வெள்ளி, நவம்பர் 29, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-8



33) நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய இடங்களிலும் முச்சந்திகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும்  வேட்டிகளைக் கிழித்துக்கொண்டு தெரு நாய்களைப்போல் சண்டைபோட்டுக்கொண்டாலும் உள்ளூரில் சாதிப்பிரச்னை என்று வரும்போது இடதுசாரிகளைத்தவிர்த்த இதர கட்சிகள் அனைத்தும் இந்து மதத்திலேயே இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொல்வதிலும் அவர்களின் உடைமைகளை அழிப்பதிலும், சிறுபான்மை மக்களை கொல்வதிலும் அவர்களின் உடைமைகளை அழிப்பதிலும் திட்டமிட்ட வகையில் ஒன்றுபட்டு நிற்கின்றார்கள். இவர்களில் தமிழகத்தில் திமுக, அ இ அதிமுக, மதிமுக, பாமக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகளும் அடக்கம் எனில் இக்கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆதிக்க சாதியினருக்கும் தமிழகத்தின் தலித் மக்களுக்கும், இஸ்லாமிய கிறித்துவ மக்களுக்கும் ஆன உறவு   தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? 

34) இவர்கள் சொல்லும் தொப்புள்கொடி உறவு இலங்கையில் உள்ள தமிழனை  மட்டுமே இணைக்குமா? உள்ளூரில் வெண்மணியில், மீனாட்சிபுரத்தில், மண்டைக்காட்டில், புளியங்குடியில், கடையநல்லூரில், போடியில், தேவாரத்தில், தென்காசியில், கோவையில், கோட்டைமேட்டில், பரமக்குடியில், கன்னியாகுமரி நித்திரவிளையில், உத்தப்புரத்தில், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, கொட்டக்கச்சியேந்தல், திண்ணியம், மேலவளவு, நக்கலமுத்தன்பட்டியில், மருதக்கிணறு குருவிக்குளத்தில், பந்தப்புளியில்,  நேற்று தர்மபுரியில், நிலக்கோட்டையில், வடக்கே கைர்லாஞ்சியில், காந்தமாலில், அயோத்தியில், மாலேகானில், ஹைதராபாத்தில், ஒரிசாவில், குஜராத்தில், ஹரியானாவில், முஜாஃபர்பூரில், மஹாராஷ்ட்ராவில் என பரந்துபட்ட இந்த பாரத்தேசம் எங்கும் கிழிந்து நாற்றமெடுத்து நார் நாராகத் தொங்குவது தொப்புள்கொடிகளா மலக்குடல்களா? 

35) இந்துதீவிரவாத சிவசேனாவின் பால்தாக்கரே வீட்டில் பிரபாகரனின் புகைப்படம் தொங்குவதைப் பார்த்துப்  பரவசம் அடைந்த நெடுமாறன் அவர்களும், அதே பால்தாக்கரே மண்ணின்மைந்தர்களுக்கு ஆதரவாக மும்பையில் இருந்து பிஹார், ஒரிசா, வங்காள தொழிலாளர்களை அடித்து விரட்டிய போது ‘அது சரிதான் என புளகாங்கிதம் அடைந்து போன ஆவேச அண்ணன் சீமானும், அதே சிவசேனா மும்பையின் தமிழர்களை அடித்து துவம்சம் செய்து அவர்களின் சொத்துக்களை சூறையாடிய தாக்குதலுக்கும் இஸ்லாமிய மக்களின் மீது படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டதற்கும் என்ன பெயர் வைப்பார்கள் என்று விளக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இந்த உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? குறிப்பிட்டுச் சொல்வதெனில், பிஜேபி தலைமையில் ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போது பிஜேபியை விட்டு விலகிய நிலையில் இன்றும் கூட்டணியில் நீடிப்பது சிவசேனாதான் என்ற நிலையில் இந்த உறவுக்கு என்ன பெயர்? பொன்.ராதாகிருஷ்ணனிடமாவது கேட்டு சொல்ல வேண்டும். 

36) ‘நரேந்திரமோடி ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது தவறுதான்; அதற்காக மோடி மன்னிப்புக்கேட்டால் அவர் இத்தேசத்தின் பிரதமராக வருவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லைஎன்று போகின்ற இடங்களில் எல்லாம் பேசிவருகின்றார் தமிழருவி. சற்று முன் கிடைத்த தகவல்படி மோடி தமிழருவியிடம் இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்பதை  தெரிவித்துக்கொள்கின்றோம். தவிர மன்னிப்புக்கேட்டால் மோடி மீதும் அவன் அரசு மீதும் நடக்கின்ற எண்ணற்ற வழக்குகளை வாபஸ் வாங்கி விடலாம் என்றும் தமிழருவி சொல்லக்கூடும். ஒருவேளை நாதுராம் கோட்சே உயிரோடு இருந்திருந்தால் காந்தியை சுட்டுக்கொன்றது தப்பு, மன்னிச்சிடுங்கோ என்று கண்ணீர் சிந்தியிருந்தால் அவனும் கூட இத்தேசத்தின் பிரதமராக வருவதில் ஆட்சேபனை ஏதும் இல்லை என்றும் கூட காந்திய மக்கள் இயக்கத்தின் பெருந்தலைவர் தமிழருவி ஊர் ஊராக பிரச்சாரம் செய்திருக்கவும் கூடும்.
...தொடரும் 

வியாழன், நவம்பர் 28, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-7




29) கவனித்துப்பார்த்தால் 
இவர்களின் புதிய
சகாவான ஆர் எஸ்
எஸ்சின் கொடுக்கான
பிஜேபியின் 
பொன்.ராதாகிருஷ்ணன்
 இதுவரை
கவனமாக தொப்புள்கொடி என்ற சொல்லை
பயன்படுத்தவில்லை என்பது புரியும். அவர்கள்
நிலையில் அவர்கள் சரியாக இருக்கின்றார்கள்: 
அவர்களுக்கு ஐந்து விதமான
தொப்புள்கொடிகளை மனு போதித்துள்ளான்: 
பிராமணன், ஷத்ரியன், சூத்திரன், வைசியன், 
பஞ்சமன் ஆகிய ஐந்து தொப்புள்கொடிகள். 
தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்குள்ளும்
இந்த ஐந்து வெவ்வேறு கிரேட்
தொப்புள்கொடிகள் உண்டு என பிஜேபியின்
பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வாரெனில்,
‘இல்லை இல்லை, இவை தொப்புள்கொடிகள்
அல்ல, மலக்குடல்கள் என இனமான
சிங்கங்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி,
சீமான் போன்றோர் சொல்வார்களெனில்
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றம்
திறக்கப்பட்டபோது தொப்புள்கொடிகளும்
மலக்குடல்களும் எப்படி பிணைந்தன,
என்னவிதமான தத்துவ உறவு அது என்று
விளக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு
உள்ளது. இதுவரை பிஜேபியின் மறைமுக
ஏஜெண்டாகவும் சமீபத்தில் வெளிப்படையாகவே
அக்கட்சியில் சேர்ந்தவருமான சு.சாமியை
முற்றம் திறக்கும்போது ஏன் அழைக்கவில்லை
என்ற கேள்வி இக்கட்டுரையை பொருத்தவரை 
இரண்டாம் பட்சம்.  

30) மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவர்கள், சம்ஸ்கிருதமே இந்தியாவின் பொது மொழி, அதுவரை இந்தி இருந்துவிட்டுப்போகட்டும் என்று சொல்பவர்கள், கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு எதிரானவர்கள், ஒரே மதம், அது இந்து மதம், ஒரே இனம், அது ஆரிய இனம் என்று பிரகடனம் செய்பவர்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஒரு தொப்புள்கொடி உறவை ஏற்படுத்த வைகோவும் நெடுமாறனும் தமிழருவியும் ராமதாசும் முயற்சி செய்கின்றார்கள்.
 
31) மஹாராஷ்ட்ரா மாநிலம் கயர்லாஞ்சி: 2006 செப்டம்பர் 29. புத்தமதத்தை தழுவிய பய்யாலால் போட்மாங்கே குடும்பத்தினர் படுகொலை. ஆதிக்க சாதியினரின் கொடுமைகளை சகித்துக்கொள்ளாமல் சுயமரியாதையுடன் வாழ போராடியது, ஒரு தலித் குடும்பம் 4.74 ஏக்கரை சொந்தமாக கொண்டிருந்தது,  அக்குடும்பத்தில் படித்த தலித் பெண் இருந்தது ஆகிய பெரும் ‘குற்றங்களுக்காக அக்குடும்பத்தினர் நால்வர் கொல்லப்பட்டனர். குடும்பத்தலைவியும் அவரது மகளும் அதே குடும்பத்தின் ஆண்கள் கண் முன்னால் மானபங்கப்படுத்தப்பட்டனர், அனைவரும் கொல்லப்பட்டனர். தூரத்தில் மறைவில் இருந்து இக்கொடுமைகளை அக்குடும்பத்தின் தலைவர் ஆதரவற்ற நிலையில் பார்த்துக்கொண்டிருந்தார். 2008 செப்டம்பர் 24 அன்று பந்த்ரா மாவட்ட நீதிமன்றம், இக்குற்றத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரணதண்டனையும் 2 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தார். மாவட்ட நீதிபதி எஸ்.எஸ்.தாஸ் என்பவர் சாதீய அடக்குமுறையால் நிகழ்ந்த வன்கொடுமை அல்ல; இது வெறும் கொலை வழக்கு மட்டுமே என்று தீர்ப்பு சொன்னார். விசயம் என்னவெனில் குற்றம் நிகழ்ந்தபோதும் அதற்கு முன்பும் பின்பும் உள்ளூரில் காங்கிரஸ் பிஜேபி உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் அந்த தலித் குடும்பத்திற்கு எதிராக குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தன; இக்கட்சிகளும் அதன் தலைவர்களும் பொதுவிலும் தேர்தல் காலங்களிலும் இத்தேச நலனின் பொருட்டு ஒருத்தருக்கொருத்தர் கட்டிப்புரண்டு தெரு நாய்களைப்போல சண்டைபோடுவதாக காட்டிக்கொள்கின்றனர். 

32) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் மிகப்பெரும் அரசியல் படுகொலையை (காந்தியடிகள்) நடத்தியவர்கள், அதன் பின் ஆகப்பெரிய மதக்கலவரத்துக்கு வித்திட்ட ராமர் ரத யாத்திரையை நடத்தியவர்கள்; தமிழகத்தின் காமராஜர் மீது டெல்லியில் பெரும் தாக்குதல் நடத்தியவர்கள்;  ஒரிசாவில் கிறித்துவப்பாதிரியாரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் வைக்கோல்போரில் தள்ளி உயிரோடு கொளுத்தியவர்கள்; கிறித்துவ கன்னியாஸ்த்ரீகளை மானபங்கம் செய்தவர்கள்; செத்துப்போன மாட்டின் தோலை உரித்ததற்காக இரண்டு தலித் ஆண்களை உயிரோடு எரித்தவர்கள் (மாடு கோமாதாவாம்! கேரளாவில் கோமாதா கோபிதா இறைச்சிதான் விலை மலிவு); இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களை நடத்த ஆயுதப்பயிற்சிப்பள்ளி நடத்துகின்றவர்கள்; பல பொது இடங்களிலும் இந்துமக்களின் வழிபாட்டுத்தலங்களிலும் தங்களது அலுவலகங்களிலும் தாங்களே வெடிகுண்டு வைத்துவிட்டு பழியை இஸ்லாமிய மக்கள் மீது சுமத்துகின்றவர்கள்; கருத்துசுதந்திரத்தை அனுமதியாத ஃபாசிஸ்ட்டுக்கள்; இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மாபெரும் ரத்தக்களறியை ஒரு முதலமைச்சரின் ஆணைப்படி நிதானமாக நிறைவேற்றிய கொலைபாதகர்கள்; ரத்தக்கறை என்றும் மறையாத அதே முதலமைச்சரை இந்தியாவின் எதிர்காலப்பிரதமராகக் காட்டுவதில் வெட்கமோ மானமோ கடுகளவும் இல்லாத சமூகவிரோதிகள்; உ.பி.யில் முசாஃபர்நகரில் சமீப நிகழ்வான கலவரத்தில் 32 பேர் கொல்லப்படக் காரணமாக இருப்பவர்கள்; உத்ரகாண்ட் வெள்ளத்தில்  சிக்கிய 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றியதாக கூச்சநாச்சம் ஏதுமின்றி பொய் சொல்பவர்கள்; பாரத்மாதா என்று கூவிக்கொண்டே அமெரிக்க கார்ப்பொரேட்டுக்களுக்கு பாரத்மாதாவின் சேலை வரை விற்றுக் காசு பண்ணும் வித்தை தெரிந்தவர்கள்...இப்படி முற்றுப்பெறாமல் நீண்டுகொண்டே போகும் ஒரு பட்டியலுக்கு சொந்தமான பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலின் தமிழகப்பிரதிநிதியான பொன்.ராதாகிருஸ்ணன் தமிழ் மக்களுக்கு எந்த வகையில் தொப்புள்கொடி ஆவார் என்று விளக்க வேண்டிய கட்டாயம் நெடுமாறன், வைகோ, காந்திய சிந்தனைவாதி தமிழருவி ஆகியோருக்கு உண்டு.

தொடரும்...

செவ்வாய், நவம்பர் 26, 2013

மாண்புமிகு டாஸ்மாக்கும் மது அருந்தா தேசவிரோதிகளும்....



1) ஸ்கூட்டர் வைத்திருக்கின்றேன். வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் 9 கி,மீ. தூரத்துக்குள் தினமும் பல சாலை விபத்துக்களை பார்க்கின்றேன். இதுவன்றி அனேகமாக மோசமான விபத்துக்களில் தவறு செய்தவர்கள் அனைவரும் மாண்புமிகு டாஸ்மாக்கு மது அருந்தி வாகனத்தை ஓட்டியவர்கள் என்பதை நேராகவே பார்த்துள்ளேன். இன்று நானும் மனைவியும் குழந்தையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் வரும்போது ஒரு மாண்புமிகு மது அருந்திய பைக் ஓட்டி ஒருவரின் செயலால் கீழே விழுந்து குறைந்த காயங்களுடன் உயிர்தப்பினோம்; சாலையில் பயணித்தவர்களும் பிறரும் உதவினார்கள். மாண்புமிகு மது அருந்தி ஓட்டியவர் தன் பைக்கில் பெண் ஒருவருடன் பயணித்தார் என்பதும், விபத்து நடந்தவுடன் தப்பித்துப்போகும் முயற்சியில் சற்று தூரத்தில் கீழேவிழுந்து பலத்த காயமடைந்தார்கள் என்றும் பின்னர் அறிந்தேன். அதற்கு சற்று முன்னர்தான் பின்னிருக்கையில் ஒரு பெண்ணுடன் பயணித்த வேறு ஒரு ஸ்கூட்டர்காரர் அனேகமாக எங்களை கீழே தள்ளியிருப்பார், ஒரு வினாடி நேரத்தில் நாங்கள் தப்பினோம் என்பதும் தற்செயலே. அவர் மாண்புமிகுந்திருந்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.
2) மது ஒரு சமூக சீரழிவு, தமிழகத்தின் அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மதுவின் பாதிப்பு நீண்டகாலத்துக்கு இருக்கும், அதைப் பின்னோக்கி திருப்புவது மிக மிகக்கடினமாக இருக்கும், உழைக்கும் மக்களின் சிந்தனைப்போக்கில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த இதுகாறும் இச்சமுதாயத்தில் இடதுசாரி இயக்கங்களும் ஜனநாயக முற்போக்கு கலை-பண்பாட்டு இயக்கங்களும் ஆற்றி வந்துள்ள செவ்விய பணிகள் யாவும் பயனற்றுப்போகும் என்பதை நன்கு அறிந்த அரசியல் கட்சிகளும் கலை-இலக்கிய பண்பாட்டு அமைப்புக்களும் மதுவை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக்கு கடைகளை மூட வேண்டும் என்று உறுதியாக கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக மிக சன்னமான குரலில் டாஸ்மாக்கு கடைகளின் நேரத்தை முறைப்படுத்த வேண்டும், குடியின் தீமையை விளக்க தமிழக அரசு தீவிரப்பிரச்சாரம் செய்ய வேண்டும்என்று மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எந்த விதத்திலும் மனம் கோணிவிடக்கூடாத வகையில் அம்மா அவர்கள் சமூகத்துக்கு தண்டனிட்டு மனுப்போட்டுக் கொண்டிருப்பதாலும் தலையங்கம் எழுதிக்கொண்டிருப்பதாலும் சில யோசனைகளை நாம் முன் வைக்கின்றோம்.
3) டாஸ்மாக்கில் குடிக்கின்ற தமிழர்களின் பணத்தில்தான் தமிழக அரசின் கஜானா நிரம்புகின்றதாம்; பல்வேறு நலத்திட்டங்கள், மருத்துவமனையில் மருந்துகள், மருத்துவர்களுக்கு சம்பளம், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டுவது, இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு சம்பளம், சத்துணவு சமைப்பது, சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம், அணைகள் கட்டுவது, மின்சாரத்திட்டங்கள், தொழிற்சாலைகள் கட்டுவது, சாலைகள் போடுவது, மது ஒழிப்பு பிரச்சாரம் செய்வது...ஆக இப்படியான சமூகநலத்திட்டங்கள் யாவும் நமது பச்சைத்தமிழர்கள் குடித்துக்கொடுத்த காசில்தான் நிறைவேறுகின்றன என்பதால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சில அரசாணைகளை வெளியிட வேண்டும்.
4) போலீசுகாரர்கள் மாண்புமிகு மது அருந்தி மேற்படி சமூக சேவைகள் செய்து வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி வாயை ஊதுஎன்று கட்டளை இடுவது காலவிரயமாகவும் அபத்தமாகவும் படுகின்றது; எனவே மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை நூறு ரூபாய், இரண்டாம் முறை 500 ரூபாய், மூன்றாம் முறை போலீசுகாரர்களே ஒரு பாட்டில் மாண்புமிகு மதுவை வாயில் ஊற்றி பழக்கப் படுத்தலாம்; இதன் மூலம் அரசுக்கு மேலும் வருவாய் அதிகரிக்கும்.
5) சாலைகளில் இவ்வாறு மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டி மாண்புமிகு மது அருந்தி ஓட்டுபவர்களுக்கு பெரும் தொல்லை கொடுப்பதால் மாண்புமிகு மது அருந்தி ஓட்டுபவர்களுக்கு என்றே பிரத்தியேகமாக நான்குவழிச்சாலைகள் ஏற்படுத்தலாம்; அவ்வாறான சாலைகளில் சிக்னல், ஸ்பீட் பிரேக்கர் போன்ற சமூகவிரோத தொல்லைகளை தவிர்க்கலாம். மாண்புமிகு மது அருந்தாமல் வாகனம் ஓட்டும் தேசத்துரோகிகள் பயணிக்க என்றே ஊருக்கு வெளியே பிரத்தியேக சாலைகள் அமைக்கலாம்.
6) இவ்வாறு மாண்புமிகு மது அருந்துபவர்கள் மாண்புமிகு டாஸ்மாக்கு கடைகளில் குடித்துவிட்டு தள்ளாடி விழுவதும் வாந்தி எடுப்பதும் தேசத்துக்கு பெருத்த அவமானம் என்பதால் இவர்களை தாங்கிப்பிடித்து முகவரி அறிந்து அவரவர் வீடுகளில் சேர்ப்பதற்கென்றே பிரத்தியேகமாக 999 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கலாம்; தவிர மாண்புமிகு மது அருந்துபவர்கள் உடல்நலம் கெட்டால் அரசின் நிதிநிலை தள்ளாடும் நிலை ஏற்படும் என்பது உள்ளங்கை காலி பாட்டில் போல தெளிவான விசயம் என்பதால் மாதம் ஒரு முறை மாண்புமிகு மது அருந்துபவர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனைத்திட்டத்தை கொண்டுவரலாம். தொடர்ந்து உடல்நலனைப் பராமரித்து தேசசேவை செய்யும் மாண்புமிகு மது அருந்துபவர்களுக்கு அவர்களின் தேசசேவையின் அளவுக்கு ஏற்ப கலக்கல் மாமணி, கட்டிங் கிங்காங், குவாட்டர் திலகம், ஃபுல்காப்பியன், டாஸ்மாக் ரத்னா, டாஸ்மாக் சக்ரா போன்ற வீரதீர பட்டங்களை வழங்குவதன் மூலம் இளம்தலைமுறையினருக்கு அவர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள். அன்னாரது வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யலாம். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் நுழைவாயிலில் அவர்களின் படங்களை இடம் பெறச்செய்யலாம்.
7) அரசின் நலத்திட்டங்களுக்கு எதிரான தேசதுரோகிகள் எப்போதும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள மாண்புமிகு டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதாக மனு மேல் மனு போட்டுக்கொண்டே இருப்பதால் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அத்தகைய பிரச்னைக்குரிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்களை உடனடியாக இடித்துத்தள்ளிவிடலாம்; அந்த இடங்களில் கூடுதலாக மாண்புமிகு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம்.
8) மாண்புமிகு மது அருந்திவிட்டு குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்று புகார் செய்யும் மனைவிகள் பிள்ளைகளை திருத்தும் வகையில் அவர்கள் குடும்பத்தலைவர் இந்த அரசுக்கும் நாட்டுக்கும் எப்படியெல்லாம் உதவுகின்றார் என்பதை விளக்கிச்சொல்ல அரசுப்பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் அன்னாரது வீடுகளில் பிரச்சாரம் செய்ய சொல்லலாம்.
9) மேலும் பல கிறங்க வைக்கும் ஆலோசனைகள் உங்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
.........................................................................................................
நா.வே.அருள் அவர்களின் ஆலோசனைகள்:
ஒவ்வொரு திருமண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பெற்றாக வேண்டும். எல்லோரையும் குடிகாரர்கள் ஆக்க அரசு ஒரு ஆக்க பூர்வத் திட்டம் வகுக்கலாம்...ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம். உழைப்பாளர் சிலைகளை அகற்றிவிட்டு குடிகாரர்கள் சிலை நிறுவப்படலாம்...குடிகாரர்களுக்கு வரிவிலக்கு செய்யலாம். குடிப்பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமத்திக்கப்படலாம்....குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலையில் முன்னுரிமை வழங்கலாம்.

சனி, நவம்பர் 23, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-6

24) பசும்பொன்னில் சமீபத்தில் நடந்த முத்துராமலிங்கத் தேவரின்  பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட வைகோ, செய்தியாளரிடம் பேசியபோது முத்துராமலிங்கத்தேவரின் புகழ் பாடுகின்றார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்திருப்பார் என்று பேசுகின்றார். முத்துராமலிங்கத்தேவர் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவரது சாதியினர் கடந்த 50 வருடங்களாக தென் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மோசமான வரலாறு. தொடர்ந்து  தென்தமிழகத்தில் சாதிக்கலவரங்களில் முன் நிற்பது தேவர் சாதியினர்தான். தமிழ்நாட்டில் உள்ள தொப்புள்கொடிகளை  சாதிஅடிப்படையில் பிரித்து கலகம் செய்பவர்கள் தேவர் சாதியினர். தொடர்ந்து அரசு நிர்வாகத்திலும் காவல்துறையிலும் ஆதிக்கசாதியினரின் ஆதிக்கத்துக்கு வழிசெய்தவர்கள் திமுக, அ இ அதிமுகவினர்தான். குறிப்பாக அ இ அதிமுக ஆட்சிகளில் இந்த வேலையைச் செய்தவர் இப்போது முற்றத்துக்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்றதாகவும் ஏலம் விட்டதாகவும் சொல்கின்ற, புதிய தொப்புள்கொடி உறவை ஏற்படுத்திக்கொள்கின்ற அதே சாதியை சேர்ந்த அரசியல் தரகர் நடராசன்தான்.

25) மேலே பட்டியல் இடப்பட்ட ஒரு கலவர நிகழ்வில் கூட இந்த சாதியினருக்கு எதிராக வைகோ, நெடுமாறன், சீமான், தமிழருவி போன்ற தொப்புள்கொடிகள் ஒரே ஒரு ஒற்றை வார்த்தை கூட உதிர்த்ததும் இல்லை, கலவரப்பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நின்றதும் இல்லை. ஒருவேளை தலித் மக்களோடு கொள்ளும் உறவு மலக்குடல் உறவு என்று கருதுகின்றார்களா? இந்த நடராசனுக்கும் தமிழக தலித் மக்களுக்கும் என்னவிதமான உறவு இருக்க முடியும்? தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா?

26) அதேபோல் இப்போது தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஆவேசப் பேட்டிகளை அள்ளிவிடுபவர் உள்ளூர் தமிழர்கள் வீடுகளுக்கு தீ வைக்கும் நவீன மருத்துவர். சமீபத்தில், இலங்கையின் வரலாறு குறித்தும் சிங்களவர்கள் தமிழர்கள் பிரிவினை தகராறு எப்போது உருவானது என்பது குறித்தும் மெய் சிலிர்க்கும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்! இலங்கையில் ராஜபக்‌ஷே செய்ததை தமிழகத்தில், குறிப்பாக தர்மபுரியிலும் மேற்கு மாவட்டங்களிலும்  இவர் செய்யும்போது வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோர் அப்படி என்ன தேசமுக்கியத்துவம் வாய்ந்த வேலையை செய்துகொண்டிருந்தார்கள் என்பதை தமிழகத்தின் ஆறு கோடி தொப்புள்கொடிகளுக்கும் விளக்கவேண்டும். தமிழகத்தில் வன்னியர்களுக்கும் தலித் மக்களுக்கும் ஆன உறவு தொப்புள்கொடி உறவா மலக்குடல் உறவா? ஒரு வேளை பிரபாகரனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்களோ என்னவோ! ‘இறந்துபோனவர்களின் நினைவுச்சின்னம்தான் முள்ளிவாய்க்கால் முற்றம், எனவே பிரபாகரனுக்கு அங்கே சிலை இல்லை என்று நெடுமாறன் பேட்டி அளித்துள்ளதை நினைவு கூர்க.

27) இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் புலம் பெயர்ந்தோர் முகாம்கள் மனிதர்கள் வாழத்தகுந்த முறையில் நாகரிகமான முறையில் இருப்பதாகவும், அந்தந்த நாடுகள் இந்த மக்கள் வாழ்வதற்கான பொருளீட்ட அனுமதி வழங்கியிருப்பதாகவும் பல செய்திகளை நம்மால் வாசிக்க முடிகின்றது; ஆனால் தமிழகத்தில்தான் புலம் பெயர்ந்தோர் அகதிகள் என்று அழைக்கப்படுவதும், அவர்கள் வாழும் முகாம்கள் இலங்கையின் முள்வேலி  முகாம்களை விடவும் மிகக்கேவலமாக இருப்பதும், தமிழக அரசு நிர்வாகத்தாலும் காவல்துறையாலும் அம்மக்கள் பூச்சி புழுக்களை விடவும் கேவலமாக நட்த்தப்படுவதும் வெளிச்சம், கண்கூடு. முள்ளிவாய்க்கால் கட்டிடத்தைவிடவும்  விடவும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டியது இதுதான். தமது தொப்புள்கொடி உறவுகளின் துன்பம் நீக்க தமிழ்த்தேசிய நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டோரும் இந்துதேசிய பொன்.ராதாகிருஸ்ணனும், அரசியல் தரகர் நடராசனிடம் பேசி ஜெயலலிதாவிடம் இதற்கான தீர்வு காணலாம்.

28) தொடர்ந்து இந்த 50 வருட வரலாற்றில் தமிழகத்தில் சாதீய மோதல்களில் செத்தவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டுகின்றது. ஆதிக்கசாதியினரும் இடைனிலை சாதியினரும் இந்தியா எங்கும் இருப்பதைப்போல் தமிழகத்திலும் தலித்துக்களுக்கு எதிராக ஓரணியில் நிற்கின்றார்கள். இங்கே தமிழகத்தில் உள்ளவர்கள்- தலித்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், இதர சாதியினர் உள்ளிட்ட அனைவரும்- தொப்புள்கொடி உறவுகள் இல்லையா? தொப்புள்கொடி எங்கே அறுந்து போகின்றது? இங்கே அறுந்து போகும் தொப்புள்கொடி கடல்தாண்டி இலங்கைத்தமிழனை மட்டும் எவ்வாறு இணைக்கின்றது? 
தொடரும்...