முப்பது ஆண்டுகள் நாடக வாழ்க்கையில் 29 முறை பிரிட்டிஷ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டவர்.
நாடக மேடையிலேயே உயிரை நீத்தவர். பாடுவதற்கு மைக் இல்லாத காலம் அது. எனவே கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவருக்கும் பேசுவதும் பாடுவ்தும் கேட்கும் வகையில் உரத்த குரலில் ஓங்கிப்பாட வேண்டும். ஹார்மோனியம் வாசிப்பவர் ஐந்து கட்டை சுருதியில் பாட வேண்டும்.
தனது முப்பது வருட நாடக வாழ்க்கையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, சின்னமனூர், மேலூர் என தமிழ்நாட்டின் பல ஊர்களிலும், சிங்கப்பூர், இலங்கை, பினாங்கு, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் நாடகம் நடத்தியவர் விஸ்வநாததாஸ்.
சிவகாசியில் சுப்பிரமணியம், ஞானம்மாள் தம்பதியர்க்கு இரண்டாவதுமகனாகப் பிறந்தவர் விஸ்வநாத தாஸ். மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த குடும்பம். இசை, நெசவு, மருத்துவம் ஆகியவற்றில் தேர்ந்தவர் சுப்பிரமணியம். ஞானம்மாள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர். விஸ்வநாத தாஸ், இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் என ஆறு மக்கள் இவர்களுக்கு.
அம்மாவின் ஊரான திருமங்கலத்தில் தாத்தாவுடன் வசித்து வந்த விஸ்வநாத தாஸ், பக்கத்தில் உள்ள கோவிலில் சனிக்கிழமை தோறும் தாசரதிகள் காலில் சலங்கை கட்டி சப்ளாக்கட்டை, மேளம் அடித்து குதித்து ஆடும் திருப்பெயர் சரவெடிப் பாடலை தவறாமல் கேட்டும் பார்த்தும் வர, ஒரு கட்டத்தில் தாசரதிகள் வராத நாட்களில் விஸ்வநாத தாஸ் சலங்கை கட்டி பாடி ஆடத்தொடங்கி உள்ளார்.
சிவகாசிக்கு வந்த இடத்தில் இவரது கூத்து, நாடகம் என்று கவனம் போக, பெற்றோர் கண்டித்துள்ளனர். தோல் மண்டி உரிமையாளர் தொந்தியப்ப நாடார் என்பவர் விஸ்வநாத தாசிடம் இருந்த திறமைகளை கண்டு அவருக்கு முறையான வழிகளில் பாடவும் நாடகங்களில் நடிக்கவும் பயிற்சி அளித்துள்ளார். தொடர்ந்து தெருக்கூத்துகளில் பாடவும் சிறிய வேடங்களில் நடிக்கவும் செய்த தாஸ், நாடகங்களில் பெண் வேடங்களில் நடித்துள்ளார். சில நாடக குழுக்களில் பெண்களும் நடித்து வந்துள்ளனர். மகன் கெட்டுப்போவான் என்று நினைத்த தந்தையார் விஸ்வநாத தாஸ்க்கு தூத்துக்குடியை சேர்ந்த சண்முகத்தாய் என்பவரை மணம் முடித்து வைத்தார்.
…
1911ஆம் ஆண்டு காந்தியடிகள் தூத்துக்குடிக்கு வந்த்போது அவர் பேசிய மேடையில் விஸ்வநாத தாஸ் பாட, காந்தி மனமகிழ்ந்து அவரைப் பாராட்டியதுடன் அவரது திறமையை தேச விடுதலைக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எனவே ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான பாடல்களை புராண நாடகங்களின் இடையே பாட மக்களும் புரிந்துகொண்டு ஆரவாரம் செய்து வரவேற்று உள்ளனர். அரிச்சந்திரன், வள்ளி திருமணம், கோவலன், நல்ல தங்காள் ஆகிய நாடகங்கள் மிகுந்த புகழ் பெற்றவை. அந்த சந்திப்புக்கு பின் கதர் ஆடைகளை அணியத் தொடங்கினார்.
கொக்குப்பறக்குதடி பாப்பா – நீயும்
கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா
கொக்கென்றால் கொக்கு அது நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப்பிழைக்குதடி பாப்பா
வர்த்தகம் செய்ய வந்த கொக்கு –நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
என்ற வள்ளித்திருமணம் நாடகப்பாடல் யாரை குறிவைத்து பாடப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொண்டு ஆரவாரம் செய்வார்கள். அவரது நாடகம் எனில் போலீஸ் அங்கே இருக்கும். ‘விஸ்வநாத தாஸ் இனி ஆங்கிலேயர்களை தாக்கியோ விடுதலை பற்றியோ எந்தப் பாடலையும் பாடக் கூடாது’ என தடை விதித்தது ஆங்கிலேய அரசு. தடை மீறி அவர் பாடுவதும் கைது ஆகி அபராதம் கட்டுவதும் சிறை செல்வதும் தண்டனை மீண்டு மறுபடியும் தடை மீறுவதும் அவரது வாழ்க்கை ஆனது. ஒருநாள் நாடகம் நடித்தால் ஆறு மாதம் சிறை வாசம் என்று அவர் வாழ்க்கை தியாகம் நிரம்பிய ஒன்றானது.
திருநெல்வேலியில் அவர் மீது ராஜதுரோக வழக்கு நடந்தபோது மாவட்ட நீதிபதி முன் விஸ்வநாத தாஸ்க்காக வழக்காடியவர் வ.உ.சிதம்பரம் அவர்கள் என்பதும் வரலாறு. சென்னையில் ஒற்றைவாடை அரங்கில் கோவலன் வேடத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்தபோது முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த ஒருவர் மேடையிலேயே அந்நிய தயாரிப்பில் ஆன ஆடையை தீ வைத்து எரித்த சம்பவமும் நடந்தது. அவருக்கு தனது கதர் ஆடை துணிகளை வழங்க, காத்திருந்த போலீஸ் அவரை கைது செய்தது.
கதர்க்கொடி தோணுதே, கரும்புத்தோட்டத்திலே, போலீஸ் புலிக்கூட்டம் நம் மீது போட்டு வருது கண்ணோட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்த பஞ்சாப் படுகொலை பாரில்கொடிது, தேசாபிமானிகளே உண்மைத் தெய்வீக ஞானிகளே, கெருவ மிகுந்த நீலன் (அன்றைய கொடுங்கோலன் ஆன கவர்னர் நீலன்), தாழ்த்தப்பட்ட சோதரரைத் தாங்குவாருண்டோ? மண்ணில் ஏங்குவார் உண்டோ? ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவை.
விஸ்வநாத தாஸ் சிறையில் அடைக்கப்படும்போது அவரது மூத்த மகன் சுப்பிரமணியதாஸ் மேடைகளில் பாடுவார். இப்படி ஒரு மேடையில் பாடும்போது கைது செய்யப்பட்ட சுப்பிரமணிய தாசை விசாரித்த நீதிபதி இது வரை பாடியதற்காக மன்னிப்பு கேட்டு, இனிமேல் விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடுவதில்லை என்று எழுதி கொடுத்தால் விடுதலை செய்வதாக சொன்னார்.
அப்போதுதான் சுப்பிரமணியத்துக்கு திருமணம் ஆகி இருந்தது. நீதிபதி விதித்த நிபந்தனையை கடலூர் சிறையில் இருந்த தந்தை விஸ்வநாத தாஸ்க்கு ஒருவர் மூலம் சொல்லி அனுப்பினார். ‘மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுப்பதை விடவும் சிறையிலேயே செத்து மடி’ என்று தந்தை பதில் சொன்னார். சுப்பிரமணியத்டுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
வறுமை நிலையில் குடும்பத்தின் சொத்து அனைத்தும் இழந்த நிலையில் 1940ஆம் ஆண்டு திருமங்கலத்தில் இருந்த வீடும் ஜப்தி செய்யப்படும் நிலை வந்தது.
சென்னையில் ஐந்து நாடகங்கள் நடத்த அழைப்பு வந்ததால் அந்த நாடகங்களின் மூலம் வரும் வருவாயில் வீட்டை மீட்டு விடலாம் என்று எண்ணி விஸ்வநாத தாஸ் சென்னைக்கு வந்தார்.
அப்போது சென்னை கவர்னராக இருந்த எர்ஸ்கின், விஸ்வநாத தாஸ்க்கு ஒரு தூது அனுப்பினார். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதர்வாக நாடகம் நடத்தினால் விஸ்வநாத தாசின் கடன் அனைத்தையும் அடைத்து மாதம் ஆயிரம் ரூபாய் உதவி பணம் தருவதாக தகவல் சொன்னார். ‘ஆங்கிலேயனின் பணம் எனக்கு அற்பமானது’ என்று துச்சமாக மறுத்தார் விஸ்வநாத தாஸ்.
அவரது வீடு 2500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
சென்னையில் ராயல் தியேட்டரில் ஐந்து நாடகங்கள் நடத்த திட்டம் இட்டிருந்த நிலையில் உடல் நலக்குறைவினால் முதல் மூன்று நாடகங்களில் நடிக்க இயலாமல் போனது. 1940 டிசம்பர் 31ஆம் நாள் வள்ளித்திருமணம் நாடகம் தொடங்கியது. மிக அற்புதமான மயில் ஆசனத்தில் பொலிவுமிகு தோற்றத்தில் அவர் அமர்ந்து இருக்கும் முதல் காட்சிக்காக திரை உயர்ந்தது. மாயா பிரபஞ்சத்திலே என்ற பல்லவியை விஸ்வநாத தாஸ் பாடத் தொடங்கினார். மக்கள் ஆரவாரம் செய்ய, கூட்டத்திலிருந்த போலீசோ அவர் அடுத்து என்ன பாடுவாரென்று கூர்மையாக கவனித்தது. ஆனால் தொடர்ந்து பாடமுடியாமல் சரிந்த விஸ்வநாத தாஸ், ஹார்மோனியம் இசைத்துக் கொண்டு இருந்த தம்பி சண்முகதாசின் மடியில் உயிர் இயக்கத்தை நிறுத்தினார். அதே மயில்வாகனத்தில் அவரது இறுதி ஊர்வலம் 1941 ஜனவரி முதல் நாள் அன்று நடந்தது. சென்னை மூலக்கொத்தளத்தில் மகன் சுப்பிரமணியன் அவரது சிதைக்கு தீ மூட்டினார்.
…
தொடக்க காலத்தில் விஸ்வநாத தாசுடன் மேடையில் நடிக்க நடிகைகள் மறுத்துள்ளனர். காரணம் சாதிதான். ஆனால் பிராமண குலத்தில் பிறந்த முத்துலட்சுமி அம்மையார் அவருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர்தான் எஸ்.ஆர்.கமலம், திருச்சி காந்திமதி, நெல்லை கிருஷ்ணவேணி, மதுரை கே.பி.ஜானகி ஆகியோர் அவருடன் இணைந்து நடித்தார்கள்.
…
வீரத்தியாகி விஸ்வநாத தாஸ் என்ற நூலில் காணப்படும் அரிய தகவல்கள் இவை. நூறு பக்கங்கள் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் மு.செல்லப்பன், தூத்துக்குடியை சேர்ந்தவர். தியாகி விஸ்வநாத தாஸ் நற்பணி மன்றம் சார்பில் 1996ஆம் ஆண்டு கோவில்பட்டியை அ.சாரதா என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.
…
இந்த நூல்வெளியிடப்பட்ட பின் திருமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீட்டை கலைஞர் மு. கருணாநிதி தன் ஆட்சிக்காலத்தில் நினைவு சின்னமாக அறிவித்தார். இதற்கான நீண்ட போராட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு தகவல், கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆன கே.பி.ஜானகி, தன் நகைகளை விற்று விஸ்வநாத தாஸ்க்கு கொடுத்து நாடகம் நடத்த உதவி செய்துள்ளார். மட்டுமின்றி மதுரை மேலமாசி வீதியில் தனக்கு சொந்தமாக இருந்த வீட்டை கம்யுனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்காக ஜானகி விற்றார்.
...
29.11.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக