ஞாயிறு, ஜூலை 01, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 3)


நீண்டகால பாதிப்புக்கள்:

1) மக்கள் உடல்நலம் பாதிப்பு: சுவாசக்கோளாறு, இருமலில் ரத்தம், தோல்வியாது, கட்டிகள், வயிற்றுப்பிரச்னை, புற்றுநோய்கள், சத்தற்ற உணவு...
2) உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு; ஆப்பிரிக்கக்கண்டத்தின் மிகப்பெரியது; இயற்கை வளங்களும், ஏராளமான வன, நீர்வாழ் உயிரினங்களும் நிரம்பி வழிந்த பூமி என்ற பெருமைக்கு உரிய நைஜர் டெல்டா. எண்ணெய்க்கம்பெனிகளின் கட்டுமானம், குழாய் பதிப்பு, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கான குழி தோண்டுவது என காசு மட்டுமே குறியாக சர்வதேச முதலாளிகள் செய்த அனைத்து விதமான நாசவேலைகளால் கிடைத்தற்கு அரிய இயற்கைவளங்களை இழந்து நாசமானது நைஜர் டெல்டா.

சமூக, பொருளாதார பாதிப்புக்கள்:

எண்ணெய்க்கம்பெனிகளின் தொழில்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அப்பகுதியின் இயற்கை வளங்களை நம்பியும் சார்ந்தும்தான் அப்பகுதி மக்கள் கடந்தகாலத்தில் வாழ்ந்து வந்தார்கள். எண்ணெய்க்கம்பெனிகளின் நுழைவுக்குப்பின்...

1) நில இழப்பும் அடிப்படை ஆதாரவள இழப்பும்:

தமது கூட்டாளிகளான சர்வதேச எண்ணெய் முதலாளிகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை நைஜீரிய அரசே இயற்றியது: "மக்கள் நலன் கருதி" எந்த ஒரு நிலத்தையும், கவர்னர் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கைப்பற்றி எண்ணெய் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம். அப்பட்டமான அரசு பயங்கரவாதம்! இதனால் வாழ்வின் அடிப்படை ஆதாரமான நிலத்தை டெல்டா மக்கள் இழந்தார்கள். எண்ணெய்க்கழிவு, கசிவால் நீர்நிலைகள் நாசமானதால் மீன்கள் அழிப்பு, எனவே உணவுத்தட்டுப்பாடு; காடுகள் அழிப்பால் வீடு கட்டத்தேவையான மரம், விறகு ஆகியனவற்றிலும் இடி விழுந்தது.

2) பாரம்பரிய வாழ்க்கை அழிப்பும் வாங்கும் சக்தி இழப்பும்:

பாரம்பரியமாக காடு, ஆறு, கடல் என இயற்கை சார்ந்த வாழ்க்கை நடத்திக்கொண்டு, முக்கியமாக உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த மக்கள், எண்ணெய்க்கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் காடுகளை இழந்ததால் 'வேலை' தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். மாத வருவாய், கடைக்குச்சென்று உணவு வாங்குதல் போன்ற வார்த்தைகளையே கேட்டறியாத டெல்டா மக்கள், நிலமும் காடும் பறிபோன பின் தமது நிலத்தில் அமைந்த எண்ணெய்க்கம்பெனிகளில் கூலி வேலைக்கு சென்றார்கள்! கிடைக்கின்ற கூலியால் வாழ்க்கை நடத்த முடியாது. மாத ஊதியம் பெறும் எண்ணெய்க்கம்பெனி ஊழியர்களின் வருமானத்தோடும் தரத்தோடும் ஒப்பிடும்போது பாரம்பரிய ஓகோனி மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது.

3) பெண்கள் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கைச்சுமைகள்:

முன்பே கூறியபடி, இயற்கையோடு இசைந்த பாரம்பரியத்தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்திய டெல்டா மக்களில் பெண்களின் பங்கு முக்கியமானது. விவசாயம், மீன்பிடித்தல், விறகு சேகா¢த்தல், காய், கனி, கிழங்கு உள்ளிட்ட உணவு சேகா¢த்தல் ஆகிய வேலைகள் மூலம் குடும்பப்பொருளாதாரத்தின் முக்கிய பங்கை பெண்கள் நிறைவு செய்தனர்; இதன் மூலம் இயற்கையாகவே டெல்டாப்பகுதியின் காடு, நீர்நிலைகளின் பராமா¢ப்பு, பாதுகாப்பு போன்றவற்றையும் பெண்களே செய்தார்கள். ஆனால் காடு, நிலம் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்புக்கும் சீர்கேட்டுக்கும் உள்ளானதால் பெண்களின் தொழில் கேள்விக்குறியானது; இதனால் குழந்தைகளின் கல்வியும் பராமா¢ப்பும் கூடவே கேள்விக்குறியானது.

4) பாலியல் தொழிலும் அநாதைக்குழந்தைகளும்:

தமது வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணெய்க்கம்பெனித் தொழிலாளர்களே என்பதைச் சொல்ல அவசியம் இல்லை. ஆக எண்ணெய்க்கம்பெனிகளால் ஓகோனிப்பெண்களின் சுயமா¢யாதையையும் பறி போனது. முறை தவறிப் பிறந்த குழந்தைகள் ஏராளமாக அநாதைகளாக தெருவில் விடப்பட்டனர்.
இதன்றி குழந்தை இறப்பு விகிதம் அதிகமானது. டெல்டாப்பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விடவும் கடுமையான உழைப்பாளிகள். எனவே முன்பு குழந்தை இறப்பு என்பது அநேகமாக அங்கே இருந்தது இல்லை. ஆனால் நீர்நிலைகள் மாசு அடைந்ததால் இந்நீரைக் குடிக்கின்ற கருவுற்ற பெண்களுக்கு நோயுள்ள, ஊனமுள்ள குழந்தைகள் பிறப்பதும், இறந்தே பிறப்பதும் சாதாரமானது.
மொத்தத்தில் ஓகோனி பாரம்பரிய மக்களின் மண்ணும் வாழ்க்கையும் பறி போனது; சமூகச்சீரழிவு தலைவிரித்து ஆடியது.

...4

கருத்துகள் இல்லை: