சனி, அக்டோபர் 30, 2021

நன்மாறனும் பிற தோழர்களும் நமக்கு உணர்த்துவது என்ன?


திருக்குறளும் சித்தர்கள் பாடல்களும் இல்லாமல் அவரது உரையாடலோ மேடைப்பேச்சோ நிறைவு பெற்றதாக எனக்கு நினைவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து எங்கிருந்தோ ஒரு பாடல் வரியை திடீரென மேற்கோள் காட்டுவார், நமக்கு வியப்பாக இருக்கும். 'மனுசன் இதையெல்லாம் எப்படித்தான் ஞாபகம் வைத்திருக்கின்றாரோ!'

ஒரு யூடியூப் சானல் நேர்காணல். நாடெங்கும் பேசப்பட்ட அவரது 2020 நவம்பர் 20 ரூபாய் ஆட்டோ பயணத்தின் பின் நடந்தது. 'சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட பார்ச்சுன், இன்னோவா என்று கார்களில் பறப்பதும் பல கோடி சொத்துக்கள் சேர்ப்பதும் நடைமுறை ஆன காலத்தில், இரண்டு முறை எம் எல் ஏ ஆக இருந்த நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றீர்கள், பேருந்தில் பயணம் செய்கின்றீர்கள்.... என்ற கேள்விக்கு நன்மாறன் இப்படி பதில் சொல்கின்றார்: 

சித்தர்கள் எதன் மீதும் பற்றற்றவர்கள், உண்பது நாழி உடுப்பது முழம் என்று கூட சொல்ல மாட்டார்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள்.... எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் எத்தனை வீடு வாசல்கள் வைத்திருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 'போன' ஒரு மனிதனையாவது காட்ட முடியுமா? இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது, இதன் கோளாறுதான் அரசியல் வாழ்க்கையில் சம்பாதிப்பதும் 'செலவு செய்தால்தான் அரசியலுக்கு வர முடியும்'ங்கற கருத்தும்....

இவ்வாறு சொன்னவர், சித்தர்களின் பொருள் சார்ந்த பற்றற்ற வாழ்க்கை பற்றி குறிப்பிட்டு, சித்தர்கள் உண்பது நாழி.... என்று கூட சொல்ல மாட்டார்கள்  என்று முடிக்கின்றார். அப்பாடல் இது:

உண்பது நாழி! உடுப்பது நான்கு முழம்!

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமேதான்!

- ஒளவையாரின் நல்வழி

பொருள்: மனிதன் உண்பது ஒரு நாழி அளவே சோறுதான், உடுப்பதோ நான்கு முழத்துணி. ஆனால், மனதில் நிழலாகும் எண்ணங்கள் மட்டும் எண்பது கோடியாகப் பெருகி மனத்துன்பத்தைத் தருகின்றது. அகக்கண் குருடாக இருக்கின்ற மாந்தர்களின் குடிவாழ்க்கை ஆனது, தடம் மாறி கருத்தின்றி பயணித்தால், உள்ளதே போதும் என்ற மன அமைதி பெறாவிடில், எளிதில் உடைந்து விடும் மண் கலம் போலச் சாகும் வரை அவனுக்குத் துன்பமே அளிக்கும்!

... .... ....

கேட்பதற்கு இது ஏதோ ஆன்மிகவாதம் போல் முதல் பார்வையில் தோன்றக்கூடும். உண்மை அதுவல்ல.

உண்மையில் சித்தர்கள் பொருள்முதல்வாதிகள். ஆனால் தமக்கெனவும் எதிர்காலத்துக்கும் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்ளாத பெருந்தகைகள். இன்றிருப்பதை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு நாளைக் கழிப்பவர்கள். இந்த மனநிலை, தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சொத்தும் பொருளும் சேர்க்காத மனநிலை, தன்னலம் அற்ற கம்யூனிஸ்ட் மனநிலையன்றி வேறில்லை. அதுவே மறைந்த நன்மாறன் தன் காலம் நெடுகிலும், ஒரு சிறு பிரயத்தனமும் தனிப்பட்ட முயற்சியும் இன்றி, சாதாரணமாக கைக்கொண்டு இருந்த மனநிலையும் வாழ்க்கை நடைமுறையும்.

கேரளாவின் உயர்சாதி ஆன நம்பூதிரி வகுப்பில், பெரும் செல்வமிகு குடும்பத்தில் பிறந்தவர். பின்னர் அம்மாநில முதலமைச்சராக இருந்தவர். தனக்கு கிடைத்த குடும்ப  சொத்தின் பங்கு அனைத்தையும் கட்சிக்கு கொடுத்தவர் ஈ எம் எஸ் நம்பூதிரிப்பாட். அவரை நேர்காணல் கண்டு சுபமங்களாவில் எழுதினார் கோமல் சுவாமிநாதன். ஈ எம் எஸ் தேநீர் அருந்திய கோப்பையில் கீறல் விழுந்து இருந்தது என்று பதிவு செய்தார், வாசித்தது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது.

அவர் தந்தை ராமாயணத்துக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதியவர், செல்வந்தர். இவர் வழக்கறிஞர். மதுரையில் செல்வந்தர்கள் விளையாடும் 'கிளப்'பில் டென்னிஸ் விளையாடுவார். கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தது. அனைத்தையும் உதறிவிட்டு திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் படுத்தும் உண்டும் உறங்கியும் தங்கியும் அவர்களுக்கான உரிமைபோரில் முன்னால் நின்று களம் கண்டார். அநேகமாக அவர்கள் அனைவரும் தலித் சமூக மக்கள்தான். மாட்டுக்கறி உண்டார். அவர் அமிர்தலிங்கம் ஐயரின் மகனான பாலசுப்ரமணியம். கூடவே எஸ் ஏ தங்கராஜன் என்ற அதிசயப்பிறவி. இவர் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன், 'ஊறல் குழியில் இருந்து....'. எங்கேயாவது இரண்டு நாள் சேர்ந்தால்போல் நிம்மதியாக தூங்கியிருக்கின்றாரா என்று நூல் முழுக்க தேடினேன், இல்லவே இல்லை. போலீஸ் ஸ்டேசன், ஜெயில், தடியடி, கற்பனைக்கும் எட்டாத சித்ரவதைகள். திண்டுக்கல் பேகம்பூர் இவர்களால் தலை நிமிர்ந்து நிற்கின்றது.

கர்நாடகாவில் இருந்து வந்த பிராமணர் அவர். சிவப்பு நிற  மேனியர். கட்சியின் கட்டளை, தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தை கட்டுகின்றார். தமிழ் தெரியாது. அடித்தால் திருப்பி அடி என்று கற்றுக் கொடுக்கின்றார். மாமிசம் உண்டார், அந்த  மக்களுடன் தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டார் பி ஸ்ரீனிவாச ராவ்.

கேரளாவில் பிறந்த சிண்டன் கட்சியின் கட்டளையை ஏற்று தமிழ்நாடு வருகின்றார். பாரதிதாசன் அவருக்கு சிந்தன் என்று பெயர் சூட்டுகின்றார். சமூக விரோதிகளின் கத்திகுத்துக்கு ஆளாகின்றார், 30க்கும் மேற்பட்ட கத்திகுத்துக்கள். அதிசயம், உயிர் பிழைக்கின்றார். ஹோட்டல் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள் என அடிமட்ட தொழிலாளர்களுடன் வாழ்க்கையை பிணைத்துக் கொள்கின்றார்.

பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர், பார் அட் லா பட்டம் பெற்றவர், சி பா ஆதித்தனார் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர், தன் வாழ்நாளின் இறுதியில் சென்னை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் கே டி கே தங்கமணி. நான் முன்னுதாரணமாக இல்லை எனில் யார் இருப்பார் என்று மதுரை அரசுப்பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டவர் மாணவர் இயக்கத்தில் இருந்து வந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக இருந்த பி மோகன். வேட்டியை துவைத்து காயப்போட்டுள்ளேன், பொறுங்கள், கட்டிக்கொண்டு வருகின்றேன் என்று வாழ்ந்த ப ஜீவானந்தம். இப்போதும் வாழும் தியாக தீபங்கள் ஆன என் சங்கரய்யாவும் ஆர் நல்லக்கண்ணுவும்.

இவர்கள் சொந்த வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறு ஆக வாழ்ந்தார்கள் இல்லை. வீட்டுக்குள் ஒரு வாழ்க்கை, வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு வாழ்க்கை வாழவில்லை. தாம் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமைக் கொள்கையை தம் சொந்த வாழ்விலும் மிக சாதாரணமாக வெற்றிகரமாக கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர்கள், காட்டுகின்றார்கள்.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் இவர்கள் விட்டுச்செல்லும் செய்தியும் வாழ்க்கை நடைமுறையும் இதுவே. இது பாடம் அல்ல, வாழ்க்கையாக நாம் கைகொள்ள வேண்டியதும் பயில வேண்டியதும்.

.... ... .....

என் நன்மாறன் (13.5.1947 - 28.10.2021)



இரண்டு இருபது ரூபாய் தாள்களும் ஒற்றை செருப்பும்


2009இல் கொச்சியில் பணியில் இருந்தபோது சென்னை வருவதற்காக அதிகாலையிலேயே சென்று டட்கல் சீட்டு வாங்கிவிட்டு எர்ணாகுளம் வடக்கு ரயில்நிலையத்தை விட்டு வந்து மீண்டும் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தபோது ஒரு பெரியவர் எதிரே வந்து மிகுந்த தயக்கத்தோடு நின்றார். பார்த்தவுடன் தெரிந்தது தமிழர் என்று.  குளித்து சுத்தமாக தலைசீவி துவைத்த சட்டை கைலி கட்டி எதிரே நின்றார்.  வணங்கினார்.  நானும் தமிழன் என்று கண்டுகொண்டதால் இருக்கலாம்.  நானும் வணங்கி நின்று என்ன என்று பார்வையிலேயே வினவ, ‘பிள்ளைங்க சாப்பிடணும், ஒரு இருபது ரூபா கொடுங்கய்யா’ என்று மீண்டும் வணங்கினார்.  

அப்போதுதான் கண்டேன், சற்று தூரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் - பத்து வயதிற்குள் - ஒரு பெண்மணியும் நிற்க கண்டேன்.  அந்தப் பெண்ணோ மிகுந்த கூச்சத்துடன் தலை குனிந்தபடி நின்றிருந்தார்.  அவரும் குளித்து எண்ணெய் தேய்த்து படிய வாரி, குங்குமம் இட்டு, எளிய ஆனால் சுத்தமான ஆடை உடுத்தியிருந்தார்.  ‘எந்த ஊரு?’ என நான் கேட்க ‘திண்டுக்கல்’ என்றார் இவர். அடுத்து நான் கேட்கும் முன்னரே ‘கொத்தனார் வேலைக்கு வந்தேன், வர சொன்னவர போய் பாக்கணும், இப்போ காசு இல்ல, பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் கொடுக்கணும், ஒரு இருபது ரூபா மட்டும் கொடுங்கய்யா, இன்னைக்கு வேல குடுத்துடுவாங்க’ என பணிவுடன மூன்றாம் மனிதர் காதில் விழுந்து விடமால் கவனமான பேசினார்.  ஊரை விட்டு ஊர் பிழைக்க போகும் குடும்பங்கள் எல்லாம் நடு ராத்திரியில்தான் ஊரை காலி செய்கின்றார்கள் என்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். தென்காசியில் இருந்து ஒரு நாள் நள்ளிரவில் என் ஏழாவது வயதில் எங்கள் குடும்பமும் மதுரை நோக்கி பிழைப்புக்காக இடம் பெயர்ந்தது நினைவுக்கு வந்தது.

என் தகப்பனைப் போலவே கறுப்பு நிறத்தில் நின்று கொண்டு கேவலம் ஒரு இருபது ரூபாய்க்காக என்னை வணங்கி நின்ற கோலம் என் கண்களில் எந்த தயக்கமும் இன்றி நீரை வர வைத்தது.   கொச்சி என்ற எர்ணாகுளத்தின் காஸ்ட்லி முகத்தை புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையானது திண்டுக்கல்காரருக்கு இன்னும் காட்டவில்லை ஆதலால் ஒரு இருபது ரூபாயில் இரண்டு பிள்ளைகளுக்கும் காலை உணவு கொடுத்துவிட முடியும் என்று நம்பிய அந்த அப்பாவியை என்னென்று சொல்ல!  நான்கு பேருக்கும் ஓரளவு சாப்பிடமுடிகின்ற ஒரு தொகையை அவர் கையில் கொடுத்தபோது அவர் கையெடுத்து வணங்க, சகிக்க முடியாமல் தலை குனிந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

.... .... ....

2020 நவம்பர் 27. மதுரை அரசுப்பொதுமருத்துவமனை எதிரே கருப்பாயூரணி செல்ல பேருந்தில் ஏறிய முதியவரின் ஒரு கால் செருப்பு கீழே விழுந்துவிட, அதனை எடுக்க கீழே இறங்கிய போது பேருந்து போய் விடுகின்றது. அமெரிக்கன் கல்லூரி காம்பவுண்ட் சுவர் ஓரம் சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் ஒற்றை செருப்புடன் நடக்கும் முதியவரைப் பார்த்துவிட்டு, அவரிடம் விசாரிக்க முதியவர் நடந்ததை சொல்கின்றார். அவரை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு சைக்கிளில் வந்து தொலைந்த ஒற்றை செருப்பை மீட்டு வந்து அவரிடம் தருகின்றார். 

தற்செயலாக இதை பார்த்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், முதியவரிடம் எங்கே போக என்று விசாரிக்கின்றார். கருப்பாயூரணியில் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருகின்றார்கள், செல்ல வேண்டும் என்று முதியவர் சொல்ல, நான் கொண்டு சென்று விடுகின்றேன் என்று ஓட்டுநர் சொல்ல, என்னிடம் இருப்பது இருபது ரூபாய் மட்டுமே என்று இவர் சொல்ல, பரவாயில்லை, வாங்க, நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன் என்று முன்வந்து அவ்வாறே செய்கின்றார்.

இருபது ரூபாய் மட்டுமே பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் ஆட்டோவில் வந்தவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த என் நன்மாறன் என்று அறிந்து முகநூலில் திரு.பாண்டி பதிவு செய்ய, உலகம் எங்கும் அதுவே பேசு பொருளாக ஆனது. பல தொலைக்காட்சிகளும் யூடியூப் சானல்களும் நன்மாறன் அவர்களை வீடு தேடி சென்று நேர்காணல் செய்து ஒளிபரப்பினர். 

..... .... .....

நன்மாறன் பல்வேறு நேரங்களில் கூறியவற்றில் ஒரு சில:

ஆட்டோ ஓட்டுனரிடம் நான் முன்னாள் எம் எல் ஏ என்று சொல்லவில்லை. 2011 வரை இருந்தேன், இப்போதும் அதை சொல்லிக்கொண்டே திரிவது சரி அல்ல. 

என்னிடம் அரசு கொடுத்துள்ள இலவச பேருந்து அனுமதி சீட்டு உள்ளது, மாநிலம் எங்கும் பயணம் செய்யலாம், நான் பேருந்துகளில்தான் பயணம் செய்கின்றேன்.

அரசியலுக்கு வர தகுதி வேண்டாம், நல்ல எண்ணமும் சேவை செய்யும் மனதும்தான் வேண்டும். 

சமூகத்துக்கு நான் பயன்பட்டுள்ளேன், சமூகம் எனக்கு பயன்பட வேண்டும் என்பதில்லை. நாடு இப்போது ஒரு மோசமான சூழலில் சிக்கி உள்ளது, அதில் இருந்து விடுபட வேண்டும். அதற்காக நானும் வேலை செய்துகொண்டே இருக்கின்றேன். 

சட்டமன்றம் என்பது பணியாற்றக்கூடிய இடம்தானே அன்றி நம் சுகங்களை முன்னிட்டு போகின்ற இடம் அல்ல. நான் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடுமுறைதான், ஆனால் என் அறையில் நான் இருப்பேன், திறந்து வைப்பேன். பார்வையாளர்கள் வராத அந்த இரண்டு நாட்களில் அடுத்த வார சட்டமன்ற பணிகளுக்கான தயாரிப்புகளை செய்ய முடியும். பழைய கோப்புக்களை வாசிப்பது உட்பட. 

என் தந்தை ஹார்வி மில் தொழிலாளி. என் சிறு வயதில் மதுரை கீரைத்துறைப் பகுதியில் உள்ள சித்தர் சமாதிக்கு அழைத்து செல்வார். இரண்டு கரும்புகளுடன். நடந்தே செல்வோம். 'உண்பது நாழி, உடுப்பது முழம்' என்று கூட சொன்னதில்லை சித்தர்கள். அவர்களே எனக்கு முன்னோடி வழிபாட்டு அமைப்பாக இருந்தார்கள். "கோவிலாவது ஏனடா...." என்று கேட்டவர்கள் சித்தர்கள். கோவில்கள் பற்றி நிறைய ஆய்வு செய்துள்ளேன். என் தந்தையார் என்னை நூலகத்தில் கொண்டு போய் விட்டு 'நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்' என்றார். அவர்தான் எனக்கு முன்னோடி, inspiration. நூலகமே என் தாய் வீடு. அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் புத்தகம் வாசிக்க வேண்டும், முகநூல், வாட்சப் இதெல்லாம் போதாது.

காந்தியடிகள், பெரியார், அண்ணா, கம்யூனிஸ்ட் தலைவர்கள், கே பி ஜானகிஅம்மாள், எம் என் ராய் ஆகியோர் என்னை பாதித்தவர்கள். இந்தியாவுக்கு ஒரு அரசியல் சாசனம் வேண்டும் என்று முதலில் பேசியவர் ராய். ஜானகி அம்மாவின் வளர்ப்பு மகன் நான் என்று பெருமையுடன் சொல்வேன். 

எத்தனை ஏக்கர் வைத்து இருந்தாலும், எத்தனை வீடு வாசல்கள் வைத்து இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் சேர்ந்த ஒரு மனிதனையாவது நீங்கள் காட்ட முடியுமா? 

90களுக்கு பிறகான தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கல் கோட்பாடுதான் 'செலவு செய்பவனே அரசியலில் இருக்க முடியும்' என்ற நடைமுறையை உருவாக்கியது. "நீரளவே ஆகுமாம் ஆம்பல்". மக்கள் குணத்தைப் பொறுத்தே இன்றைய அரசியல்வாதிகள் பணத்தை வாரி இரைக்கின்றார்கள். இது மக்களுக்கும் நல்லது அல்ல, நாட்டுக்கும் நல்லது அல்ல. இல்லாத ஒன்றுக்காக ('கூடவே' வராத சொத்து சுகங்கள்) ஏங்குவதன் கோளாறுதான் அரசியல் வாழ்வில் சொத்து சேர்ப்பதும், செலவு பண்ணினால்தான் அரசியலுக்கு வர முடியும் என்கிற கருத்தும்.

... ... ...... .....

இங்கே ஆவடியை அடுத்த பட்டாபிராமில் முன்னாள் பிரதமர் ஒருவரின் சிலை ஒன்று உள்ளது. சிலையில் கல்வெட்டில் ஒருவர் பெயர் இப்படி உள்ளது: Ex-Parliament Candidate. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டி போட்டாராம் அவர்! வெள்ளையர்களுக்கு மனுப்போட என்பதற்காகவே 1885இல் நிறுவப்பட்ட கட்சியை சேர்ந்தவர் இவர்.

... .....

என் நன்மாறன் (13.5.1947- 28.10.2021)


சனி, அக்டோபர் 09, 2021

1921 ரயில்பெட்டி கோர மரணங்கள் குறித்த விசாரணை மீது பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவு


1921 மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நவம்பர் மாதத்தில் ரயில்பெட்டியில் அடைத்து எடுத்துச்செல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் 70 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்கள். இக்கோர மரணம் குறித்து தனியே ஒரு பதிவு எழுதியுள்ளேன். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டது, விசாரணை அறிக்கையின் மீது பிரிட்டிஷ் அரசு என்ன முடிவுக்கு வந்தது என்பதை மலபார் துணை கலெக்டராக இருந்த திவான் பகதூர் சி கோபாலன் நாயர் தான் எழுதிய The Moplah Rebellion, 1921 என்ற நூலில் எழுதியுள்ளார். 1923 பதிப்பு. The train tragedy என்ற தலைப்பில் உள்ள எட்டாவது அத்தியாயத்தை இங்கே தமிழில் தருகின்றேன். அரசதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்கு சாதகமான அமைப்பாக இருக்கும் என்பதற்கு பிரிட்டிஷ் அரசின் இந்த நடவடிக்கை மிகச்சிறந்த உதாரணம்.

.... .... .... ....

கிளர்ச்சியின் போக்கில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது: 

"கிளர்ச்சியுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்ட 100 கைதிகள் (97 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள்) 1921 நவம்பர் 19 அன்று திரூரில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டனர். MS&SM ரயில்வே சரக்குப்பெட்டி எண்1711இல் அடைக்கப்பட்டனர். கோழிக்கோட்டில் இருந்து மாலை நேரம் புறப்படும் ரயில் எண் 77இன் பின்னால் அப்பெட்டி இணைக்கப்பட்டது. போத்தனூர் ரயில்நிலையத்துக்கு வந்தபோது அனைத்துகைதிகளும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர். மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இறந்துவிட்டார் கள். உயிர் இருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு எடுத்துச்சென்றனர். இவர்களில் 6 பேர் கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் இறந்தார்கள். 13 பேர் கோயம்புத்தூர் சிவில் மருத்துவமனைக்கும் 25 பேர் மத்திய சிறைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். சிவில் மருத்துவமனைக்கு வந்தவுடன் இருவரும் பிற்பகலில் 4 பேரும் இறந்தார்கள். 26ஆம் தேதி இருவர் இறந்தார்கள். ஆக மொத்தம்70 பேர் இறந்தார்கள்.

மெட்றாஸ் அரசு இதுகுறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைத்தது. குழுவின் அறிக்கை அடிப்படையில், 1922 ஆகஸ்ட் 30 அன்று இந்திய அரசு கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டது.

சரக்குப்பெட்டியை அத்தகைய ஒரு அவசர நிலையில் பயன்படுத்தியதை கண்டனத்துக்குரியது என்றோ மனிதாபிமானம் அற்ற செயல் என்றோ கூற முடியாது என்று விசாரணைக்குழு கூறுவதை அரசு அங்கீகரிக்கின்றது.

பயணிகள் பயணம் செய்வதற்கான பெட்டி இல்லை என்றாலும் கூட அவை மூடப்பட்ட டிரக்குகள் அல்ல, காற்றோட்டம் உள்ளவை, காற்றுத்துளைகள் மூடப்பட்டு இருக்கவில்லை, போதிய காற்றுத்துளைகள் இருந்தன என்பதால் கணிசமான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டு செல்ல தக்கவைதான்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக இத்தகைய பெட்டிகளை பயன்படுத்துவது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்க கூடாது, மாறாக அதற்கான முறையான விதிகளின் கீழ் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விசாரணைக்குழு கூறுவதையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது. இத்தகைய ஒருமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதாலேயே ராணுவ கமாண்டரை அதற்காக பொறுப்பாக்க முடியாது என்ற முடிவையும் அரசு ஏற்றுக்கொள்கின்றது.

கிளர்ச்சியின்போது திரு இவான்ஸ், திரு ஹிட்ச்காக் இருவரும் செய்த பணிகளை இந்திய அரசு பாராட்டுகின்றது. அவர்கள் செய்த பணியின் கடுமையை அரசு உணர்ந்துள்ளது. தகுந்த விதிகளின் கீழேயே  சரக்குப்பெட்டியில் கைதிகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை இந்த இரண்டு அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை என்று அரசாங்கம் பெரிதாக வருத்தப்படவும் முடியாது. ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர், ஒரு சரக்குப்பெட்டியில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கைக்கு தேவையான காற்றோட்டம் அப்பெட்டியில் உள்ளது என்று ஒரு பொறுப்பான அரசு அதிகாரி முடிவு செய்ய வேண்டும் என விதிகளில் சொல்லப்பட்டு இருந்திருந்தால், அநேகமாக உயிரிழப்பு எதுவும் நடந்திருக்காது.

ஹிட்ச்காக், இவான்ஸ் இருவரில் ஆகப்பெரிய பொறுப்பு யாருக்கு இருக்கின்றது என்றால் இவான்சுக்குதான். திரூரில் தொடர்ந்து பொறுப்பில் இருந்தவர் என்ற முறையில், கைதிகளை கொண்டுசெல்வற்கான  ஏற்பாடுகளை கண்காணிப்பதில் இவான்ஸ் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த குறிப்பிட்ட ரயில்பெட்டியை தேர்வு செய்ததற்காக  சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்ஐ குறை சொல்ல முடியாது என்ற கமிட்டியின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில், ரயில்பெட்டியின் பாதுகாப்பு குறித்த பரிசோதனையுடன் அவர் தன் வேலையை முடித்துக்கொண்டு இருக்க கூடாது, கைதிகளை கொண்டுசெல்வதற்கு தகுதியான ரயில்பெட்டிதான் என்றும் கூட அவர் தன்னளவில் திருப்தி அடைந்து இருக்க வேண்டும்.

பெட்டியில் இருந்து கைதிகள் எழுப்பிய கூச்சல், அவர்கள் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தார்கள் என்பதையே காட்டியது என்று நிரூபிக்க தனிப்பட்ட சாட்சியம் உள்ளது. கைதிகளின் பெருங்கூச்சலுக்கான சரியான காரணம் இன்னதுதான் என்று மிக உறுதியாக சொல்லமுடியவில்லை என்று கமிட்டி சொல்கின்றது. ஆனால் காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் கைதிகள் எழுப்பிய பெரும் ஓலம், சார்ஜென்டின், அவரது பாதுகாவலரின் சிறப்பு கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. இந்த முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் என்பவர், வேண்டுமென்றேதான் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டார் என்று சொல்வதற்கில்லை என்ற கமிட்டியின் கருத்தில் இருந்து அரசு மாறுபடவில்லை. ஆனால் பெட்டியில் இருந்து கிளம்பிய பெருங்கூச்சலை கண்டுகொள்ளாமல் இருந்தது, அதற்கான காரணத்தை தெரிய முற்படாமல் அலட்சியம் செய்தது என்பது அசாதாரணமான ஒன்று,  தெரிந்தேதான் சார்ஜெண்ட் இத்தகைய தவறை செய்தார் என்ற கமிட்டியின் சொற்களை அரசு கவனத்தில் கொள்கின்றது. நடந்தவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு உள்ளூர் மொழியை நன்கு அறிந்துஇருந்த தலைமை காவலரும் பிற காவலர்களும் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்சிடம் தெரிவிக்க தவறியதால் மேற்படி கண்டனத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ் மீதான விசாரணைக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என இந்திய அரசு மெட்றாஸ் அரசுக்கு அறிவுறுத்துகிறது. கமிட்டியின் மேற்கண்ட கண்டறிதல்களின் அடிப்படையில், தலைமைக்காவலர், பிற காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும். (மெட்ராஸ் மெய்ல்).

சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ், பிற காவலர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டது, ஆனால் பின்னர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட னர்.

இறந்த 70 கைதிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 ரூபாய்  இழப்பீடு வழங்க மெட்ராஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. (ஆணை எண் 290, 1.4.1922)

புதன், அக்டோபர் 06, 2021

சரக்குரயில்பெட்டி எண் 1711 சந்தித்த கோர மரணம் (1921 நவம்பர்)

Maddy என்னும் நண்பர் historic alleys என்ற தன் வலைப்பூவில் (blog), 1921 நவம்பர் மாதம் மாப்பிளா கிளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்த ரயில்பெட்டி கோர மரணம் குறித்து நுட்பமான தகவல்கள் அடிப்படையில் விரிவாக எழுதியுள்ளார் (The tragedy in wagon 1711 - a complete picture). அதன் தமிழாக்கத்தை இங்கே தருகின்றேன்.
... ....
இதுவரையிலும் செய்தியேடுகளிலும் வெளிவந்த பலவிதமான தகவல்களும் உண்மைக்கு வெகுதொலைவில் இருப்பவை, முழுமையாநத்தம் அல்ல. இப்போது என்னிடம் ரயில்பெட்டி கோர மரண நிகழ்வு குறித்து போதிய தகவல்கள் உள்ளன என்பதால் அவற்றை முழுமையாக பதிவு செய்கின்றேன்.
மலப்புரத்தில் கைது செய்யப்பட்ட பெருமளவு கைதிகளுக்கு ராணுவ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. மலபாரின் சிறைகள் கொள்ளளவுக்கு மேலும் நிரம்பி வழிந்தன என்பதாலும் திரூரிலேயே அவர்களை சிறைவைக்க முடியாது என்பதாலும் கோயம்புத்தூர், வேலூர், பெல்லாரி சிறைகளுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கர்னல் Humphreys, காவல்துறை கண்காணிப்பாளர் Hitchcock, F B Evans ஆகியோருக்கு இப்பொறுப்பு தரப்பட்டது. ரயில் எண் 77 கோழிக்கோடு -மெட்ராஸ் பாசஞ்சர், 1921 நவம்பர் 19 அன்று ஒரு கோர நிகழ்வை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. நவம்பர்19 மாலை MS & SM சரக்குப்பெட்டி எண் 1711 அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டது. 100 கைதிகள் (97 முஸ்லிம்கள், 3 இந்துக்கள்) அந்த சரக்குப்பெட்டியில் ஏற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் கருவம்பலம், புலமாந்தோல் பகுதிகளை சேர்ந்தவர்கள். இக்கூடுதல் பெட்டி திரூரில் இருந்து (கர்நாடகாவின்) பெல்லாரிக்கு கைதிகளை கொண்டு செல்ல வரவழைக்கப்பட்டது. தென்னிந்திய ரயில்வே அதிகாரிகள் அவ்வாறே பெட்டி எண் 1711ஐ ரயில் எண் 77உடன் இணைத்தார்கள். கோழிகோட்டில் இருந்து திரூருக்கு மாலை 6.45க்கு ரயில் வந்து சேர்ந்தது. சரக்குப்பெட்டியில் இருந்த பொருட்கள் கீழே இறக்கப்பட்டு சுத்தமாக்கப் பட்டன, நோய்ப்பரவல் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
அந்த பெட்டிக்கு போலீஸ்காரர்கள்தான் காவலாக சென்றிருக்க வேண்டும். கைதிகளை கோழிகோட்டில் இருந்து கண்ணூருக்கு கொண்டுசெல்லும் போது எப்போதும் அதுதான் நடைமுறை. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. (காங்கிரஸ் கட்சியின் கே கேளப்பனின் அனுபவம் அது, அப்படிப்பட்ட ஒரு ரயில் பயண அனுபவம் அவருக்கு இருந்தது, ஆனால் அவர் பயணித்த பெட்டியின் கதவு திறந்து இருந்தது, ஒரு போலீஸ்காரரும் காவல் இருந்தாராம்). மொயாரத் Moyarath சொல்கின்றார்: இதுபோ பயணங்களில் சாவு என்பது பொதுவாக நடப்பதுதான். இப்படிப்பட்ட ரயில்களும் பெட்டிகளும் மலபாரின் ரயில் நிலையங்களை கடந்து செல்லும்போது பொதுமக்கள் அவற்றை கடும்பீதியுடன்தான் பார்ப்பார்களாம். மூடப்படாத ரயில்பெட்டிகள்தான் கடந்தகாலத்தில் பயன்படுத்தபட்டன என்று மாதவன் நாயர் சொல்கின்றார். ஆனால் பின்னர் நடந்த விசாரணையின் போது ஹிட்ச்காக் அளித்த வாக்குமூலத்தில், "இந்த முறை நவம்பர் 20 அன்று அவ்வாறு செய்து இருந்தால் அது தவறில் முடிந்திருக்கும். திறந்த பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்த கிளர்ச்சியாளர்களை பொதுமக்கள் பார்த்து இருந்தால், அப்போது நிலவிய சூழ்நிலையின் பின்னணியில் ஆவேசம் கொண்டு திரண்டு கைதிகளை காப்பாற்ற முனைந்திருப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன்பு இவ்வாறு கைதிகளை கொண்டுசெல்ல பயன்படுத்த ப்பட்ட பெட்டிகள் உண்மையில் கால்நடைகளை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டவைதான். ஹிட்ச்காக்கின் கருத்து என்னவெனில் நவம்பர் 21 அன்று பயன்படுத்தப்பட்ட ரயில்பெட்டி பாதுகாப்பானது என்பதே. Alfred Emanuel தான் எழுதிய New Outlook இல், 'அந்த ரயில்பெட்டிக்கு புத்தம் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்ததால் மிகச்சிறிய துளைகள் கூட அடைக்கப்பட்டு காற்று உள்ளே வருவது தடுக்கப்பட்டுவிட்டது' என்று சொல்கின்றார்! (பக்கம் 698). (இதற்கு முன் இப்படி கராச்சி ராணுவ ரயில்வண்டி ஒன்றில் இதேபோல ஆங்கிலேய படைவீரர்களை அனுப்பியபோது பலர் இறந்துபோன கசப்பான வரலாறு பிரிட்டிஷாருக்கு உண்டு!)
 
ரிசர்வ் போலீஸ் சார்ஜெண்ட் AH Andrews, தலைமைக்காவலர் O கோபாலன் நாயர், கான்ஸ்டபிள்கள் P நாராயண நாயர், K ராமன் நம்பியார், I Ryru, N T குஞ்ஞாம்பு, P கோரோடுண்ணி நாயர் ஆகியோர் இந்த ரயிலில் பாதுகாப்புக்காக சென்றவர்கள். சரக்குப்பெட்டி 1711இன் பின்னால் இருந்த பெட்டியில் தலைமைக்காவலரும் பிற காவலர்களும் பயணிக்க, ரயில் என்ஜினின் பின்னால் இருந்த இரண்டாம் வகுப்பு பயணிகள் பெட்டியில் சார்ஜெண்ட் பயணித்தார். அனைத்துக் கைதிகளையும் பெட்டியினுள் அடைத்தபின் கதவை வெளிப்புறம் தாழிட்டு தாழ்ப்பாளை ஒரு கம்பியாலும் கட்டினார்கள்.
மாலை 7 மணிக்கு ரயில் புறப்பட்டது. சோரனூர் ரயில்நிலையத்தில் அரை மணி நேரமும் ஒலவக்கோட்டில் கால் மணி நேரமும் ரயில் நின்றது. பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் அடுத்த பிளாட்பாரத்துக்கு வந்தபோது ரயில்பெட்டிக்குள் இருந்த கைதிகள் கத்தி கதறி கூச்சல் இட்டதை அவர்கள் கேட்டிருப்பார்கள். கதவை திறந்து காற்றோட்டத்துக்கு வழி செய்து குடிநீரும் கொடுத்திருந்தால் உயிருக்கு போராடிய கைதிகளை காப்பாற்றியிருக்க முடியும். இவ்வாறு ரயில் சென்ற வழியில் இருந்த அனைத்து நிலையங்களிலும் பெட்டிக்குள் இருந்து வந்த பெரும் கதறலை பலரும் கேட்டிருக்கின்றார்கள். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத காவலர்கள், போதனூரில் மட்டுமே கதவைத் திறப்பது என்று உறுதியாக இருந்துள்ளார்கள். திரூரில் இருந்து ஏறத்தாழ 111 மைல்கள் தொலைவில் உள்ளது போதனூர்.
மரணத்தின் பின் நடந்த விசாரணையில், செருவண்ணத்தூரில் ரயில் நின்றபின் கைதிகள் தண்ணீர் கேட்டு அலறியதை தன் காதால் கேட்டதாக சார்ஜெண்ட் சொல்லியிருக்கிறார். ஆனால் நேரம் கடந்து போனதால் கைதிகளின் கதறலை அவர் பொருட்படுத்தவில்லை. அதேபோல் ஒலவகோடு உள்ளிட்ட பல ரயில்நிலையங்களிலும் கைதிகளின் கதறலை காதால் கேட்டதாக பலர் சாட்சியம் அளித்தனர். காற்றுக்காகவும் குடிநீருக்காகவும் போராடித்தவித்த அக்கைதிகள் பித்துப்பிடித்து புத்தி பேதலித்த நிலையில் இருந்ததாக சொல்கின்றார்கள்.
"கைதிகளுக்கு குடிநீர் வழங்குவதை இரக்கத்தின்பால் செய்யலாமே தவிர சட்டத்தில் அப்படி ஒன்றும் இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சோரனூரிலோ ஒலவகோட்டிலோ கைதிகள் மீது இரக்கம் கொண்டு சார்ஜெண்ட் கதவை திறந்திருப்பார் எனில் கைதிகள் கோபம்கொண்டு ரயில்நிலையத்தை சூறையாடி இருப்பார்கள், அப்பாவி மக்களை படுகொலை செய்திருப்பார்கள். அவ்வாறு நடந்திருக்கும் எனில், காவலர்கள் தம் கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக தண்டனை பெற்றிருப்பார்கள்" என சென்னை குற்றப்புலனாய்வு துணை கண்காணிப்பாளர் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்தார்.
போதனூர் ரயில்நிலையத்துக்கு நள்ளிரவு, அதாவது அதிகாலை 1230 மணிக்கு ரயில்வந்து நின்றபோது, அதே ரயிலில் வந்த ஒரு பயணி குறிப்பிட்ட ரயில்பெட்டியில் இருந்து கதறல்கள் கேட்பதாக பெருங்கூச்சலிட்ட பிறகே சரக்குப்பெட்டியின் கதவு திறக்கப்பட்டது. அங்கே அதிகாரிகள் கண்டதென்ன? அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் மயக்கமுற்றுக் கீழே கிடந்தார்கள், பலர் ஏற்கனவே உயிரை இழந்திருந்தார்கள்.மூன்று இந்துக்கள் உள்ளிட்ட 56 பேர் இழந்துகிடந்தார்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர், கொண்டுசென்றபின் 2, பிற்பகலில் 4, 26ஆம்தேதி 2, ஆக மொத்தம் 70 பேர் இறந்துபோனார்கள்.
இறந்தவர்களின் உடலோடு அந்த சரக்குரயில்பெட்டி மீண்டும் திரூருக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் காலை மீதியிருந்த 44 பேரை கோயம்புத்தூருக்கு கொண்டு சென்றார்கள். ரயில்வே பிளாட்பாரத்தில் 6 பேர் இறந்தனர். கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு 25 பேரை அனுப்பினார்கள். பொது மருத்துவமனையை அடையும் முன் 2 பேர் இறந்தனர். பிற்பகலில் 4 பேர் இறந்தனர். 26.11.1921 அன்று இருவர் இறந்தனர்.
 
நான் (Maddy) கூறுவது சரி எனில், தி ஹிந்து நாளிதழின் செய்தியாளர்தான் இச்செய்தியை கோயம்புத்தூரில் இருந்து முதலில் வெளியே தெரிவித்தார். நவம்பர் 22ஆம் தேதி காலை இக்கோரமரணம் பற்றி உலகுக்கு வெளியே சொன்னவர் அவர்தான்.
Moyarath கூறுவது என்ன? கோழிக்கோட்டை சேர்ந்த மஞ்சேரி ராம ஐயர் என்பவரின் வற்புறுத்தலால்தான் போதனூரில் ரயில்பெட்டி திறக்கப்பட்டது. உயிருடன் இருந்தவர்களுக்கு கோயம்புத்தூரில் சிகிச்சை அளித்த மருத்துவர் டாக்டர் T ராமன். (ஹிஸ்டாரிக் அல்லேய்ஸ் வலைப்பூவில் இது குறித்து Maddy எழுதிய கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பிரேம்நாத் முர்கோத் என்ற நண்பர், அந்த டாக்டர் T ராமன் தன் தாத்தா என்றும் 1895இல் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார் என்றும் பதிவு செய்துள்ளார். தன் தாத்தாவின் புகைப்படம், அவர் பெற்ற பட்டத்தின் நகல் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளார். அவற்றை இங்கே நான் பதிவு செய்கின்றேன்.
ரயில்பெட்டியில் இருந்து உயிருடன் மீண்ட ஒருவரின் வாக்குமூலம் இது: பெட்டிக்குள் இருந்த அனைவரும் வியர்வையில் நனைந்தோம். காற்று இல்லாததால் சுவாசிக்க முடியவில்லை. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் எங்கள் துணியில் ஊறிய வியர்வையை பிழிந்து குடித்தோம். பெட்டியின் கதவில் இருந்த சிறுதுவாரங்களும் கூட அடைக்கப்பட்டு இருந்ததால் காற்று வரவில்லை. கதவை உடைக்க முயற்சித்தோம், முடியவில்லை.
பிரம்மதத்தன் நம்பூதிரி தன் நூலில் சொல்கின்றார்: இரண்டு கைதிகளுக்கு ஒரு விலங்கு என பூட்டியிருந்தனர். சாவின் பிடியில் சிக்கி மனம் பேதலித்த அவர்கள், ஒருவரை ஒருவர் நகத்தால் கீறியும் கடித்தும் தாக்கியும் இருந்தார்கள் என்பதை இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் சொன்னன.
MPS மேனன் எழுதிய MP நாராயண மேனன் என்ற நூலும் கான்ராட் உட் எழுதிய நூலும் பின்வரும் தகவலை தருகின்றன: 70 பேர்களில் 32 பேர் கூலிகள், 19 பேர் விவசாய தொழிலாளர்கள், 4 பேர் குர் ஆன் போதிப்பவர்கள், 2 பேர் தேனீர்கடைக்காரர்கள், 2 பேர் மசூதி ஊழியர்கள், 2 பேர் மத போதகர்கள், 2 பேர் சிறு வணிகர்கள், 2 பேர் வணிகர்கள், 1 மர வணிகர், 1 பொற்கொல்லர், 1 தச்சுத்தொழிலாளி, 1 முடித்திருத்திருத்துபவர். இவர்களில் 67 மாப்பிளாக்கள், 3 இந்துக்கள். 10 பேர் ஓரளவு வசதியான நிலவுடைமையாளர்கள்.
B C Scott அப்போது தென்னிந்திய ரயில்வே ஏஜென்ட் ஆக இருந்தவர். இந்த சரக்குப்பெட்டிகளை ரயில்வே அதிகாரிகளின் சம்மதத்துடன்தான் திரூருக்கு அனுப்பினார்களா என்று விசாரணை செய்தார். கைதிகளை கொண்டுசெல்ல சரக்குப்பெட்டிகளை பயன்படுத்தியதை மாவட்ட போக்குவரத்து கண்காணிப்பாளர் அறிவார் என்று தெரிந்தது. A R Knapp என்பவர் தலைமையில் இந்த கோர மரணத்தை விசாரிக்க மெட்ராஸ் அரசு விசாரணைக்குழு அமைத்தது. மேலும் இந்திய தண்டனை சட்டங்கள் பிரிவு 304A, இந்திய ரயில்வே சட்டம் பிரிவு, 1890 ஆகியவற்றின் கீழ் சார்ஜெண்ட் Andrews மீதும் பிற காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு மெட்ராஸ் அரசு உத்தரவிட்டது. அரசு நிர்வாகம், தொடக்கத்தில் இந்த விவகாரத்தை அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இக்கோர மரணங்கள் யாவும் 'சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்தவை, யாரையும் இதற்கு பொறுப்பாக்க முடியாது' என்றே சொன்னது. 'மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள்' என கோயம்புத்தூர் மருத்துவமனை அதிகாரி உறுதி செய்தார். ஆனால் 'வேறு காரணங்களால் நிகழ்ந்த மரணங்கள்' என்று திசைதிருப்ப அரசு முயன்றது. ஆனால் கோயம்புத்தூர் ராணுவசட்டத்தின் கீழ் இல்லாமல் இருந்ததால் இந்த கோரமரணம் பற்றிய செய்தி மக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பரவிவிட்டது.
விசாரணைக்குழுவின் முதல் அமர்வு கோயம்புத்தூரில் 28.11.1921 அன்று நடந்தது. உயிருடன் மீண்டவர்களின் வாக்குமூலங்களை இக்குழு கவனமாக பதிவு செய்தது. 34 சாட்சிகளை விசாரித்தது. பெட்டியில் அடைக்கப்பட்டவர்கள் பெருங்கூச்சலிட்டனர் என்பதை குழு ஒத்துக்கொண்டது. பின்னர் கோயம்புத்தூர் மாவட்ட மாஜிஸ்திரேட் H L Braidwood தலைமையில் விசாரணை நடந்தது. மெட்றாசின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் சார்ஜெண்ட் ஆண்ட்ரூஸ்க்காகவும் குற்றம் சாட்டப்பட்ட பிறருக்காகவும் வாதாடினார்கள். இதற்கு முன் ஒன்பது முறை இதே போன்ற சரக்குப்பெட்டிகளில் கைதிகளை கொண்டுசென்ற அனுபவம் உள்ளவர் அவர், அப்போது இதுபோன்ற துயரங்கள் நிகழ்ந்தது இல்லை என்று வாதிட்டனர்.
ஐரோப்பிய ஆசியர் ஒருவரின் (கொதிகலன்களை உருவாக்குபவர்) வாக்குமூலத்தின்படி, சோரனூர் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் அவர் நின்றுகொண்டு இருந்தபோது மூடப்பட்ட ரயில்பெட்டியினுள் இருந்து 'வெள்ளம் வெள்ளம்' (தண்ணீர் தண்ணீர்) என்று கூக்குரல்கள் வந்தன. மற்றொருவர், 'நாங்கள் செத்துக்கொண்டு இருக்கின்றோம்' என்று ரயில்பெட்டியினுள் இருந்து குரல்களை கேட்டதாக சொன்னார்.
Robert Hardgrave: மூச்சுத்திணறல்தான் இந்த சாவுகளுக்கு முக்கிய காரணம், கூடவே வெப்பமும் சேர்ந்து கொண்டது என்று விசாரணை குழு முடிவு செய்தது. ரயில்பெட்டியை சோதனை செய்தபோது, கதவின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த காற்றுத்துளைகள் உட்புறமாக மூடப்பட்டிருந்ததும் அதன் மீது பூசப்பட்டு இருந்ததால் படிந்த தூசியும் சேர்ந்து ஒரு துளி காற்றும் உள்ளே வராமல் அடைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பெட்டி ஒரு காற்றுப்புகாத அறை ஆனது. தங்கள் பணியை முறையாக செய்யாத அரசு ஊழியர்களால் இந்த கோரமரணம் நேர்ந்தது என்றாலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள். Lord Willington 1922இல் சமர்ப்பித்த விசாரணைக்குழு அறிக்கையில் குற்றம் செய்தவர்களின் பெயரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் பரிந்துரையும் இருந்தன.
(இந்த விசாரணைக்குழுவின் அறிக்கை மீது பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் என்ன முடிவுக்கு வந்தது, என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை, அன்றைய கோழிக்கோடு டெபுடி கலெக்டர் ஆக இருந்த திவான் பகதூர் C Gopalan Nair தனது The Moplah Rebellion, 1921 என்ற நூலில் (1923 பதிப்பு) சொல்லியிருக்கிறார். அதனை அடுத்த பதிவில் தனியே மொழியாக்கம் செய்து பதிவேன்).
... ..... ..... ....
புகைப்படம்: திரூர் ரயில்நிலையத்தின் சுவரில் ரயில்பெட்டி கோர மரணத்தை நினைவுகூரும் ஓவியத்தை ரயில்வே துறை வரைய முடிவு செய்தது. ரயில்வேயின் அழைப்பின் பேரில் ஓவியர் பிரேம்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓவியத்தை வரைந்தார். வலதுசாரி சங்கிகளின் வற்புறுத்தலுக்கு பணிந்து அவ்வோவியத்தை ரயில்வே துறை அழிந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வின்போது, திரூர் பேருந்து நிலையத்தில் இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஓவியர் பிரேம்குமாரும் ஹர்ஷாவும் மக்கள் மத்தியில் வரைந்த ஓவியங்கள் இவை.