வெள்ளி, ஜூலை 27, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 6)



உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்ற சர்வதேசப் பெருநோய்களின் பிறப்பிடமாக அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி போன்ற ஏகாதிபத்திய சாக்கடைகள் உள்ளன. உண்மையில், பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் எங்கெல்லாம் தமது காலனிககளை ஏற்படுத்தி இருந்தனவோ அந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஓகோவென நிகழ்ந்து 'அந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆள்கின்றார்கள்! சூப்பர் ஜனநாயகம் பாரீர்!' என்பதெல்லாம் கடைந்தெடுத்த டூப் என்பதை வரலாறு தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றது. தொடர்ந்து இந்த நாடுகளில் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள், ஏகாதிபத்திய, சர்வதேச முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருப்பதை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க, மூன்றாம் உலக நாடுகள் மட்டும் அல்ல, நரசிம்மராவ் தொடங்கி மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, கடப்பாரை அத்வானிஜி, சாஃப்ட்மேன் வாஜபேயிஜி, காங்கிரஸ், பாரதீய ஜனதா, இவர்களது தொங்குசதைகளும் உள்ளூர் ஏஜெண்டுகளும் ஆன உதிரிக்கட்சிகள் எல்லோரும் சர்வதேச முதலாளிகளின் ஏவலாளிகளே. இவர்களின் கைவிரல் அசைவுக்கு காத்திருந்து சேவகம் செய்யவே போலீஸ், ராணுவம், நீதிமன்றங்கள் போன்ற அமைப்புக்கள்.

ஹோண்டா முதலாளி விட்டெறிந்த காசைப் பொறுக்கிக் கொண்டு, ஹோண்டா தொழிலாளிகள் மீது கற்பனை செய்ய இயலாத காட்டேறித்தாக்குதலை நடத்திய ஹா¢யானா மாநில அரசையும் அதன் போலீசையும் எப்படி அழைப்பது? சென்னைப்புறநகா¢ல் பெரும் பரப்பளவில் அமைந்துள்ள ஹ¥ண்டாய் தொழிற்சாலையில் நிரந்தரத்தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு, பெரும் பகுதி கான்ட்ராக்ட் தொழிலாளர்களே. இவர்கள் இந்தியாவின் புனிதமான சட்டங்களுக்கு உட்பட்டு தொழிற்சங்கம் தொடங்குவது கூட நிர்வாகத்துக்கு கசக்கின்றது; அவர்களை டிஸ்மிஸ் செய்கின்றது. போலீசை ஏவி அடிக்கின்றது, சிறையில் அடைக்கின்றது.

தமிழ் மக்களின் தானைத்தளபதி, உண்மையில் கொரிய நாட்டு முதலாளியின் படைகளுக்கு லோக்கல் தளபதியாக இருக்கின்றார் என்பது தொடர்ந்து மெய்ப்பிக்கப்படுகின்றது. இவையன்றி, பெப்சி, கோககோலா போன்ற ஏகாதிபத்திய பானங்களில் விசமருந்துகள் இருப்பதாக மெய்ப்பிக்கப்பட்ட பின்னரும் கூட மைய அரசு இந்தியாவில் அவற்றை அனுமதித்திருக்கின்றது எனில், மைய அரசு யாருடைய ஏவலாளாக இருக்கின்றது?

25 வருடங்களுக்கு முன்பு போபாலில் நடந்த மீதைல் ஐசோ சயனைட் என்ற விசவாயுக்கசிவு விபத்தால் (?) ஆயிரக்கணக்கான மக்கள் செத்து விழுந்தனர். குற்றவாளியானஅமெரிக்க கம்பெனியான யூனியன் கார்பைட் கம்பெனி மீது பெரிய வழக்கெல்லாம் போட முடியவில்லை. நைஜீரிய மக்களுக்கு இருக்கின்ற மான உணர்ச்சி, சூடு, சொரணை, கோபம் மிகப்பெரிய இந்திய அரசுக்கு இல்லை.
கடந்த ஐந்து வருடங்களாக "இடதுசாரிகள் ஆதரவிலான ஒரு அரசு" என்பதை சகித்துக்கொள்ள முடியாமல், தொண்டையிலேயே இருந்த கசப்பு மருந்து போல, ஆனால் துப்பவும் முடியாமல் எரிச்சலுடன் காலத்தை தள்ளியது காங்கிரஸ். நினைத்தபடியெல்லாம் பொதுத்துறையை விற்பது, அமெரிக்கா இருக்கும் திசையைப் பார்த்து தூங்கும்போதும் கும்பிட்டபடியே இருப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இடதுசாரிகள் 'சொட்டை, சொள்ளை' என்று 'குறை' சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மன்மோஹன், சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா, அத்வானி, வாஜபேயி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கும்பலுக்கும், இவர்களுக்குள் உறவுப்பாலமாக விளங்கும் அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், அவர்களது எஜமானன் ஆன அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேசநிதி நிறுவனம், ஜி-7, ஜி-20, ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டணி ஆகிய சர்வதேச கொள்ளையர்களுக்கும் இது மிகப்பெரும் எரிச்சலாகவே இருந்தது. இடதுசாரிகளை ஒழித்துக்கட்டவும், குறைந்த பட்சம் அவர்களது செல்வாக்கையாவது குறைக்கவும், லஞ்சலாவண்யத்தில் சிக்காதவர்கள் என்ற நல்ல பெயரைக் களங்கப்படுத்தவும் என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் இந்த கும்பல் கூட்டுச் சேர்ந்து செய்து வருகின்றது. கேரளாவில் ஊழல் புகார், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுக்கள்+மம்தா பானர்ஜி+காங்கிரஸ்+பா.ஜ.க. கூட்டணி போன்றவை எல்லாம் தற்செயலாக திடீர் என நடப்பவை அல்ல என்று உறுதியாகக் கூற முடியும். 

இப்போது தனிப்பலத்துடன் ஆட்சியில் ஏறியுள்ள காங்கிரஸ், தனது எஜமானுக்கு விசுவாசமாக இட்ட கட்டளைகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஜூலை மாதம் வரும் பட்ஜெட் இதை உறுதிப்படுத்தும். எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் வீதியில் வைத்து ஏலம் விடப்படும்; ஷெல் போன்ற கம்பெனிகளை நிறையப் பார்க்க முடியும்; அடிப்படை ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் மேலும் நசுக்கப்படும். ஹோண்டா, ஹூண்டாய் போல் பல சம்பவங்கள் நிகழலாம்; பல்வேறு கென் சாரோக்களை நாம் இங்கே பலிகொடுக்க நேரலாம். ஷெல் போன்ற கம்பெனிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நமது ஆட்சியாளர்களுக்கு ஏராளமாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்; நமக்கோ நைஜீரிய டெல்டா ஓகோனி மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளன.







(முற்றும்)

ஞாயிறு, ஜூலை 22, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம்-5)



இதற்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷெல் நானூறு கோடி டாலர் மதிப்பிலான திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை நைஜீரியாவில் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை நைஜீரிய அரசுடன் செய்து கொண்டது.

சிறையில் இருந்தபோது சாரோ விவா இப்படி கூறியிருந்தார்: "எந்தவிதமான சலசலப்பும் இன்றி 'அமைதியாக' தமது எழுத்துப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் நேற்கத்திய எழுத்தாளர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். ஒரு எழுத்தாளன் சும்மா ஒரு கதைசொல்லியாக மட்டுமே இருந்துவிட முடியாது; சமூகத்தின் பலஹீனங்கள், கேடுகள், துயரங்களை அப்படியே எக்ஸ்-ரே எடுத்துக்காட்டுவதோடும் ஒரு எழுத்தாளனின் பணி முடிந்துவிடுவதில்லை. ஒரு எழுத்தாளன், ஆணோ பெண்ணோ, இன்றைய சமூகத்தை மட்டுமல்ல, நாளைய சமூகத்தையும் சீர்படுத்தும் பணியில் களத்தில் நின்று போராடுபவனாக இருக வேண்டும்".

சாரோ உள்ளிட்ட ஒன்பது ஓகோனியர்களைக் கொன்றதுடன் தனக்கு எதிரான குரல்களை அடக்கிவிட்டதாக ஷெல் நினைத்தது, ஆனால் வரலாறு கார்ப்பொரேட்டுக்களால் மட்டுமே எழுதப்படுவதில்லையே! அடிப்படை உரிமைகளுக்கான மையம் (Centre for Constitutional Rights - CCR), புவிக்கான சர்வதேச உரிமைகள் கழகம் (Earth Rights International-ERI) போன்ற அமைப்புக்களும் மனித உரிமைகளுக்கான பிற அமைப்புக்கள், ஆர்வலர்களும், 1996 தொடங்கி ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து சர்வதேச அளவில் நடத்தி பிரச்சாரம் செய்துவந்தார்கள். கொல்லப்பட்ட சாரோவின் இரண்டு மகன்களும் இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து ஷெல்லின் சதிகள், ஓகோனி மக்களின் வாழ்க்கை பறிப்பு என அனைத்தையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார்கள். கடந்த மே மாதம் PEN என்ற சர்வதேச எழுத்தாளர் அமைப்பு நடத்திய கூட்டத்தில், சாரோவின் மகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்: "ஷெல் கம்பெனியின் கைரேகைகள் (தந்தையின்) விசாரணை எங்கிலும் படிந்திருந்தன; வழக்கு விசாரணைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லஞ்சலாவண்யம் உட்பட, ஷெல் கம்பெனி செய்தது என்பது உறுதி."

பதினான்கு ஆண்டுகள் நீண்ட போராட்டங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் பிறகு, அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ராயல் டச்சு ஷெல் கம்பெனிக்கு எதிரான, கென் சாரோ உள்ளிட்ட கொல்லப்பட்ட ஒன்பது பேர், மற்றும் பாதிக்கப்பட்ட ஓகோனி மக்கள் அனைவர் சார்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்கு, 2009 மே 26 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விசாரணையை எப்படியாகிலும் நிறுத்திவிட வேண்டும் என ஷெல் வழக்கம் போல தலைகீ£ழாக நின்றது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக, இணையதளங்களின் தகவல்படி, ஒரு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம் டாலர் (சுமார் எழுபத்தொரு கோடி ரூபாய்) இழப்பீட்டுதொகை அளிப்பதாக ஷெல் ஒத்துக்கொண்டுள்ளது. ஷெல்+நைஜீரிய ராணுவக் கூட்டணியின் கொலைபாதக தாக்குதல்களால் உயிரையும் உடல் உறுப்புக்களையும் இழந்த ஓகோனிய மக்களுக்கு இழப்பீடாக மட்டுமின்றி, சர்வதேச கம்பெனியான ஷெல், நைஜீரியாவின் இயற்கைவளங்களை அழித்து சுடுகாடாக ஆக்கி, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் கேட்டை விளைவித்து அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காகவும் இந்த அபராதத்தொகையை ஷெல் செலுத்துகின்றது என்பது முக்கியமானதாகும்.

1996இல் இந்த வழக்கைத்தொடுத்த அடிப்படை மனித உரிமைகளுக்கான மையத்தின் வழக்கறிஞர் ஜெனீ க்¡£ன், "தாங்கள் நினைத்தபடியெல்லாம் நாடுகடந்து கொள்ளையடிக்கலாம், கண்ணை மூடிக்கொண்டு சுற்றுச்சூழலை நாசமாக்கலாம், அடிப்படை மனித உரிமைகளை மீறலாம், எவனும் கேட்கமாட்டான் என்ற சர்வதேச பகாசூரக் கம்பெனிகளின் அலட்சிய நடத்தைகளுக்கும் அநியாயங்களுக்கும் இந்த வழக்கும் இழப்பீடும் ஒரு பாடமாக, ஒரு அடியாக அமைந்ததால் இந்த வழக்கு உண்மையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கின்றார். ஷெல் போன்ற எல்லைகடந்த கொள்ளை முதலாளிகளுக்கு எதிராக வழக்குத்தொடுத்து வெற்றி பெறவும் முடியும் என்பதையும் சொல்ல வேண்டும். அது மந்திரத்தால் நடக்காது, சாமானிய ஓகோனி மக்களும் அறிவுஜீவிகளும் ஒன்றிணைந்து மனம் தளராமல் முன்னெடுத்துச் சென்ற போராட்டம்தான் இறுதி வெற்றியைத் தந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இழப்பீட்டுத்தொகையில் 50 லட்சம் டாலர் தொகையில் கிஷி (kissi) (முன்னேற்றம்) என்ற அறக்கட்டளையைத் தொடங்கி நைஜர் டெல்டாவில் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு செலவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
இன்றைய தேதியில் ஓகோனியில் தனது எண்ணெய் ஆலைப் பணிகளை ஷெல் நிறுத்தி வைத்துள்ளது; ஆனால் தென்கிழக்கு நைஜீரியாவில் தனது எண்ணெய் எடுக்கும் வேலைகளை பரந்த அளவில் செய்துகொண்டுதான் இருக்கின்றது.




ஷெல் என்ற சர்வதேச பகல்கொள்ளையனுக்கு எதிரான ஓகோனி மக்களின் போராட்டம் சுபமாக முடிந்தது என்ற  ரீதியில் 'இது ஒரு நல்ல கதை' என்று நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர முடியாது.

...6

திங்கள், ஜூலை 16, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 4)


நைஜீரிய மக்களின் எதிர்ப்பும் இயக்கங்களும்:
சர்வதேச எண்ணெய்க்கம்பெனிகள், குறிப்பாக ஷெல், தமது வாழ்வை முற்றிலும் நாசமாக்கிவிட்டதை உணர்ந்த ஓகோனி மக்கள் தமக்கான உரிமைப்போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1990ஆம் ஆண்டு மோசோப் இயக்கத்தைத் தொடங்கினார்கள் (Movement for the Survival of the Ogoni People - ஓகோனி மக்கள் உயிர்வாழும் உரிமைக்கான இயக்கம்). 1993ஆம் ஆண்டில் ஓகோனி மக்களில் பாதிப்பேருடைய ஆதரவு இந்த இயக்கத்துக்கு கிடைத்தது. இந்த இயக்கத்தை தொடங்கியவர்களில் ஒருவர் கென் சாரோ-விவா (Kennule Beeson Saro-Wiwa). 1941 அக்டோபர் 10ஆம் நாள் பிறந்தவர். எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பல நூல்களின் ஆசிரியர், குறிப்பாக நைஜீரிய மக்களின் வரலாறு குறித்தும், பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் ஓகோனி மக்களின் வாழ்க்கை நாசமானது குறித்தும் நிறையவே நூல்கள் எழுதினார்.

1993 ஜனவரியில் மூன்று லட்சம் ஓகோனி மக்களைத் திரட்டிய சாரோ-விவா, "எண்ணெய்க்கம்பெனிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; கடந்த காலத்தில் செய்த நாசங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்; (நைஜர் டெல்டாவில் சம்பாதித்த) வருமானத்தில் ஓகோனி மக்களுக்கான பங்கைத் தர வேண்டும்; மத்தியில் (உள்ள அரசுக்கு மாற்றாக) அரசியல் சுயாட்சி வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் வன்முறையற்ற ஊர்வலம் ஒன்றை நடத்தினார்.


ஷெல்லும் நைஜீரிய அரசாங்கமும் கைகோர்த்து இந்த இயக்கத்தை நசுக்கவும் சாரோவை எப்படியாவது சிறையில் தள்ளவும் சதி செய்தனர். ஷெல் கம்பெனியின் வீட்டு வேலையாட்கள் போல் ராணுவமும் போலீசும் கேவலமாக நடந்து கொண்டன. ராணுவத்துக்கு பணமும் வாகன வசதிகளும் ஆயுதங்களும் துப்பாக்கி ரவைகளும் கூட ஷெல் கம்பெனி வாங்கிக்கொடுத்ததாக மிகப்பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன, சாட்சிகளோடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஷெல்லின் எச்சிலிலையைப் பொறுக்கித்தின்ற அரசு ஷெல்லுக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டது. மோசோப் இயக்கம் தொடர்ந்து வலுப்பெறவே, இந்த கிரிமினல் கூட்டணி, மோசோப்புக்கு எதிரான பொய்ப்பிரசாரத்திலும் இறங்கியது. சாரோவும் மோசோப்பும் ஆட்கடத்திகள், விமானக்கடத்திகள், வன்முறையாளர்கள் என்று பிரச்சாரம் செய்தது. எதுவும் எடுபடாததால் சாரோ உள்ளிட்ட 'ஒன்பது ஓகோனியர்களை' (Ogoni Nine) (கென் சாரோ-விவா, இளைஞர் தலைவர் ஜான் பூனன், டாக்டர் பாரினெம் கியோபெல், சாட்டர்டே டூபீ, நோர்டு எவோ, டேனியல் போக்கூ, பால் லீவரா, ஃபெலிக்ஸ் நுவேட், பாரிபோர் பேரா) படுகொலை செய்ய ஷெல்+அரசு கூட்டணி சதித்திட்டம் தீட்டியது.

1993இன் தொடக்கத்தில், ஓகோனி வழியாக, அதாவது மக்கள் குடியிருப்பு, வயல்கள் வழியாக, ஒரு எண்ணெய்க்குழாயைக் கொண்டு செல்லும் வேலையை நைஜீரிய ராணுவத்தின் துணையோடு ஷெல் செய்தது. காராலூலு கோக்பாரா என்ற பெண்மணியின் வயலில் விளைந்திருந்த தானியங்களை புல்டோசர் கொண்டு அழித்தபோது அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தடுத்தார். உடனடியாக ராணுவம் சுட்டதில் அவரது ஒரு கை பலத்த சேதமானது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

1994இல் சாரோவின் சகோதரான ஓவன்ஸ் விவா மீது பொய்க்குற்றம் சுமத்தி பல முறை அவரை சிறையில் தள்ளி, அடித்து உதைத்தனர். மைக்கேல் வைசர் மீது அரசியல் இயக்கத்தில் ஈடுபட்டதாக 'குற்றம்'சாட்டி சிறையில் தள்ளினர்; அவரது மகளை வன்புணர்வு செய்தனர். பல பொய்க்குற்றங்களை ஒத்துக்கொள்ளுமாறு அவரை சித்ரவதை செய்தனர். அவரது மகன் அவருக்கு உணவு கொண்டுவந்தபோது அவரையும் அடித்து உதைத்தனர்.

1994இல் கென் சாரோ உள்ளிட்ட தலைவர்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால் அதே கூட்டத்தில் நான்கு ஓகோனிய தலைவர்களை ஷெல்+ராணுவக்கூட்டணி கொன்றது. வேடிக்கையாக, இவர்கள் சாவுக்கு சாரோதான் காரணம் என ராணுவ கவர்னர் அறிவித்து, சாரோவையும் பிறரையும் சிறையில் தள்ளினார். இதையே சாக்காக வைதுக்கொண்டு ஓகோனியில் 60 நகரங்களில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி மோசோப் உடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தி பல நூறு பேரை சித்ரவதை செய்தது.

மூன்று நபர் விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்தது. இந்த மூன்று பேரும் எச்சக்கலை நாய்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமது தரப்பு வாதங்களை முன்வைக்கக்கூட ஒன்பது பேருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை, அத்தனை அவசரம் ஷெல்+ராணுவக்கூட்டணிக்கு. வழக்கு விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஷெல் பின்னால் இருந்து இயக்கியது. சாரோவையும் மோசோப்பையும் ஒழித்துக்கட்டிவிடுவோம் என்று அரசு தனது எஜமானன் ஆன ஷெல்லுக்கு உறுதி அளித்திருந்தது. வழக்கு விசாரணைக்கு முன்பாகவே, ஷெல் தனது தலைமை அலுவலகத்துக்கு இவ்வாறு உறுதி அளித்திருந்தது: "சாரோ தண்டிக்கப்படுவார், உயிருடன் திரும்பமாட்டார்". சாட்சிகளிடமே கூட நேரடியாக ஷெல் இப்படி சவால் விடுத்திருந்ததாக சாட்சிகள் கூறினார்கள். உச்சகட்டமாக, அன்றைய நைஜீரிய ராணுவ சர்வாதிகாரி சானி அபாகாவை ஷெல் அதிகாரிகள் நேரே சந்தித்து விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என கட்டளை இட்டிருந்தார்கள். வெளிநாட்டு வழக்கறிஞர் வாதாடுவதற்கான விசேச சட்டத்தின் கீழ் ஷெல்லின் வழக்கறிஞரே கடல்கடந்து வந்து ஷெல்லுக்காக வாதாடினார் (எல்லாமே ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை என்பதை சொல்ல வேண்டியதில்லை). ஷெல்லின் நைஜீரிய மானேஜிங் டைரக்டர் பிரியன் ஆண்டர்சன், சாரோவின் சகோதரர் ஓவன்ஸ் விவாவிடம், "ஷெல்லுக்கு எதிரான போராட்டத்தை உங்கள் சகோதரர் நிறுத்தினால் அவரை விடுதலை செய்ய எங்களால் முடியும்" என்று பேரம் பேசினார். விசாரணையில் சாரோவுக்கு எதிராக சாட்சியம் சொன்ன இரண்டு பேர், "ஷெல் வழக்கறிஞர் முன்னால் தங்களுக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும், ஷெல் கம்பெனியில் வேலை தரப்படும் என்று ஆசைவார்த்தை காட்டப்பட்டதாகவும், இதனால் சாரோவுக்கு எதிராக தாங்கள் சாட்சியம் அளித்ததாகவும்" பின்னர் ஒப்புக்கொண்டனர்.

விசாரணையின்போது கென் சாரோ-விவா உறுதிபடக் கூறினார்: "இறுதித்தீர்ப்பு நாள் வந்தே தீரும்; ஓகோனி மக்களுக்கு எதிராக ஷெல் செய்த கொலைபாதகங்களுக்கு ஷெல் பதில் சொல்லும் நாள் வந்தே தீரும்; ஷெல் தண்டிக்கப்படும்." இறுதியில் 1995 நவம்பர் 10 அன்று 'ஓகோனியர் ஒன்பது' பேரும் தூக்கில் போடப்பட்டனர். பணம் பாதாளம் மட்டும் பாயும், கார்ப்பொரேட் பணம் தூக்குமேடை வரையும் பாயும். சாரோவின் உடலை அமிலம் ஊற்றி எரித்த ராணுவம், எஞ்சிய உடலை அடையாளம் தெரியாத இடத்தில் வீசி எறிந்தது.

இதற்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு...


...5

புதன், ஜூலை 11, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? - 3











உழைப்பாளிகள் இடம்பெயர்வதும் கிராமப்புறங்களில் ஏற்படும் பிரச்னைகளும்:

2001-2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் காணப்பட்ட பெரும் அபாயம் இடப்பெயர்ச்சிதான், இந்தப்பத்தாண்டுகளில்தான் கடந்த 90 வருடங்களில் இல்லாத அளவுக்கு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி பெரும் அளவில் இடம்பெயர்ந்தார்கள். நகரங்களில் கட்டிட வேலைகளில் பிரதானமாக ஈடுபடுகின்றார்கள். ஆனால் ஒழுங்கான குடியிருப்பு, கழிப்பிட வசதி இல்லை, அவர்களது குழந்தைகளின் படிப்பு பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.்ரதானமாக ஈடுபடுகின்றார்கள்.
் இடப்பெயர்ச்சிதான்,்பவர்களின் எண்ணிக்கை க்டந்த 20 ஆண்டுகளில் இரு மடங்

ஒரிசாவின் கஞ்சம் மாவட்ட்த்தில் இருந்து இடம்பெயர்ந்த 4 லட்சம்  தொழிலாளிகள் இப்போது குஜராத்தில் விசைத்தறி வேலைகளில் அடிமாட்டு கூலிக்கு தினமும் 12 மணி நேர வேலை செய்கின்றார்கள். புதிய பொருளாதாரக்கொள்கையின் விளைவாக விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் அழிவை நோக்கிசெல்லும்போது இத்தொழிலாளிகளுக்கு லே-ஆஃப் விடப்படும்போது ஊதியம் கிடைக்காது, சொந்த ஊரில் உள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்ப இயலாமல் போகும்போது அங்கே அக்குடும்பம் சிக்கலை சந்திக்கும்.

கேரளாவின் வயனாடு மாவட்ட்த்தில் மிகப்பலர் வளைகுடா நாடுகளில் வேலைக்குப்போனவர்கள். விவசாயத்தில் நெருக்கடி, தற்கொலைகள் காரணாமாக இங்கே இருந்த பல்லாயிரம் விவசாயிகளும் தினக்கூலித்தொழிலாளிகளும் அருகில் உள்ள கர்னாடகாவுக்கு ஏதோ ஒரு வேலைக்காக இடம்பெயர்ந்தார்கள்.

நவதாராளக்கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த இருபது வருடங்களில் உச்சகட்ட  உலகமயமாக்கப்பட்ட மாநிலம் கேரளாதான். இது குறிப்பிடத்தக்க விசயமாகும்.  ஏனெனில் கேரளாவின் விளைபொருட்களில் பெரும்பாலானவை பணப்பயிர்களே, இவற்றின் விலையை தீர்மானிப்பவர்கள் சர்வதேச ஸ்டாக் மார்க்கெட் வியாபாரிகளும் பெருமுதலாளிகளும்தான். முக்கியமான விசயம் என்னவெனில் கேரளாவில் விளைகின்ற பொருட்களில் ஆகப்பெரும்பாலானவற்றை உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதில்லை, எல்லாம் ஏற்றுமதிதான்.  ஆக சர்வதேச அல்லது உள்நாட்டுப்பொருளாதாரத்தில் ஒரு  மோசமான சரிவு நேர்ந்தால் கேரளாவின் இத்தளம் மிக மோசமாகப்பாதிக்கப்படும், சுற்றுலா உள்ளிட்ட உள்ளூர் பொருளாதாரம் அனைத்தும் பாதிக்கப்படும்.

மஹாராஷ்ட்ராவில் ஒரே ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. அந்த வீடு 27 அடுக்குகள் கொண்டது. அமெரிக்க கட்டுமான நிறுவனமான பெர்க்கின்ஸ்&வில் என்பவர்களால் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டதாம். 4 லட்சம் சதுர அடி, 168 கார்கள் நிறுத்தக்கூடிய வசதி, 9 லிஃப்டுக்கள், மூன்று ஹெலிகாப்டர் தளங்கள்,நீச்சல்குளம்,பொழுதுபோக்கு தளங்கள், திரையரங்கம்...என நீளும் வசதிகள் கொண்ட சிறு வீடு. இந்த வீட்டின் சொந்தக்காரர் பெயர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் என்ற கம்பெனிக்கு சொந்தக்காரர். நமது பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த உடல் எடுத்துச்செல்லப்படும் வரை நமது வீட்டிலும்  ஒழுங்கான சமையல் இருக்காது, ஆனால் துக்கவீட்டுக்கு வருபவர்களுக்கு நம்மால் இயன்ற தேநீர்,குடிநீர், முடிந்தால் உணவும் கூட கொடுத்து உபசரிப்பது என்பது அந்த வீட்டின் துக்கத்தில் பங்கு பெறும் ஒரு அடையாளமாகும். ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட, ஆசியாவின் மிகப்பெரும் மோசமான சேரிப்பகுதியான தாராவியும் இருக்கின்ற, உலகின் 5 வயதுக்கு உட்பட்ட எடைகுறைந்த குழந்தைகளில் 42 சதம் குழந்தைகளும் இருக்கின்ற இதே மாநிலத்தில்தான் தனது பகட்டையும் பணத்திமிரையும் வெளிச்சம்போட்டு காட்டும் மனிதாபிமானம் அற்ற ஒரு மிருகமும்  இருக்கின்றானாம். இவன் தான் உழைப்பால் உயர்ந்தவனாம், வளரும் இளம் தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாம்!

இது ஏதோ ஒரு தனிமனிதனின் குணாம்சம் அல்ல, இது உலகமயத்தின்  தாராளமயத்தின் பெருமுதலாளித்துவத்தின் விழுமியம், அதன் பகட்டுக்குப்பின்னால் ஒளிந்துள்ள ராட்சசமுகம் என்பதே உண்மை.




சனி, ஜூலை 07, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? (2)


 (2012 பிப்ரவரி 22 அன்று கேரளா திருச்சூரில் விப்கியார் திரைப்பட விழாவில் ‘உயிர்களும் உயிர்வாழ்தல் பொருட்டும்’ (Lives and Livelihood’) என்ற மையக்கருத்தின்  மீது நடந்த திரைப்படத்திருவிழாவில், விவசாயிகளின்பால் மிகுந்த கவனம் செலுத்தும் திரு. சாய்நாத் அவர்கள் சமத்துவமின்மை, வாழ்தலின்பொருட்டு, விவசாயத்துறை சந்திக்கும் பேரழிவுஎன்ற தலைப்பில் ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரை) 
 
ஒருபுறம் கோடிக்கணக்கான இந்தியக்குடிமக்கள் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி செத்து மடிந்து கொண்டிருக்க, இந்திய அரசு மறுபுறம் எந்த ‘ஏழையைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கின்றது? விஜய்மல்லையா என்ற தனிமனிதன் – ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியல் இட்டுள்ள 55 இந்தியக்கோடீசுவரர்களில் ஒருவர், கிங்ஃபிஷெர் என்ற விமானக்கம்பெனியை நட்த்தி நஷ்டப்பட்டுப்போனார், எனவே மன்மோஹன் அரசும் அதன் அதிகாரிகளும் எப்படியாவது தில்லுமுல்லு செய்து அரசு கஜானவில் இருந்து பணத்தை எடுத்து விஜய்மல்லையா என்ற தனிமனிதனைக் காப்பாற்ற குட்டிக்கரணம் அடிக்கின்றார்கள்.  கிரிக்கெட் மைதான்ங்களில் அரைகுறை ஆடை அணிந்துள்ள பெண்களை கட்டிப்பிடித்தும் சினிமா நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து போஸ் கொடுப்பவரும்  இந்த ஏழை மல்லையாதான், பாவம்.  ஒரு புள்ளிவிவரப்படி தனது மதுபானக்கம்பெனியின் காலண்டர்களுக்கு அழகிகளைப்போட்டு படம் எடுக்கவே இந்த மல்லையா பல கோடி ரூபாய்களை செலவு செய்கின்றாரம், அவ்வளவு ஏழையாம் இவர். மல்லையா கண்ணில் நீர் வழிந்தால் மனுமோஹன் சிதம்பரம் பிரணாப் அலுவாலியா கும்பலுக்கு நெஞ்சில் உதிரம் கொட்டுமாம்.

பிப்ரவரிக்கு முன்னால் நடந்த நாடாளுமன்றக்கூட்ட்த்தொடர் 38 நாட்கள் நடந்த்து.  ஒரே ஒரு மசோதாவை (லோக்பால் மசோதா) மட்டும் இந்த 38 நாட்களும் பேசிக்கொண்டே இருந்த்தார்கள். இந்த 38 நாட்களில் 1786 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள், அதாவது 38 நிமிசங்களுக்கு ஒருவர். 78000 விவசாயிகள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த விவசாயத்தை கை கழுவுவிட்டு வேறு கூலி வேலைகளுக்கு சென்றிருப்பார்கள்.

இந்த 38 நாட்களில் 3000 முதல் 4000 குழந்தைகள் பட்டினியாலும் சத்துக்குறைவினாலும் செத்துப்போயிருப்பார்கள்; இந்த சாவுகளுக்கு நேரடிக்காரணம் பஞ்சமோ வெள்ளமோ அல்ல, அரசு பிடிவாதமாக கடைப்பிடிக்கின்ற பொருளாதாரக்கொள்கைகளே. மாந்தர் வளர்ச்சி அறிக்கையில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: ஆப்பிரிக்காவின் சஹாராவின் சுற்றுப்பிரதேச நாடுகளில் போதிய சத்துணவு இன்றி இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கையைப்போல் இது இரண்டு மடங்கு.  ஆனால் ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பாத்தியத்துக்கு உட்பட்டவர்கள் அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்குள் வருவார்கள் என மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாணம் தாக்குதல் செய்துள்ளது (அதாவது ஒரு நாளைக்கு 25 ரூபாய்க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டை தாண்டிவிடுவார்கள்!).

ஆனால் அதே சமயத்தில் ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே குறிகோளாக கொண்டு 88000 கோடி ரூபாய் மதிப்பிலான அவர்களுக்கான நேரடி வரிகளை மன்மோஹன் அரசு தள்ளுபடி செய்கின்றது. இத்தொகை பொதுவினியோக (ரேஷன்) முறைக்கு அரசு செய்யும் செலவுக்கு ஈடானது. ஒவ்வொரு வருசமும் பெருமுதலாளிகளுக்கு அரசு தரும் மானியம் 5 லட்சம் கோடி ரூபாய்; அரசு மனது வைத்தால் ஒட்டுமொத்தமாக சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட அனைத்து சமூக நலத்திட்டங்களுக்கும் இந்தப்பணம் போதுமானதாகும்.

இந்த 38 நாட்களில் இந்தியாவின் கோடீசுவர்ர்கள் எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார்கள்? உதாரணமாக முன்னாள் விமானப்போக்குவரத்து மந்திரியும் பெரும் முதலாளியும் ஆன பிரஃபுல்படேல் ஒருகோடியே தொண்ணூறு லட்சம் ரூபாய் (ஒரு நாளைக்கு 5 லட்சம்) சம்பாதித்திருப்பார். ஆனால் தேசிய விமானக்கம்பெனியான ஏர் இந்தியா விமானிகளுக்கு பல மாதங்களாக சம்பளமே தரப்படவில்லை.

கடந்த இருபது வருடங்களில் காங்கிரஸ் அரசால் மிக வலுவாக இந்திய மண்ணில் புகுத்தப்பட்ட நவதாராளமயக்கொள்கைகளால் உலகின் டாலர் கோடீசுவர்ர்களின் பட்டியலில் இந்தியா இந்த இருபது வருடங்களில் நான்காவது இட்த்தைப் பிடித்துள்ளது எனில் யாரைப் பலிகொடுத்து?  பலகோடி தொழிலாளிகளையும்  விவசாயிகளயும்  சிறுவியாபாரிகளையும்  சாமானியமக்களையும் பலிகொடுத்தே அம்பானிகளும் மிட்டல்களும் மல்லையாக்களும் கோடீசுவர்ர் ஆனார்கள்.


மறுபுறமோ பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த 20 வருடங்களில் உணவுற்பத்தி படுவேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பெருகும் மக்கட்தொகைக்கு ஏற்ப உணவுற்பத்தி இல்லை. விளைவு, மக்களின் உடல்நலனுக்குத் தேவையான கலோரி கிடைப்பதில்லை.  கேவலமான உண்மை என்ன? சஹாராவை சுற்றியுள்ள ஆப்பிரிக்க நாடுகளின் (ருவாண்டா போன்ற நாடுகளின்) மக்களை விடவும் உணவுப்பாதுகாப்பு விசயத்தில் இந்தியா மோசமாகப் பின்னடைந்துள்ளது. உலகின் பிற நாடுகளை விடவும் இந்தியாவில்தான் பட்டினி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம்! 2020இல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று உடுக்கை அடித்துக் குறிசொல்லும் விஞ்ஞானிகள் ‘வல்லரசுன்னா என்ன என்று பதவுரை பொழிப்புரை சொல்ல வேண்டும். வலுத்தவன் அரசா? அப்போ இளைத்த இளிச்சவாய இந்தியனெல்லாம் எங்கே போய் சாவது?

அரசின் இத்தகைய கொள்கைகளின் விளைவாகவே பாரம்பரியமான விவசாயத்தை தொடர முடியாமல், அதாவது இடுபொருட்கள்,உரம்,மருந்து,கூலி போன்ற செலவுகளை தாங்க முடியாமலும், அல்லது இந்த செலவுகளுக்காக தண்டல் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து பின்னால் கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகின்றது.  இந்தப்புள்ளிவிவரங்களிலும் அரசு மோசடி செய்கின்றது: பெண்கள் விவசாயிகளாக்க் கருதப்பட மாட்டார்கள், எனவே பெண் விவசாயிகள் தற்கொலை செய்தால் அது இந்தக்கணக்கில் வராது; அல்லது தற்கொலை செய்துகொள்ளத் தேவையான பணம் (!) இல்லாமல் செத்துப்போகும் விவசாயிகள், இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கும் தமது கஷ்டங்களை கடிதமாக எழுதிவிட்டு தற்கொலை செய்பவர்கள்; அல்லது விதர்ப்பாவின் பாஞ்சரா பழங்குடிமக்களின் தலைவர் ஒருவர் தனது குடும்பத்தின் திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...ஆக இவையெல்லாம் தற்கொலை பட்டியலில் வராது என்று அரசு சொல்கின்றது!

நமது தொலைத்தொடர்புத்துறை அமைச்சரோ இந்திய மக்கள் 70% பேருக்கு மொபைல் தொலைபேசி கிடைத்திட திட்டமிடுவதாக பறைசாற்றுகின்றார், ஆனால் அதே அளவு மக்கள் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லாமல் இதே தேசத்தில் இருக்கின்றார்கள், தண்டல்கார்ர்களிடம் வட்டிக்கு கடன் வாங்குகின்றார்கள்.  இந்தியா ஒரு விவசாய நாடு என்று பெருமை பீற்றிக்கொள்கின்ற இந்த தேசத்தில், கார் கடனுக்கு 7% வட்டி மட்டுமே வசூலிக்கின்ற அரசு வங்கிகள், விவசாயத்துக்கான ட்ராக்டர் கடனுக்கு 14% வட்டியும், அரசுசாரா தொண்டு நிறுவன்ங்கள் என்ற போர்வையில் சுயநலமிகளால் நட்த்த்ப்படும் சுய உதவிக்குழுக்களிடம் உழைக்கும்பெண்கள் பெறும் கடனுக்கு 36% வட்டியும் வசூலிப்பது கொடுமையன்றி வேறென்ன?

தமது குறைந்தபட்ச வாழ்க்கையை நடத்தவே பெரும் கடனில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளை பெரும் நோய்கள் தாக்கிவிட்டால் மருத்துவ செலவுகளை சரிக்கட்ட தம் நிலங்களை அடகு வைக்கின்றார்கள்.  மருத்துவம் ஒரு சேவை என்ற காலம் மலைஏறி அதுவும் ஒரு லாபம் கொழிக்கும் தொழில் என்ற நிலைமையை உலகமயமும் தாராளமயமும் உருவாக்கியபின் பெரும் தொழில்முதலைகள் கோடிகளைக்கொட்டி மருத்துவ்மனைகளை கட்டுகின்றார்கள், அரசு மருத்துவமனைகள் மூடப்படுகின்றன, மக்களுக்கான சுகாதாரத்தை வழங்குவது என்ற அடிப்படைக்கடமையை அரசு கை கழுவுகின்றது.  (இதுபோன்ற கார்பொரேட் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும், கொத்தடிமைகளாக நட்த்தப்படுவார்கள் என்பது மற்றுமொரு விசயம்). மருத்துவசெலவுகளைத் தாங்க முடியாத காரணத்தால் மருத்துவமனைகளுக்கே செல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

தொடரும்...3.
 


ஆனந்தவிகடனுக்கு நன்றி!

’குறைவாக எழுதினாலும் நிறைவான படைப்புக்கள் அலங்கரிக்கும் வலைதளம்...உபயோகமான வாசிப்பு அனுபவம் அளிக்கும் தளம்!’ எனப் பாராட்டி சாம்பல்தேசத்தை விகடன் வரவேற்பறையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது ஆனந்தவிகடன்  (11.7.12 இதழில்).  ஆனந்தவிகடனுக்கு என் நன்றிகள் பல!...


அன்புடன்
சாம்பல்தேசம்
06.07.2012

வியாழன், ஜூலை 05, 2012

உழுதுண்டு வாழ்வாரே....வாழ்வார்? - 1


தேசிய குற்றப்பதிவு அமைப்பு (National Crime Records Bureau) புள்ளிவிவரப்படி 2011ஆம் ஆண்டில் மட்டும் 14027 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளார்கள். 1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 270940. இதில் உச்சத்தில் நிறபது மஹாராஷ்ட்ரா மாநிலம். இக்காலகட்ட்த்தில் இங்கு மட்டும் உயிரை மாய்த்துக்கொண்டோர் 53818.  2011இல் மஹாராஷ்ட்ராவில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 3337. அதிகபட்சமாக இம்மாநிலத்தில் 2006இல் 4453 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.  உண்மையான எண்ணிக்கை இதைவிடவும் அதிகமாகவே இருக்கும், ஏனெனில் அரசும் தனியார் பெருமுதலாளிகளின் விதைக்கம்பெனிகளும் ஒன்றுசேர்ந்து பெரும் செலவு செய்து தற்கொலை எண்ணிக்கையை ஊடகங்களில் குறைத்துக்காட்ட பெரும் பிரயத்தனம் செய்வது தொடர்கின்றது.
ஒரு புறம் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, தற்கொலை எண்ணிக்கையோ மறுபுறம் அதிகரித்துக்கொண்டே வருவது விசித்திரமாக உள்ளது.  குறிப்பாக மஹாராஷ்ட்ராவில் கிராமங்கள் அழிக்கப்பட்டு நகரமயமாதல் அசுரத்தனமான வேகத்தில் நடக்கும்போதும் தற்கொலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு, விவசாய சமூகத்தின் மீது அரசும் இந்த சமூகமும் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தமும் மன உளைச்சலுமே காரணமாகும்.
விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையில் (1995ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரை) உச்சத்தில் இருக்கும் ஐந்து மாநிலங்கள் (என்ன ஒரு பெருமை!): 
மஹாராஷ்ட்ரா – 53818
ஆந்திரா – 33326
கர்நாடகா – 37153
மத்தியப்பிரதேசம்+சத்தீஷ்கர் – 42388, மொத்தம் 166685.
1995-2011 காலகட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 270940 எனில் ஆனால் மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் இதில் 61.52% தற்கொலைகள் நடந்துள்ளன.  உண்மையில் இந்தப்புள்ளிவிவரங்கள் எல்லாம் குறைத்துக்காட்டப்பட்டவை; மேலும் பல விவசாயிகளின் தற்கொலைகள் வேறு காரணங்களைகாட்டி காவல்துறையாலும் அரசாலும் இந்தப்பட்டியலில் மறைக்கப்பட்டிருக்கும் (numbers massage) என்பது தெளிவு. விவசாயிகள் தற்கொலைகளில் முதலிடம் பெறும் மஹாராஷ்ட்ராவின் விதர்ப்பாவிற்கு பிரதமர் மன்மோஹன் சிங் கருணை கூர்ந்து விஜயம் செய்த பின்னர் அரசு அதிகாரிகள் ராஜாவை விஞ்சிய மந்திரிகளாய் தற்கொலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்தே காட்டி வருகின்றார்கள்.  மத்தியில் விவசாயத்துறை மந்திரியாய் இருக்கின்ற, அதே மஹாராஷ்ட்ராவை சேர்ந்தவரான சரத்பவாரோ அரசின் புள்ளி விவரங்களை (தில்லுமுல்லானவை என்றாலும்) நாடாளுமன்றத்தில் சொல்வதை தவிர்த்தே வருகின்றார். அவருக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கின்றன – கிரிக்கெட் வாரியத்துக்கு யார் தலைவராக இருப்பது, கிரிக்கெட் வாரியத்துக்கு தான் போட்டி போடலாமா அல்லது எதிர்த்துப் போட்டியிடுபவரை எப்படி கவிழ்த்து இந்தியத்தாயை வாழ வைப்பது போன்ற தலைபோகிற விசயங்கள்.  
சரி, நீங்கள் நெடுநேரமாய் கேட்க ஆவலாய் உள்ள கேள்விக்கு பதில் இதோ: தமிழகத்தில் 2011இல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 82. காங்கிரசின் புதிய நவதாராளவாத-உலகமயக் கொள்கைகளை அப்படியே தமிழகத்தில் அமலாக்கும், உலகப்பெருமுதலாளிகளின் உள்ளூர் ஏஜெண்டுகளான இனமானத்தளபதிக்கும் புரட்சித்தலைவிக்கும் இந்தப்புள்ளிவிவரம் சமர்ப்பணம்.
(ஹிந்து நாளிதழில் வெளிவந்த பி.சாய்நாத் அவர்களின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
தொடரும்....2

ஞாயிறு, ஜூலை 01, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 3)


நீண்டகால பாதிப்புக்கள்:

1) மக்கள் உடல்நலம் பாதிப்பு: சுவாசக்கோளாறு, இருமலில் ரத்தம், தோல்வியாது, கட்டிகள், வயிற்றுப்பிரச்னை, புற்றுநோய்கள், சத்தற்ற உணவு...
2) உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு; ஆப்பிரிக்கக்கண்டத்தின் மிகப்பெரியது; இயற்கை வளங்களும், ஏராளமான வன, நீர்வாழ் உயிரினங்களும் நிரம்பி வழிந்த பூமி என்ற பெருமைக்கு உரிய நைஜர் டெல்டா. எண்ணெய்க்கம்பெனிகளின் கட்டுமானம், குழாய் பதிப்பு, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கான குழி தோண்டுவது என காசு மட்டுமே குறியாக சர்வதேச முதலாளிகள் செய்த அனைத்து விதமான நாசவேலைகளால் கிடைத்தற்கு அரிய இயற்கைவளங்களை இழந்து நாசமானது நைஜர் டெல்டா.

சமூக, பொருளாதார பாதிப்புக்கள்:

எண்ணெய்க்கம்பெனிகளின் தொழில்கள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அப்பகுதியின் இயற்கை வளங்களை நம்பியும் சார்ந்தும்தான் அப்பகுதி மக்கள் கடந்தகாலத்தில் வாழ்ந்து வந்தார்கள். எண்ணெய்க்கம்பெனிகளின் நுழைவுக்குப்பின்...

1) நில இழப்பும் அடிப்படை ஆதாரவள இழப்பும்:

தமது கூட்டாளிகளான சர்வதேச எண்ணெய் முதலாளிகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை நைஜீரிய அரசே இயற்றியது: "மக்கள் நலன் கருதி" எந்த ஒரு நிலத்தையும், கவர்னர் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் கைப்பற்றி எண்ணெய் முதலாளிகளுக்கு கொடுத்து விடலாம். அப்பட்டமான அரசு பயங்கரவாதம்! இதனால் வாழ்வின் அடிப்படை ஆதாரமான நிலத்தை டெல்டா மக்கள் இழந்தார்கள். எண்ணெய்க்கழிவு, கசிவால் நீர்நிலைகள் நாசமானதால் மீன்கள் அழிப்பு, எனவே உணவுத்தட்டுப்பாடு; காடுகள் அழிப்பால் வீடு கட்டத்தேவையான மரம், விறகு ஆகியனவற்றிலும் இடி விழுந்தது.

2) பாரம்பரிய வாழ்க்கை அழிப்பும் வாங்கும் சக்தி இழப்பும்:

பாரம்பரியமாக காடு, ஆறு, கடல் என இயற்கை சார்ந்த வாழ்க்கை நடத்திக்கொண்டு, முக்கியமாக உணவுத்தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த மக்கள், எண்ணெய்க்கம்பெனிகளின் ஆக்கிரமிப்பால் காடுகளை இழந்ததால் 'வேலை' தேடும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். மாத வருவாய், கடைக்குச்சென்று உணவு வாங்குதல் போன்ற வார்த்தைகளையே கேட்டறியாத டெல்டா மக்கள், நிலமும் காடும் பறிபோன பின் தமது நிலத்தில் அமைந்த எண்ணெய்க்கம்பெனிகளில் கூலி வேலைக்கு சென்றார்கள்! கிடைக்கின்ற கூலியால் வாழ்க்கை நடத்த முடியாது. மாத ஊதியம் பெறும் எண்ணெய்க்கம்பெனி ஊழியர்களின் வருமானத்தோடும் தரத்தோடும் ஒப்பிடும்போது பாரம்பரிய ஓகோனி மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது.

3) பெண்கள் மீது சுமத்தப்பட்ட வாழ்க்கைச்சுமைகள்:

முன்பே கூறியபடி, இயற்கையோடு இசைந்த பாரம்பரியத்தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்திய டெல்டா மக்களில் பெண்களின் பங்கு முக்கியமானது. விவசாயம், மீன்பிடித்தல், விறகு சேகா¢த்தல், காய், கனி, கிழங்கு உள்ளிட்ட உணவு சேகா¢த்தல் ஆகிய வேலைகள் மூலம் குடும்பப்பொருளாதாரத்தின் முக்கிய பங்கை பெண்கள் நிறைவு செய்தனர்; இதன் மூலம் இயற்கையாகவே டெல்டாப்பகுதியின் காடு, நீர்நிலைகளின் பராமா¢ப்பு, பாதுகாப்பு போன்றவற்றையும் பெண்களே செய்தார்கள். ஆனால் காடு, நிலம் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்புக்கும் சீர்கேட்டுக்கும் உள்ளானதால் பெண்களின் தொழில் கேள்விக்குறியானது; இதனால் குழந்தைகளின் கல்வியும் பராமா¢ப்பும் கூடவே கேள்விக்குறியானது.

4) பாலியல் தொழிலும் அநாதைக்குழந்தைகளும்:

தமது வாழ்வாதாரம் பறிபோன நிலையில் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணெய்க்கம்பெனித் தொழிலாளர்களே என்பதைச் சொல்ல அவசியம் இல்லை. ஆக எண்ணெய்க்கம்பெனிகளால் ஓகோனிப்பெண்களின் சுயமா¢யாதையையும் பறி போனது. முறை தவறிப் பிறந்த குழந்தைகள் ஏராளமாக அநாதைகளாக தெருவில் விடப்பட்டனர்.
இதன்றி குழந்தை இறப்பு விகிதம் அதிகமானது. டெல்டாப்பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விடவும் கடுமையான உழைப்பாளிகள். எனவே முன்பு குழந்தை இறப்பு என்பது அநேகமாக அங்கே இருந்தது இல்லை. ஆனால் நீர்நிலைகள் மாசு அடைந்ததால் இந்நீரைக் குடிக்கின்ற கருவுற்ற பெண்களுக்கு நோயுள்ள, ஊனமுள்ள குழந்தைகள் பிறப்பதும், இறந்தே பிறப்பதும் சாதாரமானது.
மொத்தத்தில் ஓகோனி பாரம்பரிய மக்களின் மண்ணும் வாழ்க்கையும் பறி போனது; சமூகச்சீரழிவு தலைவிரித்து ஆடியது.

...4