ஞாயிறு, நவம்பர் 29, 2020

பிரெடெரிக் எங்கெல்சும் மார்க்சும்

எங்கெல்ஸ் பிறந்த நாள் 28.11.1820

எங்கெல்சுக்கும் தனக்கும் ஆன நட்பு கிரேக்க புராணங்களில் உள்ள நாயகர்களின் நட்புக்கு ஈடானது என்கிறார் மார்க்ஸ். " எங்கள் நட்பு ஒரேஸ்ட்டீசுக்கும் பிலடீஸுக்கும் Orestes and Pylades இடையே ஆன நட்பு " என்று சொல்கின்றார்.

மார்க்ஸ் லண்டனிலும் எங்கெல்ஸ் மான்செஸ்டரிலும் ஆக இருபது ஆண்டுகள் பிரிந்துதான் இருந்தனர். ஆனால் அவர்களின் நட்போ மென்மேலும் இறுகி வலுவானது. ஒன்றாக வாழவும் ஒன்றாகப் பணியாற்றவும் ஒன்றாக சிரித்து மகிழவும் முன் போல முடியவில்லையே என்று அவர்கள் அடிக்கடி வருத்தப்பட்டார்கள்.  ஒருவர் இடத்துக்கு மற்றவர் செல்வது அரிதாகவே நிகழ்ந்தது. அவர்களுக்கு இடையே ஆன கடிதப்போக்குவரத்து வெகு உயிரோட்டமாக இருப்பதற்கான காரணம் இதுவே! எங்கெல்ஸிடம் பதில் வர சற்றே தாமதம் ஆனாலும் மார்க்சிடம் இருந்து இப்படி கடிதம் வரும்: "இனியவனே எங்கெல்ஸ்! நீ அழுகின்றாயா, சிரிக்கின்றாயா, தூங்குகின்றாயா, துயில் நீங்குகின்றாயா?". இவர்களின் பிரிந்து வாழ்ந்த வாழ்க்கைதான், அவர்கள் விட்டுச்சென்ற பிரம்மாண்டமான கடிதத்திரள் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு ஆய்வுக்கூடமாக நமக்கு கிடைத்துள்ளது.

இந்தக் கடித்தப்போக்குவரத்தில் அவர்கள் தொடாத விசயம் என்று எதுவுமே இல்லை. தத்துவ ஞானம், இயற்கையியல், அரசியல் பொருளாதாரம், சோசலிசம், வரலாறு, மொழியியல், கணிதம், தொழில்நுட்பம், போர்க்கலை, இலக்கியம் என பல துறைகளிலும் அவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றமும் விவாதமும் நடந்துள்ளது. அவ்வளவுதானா? பாட்டாளிவர்க்க கட்சிக்கான போராட்டம், தொழிலாளி வர்க்க அரசியல் பிரச்சனைகள், அதன் போர்த்தந்திரம், நடைமுறை தந்திரம் ஆகியவற்றை பேசியுள்ளார்கள். இக்கடிதங்கள், மார்க்சிய ஆசான்கள் வாழ்ந்த சகாப்தத்தின் தொழிலாளர் இயக்கம், பொருளாதாரம், வெளிநாட்டுக்கொள்கை ஆகியவற்றை ஆராய்வதற்கான வளமிக்க பொக்கிஷமாகும்.

... ... ....

லண்டனில் மார்க்ஸ் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தார். குடும்பச்சுமை அவரை அழுத்தியது. மான்செஸ்டரில் எங்கெல்ஸ் பத்திரிகை தொழில் மூலமாக ஒருவாறு தன் வாழ்க்கையை சமாளித்துக்கொண்டு போனார். பாட்டாளிவர்க்க ஆசானைக் காக்கவும் தன் நண்பனை முதலாளித்துவ சமூகத்தின் வர்க்கப் பழிவாங்கலில் இருந்து காக்கவும் அந்த நிலையில் எந்த விதமான தியாகம் செய்யவும் எங்கெல்ஸ் ஆயத்தமாக இருந்தார்.

அப்போது இருந்த சூழ்நிலையில் எங்கெல்சுக்கு இருந்த ஒரே வழி "கேடுகெட்ட வணிகத்தொழிலுக்கு" மீண்டும் செல்வது ஒன்றே.  அவரது தந்தை பெரும் செல்வந்தர் என்பதை நாம் மறக்கக் கூடாது! அவர் நிறுவனத்தில்தான்   விற்பனை முகவராக வேலையில் சேர்ந்தார். முறையீடோ முணுமுணுப்போ ஆரவாரமோ இன்றி எங்கெல்ஸ் அதை செய்தார். வேறு வழியில்லை. தன் நண்பரின் மேதமையின் மேன்மையை எப்போதும் போற்றிப்புகழ்ந்து அவருக்கு தலைவணங்கிய எங்கெல்ஸ், மார்க்சின் மிக முக்கியமான தத்துவ, அரசியல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு மார்க்சுக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் அவசியமான பொருளாதாரத் தேவைகளை கணிசமான அளவுக்கு நிறைவு செய்வது தன் கடமையே என்று கருதினார். லெனின் சொல்கின்றார்: எங்கெல்ஸ் மட்டும் தன்னலம் இன்றி எப்போதும் பண உதவி செய்துகொண்டே இருந்திடாவிட்டால், மார்க்ஸ் 'மூலதனம்' என்ற நூலை எழுதியிருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையில் மடிந்திருப்பார். (வி இ லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 1).

20 ஆண்டுகள் இந்த வேலையில் இருந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு தனக்கு வந்த பங்கை நிறுவனத்தில் முதலீடு செய்து 1864 முதல் அதன் உடைமையாளர்களில் ஒருவர் ஆனார். எங்கெல்ஸ் வீட்டில் அடிக்கடி தங்கிய மார்க்சின் மகள் எலியனோரா இப்படி கூறினார்: ...எங்கெல்ஸ் போன்ற ஒரு மனிதர் இந்த முறையில் இருபது ஆண்டுகளை கழிக்க நேர்ந்த கட்டாயத்தை நினைக்கும்போதே பயங்கரமாக இருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் இது குறித்து புகார் செய்ததும் இல்லை, முணுமுணுத்ததும் இல்லை.

ஆனால் மிகக்குறைந்த ஊதியத்தை மட்டுமே பெற்று வந்ததால் மார்க்சுக்கு போதிய அளவுக்கு உதவி செய்ய முடியாமல் இருந்தார். வறுமையோ மார்க்சின் கழுத்தைப்பிடித்து இறுக்கியது. கடன் கொடுத்தவர்களுடன் முடிவற்ற போர் நடத்தினார். வாடகை தர முடியாமல் வீட்டு உரிமையாளர் உடனும் அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக கடனாக வாங்கிய பொருட்களுக்காக கடைக்காரர்கள் உடனும் நீண்ட போரை நடத்திக்கொண்டு பெரும் துயரில் இருந்தார் மார்க்ஸ். எந்த அளவுக்கு எனில், குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக வறுமைக்கு பலியாயினர். க்விதோ Guido ,  பிரான்ஸிஸ்கா Franziska ஆகிய குழந்தைகள் இறந்தார்கள். குடும்பத்தின் அனைவருக்கும் செல்ல மகன் மூஷ்  என்னும் 'குருவிக்குஞ்சு'  Musch, the little sparrow அடுத்து இறந்தபோது மார்க்சுக்கு பேரிழப்பாக இருந்தது. மூஷ் நோய்வாய்ப்பட்டபோது மார்க்ஸும் எங்கெல்சும் சேர்ந்து கவலையில் வீழ்ந்தனர், அவனை குணப்படுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்தார் எங்கெல்ஸ். "எனக்குப் பதிலாக வேலை செய்து, நீ எனக்காக செய்து வரும் தோழமையுடன் கூடிய உதவிக்காகவும் குழந்தையிடம் நீ காட்டும் பரிவுக்காகவும் உனக்கு நான் எவ்வாறு நன்றி கூறுவது? தெரியவில்லை...." என்று எழுதினார் மார்க்ஸ்.

சிறுவனை அடக்கம் செய்துவிட்டு எங்கெல்சுக்கு இப்படி எழுதினார் மார்க்ஸ்: துன்பங்கள் பலவற்றை நான் ஏற்கனவே அனுபவித்து உள்ளேன்; ஆனால் உண்மையான துக்கம் என்பது என்னவென்று இப்போதுதான் உணர்கின்றேன்...இந்த நாட்களில் நான் அனுபவித்த பயங்கரமான சித்ரவதைகளின் இடையில் உன்னைப்பற்றிய சிந்தனையும் உன்னுடைய நட்பைப் பற்றிய சிந்தனையும் நாமிருவரும் இப்பூமியில் உருப்படியாக செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கையும்தான் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்தன...

எங்கெல்ஸின் பணிச்சூழல், அவரது இயல்புக்கு மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் வாழுமாறும் சம்பிரதாய மரியாதைகளை கடைப்பிடிக்கவும் அவரை கட்டாயப்படுத்தியது. மான்செஸ்டரில் முன்பு இருந்தபோது அவர் காதலித்து மணந்து கொண்ட எளிய அயர்லாந்து நாட்டுப் பெண் தொழிலாளி மேரி பர்ன்ஸ் Mary Burns வீட்டில்தான் இத்தகைய அந்நியமான சூழலில் இருந்து ஒதுங்கி ஓய்வு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. இங்குதான் அவர் பல துறைகளை சேர்ந்த தன் நண்பர்களையும் கம்யூனிஸ்ட் சங்கத்தின் தோழர்களையும் சந்திக்க முடிந்தது. கடும் சூழ்நிலையில் இருந்த அவருக்கு அன்பையும் ஆறுதலையும் அளித்த மேரி, 1863 ஜனவரி 6 அன்று இதய நோய் கண்டு மரணமுற்றார். இந்த இழப்பால் கடும் துயரத்தில் வீழ்ந்தார் அவர். மார்க்சுக்கு எழுதினார்: இவ்வளவு நீண்ட காலம் ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை நடத்தினால், அவள் மறைவு பெரிதாக உலுக்கிவிடாமல் போகாது. அவளுடன் கூடவே என் இளமையின் கடைசித்துளியையும் புதைத்து மூடிவிட்டதாக நான் உணர்ந்தேன் I felt although with her i was burying the last vestige of my youth...

மார்க்சின் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற தன்னால் முடியவில்லையே என்று மிகவும் வருந்தித்துடித்தார் எங்கெல்ஸ்.

1851 ஆகஸ்டில் NewYork Daily Tribune என்னும் அமெரிக்க முற்போக்கு பத்திரிக்கையில் பணியாற்றுமாறு அப்பத்திரிகை மார்க்சுக்கு அழைப்புவிடுத்தபோது அந்த வாய்ப்பை மார்க்ஸ் இறுகப் பற்றிக்கொண்டார்.

(Yevgenia  Stepanova எழுதிய பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கைச்சுருக்கம் என்ற நூலின் சில பகுதிகள், சில மாற்றங்களுடன்)

.... .... ..... .....

Newyork Daily Tribune இல்தான் 1857 சிப்பாய் புரட்சி எனப்படும் முதல் இந்திய விடுதலைப்போர் பற்றி மார்க்ஸும் எங்கெல்சும் பல கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார்கள். இந்தக் கட்டுரைகள் Progress Publishers வெளியீட்டில் The First Indian War of Independence என்ற நூலாக வந்துள்ளது.

உண்மையில் வேறு ஒரு சுவாரசியமான விசயமும் உள்ளது. தான் பொருளாதார ஆய்வில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் எங்கெல்ஸின் உதவியை நாடினார் மார்க்ஸ். ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற தொடர், மார்க்சின் பெயரால் வெளியானது, ஆனால் கட்டுரைகளை எங்கெல்ஸ்தான் எழுதினார்! (ஆதாரம், மேலே குறிப்பிட்ட அதே நூல், 7ஆம் அத்தியாயம்).

கருத்துகள் இல்லை: