சனி, அக்டோபர் 31, 2020

எஸ் பி பாலசுப்ரமணியம்

SPB! மீண்டும் இலங்கை வானொலிதான்! இயற்கை என்னும் இளைய கன்னி, ஆயிரம் நிலவே... போன்ற பாடல்கள் காற்றின் வழியே அவரோடு கைகுலுக்க செய்தன. அப்போதெல்லாம் செய்தித்தாட்கள் மட்டும்தானே, அவர் நேரில் எப்படி இருப்பார், கருப்பா சிவப்பா என்பதெல்லாம் கற்பனையில் மட்டுமே விரியும். 

இப்படியே நாட்கள் வானொலியுடன் உறவு வைத்துக்கொண்டு போன போதில், மதுரை காந்தி மியூசியம் திறந்தவெளி அரங்கில் எஸ் பி பியின் நிகழ்ச்சி என்று தெரிய வந்தது. நாங்கள் நெசவாளிகள், சினிமாவுக்கு டிக்கெட் வாங்குவதுதான் அதிகபட்ச பொழுதுபோக்கு செலவு, இன்னிசைக்கச்சேரிக்கு டிக்கெட் எங்கே? இப்படித்தான் முன்பு அதே அரங்கில் இளையராஜாவின் நிகழ்ச்சி நடந்தபோது அரங்கின் பின் வரிசை மதில் சுவர் பின்னால் இருந்த மரத்தின் மீது ஏறிக்குதித்து கச்சேரியை ஓசியில் ரசித்து வந்தேன்.இளையராஜா, மலேசிய வாசுதேவன், கங்கை அமரன் என பெரிய கூட்டமே இருந்தது. அப்போது அவர் வெள்ளை நிற சட்டை, பாண்ட் அணிவார். 1979, 80 என்று அவர் உச்சத்தில் இருந்த நேரம் அல்லவா, பாடல் மழை பொழிந்து கொண்டே இருந்தது, ஓசியில்! தண்ணி கருத்திருக்கு பாட்டுக்கு ரசிகர்கள் ஆடிய ஆட்டம் சாமியாட்டம்!

அதே சாகச வழியில் இப்போதும் எஸ் பி பி கச்சேரிக்குள் கலந்தேன்! மதனோற்சவம், என் கண்மணி, ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்,  பொன் மாலைப்பொழுது... என பாடிக்கொண்டே இருந்தார். அழகன் அவர். வானொலியில் மட்டுமே பறந்து வந்த குரலுக்கு சொந்தக்காரரை நேரில் கண்ட மகிழ்ச்சி சொல்லி முடியாது!

ஒவ்வொரு பாட்டும் முதல் பாட்டு போலவே துலக்கமாக உயிரோடு இருந்தது. 40 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் 15 பாட்டுக்கும் மேல் பாடினார் என்று அறிகின்றோம், கடுமையான உழைப்பாளியாக இருந்திருந்தால் மட்டுமே இது முடியும். சங்கராபரணம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மதுரை மூவிலாண்ட் தியேட்டர் அழகானது, அமைதியானது, படத்தை அங்கே பார்த்தேன். 

மதுரை இசைக்கலைஞர்கள், நாடகக்கலைஞர்கள், நடனக்கலைஞர்களின் கோட்டை. கோவில் திருவிழாக்காலங்களில் கேட்கவே வேண்டாம், திரும்பும் தெருவெல்லாம் பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், நாடகம், பட்டிமன்றம்... என தூங்காத நகரமாகவே இருக்கும். அதிகாலை 6 மணிக்கு மேடைக்கு முன் வீதிகளில் மக்கள் துணி விலகியது தெரியாமல் தூங்கிக்கொண்டே இருக்க, அரிச்சந்திர மயான காண்டம் அப்போதும் முடிந்திருக்காது. பாட்டுகச்சேரிகளோ! மிக அற்புதமான கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் அப்போது நிறைய இருந்தன. அமெரிக்கன் காலேஜ் குழு மிகப்பிரபலம். சின்சியரான குழு என்று சொல்லலாம். உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதிதானே, சங்கீத ஞானம் பற்றி கவலை இல்லை என்றில்லாமல், மேடை கச்சேரிக்கு வீணை, கடம் என கொண்டு வருவார்கள். நிழல்கள் படம் அப்போதுதான் ரிலீஸ் ஆகி இருந்தது. கூட்டத்தில் இருந்து பொன்மாலைப்பொழுது பாடச்சொல்லி சீட்டு போனது! நாங்கள் அதற்கான ஒத்திகை பார்க்கவில்லை, ஆனாலும் முயற்சி செய்கின்றோம் என்று அறிவித்து பாடி கைதட்டல் பெற்றார்கள். என் மூத்த அண்ணன் அப்போது நெசவுத்தொழிலாளி (பின்னர் பட்டுவளர்ச்சி துறையில் பணி செய்து ஓய்வும் பெற்றுவிட்டார்). நன்றாகப்பாடுவார். சங்கராபரணத்தில் இடம் பெற்ற ஓம்கார.. பாடலை பாடிப்பாடி பயிற்சி செய்து ஒரு மேடையில் ஏறி பாடி கைதட்டலும் பெற்றுவிட்டார்! பின்னர் தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பாடினார், ஒரு முறை பி.சுசீலா அம்மையாருடன் பாடி மகிழ்ச்சி அடைந்தார். உடுமலைப்பேட்டை தமுஎச வெளியிட்ட பாடல் கேசட்டில் அவர் பாட்டும் இருந்தது. நேற்று மதுரை ஆரப்பாளையத்தில் மேடை கச்சேரி கலைஞர்கள் எஸ் பி பி நினைவாக கச்சேரி நடத்தியுள்ளனர். இன்று அண்ணனுடன் பேசினேன். தமிழகத்தில் எஸ் பி பி பாடல்களைப் பாடி வாழ்க்கையை நடத்தும் பல நூறு கலைஞர்களின் உணர்வை எதிரொலிக்கும் குரலாக அவர் பேசினார். உண்மை. டி எம் எஸ், எஸ் பி பி பாடல்கள் பல நூறு பாடகர்களுக்கும் இசைக்கருவி இசைப்பவர்களுக்கும் பல பத்தாண்டுகளாக வாழ்க்கையை கொடுத்துள்ளன, இனிமேலும் கொடுக்கும். 

டி எம் எஸ், சீர்காழி, ஏ எம் ராஜா, கண்டசாலா, சி எஸ் ஜெயராமன் ஆகியோரின் காலம் ஆகட்டும், எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் காலம் ஆகட்டும், திரையிலும் வானொலியிலும் அவர்களின் பாடல்களை, நடிப்பை பார்த்தோம், கேட்டோம். அல்லாமல், ஆல் இந்தியா ரேடியோவில் அவர்களின் நேர்காணல்களை கேட்டிருப்போம், முகங்களை எங்கே பார்த்தோம்? ஆனால் காலம் எஸ் பி பி அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியது, நமக்கும் வழங்கியது. இசை நிகழ்ச்சிகளில் அவர் தனது உயரத்தை எப்போதும் வெளிக்காட்டி பிறரை துச்சமாக பார்த்ததில்லை, தன்னை உயர்த்தி ஒருபோதும் பேசிக்கொண்டது இல்லை, வயதில் மிக சிறிய குழந்தைகளிடம் கூட மரியாதையுடன் நடந்து கொள்வார், குழந்தைகளுடன் டூயட் பாடும்போதும் தொழில் பக்தியுடனும் கவனத்துடனும் பாடுவார், அசிரத்தையாக அவர் இருந்ததில்லை. அவர் பங்கு பெறும் நிகழ்வுகளின்போது நிகழ்வின் எல்லையை தாண்டியும் பல அனுபவங்களை உணர்வுடன் பேசுவார், அவர் நிகழ்வுகளை நான் பார்ப்பதற்கு முக்கியமான காரணம் இது.

ஜெயா டிவி ஹமாம் என்னோடு பாட்டுப்பாடுங்கள் நிகழ்வில் யாரும் அதுவரை சொல்லாத ஒரு முக்கியமான வரலாற்றை சொன்னார். "நாங்கள்ளாம் இப்போ பாட்டு ரிகார்டிங் முடிஞ்ச உடனே கையிலே சம்பளத்தை வாங்குறோம், அதுக்கு காரணம் எம் பி சீனிவாசன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவரை நான் நினைத்துக்கொள்வேன்" என்று மிக நன்றியுணர்வுடன் அவர் செய்த பதிவு இப்போதும் என் நினைவில் உள்ளது. இன்று காலை ஒரு வீடியோ பதிவை காண நேரிட்டது. கங்கை அமரனுடன் அவர் பேசுகின்றார், நாமெல்லாம் இன்னிக்கு நல்லா இருக்கோம்னா அது ரசிகர்கள் போட்ட பிச்சைடா என்று சொல்கின்றார்! மிக உயரத்தில் இருந்த மனிதனின் மிகப்பணிவான எண்ணம் அல்லவா இது! அதனால்தான் அவரை எல்லோரும் மதிக்கின்றார்கள். எஸ் பி பி! துயர் சூழ்ந்த பொழுதுகளிலும் சரி, மகிழ்ச்சியான நிமிடங்களிலும் சரி, மனிதர்களை மகிழ்ச்சியுடன் வைத்து இருந்தீர்கள்! நீங்கள் என்றும் எங்களுடன் இருக்கின்றீர்கள்!

எத்தனை பாடல்கள்! ஆனால் எஸ் பி பி என என் மனதில் அழுத்தமாக எழுதிய பாடல்கள் என சிலவற்றை சொல்வேன், இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாத பாடல்கள், அவர் குரல் செய்யும் மாயங்களை ரசிக்கலாம்:

இயற்கை என்னும், ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு, தொடுவதென்ன தென்றலோ மலர்களோ, மார்கழிப்பனியில், என்ன சொல்ல என்ன சொல்ல, கண்ணனை நினைக்காத, யமுனா நதி இங்கே, ஓடம் கடல் ஓடும், எனக்கொரு காதலி இருக்கின்றாள், மாதமோ மார்கழி, காதல் விளையாட, அம்பிகை நேரில் வந்தாள், கண்ணெல்லாம் உன் வண்ணம், கண்டேன் கல்யாணப்பெண் போன்ற, ஒரு சின்னப்பறவை, சித்திரப்பூ சேலை, மதனோற்சவம், ஒரு நாள் உன்னோடு ஒரு நாள், நந்தா என் நிலா, சம்சாரம் என்பது வீணை, என் கண்மணி உன் காதலன், அங்கே வருவது யாரோ, பாடும்போது நான் தென்றல்..., அவளொரு நவரச நாடகம், தேன் சிந்துதே வானம், தேவன் வேதமும், அங்கும் இங்கும் பாதை உண்டு, கனாக்காணும்.., you are like a fountain..., What a waiting.., shayanora, மழையும் நீயே, ஜாதி மல்லி பூ சரமே, மௌனமான நேரம், பூந்தேனில் கலந்து, பூந்தளிராட...., சின்னப்புறா ஒன்று..., நதியோரம், படைத்தானே பிரம்ம தேவன், மயிலே மயிலே, நான் எண்ணும் பொழுது...

மேக்ரான்கார் கோட்டை உச்சியின் ஷெனாயும் நகராவும்


இது ராஜஸ்தான் மண்ணின் இசை குறித்த ஒரு நினைவுக்குறிப்பு. 2009இல் ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் சென்றிருந்தேன். ஜெய்ப்பூரின் ஆம்பர் கோட்டை அளவிலும் அழகிலும் மிகப்பெரியது. ஒரு நாள் போதாது, முழுமையாக காண. ஜோத்பூரின் மேக்ரான்கார் கோட்டை அழகானது, 1450களில் கட்டியுள்ளனர். தவிர ஜெய்ப்பூரின் மியூசியம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. மம்மி ஒன்று இங்கே உள்ளது. அங்கு இருந்த ஒரு வாரமும் ராகுல சங்கிருத்தியாயன் எழுதிய ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

மேக்ரான்கார் கோட்டையின் ஒரு இடத்தில் சில இசைக்கலைஞர்கள் அமர்ந்து ராஜஸ்தானின் கிராமிய இசையை இசைக்கின்றார்கள். ஷெனாய், நகரா ஆகியவற்றுடன் வாய்ப்பாட்டும் உடல் மொழியும், காண்பதும் கேட்பதும் அரிய அனுபவம். உயர்ந்த மலைக்கோட்டையில் அந்த ஷெனாய் இசையும் நகராவும் பாட்டும் நம்மை அப்படியே தூக்கிக்கொண்டு மேகங்கள் இடையே பறக்கவைத்துவிடும்! அங்கிருந்து நகர்வது கடினம். அவர்கள் பார்வையாளர்களிடம் பணம் கேட்பதில்லை. தவிர, ஏழ்மையின் காரணமாக பணத்துக்காக பாடுகின்றனர் என்று சொல்லவும் முடியாது. இவர்களை பெரிய அளவிலான இசை நிகழ்வுகளில் பாட அழைக்கின்றார்கள் என்பது யூடியூபில் பார்க்கும்போது தெரிகின்றது. 

இவர்கள் அன்றி மங்காணியர் என்ற இஸ்லாமிய சமூகத்தினர் இந்திய பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களில் இரண்டு நாடுகளிலும் வசிக்கின்றனர், இவர்கள் பாரம்பரிய இசைக்கலைஞர்கள், ராஜபுதன வம்சத்தினர். இவர்களை ஆதரிப்போர் இந்து மதத்தை சேர்ந்த மன்னர்களும் நிலக்கிழார்களும் குறுநில மன்னர்களும்! இந்து மத மக்களின் திருமணங்களிலும் துயர நிகழ்வுகளின்போதும் மங்காணியர் இசைக்கின்றார்கள். இவர்களின் முக்கிய கருவிகள் கர்தால், டோலக், ஆர்மோனியம், மோர்சிங். கர்தால் இசைப்பவர் நடனமே ஆடுகின்றார்! அப்படி ஒரு கருவி அது.

இங்கே மேக்ரான்கார் கோட்டையில் பாடும் இக்பால் ராஜஸ்தானியின் ஒரு லிங்கை  கொடுத்துள்ளேன், ரசியுங்கள்!

m.youtube.com/watch?v=c77yAnxitP8

மதுரை சோமுவும் ராஜஸ்தானத்து மங்காணியர் இசைக்கலைஞர்களும்


ராஜஸ்தானத்து மங்காணியர் சமூக இசைக்கலைஞர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இவர்கள் இஸ்லாமியர்கள், ராஜபுதன வம்சத்தினர். இந்தியா, பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களில் வாழ்கின்றனர். பாரம்பரிய ராஜஸ்தானத்து கிராமிய இசைக்கலைஞர்கள். ஆனால் இவர்கள் வழிவழியாக இந்து மத மக்களின் விழாக்கள், துயர நிகழ்வுகளின்போது மட்டுமே இசைக்கின்றார்கள்! இவர்களுக்கு ஆதரவாக இருப்போர் மன்னர்கள், குறுநில மன்னர்கள், நிலக்கிழார்கள். 

ஹரிப்ரஷாத் சவுராஷியா, ஜாகிர் உசேன் ஆகியோரின் Song of the river, song of the desert ஆகியவற்றை கேட்டிருந்த எனக்கு, ஜோத்ப்பூரின் மேக்ரான்கார் கோட்டையின் ஓரிடத்தில் அமர்ந்து ஷெனாய், நகரா ஆகியவற்றை மட்டுமே துணையாக கொண்டு ராஜஸ்தானத்து வாய்ப்பாட்டுடன் பாடும் இக்பால் ராஜஸ்தானி, ஷெனாய் இசைக்கலைஞர் ஆகியோரின் அற்புதமான நிகழ்வைக்காணும் பெரும் வாய்ப்பு வாய்த்தது. அந்த உயரமான மலைக்கோட்டையில் இருந்து சுற்றிலும் பார்க்க பழமைமிகு நீல நகரமான ஜோத்பூர் சூரிய ஒளியில் மினுங்கி மயக்கியது. சில்லென்ற காற்று தழுவ, இதயத்தை ஊடுருவும் ஷெனாயின் கொஞ்சலும் இக்பால் ராஜஸ்தானியின் பாட்டும், மலையின் அமைதியை தன்னுடன்  உரையாட அழைக்கும்  நகராவின் ஒலியுமாக இரண்டே நொடிகளில் மலைக்கோட்டையின் அந்தத் திருப்புமுனை பெரிய பெரிய கச்சேரி வித்வான்களுக்கு சவால் விடுக்கின்றது. அத்தனை எளிதில் நாம் அங்கிருந்து நகர முடியாமல் நிலையாக நிறுத்தி விடுகின்றது. அவ்வப்போது ரசிகர்களுடன் இக்பால் உற்சாகத்துடன் உரையாடுகின்றார், சிரித்து மகிழ்கின்றார், நம் வெகுமதிகளை மரியாதையுடன் பெற்றுக்கொள்கின்றார். நகரங்களில் நடக்கும் பெரிய இசை நிகழ்வுகளுக்கு இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள், கவுரவிக்கப் படுகின்றார்கள். பணத்துக்காக அன்றி கோட்டையை பார்வையிட வருவோரை மகிழ்விப்பதே இவர்களின் கடமையாக உள்ளதை நாம் புரிந்துகொள்கின்றோம்.

ஓர் இரவு ரயில் பயண தூரத்தில் உள்ள ஜெய்ப்பூர் Pink city இளஞ்சிவப்பு நகரம், கோட்டைகளும் பழமையான கட்டிடங்களும் சிவப்பு கற்களால் கட்டப்பட்டவை. எல்லை ஊரான ஜெய்சால்மர் Yellow city மஞ்சள் நகரம், சூரிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. நான் அங்கு செல்லவில்லை. யூடியூபில் பாருங்கள்.

இப்பதிவில் மங்காணியரின் ஒரு இசை நிகழ்வை பதிகின்றேன். கர்தால் என்றொரு கருவி. கர் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு கை என்று பொருள். தமிழில் நாம் கரம் என்று சொல்கின்றோம். இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு விரல்களால் இயக்கப்படும் இக்கருவி, நிகழ்வில் பெரும் மாயம் செய்கின்றது! கர்தால், ஹார்மோனியம், டோலக், நகரா, பின்னர் நம் ஊர் மோர்சிங். ஆஹா! 

இங்கே நான் தருகின்ற இரண்டாவது ஜுகல்பந்தி லிங்கில், 6 நிமிடங்களுக்குபிறகு, மதுரை சோமு தன் மருதமலை மாமணியே உடன் மங்காணிய கலைஞர்களுடன் சேர்ந்து விரிப்பில் அமர்ந்து கொள்கின்றார், நால்வருடன் ஐவராகின்றார்! சக்தித்திருமுகன் முத்துக்குமரனை மறவேன், நான் மறவேன் என்ற வரிகளுக்கு முன்பாக மோர்சிங்கும் வயலினும் மிருதங்கமும் போட்டி போடும் காட்சியும் ஒலியும் தானாகவே இந்த இடத்தில் இணைந்து கொள்ளும் அற்புதம் நிகழும்! கேட்டு ரசியுங்கள்!

m.youtube.com/watch?v=IBhRsVP5Gyk

m.youtube.com/watch?v=y1NqYE6ktIs


அழிக்கப்படும் தொழிலாளர் நலசட்டங்கள்


கடந்த 150 வருடங்களாக, அதாவது பிரிட்டிஷ் ஆட்சி, விடுதலை பெற்ற இந்தியாவில் நேரு காலம் தொடங்கி இன்று வரையிலும், ஆட்சியில் இருந்த யாராகிலும் இயற்றிய எந்த ஒரு தொழிலாளர் நலச்சட்டமும் ஆட்சியாளர்கள் தாமாகவே முன் வந்து கொண்டு வந்த சட்டம் அல்ல. இங்கல்ல, உலகம் எங்கும் அப்படியே. சாமான்ய மக்களும் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கிப் போராடியும் போலீசின் துப்பாக்கி சூட்டில் உயிர்த்தியாகம் செய்தும் சிறைகளில் வாடியும் உயிர் நீத்தும் அதன் பலனாக நிர்ப்பந்தம் காரணமாகவே அரசுகள் அவ்வப்போது சட்டங்களை இயற்றி வந்துள்ளன. எட்டு மணி நேர வேலை என்பதன் பின்னே குருதி தோய்ந்த ஒரு 150 வருட போராட்ட வரலாறு உள்ளது. 

இந்தியாவில் முதல் தொழிலாளர் நலச்சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுற்ற பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சியின்போது 1881இல் இயற்றப்பட்டது. அதுதான் முதல் தொழிற்சாலை சட்டம், 1881 என்பதாகும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சட்டப்படி 16 மணி நேரம் வேலை செய்யலாம் என்று தொடக்கத்தில் சட்டம் இருந்தது, பின்னர் 12 மணி நேரம் ஆகி, பின்னர் இப்போதுள்ள 8 மணி நேரம் ஆனது. இதன் பின்னால் சர்வதேச , இந்திய தொழிலாளர்களின் உயிர்த்தியாகமும், இடதுசாரிகளின் போராட்டமும் அரசியலமைப்பு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முனைப்பும் உள்ளது. கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசுதான் ஒரு மாநிலம் என்ற அளவில் 8 மணி வேலை நேரத்தை சட்டமாக்கிய முதல் மாநிலம்.

விடுதலைக்கு முன்னும் பின்னுமாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டன, தேவை கருதி அவ்வப்போது திருத்தப்பட்டன. International Labour Organizationஇல் இந்தியா ஒரு உறுப்பினர். நிறுவன உறுப்பினரும் கூட. 1919இல் முதல் கூட்டம் நடந்தது. அங்கேதான் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை, ஒரு வாரத்துக்கு 48 மணி நேர வேலை என்று தீர்மானம் ஆனது, இந்தியாவும் கையெழுத்து இட்டது.இதுவரை 39 கூட்டங்கள் நடந்துள்ளன, 39 தீர்மானங்களையும் இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது  C144 எனப்படும் Tripartite Consultation International Labour Standards Convention, 1976. இதன்படி தொழிலாளர் நலசட்டங்களை அரசு தன்னிச்சையாக திருத்த முடியாது. அரசு, முதலாளிகள், தொழிலாளர்கள் (அதாவது தொழிற்சங்கங்கள்) மூன்று தரப்பினரும் சேர்ந்து பேசி ஒத்துக்கொண்டால் மட்டுமே எந்த ஒரு சட்டத்தையும் திருத்த முடியும். C144இல் இந்தியா கையெழுத்து இட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது உள்ள சில முக்கியமான சட்டங்களை மட்டும் பாருங்கள்:

The Trade Union Act, 1926

The Industrial Disputes Act, 1947

The Factories Act, 1948

Employees Compensation Act, 1928 (Formerly Workmen Compensation Act)

The Payment of wages Act, 1936

The minimum wages act,

The ESI Act, 1948

The Payment of Wages Act, 1965

The Payment of Gratuity Act, 1972

The Employees Provident Funds Act and Miscellaneous Provisions Act,

The Employees Liability Act, 1938

The Weekly Holidays Act, 1942

The Industrial Employment (Standing Orders) Act, 1948

The Fatal Accidents Act, 1948

The Dock Workers (Regulations of employment) Act, 1948

The Plantation Labour Act, 1951

The Personal injuries (Compensation Insurance) Act, 1963

The Motor Transport Workers Act, 1961

The Maternity Benefit Act, 1961

The Children (Pledging of Labour) Act, 1933

The Child labour (Prevention and Regulation) Act, 1984

The Contract Labour (Regulation and Abolition) Act, 1970

The Bonded Labour System (Abolition) Act, 1976

The Equal Remuneration Act, 1976

The interstate migrant workers (Regulations of employment and conditions of service) Act, 1979

இன்னும் பல.

அரசாங்கம் ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும், அதாவது model employer. ஆனால் மார்ச் தொடங்கி நடப்பது என்ன? கொரோனா கால ஊரடங்கை பயன்படுத்தி மக்களை வீடுகளுக்கு வெளியே வர விடாமல், அதாவது வீதிகளில் இறங்கி திரண்டு போராட விடாமல் தடுத்து, இதுகாறும் இந்திய தொழிலாளர்கள் வர்க்கம் பல பத்தாண்டுகள் போராடியும் உயிர்த்தியாகம் செய்தும் வென்றெடுத்த உரிமைகளை ஒழித்துக்கட்டுகின்றது. மிக முக்கியமானது 8 மணி நேர வேலை என்னும் உரிமையை ஒழித்து 12, 16 மணி நேர வேலையை கொண்டு வருவதாகும். அதாவது நாடாளுமன்றம் இத்தனை ஆண்டுகளாக இயற்றிய சட்டங்களை, மாத ஊதியம் பெறுகின்ற, 60 வயதில் ஓய்வு பெற்று வீட்டுக்கு செல்கின்ற யாரோ ஒரு அதிகாரி ஒரே ஒரு கையெழுத்து இட்டு ஒழித்து விடுகின்றார் அல்லது நீர்த்துப் போக செயகின்றார். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வேண்டும் என்ற C144 சர்வதேச ஒப்பந்தத்தை யாரோ ஒரு அதிகாரி டெல்லியில் தன் அறையில் இருந்து கொண்டு மீறுகின்றார். 12.5.2020 அன்று இந்த தேசத்தின் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னால் இந்த தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகள் தீவிரம் ஆகி உள்ளன. அதாவது model employer இப்போது model violator ஆக அவதார் எடுத்துள்ளார். 

பிரதமரின் உரையை உடனடியாக நிறைவேற்றி விட பிஜேபி அரசுகள் மட்டுமின்றி காங்கிரஸ் அரசுகளும் பந்தயத்தில் ஓடின. உத்தர பிரதேச பிஜேபி அரசு, 8.5.20 தேதியிட்ட ஆணை மூலம், தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரம், வாரத்துக்கு 72 மணி நேரம் என உயர்த்தியும், ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு அரை மணி நேர ஓய்வு என்றும் உத்தரவு இட்டு மனித உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் எதிரான தன் உண்மை உருவத்தை காட்டியது. ஒரு படி மேலே சென்று, முதலாளி தனக்கு ஊதியம் வழங்கவில்லை என தொழிலாளர்கள் இடம் இருந்து புகார்கள் வந்தால் அரசின் உயர்மட்ட அதிகாரிகளை ஆலோசிக்காமல் FIR பதிவு செய்யக்கூடாது என மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கு உத்தரவு இட்டது. உ பி அரசின் கவனம் எல்லாம் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவது எப்படி என்பதில் உள்ளது.

குஜராத், ஹிமாசல் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்திய பிரதேசம், கோவா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இதே தொழிலாளர் விரோதப்போக்கை கையில் எடுத்தன. இதில் காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு இல்லை.

மோடி அரசு 2014 முதல் பெருமுதலாளிகளின் 7 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. பெருமுதலாளிகளுக்கு 4.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி சலுகைகள் வழங்கி உள்ளது. கார்பொரேட் வரியை 30 சதத்தில் இருந்து 25.17 சதமாக குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சேமிப்பில் இருந்த 1.26 லட்சம் கோடி ரூபாய்களை எடுத்து யார் யாருக்கு கொடுத்துள்ளது என்பதில் மர்மம் உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி எஸ் டி பங்கை ஒரு மத்திய அரசே தராமல் ஏமாற்றும் விந்தையை நாடு பார்க்கின்றது.

இந்திய மக்கள்தொகையின் 70 சதம், அதாவது 96 கோடி மக்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள். இவர்களின் மொத்த சொத்து மதிப்பை போன்று 4 மடங்கு சொத்து இந்தியாவின் ஒரு சதவீத பெரு முதலாளிகளின் கையில் உள்ளது. 

தொழிற்சங்கங்களோ வீதிகளில் இறங்கி போராட முடியாத நிலையில் மனுக்களை எழுதிக்கொண்டு இருக்கின்றன. கடந்த 150 வருடங்களாக இந்திய தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள உரிமைகள் யாவும் மனுபோட்டு பெற்ற உரிமைகள் அல்ல என்பதையும் அதே உரிமைகள் பறிக்கப்படும்போது மனு எழுதினால் மீண்டும் கிடைத்து விடாது என்பதையும் இந்திய தொழிலாளர் வர்க்கமும் தொழிற்சங்க இயக்கமும் உணர்ந்தாக வேண்டும்.

வியாழன், அக்டோபர் 29, 2020

The City Lights

The Idle Class என்ற படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பின்போது ஒரு சிறு தீ விபத்தை சந்தித்தார் சார்லி சாப்ளின். படத்தை முடித்துவிட்டு ஓய்வு பெற லண்டனின் புகழ்பெற்ற ரிட்ஸ் ஓட்டலில் தங்கினார். மாலை நான்கு மணிக்கு மேல் அனைவரும் சென்ற பின் யாரையும் கவராத சாதாரண உடையணிந்து ஓட்டலின் பின் வாசல் வழியே வெளியே வருகின்றார். டாக்சியில் ஏறி, சிறு வயதில் தான் வாழ்ந்த கென்னிஸ்டன் சாலையில் இறங்கி நடந்தே சுற்றி வருகின்றார். வறுமையில் உழன்று வாழ்க்கையை தேடிய கொடிய இளம் பருவ வாழ்க்கையையும் உலகமே உச்சியில் வைத்துக்கொண்டாடும் இன்றைய காலத்தையும் ஒப்பீடு செய்கின்றார். இதே ஓட்டலை கட்டிக்கொண்டு இருந்த நாட்களில் இதே சாலையில் நின்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றதும் அதே ஓட்டலில் இப்போது மிகப்பெரிய மரியாதையுடன் தங்கி ஓய்வெடுப்பதும்...!

வாழ்க்கையின் துன்ப துயரங்கள், அடிகள், சறுக்கல்கள், பின்னர் மகிழ்ச்சி, பணம், புகழ், காதல், திருமணம், மண முறிவு என அத்தனை உணர்வுகளையும் அனுபவித்தவர் அவர் என்பதால் தனது படங்களில் வித விதமான கதாபாத்திரத்திங்களையும் சூழலையும் உருவாக்குவதில் அவர் வெற்றி பெற முடிந்தது.

தன் இரண்டாவது திருமண முறிவின் பின், 1927இல் சிட்டி லைட்ஸ் திரைப்படத்தை இயக்கினார். 1931இல் இந்த மவுனப்படம் வந்தபோது ஏற்கனவே பேசும் படங்கள் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன. மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த பணம், பதவி, அந்தஸ்து ஆகிய துவும் தேவையில்லை என்பதே கதை.

பூக்கள் விற்கின்ற பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு உதவுவதும், குடிகார பணக்காரன் ஒருவனை அவ்வப்போது மரணத்தில் இருந்து காப்பாற்றுவதும் இக்கதையை நகர்த்தி செல்லும் நிகழ்வுகள். வழக்கம் போலவே  இப்படத்திலும் பாத்திரங்களுக்கு பெயர் இல்லை. 

படத்தின் முதற்காட்சியே சமூகத்தின் பெரிய மனிதர்களை அம்பலப்படுத்தி கிண்டல் செய்வதாகும். அமைதியையும் செழிப்பையும் குறிக்கும் ஒரு சிலையை நகர மேயர் திறக்க உள்ளார். ஊரின் பெரிய மனிதர்கள் கூடியுள்ள கூட்டம். அமைதியும் இல்லை, செழிப்பும் இல்லை, இந்தக் கொண்டாட்டம் போலித்தனமானது என்பதை உணர்த்த சொற்பொழிவாளர்களின் பேச்சுக்குப் பதில் நாராசமான ஒலிகளை பின்னணியில் ஒலிக்கச் செய்திருப்பார் சாப்ளின். அர்த்தமற்ற சாரமில்லாத நீண்ட உரைகளுக்குப்பின் சிலையை மூடியிருக்கும் துணி விலக்கப்படுகின்றது. ஆண்களும் பெண்களும் நீட்டிய வாள்களுடன் இருக்கின்ற மிக அற்புதமான கிரெக்கோ ரோமானிய கற்சிலையின் ஒரு பெண்ணின் இடுப்பில் அழுக்குதுணியுடன் நம் நாயகன் ஆழ்தூக்கத்தில் இருப்பதை பார்த்தால், கூடியிருக்கும் மாட்சிமை பொருந்திய கனவான்கள் அதிர்ச்சி அடையமாட்டார்களா? அமைதியின், செழிப்பின் புனிதம் கெட்டுவிட்டதாக பெரும் கூச்சல் இடுகின்றனர்.. நாயகனோ இந்த அமர்க்களம் எதுவும் அறியாமல் மிக மெதுவாக கண் விழித்து, நீட்டி மடக்கி முறித்து.... அட! இது என்ன? தன்னை சுற்றி இப்படி ஒரு கூட்டமா? நிச்சயமாக இல்லை. சிலையில் இருந்து மெதுவாக கீழே இறங்க முயல, கால்சட்டை சிலையின் ஒரு வாளில் மாட்டிக்கொள்ள, நாயகன் அப்போது அந்தரங்கத்தில் தொங்க, அப்போது பார்த்து தேசியகீதம் முழங்க..! பாவம், மரியாதை செலுத்தும் வண்ணம் தன் தொப்பியை கழற்றுகின்றான்.ஆனாலும் என்ன, அந்தரத்தில் ஊஞ்சல் ஆடவே முடிந்தது!

ஒரு போலீஸ்காரனிடமிருந்து தப்பிக்க, நின்றுகொண்டு இருக்கும் விலை உயர்ந்த ஒரு காரின் கதவை திறந்து அந்தப்பக்கமாக இறங்குகின்றான் காரின் கதவை அறைந்து மூடும்போது அங்கே பூக்களை விற்றுக்கொண்டு இருக்கும் அழகிய பெண்மணி, இவனை ஒரு பணக்காரன் என்று கருதி, சட்டையில் செருகிக்கொள்ள அழகிய பூ ஒன்றை தருகின்றாள். அவளை அலட்சியமாக பார்க்கும் நாயகன், அவளுக்கு கண் பார்வை தெரியாது என்று தெரிந்த பின் மனம் வருந்தி தன்னிடம் இருந்த ஒரே ஒரு நாணயத்தையம் அவளுக்கு கொடுத்து விடுகின்றான். காரின் கதவு மூடப்படும் சத்தம் கேட்டு, மீதி சில்லறையை அந்தப்பணக்காரன் வாங்காமல் சென்று விட்டதாக வருத்தப் படுகின்றாள். ஆனால், அவனோ, ஓசையின்றி அதே பெஞ்சில் அவளருகே உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டு இருக்கின்றான். அவளோ அந்தப்பணக்காரன் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என ஆசைப்படுகின்றாள்.

மீண்டும் அதே இடத்திற்கு வரும் நாயகன், அவளை அங்கு காணாது தவித்து அவள் வீட்டுக்கு செல்கின்றான். அவள் உடல்நலம் இன்றி இருப்பதை அறிந்து அவளுக்கு உதவ முடிவு செய்கின்றான். தெருவை சுத்தப்படுத்தி பணம் சேர்க்கின்றான். வியன்னாவில் இருந்து வந்துள்ள ஒரு மருத்துவர், பார்வையற்றவர்களை குணப்படுத்துவதாக செய்தி ஏடுகளில் பார்த்து அவளிடம் சொல்ல, அவளோ அப்படியானால் நான் உங்களை பார்க்க முடியும் அல்லவா என பெருமகிழ்ச்சி அடைகின்றாள். ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் தன் ஏழ்மை நிலையை அவள் பார்த்துவிட்டால் தன்னை நிராகரிக்க கூடும் என்று வருந்துகின்றா ன். ஒரு சந்தர்ப்பத்தில் போலீசில் மாட்டி சிறைத்தண்டனை பெறுகின்றான்.

காதலி கண்பார்வை பெற்று புதிதாக கடை ஒன்றும் திறக்கின்றாள். விடுதலை பெற்ற அவன் வழக்கமான இடத்தில் அவளை தேடுகின்றான். இரண்டு சிறுவர்கள் அவனுடைய கிழிந்த உடைகளை இழுத்து வம்பு செய்ய, அவள் அந்த மோசமான காட்சியை பார்த்து விடுகின்றாள். தன் அன்புக்குரியவளைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் இவன் சிரிக்க, அவளோ யார் இவன், நம்மைப்பார்த்து சிரிக்கின்றான் என்று திடுக்கிட்டு முகத்தை திருப்பிக் கொள்கின்றாள். அவளுக்குப் பார்வை கிடைத்துவிட்டதை அறிந்த அவன், தன் இழிவான நிலையை எண்ணி அவளை தவிர்க்க எண்ணி திரும்பி நடக்க முயலும்போது, அவனை அழைத்து புத்தம் புதிய வெள்ளை ரோஜா ஒன்றை அவனுக்கு அளிக்கின்றாள். கூடவே ஒரு நாணயத்தையும் கொடுப்பது என எண்ணி, அவன் உள்ளங்கையில் திணிக்க முயலும்போது, அடடா! அந்த தொடுவுணர்வு அவன் யார் என்பதை அவளுக்கு சொல்லிவிடுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமானவன் அன்றோ இவன்! 

அவனது கோட்டில் இருந்து தோள்கள் வழியாக அவன் முகத்தை தடவியவாறே ஊர்ந்து செல்லும் அவளது கைகள் சொல்லிவிடுகின்றன, நைந்து கிழிந்து போன நாடோடியாக தன் எதிரில் நிற்கும் இவன்தான் தன் அன்புக்குரியவன் என!  நேருக்கு நேராக கண்ணோடு கண் நோக்கி ஒருவரை ஒருவர் பார்வையிலேயே நீதானா என கேட்கும் அந்தக் காட்சியில், வெட்கம், கூச்சம், பயம், துணிவு, வேதனை, அன்பு, தேடல், ஏக்கம், மகிழ்ச்சி என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தி இருப்பார் சாப்ளின். தன் கனவு நாயகன் இவனா? அவளால் நம்ப முடியவில்லை, ஆனால் உண்மையை உணர்ந்து அவனை ஏற்றுக்கொள்கின்றாள். அவனது கரங்களைப் பற்றி தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொள்கின்றாள்.

... ... .....

இப்படத்தின் கதையை ஒட்டி பல படங்கள் வந்துவிட்டன. 1954இல் எஸ் எஸ் வாசன் ராஜி என் கண்மணி என்று தயாரித்தார், டி ஆர் ராமச்சந்திரனும் ஸ்ரீரஞ்சனியும் நடித்தனர். பால சரஸ்வதி சில பாடல்களை பாடினார். இலங்கை வானொலியில் நாள் தவறாமல் நான் கேட்ட பாடல், மல்லிகைப்பூ ஜாதி ரோஜா, முல்லைப்பூவும் வேணுமா, தொட்டாலும் கை மணக்கும் பூவும், பட்டான ரோஜாப்பூவும் கதம்பம் வேணுமா என்ற பாடல். இந்தப் பாடல் சிட்டி லைட்ஸ் படத்தின் தீம் இசை. படத்தின் இசையமைப்பாளர் சாப்ளின்தான், ஆனால்  Jose Padilla Sanchez என்ற ஸ்பெயின் நாட்டு இசையமைப்பாளர் இயற்றிய  La Violetera  என்ற இந்த இசையை அவர் பயன்படுத்தி க் கொண்டார், அதனால் பிரச்சினையையும் சந்தித்தார் என தெரிகின்றது. 

இதே பாடலை மிக அழகிய நடிகை என்று புகழப்பட்ட Sara Montiel  பாடினார். City lightsஇல் சாப்ளினும் அவளும் சந்திக்கும் காட்சியில் இந்த இசை உணர்ச்சிமிக்கதாக உள்ளது.

எப்படி ஆயினும் சாப்ளினின் புகழ்பெற்ற படங்களில் இதுவும் ஒன்று என நிலைத்து விட்ட படம் சிட்டி லைட்ஸ்.

......

தீக்கதிர் வண்ணக்கதிர் 12.6.2005இல் வெளியானது, இப்போது சில மாற்றங்களுடன்

மூடப்படும் சாமானியனின் கனவுலகின் கதவுகள்

 

தமிழர்கள் அனைவரும் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கூரையின் கீழ் ஒன்றாக உட்கார்ந்து ஒரு கலை நிகழ்வைக் கண்டார்கள் எனில் அது சினிமா அரங்குகளே. சமூக அந்தஸ்துக்கு அங்கே முன்னுரிமை இல்லை. ஒருவர் எவ்வளவு பணம் கொடுத்து நுழைவுசீட்டு வாங்குகின்றார் என்பது மட்டுமே அங்கே உட்கார்வதற்கான இடத்தை தீர்மானிக்கும். உயர் வகுப்புக்கான டிக்கெட் வாங்க ஒருவரிடம் பணம் இல்லையா, அவர் உள்ளே நுழைய முடியாது அல்லது (குறைந்த கட்டண நுழைவுசீட்டு பெற்று) 'கூட்டத்தோடு கூட்டமாக' உட்கார வேண்டும்.

- அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி.

சினிமா அரங்குகளைப் பற்றி சமூக நோக்கில் கா.சிவத்தம்பி அவர்கள் கூறியது அது. 1930களில் இந்தியாவில் திரைப்படங்களும் திரையரங்குகளும் சாமானிய மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாகவும் பொழுதுபோக்கு இடங்களாகவும் விளங்கத் தலைப்பட்டன என்பதை சாதாரணமாக கடந்துபோக முடியாது. பல நூறு சாதிகளாக இன்றளவும் பிளவுண்டு கிடக்கும் இந்திய சமூகம் ஒரு நூறாண்டுக்கு முன் எவ்வாறு பிளவு பட்டு இருந்திருக்கும் என்பதை கணக்கில் கொண்டால் மட்டுமே திரையரங்குகள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் சிவத்தம்பி சொல்லியதன் கனத்தையும் உணர முடியும். தெருக்கள், பொது இடங்கள், நீர் நிலைகளான கிணறு, குளங்கள், ஏரிகள், கோவில்கள், ஊர்ச்சாவடி என பொதுவெளி எங்கும் சாதியின் கோரமான முகத்தை பார்க்க முடிந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் இங்கெல்லாம் நுழையவோ நடமாடவோ உட்காரவோ முடியாது, பயன்பாட்டை அனுபவிக்கவும் முடியாது. சினிமா என்றோர் வெளிநாட்டு அறிவியல் சாதனமே இதிலும் ஓர் உடைப்பை ஏற்படுத்த வேண்டி இருந்தது! அதுவும் கூட இயல்பாக நடந்ததா? எம் எஸ் பாண்டியன் கூறுகின்றார்: சமூக ஏற்றத்தாழ்வை உடைக்கும் ஒரு கருவியாக சினிமா என்னும் சாதனம் எழுந்ததை 'நாகரிகத்தில் உயர்ந்த' சமூகம் எப்படி பார்த்தது? சமூகத்தின் கீழ்த்தட்டு சினிமா ரசிகர்கள் 1930களில் அறிமுகமான சினிமா படங்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். ஆனால் விளிம்புநிலை மக்களின் இந்த பேரார்வத்தை மேல் சாதியினரும் 'உயர் நாகரிக' வர்க்கமும் எரிச்சலுடன்தான் பார்த்தனர்.

... .... ....

தமிழில்  நேஷனல் பிக்சர்ஸ், ஏ வி எம் இணைந்து தயாரித்த பராசக்தியின் கதை ஆசிரியர் பாவலர் பாலசுந்தரம். மு.க. திரைக்கதையும் வசனமும் எழுதினார். கே ஆர் ராமசாமி நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர் பிசியாக இருந்தால் விழுப்புரம் சின்னையா கணேசன்என்ற இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவர் பண்பட்ட நாடக நடிகர் ஆக இருந்தவர் ஆதலால் புதிதாக நடிப்புக்கு பயிற்சி பெற வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. பின்னர் நிகழ்ந்தது வரலாறு. தமிழ் கலை பண்பாட்டில் மட்டுமின்றி தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றிலும் அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. இப்படியொரு படத்துக்கு தான் திரைக்கதையும் வசனமும் எழுத செல்லலாமா என தந்தை பெரியாரிடம் அவர் கேட்டபோது, 'செய்யலாமே?' என்று கூறினாராம். படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின் திரையிட்டுப் பார்க்கும்போது, இந்தப் பையனை மாற்ற வேண்டும், சரியில்லை என ஏ வி மெய்யப்பன் கூறினாராம்.  நேஷனல் பி ஏ பெருமாள் முதலியார்தான் பிடிவாதமாக கணேசனே இருக்கட்டும் என்று உறுதியாக இருந்தாராம்! வரலாறு என்ன? சக்ஸஸ் என்று கணேசன் பேசிய முதல் வசனம் படம் பிடிக்கப்பட்ட இடத்தில், ஏ வி எம் வளாகத்தில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஸ்டுடியோ இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு வருகின்றது. மீதியுள்ள படப்பிடிப்பு அரங்குகள் பெரிய வணிக நிறுவனங்களுக்கு குடோன்களாக  வாடகைக்கு விடப்பட்டுள்ளதை நான் நேரில் கண்டேன். அவருடைய சிலை மட்டும் அப்புறப்படுத்தப்படவில்லை என்று நம்புகின்றேன். இது தமிழகத்தின் பெரிய சினிமா நிறுவனத்தின் கதை. சினிமா அரங்குகளின் கதை அல்லது கதி எப்படி உள்ளது?

எனது இளம்பருவ நாட்கள் மதுரையில்தான் கழிந்தன.  ஆசியாவின் மிகப்பெரும் தியேட்டர் மதுரை தங்கம் தியேட்டர். 52000 சதுர அடியும் 2563 இருக்கைகளும் ஆக மிகப்பெரிய தியேட்டர் அது. மிக உயரமும்  அகலமும் கொண்டது. நுழைவில் இருக்கும் மிகப்பெரிய  கண்ணாடியில் கோபிகைகளும் கிருஷ்ணனும் ஆற்றில் நீராடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும், இப்போதும் நினைவில் உள்ளது. இங்கே ஒரு காட்சி ஓடுவதும் பிற அரங்குகளில் நான்கு காட்சிகள் ஓடுவதும் சமம். பட விநியோகஸ்தர்களுக்கு சொர்க்கம் என்றால் சூப்பர் ஸ்டார்களுக்கோ கிலி தரும் அரங்கம்! ஏனெனில் மற்ற தியேட்டர்களில் ஒரு படத்தை நான்கு மாதம் ஓட்டி வரும் வருமானத்தை இங்கே ஒரே மாதத்தில் அள்ளலாமே! ஹீரோக்களின் ஈகோ வேறு! இங்கே ஒரு படம் ஒரு மாதம் ஓடினால் மற்ற தியேட்டர்களில் நான்கு மாதம் ஓடி ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தும்! பராசக்தி 1952இலும் நாடோடி மன்னன் 1958இலும் இங்கேதான் 175 நாட்களுக்கு மேல் ஓடினவாம். இதே தியேட்டரில் எம் ஜி ஆர் நடித்த நவரத்தினம் ஒரு மாதம்தான் ஓடியதாக என் நினைவு. எம் ஜி ஆரின் அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு முக்கிய இடம் உண்டு. நாடோடி மன்னனில் தொடங்கி, கட்சி தொடங்கிய பின் வந்த தேர்தல்களில் திண்டுக்கல், மதுரை மேற்கு தொகுதி, அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுகவும் அவரும் அடைந்த வெற்றிகளை சினிமாவுடனும் மதுரையுடனும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

உழைப்பாளி மக்களின் ஊர் மதுரை. தமிழகத்தின் மிகப்பெரிய கைத்தறி நகரம் செல்லூர், எம் ஜி ஆர் வென்ற மேற்கு தொகுதியில் அடக்கம். சுமார் 30,000 நெசவாளிகளின் வாக்கை நம்பி நின்ற எம் ஜி ஆரை மக்கள் ஏமாற்றவில்லை. ஆனால் கைத்தறி நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார், நானும் நம்பினேன். 1987இல் அவர் இறந்தும் விட்டார், செல்லூரில் கைத்தறி தொழில் அழிந்ததுதான் மிச்சம். தூறல் நின்னு போச்சு, காயத்ரி, லட்சுமி, அன்று சிந்திய ரத்தம்.. என இங்கே நான் பார்த்தது நிறைய. இது நான் அறியாத மயக்கம்... என்ற எஸ் பி பியின் அமைதியான பாட்டு. ஜெய்சங்கர், பத்மபிரியா, அசோகன்... மதுரை மக்களின் அத்தனை லட்சம் கனவுகளும் பல நாயகர் நாயகிகளின் முகங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிய திரையும் இடித்து தள்ளப்பட்டு இப்போது ஒரு வணிக வளாகமாய்! என்ன சோகம் இது! இந்த தேசத்தில்தான் இந்த கேடுகளுக்கு சாத்தியம் மிக அதிகம். அரசே அந்த அரங்கை வாங்கி ஒரு திரைப்பட ஆய்வு நிறுவனம், கூட்ட அரங்கம் என நிறுவி இருக்கலாம். காசியில் மேதை பிஸ்மில்லா கானின் வீடு இடிக்கப்பட்டு விட்டதாம்! பிஸ்மில்லாவின் ஷெனாய் ஒலி கேட்ட பின்னர்தான் விஸ்வநாதர் காசியை வலம் வருவாராம்!  காசி தொகுதியின் எம் பி நம் பிரதமர்.

கலைகளின் நகரம் மதுரை. அதிலும் கோவில் திருவிழா நாட்களில் கேட்கவே வேண்டாம். திரும்பிய தெருக்கள்தோறும் கரகாட்டம், நாடகம், பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், வழக்காடு மன்றம் என தூங்காமல் கண் விழிக்கலாம். தியேட்டர்களுக்கோ கணக்கில்லை. ரீகல், தேவி, கல்பனா, சாந்தி, மீனாட்சி, நியூ சினிமா, சென்ட்ரல், இம்பீரியல், சிட்டி சினிமா, சிந்தாமணி, அலங்கார், கணேஷ், மூவிலாண்ட், பரமேஸ்வரி, போத்திராஜா, சினி பிரியா, மினி பிரியா, சிவம், சக்தி, மிடலாண்ட், விஜயலட்சுமி, ராம், அம்பிகா, டூரிங் தியேட்டர்கள் ஆன ஆனையூர் வெங்கடாசலபதி, விளாங்குடி பாண்டியன்...

TVS சுந்தரம் ஹால், காந்தி மியூசியம் போன்ற அரங்குகள் சாமான்ய மக்களுக்கு தொடர்பற்ற பரதநாட்டியம் போன்ற நிகழ்த்துகலைகளுக்கான இடங்கள். ஆக தியேட்டர்கள் மட்டுமே உழைக்கும் சாமான்ய மக்களின் ஒரே ஒரு, ஒரே ஒரு பொழுதுபோக்கு இடம். இதன்றி சித்திரை திருவிழாவின் போது அரசின் சுற்றுலாத்துறை தமுக்கத்தில் நடத்தும் ஒரு மாத பொருட்காட்சி, அங்கே நடக்கும் சினிமா கலைஞர்களின் கச்சேரி, திரைப்படங்கள் என ஒரு மாதம் ஓடும். அதே மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கும் பல நாள் விசேஷங்கள், நரியை பரியாக்குவது, பிட்டுக்கு மண் சுமந்தது...என. அவ்வளவுதான். 

ரீகல் என்ற விக்ட்டோரியா எட்வர்ட் ஹால். பகலில் இங்கே பள்ளிக்கூடம் நடக்கும், சனி, ஞாயிறுகளில் கூட்டங்கள் நடக்கும். மாலையில் சினிமா அரங்கம் அது. என் வாழ்க்கையில் நான் பார்த்த ஆங்கில திரைப்படங்கள் பெரும்பாலானவை இங்கேதான். அழகிய பழங்கால கட்டிடம், மரங்கள் சூழ்ந்த அமைதி. எத்தனை படங்கள்! Jason and the Argonauts, The car, Coma, the great Russian circus, christopher lee யின் dracula.... கரிமேடு பரமேஸ்வரியில் ஷோலே படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கு இல்லை. இந்தியாவின் சிறந்த திரைப்படங்கள் என்று பட்டியல் இட்டால் இப்போதும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கின்றது! Technical ஆக இப்படம் ஒரு பாடம். இப்படத்தின் பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் எனில் ஸ்டீவன் ஸ்பியல்பெர்க் டிவிக்காக என எடுத்து பின்னர் படம் ஆக்கிய The Duel வேறு வகையில் பாடமானது. ஒரு காரோட்டியும் பெரிய டேங்கர் லாரியும் என இரண்டே பாத்திரங்கள்.

சிவாஜி, எம் ஜி ஆர் என நடிகர்களின் காலத்துக்குப் பின் இயக்குனர்களின் காலம் 1975இல் தொடங்குகின்றது. தேவராஜ் மோகன், துரை, மகேந்திரன், பாரதிராஜா, ஆர் செல்வராஜ், ருத்ரய்யா,  பாலு மஹேந்திரா, பேரா. பிரகாசம், விசு...என. கூடவே இளையராஜாவின் புதிய இசை. எனவே இப்படியொரு புதிய அத்தியாயம் எழுதப்பட்ட வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த தியேட்டர்களை மறக்க முடியாது. 16 வயதினிலே, அழியாத கோலங்கள், நண்டு, அவள் அப்படித்தான், பசி, கிராமத்து அத்தியாயம், சாதிக்கொரு நீதி, தண்ணீர் தண்ணீர், எச்சில் இரவுகள்... மதுரை டூரிங் தியேட்டர்களில் மிக அரிய படங்களை பார்த்திருக்கின்றேன்.

மிகப்பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு திருமண மண்டபம் ஆகவோ வணிக மால்களாகவோ உருமாற்றம் அடைந்து வருகின்றன. இங்கே சென்னைக்கு வந்த புதிதில் மிகவும் பிஸியான குடோன் தெருவில் என் அண்ணனுடன் ஒரு வருட காலம் இருந்தேன். ஜார்ஜ் டவுனில் மினர்வா தியேட்டரை மறக்க முடியாது. பழைய கால வீடு போல. இருக்கைகள் அனைத்தும் ஒயர் பின்னியவை! ஹிட்ச்காக் படங்கள் பலவற்றை இங்கே பார்த்தேன். கட்டணத்தை இப்பொழுது கற்பனை செய்ய முடியாது. அங்கே ஸ்டாலில் அருந்திய காப்பியின் இனிப்பும் கசப்பும் மணமும், அடடா! பெரம்பூர் புவனேஸ்வரியில் செம்மீன் பார்த்தேன். ஓட்டேரி பாலாஜியில் Five man army, அம்பத்தூர் ராக்கியில் Pappillon,  ப்ளூ டைமண்டில்   The great dictator, the modern times, மிட்லாண்டில் City lights, ஈகாவில் The Last Emperor, அங்கேயே தமிழின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான். காசினோ, அலங்கார் (ஒமர் முக்தார்), பைலட், மேகலா, ப்ராட்வே,  ராக்சி, உமா, சயானி, ஸ்டார், சாந்தி, அண்ணா, தேவி காம்ப்ளெக்ஸ், ஆனந்த் (நாயகன்), கமலா, சத்யம், கெயிட்டி, ராக்கி, முருகன், பூந்தமல்லி சுந்தர், ஆவடியில் மீனாட்சி, ராம ரத்னா, குமரன் (இங்கே பழைய கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் திரையிடப்பட்டன)....

ராம ரத்னா.  இங்கே பார்த்த படங்களுக்கு கணக்கில்லை.  இப்போது அது திருமண மண்டபம்! அந்த  சாலை வழியே போவது சுடுகாடு வழியே பயணிப்பது போல் உள்ள. இன்று ஜுமாஞ்சி 1995 படத்தை டிவியில் பார்த்தபோது ராம ரத்னாவில் பார்த்த நினைவு மேல் எழும்பி வந்தது, எனவே இந்தப் பதிவு. 

வேலூர் மாவட்டம் பூட்டுதாக்கு என்ற ஊரில் கணேஷ் என்ற டூரிங் தியேட்டர் இப்போதும் இயங்குவதாக படித்தேன், மகிழ்ச்சியாக உள்ளது. நேஷனல் பிக்சர்ஸ் பி ஏ பெருமாள் முதலியார் இந்த ஊர்க்காரர் என்றும் வருடம் தோறும் சிவாஜி அவரை சந்திக்க வருவார் என்றும் படித்தேன். தியேட்டரின் எலக்ட்ரிசியன் சுப்பிரமணி, தன் சுய முயற்சியில், படச்சுருளை 4 முறை மாற்றுவதற்கு பதிலாக 2 முறை மாற்றினால் என்ன என்று சிந்தித்து 10000 அடிக்கான ஒரு spool ஐ வெற்றிகரமாக கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றாராம்!

இறுதியாக: 2000த்தின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் மலைத்தொடரின் அடியில் பாலைவனத்தில் திறந்தவெளி திரையரங்கு ஒன்றை நிறுவினாராம்.  மரத்தினால் ஆன 150 இருக்கைகள், திரை, ஜெனரேட்டர் என அனைத்தும் தயார். முதல் நாள் ஜெனெரேட்டரை இயக்க, அது இயங்கவே இல்லையாம். எனவே, இன்னும் திரையிடப்படாத திரையரங்கம் என்ற பெயர் தாங்கி சிதிலம் அடைந்து வருகின்றதாம்.

பல லட்சம் ரசிகர்களின் கைதட்டல், சிரிப்பு, அழுகை, கோபம், ஆட்டம், அடிதடி என அனைத்து உணர்வுகளையும் நான்கு சுவர்களுக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டு வணிக வளாகங்களுக்குள் சமாதி அடைகின்றன நம் அரங்குகள்.

திங்கள், அக்டோபர் 19, 2020

ஹரித்வார் கங்கை நீராடலும் மானசதேவி கோவிலில் என் வேண்டுதலும்



 யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே

கண்ணன் போவதெங்கே?

கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே

மன்னன் போவதெங்கே?

 

1973இல் கவுரவம் படத்தில் வக்கீல் கண்ணன் என்ற சிவாஜி கணேசன் உஷா நந்தினியுடன் பாடினார், எஸ் பி பியின் அழகிய ஆர்ப்பாட்டம் அற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஒரு ஆறு வருடம் சென்றது. தமிழின் மிக அழகிய நாயகிகளில் ஒருவரான ஸ்ரீவித்யாவுடன் அவரே

கங்கை யமுனை இங்குதான் சங்கமம்

ராகம் தாளம் மோகனம் மங்களம்

அங்கயற்கண் மங்கள நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள்

என்று அலஹாபாத்தில் பாடினார்.

 கண்ணதாசன் தெரிந்து எழுதினாரா தெரியாமலேயே எழுதினாரா, தெரியவில்லை, ஸ்ரீவித்யா அழகிய அங்கயற்கண்ணிதான். மதுரையில் நான் படித்த காலத்தில் வந்த படங்கள்.

சிவனுக்கும் மீனாட்சிக்கும் (அல்லது பார்வதிக்கும்) நான் நெருங்கிய நண்பன். பிறந்த ஊரான தென்காசி, காசி விஸ்வநாதருக்கும் அவர் உடனுறை உலகம்மைக்கும் கோவில் கொண்ட ஊர். 13ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் கட்டிய கோவில் இது. திராவிடக் கட்டிடக்கலை. தென்காசி என்றால் குற்றால நீராடலும் நூறாண்டு கடந்த கிருஷ்ணவிலாசின் கோதுமை அல்வாவும் ஒட்டிபிறந்த மூன்று பிள்ளைகள். தென்காசி கோவிலின் சிற்பங்கள் மிக மிக அழகானவை, அதிலும் அந்த மன்மதன் ரதி சிற்பத்தை ஒரு நாள் முழுவதும் ரசிக்கலாம், மறுநாளும் ரசிக்கலாம்.


படித்த ஊரான மதுரையில் கோவில் கொண்டுள்ள சுந்தரேஸ்வரரின் நாயகியான மீனாட்சியம்மனின் பல பெயர்களில் அங்கயற்கண்ணி என்பதும் ஒன்று. மதுரையை அழிக்க வருணன் பெருமழையை ஏவி விட, மிரண்டு போன பாண்டிய மன்னன் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட, சடையன் ஆன சிவன் தன் சடையை விரித்து அதிலிருந்து நான்கு மேகங்களை விடுவிக்க, அவை நான்கு மாடங்களாகக்கூடி நின்று மதுரையைக் காத்ததால் அது நான்மாடக்கூடல் என்றும் அழைக்கப்பட்டதாக பரஞ்சோதி முனிவர் சொல்கின்றார். சடையப்பன் ஆன சிவன் இதே போல் இன்னொரு முறையும் சடையை அவிழ்த்த கதையையும், எப்படி நான் மீண்டும் சடையுடன் 'சங்கமம்' ஆனேன் என்பதையும் கீழே சொல்கின்றேன்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைநகரான மசூரி குறித்தும், நண்பர்களுடன் அங்கே சென்றிருந்த போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் ரஷ்கின் பாண்டை சந்திக்காமல் வந்த மனக்குறை குறித்தும் ஒரு பதிவு எழுதினேன். மிக மிக அழகிய அமைதியான ஊர் அது. ஊர் திரும்ப டேராடூனில் இருந்து டெல்லிக்கு ரயிலில் வர வேண்டும். நேரம் நிறைய இருந்ததால் ஹரித்வார் சென்று கங்கையில் குளிக்க திட்டமிட்டோம். டேராடூன் ரயில் நிலையத்தில் பெட்டிகளை போட்டுவிட்டு பேருந்து பிடித்து ஹரித்வார் சென்றோம்.

மசூரி இமயத்தின் கார்வாலி மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்துள்ளது. மசூரியின் உச்சியில் அமைந்துள்ள லால் டிப்பா என்ற சிறிய வீட்டின் மாடியில் உள்ள பழமையான ஜப்பானிய தொலைநோக்கி மூலம் பார்த்தால் 200 கி.மி. தொலைவில் உள்ள இமயத்தின் இரு சிகரங்களை மட்டும் இன்றி கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவற்றையும் பார்க்கலாம். கங்கோத்திரி என்பது கங்கை பிறக்கும் இடம். சரியாக சொன்னால் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ளது, பாகீரதிதான் கங்கையின் தாய். ஆனால் அலாக்நந்தா நதியின் நீளத்தை கணக்கில் கொண்டால் அதுதான் கங்கையின் தாய் என்று விஞ்ஞானம் சொல்கின்றது. கார்வாலி மலைத்தொடரின் பல நதிகள் அலாக்நந்தாவுடன் வெவ்வேறு இடங்களில் சங்கமிக்கின்றன. விஷ்ணு பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை, இறுதியாக பாகீரதி நதி தேவ பிரயாகை என்னும் இடத்தில் அலாக்நந்தா நதியுடன் சங்கமிக்க, அந்த இடமே கங்கையின் பிறப்பிடம் ஆகின்றது.

புராணம் என்ன சொல்கின்றது? சிவன் தன் தலையில் இருந்த தேவி கங்கையை விடுக்கின்றான், அதுவே கங்கோத்திரி, 3100 மீட்டர் உயரத்தில் இமயத்தில் பிறந்து கோமுகியில் புறப்பட்டு 257 கி.மீ. பயணித்து, காடு மலை கழனி என்று உருண்டும் புரண்டும் நடந்தும் ஓடியும் தன் தீரத்தின் முதல் நுழைவாயில் ஆன ஹரித்துவார் வந்து சேர்கின்றாள் தேவி கங்கை. இந்த நகரின் பழைய பெயர் கங்காத்வாரா. இந்துமதத்தின் ஏழு புண்ணியத்தலங்களில் ஹரித்வார் ஒன்று. மற்றவை அயோத்தியா, மதுரா, காசி, காஞ்சிபுரம், அவந்திக்கா, துவாரகா. வடக்கில் உள்ள காசி என்ற பனாரசுக்கு இணையான புண்ணியத்தலமே தெற்கில் உள்ள தென்காசி.

இங்கேதான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடக்கும். நாங்கள் ஹரித்வார் ரயில் நிலையத்தை பார்த்தபோது இந்த சீசனின் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டது போல 15க்கும் மேற்பட்ட டிக்கெட் கவுண்டர்களை பார்க்க முடிந்தது. நாங்கள் பார்க்கும்போது புதர் மண்டிக்கிடந்தன. கும்பமேளாவின் தலைசுற்ற வைக்கும் கூட்டத்தை டிவியில் பார்க்கும்போது, உண்மையில் அத்தனை லட்சம் மக்களும் நிர்வாண சாமியார்களும் டிக்கெட் வாங்கி இருந்தால் அந்த ஸ்டேஷன் தாங்கி இருக்குமா என்ற சந்தேகமே வந்தது. தவிர, In the company of women என்ற குஷ்வந்த் சிங்கின் நாவலின் நாயகன் நினைவுக்கு வந்தான். மணமான அவன் மனைவியை தவிர பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திரிவான். புனித நகரான ஹரித்வாருக்கு வந்து அங்கும் ஒரு பெண்ணுடன் கொட்டம் அடிப்பான். இறுதியில் பால்வினை நோய் தாக்கி சாவான்.

கங்கோத்திரியின் கதை இதுவெனில், 3293 மீட்டர் உயரத்தில் இமயத்தில் பிறந்து வருகின்றாள் யமுனை. இவள் விஷ்ணுவின் மனைவி, அவள் சிவனின் மனைவி. பத்ரி என்ற சிவனின் வாசஸ்தலமான பத்ரிநாத்துக்கும், கேதார் என்ற விஷ்ணுவின் வாசஸ்தலமான கேதார்நாத்துக்கும் புனித யாத்திரையை தொடங்குபவர்கள் ஹரித்வாரில் இருந்துதான் தொடங்குகின்றார்கள். எனவே இந்த ஊர் ஹர்த்வார் என்றும் அழைக்கப்படுகின்றது. ஹரி என்றால் விஷ்ணு, ஹரன் என்றால் சிவன்.

 

செப்டம்பர் மாதத்தின் நல்ல மதிய நேரத்தில் நாங்கள் சென்றபோது இரண்டு படிகளே மேலே தெரிய அலை புரண்டு சுழித்து கங்கை ஓடிக்கொண்டு இருந்த காட்சியை என்ன சொல்ல! தூய்மையான நீர்! கங்கையின் முதல் தீரம் அல்லவா! காசியை பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் தூய்மையான கங்கையை இங்கே கண்டபோது மனம் ஆனந்தத்தில் குளித்து மூழ்கியது. கருடன் தன் கும்பத்தில் அமிர்தத்தை ஏந்தி பறந்துவந்தபோது உஜ்ஜயினி, நாசிக், அலஹாபாத், ஹரித்வார் ஆகிய நான்கு இடங்களில் அமிர்தத்துளிகள் சிதறி விழுந்ததாம். ஹர் கி பவுரி என்ற இடத்தில் உள்ள பிரம்மகுண்டம்தான் இங்கே துளிகள் சிந்திய இடம், அதுவே ஹரித்வாரின் மிகப்புனிதமான படித்துறை. பாதுகாப்பு கருதி சங்கிலி கட்டி உள்ளார்கள், சங்கிலியைப் பிடித்துக்கொண்டு கங்கையில் இறங்கினோம், சடையுடன் சங்கமம் ஆனேன். கங்கையின் நீரை உளமாரக் குடித்தேன். உடலால் களித்தேன். குற்றாலமும் வைகையும் கங்கையும் என்னால் அங்கே ஒன்றாக சங்கமம் ஆகின. நீரில் மூழ்கும்போது ....இங்குதான் சங்கமம் என்று கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் பாடியது காதில் கேட்டது. புட்டிகளிலும் ஜெரி கேன்களிலும் கங்கை நீரை நிரப்பி மக்கள் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். உறவுகளுக்கு வழங்குகின்றனர். ஹஜ் பயணம் நிறைவு செய்து திரும்புபவர்கள் கொண்டு வரும் ஜம்ஜம் நீர் நினைவுக்கு வந்தது. தனது கீதத்தில் நதிகளை ஏன் கவியரசர் ரவீந்திரர் உயரத்தில் வைத்துப் போற்றினார் என்பது புரிந்தது. நதிகள் யாருக்கும் வஞ்சகம் செய்வதில்லை, உனக்கு கையளவுதான், உனக்கு கடலளவு என்று பேதம் பார்ப்பதில்லை. பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே... என்று கன்னடத்துக் குடகில் பிறந்து தஞ்சையை வாழ்விக்கும் காவிரியைப் பாடிய சீர்காழியின் குரல் ஹரித்வாரின் கரையில் எனக்கு கேட்டது. திடீரென ஒருவர் ஒரு பெரிய மூட்டையை கொண்டுவந்து அவிழ்த்த போது அது இறந்துபோன அவரது உறவுகளின் சாம்பல் என்று அறிந்து அதிர்ந்து கரை ஏறினேன்.

..... ..... ....

குளித்து உடை மாற்றி 178 மீட்டர் உயரே மலை மேல் இருந்த மானஸ தேவி கோவிலுக்கு கேபிள் காரில் சென்றோம். சிவனின் மனதில் உதித்த தேவி மானஸ தேவி. மானஸ என்றால் நம் விருப்பம் என்று பொருள். விரும்பியதை வேண்டினால் மானஸ தேவி நிறைவேற்றி வைப்பாள்.

 இது வில்வ தீர்த்தம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி. வில்வம் மன அழுத்தத்தை போக்கக் கூடிய அருமருந்து. வில்வ மரத்திடம் நாம் வேண்டியதை கேட்க அது சிவனிடத்தில் முறையிட்டு அதை தீர்க்கும், நிறைவேற்றும் என்பது நம்பிக்கை. வில்வத்தின் இலை, பட்டை, பழம், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

2014 தொடங்கி இந்த தேசம் கொடிய மனநோயாளிகளிடம் சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆகி வருகின்றது, மானஸ தேவியும் ஹரியும் ஹரனும் கைகோர்த்து இவர்கள் மன நோயை குணமாக்கி தேசத்தையும் இவர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தேவியிடம் வேண்டிக்கொண்டு மலை இறங்கினோம்.