என்னுரை
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் ஓலையிலே
சிட்டுக்குருவி பாடுது-தன்
பெட்டைத் துணையைத் தேடுது
சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செவப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங்கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்...
பள்ளி செல்லும் சிறுவனாக நான் இருந்த வயதில் இந்த
இரண்டு பாடல்களில் ஒன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும். எளிமையான சொற்கள், மிகக்குறைந்த பின்னணி இசைக் கருவிகள், பாடல் வரிகள் தெளிவாகப் புரிவது என பிற வழமையான பாடல்களில்
இருந்து ஒரு விதத்தில் வேறுபட்டு இருப்பது மட்டும் அந்த வயதில் புரிந்தும்
புரியாமலும் இருந்தது. சற்று வயது கூடும்போது பாடல் வரிகளுக்குள் கவனம் போனது.
பின்னர் சென்னை வந்து வேலையில் அமர்ந்தபின், தொடர்பாகத் தொழிற்சங்க இயக்கத்தில்
ஈடுபட்டபோது தொழிற்சங்கக் கூட்டங்கள், போராட்ட நாட்களில் ‘துடிக்கும் ரத்தம் பேசட்டும், துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்’, ‘மணப்பாறை மாடுகட்டி’,’சும்மா கெடந்த நெலத்தை கொத்தி’, ‘உண்மை ஒரு நாள் வெளியாகும் அதில் உள்ளங்கள் எல்லாம்
தெளிவாகும்’ ஆகிய பாடல்களை ஒலிபெருக்கியில்
ஒலிக்கச் செய்வோம். ‘உண்மை ஒரு நாள்...’ பாடல் கவர்ச்சிகரமான ஒரு ராணுவ அணிவகுப்பின் தாளகதியில்
இருப்பது புரிந்தது. அதாவது அந்தப் பாடலின் உட்கருத்தை உள்வாங்கி அதற்கொப்ப
மெட்டமைக்கப்பட்ட பாடல் என்பது புரிந்தது. இந்தப் பாடலும் தொடக்கத்தில்
சொல்லப்பட்ட இரண்டு பாடல்களும் ஒரே படத்தில் இடம் பெற்ற பாடல்கள் என்பதைத்
தெரிந்து கொண்டேன். ‘பாதை தெரியுது பார்’ என்ற படம்.
உடனடியாகத் தேடிப் பார்க்க அந்த நேரத்தில் இணையம் என்ற வசதி இருக்கவில்லை.
அப்படியே நாட்கள் கடந்தன.
1995 டிசம்பர் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள், சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம்(CLS)
பேராசிரியர் தயானந்தன் பிரான்சிஸ், சு.சமுத்திரம் ஆகியோரின்
முன்முயற்சியில் சென்னை மெமோரியல் ஹாலில் ‘மக்கள் இலக்கியமும் திறனாய்வுப்
போக்குகளும்’ என்ற கருப்பொருளில் மிகச் சிறப்பான கருத்தரங்கை
நடத்தியது. மூத்த பெருமக்கள் ஆன தி.க.சி., ச.செந்தில்நாதன், வல்லிக்கண்ணன், கந்தர்வன், திருப்பூர் கிருஷ்ணன், முகம்மாமணி, ஞானராஜசேகரன், டி.செல்வராஜ், செ.யோகநாதன் உள்ளிட்டோர் பங்கு பெற்றார்கள். முதல்நாள்
அமர்வுக்குத் தலைமை தாங்கிய தோழர்
கே.சி.எஸ்.அருணாச்சலம் கவிதைகள் குறித்து ஆய்வு செய்தார். “சின்னச்சின்ன மூக்குத்தியாம்... செவப்புக்கல்லு” பாடலைத் தனது உரையின் இறுதியில் பாடினார். அது அப்படத்தில்
அவரே எழுதிய பாடல் என்பதால் கேட்டு உணர்ச்சிவயப்பட்டவன் ஆனேன். அப்போதுதான் அந்தப்
பாடலும் முன்பு சொன்ன இரண்டு பாடல்களும் ‘பாதை தெரியுது பார்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றவை என்பதை உறுதி செய்து
கொண்டேன். மட்டுமின்றி கே.சி.எஸ்.அவர்கள் மிக அழகாகப் பாடும் திறன் கொண்டவர்
என்பதும் அவரது நண்பர்கள் அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள் என்பதும்
பின்னாட்களில் நான் தெரிந்து கொண்டவை.
2000 ஆகஸ்ட் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் லொயோலா கல்லூரி வளாகத்தில் பண்பாடு -
மக்கள் தொடர்பகம் ‘தமிழ்ப் பொதுவுடைமை இயக்கங்களும்
கலை இலக்கியப் போக்குகளும்’ என்ற கருப்பொருளில் ஆய்வரங்கம்
ஒன்றை நடத்தியது. இரண்டு நாள் நிகழ்ச்சிகளின் குறிப்புகள் இப்போதும் என்னிடம்
உள்ளன. தோழர்கள் ஆர். நல்லக்கண்ணு, அறந்தை நாராயணன், சி.மகேந்திரன், கே.வரதராஜன், பொன்னீலன், ச.தமிழ்ச்செல்வன், அ.குமரேசன், பேரா.ச.மாடசாமி, சு.சமுத்திரம், ச.ராஜநாயகம், ஸ்ரீரசா, ச.செந்தில்நாதன், பேரா.கே.ராஜு, பேரா.தி.சு.நடராஜன், சு.பொ.அகத்தியலிங்கம், ந.முத்துநிலவன் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டு உரையாற்றினர். அங்கேதான் அறந்தை நாராயணன் ‘காலம் மாறிப் போச்சு’,
‘தாமரைக்குளம்’, ‘பாண்டித்தேவன்’,
‘பாதை
தெரியுதுபார்’ ஆகிய படங்களைப் பற்றிப் பேசினார்.
இடதுசாரிகள் கூட்டாகப் பணமுதலீடு செய்து அப்படத்தை எடுத்த கதையைக் கூறினார்.
கேரளாவில் இருந்து திருச்சிக்கு வந்து பொன்மலை ரயில்வேயில் தொழிலாளியாக வேலை செய்த
கே.விஜயன், வங்கத்தில் இருந்து வந்த நிமாய்
கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரைப் பற்றிக் குறிப்பிடத்தக்க
விதத்தில் பேசினார்.
இது ஒரு புறம் இருக்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பாதை தெரியுதுபார், புதுவெள்ளம், மதனமாளிகை, தாகம் ஆகிய படங்களில் இருந்து பாடல்கள் தொடர்ந்து
ஒலிபரப்பப்பட்ட பழைய நினைவுகள் மேலெழும்புகின்றன. வெளிவராத திரைப்படம் ஆன ‘புதுச் செருப்பு கடிக்கும்’ படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய ‘சித்திரப் பூச்சேலை...’ பாடல் மீண்டும் நினைவில் தளும்ப
எழுகிறது. ஜெயகாந்தன் எழுதிய பாடல் அது ‘தாகம்’ படத்தில்
இடம் பெற்ற ‘வானமெங்கும் பரிதியின் ஜோதி...’ என்ற
பாரதியின் பாடலை கே.ஜே.யேசுதாஸ் தனது குரலால் காட்சிப் படுத்தும் அதிசயம்
விரிகிறது. 1999இல் கே.சி.எஸ்.அருணாச்சலம் அவர்கள்
மறைந்தபோது ‘பித்துப்பிடிச்சவன் என்று சொல்லி
என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும்’ என்று மெமோரியல் ஹாலில் அவரே பாடிய
நாள் நினைவுக்கு வந்து, கட்டுப்படுத்த முடியாமல் அழுதது
ஈரம் காயாமல் குளுமையாக நினைவில் உள்ளது.
யார் இந்த எம்.பி.சீனிவாசன்? எண்ணினால் இரண்டு கைகளிலும் மீதம் இரண்டு விரல்கள் மிஞ்சும், ஆம், தமிழில் எட்டே எட்டுப் படங்களுக்கு
மட்டும் இசையமைத்த அவர் யார்? அதற்கு முன்னும் அதன் பின்னும்
அவர் வரலாறு என்ன? தமிழ்ச் சினிமா இசையில் அல்லது
சினிமாத்துறையில் அவர் செய்த குறுக்கீடு என்ன? அவரது இடம் என்ன? சினிமா இசையுடன் அவரது எல்லை முடிவுற்றதா? இந்த நூலுக்கு ‘மக்களிசை மேதை’ என்ற தலைப்பை நான் சூட்டக் காரணம் என்ன?
இக்கேள்விகளுடன் தமிழ் நாட்டில் அவரைப் பற்றிய
தேடுதலை மேற்கொள்ளும் எவர் ஒருவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். 1991 ஆம் ஆண்டு அறந்தை நாராயணன் அவர்கள் எழுதி வெளியிட்ட சிறிய
நூல் ஒன்றைத்தவிர அவருக்கான தனிப்பட்ட வரலாற்று நூல் எதையும் தமிழ் இலக்கிய
உலகமும் சரி, தமிழ்ச் சினிமா வரலாற்றை அறிந்த
எவரும் சரி, இதுவரை எழுதவில்லை. அவர் காலத்தில்
வாழ்ந்த சமகால அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, அவரைப் பற்றி நன்கு அறிந்த, அவருடன் இசைத்துறையில் பணி செய்தவர்கள், அவரிடம் இசைகற்றுப் பிரபலமானவர்கள்
என யாரும் அவரைப் பற்றி எந்தப் பதிவும் செய்யவும் இல்லை, அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. அவர் இசைக் கலைஞர் மட்டுமே
அல்லர், ஓர் இடதுசாரித் தொழிற்சங்கவாதி, தென்னிந்தியச் சினிமாத்துறையில் முதலாவது தொழிற்சங்கத்தைத்
தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ்ப்பதிவு செய்தவர் என்ற வகையில் அவரால் பலன்
பெற்றவர்களும் கூட அவரைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர். சினிமா வரலாறு
பற்றி மிகக் கனமான நூல்களை எழுதித்தள்ளுவோரும் கூட எம்பிஎஸ் பற்றி அறியாதவர்களாக
இருப்பது யதார்த்தம். தியடோர் பாஸ்கரன், ஆர்.ஆர்.சீனிவாசன்,
அம்ஷன் குமார், ஷாஜி, வாமனன் போன்றோர் விதிவிலக்குகள். அவரைப் பற்றி அங்கும் இங்குமாய்ச் சில தகவல்கள் சிதறிக்
கிடக்கின்றன, அவ்வளவுதான்.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் இணையமும்
எம்.பி.சீனிவாசன் இசையமைத்த பாடல்களை நமக்குத் தருகின்றன என்பதில் ஐயமில்லை.
அதுவும் கூட 2005க்குப் பிறகுதான் சாத்தியமானது.
இந்தக் கட்டத்தில் அவரது மலையாளச் சினிமா பங்களிப்பு பற்றி அதிகமாக அறிந்து கொள்ள
முடிந்தது. இது அவர் குறித்த தேடுதல் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டவே செய்தது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏதோ ஒரு நாள் முகநூலில் எம்பிஎஸ் பற்றி ஒரு பதிவு
எழுத, அதை மறுநாளும் தொடர, சரி, தொடர்ந்து அவர் குறித்து எழுதினால் என்ன என்று இணையத்தில் தகவல்கள்
திரட்டினேன். இந்த நூலின் தொடக்கம் இப்படியாக அமைந்ததுதான். எனது பதிவைத்
தொடர்ந்து வாசித்த நண்பர்கள், அதனை மேலும் விரிவாக்கி நூல்
வடிவத்துக்குக் கொண்டு வந்தால் எம்.பி.எஸ். குறித்த பதிவாக காலத்துக்கும் நிலைத்து
நிற்கும் என்று என்னைத் தூண்டியதன் விளைவே இந்த நூல்.
ஓர் இசைமைப்பாளரை, இசைக்
கலைஞனை, அதுவும் திரைப்படத்தில் இசையமைத்த ஒருவரைப் பற்றிய வரலாற்றை
எழுதுவது எளிதான ஒன்றல்ல. இசை என்பது கேட்டுணரக் கூடியது. அதற்கான காலத்தையும், நேரத்தையும் தனியே அர்ப்பணிக்க வேண்டும். எனில் எம்பிஎஸ்
இசையமைத்த படங்களைப் பார்க்க வேண்டும். பாடல்களைத் தனியே கேட்க வேண்டும், பாடல்களைக் காட்சியுடனும் பார்க்க வேண்டும், அவரது சேர்ந்திசைப் பாடல்களையும் கேட்டுணர வேண்டும். நான்கு
வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பணி பலமணி நேரங்களை வேண்டி விரும்பி
விழுங்கியது. அன்றி, இசை, திரைப்பட
இசை, தமிழிசை சார்ந்த மிகப் பல நூல்களை வாசிக்க வேண்டிய அவசியம்
இருப்பதாக நான் உணர்ந்ததால் அதற்கான தேடங்களிலும் நூல்களை வாங்குவதிலும்
வாசிப்பதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டேன். வாசித்த நூல்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு
வகையில் உதவி செய்தன என்பதை ஒப்புக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பது இந்த
நூலைப் பொருத்தவரை முற்றிலும் உண்மை.
நூலாக்கும் முயற்சியைத் தொடங்கிய நாளில் இருந்து
தொடர்ந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கும் கமலாலயன், நா.வே.அருள், சரணா (பா.சந்திரசேகரன்), தெ.புகழேந்தி (பாவெல் சூரியன்), தனுஷ்கோடி இசக்கிமுத்து, கி.பாரி, எஸ்.மோசஸ்பிரபு, திருநின்றவூர் பகுதி
த.மு.எ.க.ச.நண்பர்கள், பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, மயிலை பாலு, விஜயசங்கர் ராமச்சந்திரன் (‘ஃபரண்ட்லைன்’ முன்னாள்
ஆசிரியர்), தனது இணையத்தளத்தில் சேகரித்து வைத்து இருந்த அரிய தகவல்களைப்
பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த எஸ்.விகாஸ் (காப்பாளர், www.mbsreenivasan.com), தஞ்சாவூர்க் கவிராயர், திரையிசை ஆய்வாளரும் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்த சில
லட்சம் இசைத்தட்டுக்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து வருபவரும் எழுத்தாளருமான திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், திரைப்படங்களைத் தாண்டி மிகப்புகழ் பெற்று விளங்கும் இசைக்
கலைஞர்கள் பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பன் கி.ராஜன், மலையாள மொழியில் கிடைத்த ஆதாரங்களை எனக்குப் புரியவைத்துத் தமிழாக்கம் செய்ய உதவிய அகமது நியாஸ்மோன், அம்ஷன்குமார், ஷாஜிசென், ச.தமிழ்ச்செல்வன், இசையமைப்பாளர் ரவிவிஸ்வநாதன், பேராசிரியர் போ.மணிவண்ணன், ஆய்வாளர் ஆர்.சுகுமாரன் (நீலகிரி) ஆகியோருக்கும், எனது நீண்டநாள் நண்பர் பரிசல் சிவசெந்தில்நாதன்
ஆகியோருக்கும், நூலின் வரவுக்காகக்
காத்திருப்பதாகத் தொடர்ந்து என்னிடம் உறவாடிக் கொண்டிருக்கும் முகநூல் நண்பர்களுக்கும்
எனது உளமார்ந்த நன்றி. இவர்கள் தவிர இணையதளத்தில் பல நூறு யூடியூப் சானல்களை
நடத்திக் கொண்டிருக்கும் முகமறியாத பல நூறு நண்பர்களுக்கும் பெரிதும் நன்றி
கூறுகிறேன். நீண்ட பல மாத உழைப்பிற்கு என்னுடன் பெரிதும் ஒத்துழைத்த என் மனைவி
ஆசியா, மகன் சாதத் ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றி.
எம்.பி.எஸ். அவர்களின் அன்புக்குரிய மாணவரும் சென்னை
இளைஞர் இசைக்குழு (இப்போது Madras MBS Choir)வின் முன்னாள் செயலாளரும் இன்னாள் கலை
இயக்குநரும் ஆன டி.ராமச்சந்திரன் அவர்களுக்கு நான் பெரிதும் நன்றிக் கடன்பட்டவனாக
இருக்கிறேன். வயதில் இளையவனான என்னிடம் அவர் காட்டும் அன்பும் மரியாதையும் என்னைப்
பெரிதும் நெகிழச் செய்கின்றன. உண்மையில் எம்பிஎஸ் அவர்களின் மகத்தான பணியைத்
தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் எம்.ஒய்.சி.யின் கலைஞர்கள்தாம்
என்று உறுதியாகச் சொல்ல முடியும். இவர்களிடம் இருந்து பெற்ற அரிய தகவல்கள் ஏராளம்.
எம்.பி.எஸ்ஸின் தந்தை பாலகிருஷ்ணனின் தம்பி
கல்யாணசுந்தரம். அவரது மகள் ஜெயந்தி எம்.ஒய்.சி.யின் தொடக்ககால உறுப்பினர். அவரைச்
சந்தித்த பின்னர்தான் எம்பிஎஸ்ஸின் முன்னோர் பற்றிய அரியதகவல்களைப் பெற முடிந்தது.
மிகப்பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பார்க்க முடிந்தது. இந்த நூலின்
முக்கியமான பதிவாக அவற்றைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜெயந்தி
இந்நூலுக்குச் சிறப்பான வாழ்த்துரையையும் வழங்கியுள்ளார். ஜெயந்தியின் கணவர்
ரமேஷும் எம்.ஒய்.சி.யின் மூத்த உறுப்பினரே. அவர்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த
நன்றி.
ஒரு நூலின் முகப்பு அட்டை என்பது நூலுக்குள் நுழைய
வாசகரை அழைக்கும் நுழைவாயில் ஆகும். முகப்பு அட்டையையும், நூலையும் அழகுறவும் சிறப்பாகவும் வடிவமைத்துள்ள தோழர் ஜீவமணி
பாலன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. இந்த நூலை விரைவில் முடிக்கத் தொடர்ந்து
என்னை உற்சாகப் படுத்திக்கொண்டே இருந்தார் அவர். எனது எழுத்தையும் வளர்ச்சியையும்
தொடர்ந்து கவனித்து என்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கும் மூத்த தோழர் கமலாலயன், இந்த நூலை வெகு சிறப்பாகச் செப்பனிட்டு அனைவரும்
வாசிக்கத்தக்க விதத்தில் இறுதி வடிவத்துக்குக் கொண்டு வந்துள்ளார். அவருக்குப்
பெரிதும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நூலைத் தட்டச்சு செய்து குறித்த
காலத்துக்குள் வெளிவர உதவிய ரேகா அவர்களுக்கும் நன்றி.
இங்கே ஒரு கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்ய
விரும்புகிறேன். இசையை ரசிப்பது என்பது ஒரு ரசிகனின் மனநிலை, கட்டற்ற சுதந்திரம் அந்த மனநிலைக்கு எப்போதும் உண்டு; இசையைப் பற்றி அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும்
முனைவது இந்த ரசிக மனநிலையைத் தாண்டியது, அதற்கு அப்பாற்பட்டது, எல்லைகளைத்
தாண்ட வேண்டும். சாய்மானம் இல்லாத, பாரபட்சம் அற்ற மனநிலை வேண்டும்.
ஒரு பாடலையோ இசைத்துணுக்கையோ அல்லது ஒரு
இசையமைப்பாளரின் திறனையோ மதிப்பிட வேண்டும் எனில் ரசிகமனநிலையைக் கடந்து செல்ல
வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். விருப்புவெறுப்பற்ற மனநிலைக்குச் செல்ல
வேண்டிய அவசியம் உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமம் அந்தக்
கிராமத்துக்காரருக்கு அழகுதான்; சற்றேவிலகிச் சென்று மலையின்
உச்சியில் ஏறி நின்று பார்க்கும் போது மலையைச் சுற்றி இருக்கும் பல நூறு கிராமங்களின் அழகும் தெரியும், தனது கிராமத்தில் அதுவரை தன் கண்களுக்குப் புலப்படாத பலவும் கூடத் தெரியலாம். அந்த மனநிலை கை கூடினால் அது அளிக்கும்
இன்பம் வேறானது, அந்தப் பரவசம் பாரபட்சம் இல்லாதது.
இந்த நூலை அப்படியான ஓர் இடத்தில்
இருந்துதான் நான் எழுதியுள்ளேன். வாசிப்போர் அதனை உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு
உள்ளது.
வாருங்கள், வாசிப்போம்,
எம் பி எஸ்
அழைக்கிறார்!
அன்புடன்,
மு.இக்பால் அகமது