மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: நூல் மதிப்புரை: கமலாலயன்,மணல்வீடு இதழ் 55, ஏப்ரல்-மே-ஜூன்
…
எம்.பி.எஸ். எனும் சேர்ந்திசை வெள்ளம்
மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் வாழ்க்கை வரலாற்று நூலை முன்வைத்து…
மு.இக்பால் அகமது, அடிப்படையில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்த ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். செங்கோட்டைக்கு அருகில், தென்காசியில் பிறந்த அவர், மதுரையிலே அரசுப்பள்ளியில் பயின்றவர். வேலை தேடி சென்னைக்கு வந்து, ஆவடியிலுள்ள பாதுகாப்புத் துறை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். பணி ஓய்வும் பெற்றுவிட்டார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் உண்டு.
ஸ்டாலின், மாவோ ஆகிய பொதுவுடைமைத் தலைவர்கள் எழுதிய நூல்களில் இரண்டிலுமாக மூன்று தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். வரலாறு, அரசியல், இசை, திரைப்படம், பயணங்கள் - இவையெல்லாம் இக்பாலின் விருப்பத்திற்குரிய தேர்வுகள். இவரின் எழுத்தும் வாசிப்பும் பூராவும் மேற்கண்ட பொருண்மைகளை மையங்கொண்டே விரிவும் ஆழமும் பெற்று வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இவரின் மொழியாக்க நூல்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நூல் எனில், அது ‘மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும்' என்ற, கான்ராட் வுட் எழுதிய நூல். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் போது, கேரளாவின் மலபார் பகுதியில் மாப்ளா முஸ்லிம் விவசாயிகளின் எழுச்சி பற்றிய அரிய ஆவண நூல் இது.
மாவோ நூல் தொகுதிகள் ஒன்பதின் தமிழாக்கம் ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் தொகுதிக்கான விருது பெற்றது. அவற்றில் ஐந்து, ஒன்பது ஆகிய இரு தொகுதிகள் இக்பாலின் மொழி பெயர்ப்புகள் என்பது இன்னும் ஒரு சிறப்பு. ஸ்டாலின் படைப்புகளில் தேர்வு நூல்கள் தொகுதி ஏழு இவர் மொழிபெயர்த்தது. மேற்கண்ட எல்லா நூல்களையும் அலைகள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டிருப்பவர் 'அலைகள்' சிவம் அவர்கள்.
சிறுகதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். 'வேலிகளுக்கு அப்பால்...' என்பது இவரின் வலைப் பூ. தமுஎக சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளில் முன்னணி ஊழியர்.
இவருடைய நான்காண்டு கால உழைப்பின் விளைச்சல்தான் இப்போது நம் கைகளுக்கு வந்திருக்கும் 'மக்களிசை மேதை எம்.பி.எஸ்' எனும் நூல். 'பரிசல்' புத்தக நிலையம் சார்பில் தோழர் செந்தில்நாதன் இதை மிக அழகிய பதிப்பாக வெளியிட் டிருக்கிறார். மேலட்டையையும், உள் பக்கங்களை யும் மிகுந்த சிரத்தையுடன் வடிவமைத்திருப்பவர் தோழர் பா.ஜீவமணி அவர்கள்.
'தென்னங்கீற்று ஊஞ்சலிலே', 'சின்னச்சின்ன மூக்குத்தியாம்' ஆகிய இரு திரைப்படப்பாடல்கள், அறுபதுகளில் பள்ளிப்பிராயத்தில் இருந்த இக்பாலின் மனதில் பதிந்த இசைப்பாடல்கள். எனக்கும், என் போன்று ஐம்பது - எழுபதுகளில் பள்ளிச் சென்ற பலருக்கும் இந்தப் பாடல்கள் மிகவும் பரிச்சயம் ஆனவை மட்டுமன்றி, மிகப் பிடித்தமானவையும் கூட. இவற்றுக்கு இசையமைத்தவர் எம்.பி. சீனிவாசன் என்ற மாபெரும் இசைக் கலைஞர். தமிழில் எட்டுத் திரைப்படங்களுக்கும், மலையாளத்தில் சுமார் அறுபதுக்கு மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்தவர். தவிர, முப்பத்து மூன்று மலையாள மொழிப் படங்களுக்குப் படங்களுக்குப் பாடல்கள்இல்லாமல் பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளார். தனியாக ஏழு இசைத் தொகுப்புகள் வெளியிட்டவர். இரண்டிலுமாகச் சேர்த்து, சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்களின் இசையமைப்பாளர் இவர். 'சேர்ந்திசை’ எனும் ஓர் அரிய இசையமைப்பு வடிவை இந்திய அளவில் அறிமுகம் செய்து மிகவும் பிரபலமான ஒன்றாக, இன்றளவும் நிலைத்து நிற்கும் ஒன்றாக ஆக்கிய பெருமை, எம்.பி.எஸ் ஒருவரையே சாரும். இதை எழுதும் இந்த நிமிடங்களில், 'பாடசாலை போக வேண்டும், பாப்பா எழுந்திரு! செல்லப்பாப்பா எழுந்திரு!' என்ற பாடல் என் நினைவில் எழுந்து காதுகளில் ஒலித்து இதயத்தில் நிரம்புகிறது. காரணம், நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த அந்த நாள்களில், அன்றைய அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் அனேகமாகத் தினமும் பகல் பன்னிரண்டரை மணி வாக்கில் கேட்டுக் கேட்டு மனதில் பதிந்த பாடல் இது.
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
எனும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடலும் அவ்வப் போது வானொலியில் ஒலிக்கும். மேலே கண்ட இரு பாடல்களுமே பிஞ்சு மனங்களில் கல்வியின் அவசியத்தைப்பதிய வைக்கும் அற்புதங்கள்.
தேவாலயங்களின் பூசைக்காலங்களிலும், கிறிஸ்துமஸ் விழா நாள்களிலும் 'choir' எனப்படும் சேர்ந்திசை வடிவம் ஐரோப்பிய நாடுகளில் மிக நன்கு அறியப்பட்ட வடிவம். இங்கே மார்கழி பஜனைக் குழுக்களின் பாடல்களை அத்துடன் ஓரளவு ஒப்பிடலாம் எனினும், எம்.பி.எஸ் அறிமுகம் செய்து வளர்த் தெடுத்த சேர்ந்திசை வடிவம் முற்றிலும் வேறு ரகமானது. அடிப்படைகளில் சில அம்சங்களில் ஒற்றுமை இருக்கலாம். ஆனால், அவர் தேர்வு செய்த பாடல்கள், இசையமைப்பு, குறிக்கோள் எல்லாமே வேறுபட்டவை. அப்படியென்ன வேறுபாடு எனும் கேள்வி வாசகர்களுக்கு எழும். அவ்வாறு கேள்வி எழும்பட்சத்தில், நீங்கள் செய்ய வேண்டிய முதற் காரியம், இக்பால் எழுதியிருக்கும் இந்த நூலை முழுமையாகப் படிப்பதுதான்!
ஒரு மேதையின் வரலாற்று நூலில் காலவரிசைப்படி அவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் கட்டாயம் இடம்பெறும்; பெற வேண்டும். இந்த நூலிலும் அது இருக்கிறது. ஆனால், அவற்றை இக்பால் விவரிக்கும் விதத்தைப் படிக்கையில், அவை ஒவ்வொன்றின் சம காலத்தில் நாட்டில் நடைபெற்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், அந்த நிகழ்வுகளில் தொடர்புடைய மாமனிதர்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை ஏற்படுத்திய இன்ப - துன்பங்கள், அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அரசாங்கங்களின் அணுகுமுறைகள் போன்று பல்வேறு செய்திகள் மிக நுணுக்கமாகத் தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டு வந்திருப்பதை நாம் உணர்கிறோம். இக்பாலின் கதைசொல்லும் முறை மிக வித்தியாச மான, தனி ரகமான ஒன்று.
எம்.பி.சீனிவாசன் ஓர் இசையமைப்பாளர். நிமாய் கோஷ் என்ற வட நாட்டுக்காரர், வங்காளி, ஓர் ஒளிப்பதிவாளர். இந்த இருவரும் சேர்ந்து பல படங்களில் பணி செய்திருக்கிறார்கள். அதுவல்ல இந்தப் புத்தகம் கொண்டாடும் விஷயம். இருவரும் சேர்ந்து, அன்றைய தமிழ்த்திரைப்படத் தொழிற்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்று திரட்டித் தொழிற்சங்கம் அமைத்து, எட்டு மணி நேர ஷிப்ட் முறை, வேலை நிறைவடைந்ததும், வியர்வை உலரு முன் தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகும் ஏற்பாடு எனப் பல்வேறு உரிமை களுக்கு வழி வகுத்துத் தந்தப் போராளிகள் என்பதே இக்பால் கொண்டாடும் அம்சம்.
இன்றைய புகழ்பெற்ற திரையிசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையான ஆர்.கே.சேகர் என்கிற ராஜகோபாலகுலசேகர் எம்.பி.எஸ்சின் இசைப் பயணத்தில் ஒரு முழுநேர உதவியாளர் என்பது இன்னொரு முக்கியத் தகவல். இவர் 52 திரைப் படங்களுக்கு மேல் இசையமைத்தவர்; தவிர, அன்றைய புகழ்பெற்ற திரையிசை அமைப்பாளர் களின் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களின் இசைக் கோவையாளர், இசை நெறியாளர்.
டெல்லியில் நாடாளுமன்ற மக்களவையில், எதிர்க் கட்சித்தலைவராக, கம்யூனிஸ்ட் கட்சியின் பதினாறு உறுப்பினர்களின் நெறியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த ஏ.கே.கோபாலனின் உதவியாளராக எம்.பி.எஸ் பணி செய்யப்போக வேண்டும் எனக் கட்சி முடிவு செய்தது. அதைச் சிரமேற்கொண்டு, இவரும் டெல்லிக்குப் போனார். அவரது அரசியல் ஆர்வம் அங்குக் கூர் தீட்டப்பட்டுப் பிரகாசித்தது. அது ஒருபுறம் இருக்க, அங்கே கட்சியின் தலைமையில் நாடெங்கிலும் இயங்கி வந்த 'இப்டா' (இந்திய மக்கள் நாடக மன்றம் - இந்தியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷன்) என்ற கலை, பண்பாட்டு அமைப்பின் தொடர்பு எம்.பி.எஸிற்குள் இருந்த ஓர் இசைக்கலைஞன் முழு வீச்சில் வெளிப்பட்டுப் பரிணமிக்க அடித்தளம் அமைத்தது. இக்பால் இந்த அம்சத்தை மிக விரிவான ஒரு சித்திரமாகத் தீட்டிக் காட்டுகிறார்.
அங்கு அவர் நேரடியாகக் கண்டுணர்ந்த அம்சங்களை, இக்பால் பின்வருமாறு தொகுத்திருக்கிறார்: "இந்திய இசை என்ற ஒற்றை அடையாளம் ஏதுமில்லை என்பதையும், இந்தியாவின் பல மாநிலங் களில் இசை வடிவங்களும், மரபுகளும் அவ்வவற்றுக்கான தனித்தன்மையுடன் வேறுபட்டுச் செழுமையாகநிலவுவதையும் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் இசையை முறையாகவும், முழுக் கவனத்துடனும் கற்பதில் செலவிட்டார். தொன்று தொட்ட கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகிய வடிவங்களின் அடிப் படைகளை முழு மூச்சுடன் கற்றுத்தேர்ந்தார். இந்த இசையறிவைத் தனது மண்ணான தமிழ்நாட்டின் மரபான நாட்டுப்புற இசையோடு இணைத்து,புதிய பரிமாணங்களை உருவாக்குவது என்பதை முயன்று சிந்தித்துத் தனது பரிசோதனை முயற்சியில் வெற்றியும் கண்டார்..." (ப.56)
1955-ஆம் ஆண்டில், கட்சிப் பணியை நிறைவு செய்துவிட்டுச் சென்னைக்குத் திரும்பினார் எம்.பி. எஸ். அதன் பிறகு, முற்றிலும் வேறுபட்ட ஓர் இசைப்பயணத்தைத் தொடங்கி, தன் இறுதி மூச்சு வரை - இந்த வார்த்தைகள் நிஜமாகவே எதார்த்தமாகின. ஆம், இலட்சத்தீவுகளில் ஓர் இசையமைப்புப் பணிக்காகப் போயிருந்தபோது, எதிர்பாராமல் மாரடைப்பு ஏற்பட்டுத்தான் அவர் மறைந்தார்! திரையிசை, மக்களிசை, சேர்ந்திசை - இந்த மூன்றின் அபூர்வமான ஒரு கலவையாகத் தனது கொடையைத் தந்து சென்றிருக்கிறார்!
இசை என்றால் கர்நாடக சங்கீதம், சாஸ்த்ரீய சங்கீதம் என்று மட்டுமே சாதித்து வருவோரின் குரல், இன்று கொஞ்சம்பலவீனமாக ஒலிப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், அது வெறும் புறத்தோற்றம் மட்டுமே. அன்றும், இன்றும் 'சங்கீதம்' என்றுதான் அவர்கள் இசையைப் பற்றிப் பேசும்போதும், எழுதும்போதும் குறிப்பிடுகிறார்கள். சங்கீத மும்மூர்த்திகள் என்றால், தியாகையர், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள் மட்டுமே. தமிழிசை? அட, வெறும் துக்கடா! தமிழிசை மூவர்? அப்படி யார் இருக்கிறார்கள் ?
தமிழில் நல்ல இசைப்பாடல்கள் கிடையாது; இருந்தால்தானே நாங்கள் பாட முடியும் என்று இங்கே தமிழிசை இயக்கம் கொஞ்சம் சூடு பிடித்தபோது பல 'வித்வான்'கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாரதி ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து அன்றைக்கே இந்தப் பிரச்சினை பற்றி எழுதியதில் சில வரிகளை இங்கே நினைவுகூரத் தோன்று கிறது: “நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம்' என்று ஆரம்பஞ் செய்கிறார். "ராம, நீ சமானமெவரு”, “மரியாத காதுரா”, ...ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.
எந்த ஜில்லாவுக்குப் போ, எந்தக் கிராமத்திற்குப் போ. எந்த 'வித்வான்' வந்தாலும், இதே கதை தான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்பு காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுகளை வருடக்கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தோற்காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தக் கீர்த்தனங்களெல்லாம் சமஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி வித்வான்களுக்கு இந்தக் கீர்த்தனங் களின் அர்த்தம் தெரியாது. எழுத்துகளையும், பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள்...” என மகாகவி பாரதி மிக விரிவாக எழுதிக் கொண்டு போகிறார். வித்வான்கள் பாடும் பாடல்களைப் பற்றி மட்டுமன்றி, இல்லங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் பாடும் பாடல் களைப் பற்றியும் பேசுகிறார். வித்வான்கள், பிரபுக்களை மட்டும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது; பொதுமக்களையும் அணுக வேண்டும். அவர்களுக்குப் புரியும் மொழியில், அவர்களின் ரசனையை உயர்த்தும் வகையில் பாட வேண்டும். அப்படிப் பாடினால், தலைக்குக் கால் ரூபாய் பணம் வசூலித்து 1000 ரூபாய் நிதி கொடுப்பார்கள் என்கிறார். இன்றைக்குக் 'க்ரவ்ட் ஃப்ன்டிங்' பற்றி நாம் பேசிக்கொண்டிருக் கிறோம். அதைப் போகிற போக்கில் பாரதி எழுதிச் செல்கிறார்.
இசையையும், எழுத்தையும், இலக்கியங்களையும், பிற நுண்கலைகளையும் சாதாரண மனிதர்கள் அணுக முடியாத, அவர்கள் அணுகவே கூடாத, ஓர் உன்னத விஷயம் என உயரத்தில் தூக்கி வைத்துக்கொண்டு மிரட்டும் 'மேட்டுக்குடி' போக்கை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் 'தவம்!', வேள்வி என்கிறார்கள். அவர்களுக்கு அது 'தவம்' கூட இல்லை, அது 'தபஸ்' தான்! நான் இங்கே அறிமுகம் செய்திருக்கும் நூலுக்கும், இந்த முன்னுரையில் நான் குறிப்பிடும் மேற்கண்ட சில விஷயங்களுக்கும் ஓர் இணைப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த விஷயங்கள் பற்றிய சில மனப்பதிவுகளைக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். 'மக்களிசை மேதை' என்றோர் அடைமொழியை இக்பால் எம்.பி.சீனிவாசனுக்குத் தந்திருக்கிறார். ஏன்? மற்ற இசை மேதைகளும் மக்களுக்காகப் பாடிய, இசையமைத்தவர்கள்தாமே? ஆமாம்! ஆனால், மற்றவர்களுக்கும், எம்.பி. எஸ்ஸுக்கும் ஓர் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் இந்த நூலைக் கருத்தூன்றிப் படித்தாக வேண் டும். "ஒரு பாடலையோ, இசைத் துணுக்கையோ, அல்லது ஓர் இசையமைப்பாளரின் திறனையோ மதிப்பிட வேண்டுமெனில், ரசிக மனநிலையைக் கடந்து செல்ல வேண்டியது அவசியம். விருப்பு வெறுப்பற்ற மனநிலைக்குச் செல்லவேண்டிய அவசியம் உள்ளது” என்கிறார் இக்பால். அத்தகைய ஒரு மனநிலையிலிருந்துதான் இந்த நூலை தான் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். அது உண்மைதான் என்று இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கையில் நாமும் உணர்கிறோம்.
எம்.பி.எஸ். எழுதிய மூன்று கட்டுரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவரின் மேதைமையை உணர அவை துணை செய்கின்றன. கர்நாடக இசையை, கலைஞர்களை மையப்பொருளாகக் கொண்ட சிலபடங்கள் பெரும் வெற்றி பெற்றிருப்பனவாக நமக்கு அறிமுகம் ஆகியுள்ளன. அவற்றுள் ஒன்று, மலையாளப்படமான 'ஸ்வாதித் திருநாள்'. 'ஸ்வாதித் திருநாள் ராமவர்மா' என்ற திருவாங்கூர் மன்னரின் கதை அது. இயக்குநர் லெனின் ராஜேந்திரன்.
ஸ்வாதித் திருநாள் ஓர் இசைக்கலைஞர். அவரே இயற்றிய பத்தொன்பது பாடல்கள் இதில் எம்.பி.எஸ் இசையமைப்பில் இடம் பெற்றிருந்தனவாம். அந்தப் படத்தில் பின்னணி பாடிய பாலமுரளி கிருஷ்ணாவுக்குக் கேரள அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும், எம்.பி.எஸ்ஸுக்குச் சிறப்புப் பரிசும் கிடைத்தன.
ஜான் ஆப்ரகாம் என்ற ஓர் அபூர்வமான திரைப் பட இயக்குநர் இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தில், கல்லூரிப் பேராசிரியர் நாராயணசாமியாக நடித்தவர் எம்.பி.எஸ்! வெங்கட் சாமிநாதனின் கதை இது.
இந்த மாதிரியான தகவல்கள் நூலில் ஏராளமாக உள்ளன. அவற்றை வெறும் செய்திகளாகத் தராமல், இடையிடையே தனது கருத்துகள், பிற எழுத்தாளர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்கள், பத்திரிகைகளில் இடம்பெற்ற விமர்சனங்கள் எனப் பல்வேறு தரவுகளின் துணையுடன் தந்திருக்கிறார் இக்பால்.
“தமிழில் எம்.பி.எஸ் இசையமைத்த முதல் படமான 'பாதை தெரியுது பார்' படத்தின் பாடல்களில் ஒன்று ஜெயகாந்தன் எழுதியது. 'தென்னங் கீற்று ஊஞ்சலிலே...' எனும் அந்தப்பாடலின் வரிகள், மிக மென்மையான இயற்கைச் சூழலைச் சொல்வன; அவரது மெட்டும் அவ்வாறே தாலாட்டும் வகையில் அமைந்தது.
அதற்கு நேரெதிர் முனையில், 'உண்மை நாள் வெளியாகும்...' எனும் பாடலோ, தொழிலாளி வர்க்கம், அதிகார வர்க்கத்துக்கு எதிராகக் கிளர்ந்து போர்க்குரல் எழுப்பியவாறு பெரும் படைதிரட்டி ஊர்வலமாகச் செல்லும் காட்சியைச் சித்திரிப்பது. ஐரோப்பிய பாணியில் அமைந்த ராணுவ அணி வகுப்புக்கான மிடுக்கான நாதம் எழுப்பும் இசைக் கருவிகளை இப்பாடலில் பயன்படுத்தியிருப்பார். 'மாசில் வீணையும்' எனும் தேவாரப் பாடல், தூய கர்நாடக இசையில் அமைந்தது.
தன்னவளை வர்ணிக்கும் ஓர் ஆணின் கவியழகு மிக்க வரிகளுக்கு எந்தக் குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஆழ்ந்த கவனத்துடன் அமைக்கப்பட்ட மெட்டு என்பதை, 'சின்னச் சின்ன மூக்குத்தியாம்’ பாடலைக் கேட்கும் போது உணர முடியும்” என ஆற்று நீரின் சலசலப்பு போல, மெல்லப் பெருகியோடும் உரைநடைப் பாடலாக இக்பாலின் சொல்லிசை, நிறை வடிவம் பெற்றுப் பெருகுகிறது.
சேர்ந்திசைக்குப் பொதுவாகத் திருவையாறில் தியாகையரின் ஆராதனை விழா நாளில் பல வித்வான்கள் சேர்ந்து இசைக்கும் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் பாடுவதையே உதாரணமாகக் கூறுவார்கள். ஆனால், அங்கே எம்.பி.எஸ்ஸின் சேர்ந்திசையில் இருக்கும் ஒருங்கிணைப்போ, ஒழுங்கோ, ஒரு நெறியாளரின் வழி காட்டலுக்கிணங்கப் பாடும் தன்மையோ இருப்பதில்லை. இந்த வேறுபாட்டைக் கருத்திற் கொண்டுதான் இசை விமரிசகர் சுப்புடு, "திருவையாற்றுக்கு ஓர் எம்.பி.சீனிவாசன் வேண்டும்" என எழுதியிருக்கிறார் போலும்!
"இவ்வளவு திறமைகள் படைத்திருந்தும், இவரைத் தமிழ்சினிமா நிராகரித்திருப்பதற்குக் காரணம், இவரது மார்க்சியவாதமும் யூனியனிசமும் ஆக இருக்கலாம். ஆனால், அவர் அது பற்றிக் கவலைப்படவில்லை” என மிகத் துல்லியமாக எழுத்தாளர், சினிமாக் கதை வசனகர்த்தாவான சுஜாதா எழுதியிருக்கிறார்!
தமுஎக சங்கம் நடத்திய மக்கள் இசைப் பயிற்சி முகாமில் பயிற்றுநராகப் பங்கேற்ற பங்கேற்ற எம். பி. எஸ் சவெளிப்படுத்திய ஆதங்கம், பாரதியின் 'பாம்புப் பிடாரன்' வசன கவிதைக்குத் தான் இசையமைத்த அனுபவம் பற்றி அவரே விவரிக்கும் இடம் என இந்த நூல் முழுக்க ஒரு தேர்ந்த வாசகன் படித்துப் பரவசம் அடைவதற்கு எண்ணற்ற அழகிய சித்திரிப்புகள் உள்ளன. எழுதிய இக்பாலையும், வெளியிட்ட செந்தில்நாதனையும் பாராட்ட எனக்கு இடம் போதாது!