செவ்வாய், டிசம்பர் 21, 2021

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா? (2)

காந்தி படுகொலை விசாரணை 27.5.1948இல் தொடங்கியது, 10.2.1949 அன்று நீதிபதி ஆத்மசரண் தீர்ப்பு வழங்கினார். சாவர்க்கர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 15.11.1949 அன்று அம்பாலா சிறையில் தூக்கில் இடப்பட்டனர். பிறருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. 

சாவர்கரின் மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரங்கள் சத்து இல்லாதவை இல்லை. அரசு தரப்பு திட்டமிட்டு அவர் விடுதலை ஆக வேண்டும் என்பதற்காகவே சொத்தை வாதம் செய்தது என்பதை வரலாறு சொல்கின்றது. 

அதேபோல் கோட்ஸே, ஆப்தே இருவரின் சாம்பலும் நதியில் கரைக்கப்பட்டது. எனில் இப்போதும் புனாவில் உள்ள வீட்டில் கலயத்தில் இருக்கும் கோட்ஸேயின் சாம்பல் எங்கிருந்து எடுக்கப்பட்டது? இந்து மத நம்பிக்கையின்படி கரைக்கப்பட்ட சாம்பலை மீண்டும் எடுப்பது கூடாது. அகண்டபாரதம் அடைவோம், அப்போது சாம்பலை கரைப்போம் என்று வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகள் கூவுகின்றார்கள், அவர்கள்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். மேலும் தமது இந்து ராஷ்டிர கனவுகளுக்கு தடையாய் இருப்பார் என்று அவர்கள் காந்தியை அப்புறப்படுத்தி 74 வருடங்கள் ஆகியும் அகண்ட பாரதமோ இந்து ராஷ்டிரமோ ஏன் இன்னும் அமையவில்லை என்ற கேள்விக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.

... ....

இரண்டு தேசம் அல்லது பாகிஸ்தான் என்ற கோட்பாடு:

முஸ்லிம் லீக்கின் அல்லது முகமது அலி ஜின்னாவின் அஜெண்டாவில் பாகிஸ்தான் என்ற கருத்துருவாக்கம் இல்லாதபோதே காந்தி மீது 1934க்கு முன்பும், பின்பும் கொலை முயற்சிகள் நடந்தன, 1934க்கு பின் 6ஆவது முயற்சியில் அவரைக் கொன்றார்கள்.

உண்மையில் 1934க்கு முன்பே இந்த கும்பல் அவர் மீது தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்கள் எனினும் அவை ஏன் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களை சொல்ல வேண்டிய பொறுப்பில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன் பிரிட்டிஷ் அரசும் பின் இந்திய அரசும்தான் இருந்தார்கள். 

நான்கு முயற்சிகள் புனைவின் வலதுசாரி உயர்சாதி இந்துக்களால் நடத்தப்பட்டவை. அவற்றில் மூன்று முயற்சிகளில் கோட்ஸே, ஆப்தே கும்பல் ஈடுபட்டது. இரண்டு முயற்சிகளில் கோட்ஸே பிடிப்பட்டான்.

.... .....

முதல் கொலை முயற்சி:

புனா மாநகராட்சி அரங்கில் உரையாற்ற காந்தி தன் மனைவியுடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடைய பாதுகாப்பு கருதி ஒரே வடிவிலான இரண்டு கார்கள் வாகன அணிவகுப்பில் சென்றன, ஒன்றில் அவர் பயணித்தார். பயணத்தின் பாதையில் ஒரு ரயில்வே தண்டவாள கிராசிங்கை கடக்கும்போது சற்றே பின் தங்கிய நேரத்தில், அதேபோல தோற்றமுடைய மற்றோரு காரின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அந்தகாரின் பின்னால்தான் அவரது கார் வந்தது. இந்த குண்டுவீச்சில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரி உட்பட போலீசார் பலர் மோசமாக காயமுற்றார்கள். இது மிக துல்லியமாக திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று காந்தியின் வரலாற்றை எழுதிய பியாரெலால் கூறுகிறார். மற்றுமொரு தாக்குதல் அன்றே நடந்தது. காந்தி மாநகராட்சி அரங்கத்துக்கு வந்து சேரும் முன்பே அவர் வந்து விட்டார் என்று எண்ணி ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

(தொடர்ந்து எழுதுவேன்)

கருத்துகள் இல்லை: