திங்கள், டிசம்பர் 20, 2021

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா? (1)

"ஆகஸ்ட்15ஐ என்னால் கொண்டாட முடியாது. பொய் சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் கொண்டாட கூடாது என்று உங்களை கேட்டுக்கொள்ள மாட்டேன். கெடுவாய்ப்பாக இன்றைக்கு நமக்கு கிடைத்துள்ள இந்த விடுதலையில்தான் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எழவுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் ஆன விதை பொதிந்துள்ளது. நாம் எவ்வாறு இன்று விளக்கேற்ற முடியும், சொல்லுங்கள்?"

- காந்தி

..... .... ....

1947 ஆகஸ்ட் 15 அன்று உலகமே உறங்கும் நடுநிசி நேரத்தில் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில், டெல்லியில் பல லட்சம் மக்கள் திரண்டு விடுதலையை கொண்டாடிக்கொண்டு இருந்த நேரத்தில், இந்திய விடுதலை போராட்டத்தின் , காங்கிரஸ் பேரியக்கத்தின் முகமாக இருந்த காந்தி எங்கே இருந்தார்?

இந்தக் கேள்விக்குள் காந்தி அப்போது டெல்லியில் இல்லை என்ற பதில் அடங்கி உள்ளது. அப்படி எனில் அவர் அன்று எங்கே இருந்தார்?

... ... ....

காந்தியை சுட்டுக்கொன்ற ஆர் எஸ் எஸ் இந்துத்துவா அடிப்படைவாதிகள் காலம் நெடுகிலும் தம் கொடுஞ்செயலை நியாயப்படுத்துவதற்கான காரணங்களாக சொல்வது இவற்றையே:

1. தேசபிரிவினைக்கு அவரே காரணம்

2. அவர் முஸ்லிம்களை அரவணைத்தார்

3. அவர் உயிருடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் ஹிந்து ராஷ்டிரம் அமைய தடங்கலாய் இருந்திருப்பார்

4. பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு அவர் இந்திய அரசை வற்புறுத்தினார்

5. தேசபிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரங்களை பற்றி அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்ட இசுலாமியர்களை அவர் ஆதரித்தார்

6. பாரத்மாதாவை காப்பற்ற ஒரே வழி அவரை கொல்வதுதான்.

மேலும் பல காரணங்களையும் கட்டமைக்கின்றார்கள்.

இவற்றில் ஏதாவது உண்மை உள்ளதா? அவர் இப்போது உயிருடன் இல்லை என்ற யதார்த்தமான நிலையில், குறைந்தபட்சம், ஹிந்து ராஷ்டிரம் என்று அவர்கள் கனவு காணும் அகண்ட பாரதத்தை அவரை கொன்றபின் ஆன 73 வருடங்களுக்கு பின்னும் இவர்களால் ஏன் நிறுவ முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை இவர்கள் மக்களிடம் சொல்லியாக வேண்டும்.

.... ... ....

காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்புடைய அனைவரும் மராட்டிய சித்பவன் பிராமணர்கள். 

1.அவர்களின் சித்தாந்த தந்தை விநாயக் தாமோதர் சாவர்க்கர், 1915இலேயே காங்கிரசுக்குள் இந்து மகா சபையை வளர்க்க முனைந்தார். அந்தமான் சிறையில் இருந்து இந்திய மண்ணில் உள்ள ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டபோது 1922இல் இந்துத்துவா என்ற நூலை எழுதுகின்றார். பின்னாளில் சாவர்கரின் முயற்சியாலும் அவரது இந்த நூலை படித்து உற்சாகம் பெற்றிருந்த கேசவ பலிராம் ஹெட்கேவரின் முயற்சியாலும் 1925இல் ஆர் எஸ் எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்துமகாசபை நேரடியா அரசியல் பேசும், ஆர் எஸ் எஸ் ரகசிய வேலைகளை செய்யும்.

2. நாதுராம் கோட்ஸே: ஆர் எஸ் எஸ் உறுப்பினர், புனாவை சேர்ந்தவர்

3. நாராயண் ஆப்தே: பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவை செய்தவர், ஆசிரியர், புனாவை சேர்ந்தவர்

4. திகம்பர் பட்கே: ஆயுத வியாபாரி, ஊர் அஹமத் நகர்

5. தத்தாத்ரேய சதாசிங் பராச்சுரே: மருத்துவ துறையை சேர்ந்தவர், ஊர் க்வாலியர்

6. விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே: இசை வல்லுநர், ஓட்டல் பணியாளர், பிற்காலத்தில் ஓட்டல் முதலாளி, ஊர் அஹமத் நகர்

7. மதன்லால் காஷ்மீரிலால் பாவா: முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர், பாகிஸ்தானில் இருந்த பஞ்சாபில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த அகதி, அஹமத் நகர் அகதிகள் முகாமில் இருந்தவர்

8. கோபால் கோட்ஸே: நாதுராமின் தம்பி, ஊர் புனா.

9. சங்கர் கிஷ்டய்யா: ரிக்சா ஓட்டும் தொழிலாளி, ஊர் புனா

காந்தி படுகொலைக்கு பின்னும் இப்போதும் கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று ஆர் எஸ் எஸ் கூறிக்கொண்டே வருகின்றது. தி கேரவன் ஜனவரி2020 ஆங்கில இதழில் தீரேந்திர கே ஜா எழுதியுள்ள கட்டுரையில் ஒரு பகுதி இது: 

"கடந்த எட்டு மாதங்களாக நான் தேடி வாசித்து வரும் வரலாற்று ஆவணங்கள் சொல்வது என்னவென்றால் ஆர் எஸ் எஸ் உறுப்பினர் பொறுப்பில் இருந்து கோட்ஸே ஒருபோதும் விலகியது இல்லை என்பதுதான். 1948 மார்ச் மராத்திய மொழியில் அளித்த ஒரு வாக்குமூலத்தை இப்போதும் கூட பல வரலாற்று அறிஞர்கள் அறியாமல் இருக்கின்றார்கள். இந்த அறிக்கை உண்மையில் கோட்ஸேயின் தன்வரலாறு ஆகும். ஒரே நேரத்தில் ஆர் எஸ் எஸ், இந்து மகா சபை இரண்டிலும் தான் வேலை செய்ததை கோட்ஸே ஒப்புக்கொண்டு இருக்கின்றான். 18, 19ஆவது பக்கங்களில் அவன் தெளிவாக சொல்கின்றான், 'மீண்டும் இந்துமகாசபை வேலைகளை செய்ய தொடங்கி உள்ளேன், கூடவே ஆர் எஸ் எஸிலும் தொடர்ந்து இயங்குகின்றேன்".

1994 ஃபிரண்ட் லைன் இதழுக்கு கோபால் கோட்ஸே கொடுத்த வாக்குமூலம் முக்கியமானது: "காந்தி கொலைக்கு பின் கோல்வாக்கரும் ஆர் எஸ் எஸ்ஸும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள், இதை தவிர்க்க விரும்பித்தான் தான் ஆர் எஸ் எஸ்சில் இருந்து விலகிவிட்டதாக (நீதிமன்றத்தில்) அவர் சொன்னார். ஆனால் ஆர் எஸ் எஸ்சில் இருந்து அவர் விலகவில்லை. நாங்கள் நான்கு சகோதரர்களும் ஆர் எஸ்எஸ் உறுப்பினர்கள். நாங்கள் குடும்பத்தில் வளர்ந்தோம் என்பதை விடவும் ஆர் எஸ் எஸில் வளர்ந்தோம் என்று நீங்கள் சொல்லலாம். அதுவே எங்கள் குடும்பம் போன்றது". தன் தொண்டனை கைவிட்டது குறித்து இந்த பேட்டியில் அவர் ஆர் எஸ் எஸ்ஸை விமர்சித்துள்ளார், கைவிட்டுவிடாத இந்துமகாசபையை பாராட்டுகின்றார், அதாவது காந்தி கொலையில் இ ம சபை தன் பங்கை எப்போதும் மறுத்தது இல்லை.

(தொடர்ந்து எழுதுவேன்)

கருத்துகள் இல்லை: