யூனியன் கார்பைட் கம்பெனியில் இருந்து வெளியே கசிந்த MIC எனப்படும் மிதைல் ஐஸோ சயனேட் எனும் வாயுவே இதற்கு காரணம். அதன் தாய் கம்பெனி அமெரிக்காவில் இருந்தது. இந்த விபத்து(?) பற்றிய செய்திகளை அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாண மக்கள் தீவிரமாக கவனித்துக் கொண்டு இருந்தார்கள். அங்குதான் யூனியன் கார்பைடின் தாய் கம்பெனி உள்ளது. அப்போது அமெரிக்காவின் முக்கியமான மூன்று செய்தி டிவிக்கள் போபால் விஷவாயு கசிவை விரிவான செய்தியாக கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
இங்கே carbaryl எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை யூனியன் கார்பைட் உற்பத்தி செய்தது. தவிர, மிக அதிக அளவில் phosgene என்ற நச்சுப்பொருளையும் கிடங்கில் வைத்து இருந்தார்கள். இப்பொருள் முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் மனிதர்களை கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்.
194 டிசம்பர் 31 அன்று போபால் ஹனுமான்கஞ் போலீஸ் நிலைய அதிகாரி வழக்குப்பதிவு செய்து கம்பெனியின் ஐந்து அதிகாரிகளை கைது செய்தார்.
அவர்களில் கம்பெனியின் இந்திய தலைமை நிர்வாகி ஆன அமெரிக்கர் வாரன் ஆண்டர்சன் ஆறே மணி நேரத்தில் பெயிலில் வெளியே வந்தான். மத்யபிரதேஷ் அரசு குற்றவாளி ஆன ஆண்டர்சனை அரசு விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பியது, அவன் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றான், அவ்வளவுதான். மற்றவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகு பெயிலில் வெளியே வந்தனர். மபி அரசின் முதல்வர் அர்ஜுன் சிங், அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி இருவரும் காங்கிரஸ் கட்சியினர் என்பதை தனியே சொல்ல வேண்டியதில்லை.
அமெரிக்காவில் இருந்த தாய் கம்பெனியில் உள்ள நிர்வாகத்துக்கும் இங்கே போபாலில் இருந்த கம்பெனி நிர்வாகத்துக்கும் உள்ள அச்சமூட்டும் வேறுபாடுகள் அதன் பின் வெளியே தெரிந்தன:
அமெரிக்க கம்பெனியில்:
1. திடீர் என பெரும் வாயு கசிவு ஏற்படும் நேரத்தில் அதைக் கட்டுப்படுத்த கூடுதல் அவசரகால vent scrubber ஏற்பாடு உண்டு.
2. அங்குள்ள உற்பத்தி முறைக்கு சிறிய அளவு MIC மட்டுமே இருப்பில் இருந்தால் போதும்.
3. வாயு கசிவு கணிப்பொறி மூலம் கண்டுபிடிக்கப்படும்.
4. பாதுகாப்பு முறைமைகள் அனைத்துமே கணிப்பொறியால் தானியங்கி முறையில் இயங்கி வந்தன.
5. வாயு தொட்டியில் வாயு கசிந்தாலோ வெப்பமும் அழுத்தமும் அதிகரித்தாலோ எச்சரிக்கை மணி தானாகவே இயங்கி அடிக்கும்.
6. குளிர்விக்கும் பிரிவில் உள்ள வேதிப்பொருட்கள் 0 டிகிரி சென்டிகிரேட்டுக்கு கீழே வைக்கப்பட்டன.
7. விபத்து நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி தப்பிக்க வேண்டும், என்ன மாதிரியான அவசர கால சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கம்பெனி ஊழியர்கள், அந்த ஊரின் பொதுமக்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.
இந்திய கம்பெனியில்:
1. அவசர கால vent scrubber இல்லை. எனவே வாயு மிகப்பெரும் அளவு கசிந்து நீரிலும் காற்றிலும் நிலத்திலும் மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் கலந்து அனைத்தையும் விசமாக்கியது.
2. பெரும் அளவு வாயு சேமிப்பில் இருந்தது, அதுவும் பெரிய அளவிலான தொழில்நுட்ப ரீதியாக மட்டமான தொட்டியில்.
3. கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை, மனிதர்கள் முகர்ந்தால் அல்லது கண் எரிச்சல் ஏற்பட்டால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். அதாவது விபத்து நேர்ந்ததை சொல்ல கணிப்பொறி அமைப்போ தானியங்கி அமைப்போ இல்லை. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவைப்போல் 100 மடங்கு வெளியேறினால் மட்டுமே கண்கள் எரியும்!
4. பாதுகாப்பு முறைகள் எல்லாமே மனிதர்களால் செய்யப்படும். அதாவது கணிப்பொறியோ தானியங்கி அமைப்போ இல்லை.
5. எச்சரிக்கை மணி ஒழுங்காக இயங்கவில்லை, அது இயங்குகின்றதா என்று அவ்வப்போது சோதனை செய்யவும் இல்லை.
6. வேதிப்பொருட்கள் 11 முதல் 26 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்கப்பட்டன. மேலும் குளிர்விக்கும் பிரிவு செலவு கருதி ஆறு மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.
7. அப்படியான விபத்துக்கால, ஆபத்துக்கால பயிற்சிகள் எதுவும் அளிக்கப்படவில்லை.
மேலும் விபத்து நடக்கும் முன் MIC இருந்த தொட்டி 200 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் இருந்தது. 1996இல் போபால் செய்தி-நடவடிக்கைக்குழு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், 1969 முதல் தொழிற்சாலை வளாகத்தில் அங்கும் இங்குமாக சேர்த்தும் புதைக்கப்பட்டும் இருந்த வேதிப்பொருட்களும், புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்களும் உற்பத்தியால் வெளியாகும் கழிவு வேதிப்பொருட்களும் அந்த ஊரின் மண்வளம், நீர் வளம் அனைத்தையும் நாசம் செய்ததும், இதனால் ஊர் மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி மோசமான வாழ்க்கை வாழ்வதும் தெரிந்தது. பாதரசம், குரோமியம், செம்பு, நிக்கல், ஈயம் உள்ளிட்ட பல நச்சுப்பொருட்கள் இதில் அடங்கும்.
விபத்துக்குப்பின் பல சமூக ஆர்வலர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் விசவாயு கசிவுக்கான காரணங்களை ஆராய முற்பட்டு அங்கே சென்றபோது அரசு நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. விபத்து தொடர்பான பல வழக்குகள் இன்னும் முடியவே இல்லை என்பதும் இப்போதும் பிறக்கின்ற குழந்தைகள் உடல் அல்லது மன ஊனத்துடன் பிறக்கின்றன என்பதும் இந்தியாவில் விசாரணைக்கு வராமலேயே வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் மரணம் அடைந்தான் என்பதும் எதைக் காட்டுகின்றது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக