிட்டிஷ் ராணுவம் தங்களுக்கு தீங்கு செய்யாது என்று நம்பியவர்களையும் ராணுவம் தீர்த்துக்கட்டியது. நானத் குருவயில் மொய்து அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர். இவ்வாறு ஒரு பயங்கரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு செய்தியை எச்சரிக்கையாக அனுப்பியது - பிரிட்டிஷ் ஆதரவாளராக இருங்கள் அல்லது மரணத்தை சந்தியுங்கள்.

பிரிட்டிஷ் அரசு ஆவணங்கள் கூட படுகொலைக்கு ஆளானவர்கள் அப்பாவிகள் என்றுதான் சொல்கின்றன. அன்றைய அரசின் கீழமை செயலாளர் இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "....அக்ட்டோபர் 25 அன்று மேல்முறியில் 246 மாப்பிள்ளாகளை Dorset படையினர் படுகொலை செய்தார்கள். இவர்கள் அனைவருமே கிளர்ச்சியில் நேரடியாக பங்கு பெற்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் இப்படுகொலைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் மனக்கிலேசத்தை உருவாக்கிவிட்டதை பார்க்க முடிந்தது. படுகொலைகள் நிகழ்ந்த பின்னர் உடனடியாக, மலப்புரத்தின் சுற்று வட்டார அம்சங்களில் (கிராம நிர்வாக அமைப்பு) இருந்து அரசுக்கு வந்த மனுக்களை பார்த்தால், அவை அரசுடன் ஒத்துழைப்பதாக எழுதப்பட்டு இருந்தன". ஹிட்ச்காக்கின் பதிவு, டார்செட் படையினர் அப்பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து மாப்பிளாகளை பிடித்ததாக சொல்கின்றது. தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பு அளிக்கும் எனில் பெண்களும் குழந்தைகளுமாக சுமார் ஆயிரம் பேர் சரணடைய ஆயத்தமாக இருப்பதாக மலப்புரம் காஜி மனு எழுதியாக நவம்பர் 2 அன்று Evans மெட்ராஸ் அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். Tottenham page 257.

...... ....... ......

மவுனத்தின் வரலாறும் வரலாற்றின் மவுனமும்

ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் Saidiya Hartman தனது முதல் நூலான Scenes of subjection னில் இப்படி குறிப்பிடுகிறார்: ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து கடத்தி செல்லப்பட்ட அடிமைகளின் அவல ஓலத்தை விடவும் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி சமாதி ஆன பல்லாயிரம் அடிமைகளின் மவுனம் மிக உரத்தது. இப்போது வரலாற்றில் இடம்பெற்றுள்ள வாக்குமூலங்களின், வரலாற்றின் அடிப்படையில் ஆன ஆவணங்களை விடவும் பதிவு செய்யப்பட வேண்டியவை எவை எனில் பெருங்கடலில் மூழ்கி உயிரை இழந்த பல்லாயிரம் அடிமைகளின் குரல்கள்தான்.

ஹார்ட்மானின் கூற்று சரி எனில், மேல்முறி அதிகாரத்தோடியில் உயிரை இழந்த 200 பேர்களின் வரலாற்றை எதன் ஆதாரத்தின் பேரில் எழுதுவது? 40 பேர்களின் சமாதி ஒன்றைத்தவிர?  சான்றுகள் எதையும் விட்டு வைக்காமல் மூழ்கி சமாதி அடைந்தவர்கள் ஒரே ஒரு செய்தியை விட்டு செல்கின்றார்கள்: வரலாற்றின் சிக்கல் என்பது அதன் குரல்கள் அல்ல, வரலாற்றின் மவுனம்தான் சிக்கலானது.  மலபார் கிளர்ச்சி என்பது  நம் தேச வரலாற்றின் மவுனம் எனில் இந்த புதைக்குழிகள்தான் அந்த வரலாற்றின் மவுனத்துக்குள் உறைகின்ற மவுனம். எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சான்றுகளையும் தாண்டி சான்றுகளும் எச்சங்களும் இன்றி மறைந்து போனவர்களின் வரலாற்றை தோண்டி ஆய்வதன் முக்கியத்துவத்தையே மலபார் கிளர்ச்சியின் இந்த மையமான பகுதி நமக்கு உணர்த்துகின்றது.

(முற்றும்)

- மு இக்பால் அகமது

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

மாப்பிளா கிளர்ச்சி (3)

மாப்பிளா கிளர்ச்சி (3)

மலபார் புரட்சியின் போக்கில் பெண்கள், குழந்தைகள், முதியோர்க்கு பிரிட்டிஷ் ராணுவம் இழைத்த கொடுமைகளில் பலவும் பொதுவெளியில் ஆவணப்படுத்தப்படாமலேயே போயின. மேல்முறி - அதிகாரத்தோடி நிகழ்வில்  பெண்கள், குழந்தைகள், முதியோர் சந்தித்த கொடுமைகள், போர்க்காலங்களின்போது பின்பற்ற வேண்டிய பொதுவான கட்டுப்பாடுகளை மீறியவை ஆகும். தங்கள் தந்தையரை பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்சென்றபோது தடுக்க முனைந்த இரண்டு மகள்களின் கல்லறைகளும் அங்கே உள்ளன.

அதிகாரத்தோடியில் இருந்த கீடக்கடன் குடும்பத்தை சேர்ந்த 11 வயதுக்குழந்தை அவள். வீட்டுக்குள் புகுந்து தன் தந்தையை பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது இவள் அவரை கட்டிப்பிடித்து இழுத்திருக்கின்றாள், அப்போது இரக்கமின்றி துப்பாக்கியின் பின் கட்டையால் அவளை அடித்திருக்கின்றார்கள். அதையும் மீறி அவள் தன் தந்தையை இறுக தழுவி இருந்ததால் இருவரையும் பிரிக்க முடியாத நிலையில் இருவரையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. தன் அம்மாவழிப் பாட்டியின் வீட்டுக்கு வந்தபோதுதான் இருவருக்கும் இந்த கொடுநிலை ஏற்பட்டுள்ளது.

கோணோம்பாற சீரங்கந்தோடியை சேர்ந்த அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜியின் மகள் கடியாமு. திருமணம் ஆன அவள், நோய்வாய்ப்பட்டு இருந்த வயதான தன் தந்தையை கவனித்துக்கொள்ள வந்திருந்தாள் கடியாமு. பத்தாயம் எனப்படும் பெரிய  மரப்பெட்டியின் மீது படுத்துக்கொண்டு இருந்த தந்தையை, பிரிட்டிஷ் ராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது தடுக்க முனைந்த அவளை துப்பாக்கியின் பின்கட்டையால் தாக்கியுள்ளனர்.  வலுக்கட்டாயமாக அவரை இழுத்து சென்று வீட்டின் கிழக்கு முற்றத்தில் தரையைப் பார்த்ததுபோல படுக்கச்சொல்லி ஆனையிட்டுள்ளனர். தன் தந்தையை சுட்டுவிடுவார்கள் என்று அறிந்த கடியாமு, அவர் மீது கட்டிப்பிடித்து படுத்துள்ளாள். ராணுவம் இருவரையுமே சுட்டுக்கொன்றது. இந்த இரு வீராங்கனைகள் பற்றி நம் வரலாற்றுப்பக்கங்களில் எதுவும் சொல்லபடவில்லை. மாப்பிளா வரலாறு குறித்த, மாப்பிளா சமூக பெண்கள் குறித்த வரலாறு திட்டமிடப்பட்டவகையில் மறைக்கப்படுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வுகள்  உதாரணம். 

மேல்முறி-அதிகாரத்தோடி படுகொலைகள் குறித்து பொதுவான வரலாறு மவுனமாக இருக்கின்றது, ஆனால் மலபார் முஸ்லிம் சமூகத்தின் கிசாப்பாட்டுகளில் இந்த நிகழ்வை அந்த மக்கள் பாட்டாக பாடி பதிவு செய்துள்ளார்கள். யோக்யன் ஹம்ஸா மாஸ்டர் என்ற கிசாப்பாட்டு நிபுணர், விடுதலைப்போராட்ட வீரர் முகம்மத் அப்துர் ரஹ்மானைப் போற்றி எழுதிய அப்துர் ரஹ்மான் கிசாப்பாட்டு என்ற பாடலில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார். 

இப்பாடலின் பொருள் இது: மேல்முறியில் கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் ராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக்கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள், ஒரு விசாரணையும் இன்றி.

.... .... .... .......

ஒன்பது சவக்குழிகள்:

1. அதிகாரித்தோடி வட்டப்பரம்பில் இருக்கும் அரீப்புரம் பாரக்கல் கோயாகுட்டி ஹாஜியின் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட குழியில் 11 பேர் புதைக்கப்பட்டனர். அவர்களின் விவரம்: அவரது தாத்தா அரீப்புரம் பாரக்கல் அகமது குட்டி ஹாஜி, அவர் சகோதரர் மொய்தீன் குட்டி ஹாஜி, குட்டிரயீன், மரைக்காயர், கொங்காயன் அலாவி, கீடக்காடன் குடும்பத்தின் ஒரு ஆணும் அவர் மகளும். அவள் 11 வயதே ஆனவள், சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

அகமது குட்டி ஹாஜியின் மகள் ஆயிஷா அப்போது 4 வயது சிறுமி. பிற்காலத்தில் அவர் தன் மகன் யோக்யன் ஹம்ஸா மாஸ்டருக்கு இந்த சம்பவங்களை பற்றி சொல்லியிருக்கிறார், மாஸ்டர் கிசாப்பாட்டு எழுதுபவர், பாடுபவர். மாஸ்டர் 2017இல் தன் 102ஆவது வயதில் காலமானார். வீட்டில் இருந்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின் வீட்டுக்கு தீ வைத்தார்கள். பெண்களும் குழந்தைகளும் 

அருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் சென்றுவிட, ஆண்கள் அனைவரையும் ஓசையடைக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.

அகமது குட்டி ஹாஜியின் நண்பரும் அருகில் வசித்துவரும் ஆன கொங்கையன் அலாவியும்  கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்று அலாவியின் பேரன் சொல்கின்றார். இவர் தந்தையின் பெயரும் அலாவிதான். நான்கு தலைமுறைகளிலும் ஒருவருக்கு அலாவி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏமன் நாட்டில் இருந்து மாம்புரத்தில் தங்கி அங்கேயே வசித்துவந்த மாம்புரம் சையத் அலாவி தங்ஞள் என்ற இஸ்லாமிய அறிஞரின் நினைவாகவே இப்படி பெயர் சூட்டப்படுகின்றது. ஆன்மிகம், மதம், சமூகம் தொடர்பான விசயங்களைப் பற்றி அவருடன் உரையாடுவதற்காக மக்கள் அவரை சந்திப்பது வழக்கம். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியததுக்கு எதிரான நிலை எடுத்திருந்தார் என்பதால் அவர் புகழ் பெற்றிருந்தார். மாம்புரத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூண், கேரளாவின் புகழ்பெற்ற புண்ணிய யாத்திரைதலங்களில் ஒன்று.

வீட்டின் முற்றத்தில் அமைந்துள்ள செவ்வோடு குவாரியில் பாய்கள் விரிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அவற்றில் கிடத்தப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டனர்.

2. கபூர் குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரித்தோடியில் அமைந்துள்ள அரசு மாப்பிளா உயர் தொடக்கப்பள்ளியின் பின்னால் இருந்த நிலத்தில் குழி தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்டனர். கபூர் முண்டசேரி யூசுப், அவர் மகன் போக்கர், கபூர் மூசம், ஆயமுட்டி, மம்முது ஆகிய அந்த ஐவரின் வாரிசுகள் ஒருவர் கூட இப்போது அந்த ஊரில் இல்லை.

3. நானத் குருவயில் ஹம்சாவின் வீட்டுக்கு அருகில் குழிதோண்டப்பட்டு அறுவர் புதைக்கப்பட்டனர். ஹம்சாவின் அப்பாவழி தாத்தாவான நானத் குருவயில் மொய்து, அவர் சகோதரர் குஞ்ஞி மரைக்காயர், மாடம்பி குஞ்ஞி முகம்மது ஆகியோர் உட்பட அறுவர்.

நானத் குருவயில் மொய்து தன் வீட்டுக்குள் உட்கார்ந்து குர் ஆன் வாசித்துக்கொண்டு இருந்தார். தாங்கள் ஒரு சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை என்பதால் கவலைப்பட அவசியமில்லை என்று நம்பிக்கொண்டு இருந்தார். அவரை ராணுவத்தினர் வந்து பிடித்தபோது 14 வயது மகன் முகம்மது தன் தந்தையின் கையை இறுகப்பிடித்து இழுத்துள்ளான், ஆனால் ராணுவத்தினர் அவனை கீழே தள்ளியுள்ளனர். இத்தகவலை முகம்மதுவின் மூத்த மகன் ஆன மொய்து (82) இப்போது கூறுகின்றார். அங்கிருந்து செல்லும்முன் வீட்டின் கூரையில் ராணுவத்தினர் தீ வைத்துள்ளார்கள். ஹம்சாவின் இப்போதுள்ள வீடு அந்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.

அருகில் கரட்டுபரம்பனில் அப்போது குடியிருந்த தீயர் சமூக மக்கள்தான் அப்போது உதவிக்கு ஓடி வந்தவர்களில் முதன்மை ஆனவர்கள் என்று மொய்து கூறுகின்றார். தீயர் சமூக மக்கள் அப்போது அங்கே நடந்த அனைத்துக் கொடுமைகளையும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. ராணுவம் அங்கிருந்து நகன்ற பின் உடனடியாக ஓடி வந்து வீட்டின் தீயை அணைத்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆன ஈழவர், தீயர் ஆகியோரும் முஸ்லிம் மக்களும் அப்போது யாருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். (தீயர், ஈழவ மக்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களாக அறியப்படுகின்றனர்.)

4. அதிகாரித்தோடி ஆக்கப்பரம்பில் கண்ணன்தோடு என்ற ஊரில் முள்ளப்பள்ளி உம்மர் என்பவர் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் 5 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அதிமண்ணில் மம்மூட்டி, வல்லிக்கடன் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உட்பட ஐவர். மம்மூட்டியின் மகன் குஞ்ஞி முகம்மது பெண் உடை தரித்து தப்பியதாக அவர் மகன் மொய்தீன் (72) கூறுகின்றார். வீட்டில் இருந்த அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செவ்வோடு குவாரிகளில் புதைக்கப்பட்டன.

தொடரும்.

செவ்வாய், ஆகஸ்ட் 31, 2021

வயது 74, ஆனால் பள்ளிக்கல்வியே இன்னும் முழுமையடையவில்லை

வயது 74, ஆனால் பள்ளிக்கல்வியே இன்னும் முழுமையடையவில்லை

(Still short of schooling at 74)

ஆசிரியர்: ழான் டெரெஸ் (Jean Derez) 

இந்திய வளர்ச்சிப்பொருளாதார வல்லுநர்களிடம் இரண்டு விதமான சிந்தனைப்போக்குகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது - ஒன்று, வளர்ச்சியை மையமாகக் கொண்டது, மற்றது வளங்களை பங்கீடு  செய்வதை மையமாக கொண்டது. இந்த பார்வை தவறானது.  வளர்ச்சியும் வளங்களை பங்கீடு செய்வதும் மட்டுமே வளமான உலகுக்கு வழி செய்யாது. 

உதாரணமாக குடிமை சமூக உரிமைகள் மனித வாழ்வுக்கு மிகப்பெரிய பங்காற்ற முடியும் என்பது உண்மைதான். எனினும் வளர்ச்சிக்கும் வளமைப்பங்கீடுக்கும் இந்த உரிமைகளால் பெரிய அளவுக்கு உதவி செய்ய முடியாது. மறுபுறம், வளர்ச்சியா வளமைப்பங்கீடா என்ற கேள்விக்கு மேல் மற்றொரு உண்மையும் உள்ளது - சில பொருளாதார கொள்கைகள் இரண்டையுமே முதன்மைப் படுத்துகின்றன. சிறந்த உதாரணம், அனைவருக்கும் தொடக்கக்கல்வி. பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவது போலவே சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கும் தொடக்கபள்ளிக்கல்வி உதவுகின்றது. தரமான கல்வி என்பது மனித வாழ்க்கை மேம்படவும் பல்வேறு வழிகளில் அவசியமாகின்றது. உதாரணமாக, நம் உடலநலனைப் பேணிக்கொண்டு சமூகத்தின் சகமனிதர்களின் உடல்நலத்தையும் பேணுகின்றோம். இது, 'மூன்று தரப்புக்கும் வெற்றி' என்ற கொள்கை போன்றது. உண்மை என்னவெனில் வளரச்சிப்பாதையின் தொடக்க கட்டத்திலேயே அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி முன்னேறிய நாடுகள் மிகப்பெரிய பலன்களை அடைந்துள்ளன. இந்தியாவில் இதற்கு உதாரணமாக கேரள மாநிலம் உள்ளது.

கடந்த காலத்தில் கல்விக்கொள்கை:

தொடக்ககால ஐந்தாண்டு திட்டங்களில் தொடக்கக்கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை. பவுதீக அளவிலான முதலீடுகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. "புதியதாக தொடக்கப்பள்ளிகளை திறப்பது என்ற முனைப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றுதான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் கூறியது. மாறாக "ஏற்கனவே இருக்கின்ற தொடக்கப்பள்ளிகளை அடிப்படையான கொள்கைகள் மீது புதுப்பித்துக் கட்டமைக்க வேண்டும்" என்றுதான் திட்டமிட்டு இருக்க வேண்டும் (மகாத்மா காந்தி கனவுகண்ட கல்விக்கொள்கைகளின் அடிப்படையில் "தொடக்கக்கல்வித்திட்டம்" என்பதை நினைவில் கொண்டு சொல்கின்றேன்).

வேறு ஒரு காரணமும் உள்ளது. சமூகத்தின் கீழ்சாதியினருக்கு கல்வி என்பது அவசியம் அற்றதும் முக்கியத்துவம் அற்றதும் ஆகும் என்ற பாரம்பரியம் ஆன மேல்சாதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் அக்காலத்தில் கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது மட்டும் என்ன? மேல்சாதியினரும் கிராமப்புறப்பள்ளி ஆசிரியர்களும் "உழைக்கும் வர்க்கங்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது அவசியம் அற்றது, நன்றிக்கு உரியதும் அல்ல" என்று சொல்வதை இப்போதும் நாம் கேட்கின்றோம். "ஏழைகள் கல்வி கற்றால் எங்கள் வயல்களிலும் வீடுகளிலும் யார் வேலை செய்வது?" என்று வெளிப்படையாகவும் வெறுப்புடனும் புலம்புவார்கள்.

விடுதலைக்குப்பின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். 1951இல் பெண்கல்வி 9% தான், 2011இல் அது 65% (1951இல் ஏழு வயதுக்கு மேலும், 201இல் 5 வயதுக்கு மேலும் என்று கொள்க). வரலாற்றுப்பார்வையில் இது மிகப்பெரிய பாய்ச்சல்தான். ஆனால் ஒப்பீட்டளவில் குறைந்த பட்சம் தெற்காசிய நாடுகளின் தர அடிப்படையில் இது திருப்தி அளிக்கும் வளர்ச்சி அல்ல. பல்வேறு சமூகக்கூறுகள், சுகாதார கணக்கீட்டு புள்ளி விவரங்கள் அடிப்படையில், 15-24 வயது வரம்புக்குள் ஆன பெண் கல்வி என்பது இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏறத்தாழ சமமாகத்தான் உள்ளது - 2016இல் 85%. உண்மையில் பங்களாதேஷ், நேபாளம் இரண்டும் இந்தியாவுக்கு வெகு பின்னால்தான் இருந்தன, ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆன  ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி GDP, அதிவிரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, இந்த இரண்டு நாடுகளின் பெண்கல்வி நிலை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவை கிழக்கு ஆசிய நாடுகளின் பெண்கல்வித் தரத்துடன் ஒப்பிட்டால் அது துயரில் முடியும்.

பள்ளிக்கல்விக்கான வாய்ப்புக்கள் எனில் சிலருக்கு அது உலகத்தரத்திலும் பலருக்கு அது மிக மோசமான நிலையிலும்தான் உள்ளது. மிகச்சிறிய கிராமங்களில் கூட இந்தப் பாகுபாடு நிலவுவது வியப்புக்குரியது. முப்பது வருடங்களுக்கு முன்பு, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பாலன்பூர் என்ற சிறிய கிராமத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, தலித் சமூக பெண்களிடம் பூஜ்யம் விழுக்காடாக இருக்க, காயஸ்தா சமூகத்தின் ஆண் குழந்தைகள் 100% கல்வியறிவு பெற்றவர்கள் ஆக இருந்தார்கள். வகுப்பறைகளிலும் கற்றல் திறனில் மிகப்பெரிய பாகுபாட்டைப் பார்க்கின்றோம், சில குழந்தைகளின் வாசிப்புத்திறன் மேம்பட்ட நிலையில் இருக்க, மற்றவர்களோ அடிப்படை எழுத்துக்களைக் கூட வாசிக்கத் தடுமாறுகின்றார்கள். யுனெஸ்கோ அறிக்கை ஒன்றின்படி, 2012ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் தனியார் நடத்தும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 12% ( இந்தியா தவிர), அதுவே "வளர்ச்சியடைந்த நாடுகளில்" 10%க்கும் கீழே. ஆனால் இந்தியாவில் அதுவே 40% ஆக இருந்தது, அதற்கு மேலும் உயர்ந்துகொண்டே இருந்தது.

தவிர, அரசுப்பள்ளிகளின் பாடங்களுக்கும், தனியார் பள்ளிகளின் பாடங்களுக்குமே கூட மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அறிவுக்குப்பொருத்தமான சமதகுதி உள்ள கல்வியே குழந்தைகளுக்குச்சிறந்தது என்பதுதான் உலகளாவிய நியதி. இந்தியாவிலோ கல்வியின் தரம் என்பது, வர்க்கம், சாதி, பாலினம், பள்ளிகட்டணத்தை கட்டக்கூடிய தகுதி ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. சமூக அசமத்துவங்களில் இருந்து விடுபட பள்ளிக்கல்வி ஒரு வழியாக இருக்கும் என்ற நோக்கத்தையே இந்தப் பாகுபாடுகள் அடித்து நொறுக்குகின்றன.

முரண்பட்ட அடுக்குகளைக் கொண்ட இந்தியாவின் பள்ளிக்கல்வித்திட்டத்தின் முகம் கடந்த சில மாதங்களாக அம்பலப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்றுக் காலத்தின் பின் பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. இன்னும் மூடிக்கிடக்கின்றன. பொருளாதார வசதி படைத்த குடும்பத்து பிள்ளைகள் வசதிகள் பொருந்திய தம் வீடுகளில் உட்கார்ந்து இணையவழியாக பாடங்களை கற்றுக்கொண்டு இருக்க, வசதி இல்லாத குழந்தைகள் "இணையவழிப்பள்ளி"யில் இருந்த வெளியேற்றப்பட்டுள்ளாகள். இணையவழிகல்வி என்னும் அத்தி இலை, பள்ளிக்கல்வி மறுப்பு என்னும் யானையை மறைந்துவிட்டது, 16 மாதங்களாக. 

ஜார்கண்டில் Latehar கிராமத்தில் நாங்கள் இந்த மாத தொடக்கத்தில் வீடுதோறும் சென்று நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்தது இதுவே. தலித் - ஆதிவாசி சமூக மக்களின் நான்கு குடியிருப்பு பகுதிகளில் நாங்கள் கண்டது என்னவெனில், பெரும்பாலான குழந்தைகளுக்கு ஒரே ஒரு சொல்லைக் கூட வாசிக்க தெரியவில்லை, இணையவழிக்கல்வி என்பதன் அடையாளமே தெரியவில்லை. 

.... .... .....

The Hindu, 15.8.2021

தமிழில் மு இக்பால் அகமது

மாப்பிளா கிளர்ச்சி - 2


1921 கிளர்ச்சி திருரங்காடியில்தான் பிறந்தது. ஆகஸ்ட் 1921இல் மலப்புரம் மாவட்டம் திரூர்தான் கிளர்ச்சியின் கனல் பிரதேசமாக விளங்கியது. பிரிட்டிஷ் மலபாரின் நான்கு தாலுகாக்களில் ராணுவ சட்டம் பிறப்பிக்கப்பட்டது - கோழிக்கோடு, எரநாடு, வள்ளுவநாடு, பொன்னாணி. பின்னர் குரும்பரநாடு, வயநாடு தாலுகாக்களிலும் பிறப்பிக்கப்பட்டது. கிளர்ச்சியை வழி நடத்திய அலி முசலியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆகஸ்ட் இறுதியில் சரணடைந்தார்கள் எனினும் பிரிட்டிஷ் ராணுவம் தன் அடக்குமுறை, கைதுகளை தொடர்ந்து செய்தது. பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவான Dorset Regiment என்னும் படைப்பிரிவு, எரநாடு, வள்ளுவநாடு, மஞ்சேரி ஆகிய தாலுக்காக்களில் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிராக நடத்திய தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம் மக்கள் எதிர்வினை ஆற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1921 அக்ட்டோபர் 25 அன்று, மலப்புரத்தில் மேல்முறி என்ற ஊரில் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துவரப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் என 246 பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு டார்செட் ரெஜிமெண்ட் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். டிசம்பர் இறுதியில் சுமார் 27000 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.

வரலாற்றறிஞர் எம் கங்காதரன், கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த கடைசி ஆறு மாதங்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் இரண்டு தரப்பினருமே பெரும் நெருக்கடியில் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் 10000 மாப்பிளாக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அதே அளவு மாப்பிளாக்கள் கைது செய்யப்பட்டு மலபாரில்  இருந்து வெளியேற்றப்பட்டார்கள், அந்தமானின் கொடிய தனிமைச்சிறைக்கும் பல நூறு பேர் கடத்தப்பட்டனர்.

கங்காதரனின் கூற்றுப்படி, அன்று அங்கே போலீஸ் படைக்கு தலைமை ஏற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டு  Richard Harvard Hitchcock க்கின் அதீத நடவடிக்கைகள்தான் கிளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. ஹிட்ச்காக்கின் பதிவுகளே இதற்கு ஆதாரம். மலபாரில் அப்போது கிலாபத் இயக்கம் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் அடர்த்தியாக இருந்த பகுதிகளில் கிலாபத் இயக்கம் தீவிரமாக இயங்கியது. கிலாபத் செயற்பாடுகளை, அவற்றின் செயற்பாட்டு எல்லைகளையும்  தாண்டி அதிகமான கற்பனைகளுடன் பார்த்த பிரிட்டிஷ் போலீஸ், எல்லை மீறிய அடக்குமுறைகளில் இறங்கி இயக்கத்தை நசுக்க முனைந்தது. இதனால் கோபமுற்ற மாப்பிளா முஸ்லிம்கள் வேறு வழியின்றி எதிர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கோழிகோட்டில் காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டார்கள். காந்தியும் மவுலானா சவுக்கத் அலியும் கலந்துகொண்ட மாநாடு அது. இக்கூட்டம் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பதாக அதீத கற்பனையில் இறங்கியது பிரிட்டிஷ் காலனிய அரசு. 

.... ..... ......

சமீல் இல்லிகல் (Sameel Illikal) கேரள இதழியலாளர். வரலாற்று ஆய்வாளர், திரைப்பட விமர்சகர், திரைப்பட இயக்குநர். மத்யமம் என்ற வார இதழின் துணை ஆசிரியர். மாப்பிளா மக்களின் வரலாறு, பண்பாடு குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்பவர். Graves of 1921 Martyrs என்ற ஆய்வுத்திட்டத்தை செய்து வந்தார். நாடக நடிகர், வில்லடிச்சாம்பாட்டு என்ற கேரள கிராமியக்கலையில் தேர்ந்தவர்.

2018 அக்ட்டோபர் மாத மத்யமம் இதழில் வெளியான கட்டுரை இது. சமீல் மலையாளத்தில் எழுதியதை O Najiya ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Two circles. Net இணைய இதழில் வெளியிட்டார். இரண்டு பாகங்களாக வெளியான கட்டுரையின் சில பகுதிகளை நான் தமிழில் இங்கு தருகின்றேன்.

..... ...... ....

இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை 19.4.1919 (379 பேர் மரணம்), சவ்ரி சவ்ராவில் 5.2.1922 அன்று , கொதிப்புற்ற விவசாயிகள்  23 போலீசாரை உயிருடன் கொளுத்திய நிகழ்வு ஆகியவை என்றென்றும் பேசப்படுவை. அரசு பதிவேடுகளின் படிமாப்பிளா கிளர்ச்சி அல்லது மலபார் கிளர்ச்சியில் 2337 பேர் கொல்லப்பட்டார்கள், 1652 பேர் காயமுற்றனர், 45404 பேர் சிறையில் அடைப்பு. 10000 பேர் வரை மரணம், 50000 பேர் சிறையிலடைப்பு,, 20000 பேர் நாடுகடத்தல், 10000 பேரைக்காணவில்லை - இது பொதுமக்கள் கணக்கு.

மலபார் புரட்சியுடன் ஒப்பிடும்போது பிற நிகழ்ச்சிகள் அவற்றின் பரப்பளவிலும் வீச்சிலும் சிறியவை. மலபார் கிளர்ச்சியை தேசிய வரலாறு புறக்கணிக்கின்றது, மலபார் கிளர்ச்சியின் போக்கில்

 
நிகழ்ந்தவற்றையும் வரலாறு கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றது. உதாரணமாக மலப்புரத்தில் மேல்முறி-அதிகாரித்தோடியில் நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைகள். மலபாரில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கூட்டுப்படுகொலை நிகழ்வுகளில் பூக்கோட்டூர் கலவரத்துக்கு அடுத்ததாக சொல்லப்படுவது மேல்முறி படுகொலைகள்.

பூக்கோட்டூர் படுகொலையில் 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள். 1921 அக்டொபர் 29 அன்று, பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் உட்பட அனைவரும் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டு வரிசையாக நிற்கவைத்து சுடப்பட்டார்கள். Dorset Regiment என்னும் பிரிட்டிஷ் துப்பாக்கி படையினர்தான் இப்படுகொலையை நிகழ்த்தினர்.

..... ... .....

The Mappila Rebellion 1921, GRF Tottenham, Madras Govt Press, 1922: : வடமேற்கே 4 மைல் தொலைவில் பெரும்கும்பல் கூடியது. டோர்செட் ரெஜிமெண்ட், துப்பாக்கி படை, கவச வாகனங்கள் அக்கும்பலை எதிர்கொண்டன. மேல்முறிக்கு மேற்கே உள்ள காட்டிலும் வீடுகளிலும் இருந்த எதிரிகள் வெளியே வந்து சரணடைய மறுத்ததுடன் நமது படைகளுக்கு எதிராக தொடர்ந்தும் உறுதியுடனும் சண்டையிட்டனர். இறுதியில் 246 கிளர்ச்சியாளர்கள் இறந்தனர் என்று படைப்பிரிவின் தலைமை கமாண்டர் மெட்ராஸ் அரசுக்கு 25.10.1921 அன்று அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்.

ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கோணோம்பாற, அதிகாரிகொடி, மேல்முறி முட்டிப்படி, வலியாட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் டோர்செட் ரெஜிமெண்ட் நடத்திய படுகொலை இது. மலப்புரம் நகரில் இருந்து 3 கிமீ தொலைவில் கோழிக்கோடு பாலக்காடு தேசிய  நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள ஊர்கள் இவை.

டோர்செட் ரெஜிமெண்ட்டின் இரண்டாவது பட்டாளத்தில் A, D கம்பெனிகள், கோணோம்பாறயை நோக்கி பீரங்கி குண்டுகள் தாங்கிய கவச வாகனங்களில் வந்து சேர்ந்தனர். Lt.Hevic, Lt.Goff  ஆகியோர் தலைமையில்தான் 246 மாப்பிளா மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அந்த நிகழ்வுக்கு 10 வருடங்கள் பின் பிறந்த நம்பன் குண்ணனின் (மேல்முறி வலியட்டப்படி) வாக்குமூலம் இது: பீரங்கிக்குண்டுகள் பெருத்த சத்தத்துடன் பொழிந்தன. அதன் பின் ராணுவம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. வெளியே வர மறுத்தவர்களை துப்பாக்கியின் கத்தி முனையாலும் பின் கட்டையாலும் குத்தினார்கள், அடித்தார்கள். மஞ்சா, பத்தாயம் போன்ற மரப்பெட்டிகளை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தார்கள். குர் ஆன், சபீனாப்பாட்டு (முகமதுநபியை புகழ்ந்து அரபு மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்), அரபு மொழிப்பாடல்கள், படைப்பாட்டு (போர்ப்பரணிகள்) போன்றவற்றை முற்றத்தில் குவித்து தீயிட்டனர். ஓலைகள், புற்களால் வேயப்பட்ட வீடுகளுக்கு தீயிட்டனர். அதன் பின் ஆண்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றனர். கட்டுப்பட மறுத்தவர்கள், காப்பாற்ற முனைந்தவர்கள், அவர்கள் பெண்கள், குழந்தைகள் ஆயினும் சுட்டுக்கொல்லப்பட்டனர். காலையில் தொடங்கிய படுகொலை நண்பகலில் படைத்தளபதி எழுப்பிய நீண்ட விசில் ஒலிக்கும் வரை நீண்டது. அவ்வாறு விசில் ஒலித்தபோது துப்பாக்கியின் முனை சாலத்தில் கல்லடித்தோடி மொய்தீன் குட்டி ஹாஜியை குறிவைத்து இருந்தது. துப்பாக்கியின் விசை இழுபடும் முன் அவர் தப்பித்தார். இந்த நிகழ்வை குறிப்பிட்டவர் P T முகம்மது மாஸ்டர், அப்போது அவர் வயது 4 (Nisar Kaderi - Pookottur Yuddhavum Melmuri Operationum, 1921 Churul Nivaranam - Pookkottur Yudha Smaraka Samithi Souvenir, 2007).

246 பேர் சுடப்பட்டனர், சுமார் நூறு வீடுகளுக்கு தீயிட்டனர். சுடப்பட்ட சிலரோ மிக மோசமான காயம்பட்டு இருந்தனர், உயிர் மட்டுமே இருந்தது. இன்னும் பலரோ கவனிக்க ஆளின்றி நான்கு நாட்கள் அங்கேயே கிடந்து செத்து மடிந்தனர். இறந்தவர்கள் எங்கே விழுந்து கிடந்தார்களோ அங்கேயே புதைக்கப்பட்டனர்.

விடுதலைப்போராட்டம் ஆகட்டும், மலபார் கிளர்ச்சி ஆகட்டும், வரலாறுகள் இந்தப் படுகொலைகள் பற்றிப் பேசியதில்லை. ஆனால் கல்லறைகள் இருக்கின்றனவே, அவை நடந்த படுகொலைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளன -  இப்பகுதி மக்களின், பின் வந்த தலைமுறைகளின் நினைவில். வீட்டின் முன்பக்க திடலில் கொல்லப்பட்டவர்கள் அங்கேயே புதைக்கப்பட்டனர். மலப்புரம் கிலாபத் தலைவர் குஞ்சி தங்கள் (மலப்புரத்தின் வலியங்காடியை சேர்ந்தவர்), கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அருகில் உள்ள ஊர்களில், கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் இறந்தவர்களை அடக்கம் செய்தார்கள்.

ஒரே குழியில் பலரையும் அடக்கம் செய்ததும் நடந்தது. ராணுவத்துக்கு பயந்து இரவு நேரங்களில் அடக்கம் செய்தார்கள். ஆண்கள் இல்லாத நிலையில் பெண்களே குழிகள் வெட்டினார்கள். ஒரு புதைகுழி இரண்டு அடி ஆழம் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது. 246 பேர் கொல்லப்பட்டதில் ஒன்பது குழிகளில் அடக்கம் செய்யப்பட்ட 40 பேர்களின் விவரங்கள் நம்மிடம் உள்ளன.

(தொடரும்)

படத்தில்: 246 பேர்களில் 11 பேர் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டனர், இடம் அதிகாரத்தோடி, மேல்முறி. டெக்கான் ஹெரால்ட் 25.10.2018.