ஞாயிறு, ஜூன் 21, 2020

காங்கிரசின் எமெர்ஜென்சியும் ஆர் எஸ் எஸ்-பி ஜே பி நாடகமும்

(விடுதலை பெற்ற இந்தியாவின் இருண்ட காலம் என சொல்லப்படும் அவசரநிலை என்ற எமெர்ஜென்சி 1975 ஜூன் 25 நள்ளிரவில் அன்றைய காங்கிரஸ் அரசின் பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட து. 45 வருடங்களுக்கு பிறகு இன்றைய ஆர் எஸ் எஸ் கூட்டம் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்து கொண்டு அந்த நாட்களில் தாங்கள் வாளெடுத்து வீசி ஜனநாயகம் காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்ததாக எப்போதும் போல புளுக கூடும். உண்மையில் என்ன செய்தார்கள் என்பதை 25.6.2000 நாளிட்ட தீக்கதிர் நாளிதழில் பதிவு செய்திருந்தேன். அப்பதிவு இங்கே மீண்டும்).


1. 2000 ஜூன் 14ஆம் தேதி தி இந்து நாளிதழில் ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் இருண்ட காலமாகக் கருதப்படும் 1975 அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டதை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் விதமாக பா ஜ கட்சி ஒரு வார கால அவசரநிலை எதிர்ப்பு அனுசரிக்க உள்ளது என்பதே அந்த செய்தி. அது தொடர்பான நிகழ்ச்சிகள் டெல்லி, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் நடத்தப்படுமாம். இதை வாசிக்கின்ற யாரும் பொதுவாக 25 வருடங்களுக்கு முன்பு நடந்த ஜனநாயகம், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரான படுகொலையை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்வது நல்லதுதானே என்று கருதக்கூடும்.

2. 1975 ஜூன் 25 நள்ளிரவில் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு எங்கெங்கோ சிறைகளில் அடைக்கப்பட்ட னர். பத்திரிகை தணிக்கை முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த காங்கிரஸ் அல்லாத அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. சிறைகளில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1975 செப்டம்பர் மாத கணக்குப்படியே அறுபதாயிரத்தை தாண்டியதாக தனது 'ஜட்ஜ்மெண்ட்' என்ற நூலில் குல்தீப் நயார் கூறுகின்றார். பல நூறு பேர்கள் சிறைகளில் கொடுமைப் படுத்தப்பட்டு மாண்டனர். பலரது கதி என்னவென்றே தெரியாமல் போனது. 1977 மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. இந்திரா காந்தி அத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். மத்தியில் ஜனதா கட்சியின் ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசாக அது அமைந்தது.

3. ஜனதாக்கட்சி ஆட்சி 1980ஆம் ஆண்டு கவிழ்ந்தது. உண்மையில் அந்த ஆட்சி கவிழ்க்கப் பட்டது. சோசலிஸ்டுகளான மது லிமாயே, ராஜ் நாராயண் இருவரும் ஒரு பிரச்னையை கிளம்பினார்கள். "பழைய பாரதீய ஜனசங்க கட்சி (இன்றைய பாரதீய ஜனதா கட்சி)யினர், இப்போது (1977-80 காலக்கட்டத்தில்) ஜனதா கட்சியிலும் உறுப்பினர் ஆக இருக்கின்றார்கள். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ்-இலும் உறுப்பினர் ஆக இருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, அவர்கள் ஆர் எஸ் எஸ் தொடர்பை கைவிட வேண்டும்" என வற்புறுத்த தொடங்கினார்கள். ஜனசங்கத்தினரோ ஆர் எஸ் எஸ் உறவை , அதாவது உறுப்பினர் பதவியை துறக்க முடியாது என்று உறுதியாக நின்றார்கள். விளைவாக மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்தது. அதாவது இவர்கள் கவிழ்த்தார்கள். 1980இல் பாரதீய ஜனசங்க புட்டிக்கு பாரதீய ஜனதா கட்சி என லேபிள் ஒட்டப்பட்டது. மிதவாதியாக மக்களுக்கு காட்டப்பட்ட அடல் பிகாரி வாஜ்பாய் அதன் தலைவராக ஆக்கப்பட்டார்.

4. இங்கே ஒரு விசயம் ஊன்றிக்கவனிக்கப்பட வேண்டும். ஆர் எஸ் எஸ் என்ற இந்து மத வெறி அமைப்பின் பல்வேறு எடுபிடி கிளை அமைப்புக்களில் ஒன்றுதான் பி ஜே பி, இரண்டுக்கும் ஆன தொப்புள்கொடி உறவு துண்டிக்கப்பட முடியாதது. எனவேதான் ஒரு அரசாங்கமே கவிழ்கின்ற நிலைமை எற்பட்ட போதும் அவர்கள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் ஆக இருப்பதே தலையாய காரியம் என்ற நிலையை எடுத்தார்கள். வேறு சொற்களில் சொன்னால் வாஜ்பாய் ஆனாலும் அத்வானி ஆனாலும் முதலில் ஆர் எஸ் எஸ், பின்னரே பி ஜே பி, மந்திரி மாயம் எல்லாம்.

5. அப்படியானால் இன்றைக்கு அவசர நிலையை எதிர்த்த போராட்டத்தை நடத்திக்காட்ட முயற்சி செய்கின்ற பி ஜே பியின் தாய் பீடமான ஆர் எஸ் எஸ் அன்றைக்கு அவசர நிலை காலத்தின்போது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உண்டாகின்றது. உண்மையில் அவசரநிலை காலத்தை இவர்கள் எதிர்த்தார்களா, ஜனநாயகம் பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை உண்டா என்பது அப்போதுதான் புரியும். இது வெறும் பழைய நிகழ்வுகளை புரட்டுவது மட்டும் அல்ல, இப்போதுள்ள ஆர் எஸ் எஸ்-பி ஜே பியின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ளவும் உதவும்.

6. அவசரநிலை காலத்தின் போது சிறைச்சாலைகளில் தம் உயிரை இழந்தோர் பல ஆயிரம் பேர். காணாமற் போனோரும் பல ஆயிரம் பேர். சிறைச்சாலைகளில் புதிது புதிதாக சித்திரவதை வடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குழந்தைகள், வயதானோர், கிழவர் கிழவிகள் ஆகியோருக்கும் கூட வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்ற கோஷத்தை அன்றைய மத்திய மந்திரி தேவகாந்த பரூவா கண்டுபிடித்து இந்திராவிடம் நல்ல பெயர் வாங்கினார். ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுபவித்த சித்திரவதைகளை தனியே புத்தகமாக அச்சிடலாம். கேரளத்தில் பேராசிரியர் ஈச்சரவாரியாரின் மகனும் என்ஜீனியரிங் மாணவருமான ராஜன் போலீசாரால் பிடித்து செல்லப்பட்டான், திரும்பி வரவே இல்லை. இது போன்ற தடயங்கள் ஏதும் அற்ற மரணங்கள் நாடெங்கும் நடந்தன, கணக்கில்லை.

7. ஜனநாயக சக்திகள் சிறைகளில் இருந்தார்கள், அல்லது தலைமறைவாக இருந்தபடி அவசரநிலை காலத்துக்கு எதிராக தொண்டர்களையும் பொதுமக்களையும் திரட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆர் எஸ் எஸ்-பி ஜே பி கூட்டம் என்ன செய்து கொண்டிருந்த து?

8. அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியத்துக்கு இந்திரா காந்தியை துரத்தியது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்பது தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார், சட்டத்தை திருத்தினார், வழக்கில் வெற்றி பெற்றார். உடனடியாக அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி புளகாங்கிதம் அடைந்தவர் அன்றைய ஆர் எஸ் எஸ் தலைவர் தேவரஸ்.

9. ஆனாலும் என்ன, தேவரஸ் சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் அவருடன் இருந்த மராட்டிய மாநில சோசலிஸ்ட் தலைவர் பாபா ஆதவ், ஆர் எஸ் எஸ் இயக்கத்தவர் சிறையில் என்ன மாதிரியான 'போராட்டம்' நடத்தினர் என்பதை இப்படி விவரிக்கின்றார்:
"சிறையின் உள்ளே வந்த பல ஆர் எஸ் எஸ்காரர்கள் தாங்கள் அவசரநிலை யை எதிர்க்கவில்லை என்றும் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கத்தில் தாங்கள் பங்குபெறவே இல்லை என்றும் புலம்பிக் கொண்டு இருந்தார்கள். உண்மையை சொல்லப்போனால் பல ஆர் எஸ் எஸ்காரர்கள் அவசரநிலை யை ஆதாரிக்கவே செய்தார்கள். தேவரஸ் இருந்த ஏரவாடா சிறையில் தான் நானும் இருந்தேன். உள்ளே என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். இந்திரா, வினோபா, சஞ்சய் காந்திக்கு நெருக்கமானவர்கள், மராட்டிய முதல்வர் எஸ்.பி.சவாண் ஆகியோருடன் தேவரஸ் கடித தொடர்பு வைத்து இருந்தார். 1976 பிப்ரவரி மாதம் இந்திரா பம்பாய் வந்தார். அப்போது அவரை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தன்னை பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்க வழி செய்து கொண்டார். வெளியே இருந்த ஜனசங்க எம் எல் ஏ ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்".

10. "சிறையில் இருந்தபடியே 11.10.1975 அன்று தேவரஸ் இந்திராவுக்கு எழுதிய கடிதம் இது: "உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் உங்கள் தேர்தல் செல்லும் என அறிவித்துள்ளார்கள், இதற்காக என் பாராட்டுதல்களை தெரிவித்துக கொள்கின்றேன். ஆர் எஸ் எஸ் மீதான தடையை நீக்கி ஆர் எஸ் எஸ்காரர்களை விடுதலை செய்யுங்கள், லட்சோபலட்சம் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் தன்னலமற்ற சேவையை (!) நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்".

11. அடுத்து ஆச்சார்ய வினோபாவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதுகின்றார். பம்பாய் ஜார்ஜ் மருத்துவமனை கைதிகள் வார்டு 14 என்ற முகவரியில் இருந்து எழுதிய கடிதம் இது: "பிரதமர் இந்திரா 1976 பிப்ரவரி 24 அன்று உங்களை ஆசிரமத்தில் சந்திக்க இருப்பதாக அறிகின்றேன். பிரதமரிடம் சொல்லி எங்களை விடுவிக்க வழி செய்யுங்கள். பிரதமரின் தலைமையின் கீழ் நாங்கள் சேவை செய்ய தயாராக இருப்பதை சொல்லுங்கள்."

12. ஆர் எஸ் எஸ் லோகத்திலும் ஒரு யோக்கியர் உண்டென்றால் அவர் வாஜ்பாய்தான் என ஒரு பொய்யை கட்டமைத்து உள்ளது அக்கும்பல். அவர் அப்போது என்ன செய்தார்? 13.6.2000 நாளிட்ட தி ஹிந்து நாளிதழில் ஆர் எஸ் எஸ் சிந்தனையாளர் சுப்ரமண்யஸ்வாமியே எழுதியது இது: "அடல் பிகாரி வாஜ்பாய் இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதி தள்ளினார். இருபது மாத அவசரநிலை காலத்தில் அடல்ஜி பல முறை பரோலில் வெளிவந்தார் எனில் காரணம், தான் வெளியே வந்தால் அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என அவர் உறுதி அளித்தார். மேலும் பல ஜனசங்ககாரர்கள் எவ்வாறு நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்வதாக உறுதியளித்து சிறையில் இருந்து வெளியே வந்தார்கள் என்பதை அகாலித்தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் விரிவாக கூறும்.... வாஜ்பாய் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு சமர்ப்பிக்கும் நிலைக்கு தயாரானார். நல்லவேளை, ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதாக இந்திரா காந்தி அறிவித்தார்."

13. பிரிட்டிஷ்காரன் இங்கே அரசாண்டபோது இவர்களின் சித்தாந்த சிங்கம் விநாயக் தாமோதர் சாவர்க்கரை அந்தமான் சிறையில் அடைத்தான். தன்னை சிறையில் இருந்து விடுத்தால் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் ராணிக்கு தன்னை விடவும் விசுவாசமான ஒரு ஊழியனை பார்க்க முடியாது என்ற அளவுக்கு வாலை சுருட்டிக் கொண்டு எந்தவிதமான அரசியல் நடவடிக்கை களிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதாக கடிதம் மேல் கடிதமாக எழுதியவர் சாவர்க்கர். சாவர்க்கரின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்? வெள்ளையனே வெளியேறு போராட்ட இயக்கத்தின்போது வாஜ்பாயும் அவர் சகோதரரும் ஒரு கிராமத்தையே காட்டிக் கொடுக்க காரணமாக இருந்த துரோக வரலாறும் இருக்கின்றது, மறக்க கூடாது.

(மேற்கோள்கள் உதவி: விடுதலை இராசேந்திரன் எழுதிய "ஆர் எஸ் எஸ் ஒரு அபாயம்" என்ற நூல்).

கருத்துகள் இல்லை: