சனி, அக்டோபர் 09, 2021

1921 ரயில்பெட்டி கோர மரணங்கள் குறித்த விசாரணை மீது பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவு


1921 மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நவம்பர் மாதத்தில் ரயில்பெட்டியில் அடைத்து எடுத்துச்செல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் 70 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்கள். இக்கோர மரணம் குறித்து தனியே ஒரு பதிவு எழுதியுள்ளேன். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டது, விசாரணை அறிக்கையின் மீது பிரிட்டிஷ் அரசு என்ன முடிவுக்கு வந்தது என்பதை மலபார் துணை கலெக்டராக இருந்த திவான் பகதூர் சி கோபாலன் நாயர் தான் எழுதிய The Moplah Rebellion, 1921 என்ற நூலில் எழுதியுள்ளார். 1923 பதிப்பு. The train tragedy என்ற தலைப்பில் உள்ள எட்டாவது அத்தியாயத்தை இங்கே தமிழில் தருகின்றேன். அரசதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்கு சாதகமான அமைப்பாக இருக்கும் என்பதற்கு பிரிட்டிஷ் அரசின் இந்த நடவடிக்கை மிகச்சிறந்த உதாரணம்.

.... .... .... ....

கிளர்ச்சியின் போக்கில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது: 

"கிளர்ச்சியுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்ட 100 கைதிகள் (97 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள்) 1921 நவம்பர் 19 அன்று திரூரில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். MS&SM ரயில்வே சரக்குப்பெட்டி எண்1711இல் அடைக்கப்பட்டனர். கோழிக்கோட்டில் இருந்து மாலை நேரம் புறப்படும் ரயில் எண் 77இன் பின்னால் அப்பெட்டி இணைக்கப்பட்டது. போத்தனூர் ரயில்நிலையத்துக்கு வந்தபோது அனைத்துகைதிகளும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர். மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இறந்துவிட்டார் கள். உயிர் இருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு எடுத்துச்சென்றனர். இவர்களில் 6 பேர் கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் இறந்தார்கள். 13 பேர் கோயம்புத்தூர் சிவில் மருத்துவமனைக்கும் 25 பேர் மத்திய சிறைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். சிவில் மருத்துவமனைக்கு வந்தவுடன் இருவரும் பிற்பகலில் 4 பேரும் இறந்தார்கள். 26ஆம் தேதி இருவர் இறந்தார்கள். ஆக மொத்தம்70 பேர் இறந்தார்கள்.

மெட்றாஸ் அரசு இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைத்தது. குழுவின் அறிக்கை அடிப்படையில், 1922 ஆகஸ்ட் 30 அன்று இந்திய அரசு கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டது.

சரக்குப்பெட்டியை அத்தகைய ஒரு அவசர நிலையில் பயன்படுத்தியதை கண்டனத்துக்குரியது என்றோ மனிதாபிமானம் அற்ற செயல் என்றோ கூற முடியாது என்று விசாரணைக்குழு கூறுவதை அரசு அங்கீகரிக்கின்றது.

பயணிகள் பயணம் செய்வதற்கான பெட்டி இல்லை என்றாலும் கூட அவை மூடப்பட்ட டிரக்குகள் அல்ல, காற்றோட்டம் உள்ளவை, காற்றுத்துளைகள் மூடப்பட்டு இருக்கவில்லை, போதிய காற்றுத்துளைகள் இருந்தன என்பதால் கணிசமான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டு செல்ல தக்கவைதான்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக இத்தகைய பெட்டிகளை பயன்படுத்துவது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்க கூடாது, மாறாக அதற்கான முறையான விதிகளின் கீழ் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விசாரணைக்குழு கூறுவதையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது. இத்தகைய ஒருமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதாலேயே ராணுவ கமாண்டரை அதற்காக பொறுப்பாக்க முடியாது என்ற முடிவையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது.

கிளர்ச்சியின்போது திரு இவான்ஸ், திரு ஹிட்ச்காக் இருவரும் செய்த பணிகளை இந்திய அரசு பாராட்டுகின்றது. அவர்கள் செய்த பணியின் கடுமையை அரசு உணர்ந்துள்ளது. தகுந்த விதிகளின் கீழேயே  சரக்குப்பெட்டியில் கைதிகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்த இரண்டு அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை என்று அரசாங்கம் பெரிதாக வருத்தப்படவும் முடியாது. ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர், ஒரு சரக்குப்பெட்டியில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கைக்கு தேவையான காற்றோட்டம் அப்பெட்டியில் உள்ளது என்று ஒரு பொறுப்பான அரசு அதிகாரி முடிவு செய்ய வேண்டும் என விதிகளில் சொல்லப்பட்டு இருந்திருந்தால், அநேகமாக உயிரிழப்பு எதுவும் நடந்திருக்காது.

ஹிட்ச்காக், இவான்ஸ் இருவரில் ஆகப்பெரிய பொறுப்பு யாருக்கு இருக்கின்றது என்றால் இவான்சுக்குதான். திரூரில் தொடர்ந்து பொறுப்பில் இருந்தவர் என்ற முறையில், கைதிகளை கொண்டுசெல்வற்கான  ஏற்பாடுகளை கண்காணிப்பதில் இவான்ஸ் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த குறிப்பிட்ட ரயில்பெட்டியை தேர்வு செய்ததற்காக  சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்ஐ குறை சொல்ல முடியாது என்ற கமிட்டியின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில், ரயில்பெட்டியின் பாதுகாப்பு குறித்த பரிசோதனையுடன் அவர் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்க கூடாது, கைதிகளை கொண்டுசெல்வதற்கு தகுதியான ரயில்பெட்டிதான் என்றும் கூட அவர் தன்னளவில் திருப்தி அடைந்து இருக்க வேண்டும்.

பெட்டியில் இருந்து கைதிகள் எழுப்பிய கூச்சல், அவர்கள் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தார்கள் என்பதையே காட்டியது என்று நிரூபிக்க தனிப்பட்ட சாட்சியம் உள்ளது. கைதிகளின் பெருங்கூச்சலுக்கான சரியான காரணம் இன்னதுதான் என்று மிக உறுதியாக சொல்லமுடியவில்லை என்று கமிட்டி சொல்கின்றது. ஆனால் காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் கைதிகள் எழுப்பிய பெரும் ஓலம், சார்ஜென்டின், அவரது பாதுகாவலரின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. இந்த முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் என்பவர், வேண்டுமென்றேதான் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டார் என்று சொல்வதற்கில்லை என்ற கமிட்டியின் கருத்தில் இருந்து அரசு மாறுபடவில்லை. ஆனால் பெட்டியில் இருந்து கிளம்பிய பெருங்கூச்சலை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதற்கான காரணத்தை தெரிய முற்படாமல் அலட்சியம் செய்தது என்பது அசாதாரணமான ஒன்று,  தெரிந்தேதான் சார்ஜெண்ட் இத்தகைய தவறை செய்தார் என்ற கமிட்டியின் சொற்களை அரசு கவனத்தில் கொள்கின்றது. நடந்தவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு உள்ளூர் மொழியை நன்கு அறிந்துஇருந்த தலைமை காவலரும் பிற காவலர்களும் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்சிடம் தெரிவிக்க தவறியதால் மேற்படி கண்டனத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் மீதான விசாரணைக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என இந்திய அரசு மெட்றாஸ் அரசுக்கு அறிவுறுத்துகிறது. கமிட்டியின் மேற்கண்ட கண்டறிதல்களின் அடிப்படையில், தலைமைக்காவலர், பிற காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும். (மெட்ராஸ் மெய்ல்).

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், பிற காவலர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது, ஆனால் பின்னர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட னர்.

இறந்த 70 கைதிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 ரூபாய்  இழப்பீடு வழங்க மெட்ராஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. (ஆணை எண் 290, 1.4.1922)

கருத்துகள் இல்லை: