- இப்படி ஒரு உறுதிமொழியை பிரிட்டிஷ் ராணிக்கு கடிதம் மூலம் சமர்ப்பித்தவரின் பெயர் வினாயக் தாமோதர் சவர்க்கார், கைதி எண் 32778, அந்தமான் சிறை, கடிதம் எழுதிய நாள் 14 11 1913. ஆதாரம் R C Majumdar என்பவர் எழுதிய Penal settlements in Andamans என்னும் நூல்.
... .... ....
முதல் இந்திய விடுதலைப்போர் என்று மார்க்ஸ் ஏங்கெல்சால் பெருமையுடன் அழைக்கப்பட்ட சிப்பாய் கலகம் டெல்லியின் விளிம்பில் உள்ள
மீரட் நகரில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ முகாமில் 10 5 1857 வெடித்தது. 1 11 1858 வரை, அதாவது ஒன்றரை வருடங்கள், நீடித்தது இக்கலகம். முகலாய பேரரசின் ஆட்சிக்கும் கம்பெனியின் ஆட்சிக்கும் முடிவு கட்டினாலும், ஆட்சியதிகாரத்தை பிரிட்டிஷ் ராணியின் கைகளுக்கு மாறியது. 1757 பிளாசி யுத்தத்தை தொடர்ந்து 1612இல் கிழக்கிந்திய கம்பெனி இங்கே தன் நாட்டாமையை நிறுவியது. கலகத்தின் பின்னர்தான், இந்தியா உள்ளிட்ட தன் காலனிய நாடுகளின் விடுதலை போராட்டங்களில் ஈடுபடுவோரை நாடுகடத்தி வைப்பதற்கு என்றே தனியாக ஒரு சிறைச்சாலையை கட்ட வேண்டும் என்ற பிரிட்டிஷாரின் எண்ணமும் திட்டமும் தீவிரமானது. சென்னையில் இருந்து 1600 கிமீ கிழக்கே இந்திய பெருங்கடலுக்குள் உள்ள அந்தமான்தான் சிறை கட்ட தகுதியான இடம் என்று முடிவு எடுத்து, 1896-1906 காலக்கட்டத்தில் சிறையும் கட்டப்பட்டது. பர்மாவில் இருந்து அதற்கான செங்கல்கள் கப்பல்களில் கொண்டுவரப்பட்டன. கட்டியவர்கள் வேறு யாரும் இல்லை, நாடு கடத்தப்பட்ட தண்டனை கைதிகளை கொண்டே சிறை கட்டப்பட்டது. வெறும் தீவும் காடும் பழங்குடியினரும் தவிர வேறு எதுவும் இல்லாத தீவில் இக்கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பல நூறு பேர் நோயிலும் விஷப்பூச்சிகள், பாம்புகள் கடியிலும் பழங்குடியினர் தாக்குதலுக்கு ஆளாகியும் செத்து மடிந்த கதை மிக நீண்டது. தீவுகளில் இருந்த பழங்குடியினர் அறுபதாயிரம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் என்று வரலாறு சொல்கின்றது. 2015இல் அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தேன். சிறைச்சாலையையும் பார்த்தேன்.
இச்சிறைச்சாலை கட்டப்படும் முன் Viper தீவில் முதல் சிறைச்சாலை கட்டப்பட்டது. அதற்கு முன்பே 1857 சிப்பாய் கலகத்தை ஒடுக்கிய கம்பெனி நிர்வாகம், அந்தமான் தீவை கட்டப்படாத திறந்தவெளி சிறையாக பயன்படுத்தி சிப்பாய் கலக போராளிகளை தனிமைப்படுத்தி உள்ளது. மிகப்பல கிளர்ச்சியாளர்களை கொன்ற பின், 200கும் மேற்பட்ட வர்களை இத்தீவுக்கு கடத்தியது. David Barry என்ற சிறை அதிகாரியும் மேஜர் James pattis walker என்பவரும் கண்காணித்து உள்ளனர். அதாவது, முகலாய பேரரசின் கடைசி குடும்பத்தினரும் கிளர்ச்சிக்கு ஆதரவு கேட்டு கடைசி மன்னர் பகதூர் ஷாவுக்கு கடிதம் எழுதியவர்களும் தீவுக்கு கடத்தப்பட்டார்கள். மன்னர் ஷா பர்மாவுக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார், அங்கேதான் இறந்தார். ரங்கூன் என்னும் ஊரில்தான் அவர் கல்லறை உள்ளது.
இந்தியாவின் பிற பகுதிகளில் அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மட்டுமின்றி கராச்சியில் இருந்து 733 பேர் 1868 ஏப்ரல் மாதம் இங்கே கடத்தப்பட்டனர். இங்கு கடத்தப்பட்ட போராளிகளில் பின்வரும் போராட்ட இயக்கங்களில் பங்கு பெற்றவர்களும் அடங்குவர்: வஹாபி இயக்கம் 1830-1869, கேரளாவின் மாப்ளா கிளர்ச்சி 1792-1947, முதல் Rampa ராம்பா கிளர்ச்சி 1878-1879, இரண்டாவது ராம்பா கிளர்ச்சி 1922-1924, Tharawadi தாராவதி விவசாயிகள் கிளர்ச்சி, பர்மா, 1930, வங்கத்தின் அலிப்பூர் சாதி வழக்கு 1908 (இவர்களில் 34 பேர் 1909இல் அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள்). கதார் புரட்சியாளர்கள் இந்திய விடுதலைக்காக Kama Gata Maru என்னும் கப்பலில் நாடுகள் தோறும் சுற்றி 1914இல் கல்கத்தா வந்தார்கள், கைது செய்யப்பட்ட அவர்களும் அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள்.
8 2 1872 அன்று வைப்பர் தீவில் கைதிகளை பார்வையிட வந்த வைசிராய் ஆன Lord Mayo என்பவரை, வஹாபி போராளி Sher Ali கொன்றார். 11 3 1872 அன்று அலி தீவில் தூக்கில் இடப்பட்டார்.
மார்ச் 1868 அன்று தீவில் இருந்து தப்பிக்க முயன்று கடலில் பயணித்த 238 கைதிகள் ஏப்ரல் மாதம் பிடிபட்டார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொள்ள, 87 பேர் தூக்கில் இடப்பட்டார்கள்.
அதன் பின்பு ஏழு அலகுகளும் இரண்டு மாடிகளும் கொண்ட பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள் தப்பிக்க முடியாது, ஏனெனில் சுற்றிலும் கடல் அன்றி எதுவுமில்லை. அடைக்கப்பட்ட பின்னர் அவர்கள் சந்தித்த கொடுமைகள் எழுத முடியாதவை. கொடும் சித்ரவதை, சாட்டையடி, துப்பாக்கிச்சூடு, தூக்கு, இரும்பு செக்கில் எண்ணெய் எடுப்பது, தேங்காய் நாரில் கயிறு திரிப்பது, குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தால் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பது, எப்போதும் கழுத்து கைகள் கால்களில் சங்கிலி என்று கடும் தண்டனைகள்.
இரண்டாவது லாகூர் சதி வழக்கில் பகத்சிங் உடன் 16 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் 1931இல் தூக்கில் இடப்பட்டனர். யதீந்திர நாத் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். பட்டுகேஷ்வர் தத், பிஜோய் குமார் சின்ஹா, சிவ வர்மா, ஜெய்தேவ் கபூர், டாக்டர் கயா பிரசாத், கமல்நாத் திவாரி, மஹாவீர் சிங் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள்.
பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் நவ்ஜவான் பாரத் சபாவில் இயங்கிய மூவர் மஹாவீர் சிங், மொஹத் மொய்த்ரா, மோகன் கிசோர் நாமதாஸ். பகத்சிங், பட்டுகேஷ்வர் தத், துர்க்காவதி தேவி (பகவதி சரண் வோராவின் மனைவி) ஆகியோர் லாகூரில் இருந்து ரயிலில் தப்பிக்க உதவியவர் மஹாவீர் சிங், இரண்டாவது லாகூர் சதி வழக்கில் அவரும் சேர்க்கப்பட்டார். அவருடன் ஆயுத சட்ட வழக்கில் கைதான மொஹத் மொய்த்ரா, மோகன் கிசோர் ஆகியோரும் அந்தமானில் அடைக்கப்பட்டார்கள். உல்லாஸ்கர் தத் கொடும் சித்ரவதைக்கு ஆளாகி மனநிலை பிறழ்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டார், மருத்துவமனையில் 14 ஆண்டுகள் இருந்து மறைந்தார். இந்து பூஷன் ராய் எண்ணெய் பிழியும் கொடும் தண்டனையை தாங்க முடியாமல் தன் துணியை கிழித்து தூக்கிட்டு மடிந்தார்.
காகோரி ரயில் கொள்ளை (9 8 1925) போராளிகள், சிட்டகாங் ஆயுதகிடங்கு கொள்ளையில் ஈடுபட்ட யுகாந்தர் இயக்க தலைவர் மாஸ்டர் சூர்யா சென் ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டனர். சூர்யா சென் 13 1 1934இல் தூக்கில் இடப்பட்டார்.
சிறையின் கொடுமைகள், மனித உரிமைகள் மீறல், அரசியல் கைதிகளாக நடத்தாமல் அவமானப்படுத்துவது, மிக மோசமான தரமற்ற உணவு, செய்தித்தாள் வாசிக்கும் உரிமை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து 13 5 1933 முதல் 2 6 1933 வரை 46 நாட்கள் உண்ணாவிரதப் போர் நடத்தப்பட்டது. இங்கு கரை கடந்த இந்தியாவில் இப்போராட்டத்துக்கு மக்கள் திரண்டு ஆதரவு அளித்தார்கள். மஹாவீர் சிங், மொய்த்ரா, மோகன் கிசோர் ஆகியோருக்கு குழாய் மூலம் வலுக்கட்டாயமாக பால் செலுத்தப்பட்டதால் மூவரும் மரணமுற்றார்கள். பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் பயந்து ஓடினார்கள். மூவரின் உடலும் கடலில் வீசப்பட்டது.
சிறையின் இத்தனை கொடுமைகளையும் தாங்கியும் மீறியும் கம்யூனிஸ்டுகள் இயக்கவாதிகள் என்பதை மெய்ப்பித்தார்கள். 1935இல் 39 கைதிகள் சேர்ந்து சிறைக்குள்ளேயே Communist Consolidation என்ற அமைப்பை நிறுவினர், Call என்ற கையெழுத்து பத்திரிகையையும் நடத்தினர். அதே வருடம் சிறைக்குள் மே தினம் கொண்டாடினர்.
சிறையில் இருந்த மற்றவர்களில் அம்பிகா சக்ரவர்த்தி, கணேஷ் கோஷ், அனந்த் சிங், லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, ரன்தீர் தாஸ் குப்தா, ஃபகீர் சென், ஹரிகிருஷ்ண கோனார், பிப்ளபி துருபேஷ் சட்டோபாத்யாய, சுதாங்சு தாஸ் குப்தா, ஆனந்த சக்ரோவர்த்தி, நளினி தாஸ், ஜிபேந்திர தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விடுதலைக்குப் பின் இவர்களில் பலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில்) பல பொறுப்புகளில் பணியாற்றினார்கள்.
.... .... ...
அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஏறத்தாழ 350 தனித்தனி தீவுகளை கொண்டது. வடக்கு முனையில் இருந்து பர்மா, தாய்லாந்து நாடுகளுக்கும் தெற்கில் இப்போதுள்ள இந்திரா முனையில் இருந்து இந்தோனேசியாவுக்கும் 3-4 மணி நேரத்தில் அதிவேக விசைப்படகுகளில் சென்றுவிடலாம் என்று சொல்கின்றனர்.
சிறையின் உள்ளே உள்ள காட்சியகத்தில் சுமார் 10x6 அளவில் ஒருவரின் உருவப்படம் உள்ளது. அந்தமான் விமானநிலையத்துக்கு அவர் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது. நான் பார்த்தேன். அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்த சவர்க்கார். அவர் உருவப்படத்தைத்தான் அப்துல்கலாம் நாடாளுமன்றத்தில் திறந்து வைத்தார். அதே சிறை வளாகத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கில் இடப்படும் கொட்டடியும் உள்ளது, அதையும் பார்த்தேன்.
உருவப்படம் தேச துரோகியின் கதை சொல்ல, தூக்கு மேடையோ உருவமற்ற தியாகிகளின் வரலாற்றை பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றது.