புதன், ஏப்ரல் 06, 2022

அவர்கள் தூக்கில் உயிரிழக்கவில்லை, சுடப்பட்டார்கள்

1931, மார்ச் 23

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் லாஹூர் மத்திய சிறையில் மார்ச் 24 அன்று காலையில் தூக்கில் இடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்பதுதான் தீர்ப்பு.
தீர்ப்பு சொல்லப்பட்ட நாள் 7 அக்டோபர் 1930. குற்றம்சாட்டப்பட்ட15 பேரில் 12 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அஜாய் குமார் கோஷ், சசீந்திரா நாத் சன்யால், தேஸ் ராஜ் மூவரும் விடுவிக்கப்பட்டனர். பிரேம் தத்துக்கு 5 ஆண்டுகள், குந்தன் லாலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை: கிஷோரிலால், மஹாபீர் சிங், பிஜோய் குமார் சின்கா, சிவ வர்மா, கயா பிரசாத், ஜெய்தேவ், கம்வால் நாத் திவாரி. மூவருக்கு தூக்கு தண்டனை.
வழக்கம் என்ன? காலையில் தூக்கில் இடப்படுவதே. ஆனால் வெளியே அறிவிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாள் மார்ச் 23 இரவு அவர்களை தூக்கில் இட்டது பிரிட்டிஷ் நிர்வாகம். அவர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, பிரிட்டிஷ் அரசு உடல்களை எரித்தது. சட்டப்படி தூக்கில் இறந்தவர்களின் உடல் பிரேத கூறாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதுவும் செய்யப்படவில்லை. ஏன்? அவர்கள் எரிக்கப்பட்ட இடம் எது? என்ன மாதிரியான 'இறுதிச்சடங்கு' செய்யப்பட்டது?
இந்த விவரங்களை வெளியுலகுக்கு சொன்னவர் பிரிட்டிஷ் ரகசிய போலீஸ் துறை ஏஜென்ட் ஆக இருந்த டாலிப் சிங் அலஹாபாதி Dalip Singh Allahabadi. அலஹாபாத்தில் இருந்த ஆனந்தபவனில் தோட்ட பராமரிப்பாளர் பணியில் இருந்தவர். சைமன் கமிஷனுக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்திக்கொண்டு இருந்த ஜவஹர்லால் நேருவை கன்னத்தில் அறைந்த 'பெருமைக்கு' உரியவர்.
Some hidden facts : Martyrdom of Shaheed Bhagat Singh என்ற நூலின் ஆசிரியர்கள் இருவர். ஒருவர் குல்வந்த் சிங் கூனர், மற்றவர்G S சிந்த்ரா. டாலிப் சிங் அலஹாபாதியின் தத்து மகனே குல்வந்த் சிங். அலஹாபாதி 1986இல் காலமானார்.
1975, எமர்ஜென்சி காலம். பகத் சிங் உள்ளிட்ட மூன்று பெரும்தியாகிகளின் சிறை வரலாற்றை குல்வந்த் தொகுத்து வைத்து இருந்துள்ளார். நூலாக வெளியிடவும் எண்ணியுள்ளார். அவரது சொந்த தந்தையோ நூலாக வெளியிடுவதில் ஆபத்து நேரும் என்று கருதி ஒரு நாடகம் ஆடியுள்ளார். அதாவது யாரோ ஒரு பதிப்பாளர் இவற்றை நூலாக வெளியிட விரும்புவதாகவும் கையெழுத்துப்பிரதியை பார்க்கவிரும்புவதாகவும் சொல்லி குல்வந்த்திடம் இருந்து பிரதியை வாங்கி அழித்துவிட்டாராம்.
சொந்த தந்தை 1992இல் காலமாகிவிட, அழிக்கப் பட்ட பிரதியின் தகவல்களை தன் நினைவில் இருந்து மீட்டு தொகுக்க எண்ணியுள்ளார் குலவந்த். மேலும் அலஹாபாதியின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும் கூட திட்டமிட்டாராம். ஆனால் அவர் கூறியதை யாரும் பொருட்படுத்தவில்லை. ஹோமியோபதி மருத்துவர் ஆன ஜி எஸ் சிந்த்ராவை சந்தித்து இது பற்றி உரையாடிய பின், லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் அலஹாபாதி கூறியதன் அடிப்படையில் மேலதிக தகவல்களை திரட்டியுள்ளார் சிந்த்ரா.
இருவரது ஆய்வும் அலஹாபாதி கூறியவற்றை உறுதி செய்தன. மூவரின் மரணமும் ஆபரேஷன் ட்ரோஜன் ஹார்ஸ் Operation Trojan Horse என்று பெயரிடப்பட்ட ரகசிய சதித்திட்டத்தால் நிறைவேற்றப்பட்டது. சிறையில் மூவரையும் தூக்கில் இட்ட பின் கழுத்து எலும்பு உடைப்பட்ட நிலையில் அரைகுறை மயக்க நிலையில் இருந்தபோதே தூக்கில் இருந்து உடல்களை இறக்கி விறகுகள் ஏற்றப்பட்ட ஒரு லாரியில் ஏற்றி லாஹூர் கண்டோன்மென்டுக்கு கொண்டு சென்று, அங்கே காத்திருந்த சாண்டர்சின் குடும்பத்தினரின் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர்.
1928 சைமன் கமிஷன் வரவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது முதுபெரும் தலைவர் லாலா லஜபதி ராயின் தலையிலும் உடம்பிலும் தடியால் தாக்கியவன் போலீஸ் சூப்பிரண்டெண்ட் ஜே ஏ ஸ்காட் என்பவன். தாக்குதலினால் ஆன காயங்கள் காரணமாக நவம்பர் 17 அன்று மரணமடைந்தார் ராய். கோபமுற்ற பகத்சிங்கும் தோழர்களும் பலி தீர்க்க எண்ணினர். பின்னர் நடத்திய தாக்குதலில் ஸ்காட் என்று எண்ணி ஜே பி சாண்டர்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை(பஞ்சாப் கவர்னரின் தனி உதவியாளர்) தவறுதலாக சுட்டு கொன்றார் பகத்சிங். இதுவே லாஹூர் சதிவழக்கு. ஏப்ரல் 8 1929 அன்று பகத்சிங் கைது செய்யப்பட்டார். 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மூவரின் கொலை சதிக்கு ஒப்புதல் அளித்தவர் வைஸ்ராய் இர்வின் பிரபு.
பகல் நேரத்தில் இந்த தூக்கு தண்டனை சதித்திட்டம் நிறைவேற்றப்படும் எனில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். எனவே 24 அன்று காலை நிறைவேற்ற பட இருந்த தண்டனையை முதல் நாள் இரவு 7.30 மணிக்கே செய்தனர்.
சாண்டர்ஸ் குடும்பத்தினர் சுட்டுக்கொன்ற பின், லாகூரில் இருந்து ஆறு மைல் தொலைவில் பியாஸ் நதியின் வலது கரையில் சட்லெஜ் நதி சந்திக்கும் இடத்தில் ஒரு மண்சாலையில் மூவரின் உடல்களும் எரிக்கப்பட்டன. மக்களை திசை திருப்பும் வண்ணம் சிறிது உடலின் சதையும் எலும்புகளும் எடுத்துச்செல்லப்பட்டு ஹுசேனிவாலா அருகே சட்லெஜ் நதியின் மேற்கு கரையில் எரிக்கப்பட்டன.
இவ்வளவும் நடந்தபின், திட்டமிட்டபடி பிரிட்டிஷ் அதிகாரிகள் இரண்டு இந்திய உளவாளிகளை லாஹூர் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து உரையாட அனுப்பினார்கள். அதாவது கண்டா சிங் வாலாவில் Ganda Singh wala யாரோ சிலரின் ஈமச்சடங்கை தொலைவில் இருந்து பார்த்ததாகவும் பெரிய அளவில் தீ எரிந்ததாகவும் காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் கூறினார்கள்.
இவர்கள் சொன்னதை உண்மை என்று நம்பி ஒரு கூட்டம் அந்த இடத்துக்கு சென்றது. அவர்களில் பகத்சிங்கின் சகோதரி பீபி அமர் கவுரும் ஒருவர். அங்கே புதைக்கப்பட்டு இருந்த சதை, பாதி எரிந்த நிலையில் இருந்த எலும்புகளை கண்டு எடுக்கின்றனர். இவற்றில் எரியாத நிலையில் இருந்த நீண்ட எலும்பு ஒன்றும் இருந்தது, மூவரில் உயரமானவர் ஆன பகத்சிங்கின் எலும்பாக இருக்கலாம் என்று அவர்கள் நம்பினார்கள். மிச்சமான உடல் பாகங்களை எடுத்துக்கொண்டு லாஹூரின் ராவி நதிக்கரையில் பெரும் மரியாதையுடன் கண்ணீர் மல்க புரட்சி முழக்கங்களுடன் நல்லடக்கம் செய்தார்கள்.
மற்றொரு தகவல் படி, தூக்கில் இருந்து இறக்கப்பட்ட பகத்சிங்குக்கு சற்றே நினைவு திரும்புகின்றது. சாண்டர்சின் மாமனார் துப்பாக்கியால் மூவரின் தலையிலும் மார்பிலும் சுடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய பிரிட்டிஷ் அரசியல் துறை சி ஐ டி போலீஸ் சூப்பிரண்டெண்ட் ஆக இருந்த V N Smith என்பவர் எழுதிய the Saunders murder case என்ற குறிப்பேடு
லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் மைக்ரோ பிலிம் ஆக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஸ்மித் எழுதுகிறார்:".....இரவு 7 மணிக்கெல்லாம் சிறையினுள் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் வெளிப்பட்டது, அதாவது மூவரையும் தூக்கிலிடும் நேரம் வந்துவிட்டது என உணர்த்தும் அடையாளமாக அது இருந்தது.... இவர்களை தூக்கில் இட்டவரையும் உடனடியாக போலீஸ் கொன்றது. தூக்கில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக கிடத்தி வைக்கப்படும் அறையில்தான் அவரை கொன்றார்கள். மயக்க நிலையில் இருந்த மூவரும் கொண்டு செல்லப்பட்ட லாரியில்தான் அவரது உடலும் கொண்டுசெல்லப்பட்டது.
ஆதாரம்: Some hidden facts : Martyrdom of Shaheed Bhagat Singh, K S Kooner, Dr.G S Sindhra, Unistar Books, Chandigarh.

(தோழர் ஆதவன் தீட்சண்யாவின் நேர்காணல் ஒன்றை வாசித்தபின் தேடி கிடைத்த நூல் இது. அவருக்கு நன்றி. பகத்சிங் குறித்த பல நூல்களை Unistar வெளியிட்டுள்ளார்கள்).
... ... ...

பகத்சிங்கையும் தோழர்களையும் தவறாக வழிநடத்தப்பட்ட தேச பக்தர்கள் என்பார் காந்தி. உண்மையோ பொய்யோ, பகத்சிங் அதுவரை தேசம் கண்டிடாத ஒரு புதிய தத்துவார்த்த பாதையை வடிவமைத்தார் என்பது முற்றிலும் உண்மை. அதுகாலம் வரையிலும், இந்தியபுரட்சியாளர்கள் முதலாளித்துவம், காலனியவாதம் ஆகிய இரட்டை தீங்குகளை மற்றுமே நிராகரித்து வந்த நிலையில், மற்றுமொரு மோசமான அடக்குமுறை வடிவத்தையும் சேர்த்து நிராகரித்தார் பகத்சிங், அதுதான் சாதியம். முதலாளித்துவத்துடன் சாதியத்தை இணைத்து அடையாளம் கண்டதில்தான் இதர புரட்சியாளர்களில் இருந்து பகத்சிங் தனியாக தெரிகின்றார். பலருக்கு அவரது இந்த வாதம் புரிபடாமல் போயிருக்கலாம்.
பல தத்துவங்களை பயின்றவர் அவர். தன் செயல்பாடுகளில் அவற்றை ஒன்றிணைத்து பரிசோதித்து பார்த்தவர். பல நேரங்களில் மார்க்சியம், பல நேரங்களில் அரசு மறுப்பியவாதம் Anarchism.
லாஹூரின் நேஷனல் காலேஜில் இருந்து வெளியேறி அரசியல் நடவடிக்கைகளில் இறங்க முடிவு செய்த போது அவரது வயது 17. மற்றவர்கள் வெற்றி பெற இயலாதபோது, 23 வயதில் அவரால் (அரசியல் தெளிவு என்ற நிலையில்) எப்படி வெற்றி பெற முடிந்தது? வாசிப்பு! அவரது அரசியல் தெளிவு, சிறையினுள் தொடர்ந்த வாசிப்பின் மூலம் சாத்தியம் ஆனது. ஆகவேதான் அந்த இளம் வயதில் இந்திய புரட்சியாளர்களில் அவர் பெரிய அறிவாளியாக ஒளிர்ந்தார்.
அவருடன் லாஹூர் மத்திய சிறைச்சாலையில் இருந்த சகதோழர் சிவ வர்மா சொல்வார்: "சிறைக்குள் புகுந்த முதல் நாளில் இருந்தே வாசிப்பதற்கு எங்களுக்கு நூல்கள் எளிதில் கிடைத்தன, வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஏற்ற சாதகமான சூழலும் அங்கே நிலவியது. தத்துவார்த்த, சமூகவியல் விவாதங்களில் நாங்கள் ஏற்கனவே ஈடுப்பட்டுக்கொண்டிருந்தோம் என்றாலும் பகத்சிங் வந்து சேர்ந்த பின் சூழல் மேலும் உயிர்ப்பு அடைந்தது. ஆக, எந்த ஒரு விவாதமும் இல்லாமல், எந்த ஒரு விடயத்தையும் ஆழமாக விவாதிக்காமல் ஒரு நாளும் கடந்ததில்லை. பலதரப்பட்ட நூல்களை நாங்கள் வாசிப்போம், மார்க்சியம், சோவியத் ரஷ்யாவில் காணப்படும் முன்னேற்றம், ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி, சீன ஜப்பான் பிரச்சினை, சர்வதேச ஒருங்கமைப்பு League of Nations கண்ட தோல்வி, மீரட் சதிவழக்கு, தொழிலாளர்கள் போராட்டம், இந்திய முதலாளித்துவத்தின் பாத்திரம், காங்கிரஸ் கட்சியின் கொள்கை, லாஹூர் காங்கிரஸ் மாநாட்டில் அதன் அரசியல் லட்சியம் குறித்த கேள்வியில் ஏதேனும் மாற்றம் வருவதற்கான சாத்தியம் உண்டா ....இப்படி."
ஆக, தன் அறிவின் அகலத்தையும் ஆழத்தையும் விசாலமாக்குவதற்கான சாத்தியங்களை முனைந்து உருவாக்கியதில் காந்தி தன் வாழ்நாளில் செய்ததை விடவும் அவர் அதிகமாகவே செய்தார். வாஷிங்டன், கரிபால்டி, லஃபாயத், லெனின் போன்ற புரட்சியாளர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து கவனித்து வந்தார். இந்தியப்புரட்சி வரலாற்றில் அவர்தான் உச்சத்தில் இருந்த பகுத்தறிவு சிந்தனையாளர். விடுதலைபோராட்ட களத்தின் கொதிகலன்களாக விளங்கிய லியால்பூர் Lyallpur, லாஹூர் ஆகிய நகரங்களில் தன் இளமைக்காலத்தை தொடங்கிய பகத்சிங்கின் அரசியல் புரிதலானது அவர் தொடர்ந்து வாசித்த மிகப்பரந்த சர்வதேச புரட்சிகர இலக்கியங்களால் மெருகேறியது, செம்மை அடைந்தது. அவர் அவற்றுள் தம்மை மூழ்கடித்துக்கொண்டார்.
மார்க்ஸ், எங்கெல்ஸ், ட்ராட்ஸ்கி ஆகியோரை மட்டுமல்ல, தாமஸ் பெயின், அப்டான் சிங்க்ளேர், மோரிஸ் ஹில்கிட் Morris Hillquit, ஜாக் லண்டன், விக்டர் ஹுயூகோ, தொஸ்தொயெவ்ஸ்கி, ஸ்பிநோசா Spinoza, பெர்ட்ரான்ட் ரசல் ஆகியோரையும் வாசித்தார். ஜான் ஸ்டூவர்ட் மில், தாமஸ் ஜெபர்சன், காவுட்ஸ்கி, புகாரின், Burke, லெனின், Thomas d'Aquin, டாண்டன், ஒமர் கயாம், தாகூர், N A Morozov, Herbert Spencer, Henry Maine, ரூஸோ ஆகியோரின் செவ்வியல் படைப்புகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஏழு வருடங்களில் 130 ஆவணங்களுக்கு மேல் அவர் எழுதினார், அவை 400 பக்கங்களுக்கு மேல் இருக்கும். 50 கடிதங்கள், நீதிமன்றம் சார்ந்த அறிக்கைகள், பிரசுரங்கள், கட்டுரைகள், ஓவியங்கள் என அவர் எழுதியது நிறைய. பலவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் 716 நாட்கள் சிறையில் இருந்தார் என்பதும் அவற்றில் 167 நாட்கள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவர் தன் வாசிப்பை கைவிடவில்லை, இறுதிநாள் வரையிலும் வாசித்தார். அவரது வழக்கறிஞர் பிரேம் நாத் மேத்தா இறுதியாக அவரை சந்திக்க சென்றபோது தான் வாசிக்க கேட்டிருந்த the revolutionary Lenin என்கிற நூலை கொண்டு வந்துள்ளீர்களா என்று கேட்கின்றார். கையோடு கொண்டு சென்ற அந்த நூலை மேத்தா அவரிடம் கொடுத்த உடனேயே அதை வாசிக்க தொடங்கி விட்டார் பகத்சிங், இந்த உலகத்தில் தான் வாழப்போவது இன்னும் சில மணி நேரமே அல்லவா?
இந்த மாபெரும் புரட்சியாளர்களை அவர்களது அரசியல் நடவடிக்கைகளின் பொருட்டு கொன்றும் தூக்கில் இட்டும் உயிரைப்போக்காமல் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்திருந்தால், தம்மை தாமே செதுக்கிக்கொண்டு வாழ்ந்த இந்த சுயம்புகளும் அறிவாளிகளும் மைய அரசின் அதிகாரத்தில் தமக்கான இடத்தில் அமர்ந்து இருந்திருந்தால் இந்தியா என்ற நாடு இப்போது எப்படி இருந்திருக்கும் என்று ஒருவர் ஏக்கத்துடன் எண்ணிப்பார்ப்பதை தவிர்க்க இயலாது. பகத்சிங் மறைந்து 90 வருடங்கள் ஆன இன்றைய நிலையில் முன் எப்போதையும் விட இந்த கேள்வி வலிமையாகவே எழுகின்றது.
....
The execution of Bhagat Singh - Legal heresies of the Raj என்ற நூலில் ஆசிரியர்
Satvinder Singh Juss தன் முன்னுரையில் குறிப்பிடுவது.

தமிழில்: மு இக்பால் அகமது

கருத்துகள் இல்லை: