மலம் அள்ளு
சாணம் அள்ளு
பிணம் தூக்கு
செருப்பு தை
அடிமையாய் இரு
ஏனென்றால்
உன் முன்னோரும் அடிமைகளே
உன் பிள்ளைகளும் அடிமைகளே
அவன் பிள்ளைகளும் அடிமைகளே
கல்வி கற்காதே
கல்வி கேளாதே
கல்வி பாராதே
நீ கற்பதும் பாவம்
நீ கேட்பதும் பாவம்
நீ வாழ்வதே பாவம்
செருப்பு அணியாதே
வேட்டி அணியாதே
துண்டு அணியாதே
ரவிக்கை அணியாதே
உழைப்பதன்றி வேறெதுக்கும் உரிமையற்ற நீ
நிலவுடைமை கொள்ளாதே
வாகனத்தில் செல்லாதே
என் வீட்டின் வாசல் பக்கம் வராதே
என் தெருவில் நடக்காதே
பொது இடங்களில் உட்காராதே
உன் பார்வையின் தொடுதலின் இருப்பின் வழியே
நீ ஒட்டுமொத்த உலகையே தீட்டாக்குகின்றாய்
உன் வாழ்க்கை நான் இட்ட பிச்சை
எனில்
ஓட்டுரிமை உனக்கொரு கேடா?
அவ்வாறிருக்க
தனித்தொகுதி வேறா, ஓஹோ!
... ...
சரி, நான் வெளியேறுகின்றேன், வழியை விடு
என்ன என்ன சொல்கின்றாய்?
ஏன் பதறுகின்றாய்?
நான் வெளியேறுகின்றேன், வழியை விடு
இல்லை,
என்ன இருந்தாலும்
நீயும் நானும் ஒரே மதமல்லவா?
த்தூ...
- மு இக்பால் அகமது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக