திங்கள், அக்டோபர் 19, 2020

ஹரித்வார் கங்கை நீராடலும் மானசதேவி கோவிலில் என் வேண்டுதலும்



 யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே

கண்ணன் போவதெங்கே?

கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே

மன்னன் போவதெங்கே?

 

1973இல் கவுரவம் படத்தில் வக்கீல் கண்ணன் என்ற சிவாஜி கணேசன் உஷா நந்தினியுடன் பாடினார், எஸ் பி பியின் அழகிய ஆர்ப்பாட்டம் அற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு ஆறு வருடம் சென்றது. தமிழின் மிக அழகிய நாயகிகளில் ஒருவரான ஸ்ரீவித்யாவுடன் அவரே

கங்கை யமுனை இங்குதான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

அங்கயற்கண் மங்கள நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்

என்று அலஹாபாத்தில் பாடினார்.

 கண்ணதாசன் தெரிந்து எழுதினாரா தெரியாமலேயே எழுதினாரா, தெரியவில்லை, ஸ்ரீவித்யா அழகிய அங்கயற்கண்ணிதான். மதுரையில் நான் படித்த காலத்தில் வந்த படங்கள்.

சிவனுக்கும் மீனாட்சிக்கும் (அல்லது பார்வதிக்கும்) நான் நெருங்கிய நண்பன். பிறந்த ஊரான தென்காசி, காசி விஸ்வநாதருக்கும் அவர் உடனுறை உலகம்மைக்கும் கோவில் கொண்ட ஊர். 13ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் கட்டிய கோவில் இது. திராவிடக் கட்டிடக்கலை. தென்காசி என்றால் குற்றால நீராடலும் நூறாண்டு கடந்த கிருஷ்ணவிலாசின் கோதுமை அல்வாவும் ஒட்டிபிறந்த மூன்று பிள்ளைகள். தென்காசி கோவிலின் சிற்பங்கள் மிக மிக அழகானவை, அதிலும் அந்த மன்மதன் ரதி சிற்பத்தை ஒரு நாள் முழுவதும் ரசிக்கலாம், மறுநாளும் ரசிக்கலாம்.


படித்த ஊரான மதுரையில் கோவில் கொண்டுள்ள சுந்தரேஸ்வரரின் நாயகியான மீனாட்சியம்மனின் பல பெயர்களில் அங்கயற்கண்ணி என்பதும் ஒன்று. மதுரையை அழிக்க வருணன் பெருமழையை ஏவி விட, மிரண்டு போன பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட, சடையன் ஆன சிவன் தன் சடையை விரித்து அதிலிருந்து நான்கு மேகங்களை விடுவிக்க, அவை நான்கு மாடங்களாகக்கூடி நின்று மதுரையைக் காத்ததால் அது நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்பட்டதாக பரஞ்சோதி முனிவர் சொல்கின்றார். சடையப்பன் ஆன சிவன் இதே போல் இன்னொரு முறையும் சடையை அவிழ்த்த கதையையும், எப்படி நான் மீண்டும் சடையுடன் 'சங்கமம்' ஆனேன் என்பதையும் கீழே சொல்கின்றேன்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைநகரான மசூரி குறித்தும், நண்பர்களுடன் அங்கே சென்றிருந்த போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் ரஷ்கின் பாண்டை சந்திக்காமல் வந்த மனக்குறை குறித்தும் ஒரு பதிவு எழுதினேன். மிக மிக அழகிய அமைதியான ஊர் அது. ஊர் திரும்ப டேராடூனில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வர வேண்டும். நேரம் நிறைய இருந்ததால் ஹரித்வார் சென்று கங்கையில் குளிக்க திட்டமிட்டோம். டேராடூன் ரயில் நிலையத்தில் பெட்டிகளை போட்டுவிட்டு பேருந்து பிடித்து ஹரித்வார் சென்றோம்.

மசூரி இமயத்தின் கார்வாலி மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்துள்ளது. மசூரியின் உச்சியில் அமைந்துள்ள லால் டிப்பா என்ற சிறிய வீட்டின் மாடியில் உள்ள பழமையான ஜப்பானிய தொலைநோக்கி மூலம் பார்த்தால் 200 கி.மி. தொலைவில் உள்ள இமயத்தின் இரு சிகரங்களை மட்டும் இன்றி கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவற்றையும் பார்க்கலாம். கங்கோத்திரி என்பது கங்கை பிறக்கும் இடம். சரியாக சொன்னால் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ளது, பாகீரதிதான் கங்கையின் தாய். ஆனால் அலாக்நந்தா நதியின் நீளத்தை கணக்கில் கொண்டால் அதுதான் கங்கையின் தாய் என்று விஞ்ஞானம் சொல்கின்றது. கார்வாலி மலைத்தொடரின் பல நதிகள் அலாக்நந்தாவுடன் வெவ்வேறு இடங்களில் சங்கமிக்கின்றன. விஷ்ணு பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை, இறுதியாக பாகீரதி நதி தேவ பிரயாகை என்னும் இடத்தில் அலாக்நந்தா நதியுடன் சங்கமிக்க, அந்த இடமே கங்கையின் பிறப்பிடம் ஆகின்றது.

புராணம் என்ன சொல்கின்றது? சிவன் தன் தலையில் இருந்த தேவி கங்கையை விடுக்கின்றான், அதுவே கங்கோத்திரி, 3100 மீட்டர் உயரத்தில் இமயத்தில் பிறந்து கோமுகியில் புறப்பட்டு 257 கி.மீ. பயணித்து, காடு மலை கழனி என்று உருண்டும் புரண்டும் நடந்தும் ஓடியும் தன் தீரத்தின் முதல் நுழைவாயில் ஆன ஹரித்துவார் வந்து சேர்கின்றாள் தேவி கங்கை. இந்த நகரின் பழைய பெயர் கங்காத்வாரா. இந்துமதத்தின் ஏழு புண்ணியத்தலங்களில் ஹரித்வார் ஒன்று. மற்றவை அயோத்தியா, மதுரா, காசி, காஞ்சிபுரம், அவந்திக்கா, துவாரகா. வடக்கில் உள்ள காசி என்ற பனாரசுக்கு இணையான புண்ணியத்தலமே தெற்கில் உள்ள தென்காசி.

இங்கேதான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடக்கும். நாங்கள் ஹரித்வார் ரயில் நிலையத்தை பார்த்தபோது இந்த சீசனின் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது போல 15க்கும் மேற்பட்ட டிக்கெட் கவுண்டர்களை பார்க்க முடிந்தது. நாங்கள் பார்க்கும்போது புதர் மண்டிக்கிடந்தன. கும்பமேளாவின் தலைசுற்ற வைக்கும் கூட்டத்தை டிவியில் பார்க்கும்போது, உண்மையில் அத்தனை லட்சம் மக்களும் நிர்வாண சாமியார்களும் டிக்கெட் வாங்கி இருந்தால் அந்த ஸ்டேஷன் தாங்கி இருக்குமா என்ற சந்தேகமே வந்தது. தவிர, In the company of women என்ற குஷ்வந்த் சிங்கின் நாவலின் நாயகன் நினைவுக்கு வந்தான். மணமான அவன் மனைவியை தவிர பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திரிவான். புனித நகரான ஹரித்வாருக்கு வந்து அங்கும் ஒரு பெண்ணுடன் கொட்டம் அடிப்பான். இறுதியில் பால்வினை நோய் தாக்கி சாவான்.

கங்கோத்திரியின் கதை இதுவெனில், 3293 மீட்டர் உயரத்தில் இமயத்தில் பிறந்து வருகின்றாள் யமுனை. இவள் விஷ்ணுவின் மனைவி, அவள் சிவனின் மனைவி. பத்ரி என்ற சிவனின் வாசஸ்தலமான பத்ரிநாத்துக்கும், கேதார் என்ற விஷ்ணுவின் வாசஸ்தலமான கேதார்நாத்துக்கும் புனித யாத்திரையை தொடங்குபவர்கள் ஹரித்வாரில் இருந்துதான் தொடங்குகின்றார்கள். எனவே இந்த ஊர் ஹர்த்வார் என்றும் அழைக்கப்படுகின்றது. ஹரி என்றால் விஷ்ணு, ஹரன் என்றால் சிவன்.

 

செப்டம்பர் மாதத்தின் நல்ல மதிய நேரத்தில் நாங்கள் சென்றபோது இரண்டு படிகளே மேலே தெரிய அலை புரண்டு சுழித்து கங்கை ஓடிக்கொண்டு இருந்த காட்சியை என்ன சொல்ல! தூய்மையான நீர்! கங்கையின் முதல் தீரம் அல்லவா! காசியை பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் தூய்மையான கங்கையை இங்கே கண்டபோது மனம் ஆனந்தத்தில் குளித்து மூழ்கியது. கருடன் தன் கும்பத்தில் அமிர்தத்தை ஏந்தி பறந்துவந்தபோது உஜ்ஜயினி, நாசிக், அலஹாபாத், ஹரித்வார் ஆகிய நான்கு இடங்களில் அமிர்தத்துளிகள் சிதறி விழுந்ததாம். ஹர் கி பவுரி என்ற இடத்தில் உள்ள பிரம்மகுண்டம்தான் இங்கே துளிகள் சிந்திய இடம், அதுவே ஹரித்வாரின் மிகப்புனிதமான படித்துறை. பாதுகாப்பு கருதி சங்கிலி கட்டி உள்ளார்கள், சங்கிலியைப் பிடித்துக்கொண்டு கங்கையில் இறங்கினோம், சடையுடன் சங்கமம் ஆனேன். கங்கையின் நீரை உளமாரக் குடித்தேன். உடலால் களித்தேன். குற்றாலமும் வைகையும் கங்கையும் என்னால் அங்கே ஒன்றாக சங்கமம் ஆகின. நீரில் மூழ்கும்போது ....இங்குதான் சங்கமம் என்று கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் பாடியது காதில் கேட்டது. புட்டிகளிலும் ஜெரி கேன்களிலும் கங்கை நீரை நிரப்பி மக்கள் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். உறவுகளுக்கு வழங்குகின்றனர். ஹஜ் பயணம் நிறைவு செய்து திரும்புபவர்கள் கொண்டு வரும் ஜம்ஜம் நீர் நினைவுக்கு வந்தது. தனது கீதத்தில் நதிகளை ஏன் கவியரசர் ரவீந்திரர் உயரத்தில் வைத்துப் போற்றினார் என்பது புரிந்தது. நதிகள் யாருக்கும் வஞ்சகம் செய்வதில்லை, உனக்கு கையளவுதான், உனக்கு கடலளவு என்று பேதம் பார்ப்பதில்லை. பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே... என்று கன்னடத்துக் குடகில் பிறந்து தஞ்சையை வாழ்விக்கும் காவிரியைப் பாடிய சீர்காழியின் குரல் ஹரித்வாரின் கரையில் எனக்கு கேட்டது. திடீரென ஒருவர் ஒரு பெரிய மூட்டையை கொண்டுவந்து அவிழ்த்த போது அது இறந்துபோன அவரது உறவுகளின் சாம்பல் என்று அறிந்து அதிர்ந்து கரை ஏறினேன்.

..... ..... ....

குளித்து உடை மாற்றி 178 மீட்டர் உயரே மலை மேல் இருந்த மானஸ தேவி கோவிலுக்கு கேபிள் காரில் சென்றோம். சிவனின் மனதில் உதித்த தேவி மானஸ தேவி. மானஸ என்றால் நம் விருப்பம் என்று பொருள். விரும்பியதை வேண்டினால் மானஸ தேவி நிறைவேற்றி வைப்பாள்.

 இது வில்வ தீர்த்தம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி. வில்வம் மன அழுத்தத்தை போக்கக் கூடிய அருமருந்து. வில்வ மரத்திடம் நாம் வேண்டியதை கேட்க அது சிவனிடத்தில் முறையிட்டு அதை தீர்க்கும், நிறைவேற்றும் என்பது நம்பிக்கை. வில்வத்தின் இலை, பட்டை, பழம், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

2014 தொடங்கி இந்த தேசம் கொடிய மனநோயாளிகளிடம் சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆகி வருகின்றது, மானஸ தேவியும் ஹரியும் ஹரனும் கைகோர்த்து இவர்கள் மன நோயை குணமாக்கி தேசத்தையும் இவர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தேவியிடம் வேண்டிக்கொண்டு மலை இறங்கினோம்.

 

செவ்வாய், ஜூன் 23, 2020

"மரணம் கொண்டாடப்பட வேண்டியது". எப்போது?

அகிரா குரோசாவாவின் Village of the watermills என்ற குறும்படம் குறித்த சில சிந்தனைகள். The Dreams என்ற அவரது கனவுகள் பற்றி அவர் இயக்கிய சில குறும்படங்களின் தொகுப்பில் ஒன்றுதான் நீராலைக்கிராமம். 

இக்கிராமத்துக்கு நம் கதைசொல்லி வருகின்றான். எங்கு நோக்கிலும் மரம் செடி கொடி பூக்கள், அமைதியாக புரண்டு ஓடும் ஆறு, மரத்தில் ஆன வீடுகள், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நீராலை என இந்த உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட ஓர் கிராமமாக இருக்கின்றது. நகர வாழ்க்கையின் அடையாளம் துரும்புக்கும் இல்லை. இயற்கை அழகு எங்கு திரும்பினாலும் கொட்டிக்கிடக்கின்றது. 

கதைசொல்லி ஆற்றின் குறுக்கே உள்ள சிறிய மரப்பாலத்தை கடந்து வரும்போது  குழந்தைகள் அவனுக்கு வணக்கம் சொல்கின்றனர். அங்கே உள்ள சிறிய கல்லின் மீது சிறுகுழந்தைகள் பூக்களை பறித்து வைத்து செல்வதைப் பார்க்கின்றான். தொடர்ந்து நடந்து வர ஆற்றின் கரையில் உட்கார்ந்திருக்கும் முதியவர் ஒருவர் மரத்தால் ஆன நீராலைச்சக்கரம் ஒன்றை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் அருகே சென்று வணக்கம் சொல்கின்றான், அவர் தனது வேலையில் கவனமாக இருக்கின்றார், மீண்டும் சொல்லும்போது அவர் பதில் வணக்கம் சொல்கின்றார். அவர் எதிரே இவனும் தரையில் அமர்கின்றான். அவருக்கும் அவனுக்கும் ஆன உரையாடல் தொடங்குகின்றது. முதியவர் தன் வேலையை தொடர்ந்து கொண்டே இருக்க இவன் பேசுகின்றான்.

இந்த கிராமத்துக்கு பெயர் என்ன?

    பெயர் ஏதும் இல்லை. சிலர் நீராலைக்கிராமம் என்று சொல்வார்கள் 

ஆள் நடமாட்டாமே இல்லையே?

    மக்கள் வேறு இடங்களில் இருக்கின்றார்கள்

பக்கத்தில் உள்ள வீட்டினுள் பார்க்கின்றான், ஓர் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருகின்றது.

மின்சாரம் எங்குமே இல்லையே?

  எம் மக்களுக்கு மின்சாரம் தேவையில்லை.  மக்கள் சொகுசு வாழ்க்கைக்கு தம்மை ஒப்புக்கொடுத்து விட்டு உண்மையில் நல்ல பல விசயங்களை இழந்து விட்டார்கள். 

அப்போ வெளிச்சத்துக்கு என்ன செய்றீங்க?

  மெழுகுவர்த்தியோ எண்ணெய் விளக்கோ பயன்படுத்துகின்றோம்

ஆனால் இரவு ரொம்ப இருட்டாக இருக்கே?

  (சற்றே நிதானமாக அவனை நோக்கி) உண்மைதான், அதனால்தான் அது இரவாக இருக்கின்றது. .... பகலைப்போல் இரவும் வெளிச்சமாக இருந்தால் எப்படி? ...நட்சத்திரங்களை பார்க்க முடியுமா? வெளிச்சமான இரவுகளை எனக்கு பிடிக்காது.

டிராக்டர்கள் ஏதும் இல்லையே?

 எங்களுக்கு தேவையில்லை, மாடுகளும் குதிரைகளும் இருக்கின்றன....மரங்களை வெட்ட மாட்டோம், கீழே விழும் மரங்களின் விறகுதான் எங்கள் எரிபொருள், தவிர மாட்டுச்சாணமும் நல்ல எரிபொருள்.

நீண்டு நெடிய வளர்ந்து நிற்கும் பசுமையான மரங்களை பார்க்கின்றான்.  

முதியவர் தொடர்ந்து பேசுகின்றார்.

  மனிதன் எப்படி வாழ்ந்தானோ அப்படி வாழ நாங்கள் முயன்று கொண்டிருக்கின்றோம். அதுவே இயற்கையுடன் இசைந்த வாழ்வு. இயற்கையின் ஒரு பாகமே மனிதன் என்ற உண்மையை மனிதனே மறந்துவிட்டான். அதை மறந்து விட்டு அவனே இயற்கையை அழிக்கின்றான். இயற்கையை விடவும் சிறப்பான ஒன்றை தன்னால் உருவாக்க முடியும் என மனிதன் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கின்றான். குறிப்பாக நம் விஞ்ஞானிகள். அவர்கள் அறிவாளியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் இயற்கையின் இதயத்தை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கண்டுபிடித்த எல்லாம் இறுதியில் மனிதனின் சந்தோஷங்களை பிடுங்கி எறிகின்றனவாகவே உள்ளன. ஆனாலும் என்ன, தமது கண்டுபிடிப்புகளை பற்றி அவர்கள் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றார்கள். ..தங்களை அதிசயப்பிறவிகளாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்கின்றார்கள். இயற்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் அழியப்போவதை உணரவில்லை.  மனிதன் உயிர்வாழ அடிப்படையில் என்ன வேண்டும்? தூய காற்றும் தூய நீரும் அவற்றை பிறப்பிக்கும் மரம் செடிகொடிகளும். ஆனால் எல்லாமே அழிக்கப்படுகின்றது. சூழல் நாசமாக்கப் பட்டுவிட்டது. அசுத்தமான காற்று, அசுத்தமான நீர், விளைவு, மனிதனின் இதயமும் அசுத்தமாகி விட்டது.

சற்றுத்தொலைவில் இசைக்கருவிகள் இசைக்கப்படும் ஒலி கேட்கின்றது.

இன்று திருவிழாவா?

  இல்லை, அது இறுதிச்சடங்கு. என்ன, ஆச்சர்யமாக இருக்கின்றதா? மகிழ்ச்சியான இறுதி ஊர்வலம். கடுமையாக உழை, நீண்ட காலம் வாழ், மற்றவர்கள் உனக்கு நன்றி சொல்வார்கள். ...எமது கிராம மக்கள் நீண்டகாலம் உயிர்வாழ்வார்கள், இருப்பார்கள். இன்று இறந்த பெண்ணுக்கு வயது 99. (எழுகின்றார்) மன்னிக்கவும், நானும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும். .... உன்னிடம் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும், இவளே என் முதல் காதலி. என்ன செய்ய, வேறு ஒருத்தனை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள், நான் நொறுங்கிப் போனேன். முதியவர் வருத்தம் தொனிக்க சிரிக்கின்றார்.

வீட்டுக்குள் சென்று சிவப்பு மேலாடையுடன் வருகின்றார், கையில் ஜல்ஜல் என ஒலிக்கும் ஒரு இசைக்கருவி. 

முகத்தில் வியப்பு பொங்க இவன் கேட்கின்றான், உங்கள் வயது என்ன?

  103. போதும் வாழ்ந்தது. தெரியுமா, வாழ்க்கை கடினமானதுன்னு சொல்வாங்க, அதெல்லாம் சும்மா. உண்மை என்ன? வாழ்வதே சந்தோசம், வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது.

பக்கத்தில் இருந்த செடியில் இருந்து பூக்களைப் பறிக்கின்றார். ஒரு கையில் பூ, மறு கையில் இசைக்கருவியை ஒலித்தபடி நடக்கின்றார். இறுதி ஊர்வலம் பலத்த ஆரவாரத்துடன் மகிழ்ச்சி பொங்கும் இசையுடன் வருகின்றது. முன்னணியில் குழந்தைகள் மலர்தூவியபடி வர பின்னால் வரும் பெரியவர்கள் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடி வருகின்றனர். ஊர்வலத்தை முன்னின்று வரவேற்ற முதியவர் ஆடியபடியே ஊர்வலத்தில் சங்கமிக்கின்றார்.
.......

மிக அற்புதமான இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஒரு கிராமத்தில் படம் நகர்கின்றது. வீடுகளும் நீராலைகளும் மரத்தால் செய்யப்பட்டுள்ளன. அமைதியாக ஓடும் ஆற்றில் கையால் நீரை அள்ள முடியும். பின் எதற்கு நீராலைகள்? மின்சாரமும் ட்ராக்டரும் பெட்ரோலியமும் இன்ன பிற நவீன  வசதிகளும் நமது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப் படுவதற்கு   பல நூறு ஆண்டுகள் முன்னால் நம் முன்னோர்கள் அவர்கள் அறிவைப் பயன்படுத்தி கண்டறிந்த பல கருவிகளின் அடையாளமாக மட்டுமின்றி இப்போதும் இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை மட்டுமே மனித சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதன் குறியீடாக இக்கிராமம் எங்கும் நீராலைகள் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கத்தின் உயிர்ப்பின் பகுதியாகவே தனது கிராம மக்கள் நீண்ட காலம் உயிர்வாழ்வார்கள் என்று முதியவர் சொல்கின்றார். 

16 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படம் உள்ளடக்கத்தில் ஒரு நீண்ட மானுடவியல் படமாக உள்ளது.

ஞாயிறு, ஜூன் 21, 2020

காங்கிரசின் எமெர்ஜென்சியும் ஆர் எஸ் எஸ்-பி ஜே பி நாடகமும்

(விடுதலை பெற்ற இந்தியாவின் இருண்ட காலம் என சொல்லப்படும் அவசரநிலை என்ற எமெர்ஜென்சி 1975 ஜூன் 25 நள்ளிரவில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட து. 45 வருடங்களுக்கு பிறகு இன்றைய ஆர் எஸ் எஸ் கூட்டம் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்து கொண்டு அந்த நாட்களில் தாங்கள் வாளெடுத்து வீசி ஜனநாயகம் காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்ததாக எப்போதும் போல புளுக கூடும். உண்மையில் என்ன செய்தார்கள் என்பதை 25.6.2000 நாளிட்ட தீக்கதிர் நாளிதழில் பதிவு செய்திருந்தேன். அப்பதிவு இங்கே மீண்டும்).


1. 2000 ஜூன் 14ஆம் தேதி தி இந்து நாளிதழில் ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் இருண்ட காலமாகக் கருதப்படும் 1975 அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டதை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் விதமாக பா ஜ கட்சி ஒரு வார கால அவசரநிலை எதிர்ப்பு அனுசரிக்க உள்ளது என்பதே அந்த செய்தி. அது தொடர்பான நிகழ்ச்சிகள் டெல்லி, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் நடத்தப்படுமாம். இதை வாசிக்கின்ற யாரும் பொதுவாக 25 வருடங்களுக்கு முன்பு நடந்த ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரான படுகொலையை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்வது நல்லதுதானே என்று கருதக்கூடும்.

2. 1975 ஜூன் 25 நள்ளிரவில் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு எங்கெங்கோ சிறைகளில் அடைக்கப்பட்ட னர். பத்திரிகை தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த காங்கிரஸ் அல்லாத அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. சிறைகளில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1975 செப்டம்பர் மாத கணக்குப்படியே அறுபதாயிரத்தை தாண்டியதாக தனது 'ஜட்ஜ்மெண்ட்' என்ற நூலில் குல்தீப் நயார் கூறுகின்றார். பல நூறு பேர்கள் சிறைகளில் கொடுமைப் படுத்தப்பட்டு மாண்டனர். பலரது கதி என்னவென்றே தெரியாமல் போனது. 1977 மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இந்திரா காந்தி அத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். மத்தியில் ஜனதா கட்சியின் ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசாக அது அமைந்தது.

3. ஜனதாக்கட்சி ஆட்சி 1980ஆம் ஆண்டு கவிழ்ந்தது. உண்மையில் அந்த ஆட்சி கவிழ்க்கப் பட்டது. சோசலிஸ்டுகளான மது லிமாயே, ராஜ் நாராயண் இருவரும் ஒரு பிரச்னையை கிளம்பினார்கள். "பழைய பாரதீய ஜனசங்க கட்சி (இன்றைய பாரதீய ஜனதா கட்சி)யினர், இப்போது (1977-80 காலக்கட்டத்தில்) ஜனதா கட்சியிலும் உறுப்பினர் ஆக இருக்கின்றார்கள். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ்-இலும் உறுப்பினர் ஆக இருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, அவர்கள் ஆர் எஸ் எஸ் தொடர்பை கைவிட வேண்டும்" என வற்புறுத்த தொடங்கினார்கள். ஜனசங்கத்தினரோ ஆர் எஸ் எஸ் உறவை , அதாவது உறுப்பினர் பதவியை துறக்க முடியாது என்று உறுதியாக நின்றார்கள். விளைவாக மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்தது. அதாவது இவர்கள் கவிழ்த்தார்கள். 1980இல் பாரதீய ஜனசங்க புட்டிக்கு பாரதீய ஜனதா கட்சி என லேபிள் ஒட்டப்பட்டது. மிதவாதியாக மக்களுக்கு காட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் அதன் தலைவராக ஆக்கப்பட்டார்.

4. இங்கே ஒரு விசயம் ஊன்றிக்கவனிக்கப்பட வேண்டும். ஆர் எஸ் எஸ் என்ற இந்து மத வெறி அமைப்பின் பல்வேறு எடுபிடி கிளை அமைப்புக்களில் ஒன்றுதான் பி ஜே பி, இரண்டுக்கும் ஆன தொப்புள்கொடி உறவு துண்டிக்கப்பட முடியாதது. எனவேதான் ஒரு அரசாங்கமே கவிழ்கின்ற நிலைமை எற்பட்ட போதும் அவர்கள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் ஆக இருப்பதே தலையாய காரியம் என்ற நிலையை எடுத்தார்கள். வேறு சொற்களில் சொன்னால் வாஜ்பாய் ஆனாலும் அத்வானி ஆனாலும் முதலில் ஆர் எஸ் எஸ், பின்னரே பி ஜே பி, மந்திரி மாயம் எல்லாம்.

5. அப்படியானால் இன்றைக்கு அவசர நிலையை எதிர்த்த போராட்டத்தை நடத்திக்காட்ட முயற்சி செய்கின்ற பி ஜே பியின் தாய் பீடமான ஆர் எஸ் எஸ் அன்றைக்கு அவசர நிலை காலத்தின்போது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உண்டாகின்றது. உண்மையில் அவசரநிலை காலத்தை இவர்கள் எதிர்த்தார்களா, ஜனநாயகம் பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை உண்டா என்பது அப்போதுதான் புரியும். இது வெறும் பழைய நிகழ்வுகளை புரட்டுவது மட்டும் அல்ல, இப்போதுள்ள ஆர் எஸ் எஸ்-பி ஜே பியின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ளவும் உதவும்.

6. அவசரநிலை காலத்தின் போது சிறைச்சாலைகளில் தம் உயிரை இழந்தோர் பல ஆயிரம் பேர். காணாமற் போனோரும் பல ஆயிரம் பேர். சிறைச்சாலைகளில் புதிது புதிதாக சித்திரவதை வடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குழந்தைகள், வயதானோர், கிழவர் கிழவிகள் ஆகியோருக்கும் கூட வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்ற கோஷத்தை அன்றைய மத்திய மந்திரி தேவகாந்த பரூவா கண்டுபிடித்து இந்திராவிடம் நல்ல பெயர் வாங்கினார். ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுபவித்த சித்திரவதைகளை தனியே புத்தகமாக அச்சிடலாம். கேரளத்தில் பேராசிரியர் ஈச்சரவாரியாரின் மகனும் என்ஜீனியரிங் மாணவருமான ராஜன் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டான், திரும்பி வரவே இல்லை. இது போன்ற தடயங்கள் ஏதும் அற்ற மரணங்கள் நாடெங்கும் நடந்தன, கணக்கில்லை.

7. ஜனநாயக சக்திகள் சிறைகளில் இருந்தார்கள், அல்லது தலைமறைவாக இருந்தபடி அவசரநிலை காலத்துக்கு எதிராக தொண்டர்களையும் பொதுமக்களையும் திரட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆர் எஸ் எஸ்-பி ஜே பி கூட்டம் என்ன செய்து கொண்டிருந்த து?

8. அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியத்துக்கு இந்திரா காந்தியை துரத்தியது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்பது தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார், சட்டத்தை திருத்தினார், வழக்கில் வெற்றி பெற்றார். உடனடியாக அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி புளகாங்கிதம் அடைந்தவர் அன்றைய ஆர் எஸ் எஸ் தலைவர் தேவரஸ்.

9. ஆனாலும் என்ன, தேவரஸ் சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் அவருடன் இருந்த மராட்டிய மாநில சோசலிஸ்ட் தலைவர் பாபா ஆதவ், ஆர் எஸ் எஸ் இயக்கத்தவர் சிறையில் என்ன மாதிரியான 'போராட்டம்' நடத்தினர் என்பதை இப்படி விவரிக்கின்றார்:
"சிறையின் உள்ளே வந்த பல ஆர் எஸ் எஸ்காரர்கள் தாங்கள் அவசரநிலை யை எதிர்க்கவில்லை என்றும் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் தாங்கள் பங்குபெறவே இல்லை என்றும் புலம்பிக் கொண்டு இருந்தார்கள். உண்மையை சொல்லப்போனால் பல ஆர் எஸ் எஸ்காரர்கள் அவசரநிலை யை ஆதாரிக்கவே செய்தார்கள். தேவரஸ் இருந்த ஏரவாடா சிறையில் தான் நானும் இருந்தேன். உள்ளே என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். இந்திரா, வினோபா, சஞ்சய் காந்திக்கு நெருக்கமானவர்கள், மராட்டிய முதல்வர் எஸ்.பி.சவாண் ஆகியோருடன் தேவரஸ் கடித தொடர்பு வைத்து இருந்தார். 1976 பிப்ரவரி மாதம் இந்திரா பம்பாய் வந்தார். அப்போது அவரை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னை பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்க வழி செய்து கொண்டார். வெளியே இருந்த ஜனசங்க எம் எல் ஏ ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்".

10. "சிறையில் இருந்தபடியே 11.10.1975 அன்று தேவரஸ் இந்திராவுக்கு எழுதிய கடிதம் இது: "உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் உங்கள் தேர்தல் செல்லும் என அறிவித்துள்ளார்கள், இதற்காக என் பாராட்டுதல்களை தெரிவித்துக கொள்கின்றேன். ஆர் எஸ் எஸ் மீதான தடையை நீக்கி ஆர் எஸ் எஸ்காரர்களை விடுதலை செய்யுங்கள், லட்சோபலட்சம் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் தன்னலமற்ற சேவையை (!) நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்".

11. அடுத்து ஆச்சார்ய வினோபாவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதுகின்றார். பம்பாய் ஜார்ஜ் மருத்துவமனை கைதிகள் வார்டு 14 என்ற முகவரியில் இருந்து எழுதிய கடிதம் இது: "பிரதமர் இந்திரா 1976 பிப்ரவரி 24 அன்று உங்களை ஆசிரமத்தில் சந்திக்க இருப்பதாக அறிகின்றேன். பிரதமரிடம் சொல்லி எங்களை விடுவிக்க வழி செய்யுங்கள். பிரதமரின் தலைமையின் கீழ் நாங்கள் சேவை செய்ய தயாராக இருப்பதை சொல்லுங்கள்."

12. ஆர் எஸ் எஸ் லோகத்திலும் ஒரு யோக்கியர் உண்டென்றால் அவர் வாஜ்பாய்தான் என ஒரு பொய்யை கட்டமைத்து உள்ளது அக்கும்பல். அவர் அப்போது என்ன செய்தார்? 13.6.2000 நாளிட்ட தி ஹிந்து நாளிதழில் ஆர் எஸ் எஸ் சிந்தனையாளர் சுப்ரமண்யஸ்வாமியே எழுதியது இது: "அடல் பிகாரி வாஜ்பாய் இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதி தள்ளினார். இருபது மாத அவசரநிலை காலத்தில் அடல்ஜி பல முறை பரோலில் வெளிவந்தார் எனில் காரணம், தான் வெளியே வந்தால் அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என அவர் உறுதி அளித்தார். மேலும் பல ஜனசங்ககாரர்கள் எவ்வாறு நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்வதாக உறுதியளித்து சிறையில் இருந்து வெளியே வந்தார்கள் என்பதை அகாலித்தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் விரிவாக கூறும்.... வாஜ்பாய் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு சமர்ப்பிக்கும் நிலைக்கு தயாரானார். நல்லவேளை, ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதாக இந்திரா காந்தி அறிவித்தார்."

13. பிரிட்டிஷ்காரன் இங்கே அரசாண்டபோது இவர்களின் சித்தாந்த சிங்கம் விநாயக் தாமோதர் சாவர்க்கரை அந்தமான் சிறையில் அடைத்தான். தன்னை சிறையில் இருந்து விடுத்தால் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் ராணிக்கு தன்னை விடவும் விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு வாலை சுருட்டிக் கொண்டு எந்தவிதமான அரசியல் நடவடிக்கை களிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதாக கடிதம் மேல் கடிதமாக எழுதியவர் சாவர்க்கர். சாவர்க்கரின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்? வெள்ளையனே வெளியேறு போராட்ட இயக்கத்தின்போது வாஜ்பாயும் அவர் சகோதரரும் ஒரு கிராமத்தையே காட்டிக் கொடுக்க காரணமாக இருந்த துரோக வரலாறும் இருக்கின்றது, மறக்க கூடாது.

(மேற்கோள்கள் உதவி: விடுதலை இராசேந்திரன் எழுதிய "ஆர் எஸ் எஸ் ஒரு அபாயம்" என்ற நூல்).

சனி, ஜூன் 20, 2020

ரோசா பார்க்ஸ்: அமெரிக்கப் பேருந்தில் பற்றிய பெருந்தீ

1955 டிசம்பர் முதல் நாள். வியாழக்கிழமை. அமெரிக்காவின் அலபாமா மாவட்டம், மாண்ட்கோமெரி என்னும் நகரம். தனன்து அன்றைய நாள் பணிகளை முடித்த பின்னர் க்ளீவ்லாண்ட் அவன்யூ செல்லும் பேருந்து எண் 2857இல் 42 வயதான ஆஃப்ரோ-அமெரிக்க கருப்பினப் பெண்மணி ஒருவர் ஏறி இருக்கையில் அமர்கின்றார். வண்டியின் ஓட்டத்தில் ஓட்டுநர் ஜேம்ஸ் பிளேக் அந்தப் பெண்மணியையும் மேலும் மூன்று  கறுப்பினப் பெண்களையும் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு வெள்ளையர் அமர இடம் தருமாறு கட்டளை இடுகின்றார். மூன்று பெண்கள் எழுந்து விட இந்தப் பெண் எழ மறுக்கின்றார். "எழ வேண்டும், இல்லையேல் நான் போலீசை அழைத்து உன்னைக் கைது செய்ய வேண்டியிருக்கும்" என ஓட்டுநர் எச்சரிக்கின்றார். அவரோ அமைதியாக "நீங்கள் அவ்வாறே செய்யலாம்" என்று உறுதியாக கூற, காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப் படுகின்றார்.

தனது இருக்கையில் இருந்து எழ முடியாது என அப்பெண்மணி திட்டவட்டமாக மறுத்த கணத்தில் அமெரிக்க மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் முதல் வரிகள் எழுதப்பட்டன என்பதை அந்த ஓட்டுனரோ காவலர்களோ பெண்மணியை விசாரணை செய்த நீதிமன்றமோ நிச்சயம் அறிந்திருக்க மாட்டார்கள்.

அப்பெண்மணியின் பெயர் ரோசா லூயி மெக்காலே. 1932இல் ரேமாண்ட் பார்க்ஸ் என்னும் மனித உரிமைப் போராளியை திருமணம் செய்துகொண்டபின் ரோசாபார்க்ஸ் என்று அறியப்பட்டார். படுக்கைவிரிப்புக்கள் தயாரிக்கின்ற வணிகமையத்தில் தையல் தொழில் செய்தவர். மட்டுமின்றி, கறுப்பின மக்கள் உரிமைக்கான தேசிய அமைப்பின் (National Association for the Advancement of Colored People) தலைவரின் செயலாளர் ஆகவும் இருந்தார். கணவன் மனைவி இருவருமே வாக்காளர் சங்கம் (Voter's League) என்ற அமைப்பின் உறுப்பினர்கள்.

அமெரிக்காவில் நிறவெறி மிக மோசமாக இருந்த காலம் அது. ஜிம்க்ரோவ் சட்டம் எனப்பட்ட "பிரிவினைச்சட்டம்" நடைமுறையில் இருந்தது. அது என்ன சட்டம்? அமெரிக்காவின் தெற்குப்பகுதி மாவட்டங்களில் பேருந்துகளில் கறுப்பின மக்கள் பின்வரிசையில் அமர வேண்டும். வெள்ளையர்கள் வரும்போது எழுந்து தமது இடத்தை அவர்களுக்கு தர வேண்டும். கறுப்பின மக்கள் அமர்வதற்கான கடைசி ஐந்து வரிசைகளும் கூட வெள்ளையர் வந்துவிட்டால் அவர்களுக்கு உரியதாகிவிடும். ஓட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்த படியே கறுப்பின மக்களின் இருக்கைக்கு மேல் உள்ள ஒரு  அடையாளக் குறியீட்டை நகர்த்துவார். அவர் பின் நோக்கி நகர்த்த நகர்த்த அந்த இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் எழுந்துவிட வேண்டும். பல நேரங்களில் ஓட்டுநர் இந்த அடையாளக்குறியை அகற்றியும் விடுவார், அதாவது கறுப்பர்களுக்கு இருக்கை இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் கடைசி ஐந்து வரிசைகள் தவிர மற்ற இருக்கைகள் காலியாக இருந்தாலும் அவற்றில் கறுப்பர்கள் அமரக் கூடாது! கறுப்பர்கள் முன்வாசல் வழியே வந்து ஓட்டுநரிடம் பயணச்சீட்டு பெற்று கீழே இறங்கி பின்வாசல் வழியே மீண்டும் உள்ளே எற வேண்டும்! இவ்வாறு ஏறும் முன்பே கதவு மூடப்படுவதும் கறுப்பர்கள் சாலையில் ஏமாந்து நிற்பதும் அடிக்கடி நடப்பவை.

அன்றைய தினம் ரோசா ஐந்தாம் வரிசையில் அமர்ந்திருந்தார், அதாவது கறுப்பர்களுக்கான முதல் வரிசை. ஓட்டுநர் அடையாள குறியை நகர்த்தியபோது அவர் எழ மறுத்தார், கைது செய்யப் பட்டார். 12 வருடங்களுக்கு முன் இதே போன்றதொரு நிகழ்வில் ரோசாவை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட அதே ஓட்டுநர்தான் இப்போதும்.

ஒரு கறுப்பர் எழ மறுப்பதும் கைது செய்யப்படுவதும் இது முதல் முறை அல்ல. 1945இல் ஈரென்மார்கன் என்பவர் கைது செய்யப் பட்டார். பின்னர் கிளாடெட் கால்வின் என்ற 15 வயது நங்கை கைது செய்யப்பட்டாள். இவள் மீதான வழக்கை நடத்திவிடும் பொருட்டு அதற்கான நிதி திரட்டும் பணியில் ரோசாவும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அப்பெண் திருமணம் ஆகாதவர் ஆக, கர்ப்பிணியாகவும் இருந்ததால் அவரால் வழக்கின் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாது என உணர்ந்து வழக்கு கைவிடப்பட்டது. 1944இல் ஜாக்கி ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் மேரி லூசி ஸ்மித் என்னும் இளம்பெண் கைதுசெய்யப்பட்டாள். அவள் அபராதம் செலுத்தி மீண்டு வந்தாள். கொடுமைகள் நீண்டுகொண்டே செல்ல, இத்தகைய ஒரு சூழலில் வழக்கை உறுதியாக சந்திக்க வல்லமை கொண்ட ஒரு நபர் கைது செய்யப்படும் ஒரு நல்வாய்ப்புக்காக NAACP அமைப்பு காத்திருந்தது. மனித உரிமைகளின் மாண்பை நிலைநாட்டும் அந்த அரிய நாள் ரோசாவின் வடிவில் வந்து சேர்ந்தது.

ரோசாவின் கைது பற்றி அறிந்த மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவரும் ஆன ஈ.டி.நிக்சன் அகமகிழ்ந்து போனார்! "கடவுளே! 'பிரிவினை' எத்தனை பெரிய வாய்ப்பினை என் கைகளில் அள்ளித்தந்துள்ளது! ". இப்படி ஒரு வழக்கை எதிர்கொள்ள ரோசாவை விடவும் உறுதியான ஒரு நபர் கிடைக்க மாட்டார் என்பதை அவர் முற்றிலும் உணர்ந்திருந்தார்.

ரோசா இப்படிக் கூறினார்: "எங்களுக்கு (கறுப்பின மக்களுக்கு) இழைக்கப்படும் கொடுமைகளினால் நான் மிகவும் கொதிப்படைந்திருந்தேன். எனது தாத்தா, எனது பாட்டி, என் பெற்றோர்கள்! அவர்கள் எத்தனை கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள்! எனக்குத் தெரியும், என்றாவது ஒரு நாள் நானும் இத்தகைய சூழலை சந்திப்பேன், ஆனால் அப்போது அந்த வாய்ப்பை என் மக்களின் விடுதலைக்காக நான் பயன்படுத்தி க்கொள்வேன்!"

பெயிலில் வெளியே வந்த ரோசா, மாண்ட்கோமெரி பிரிவினைச் சட்டத்துக்கு எதிராக இந்த வழக்கை நடத்துவதென முடிவு செய்தார். மகளிர் அரசியல் குழு என்னும் அமைப்பு அன்று நள்ளிரவு கூடுகின்றது. 35,000 துண்டறிக்கைகள் உருட்டச்சில் அச்சிடப்பட்டு மறுநாள் காலையில் கறுப்பின மக்களின் பள்ளிக்கூடங்களில் விநியோகிக்கப்பட்டன. அறிக்கை மிக எளிமையாக இருந்தது. ஆனால் ஒரு பெரும் போராட்டத்துக்கான அறைகூவல் அதில் இருந்தது. "ரோசாவின் கைதுக்கும் விசாரணைக்கும் கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு நீக்ரோவும் வரும் திங்கள் அன்று பேருந்துப்பயணத்தை புறக்கணிக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாம். அப்படியே உங்களுக்கு வேலைகள் இருந்தாலும் குழந்தைகளும் பெரியவர்களும் பேருந்துகளை புறக்கணித்து வாடகைக்கார்களை பயன்படுத்துங்கள்!"

வழக்கு விசாரணைக்கு வந்த நாளில் மாண்ட்கோமெரியின் ஒட்டுமொத்த கறுப்பின சமூகமும் அரசுப்பேருந்துகளை புறக்கணித்து எங்கு சென்றாலும் நடந்தே சென்றார்கள், வாடகை கார்களில் பயணித்தார்கள்.

எப்போதும் போல முப்பது நிமிடங்களில் விசாரணை முடிந்தது, ரோசா குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதே நாளில் மாண்ட்கோமெரி முன்னேற்ற சங்கம் அமைக்கப்பட்டது. நகருக்கு புதிதாக வந்த ஒரு வழக்கறிஞர் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அப்போது அவர் டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் தேவாலய மதகுரு.

தமது அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதில் உறுதியுடன் இருந்த மாண்ட்கோமெரியின் 40,000 கறுப்பின மக்கள் நிறவெறி தலையின் உச்சிக்கு ஏறியிருந்த அமெரிக்க அரசுக்கும் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கும் வரலாற்றின் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். பேருந்து புறக்கணிப்பு 381 நாட்கள் நீடித்தது! எரிச்சலுற்ற வெள்ளையர்கள் கறுப்பின மக்களை தாக்கினார்கள், வீடுகளையும் தேவாலயங்களையும் தாக்கினார்கள். தீக்குண்டுகளை வீசினார்கள். நிறவெறி கொண்ட காவல்துறை தன் பங்கை நிறைவேற்றியது, கறுப்பின மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன, கறுப்பின வாடகை கார் ஓட்டுநர்கள் கைது செய்யப் பட்டார்கள். போராட்டத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உச்சகட்டமாக மார்ட்டின் லூதரின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவரது மனைவியும் குழந்தைகளும் தப்பித்தார்கள். மார்ட்டின் வெளியே சென்றிருந்தார். (மார்ட்டின் 1968 ஏப்ரல் 4 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார் ).

வேறு வழியின்றி அமெரிக்க உச்சநீதிமன்றம் விவகாரத்தில் தலையிட்டது. 1956 நவம்பர் 13 அன்று மனித உரிமைப்போராளிகள் வெற்றி பெற்றார்கள். பேருந்துகளில் நிறப்பிரிவினை சட்டவிரோதமானது என்று தீர்ப்பு எழுதப்பட்டது. டிசம்பர் 21 அன்று மான்ட்கொமெரி அரசுப்பேருந்து ஒன்றில் ரோசா பார்க்ஸ் அமர்ந்திருக்க அவர் பின்வரிசையில் வெள்ளையர் ஒருவர் அமர்ந்துள்ள புகைப்படம் வெளியானது. மனித உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியின் அடையாளம் அது.

வழக்கு நடந்த நாட்களில் ரோசாவும் அவரது கணவரும் எண்ணற்ற தொல்லைகளை சந்தித்தார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ரோசாவை பற்றியோ வழக்கைப் பற்றியோ வேலை செய்யும் இடத்தில் பேசக் கூடாது என கணவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி தடை செய்ய, பார்க்ஸ் அவரது வேலையை தூக்கி எறிந்தார். வழக்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டதால் தொல்லைகள் தொடர்ந்தன. எனவே தமது குடியிருப்பை மிச்சிகன் மாவட்டத்தின் டெட்ராய்டுக்கு மாற்றினார்கள்.

கறுப்பின மக்களின் வரலாற்றில் மட்டுமின்றி அமெரிக்க வரலாற்றிலும் ஒரு மாபெரும் திருப்பத்தை உருவாக்கிய ரோசா தனது 95ஆவது வயதில் 2005 அக்டொபர் 24 அன்று மரணம் அடைந்தார்.

மனித உரிமைகள் மீதும் உலக மக்கள் மீதும் கறுப்பின மக்கள் மீதும் அமெரிக்க அரசு தொடர்ந்து ஏவும் கொடும் தாக்குதல்கள் இன்றோ நேற்றோ தொடங்கி வைக்கப்பட்ட ஒன்றல்ல. 1492இல் பஹாமாஸ் தீவுகளில், அதாவது இன்று அமெரிக்கா என்று சொல்லப்படும் மண்ணில், ஸ்பானிய மன்னனின் வேட்டை நாயான கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவனது சகாக்களுடன் வந்து இறங்கி அங்கே பல நூற்றாண்டுகளாக வசித்து வந்த சூது வஞ்சகம் ஏதும் அறியாத பூர்வ குடி மக்களான அரவாக் செவ்விந்தியர்கள் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த நாட்களிலேயே கருக்கொண்டு விட்டது. ஜார்ஜ் ஃபிளாய்ட் இந்தப் பட்டியலில் இப்போது சேர்க்கப் பட்டுள்ளான்.
.... 

திங்கள், மே 11, 2020

சயாம்-பர்மா மரண ரயில் பாதை

1987 அல்லது 1988ஆக இருக்கலாம். தூர்தர்ஷனில் சனி இரவு 10 மணிக்கு மேல் உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். அப்படி ஒரு நாள் The bridge on the river Kwai என்று ஒரு கருப்பு வெள்ளை படத்தை பார்த்தேன். இயக்குனர் David Lean என்று தெரிந்து கொண்டேன். அவர் யாரென்று அப்போது தெரியாது. அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவுக்கு கிழக்கே நடந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். அப்போது இன்டர்நெட் எதுவும் கிடையாது. பின்னர் சில நூல்கள் படித்து ஓரளவு தெரிந்து கொண்டேன். பின்னர் இணைய வசதிகள் வந்தபின் டேவிட் லீன் பற்றியும் மரண ரயில் பாதை பற்றியும் தெரியவரும்போது படத்தில் சொல்லப்பட்ட விசயங்களை விட சொல்லாமல் விட்டது ஏராளம் என்பது புரிந்தது. அது திட்டமிடப்பட்ட ஒன்றா இல்லையா என்பது தெரியவில்லை. 


இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியா நேச நாடுகளின் ஒரு அங்கமான பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்தது. எதிரணியில் அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான் கிழக்கே சயாம் (தாய்லாந்து) தொடங்கி பர்மா வரை 420 கி.மீ. தொலைவுக்கு தரை, காடுகள், மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள் மேல் வெறும் தேக்குமரக் கட்டைகளால் ஆன ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டது. 5 ஆண்டுகள் ஆகும் என திட்டமிடப்பட்ட இந்த மிகப்பெரும் வேலை 18 மாதங்களில் முடிக்கப்பட்டது! உண்மையில் மனித ஆற்றல் எவ்வளவு பெரியது என்பதை வரலாறு இந்த ரயில்பாதை மூலம் மெய்ப்பித்தது. நோக்கம், பர்மா எல்லை வழியே இந்தியாவின் மணிப்பூர் பகுதிக்குள் நுழைந்து இந்தியாவைக் கைப்பற்றுவது. கைது செய்யப்பட்ட நேச நாடுகளின் படை வீரர்கள் சுமார் 63000 பேரை ரயில் பாதை அமைக்கும் பணியில் ஜப்பான் ஈடுபடுத்தியது. இவர்கள் அமெரிக்கா,பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். தனது படத்தில் டேவிட் லீன் இதை சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்டது என்ன? 

மலேசியாவில் இருந்து தமிழர், மலாய், சீனர் என 270000 பேர் ரயில் பாதை பணியில் கட்டாயமாக உழைக்க வைக்கப்பட்டனர். இவர்களில் அதிகமானோர் தமிழர்கள். அதாவது 60 விழுக்காட்டினர். சீ.அருண் அவர்கள் எழுதி தமிழோசை பதிப்பகம் 2009இல் வெளியிட்ட சயாம்-பர்மா மரண இரயில்பாதை - மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு என்ற நூலில் இது குறித்த ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவரே சொல்வது போல் மரண ரயில்பாதை குறித்து அன்றைய நாள் வரை ஒரே ஒரு நூல் மட்டுமே வெளிவந்துள்ளது. சண்முகம் என்பவர் எழுதிய சயாம் மரண ரயில்- சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் என்ற அந்த நூலையும் தமிழோசை பதிப்பகமே வெளியிட்டுள்ளது (2007). சீ.அருண் தனது நூலுக்காக சில ஆண்டுகள் கடுமையான ஆய்வு செய்துள்ளார். அதன் பலன் நூலில் நன்கு தெரிகின்றது. அன்று உயிருடன் இருந்த சிலரின் நேர்காணலை பதிவு செய்துள்ளது மிகச்சிறப்பு. 

ரயில்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களில் 70 விழுக்காட்டினர் ஆசியத் தொழிலாளர்கள்தான் என்று பல சான்றுகள் கொண்டு நிறுவுகின்றார். இவர்களில் சுமார் 1,50,000 பேர் இறந்தார்கள். மிகத் துல்லியமான புள்ளிவிவரங்கள் இதுநாள்வரை கிடைக்கவில்லை என்பதும் உண்மை.இவர்கள் மலேயா,சயாம்,பர்மா, லாவோஸ்,இந்தியா, இலங்கை, சீனா, தைவான், வியட்நாம்,கொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ப்ருனே, ஜாவா ஆகிய ஆசிய நாடுகளின் தொழிலாளர்கள். 63000 போர்க்கைதிகள் மிகமிகப்பெரிய இந்த வேலைக்கு போதாதென்று கருதிய ஜப்பான் அன்று தன் அதிகாரத்தின் கீழ் இருந்த ஆசிய நாடுகளில் இருந்து வீட்டுக்கு ஒரு நபர் கட்டாயம் இந்த வேலைக்கு வர உத்தரவு இட்டது. மட்டுமின்றி வீடுகள் புகுந்து கண்ணில் பட்ட ஆண்கள் அனைவரையும் இழுத்துச் சென்றது. குடும்பத்தில் ஒருவரை இழக்க விரும்பாமல் இருவர் மூவர், ஏன், ஒட்டுமொத்த குடும்பமும் புறப்பட்டு சென்ற கொடுமைகள் நூலில் பதிவாகி உள்ளன. நூலை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை,காரணம் போர்களின் பெயரால் மனிதனை மனிதன் சுரண்டி உயிரோடு கொன்று குவிப்பதை நூல் நெடுகிலும் ரத்தமும் சதையுமாகக் காண முடிகின்றது.   

பிடிபட்ட தொழிலாளர்களை இராணுவ வண்டிகளில் ஏற்றி அருகிலுள்ள ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏற்றி சயாமிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். பெரும்பாலும் திறந்த பெட்டிகளில் ரயில் பாதை அமைக்க தேவையான பொருட்களோடு அளவுக்கு அதிகமான மனிதர்களை நிற்க வைத்தே 3 நாட்கள், 8 நாட்கள் என கொடூரமான முறையில் பயணிக்க செய்துள்ளனர். இயற்கை உபாதைகளை தணிக்கவும் கூட ரயில்களை நிறுத்தாமல் இயக்கியுள்ளார்கள். முதற்கட்ட மரணங்கள் இதுபோன்ற தொடக்க பயணங்களிலேயே நிகழ்ந்துள்ளன. பல நூறு பெண்களும் இதில் அடக்கம் என்பதை பதிவு செய்துள்ளார். சுண்ணாம்பு அரிசிக் கஞ்சி, பொறித்த கருவாடு, கீரைச்சாறு, இனிப்பு இல்லா காப்பி, பூசணி வேகவைத்த தண்ணீர், சோள ரொட்டி ஆகியவைதான் உணவு. உணவில் புழுக்களும் அழுக்குகளும் சாதாரணம். தொடக்கத்தில் பலர் வாந்தி எடுத்து உண்ண மறுத்தனர். உயிர்வாழும் பொருட்டு கேடுகெட்ட இந்த உணவை உண்டனர்.    


இறக்கி விடப்பட்ட இடங்களில் இருந்து ரயில்பாதை போடப்படும் இடங்களுக்கு காடுகளில் புகுந்து இரவும் பகலும் நடந்தனர். கட்டுமானப்பொருட்கள், கருவிகள் அனைத்தையும் சுமந்து சென்றனர். உணவும் நீரும் இன்றி பல நாட்கள் தொடர்ந்த இப்பயணத்தில் யானை, புலி தாக்கியும் பாம்பு, தேள், காட்டுப்பூச்சிகள் கடித்தும், நச்சு நீரை அருந்தியும், வாந்தி பேதியாலும், உடல் சோர்ந்தும் செத்து மடிந்தவர்கள் ஏராளம் எனில் மனம் பேதலித்து செத்து மடிந்தவர்கள் இன்னும் ஏராளம். இறந்தவர்களின் பல உடல்கள் புதைக்கப்படாமல் விடப்பட்டன. தொடக்கத்தில் எட்டு மணி நேர வேலை, பின் 12 மணி நேர வேலை, பின் 16 மணி நேர வேலை, பின் 24 மணி நேரமும் உழைப்பு என்று மனிதர்கள் ஓய்வின்றிக் கொல்லப்பட்டனர்.   

எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் இங்கேயும் நடந்தது. ஜப்பானியர்கள் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். மது விருந்துகளில் தமிழ்ப்பெண்களை நிர்வாணமாக ஆட வைத்து கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தார்கள். இப்படி கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் பலர் இறந்துள்ளனர், பலர் தற்கொலை செய்துள்ளனர். இக்கொடுமைகளைக் கண்ணுற்ற உறவினர்கள் பலர் மனம் பேதலித்தும் தற்கொலை செய்தும் உயிரை மாய்த்துக் கொண்டனர். ரயில்பாதை பணியின்போது பாறை வெடித்து சிதறியதால், சுமந்த மண்ணின் கனத்தால், கால் இடறி பள்ளத்தில் விழுந்ததால், மழைக்குளிரால், தீராத புண்ணால், உடல் உறுப்புகள் இழந்ததால், தப்பியோடும்போது சுடப்பட்டதால், குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில், மனம் பேதலித்து...இப்படி உயிரை விட்டவர்கள் பல்லாயிரம். இதன்றி ஜப்பானியர்கள் கொடுத்த தண்டனைகள் கற்பனை செய்ய முடியாதவை. 

உயிரோடு கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம். தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு அடுத்து நோய்வாய்ப்பட்டவர்களின் குடில்கள் இருந்தன. அவர்களுக்கு உணவு மருந்து என்று எதுவும் கிடையாது. உயிரோடு சாகுமாறு விடப்பட்டார்கள். செத்த பின்னர் கொத்துக்கொத்தாக குழிகளில் தள்ளப்பட்டுள்ளனர். கூடவே கொஞ்ச உயிருடன் இருப்பவர்கள் பலரும் புதைக்கப்பட்டனர். இதன்றி பல நேரங்களில் நோயாளிகளின் குடில்களுக்கு இரவு நேரங்களில் எண்ணெய் ஊற்றி தீ வைக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இவ்வாறு உயிர் விட்டவர்கள் இடும் ஓலம் அருகில் உள்ள குடில்களில் இருந்தவர்களை தூங்க விடாமல் செய்து பலரை மன நோயாளிகளாக ஆக்கியுள்ளதாக தெரிகின்றது.   

நூலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதே ரயில் பாதையில் பயணம் மேற்கொண்ட நிகழ்வை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "1943ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் சிங்கப்பூரில் இருந்து கிழக்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் நேதாஜி.... ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே நேதாஜியை சந்தித்து பேசியுள்ளனர். இதனை பற்றியுள்ள முழுமையான விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை....தமிழ்த்தொழிலாளிகளுக்கு ஜப்பானியர்கள் இழைத்த கொடுமைகளை நேதாஜி நன்கு அறிந்திருந்தும் குறிப்பிட்ட சில அரசியல் நோக்கங்களுக்காக இதில் தலையிடவில்லை எனவும் கூறப்படுகின்றது".   

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சினை தொடர்ந்து ஜப்பான் சரண் அடைந்தது. பிரிட்டிஷ் படையினர் இப்பகுதிகளை கைப்பற்றிய பின்னர் ரயில் பாதை பணியில் ஈடுபட்ட எஞ்சியிருக்கும் தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். ஜப்பானியர் சரண் அடைந்தனர். போருக்கு பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் 32 ஜப்பானிய ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மேற்கத்திய நாடுகளின் போர்க்கைதிகள் குறித்த விவரங்கள் பெருமளவு கிடைத்தது. ஆனால் ஆசிய தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களை யம் ஜப்பானியர்கள் அழித்து விட்டதால் உயிரை இழந்த ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஆசிய தொழிலாளர்கள் பற்றி எந்த குறிப்பையும் காண இயலவில்லை என சீ.அருண் கூறுகின்றார்.   

காமன்வெல்த் நாடுகளும் அமெரிக்க, கனடா, ஐரோப்பிய நாடுகளும் தமது நாட்டு போர் வீரர்கள் பொருட்டு பின்னர் மேற்கொண்ட கனமான நடவடிக்கைகள் பற்றி சொல்லும் அருண், மலேசிய நாடு செய்தது என்ன என்று வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது கவனிக்க வேண்டியதாகும். உலகப்போர் குறித்த வரலாறாக மட்டுமின்றி புலம் பெயர்ந்து பிழைக்க சென்ற தமிழர்களின் வரலாறாகவும் இந்நூல் விளங்குகின்றது என்பது சிறப்பு.   

போர்களில் சாவதும் நோவதும் சாமானிய மக்களும் உழைப்பாளிகளும் மட்டுமே என்ற உலகப்பொது நியதியை சயாம்-பர்மா மரண ரயில்பாதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கின்றது.   

நூல் வெளியிட்டோர் தமிழோசை பதிப்பகம், 21/8,கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் சாலை, கணபதி, கோவை 641012.

வியாழன், ஏப்ரல் 23, 2020

நான்கு புத்தகங்கள்

மார்கரிட்டா ஃபோபானோவா
(தமிழில்: மு.இக்பால் அகமது)


லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் - அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது.

அவரது ஒரு நாளுக்கான வேலை திட்டத்தை பேசும் போது முதல் வேலையாக அவர் எனக்கு சொன்னது இதுதான்: அன்றைய நாளின் அனைத்து நாளிதழ்களும் 9 அல்லது 10 மணிக்குள்ளாக எனக்கு வந்து விட வேண்டும். அதற்கு முன்பாகவே கிடைக்கும் எனில் என் அறையின் கதவின் கீழாக தள்ளி விடுங்கள்.

அத்தனை நாளிதழ்களையும் அவர் எப்படி வாசித்து முடிக்கின்றார் என்பது ஆச்சரியம் மிகுந்த ஒன்று. ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்ததால் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

எனது உணவு அறையின் வலது மூலையில் ஜன்னலில் புத்தக அலமாரியின் அருகே எனது எழுத்து மேசை இருக்கிறது. பெரிதும் விவசாயம் தொடர்பான நூல்கள் அடங்கிய ஒரு சிறு நூலகம் என்னுடையது. வெகு விரைவிலேயே எனது நூல்களின் தொகுப்பை புரிந்து கொண்ட லெனின் அவை குறித்து என்னுடன் உரையாடத் தொடங்கினார். பள்ளி செல்லும் சிறுமியான என் மகளின் மேசையைத்தான் அவர் பயன்படுத்தி வந்தார். விரைவிலேயே எனது பல நூல்கள் அவர் மேசைக்கு இடம் பெயர்ந்தன.

நிகோலாயேவிச் போக்தானோவ் என்ற ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் மீது லெனினின் கவனம் குவிந்தது. இவர் ஒரு விலங்கியல் அறிஞர். 1800களில் வாழ்ந்தவர். விலங்கியல் மட்டுமின்றி ரஷ்ய கிராமங்கள், விலங்குகள் குறித்த கதைகளையும் சித்திரங்களையும் அவர் தீட்டி இருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவர் நண்பர் பேராசிரியர் N.Vagner என்பவர் அவர் கட்டுரைகளை தொகுத்து From Russian Wildlife என்று நூலாக வெளியிட்டார்.


"போக்தானோவ் என் ஊர்க்காரர். நான் பிறந்தது சிம்பிர்ஸ்க் என்ற ஊரில். அவரும் நானும் ஒரே உடற்பயிற்சி பள்ளிக்குத்தான் சென்றிருக்கின்றோம். ஆனால் அவர் பட்டம் பெற்றது காசான் பல்கலைக்கழகத்தில். நான் வேறு பல்கலைக்கழகத்தில்...".

From Russian Wildlife என்ற அந்த நூலை பல முறை அவர் விரும்பி வாசித்தார். மிகுந்த புலமையுடன் எழுதப்பட்ட நூலின் பக்கங்களை எனக்கு சத்தமாய் வாசித்தும் காண்பித்தார். "மிக அகன்று பரந்த மத்திய ரஷ்யாவின் வெளிகளிலும் உக்ரைனின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் வோல்கா நதியின் மேலுமாக" பறந்து திரிந்த சிறிய வெள்ளை ஆந்தையை பேசும் DEEP IN THE FOREST என்ற பகுதியை ரசித்து வாசித்தார்.  "அடர் காட்டின் சொந்தக்கார சீமாட்டியான" சிவிங்கிப்பூனையை ரசித்து வாசித்தார். "குட்டிப் பறவைகள் ஏன் கவலையில் ஆழ்ந்துள்ளன" என்ற கதை நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் மட்டுமே ஆனது, ஆனால் இக்கதையை தொடக்கம் முதல் முடிவு வரை பல முறை சத்தமாக வாசித்தார்.

The Little Starling என்ற புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. காரணம் இப்புத்தகம் அவரது ஊரான சிம்பிர்ஸ்க் பற்றியும் அவரது குழந்தைப் பருவத் த்தையும்   இளமைப் பருவத்தையும் ஞாபகப்படுத்தியதாம்.

போக்தோனோவின் மற்றோரு புத்தகமான Nature's Spongers ஒட்டுண்ணிகள் பற்றி சொல்கிறது. இத்தகைய விலங்குகளும் பூச்சிகளும் எப்படி பிற உயிர்களை சார்ந்து 'உழைக்காமல்' வாழ்கின்ற ன, குறிப்பாக விவசாயத்தை எப்படி பாழாக்குகின்றன என்று விரிவாக சொல்கிறார். நூலின் தலைப்பை லெனின் வெகுவாக ரசித்தார். மிகப் பொருத்தமான தலைப்பு என்று வியந்தார். "இயற்கையின் ஒட்டுண்ணி"களை சரியான முறையில் கையாளும் கலை சோசலிச அரசுக்கு மட்டுமே கை கூடும் என்றார். "நாம் ஆட்சிக்கு வருவோம், உடன் இயற்கை யின் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுப்போம்" என்று சொல்கிறார்.

அக்டொபர் புரட்சிக்கு முன்பு இந்நூல் 18 முறை மறுபதிப்பு கண்டது. 1923இல் 19ஆவது மறுபதிப்பு. இந்நூல் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும் என அரசுப் பதிப்புத்துறைக்கு ஆலோசனை சொன்னது யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் இதில் லெனினின் பங்கு இருக்கும் என்பது உறுதி.

V.N.சுகசேவ் எழுதிய Swamps(சதுப்பு நிலம்) என்ற நூல். மேய்ச்சல் நில வேளாண்மை குறித்த படிப்புக்கு இந்நூல் பாடமாக இருந்தது. இது நான் வாசித்துக் கொண்டிருந்த நூல், உணவறை மேசையில் வைத்திருந்தேன். ஒரு நாள் லெனின் என்னிடம் சொன்னார், "தெரியுமா, அந்த நூல் சுவாரஸ்யமான ஒன்று, படித்து முடித்து விட்டேன்!  மிகப்பல சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எழுதிய முறையோ மிக அற்புதம்! வாசிப்பவரை வசீகரிக்கும் வண்ணம் எழுதியுள்ளார். சதுப்பு நிலங்கள் உண்மையில் பெரிய அளவு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. நம் தாய் நாடான ரஷ்யாவில் என்ன நடக்கிறது, பாருங்களேன், மிகப் பரந்த அளவுக்கு நம் நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ளன, உண்மையில் இவை யாவும் இயற்கையான கரிச்சுரங்கங்கள், மிக மலிவான எரிபொருள் கிடங்குகள், இவற்றைக் கொண்டு செலவு பிடிக்காத மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்..."  பிற்காலத்தில் தோழர் கிரிசிஜானோவ்ஸ்கி சொன்னதை இங்கே நினைவு கூர்வோம்: "1919 டிசம்பர், லெனின் சொன்னார், கரியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அத்தகைய வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடிய கரி நம் நிலங்களில் அபரிமிதமாக உள்ளது, வெட்டி எடுப்பதும் அவ்வளவு செலவு பிடிக்க கூடியது அல்ல".

இந்நூல் பற்றி அவருடன் உரையாடும்போது வேட்டையாடுவதில் அவருக்கு அலாதி பிரியம் என்பதை கண்டுகொண்டேன். "ஒரு சதுப்பு நிலம், உங்களிடம் ஒரு துப்பாக்கி, உங்களின் இலக்குக்காக நீங்கள் காத்திருக்கின்றீர்கள்....ஆகா! என்ன ஒரு அனுபவம்!".

இந்த நூலை அவர் தன் மேசையில் வைத்திருந்தார். ரஷ்யாவின் சதுப்பு நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்தனை அவரை விட்டு நீங்கவே இல்லை என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். எங்கள் உரையாடல்களில் இது பற்றி பல முறை பேசலானார்.

நான்காவது நூல் The New Earth (புதிய பூமி).  William S Hardwood   என்பவர் அமெரிக்காவின் நவீன விவசாயம் குறித்து எழுதிய நூல் இது.

ஒரு நாள் இரவு உணவுக்கு பின்னான உரையாடலின் போது நூல் அலமாரியின் அருகே நின்று கொண்டு என்னுடன் பேசினார்: உங்கள் நூலகத்தில் ஒரு அற்புதமான நூலை கண்டெடு த்தேன். அடடா! சும்மா சொல்லக்கூடாது! நூலின் அளவும் கச்சிதம், உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள லாம். நாம் ஆட்சிக்கு வரும்போது இந்நூலை நிச்சயமாக மறுபதிப்பு செய்வோம். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்நூலைப் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்நூலில் ஆசிரியர் சொல்லும் ஆலோசனைகள், அவர் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை விவசாயத்தொழிலில் ஈடுபடும் அனைவரும் மட்டுமின்றி வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விஞ்ஞானிகள் ஆகியோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

1918. சோவியத் அரசு நிர்வாகம் மாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தது. லெனின் என்னை தொலைபேசியில் அழைத்தார், புதிய பூமி என்ற அந்த நூல் என்னிடம் இருந்தால் க்ரெம்ளினுக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டார். பேராசிரியர் திமிர்யாசேவ் என்பவருக்கு நூலை அனுப்பி வாசிக்குமாறு வேண்டியதுடன் நூலுக்கு முன்னுரை ஒன்று எழுதுமாறும் பணித்தார். நூலை மிக விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கூறினார். பேராசிரியர் நூலுக்கு முன்னுரை எழுதியதுடன் நூலின் தலைப்பை Regenerated Land என்றும் மாற்றினார். 1919இன் முற்பகுதியில் நூல் வெளியானது.

நூலின் இரண்டு பிரதிகளை லெனின் எனக்கு அனுப்பியிருந்தார். இந்நூலின் பல பிரதிகளை அவர் எப்போதும் தன் மேசை மீது அடுக்கி வைத்திருப்பார். தன்னைக் காண வருபவர்களிடம், குறிப்பாக விவசாயத் தொழிலின் முன்னோடிகளிடம் நூலின் முக்கியத்துவம் குறித்துப்பேசி நூலை மிகப் பரவலாக கொண்டு செல்ல வலியுறுத்துவார்.

லெனினுடன் வேறு பல நூல்கள் குறித்தும் உரையாடி இருக்கின்றோம். நீங்கள் லெனினுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகக் குறைந்த நேரமே என்றாலும் நீங்கள் புதிய சில விசயங்களை தெரிந்து கொள்வீர்கள். அவர் பிறரைப் போல் இல்லை, அவருடன் உரையாடுபவரை கவனமாக கேட்பார், உரையாடுபவரின் கேள்விகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார், உரையாடலில் தொடர்பான பல புது விஷயங்களை சேர்த்து உரையாடலை செழுமைப் படுத்துவார்.

(Lenin And Books, 1971ஆம் ஆண்டுப் பதிப்பில் ( Progress Publishers) இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை)

(ஏப்ரல் 22 லெனின் பிறந்த நாள், ஏப்ரல் 23 உலக புத்தக நாள்)

புதன், ஏப்ரல் 15, 2020

மஞ்சள் பிசாசின் மனிதவேட்டை

எல்லாம் என்னுடையது என்றது தங்கம்.
எல்லாம் என்னுடையது என்றது வாள்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது தங்கம்.
எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியும் என்றது வாள்.

எல்லாவற்றையும் வாங்குவதற்காக வாள் பலத்தைக்கொண்டு தங்கத்தை பறித்துக்கொள் என்பதே இந்த உரையாடல் சொல்லும் செய்தி. இந்த கவிதையை எழுதியவர் ரஷ்யக்கவிஞர் புஷ்கின்.

1846. அமெரிக்காவின் பிற்பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறுகின்றார்கள். எதற்கு? தங்கவேட்டைக்காக! ஜேக்கப் டோனர் என்பவருடன் வந்தவர்கள் டோனர் பார்ட்டி என்று அழைக்கப்பட்டார்கள். 91பேரும் 1846-47இல் சியேறா நெவேடா என்னும் பனிப்பிரதேசத்தில் உணவும் பிற ஆட்களும் இன்றி. மேலும் பயணத்தை தொடர முடியாமல் மாட்டிக்கொண்டனர். வாழ்வதா சாவதா என்ற போராட்டம். நாகரிகம் அடைந்த மனிதகுல வரலாற்றில் மரணமுற்ற மனிதனின் பிணத்தை அல்லது ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பிணத்தை சாப்பிட்ட கொடுமை இங்குதான் நடந்தது.

கலிபோர்னியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அலாஸ்காவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் அங்கெல்லாம் குடியேறிய மக்கள் அங்கு பூர்வகுடிகளாய் இருந்த மக்களை கொடூரமாக அழித்தார்கள்.   500 ஆண்டுகளுக்கு முன் கொலம்பஸ் நிகழ்த்திய படுகொலைகளை மீண்டும் நடத்தினார்கள். சில நூறாயிரம் மக்கள்தொகை கொண்ட கலிபோர்னியாவில்1849-54 காலகட்டத்தில் மட்டும் தங்கத்தின் பொருட்டு 4200 கொலைகள் நடந்ததாக பதிவுகள் உள்ளன.
......
இதே போன்றதொரு தங்கவேட்டை 1898இல் வடக்கு கனடாவிலும் அலாஸ்காவின் குளோண்டிக் பகுதியிலும் நடந்தது. குளோண்டிக் நதிப்பிரதேசத்துக்கு தங்க வேட்டை க்கு வந்த ஒரு லட்சம் பேரில் 30000 முதல் 40000 பேர் மட்டுமே உயிருடன் அங்கே போய் சேர்ந்தார்கள். பனி படர்ந்த அலாஸ்காவின் கடும் குளிரின் முன்னே மனிதனின் பேராசை தோற்றுப்போன து. செத்து மடிந்தது. மிக நீண்டதும் கடினமானதும் ஆபத்து மிகுந்ததும் ஆன சில்கூட் கணவாய் பாதையில் தங்கத்தை தேடி நூற்றுக்கணக்கானவர்கள் மலை ஏறிக்கொண்டிருக்கும் முதல் காட்சியுடன் தனது கோல்டு ரஷ் (1925) படத்தை தொடங்குகின்றார் சார்லி சாப்ளின். அவரும் தங்கம் தேடித்தான் போகின்றார். வழக்கம் போலவே இப்படத்திலும் பாத்திரத்துக்கு பெயரில்லை. அவரைத் தொடர்ந்து ஒரு கரடியும் வந்து கொண்டு இருப்பதை அவர் அறிய மாட்டார்!

படத்தை இரண்டு பகுதிகளாக பிரித்தால் முதல் பகுதியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொடும் பனிச்சூறாவளி வீசும் அலாஸ்காவில் தங்கம் என்ற அற்ப உலோகத்துக்காக மனிதன் போராடுவதையும் இரண்டாம் பகுதியில் தன் உயிருக்காக அலாஸ்காவின் கிராமம் ஒன்றில் போராடுவதையும் பார்க்கலாம்.

தங்க வேட்டையில் ஓரளவிற்கு தங்கத்தை சம்பாதித்த ஜிம் மெக்கெ என்பவனது கூடாரம் பனிப்புயலில் அடித்து  செல்லப்படுகிறது. கொலை வழக்கில் தேடப் லபடும் பிளாக் லார்சன் என்பவனது கூடாரத்துக்கு அவன் இல்லாத போது வந்து சேர்கின்றான் நம் நாயகன். திரும்பி வந்த லார்சன் நாயகனை வெளியே துர்த்தவிடுகின் றான். இப்போது ஜிம் அங்கே வருகின்றான். லார்சனுடன் நடந்த மோத லில் லாரசன் அடக்கப்படுகின் றான். மூவரும் ஒரு உடன்படிக்கை க்கு வருகின்றனர். சீட்டுக்கட்டை கலைத்துப்போடுவது, அதன் மூலம் உணவு தேடி வெளியே போவது யார் என முடிவு செய்வ்து. இதில் லார்சனே வெளியே போவதாக ஆகின்றது. வெளியே சென்ற லார்சன் தன்னை தேடி வந்த இரண்டு போலீஸ்காரர்களை கொலை செய்கின்றான்.

நாயகனும் ஜிம்முவும் நன்றி தெரிவிக்கும் விருந்து நடத்த முடிவு செய்கின்றனர். ஆனால் விருந்துக்கான உணவுதான் இல்லை! இருக்கின்ற ஒரே பொருள் நாயகனின் காலணி மட்டுமே, அதை வேக வைத்து சாப்பிட லாம் என முடிவு செயகின் றார்கள்! காலணியின் மேல் பகுதியை நாயகனும் கீழ் பகுதியை ஜிம்மும் சாப்பிடுகின்றனர்.  ஒன்றும் இல்லாத சூழலில் காலனியை ரசித்தும் ருசித்தும் சாப்பிடும் இந்த காட்சியை மிக அற்புதமாக சித்தரித்து இருப்பார் சாப்ளின். காட்சியின் தெரியாத பக்கமோ பசியால் நொந்து போனவனின் நிலையை சொல்கின்றது.

ஜிம்மின் கற்பனை யோ வேறு மாதிரி போகிறது. தன் எதிரே உட்கார்ந்து இருக்கும் நாயகனை ஐந்தடி உயரமுள்ள கொழுத்த கோட் சூட் அணிந்த கோழி யாக பார்க்கும் அவன் அவனை சுட்டு ரோஸ்ட் செய்து சாப்பிட முடிவு செயகின் றான். ஒரு கையில் துப்பாக்கியும் மறுகை யில் கோடரியும் ஏந்தி நாயகனை அவன் துரத்த ஒன்றும் புரி யாத நாயகன் தப்பித்து ஓ ட உணவுக்கும் உயிருக்கு மான போராட்டம் அங்கே நடக்கின்றது. உணவு தேடி வந்த ஒரு கரடி இந்த சண்டை யில் எதிர்பாராத விதமாக உள்ளே வர திடீர் என துப்பாக்கி வெடிக்க கரடி சாக... இருவருக்கும் ஆன உணவுப்பிரச்னை இப்படி தீர்க்கப் படுகின்றது.

இக்காட்சியில் கோழியின் உடல் அசை வுகளை சாப்ளின் நுட்பமாக வெளிப்படுத்தும் அழகு, மிக அழகு!

ஜிம்முக்கும் லார்சனுக்கும் இடையே தங்கத்துக்காக நடக்கும் சண்டையில் ஜிம் தலையில் அடிபட்டு சுய நினைவை இழக்கின்றான், ஆனால் தங்கம் குறித்த நினைவு அப்படியே இருக்கிறது! தங்கம் படுத்தும் பாடு!


மீண்டும் சந்தித்த இருவரும் பழைய கூடாரத்தை கண்டுபிடித்துவிடுகின்றனர். ஆனால் நள்ளிரவு அடித்த சூறாவளி யில் கூடாரம் மலைமுகட்டி ல் தொங்குகின்றது. இது சாப்ளினின் அற்புதமான கற்பனை மட்டுமே அல்ல, தூரக் காட்சியில் மிகுந்த திகில் ஊட்டும் ஒன்றாகவும் உள்ளது. கூடாரத்தின் ஒரு பாதி மலைமுகட்டில் பாதாள த்தை நோக்கி சரிய மறு பாதி மலையில் இருக்க, இவர்களது ஒவ்வொரு அசைவுக்கும் கூடாரம் மேலும் கீழுமாக தள்ளாடுவதைப் பார்க்கும் போது எந்த வினாடியிலும் அது அதல பாதாளத்தில் விழுந்துவிடும் என பார்க்கின்ற நாம் பதைக்கின்றோம்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இருவரும் வெளியேறும் இறுதி நொடியில் கூடாரம் பாதாளத்தில் விழுந்து நொறுங்குகின்றது. தேடி வந்த தங்கமும் கிடைத்திட அலாஸ்க்காவில் இருந்து வெளியேறுகின்றனர். அலாஸ்காவில் இருந்தபோது எதிர்பாராத நேரத்தில் சந்தித்த. ஜார்ஜியா என்ற பெண்ணை கப்பலில் பார்க்கின்றான்    நாயகன். மனம் விரும்ப இருவரும் இணைகிறார்கள்.
......
1925இல் வெளி வந்த படம். ஹாலிவுட்டிலும் நெவேடாவிலும் ஆக 15 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.

தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து அது வரலாற்றில் சமூக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக இன்றைய முதலாளித்துவ அரசு-ஏகபோகக்கூட்டத்தின் வளர்ச்சியோடும் குறிப்பாக  பணவியல் அமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகளின் பரிமாணத்தோடும். இணைந்திருக்கின்றது. இதையே தலைகீழாக சொன்னால் தங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற கூறுகளில் முதலாளித்துவ சமூக அரசியல் நெருக்கடிகளும் பணவீக்கமும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

மஞ்சள் பிசாசு என்ற நூலில் அ.வி.அனிக்கின் கூறுகின்றார்: "மஞ்சள் பிசாசு தன்னுடை ய முகத்தை மாற்றிக்கொள்ள முடியும். அது முன்னேற்றம், கடன் வசதி, தொழில்நுட்ப ம் மற்றும் கலை என்ற கவுரவமான முகமூடிக்கு பின்னால் மறைந்து கொள்கின்றது. முதலாளித்துவம் நீடிக்கின்ற வரை மஞ்சள் பிசாசு உயிரோடு இருக்கும்."

சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் சமூக அவலங்களின் பின்னால் இருக்கின்ற முதலாளித்துவ அரசியலை எள்ளி நகையாடிய மிக சீரியசான படங்கள். அவன் எளிய மக்களைப் பற்றி பேசியவன். ஆகவேதான் அவன் மக்கள் கலைஞன்.

(சார்லி சாப்ளின் பிறந்த நாள் 16 ஏப்ரல் 1889)