செவ்வாய், மார்ச் 25, 2014

சாம்பல்தேசம்-1 (நெடுங்கதை)



1757 ஜூன் மாதம் வங்காளத்தின் பிளாசியில் வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தவ்லாவுக்கும் ஆங்கிலேய கவர்னரான ராபர்ட் க்ளைவுக்கும் இடையே நடந்த போர்தான் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின், அதாவது காலனிய ஆட்சியின் அஸ்திவாரக்கல்லாக அமைந்தது. நவாபின் தளபதி மீர் ஜாஃபரை க்ளைவ் விலைக்கு வாங்கினான்; மீர் ஜாஃபர் போரின் சரியான சமயத்தில் நவாபுக்கு துரோகம் செய்தான்; பொருளாதாரக்கோணத்தில் பார்க்கும்போது வங்காளம் இந்தியாவின் மிக முக்கியமான பகுதியாகும். அன்றைய இந்தியாவின் மிக வளமான மாகாணம் வங்காளமே. க்ளைவின் கைக்கு ஆட்சி வந்தபின் க்ளைவும் அவனது படைகளும் வங்காளத்தின் வளங்களை தங்களால் முடிந்த அளவுக்கு கொள்ளையடித்தார்கள். வணிகர்கள் ஆட்சியாளர்களாக மாறியதற்கு வங்கத்தின் செல்வமே காரணம்.
      “தமது சாம்ராஜயத்தை இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் நிறுவினார்கள்; துரோகம், மோசடி ஆகியவற்றை இங்கே வளர்த்தே தமது ஆட்சியை இங்கே நிறுவினார்கள்-ஜவஹர்லால் நேரு.
................................................................................

              
எல்.பி.ஜி.குடியரசின் மத்திய பஞ்சாயத்துக்கு மூணேமுக்கால் வருசத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆளும்கட்சியான தேசியக்கட்சி வரும் தேர்தலில் பலத்த அடி வாங்கும் என்றும் இத்தோடு அக்கட்சிக்கு பாடை கட்டப்படும் என்றும் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான பத்திரிக்கைகளான செய்திகளை முந்தித்தரும் தினபுருடா, செய்திகளை பிதுக்கித்தரும் நடுநிசி புருடா, ஏ.பி.சி.டி., புதியகலவரம், ஏக்தோதீன்,அமாவாசை, 007 போன்ற டிவி சானல்களும் கணித்திருந்தது தேசியக்கட்சிக்கு வயிற்றில் புளி, வத்தக்குழம்பு என அனைத்தையும் கரைத்திருந்தது. எல்.பி.ஜி.குடியரசின் ஒவ்வொரு மத்திய பஞ்சாயத்து தேர்தலிலும் யாருமே எதிர்பாராத ஒரு விசயம் பலத்த மையப்பொருளாகி தேர்தலின் தலையெழுத்தையே தீர்மானித்து விடுவது வழக்கம். இப்படித்தான் கடந்த காலத்தில் நாட்டில் கடுகுக்கு கடும்பஞ்சம் வந்துவிடவே "தாளிக்க கடுகு இல்லை, மேயவோ கிடுகு இல்லை" "கடாய் இங்கே கடுகு எங்கே" போன்ற கோசங்கள் அப்போது ஆளும்கட்சியாக இருந்த எல்.பி.ஜி.தேசியக்கட்சிக்கு பெரும் சவாலாய் மாறியதும், "கடுகு கேட்ட அத்தான் பொடுகு வந்து செத்தான்" என்ற மையமான கோசம் நாட்டின் 365 மொழிகளிலும் புயலாக அடித்ததும், ராஷ்ட்ரீயக்கட்சி தனது வழக்கமான சின்னமான சப்பாத்திக்கள்ளியை கடாசி எறிந்துவிட்டு கடாய் சின்னத்தில் போட்டியிட்டதும், தேசியக்கட்சியின் ஆட்சி நாக்குத்தள்ள கவிழ்ந்ததும் வரலாறு. சில நேரங்களில் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்போ அல்லது பாதி இடங்களில் தேர்தல் முடிந்த நிலையிலோ ஆளும்கட்சியின் சூப்பர் ஸ்டார் தலைவர் செத்துப்போவதும் கூட எல்.பி.ஜி.குடியரசு ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என்று தேசியக்கட்சி, ராஷ்ட்ரீயக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே கோவில்கட்டிக் கும்பிடும் பேரிக்கா நாடும் பேரிக்கா நாட்டின் பொழுதுபோக்கு க்ளப்பான நைனா சபையும் சர்டிஃபிகேட் கொடுத்துள்ளன.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க முக்கியமான இரண்டு கட்சிகளின் தலைவர்கள் எப்போ சாவு வருமோ, எந்த ரூபத்தில் வருமோ என்று பயந்து விடியவிடிய லைட்டை போட்டுக்கொண்டு தூங்காமல் கண்முழிப்பதும்  நெருங்கிய நண்பர்களையும் கூட சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும் கூட எல்.பி.ஜி.குடியரசு ஜனநாயகத்தின் சிறப்பம்சம் என உலகவட்டிக்கடை நிதியம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
மத்திய தேர்தல் கங்காணியம் தேர்தல் தேதி அறிவித்த நாள் தொடங்கி இந்த தேர்தலின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் பொருள் எதுவாக இருக்கும் என மக்கள் தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் கூடிக்கூடிப் பேச ஆரம்பித்தார்கள்; தலைப்புச் செய்திகளை திரில் கதை ரேஞ்சுக்கு கவனிக்க ஆரம்பித்தார்கள்; மக்கள் இவ்வாறு உழைக்காமல் பேசிக்கொண்டே திரிவதால் இக்காலகட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தி (GDP) 0.987 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதாரப்புலி குளுவாலியாசிங் பேரிக்கா நாட்டில் இருந்து பேட்டியளித்தார்.

இந்தத் தேர்தலிலும் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு பொருள் எல்பிஜி மத்திய பஞ்சாயத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்க காத்திருந்தது.

.....தொடரும்

கருத்துகள் இல்லை: