வெள்ளி, டிசம்பர் 25, 2020

தொ பரமசிவன்

தொ பரமசிவன் அவர்கள் (1950-24.12.2020), sbs ஆஸ்திரேலியா வானொலிக்கு அளித்த நேர்காணல்:

இந்தியாவிலேயே சாதிபெயரைப் பெயரில் போடாத ஒரு மக்கள் கூட்டம் உருவாகி இருப்பது தமிழகத்தில்தான். பெரியாருடைய புண்ணியம். பெரியார்தான் அந்த வழியைக்காட்டினார்.

சாதிப்பெயரை முழுமையாக மனிதன் விலக்குவது என்பதை காட்டியது தமிழ்நாடுதான், பெரியார்தான். அந்த விவேகம், அந்தப்பெருமையை நாம் இழந்துகொண்டு இருக்கின்றோம். தமிழகத்தில் இப்போது பெண்களும் சாதிபெயரைப் போடுகின்றனர்... உஷா ஐயர் என்பது போல். சாதி தன்னைத்தானே மறு உற்பத்தி செய்து கொண்டு இருக்கிறது. மார்க்சியம் பரவிய கேரளாவிலும் வங்கத்திலும் கூட சாதிய ஒட்டுக்களை போட்டுக்கொள்கின்றார்கள்.

சாதி என்பது உள்வட்டத்திருமண ஏற்பாடு. இதன் கடுமையை குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் பார்க்கலாம். இன்ன சாதி, இந்த ஊர் பெண், அதிலும் புங்குடு தீவு வெள்ளாளர் பெண் வேண்டும் என்ற விளம்பரத்தை... கனடாவில் பார்த்தேன். வேதனைப்பட்டேன். எங்கே போனாலும் சாதீய அழுக்கு மூட்டையை தமிழன் சுமந்துகொண்டே போகின்றான். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது என் சாதி ஒட்டை கேட்டார்கள், நீங்கள் ரெட்டியா, செட்டியா, குப்தாவா, மேனனா... நான் பரமசிவம், அவ்வளவுதான் என்று சொன்னேன்.

திராவிடம் என்ற சொல் பண்பாட்டு அடையாளம். தாய் மாமனுக்கு ஆன மரியாதை, பெண்களின் உடல் மீதான வன்முறையை நிராகரித்தல், இறந்து போன உடலுக்கு மரியாதை செய்தல், இந்த மூன்று அடையாளங்கள். திராவிடம் என்பது இனம், சாதி, மொழி அடையாளம் அல்ல. தாய் மாமனுக்கு மரியாதையை நான்கு தென் மாநிலங்களில் பார்க்கலாம். Cross cousin marriage. அதாவது முறைப்பெண்ணை அல்லது முறைப்பையனை திருமணம் செய்வது. இது பிராமணர் அல்லாதார் உடைய வழக்கம். பாரம்பரியமாகவே பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்ட சமுதாயத்தில் பெண் தனக்குரிய பங்கை தேர்ந்தெடுத்து கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உபாயம். சொத்து இல்லாமல் போய்விடக் கூடிய மகளுக்கு, அந்தக் குடும்பத்தின் சொத்தை அனுபவிக்கும் ஒரு வழியாக அதே குடும்பத்தில் உள்ள ஆணுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம், அல்லது அதே குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணை எடுத்து திருமணம் செய்து கொள்வதன் மூலம் சொத்தின் பகுதியை மீண்டும் அனுபவிக்கும் வழி இது. சொத்துடைமை சார்ந்த இந்த வழக்கம் பெண்களால் உருவாக்கப்பட்டது. மாமன் மகளையோ அத்தை மகளையோ கடத்திக்கொண்டு போகலாம், அது ஒரு குற்றமாக பார்க்கப் படுவதில்லை. 

இறந்தவர்கள் மீண்டும் பிறக்கின்றார்கள், அழிவதில்லை என்ற நம்பிக்கை. தாத்தா, பாட்டிகள் மீண்டும் பிறக்கின்றார்கள், பேரன், பேத்தி வழியாக regenerate ஆகின்றார்கள். பெயரன், பெயர்த்தி என்ற சொல்லுக்கு மீண்டு வருபவர்கள் என்றுதான் பொருள். இது நம்பிக்கை சார்ந்தது, optimism. இறந்தவர்களின் உடலுக்கு செய்கின்ற மரியாதை எல்லாம் அவர்களின் பயணத்துக்கு வழியனுப்புதல்தான். வாயிலே அரிசி போடுதல், நெற்றியில் காசு வைத்தல்... பெரும் வயதானவர்கள் எனில், கிழவி எனில், அவள் கையில் வெற்றிலையையும் கதலிப் பழத்தையும் வைத்து, அந்தக் கூட்டத்தில் குழந்தை பெறாத பெண் யாராவது இருந்தால் அவளை அழைத்து, அந்த வெற்றிலையையும் கதலிப் பழத்தையும் அவள் முந்திச்சேலையில் போடுவார்கள். அதாவது நான் உனக்கு குழந்தையாக வந்து பிறப்பேன் என்று கிழவி சொல்வதாக நம்பிக்கை. ஆக இறப்பு என்பது, குறிப்பாக வயது முதிர்ந்தோரின் இறப்பு என்பது துயர சடங்காக இல்லாமல், மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாக இருக்கும். வழியனுப்பும் சடங்கு, வேறொரு உலகத்திற்கு போகின்றார்கள், திரும்பவும் வருவார்கள் என்ற நம்பிக்கை.

நடுகல். 16ஆம் நாள் கருமாதி என்பதற்கு பெயரே கல் என்பதுதான். நாட்டார் வழக்கு. மூன்று கல்களை வைத்து செய்வது. அந்த வழக்கத்தை புலிகள் எடுத்து வணக்கத்துக்குரியதாக செய்தார்கள். மாவீரர் துயிலும் இடம் என்று... 

கேள்வி: கோவில்களிலும் சமூகத்திலும் நடக்கும் சடங்குகளை பெரியார் பலமாக எதிர்த்தார், அவரைப் போற்றும் நீங்கள் சடங்குகளை ஏற்றுக்கொள்கின்றீர்களே?

தொ. ப.:  பெரியார் காலத்து சமூகவியல் அறிவு அந்த அளவுக்கே இருந்தது. இன்றைக்கு பெரிதாக வளர்ந்துள்ளது. ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை விடமாட்டோம் என்றால் பெரியார் மூர்க்கமாக எதிர்த்து இருப்பார். Menstrual taboo என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும்.

மக்கள் சமூகத்தின் எல்லா அசைவுகளையும் கவனியுங்கள்.Lore எனப்படும் வழக்காறுகளை, பழமொழிகளை, கெட்ட வார்த்தைகளை எல்லாவற்றையும் ஆய்வு செய்யுங்கள். கோவிலில் ஆட்டை பலியிட்டு, அதன் காலை அதன் வாயில் வைத்து பீடத்தில் வைப்பார்கள். எல்லாமும் ஆய்வுக்கு உட்பட்டவையே, விலக்கு என்று எதுவும் இல்லை. Anything under the Sun. தேடுங்கள், என், எதற்கு?

..... ...

சிகிச்சைக்கு பின் என் வலது காலை அகற்றி விட்டார்கள். ... ஒன்றுமில்லை, நூலகத்தில் நின்றுகொண்டே புத்தகங்களை தேட முடியவில்லை என்ற ஒரே துயரம்தான். இரண்டு அடி கூட நடக்க முடியவில்லை அல்லவா?

... .... ......

இணைப்பை அனுப்பி வைத்த தோழர் எஸ் வி ஆர் அவர்களுக்கு நன்றி!  

www.sbs.com.au/language/tamil/audio/question-everything-advice-to-youngsters

கருத்துகள் இல்லை: