... ... ..
1969 ஒரு பிப்ரவரி மாதத்து மாலையில் ஹவானா நகரின் மிராமர் என்னும் புறநகரில் சேயின் தந்தை டான் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச், சேயின் நண்பர் ஆல்பெர்ட்டோ, சேயின் மனைவி ஜூலியா ஆகியோரை I Lavretsky என்ற ரஷியர் நேரில் கண்டு பேசிய பதிவு:
பாடிஸ்டாவை துரத்தியடித்தபின், கியுபன் தேசிய வங்கியின் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்ட குவேரா, புதிய அரசு வெளியிட்ட புதிய நாணய தாள்களில் சே என்று கையெழுத்து இட்டு எதிர்ப்புரட்சியாளர்கள் மத்தியில் பெரும் கோபமும் வெறுப்பும் ஏற்படக் காரணமாக விளங்கினார்.
கியுப புரட்சி வெற்றிக்குப்பின் ஒரு முறை அவரிடம் சே என்ற புதிய பெயரை விரும்புகின்றாரா என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்: என்னைப்பொறுத்தவரை சே என்ற சொல் என் வாழ்க்கையின் மிக மதிப்பு வாய்ந்த, அதி முக்கியமான விசயங்கள் அனைத்தையும் குறிக்கின்றது. அதுவன்றி அது வேறு எப்படியும் இருக்க முடியாது. என் முதற்பெயரும் குடும்பப் பெயரும் சிறிய, தனிப்பட்ட, முக்கியத்துவம் அற்ற சில விசயங்களை மட்டுமேதான் குறிக்கின்றன.
டான் எர்னெஸ்டோ (தந்தை) சொல்கின்றார்: என் மகன் ஏன் 'மேஜர் சே' ஆனான்? ஏன் அவன் கியுப புரட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கினான்? எது அவனை பொலிவிய மலைத்தொடர்களுக்கு உந்தித்தள்ளியது? இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் எனில் நாம் கடந்த காலத்தையும், எங்கள் குடும்ப மூதாதையர்கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். என் மகனின் நரம்புகளில் ஐரிஷ் புரட்சியாளர்கள், ஸ்பானிய வீரர்கள், அர்ஜென்டினாவின் தேசபக்தர்கள் ஆகியோரின் குருதி பாய்ந்தது என்ற உண்மையை முதலில் குறித்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் ஓய்ந்து இராத தன் மூதாதையர்கள் இடம் இருந்து சில அம்சங்களை சே மரபுச்செல்வமாகப் பெற்றிருந்தான் என்பது தெளிவான உண்மை. தூர தேசங்களில் அலைந்து திரியவும், அபாயகரமான சாகசங்களில் ஈடுபடவும் புதிய கருத்துக்களை கண்டு தெளிவு கொள்ளவும் அவனது இயல்பிலேயே சில அம்சங்கள் காரணமாக இருந்தன.
... ... ....
1930ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள், எனக்கு அந்த நாள் மிக நன்றாக நினைவில் இருக்கிறது, நானும் சிலியாவும் (குவேராவின் தாயார்) டேட்டியுடன் (குழந்தையான குவேராவை செல்லமாக Tete என்று அழைத்தனர்) நீச்சல் குளத்தில் குளிக்க சென்றிருந்தோம். சிலியாவுக்கு தண்ணீர் என்றால் மிக ஆசை, அவள் நல்லதொரு நீச்சல் வீராங்கனையும் ஆவாள். அன்று குளிர்ச்சி அதிகமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டு இருந்தது. திடீரென டேட்டி மூச்சுவிட கஷ்டப்பட்டு இருமத் தொடங்கினான். நாங்கள் உடனே அவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு சென்றோம், அவன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார். ஒருவேளை கடும் குளிரின் காரணமாக அவன் இந்த நோய்க்கு ஆளாகி இருக்கலாம். அல்லது அவன் அம்மாவிடம் இருந்து இந்த நோய் அவனுக்கு வந்திருக்கக் கூடும், சிலியா குழந்தையாக இருந்தபோது அவளும் இந்த நோயால் அவஸ்தைப் பட்டிருக்கிறாள்.... .... அந்தக்காலத்திய மருந்துகளுக்கு ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் இல்லை. தட்பவெப்பநிலை மாறினால் சரியாகிவிடும் என்று எல்லோரும் எங்களுக்கு ஆலோசனை கூறினார்கள்..... ஒரு வருத்தமும் இன்றி எங்கள் தோட்டத்தை விற்றுவிட்டு, கோர்டோபாவுக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருந்த அல்ட்டா கிராசியா என்ற இடத்தில் வில்லா நிடியா என்ற வீட்டை வாங்கினோம். ... ஒவ்வொரு நாளும் , குறிப்பாக இரவுகளில், சே ஆஸ்துமாவால் அவதிப்பட்டான். நான் அவனது படுக்கைக்கு அருகில்தான் படுத்து இருப்பேன், அவன் மூச்சுவிட திணறும்போது அவனை எடுத்து தோள்களில் ஏந்தி, அவன் அவஸ்தையில் இருந்து விடுபடும் வரையிலும், களைப்புற்று தானாகவே தூங்கும் வரையிலும் , நேரமாகி விடும், விடிவதற்கு சற்று முன்னர்தான் அவன் தூக்கத்தில் ஆழ்வான், அவனை தேய்த்துவிட்டுக் கொண்டும் தட்டிக்கொடுத்தும் தூங்க வைப்பேன்....
புரட்சியாளர்கள் நோயின் காரணமாகவோ உடலுறுப்பு குறைபாடுகள் காரணமாகவோ சிலவகை உணர்ச்சிகளின் காரணமாகவோ உருவாவதில்லை. மாறாக அவர்கள் ஒரு சுரண்டும் அமைப்பின் காரணத்தாலும் நீதிக்காகப் போராடும் மனிதனின் இயல்பான உந்துதலின் காரணமாகவே உருப்பெறுகின்றார்கள். ... .... பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபடுமாறு டேட்டியை நாங்கள் உற்சாகப்படுத்தினோம். டேட்டி விளையாட்டுக்களை நேசித்தான். தன் நோயைப்பற்றி கவலைப்படாமல் எதை எடுத்துக்கொண்டாலும் அதில் தான் முழுத்திறனையும் செலுத்தி செயல்பட்டான். சாபக்கேடான ஆஸ்துமா இருந்தபோதும் தான் யாருக்கும் சளைத்தவன் அல்லன் என்று நிரூபிக்க முயல்வதுபோல அவன் செயல்பட்டான். பள்ளி மாணவனாக இருந்தபோதே அவன் பிரதேச விளையாட்டு மன்றமான Atalaya வில் உறுப்பினராகி அதன் கால்பந்தாட்டக்குழுவில் மாற்று ஆளாக விளையாடினான். அவன் சிறந்த ஆட்டக்காரன்தான் எனினும் விளையாடும்போதே ஆஸ்துமாவின் தாக்குதலுக்கு ஆளாகி மைதானத்தை விட்டு வெளியேறவும் மூச்சுத்திணறலை சரியாக்கவும் வேண்டிய நிலையில் இருந்தால் அவனால் முழு ஆட்டக்காரனாக விளங்க முடியவில்லை. கடுமையானதும் கஷ்டமானதும் உடல் முழுவதையும் பயன்படுத்தி விளையாடக்கூடியதும் ஆன ரக்பி விளையாட்டையும் விளையாடினான். சில காலம் குதிரைச்சவாரி செய்தான். கோல்ப் விளையாடினான், சறுக்கு விளையாடினான். ஆனால் குழந்தைப்பருவத்திலும் இளமையிலும் அவன் உண்மையாகவே ஈடுபாடு காட்டியது சைக்கிள் சவாரிதான் என்பதில் மறுகருத்து இல்லை.
... சே ஒருபோதும் வீட்டில் முடங்கி கிடந்தது இல்லை. அவன் மாணவனாக இருந்தபோதே ஓர் அர்ஜென்டைன் கப்பலில் மாலுமியாக சேர்ந்து ட்ரினிடாட்டில் இருந்து பிரிட்டிஷ் கயானா வரை பல நாடுகளுக்கும் சுற்றினான். பின்னர் கிறானோடாசுடன் சேர்ந்து தென் அமெரிக்காவின் பாதி பகுதியை சுற்றினான், சரியாக சொல்வது எனில் நடந்தே சுற்றினான்.
(இப்போது லாவரெட்ஸ்கி தன்னிடம் இருந்த காகிதங்களில் இருந்து 1950 மே 5 தேதியிட்ட El Grafico என்ற அர்ஜென்டினா நாளிதழில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை வாசிக்கின்றார், சேயின் தந்தை கேட்கின்றார்) : 1950 பிப்ரவரி மாதம் 23, செனோரேஸ், Micron Moped Firm நிறுவனத்தின் பிரதிநிதியான நான் உங்களுக்கு, நீங்கள் வலம் வருவதற்காக ஒரு மைக்ரோன் மொபெட்டை அனுப்புகின்றேன். நான் இதில் அமர்ந்து 12 அர்ஜென்டைன் மாநிலங்கள் வழியாக 4000 கிலோமீட்டர்கள் பயணம் செய்தேன். அப்பயணம் முழுவதும் இந்த மொபெட் எவ்வித தடங்கலும் இன்றி வேலை செய்தது. இதில் ஒரு குறையைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் பயணம் செய்த பின், புறப்படும் போது எவ்வாறு இருந்தேனோ அதே நிலையிலேயே திரும்பி வந்து சேர்ந்தேன் என்று கூறுகின்றேன். எர்னெஸ்டோ குவேரா செர்னா (கையொப்பம்).
தொடர்ந்து சேயின் தந்தை கூறுகின்றார்: .... டேட்டிக்கு அப்போது வயது பதினொன்று, ராபெர்டோவுக்கு எட்டு. இருவரும் வீட்டில் இருந்து காணாமல் போனார்கள். காற்றில் கரைந்தது போல எங்கேயும் அவர்களை பார்க்க முடியவில்லை.... போலீசுக்கு தகவல் கொடுத்தோம்... 800 கிலோமீட்டர்க்கு அப்பால் அவர்களை கண்டுபிடித்தார்கள். ஒரு ட்ரக் வண்டியின் பின்னால் கட்டணம் இன்றி பயணம் செய்துள்ளார்கள்.... .... ஒருமுறை கிறேனாடோசும் அவனும் எழுதிய கடிதத்தை பெறும்போது நாங்கள் கனத்த இதயத்தோடும் கலக்கத்தோடும் இருந்தோம். தென் அமெரிக்காவில் பயணித்த காலத்தில் அவர்கள் சென்று இருந்த தொழுநோயாளிகள் காலனியைப் பற்றி விவரித்து எழுதி இருந்தார்கள். ஒரு சமயம் பெருவில் இருந்து எழுதிய கடிதத்தில் அவனும் ஆல்பர்ட்டோவும் கட்டுக்கு அடங்காத காட்டாற்று வெள்ளம் பாயும் அமேசான் நதியில் தொழுநோயாளிகள் வழங்கியிருந்த ஒரு தெப்பத்தில் ஏறிப்பயணம் செய்வதாக எழுதி இருந்தான். ஒரு மாதத்துக்குள் என்னிடம் இருந்து கடிதம் ஏதும் வரவில்லை எனில் நாங்கள் முதலைகளுக்கு இரையாகி விட்டோம் அல்லது ஜிப்ரோ இந்தியர்களுக்கு உணவாகப் பரிமாறப்பட்டு விட்டோம் என்றோ எங்கள் தலைகள் அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்பட்டு விட்டன என்றோ ஊகம் செய்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் நடந்தால் பாடம் செய்யப்பட்ட எங்கள் தலைகளை நியு யார்க் நகரில் அழகுப்பொருட்கள் விற்கும் கடைகளில் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எழுதி எங்களுக்கு சிரிப்பூட்ட முயற்சி செய்து இருந்தான்.
பின்னர் அவன் மெக்சிகோவில் இருந்து எழுதிய கடிதத்தில், தான் பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்துவிட்டதாகவும் பாடிஸ்ட்டாவை எதிர்த்துப் போராட கியூபாவுக்குப் போவதாகவும் சொல்லி இருந்தான்.
... .... ....
உதவிய நூல்: எர்னெஸ்டோ சே குவேரா, ஆசிரியர்: I Lavretsky, தமிழில்: சந்திரகாந்தன்
வெளியீடு: NCBH, 1986
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக