"கவிதை ஒரு தொழில்" - பாப்லோ நெரூடா.
...
1934இல் சிலியின் தூதுவராக ஸ்பெயின் நாட்டுக்கு நியமிக்கப்பட்டார் நெரூடா. ஸ்பெயினின் ஆட்சியை கைப்பற்றிய தளபதி ஃப்ராங்கோவுக்கு எதிராக புரட்சிகர சக்திகள் கிளர்ந்து எழுகின்றன. உள்நாட்டுப் போர் வெடிக்க, பல்லாயிரம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அழகு, பிரபஞ்சம் பற்றி கவிதைகள் எழுதிக்கொண்டு இருந்த நெரூடா அப்போது மக்களை நோக்கிப் பாடத் தொடங்குகின்றான். தூதுவராக இருந்த ஒருவர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட விந்தை நிகழ்ந்தது. பிறகு என்ன? அவர் தூதுவர் பதவியை இழக்கின்றார்.
கியூபாவின் அமைச்சர்களில் ஒருவர், மத்திய வங்கியின் தலைவர் ஆகிய உயர்ந்த பொறுப்புகளில் இருந்த சே, அனைத்தையும் துறந்து பொலிவிய நாட்டின் விடுதலைக்காக போராடப் போவதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் தன் தோழன் காஸ்ட்ரோவுக்கு ஒரு துண்டுத்தாளில் எழுதி வைத்துவிட்டு செல்கின்றான். பொலிவிய மக்களின் விடுதலையின் பொருட்டு பொலிவியக் காடு ஒன்றில் உயிரை தத்தம் செயகின்றான். அவன் பிறந்ததோ அர்ஜன்டினாவில். அர்ஜென்டினா கியூபா பொலிவியா!
இருவருக்கும் ஆன பொதுவான உணர்வாக நான் புரிந்துகொண்டது இதுதான் - மானிட சமூகத்தின் விடுதலை உணர்வும் சக மனிதனின் மீதான பேரன்பும். இந்த உணர்வு சர்வதேச எல்லைகளை உடைக்கின்றது, இனம், மதம், மொழி, நாடு ஆகிய கற்பிதங்களை கலைத்து அழிக்கின்றது.
உலகின் தேவை உயிர்நேயம் என்று முரசு கொட்டும் இ. தனுஷ்கோடியின் கவிதைகளில் ஒளிர்வதும் இந்த உயரிய கோட்பாடுகளே.
...
இக்கவிதைகள் உண்மையை உரக்கப் பேசுகின்றன, அன்பையும் மனித நேயத்தையும் அடுத்தவர் பசிப்பிணி போக்கும் அணையா பெரும்அடுப்பைப் பற்றியும் பேசுகின்றன. ஆரியர் படையெடுப்பையும் சூழ்ச்சியையும் தயக்கமின்றி பேசுகின்றன. காதலைப் பற்றிப் பேசும்போது சாதி மறுப்பை பேசுகின்றன. மொழி, தமிழ், தமிழர்களின் உயரிய நாகரிகம், ஆரியத்தின் தலையீட்டால் நாம் இழந்தவை என்ன என்பதை சொல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கின்றன.
ஆரியம் என்னவெல்லாம் செய்யும்? ஆரியம் சாதி செய்யும், பிரிவினை செய்யும், மனிதர்களை பிரிக்கும், தீண்டாமையை போற்றும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சமஸ்கிருதத்தை உயர்த்தும், பிற மொழிகளை, குறிப்பாக திராவிட மொழிகளை அழிக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்டான் அடிமை சமூகத்தை நிலப்பிரபுத்துவ அமைப்பை பாதுகாக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்யும். கொல்லாமையை போதித்துக்கொண்டே வீதியெங்கும் ரத்த ஆற்றை ஓடவிடும். இவற்றை அப்பட்டமாக காட்டும் கவிதைகள் இவை.
பசியால் வாடும் வறியோரின் துன்பம் நீக்கிட சாதி மத பொருளாதார பேதமற்ற எல்லோருக்கும் ஓருணவு, எல்லோரும் ஓர் நிறை என்ற வள்ளலாரின் பாதையை உண்மையில் பொதுவுடைமை தத்துவத்தின் ஆன்மிக வடிவமாக பார்க்கின்றேன். சக மனிதனை தொடவும் நெருங்கவும் அனுமதிக்காத ஆரியத்துக்கு நேர் எதிரானஅவரது தத்துவமும் பொதுவுடைமை தத்துவமும் சந்திக்கும் புள்ளி இதுதான்.
ஒரு காலத்தில் யாகம் என்ற பெயரால் விலங்குகளை பலியிட்டு தீயில் வாட்டி தின்று கொழுத்த ஆரியம்தான் இப்போது புலால் உண்ணுவதை மறுக்கின்றது, ஆனால் கொல்லாமையை போதிக்கும், அணையா பெரும் அடுப்பை ஏற்றி பசிப்பிணி போக்கும் வள்ளலாரை ஏற்க மறுக்கின்றது எனில், அதில் பட்டவர்த்தனமாக தெரிவது சாதி என்னும் பிரிவினைதானே? வள்ளலாரின்அடுப்பில் ஜொலிப்பது கருணையும் பேரன்பும், ஆரியம் தன் கைகளில் ஏந்தியிருப்பது அடுத்தவர் உயிர் பறிக்கும் கொடுங்கொள்ளி.
ஆரியத்தால் முயன்றும் வீழாத தமிழைக்காக்க தமிழ்மக்கள் திரள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கவிஞர் எழுப்புகின்றார். தமிழ் மண்ணில் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரமும் திருவாசகமும் பாட முடியவில்லை, அறுநூறு தீட்சிதர்கள் ஆறு கோடி தமிழ் மக்களுக்கு சவால் விடுக்கின்றார்கள்! உண்மைதானே?
உழைப்பையும் விவசாயத்தையும் மதிக்காத ஆரியம்தான் விவசாய மறுசீரமைப்பு என்ற பெயரில் விவசாயத்தையும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றி ஆரியப்பெருமுதலாளிகளின் கஜானாவை நிரப்ப சட்டங்களை இயற்றுகின்றது. டெல்லியின் எல்லைகளில் தீயெனப் பற்றிய விவசாயிகள் போரை பெரும் புரட்சி எனப்பாடும் கவிஞர், இறைவன்தான் விவசாயி என்று சங்கநாதம் செய்வதை மறுப்பதற்கில்லை.
மரங்களை அழிப்பதும் மலைகளை மாய்ப்பதும் வளர்ச்சி என்ற பெயரால் வனம் அழிக்கும் சட்டங்களை இயற்றுவதும் யாருடைய நலன் பொருட்டு? அம்பானி, மிட்டல், அதானி போன்ற ஆரிய கும்பல்களின் நலன் பொருட்டே என்பது உண்மைதானே? அழகும் அமைதியும் உயர் நாகரிகமும் பொருந்திய இலட்சத்தீவுகளை அழிப்பது குஜராத்தை சேர்ந்த மேல்சாதி பெருமுதலாளிகளின் நலன் பொருட்டே என்பதும் உண்மைதானே? பூமிதான் சாமி என்று கவிஞர் சொல்வது முற்றிலும் உண்மை. ஆரியமோ கடவுளை காவு வாங்குகின்றது.
நம் வீட்டு அனிதாக்கள் உள்நாட்டில் மருத்துவம் படிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மூடுகின்ற, அரசுப்பள்ளிகளை மூடுகின்ற, அரசு நிறுவனங்களை, தொழிற்சாலைகளை மூடுகின்ற, நிரந்தர தொழிலாளர்கள் என்ற கோடிக்கால் பூதத்தின் விரல்களை முறிக்கின்ற ஒன்றிய அரசுதான் கடல் கடந்து மருத்துவம் படிக்க செல்வோரைப் பார்த்து ஏகடியம் செய்கின்றது, ஒற்றை மனிதன் ஒருவன் பயணிக்க எட்டாயிரம் கோடி ரூபாய் செலவில் விமானம் வாங்கும் அரசுதான் பூஜ்ஜியதுக்கும் குறைவான பனிவெளியில் நடந்து செல்லுங்கள் என்று உக்ரெய்னில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்களுக்கு கட்டளை இடுகின்றது.
...
உழைத்துக்கிடைக்கும் ஓரிரண்டு ரூபாய்களும் மதுக்கடை என்னும் மலவாய் வழியே அரசு கஜானாவில் போய் விழும் கொடுமையை, குடிப்பழக்கத்தால் தந்தையை இழந்த பின் அரசுப்பள்ளியில் படித்து பின் அரசுப்பணியில் சேர்ந்தவரின் நியாயமான கோபத்தை தனுஷ்கோடி கவிதை ஆக்குகின்றார்.
கொரோனா பெருந்தொற்றின் பெயரால் மருந்து கம்பெனி மாஃபியா கூட்டம், அரசுகள் என்ற கூட்டணி அடிக்கும் கொள்ளையை கவலையுடன் பதிவு செய்கின்றார்.
மானுடம் பேணும் மான்பினில் வாழ்தல்
ஊனுடம்பெடுத்ததன் உரிமை பெற்றுணர்க என்று சொல்லும் கவிதையில் கொரோனாவுக்கு மட்டுமல்ல, சமூக ஏற்றத்தாழ்வு எனும் பெரும்பிணிக்கான அருமருந்தையும் கண்டறியும் திறன் உழைக்கும் வர்க்கத்துக்கே உண்டு உண்மையையும் சேர்த்தே சொல்வதை புரிந்துகொள்ள முடிகின்றது.
பெற்ற தாயே தாயில்லை,
பேணும் தாயும் பேரிறைவி என்று சொல்லும்போது பால்பேதத்தை உடைக்கின்றார்.
ஏற்றம் பெண்ணால் ஊற்றெடுக்கும், பெண்ணே வாழ்வின் ஆதாரம் என்றும் பெண்ணே தலைவியாவாள் என்றும் வலியுறுத்தும் கவிதையில், ஆதிப்பொதுவுடைமை சமூகத்தில் குலத்தின் தலைமை பெண்ணிடம் இருந்தது என்ற மானுடவியல் விஞ்ஞானம் மிளிர்கின்றது.
வெள்ளிகளோடு விழித்ததுண்டா என்று நம்மைப்பார்த்து கேள்வி கேட்கும் கவிஞர், ஆரியம் வகுத்த சோதிட மூடத்தனத்தை இகழ்கின்றார்.
இயற்கையை மதித்து செயற்கையை துரத்து என்று சொல்லும் கவிதை. இயற்கை முறை விவசாயம், வாழ்வு ஆகியவற்றை வலியுறுத்தி பேசுவதை, இயற்கைக்கும் விஞ்ஞான வளர்ச்சி, அதன் பயன்பாடு ஆகியவற்றுக்கும் இடையே ஒரு சமநிலையும் முரண்பாடு அற்ற வளர்ச்சியும் வேண்டும் என்று சொல்வதாகவே புரிந்துகொள்கின்றேன்.
...
வாழ்வே கவிதை, கவிதையாய் வாழ் என்று புதுமை பேசி அழைக்கின்றார்.
வேறு எந்த மொழிக்கும் இல்லா பெருஞ்சிறப்பு மூத்த மொழியாம் தமிழுக்கு உண்டு, இயல் இசை நாடகம் என மொழியே மூன்று அடிப்படை வடிவங்களாய் இருப்பது வேறென்ன?
காடெல்லாம் பூ மணம் என்பது போல இந்த நூல் எல்லாம் தமிழ் மணம்! சொல்நயமும் சந்தநயமும் ஓசை நயமும் அளவோடு கச்சிதமாக பொருந்த, வாசிப்போருக்கு தடையற்ற வாசிப்பு இன்பத்தை தரும் இந்த மரபுக்கவிதைகள் கவிஞரின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையையும் வாழ்வியல் அனுபவத்தையும் தெள்ளென பறை சாற்றுகின்றன. எளிய சொற்களால் கட்டப்பட்ட, எளிதில் பிரித்து உணர்ந்து கொள்ளத்தக்க சொற்கோவை கொண்ட கவிதைகள் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
"எது நல்ல கவிதை என்பதை எவரும் தெளிவாக விளக்கிவிடவில்லை, அப்படி எளிதில் விளக்க முடியாதது கவிதை.... வெறும் உணர்ச்சிப்பெருக்கு மட்டுமே கவிதை ஆகி விடாது. படிப்பவரின் அறிவையும் தர்க்க புத்தியையும் கூடத் தொட வேண்டும். தான் வாழும் காலத்தைப்பற்றியும் சமூகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் கவிஞன் கொள்கின்ற பார்வையை கவிதை எடுத்துக்காட்டுகின்றது. சமூகத்தில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளிடையே மனச்சாட்சியின் குரலாக ஒரு கவிஞனின் வார்த்தைகளே ஒலிக்க முடியும்" என்கிறார் வல்லிக்கண்ணன் (கவி, காலாண்டிதழ், நவம்பர் 14, 1991).
இந்த அளவுகோலை ஒப்புக்கொண்டால் தனுஷ்கோடி அவர்களின் இந்தக் கவிதைகள் வெற்றி பெறுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியும்.
புத்தகம் இல்லா வீடு
புதுமைகள் காண்பதில்லை
புத்தகம் துணையாய் கொள்க
புரிந்திடும் அகிலம் யாவும்
புத்தகம் ஒன்றே போதிமரம்...
இதுவும் இக்கவிதைகளில் ஒன்றே.
"பேசு,
இருக்கும் நேரம் குறைவு
குறைவுதான் எனினும் போதுமானது
உடல் அழிந்துபோகுமுன்
நாக்கு மரத்துப்போகுமுன்
பேசு
உண்மை இப்போதும் உயிருடன்தான் உள்ளது
சொல்
நீ சொல்லவேண்டியதைச் சொல்"
தெளிவாக சொல்லிவிட்டான் பெய்ஸ் அகமது பெய்ஸ்.
உலகின் தேவை உயிர் நேயம் என்ற இக்கவிதைத் தொகுப்பு உண்மையை சொல்கின்றது என்பதால் இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய போதிமரம்.
தனுஷ்கோடி அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!
மு. இக்பால் அகமது,
5.3.2022
...
(உலகின் தேவை உயிர்நேயம், இ தனுஷ்கோடி அவர்களின் கவிதைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய அணிந்துரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக