உன் வாழ்வு கொண்டாடத்தக்கதாக இருந்திருப்பின்
உன் மரணமும் துயரப்பட வேண்டியதே
உன் மரணத்துக்குப்பின்
உன்னை கொண்டாடும்படியாக
நீ வாழும்போது என்னதான் செய்து இருந்தாய்?
எத்தனை பேர் வீடுகளில் நீ
கொண்டாட்டத்தின் ஒளியை ஏற்றி வைத்தாய்?
எத்தனை சாமானியன் தெருக்களில் நடமாட
நீ துணையாய் நின்றாய்?
எங்கள் வீட்டுப்பெண்கள் எத்தனை பேர்
உன்னை நம்பி வாசல்படி தாண்டி வெளியே வந்தார்கள்?
தெருக்களில் விளையாடும் எங்கள் குழந்தைகளின் குரலில்
என்றாவது நீ மகிழ்ச்சி அடைந்திருக்கின்றாயா?
உன் வாகனத்தை நிறுத்தி
களங்கம் அற்ற குதூகலத்தின் காற்றை
ஒரு நொடியாவது முகர்ந்திருப்பாயா?
சொல்,
எதன்பொருட்டு நான் போலிக்கண்ணீர் வடிக்க வேண்டும்?
தோட்டாக்களால் ஆன மாலைகளைவிடவும்
எங்கள் பிள்ளைகள் செய்யும் புளியங்கொட்டை மாலைகள்
மிக அழகானவை
வலிமை மிக்கவை
வீட்டுக்குள்ளும் வீதிகளிலும் சந்தோசத்தின் ஒலியை சிதற விடுபவை
நினைவு படுத்திச்சொல்,
எதாவது ஒன்றாவது சொல்,
உன்னை கொண்டாடுகின்றேன்
உன் மரணத்துக்கு நான் அழுகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக