இருண்ட காலத்தில் எதை பாடுவது?
இருளைப்பற்றித்தான்...
- பெர்டோல்ட் பிரெக்ட்
இசையின் அல்லது படைப்பின் அரசியலை இப்படி இரண்டு வரிகளில் வேறு யாரும் வரையறுத்தது இல்லை. இருளைப்பற்றி அல்ல, வெளிச்சத்துக்கான போராட்டம் பற்றி பாட சொல்கிறான் கவிஞன்.
ஜான் லென்னான், பாப் மார்லி, மைக்கேல் ஜாக்சன், எல்விஸ் பிரெஸ்லி என நீளும் இசைஞர்கள் தம் மண்ணின் அரசியலை தம் பாடல்களில் இசையில் பாடினார்கள், எழுதினார்கள். அது நிறவெறியை கண்டனம் செய்யும், இனவெறியை கண்டனம் செய்யும் அரசியலாய் இருந்தது. காசியஸ் க்ளே எதிராளியின் முகத்தில் விசையோடு வீசிய ஒவ்வொரு பஞ்ச்சிலும் நிறவெறிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கெடுபிடி அரசியலுக்கும் எதிரான ஆக்ரோஷமான இசை இருந்தது. முகமது அலியின் ஒவ்வொரு குத்திலும் செரினாவின் ஒவ்வொரு வாலியிலும் நிறவெறிக்கு எதிரான அரசியல் இருந்தது. கறுப்பின மக்களுக்கு எதிரான அரசியலின் குரல்வளையை நெறித்து குப்பையில் தள்ளும் அரசியல் இருந்தது.
இந்திய இசையில் பிராமணீயம் இருந்தது. அல்லது இந்திய இசை பிராமணீய அடையாளத்துடன் இருந்தது. பாடிய மொழியும் பாடியவர்களும் கேட்டவர்களும் அவ்வாறே. பிராமணர்கள் அல்லாத பிற சாதியினர், குறிப்பாக தலித் மக்களும் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்திய அல்லது அவரவர் மண் சார்ந்த இசையை கையில் எடுத்தபோது அந்த இசையில் பிராமணீய எதிர்ப்பும் சாதீய எதிர்ப்புணர்வும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலும் இருந்தது. தேவ பாஷையை புறம் தள்ளி அவரவர் மொழியில் பாட விரும்பிய அரசியல் இருந்தது. இது அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடவில்லை. மேல்சாதி ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடந்த இந்திய இசையில் ஓர் உடைப்பை ஏற்படுத்துவது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை.
... ...
தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்கள் நடுவர் என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டு செய்யும் அட்டகாசங்கள் அருவருப்பானவை, அப்பட்டமான பிற சாதி + தலித் மக்களுக்கு எதிரான அரசியல் கொண்டவை. பல நேரங்களில் இது பற்றி பதிவுகள் எழுதி இருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து வந்தேன்.
Zee டிவியில் இப்போது நடந்துகொண்டு இருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இதில் பெரிய உடைப்பை ஏற்படுத்தி உள்ளதை பார்க்கிறேன். சாமானிய உழைக்கும் மக்கள் குடும்பங்களில் இருந்து ரயிலுக்கும் பேருந்துக்கும் கூட டிக்கெட் எடுத்துவிட இயலாத பொருளாதார பின்னணி உள்ள குடும்பங்களில் இருந்து பிள்ளைகள் பாடுகிறார்கள். பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளின் இசை அறிவை நடுவர்கள் கொண்டாடுகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். இது உண்மையில் தொடருமே ஆனால் கொண்டாட வேண்டிய ஒன்றுதான்.
லுங்கி என்பது இஸ்லாமிய அடையாளம் என வரையறுக்கப்பட்ட இங்கேதான் இசுலாமியர் அல்லாத ஒரு இளைஞன் லுங்கி கட்டி வந்து பாடினான் என்பது இந்த மேடைகளின் திட்டவட்டமான அடையாளத்தில் மிகப்பெரிய உடைப்பை ஏற்படுத்தி உள்ளது என்று உறுதியாக நம்புகிறேன். இன்னும் கூட லுங்கிகள் ஆடை என்பதை காட்டிலும் அதில் இஸ்லாமிய அடையாளம் இருப்பதாக கருதி அருவருப்புடன் பார்க்கும் சாதியினரை நான் அறிவேன். ஆடையில் சாதி அடையாளம் தேடும் அரசியல்.
லுங்கி கட்டிய அந்த இளைஞன் 10 வயதில் தன் தந்தையை இழந்தவனாம். மீனவர் ஆன அவர் ஒருநாள் தொழிலுக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லையாம்.
வாழ்க zee! தொடர்க!
....
மேலே உள்ள பதிவை எழுதிய பின்னர்தான் இறுதிப்போட்டி நடந்தது. இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கில்மிஷா முதல் பரிசை வென்றாள். 2009, 10 காலத்தில் தன் தாய்மாமன் காணாமல்போனான் என்றாள். அவன் தாய், தகப்பன் இருவரும் அவன் வருவான் என்று கண்ணீர் விட்டு காத்திருக்கும் காணொலியை பார்த்தீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக