Maddy என்னும் நண்பர் historic alleys என்ற தன் வலைப்பூவில் (blog), 1921 நவம்பர் மாதம் மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்த ரயில்பெட்டி கோர மரணம் குறித்து நுட்பமான தகவல்கள் அடிப்படையில் விரிவாக எழுதியுள்ளார் (The tragedy in wagon 1711 - a complete picture). அதன் தமிழாக்கத்தை இங்கே தருகின்றேன்.
... ....
இதுவரையிலும் செய்தியேடுகளிலும் வெளிவந்த பலவிதமான தகவல்களும் உண்மைக்கு வெகுதொலைவில் இருப்பவை, முழுமையாநத்தம் அல்ல. இப்போது என்னிடம் ரயில்பெட்டி கோர மரண நிகழ்வு குறித்து போதிய தகவல்கள் உள்ளன என்பதால் அவற்றை முழுமையாக பதிவு செய்கின்றேன்.
மலப்புரத்தில் கைது செய்யப்பட்ட பெருமளவு கைதிகளுக்கு ராணுவ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. மலபாரின் சிறைகள் கொள்ளளவுக்கு மேலும் நிரம்பி வழிந்தன என்பதாலும் திரூரிலேயே அவர்களை சிறைவைக்க முடியாது என்பதாலும் கோயம்புத்தூர், வேலூர், பெல்லாரி சிறைகளுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கர்னல் Humphreys, காவல்துறை கண்காணிப்பாளர் Hitchcock, F B Evans ஆகியோருக்கு இப்பொறுப்பு தரப்பட்டது. ரயில் எண் 77 கோழிக்கோடு -மெட்ராஸ் பாசஞ்சர், 1921 நவம்பர் 19 அன்று ஒரு கோர நிகழ்வை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. நவம்பர்19 மாலை MS & SM சரக்குப்பெட்டி எண் 1711 அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. 100 கைதிகள் (97 முஸ்லிம்கள், 3 இந்துக்கள்) அந்த சரக்குப்பெட்டியில் ஏற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் கருவம்பலம், புலமாந்தோல் பகுதிகளை சேர்ந்தவர்கள். இக்கூடுதல் பெட்டி திரூரில் இருந்து (கர்நாடகாவின்) பெல்லாரிக்கு கைதிகளை கொண்டு செல்ல வரவழைக்கப்பட்டது. தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் அவ்வாறே பெட்டி எண் 1711ஐ ரயில் எண் 77உடன் இணைத்தார்கள். கோழிகோட்டில் இருந்து திரூருக்கு மாலை 6.45க்கு ரயில் வந்து சேர்ந்தது. சரக்குப்பெட்டியில் இருந்த பொருட்கள் கீழே இறக்கப்பட்டு சுத்தமாக்கப் பட்டன, நோய்ப்பரவல் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
அந்த பெட்டிக்கு போலீஸ்காரர்கள்தான் காவலாக சென்றிருக்க வேண்டும். கைதிகளை கோழிகோட்டில் இருந்து கண்ணூருக்கு கொண்டுசெல்லும் போது எப்போதும் அதுதான் நடைமுறை. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. (காங்கிரஸ் கட்சியின் கே கேளப்பனின் அனுபவம் அது, அப்படிப்பட்ட ஒரு ரயில் பயண அனுபவம் அவருக்கு இருந்தது, ஆனால் அவர் பயணித்த பெட்டியின் கதவு திறந்து இருந்தது, ஒரு போலீஸ்காரரும் காவல் இருந்தாராம்). மொயாரத் Moyarath சொல்கின்றார்: இதுபோ பயணங்களில் சாவு என்பது பொதுவாக நடப்பதுதான். இப்படிப்பட்ட ரயில்களும் பெட்டிகளும் மலபாரின் ரயில் நிலையங்களை கடந்து செல்லும்போது பொதுமக்கள் அவற்றை கடும்பீதியுடன்தான் பார்ப்பார்களாம். மூடப்படாத ரயில்பெட்டிகள்தான் கடந்தகாலத்தில் பயன்படுத்தபட்டன என்று மாதவன் நாயர் சொல்கின்றார். ஆனால் பின்னர் நடந்த விசாரணையின் போது ஹிட்ச்காக் அளித்த வாக்குமூலத்தில், "இந்த முறை நவம்பர் 20 அன்று அவ்வாறு செய்து இருந்தால் அது தவறில் முடிந்திருக்கும். திறந்த பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்த கிளர்ச்சியாளர்களை பொதுமக்கள் பார்த்து இருந்தால், அப்போது நிலவிய சூழ்நிலையின் பின்னணியில் ஆவேசம் கொண்டு திரண்டு கைதிகளை காப்பாற்ற முனைந்திருப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு இவ்வாறு கைதிகளை கொண்டுசெல்ல பயன்படுத்த ப்பட்ட பெட்டிகள் உண்மையில் கால்நடைகளை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டவைதான். ஹிட்ச்காக்கின் கருத்து என்னவெனில் நவம்பர் 21 அன்று பயன்படுத்தப்பட்ட ரயில்பெட்டி பாதுகாப்பானது என்பதே. Alfred Emanuel தான் எழுதிய New Outlook இல், 'அந்த ரயில்பெட்டிக்கு புத்தம் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்ததால் மிகச்சிறிய துளைகள் கூட அடைக்கப்பட்டு காற்று உள்ளே வருவது தடுக்கப்பட்டுவிட்டது' என்று சொல்கின்றார்! (பக்கம் 698). (இதற்கு முன் இப்படி கராச்சி ராணுவ ரயில்வண்டி ஒன்றில் இதேபோல ஆங்கிலேய படைவீரர்களை அனுப்பியபோது பலர் இறந்துபோன கசப்பான வரலாறு பிரிட்டிஷாருக்கு உண்டு!)
ரிசர்வ் போலீஸ் சார்ஜெண்ட் AH Andrews, தலைமைக்காவலர் O கோபாலன் நாயர், கான்ஸ்டபிள்கள் P நாராயண நாயர், K ராமன் நம்பியார், I Ryru, N T குஞ்ஞாம்பு, P கோரோடுண்ணி நாயர் ஆகியோர் இந்த ரயிலில் பாதுகாப்புக்காக சென்றவர்கள். சரக்குப்பெட்டி 1711இன் பின்னால் இருந்த பெட்டியில் தலைமைக்காவலரும் பிற காவலர்களும் பயணிக்க, ரயில் என்ஜினின் பின்னால் இருந்த இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டியில் சார்ஜெண்ட் பயணித்தார். அனைத்துக் கைதிகளையும் பெட்டியினுள் அடைத்தபின் கதவை வெளிப்புறம் தாழிட்டு தாழ்ப்பாளை ஒரு கம்பியாலும் கட்டினார்கள்.
மாலை 7 மணிக்கு ரயில் புறப்பட்டது. சோரனூர் ரயில்நிலையத்தில் அரை மணி நேரமும் ஒலவக்கோட்டில் கால் மணி நேரமும் ரயில் நின்றது. பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் அடுத்த பிளாட்பாரத்துக்கு வந்தபோது ரயில்பெட்டிக்குள் இருந்த கைதிகள் கத்தி கதறி கூச்சல் இட்டதை அவர்கள் கேட்டிருப்பார்கள். கதவை திறந்து காற்றோட்டத்துக்கு வழி செய்து குடிநீரும் கொடுத்திருந்தால் உயிருக்கு போராடிய கைதிகளை காப்பாற்றியிருக்க முடியும். இவ்வாறு ரயில் சென்ற வழியில் இருந்த அனைத்து நிலையங்களிலும் பெட்டிக்குள் இருந்து வந்த பெரும் கதறலை பலரும் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத காவலர்கள், போதனூரில் மட்டுமே கதவைத் திறப்பது என்று உறுதியாக இருந்துள்ளார்கள். திரூரில் இருந்து ஏறத்தாழ 111 மைல்கள் தொலைவில் உள்ளது போதனூர்.
மரணத்தின் பின் நடந்த விசாரணையில், செருவண்ணத்தூரில் ரயில் நின்றபின் கைதிகள் தண்ணீர் கேட்டு அலறியதை தன் காதால் கேட்டதாக சார்ஜெண்ட் சொல்லியிருக்கிறார். ஆனால் நேரம் கடந்து போனதால் கைதிகளின் கதறலை அவர் பொருட்படுத்தவில்லை. அதேபோல் ஒலவகோடு உள்ளிட்ட பல ரயில்நிலையங்களிலும் கைதிகளின் கதறலை காதால் கேட்டதாக பலர் சாட்சியம் அளித்தனர். காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடித்தவித்த அக்கைதிகள் பித்துப்பிடித்து புத்தி பேதலித்த நிலையில் இருந்ததாக சொல்கின்றார்கள்.
"கைதிகளுக்கு குடிநீர் வழங்குவதை இரக்கத்தின்பால் செய்யலாமே தவிர சட்டத்தில் அப்படி ஒன்றும் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சோரனூரிலோ ஒலவகோட்டிலோ கைதிகள் மீது இரக்கம் கொண்டு சார்ஜெண்ட் கதவை திறந்திருப்பார் எனில் கைதிகள் கோபம்கொண்டு ரயில்நிலையத்தை சூறையாடி இருப்பார்கள், அப்பாவி மக்களை படுகொலை செய்திருப்பார்கள். அவ்வாறு நடந்திருக்கும் எனில், காவலர்கள் தம் கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக தண்டனை பெற்றிருப்பார்கள்" என சென்னை குற்றப்புலனாய்வு துணை கண்காணிப்பாளர் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்தார்.
போதனூர் ரயில்நிலையத்துக்கு நள்ளிரவு, அதாவது அதிகாலை 1230 மணிக்கு ரயில்வந்து நின்றபோது, அதே ரயிலில் வந்த ஒரு பயணி குறிப்பிட்ட ரயில்பெட்டியில் இருந்து கதறல்கள் கேட்பதாக பெருங்கூச்சலிட்ட பிறகே சரக்குப்பெட்டியின் கதவு திறக்கப்பட்டது. அங்கே அதிகாரிகள் கண்டதென்ன? அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் மயக்கமுற்றுக் கீழே கிடந்தார்கள், பலர் ஏற்கனவே உயிரை இழந்திருந்தார்கள்.மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இழந்துகிடந்தார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர், கொண்டுசென்றபின் 2, பிற்பகலில் 4, 26ஆம்தேதி 2, ஆக மொத்தம் 70 பேர் இறந்துபோனார்கள்.
இறந்தவர்களின் உடலோடு அந்த சரக்குரயில்பெட்டி மீண்டும் திரூருக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் காலை மீதியிருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு கொண்டு சென்றார்கள். ரயில்வே பிளாட்பாரத்தில் 6 பேர் இறந்தனர். கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு 25 பேரை அனுப்பினார்கள். பொது மருத்துவமனையை அடையும் முன் 2 பேர் இறந்தனர். பிற்பகலில் 4 பேர் இறந்தனர். 26.11.1921 அன்று இருவர் இறந்தனர்.
நான் (Maddy) கூறுவது சரி எனில், தி ஹிந்து நாளிதழின் செய்தியாளர்தான் இச்செய்தியை கோயம்புத்தூரில் இருந்து முதலில் வெளியே தெரிவித்தார். நவம்பர் 22ஆம் தேதி காலை இக்கோரமரணம் பற்றி உலகுக்கு வெளியே சொன்னவர் அவர்தான்.
Moyarath கூறுவது என்ன? கோழிக்கோட்டை சேர்ந்த மஞ்சேரி ராம ஐயர் என்பவரின் வற்புறுத்தலால்தான் போதனூரில் ரயில்பெட்டி திறக்கப்பட்டது. உயிருடன் இருந்தவர்களுக்கு கோயம்புத்தூரில் சிகிச்சை அளித்த மருத்துவர் டாக்டர் T ராமன். (ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் வலைப்பூவில் இது குறித்து Maddy எழுதிய கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பிரேம்நாத் முர்கோத் என்ற நண்பர், அந்த டாக்டர் T ராமன் தன் தாத்தா என்றும் 1895இல் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார் என்றும் பதிவு செய்துள்ளார். தன் தாத்தாவின் புகைப்படம், அவர் பெற்ற பட்டத்தின் நகல் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளார். அவற்றை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.
ரயில்பெட்டியில் இருந்து உயிருடன் மீண்ட ஒருவரின் வாக்குமூலம் இது: பெட்டிக்குள் இருந்த அனைவரும் வியர்வையில் நனைந்தோம். காற்று இல்லாததால் சுவாசிக்க முடியவில்லை. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் எங்கள் துணியில் ஊறிய வியர்வையை பிழிந்து குடித்தோம். பெட்டியின் கதவில் இருந்த சிறுதுவாரங்களும் கூட அடைக்கப்பட்டு இருந்ததால் காற்று வரவில்லை. கதவை உடைக்க முயற்சித்தோம், முடியவில்லை.
பிரம்மதத்தன் நம்பூதிரி தன் நூலில் சொல்கின்றார்: இரண்டு கைதிகளுக்கு ஒரு விலங்கு என பூட்டியிருந்தனர். சாவின் பிடியில் சிக்கி மனம் பேதலித்த அவர்கள், ஒருவரை ஒருவர் நகத்தால் கீறியும் கடித்தும் தாக்கியும் இருந்தார்கள் என்பதை இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் சொன்னன.
MPS மேனன் எழுதிய MP நாராயண மேனன் என்ற நூலும் கான்ராட் உட் எழுதிய நூலும் பின்வரும் தகவலை தருகின்றன: 70 பேர்களில் 32 பேர் கூலிகள், 19 பேர் விவசாய தொழிலாளர்கள், 4 பேர் குர் ஆன் போதிப்பவர்கள், 2 பேர் தேனீர்கடைக்காரர்கள், 2 பேர் மசூதி ஊழியர்கள், 2 பேர் மத போதகர்கள், 2 பேர் சிறு வணிகர்கள், 2 பேர் வணிகர்கள், 1 மர வணிகர், 1 பொற்கொல்லர், 1 தச்சுத்தொழிலாளி, 1 முடித்திருத்திருத்துபவர். இவர்களில் 67 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள். 10 பேர் ஓரளவு வசதியான நிலவுடைமையாளர்கள்.
B C Scott அப்போது தென்னிந்திய ரயில்வே ஏஜென்ட் ஆக இருந்தவர். இந்த சரக்குப்பெட்டிகளை ரயில்வே அதிகாரிகளின் சம்மதத்துடன்தான் திரூருக்கு அனுப்பினார்களா என்று விசாரணை செய்தார். கைதிகளை கொண்டுசெல்ல சரக்குப்பெட்டிகளை பயன்படுத்தியதை மாவட்ட போக்குவரத்து கண்காணிப்பாளர் அறிவார் என்று தெரிந்தது. A R Knapp என்பவர் தலைமையில் இந்த கோர மரணத்தை விசாரிக்க மெட்ராஸ் அரசு விசாரணைக்குழு அமைத்தது. மேலும் இந்திய தண்டனை சட்டங்கள் பிரிவு 304A, இந்திய ரயில்வே சட்டம் பிரிவு, 1890 ஆகியவற்றின் கீழ் சார்ஜெண்ட் Andrews மீதும் பிற காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு மெட்ராஸ் அரசு உத்தரவிட்டது. அரசு நிர்வாகம், தொடக்கத்தில் இந்த விவகாரத்தை அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இக்கோர மரணங்கள் யாவும் 'சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்தவை, யாரையும் இதற்கு பொறுப்பாக்க முடியாது' என்றே சொன்னது. 'மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள்' என கோயம்புத்தூர் மருத்துவமனை அதிகாரி உறுதி செய்தார். ஆனால் 'வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள்' என்று திசைதிருப்ப அரசு முயன்றது. ஆனால் கோயம்புத்தூர் ராணுவசட்டத்தின் கீழ் இல்லாமல் இருந்ததால் இந்த கோரமரணம் பற்றிய செய்தி மக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பரவிவிட்டது.
விசாரணைக்குழுவின் முதல் அமர்வு கோயம்புத்தூரில் 28.11.1921 அன்று நடந்தது. உயிருடன் மீண்டவர்களின் வாக்குமூலங்களை இக்குழு கவனமாக பதிவு செய்தது. 34 சாட்சிகளை விசாரித்தது. பெட்டியில் அடைக்கப்பட்டவர்கள் பெருங்கூச்சலிட்டனர் என்பதை குழு ஒத்துக்கொண்டது. பின்னர் கோயம்புத்தூர் மாவட்ட மாஜிஸ்திரேட் H L Braidwood தலைமையில் விசாரணை நடந்தது. மெட்றாசின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்க்காகவும் குற்றம் சாட்டப்பட்ட பிறருக்காகவும் வாதாடினார்கள். இதற்கு முன் ஒன்பது முறை இதே போன்ற சரக்குப்பெட்டிகளில் கைதிகளை கொண்டுசென்ற அனுபவம் உள்ளவர் அவர், அப்போது இதுபோன்ற துயரங்கள் நிகழ்ந்தது இல்லை என்று வாதிட்டனர்.
ஐரோப்பிய ஆசியர் ஒருவரின் (கொதிகலன்களை உருவாக்குபவர்) வாக்குமூலத்தின்படி, சோரனூர் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் அவர் நின்றுகொண்டு இருந்தபோது மூடப்பட்ட ரயில்பெட்டியினுள் இருந்து 'வெள்ளம் வெள்ளம்' (தண்ணீர் தண்ணீர்) என்று கூக்குரல்கள் வந்தன. மற்றொருவர், 'நாங்கள் செத்துக்கொண்டு இருக்கின்றோம்' என்று ரயில்பெட்டியினுள் இருந்து குரல்களை கேட்டதாக சொன்னார்.
Robert Hardgrave: மூச்சுத்திணறல்தான் இந்த சாவுகளுக்கு முக்கிய காரணம், கூடவே வெப்பமும் சேர்ந்து கொண்டது என்று விசாரணை குழு முடிவு செய்தது. ரயில்பெட்டியை சோதனை செய்தபோது, கதவின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த காற்றுத்துளைகள் உட்புறமாக மூடப்பட்டிருந்ததும் அதன் மீது பூசப்பட்டு இருந்ததால் படிந்த தூசியும் சேர்ந்து ஒரு துளி காற்றும் உள்ளே வராமல் அடைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பெட்டி ஒரு காற்றுப்புகாத அறை ஆனது. தங்கள் பணியை முறையாக செய்யாத அரசு ஊழியர்களால் இந்த கோரமரணம் நேர்ந்தது என்றாலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள். Lord Willington 1922இல் சமர்ப்பித்த விசாரணைக்குழு அறிக்கையில் குற்றம் செய்தவர்களின் பெயரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் பரிந்துரையும் இருந்தன.
(இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை மீது பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் என்ன முடிவுக்கு வந்தது, என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை, அன்றைய கோழிக்கோடு டெபுடி கலெக்டர் ஆக இருந்த திவான் பகதூர் C Gopalan Nair தனது The Moplah Rebellion, 1921 என்ற நூலில் (1923 பதிப்பு) சொல்லியிருக்கிறார். அதனை அடுத்த பதிவில் தனியே மொழியாக்கம் செய்து பதிவேன்).
புகைப்படம்: திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கோர மரணத்தை நினைவுகூரும் ஓவியத்தை ரயில்வே துறை வரைய முடிவு செய்தது. ரயில்வேயின் அழைப்பின் பேரில் ஓவியர் பிரேம்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓவியத்தை வரைந்தார். வலதுசாரி சங்கிகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவ்வோவியத்தை ரயில்வே துறை அழிந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வின்போது, திரூர் பேருந்து நிலையத்தில் இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஓவியர் பிரேம்குமாரும் ஹர்ஷாவும் மக்கள் மத்தியில் வரைந்த ஓவியங்கள் இவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக