திங்கள், ஆகஸ்ட் 29, 2016

குஜராத் - அழுகி நாறும் ’இந்துத்துவா மாடல்’ - 3




2015 செப்டம்பரில் உத்தரப்பிரதேசம் தாத்ரியில் மாட்டு மாமிசம் வைத்திருந்ததாக ‘குற்றம்சாட்டி முகமது அக்லக் என்ற இஸ்லாமியரை வீடு புகுந்து இந்துத்துவா கும்பல் அடித்தே கொன்றது. அதற்கு முன்பாக அப்பகுதியில் இருந்த கோவில் ஒலிபெருக்கியில் இதுகுறித்து வெறிப்பிரச்சாரம் செய்து அப்பகுதி மக்களை திரட்டியது குறிப்பிடத்தக்கது. அக்லக்கின் மகன் குற்றுயிராக்கப்பட்டார்; ‘அந்த வீட்டில் இருந்த பெண்களை சும்மா விட்டு வந்தது எங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றதுஎன்று வெறிப்பேச்சுப்பேசிய இந்துத்துவா கும்பலை வளர்ச்சி நாயகன் மோடி கண்டுகொள்ளவில்லை; அடிப்பதாய் இருந்தால் என்னை அடியுங்கள்என்று அன்றைக்கு வசனம் பேசவில்லை. உனா எழுச்சி உத்தரப்பிரதேசத்துக்குள் நகர்ந்துள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் வருகின்ற சட்டமன்றத்தேர்தலையும் அடுத்த வருடம் 2017இல் நடக்கவுள்ள குஜராத் தேர்தலையும் மனதில் கொண்டு தலித்துக்களின் வாக்குகளை குறிவைத்து இப்போது ‘சுடுங்கள்என வசனம் பேசுகின்றார். ஹரியானா, மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய பிஜேபி ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியருக்கு எதிரான சங்பரிவாரின் பிரச்சாரம் (தலித்துக்களும் உள்ளிட்ட) இந்துமத மக்களின் வாக்குகளைத்திரட்ட முன்பு உதவியது. 


உனா தாக்குதல் தேச எல்லைகளைத்தாண்டி அகில உலகமெங்கும் பரவி இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்த சர்வதேச சர்ச்சையில் மீண்டும் ஒரு முறை நரேந்திரமோடி அரசை தள்ளிவிட்டுள்ளது என்பது சங்பரிவாருக்கு எரிச்சலூட்டும் உண்மையாகும். ஆனால் சங்பரிவாரின் உண்மையான கவலை என்பது சிவசேனா, விஷ்வ ஹிந்துபரிஷத், பிஜேபி, கவ் ரக்‌ஷக், கவ் சேனா உள்ளிட்ட ஆர் எஸ் எஸ்சின் கொடுக்குகளுக்கு எதிராக இப்போது இந்துமதத்திற்கு உள்ளேயே இருக்கின்ற தலித்துக்கள் எழுச்சியடைந்திருப்பது இந்துக்களின் வாக்குகளை சிதறடிப்பது என்பது மட்டுமின்றி இவ்வெழுச்சி இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் பரவுகின்ற ‘அபாயமேஆகும்.


ஜெய்பீம், பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவுகளை நனவாக்குவோம் போன்ற முழக்கங்கள் உனா பேரணியின் முக்கிய முழக்கங்கள் என்பதையும் சங்பரிவார் கவனிக்கின்றது. சாதியைக் கொல்ல வேண்டும், பிராமணீயத்தை ஒழிக்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகள் சங்பரிவாரின் கொள்கைகளுக்கு எதிர்முனையில் உள்ளவை; ஆனால் அம்பேத்கருக்கு விழா எடுப்பதன் மூலமும் அவரப் புகழ்ந்து பேசுவதன் மூலமும் தலித் மக்களுக்கு நெருக்கமாகத் தன்னைக்கட்டிக்கொள்ள நரேந்திரமோடி பெரும் முயற்சி செய்கின்றார். அவரது மிக அசிங்கமான இந்தத் தந்திரம் உனாவில் முற்றுப்பெற்றுள்ளது. 


உனா தலித் அஸ்மிடா யாத்திரையில் நேரடியாகச் சென்று பங்கேற்றுத்திரும்பிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளரும் ஆவார். குஜராத் வளர்ச்சி என்பதும் குஜராத் மாடல் என்பதும் பிஜேபியின் ஆதரவு கார்ப்பொரேட் ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய மாயை என்பதை நேரில் கண்டு சொல்கின்றார்: ”சாலைகள் எங்கும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன; சாலைகள் குண்டும்குழியும் நிறைந்தவை, பயணிக்க தகுதியற்றவை. பத்துக்கிலோமீட்டர் பயணத்துக்குள் பல நூறு மாடுகளை சாலையில் பார்த்தோம், இதுதான் அங்கே அன்றாட வாழ்க்கை. நாங்கள் அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலையைத் தாண்டும்போது மட்டுமே குப்பைகள் இல்லாத ஒரு நல்ல சாலையைப் பார்க்க முடிந்தது. மிக மோசமான பேருந்துகளைப் பார்த்தோம், பேருந்துகளின் போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. புல்லட் பைக்கின் பின்புறம் கூண்டுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்கி மக்கள் அதில் தொற்றிக்கொண்டு போவதே சாதாரணமான போக்குவரத்து வாகனம். ஆட்டோவில் பயணிப்பது என்பது  மிக ஆடம்பரமான ஒன்றாக மக்கள் பார்க்கின்றார்கள்.” 



யாத்திரையில் நேரடியாகப் பங்குபெற்றுத்திரும்பிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் சொல்கின்றார்: “குஜராத் மாடல் என்பது உண்மையில் மோதானி மாடல். டாடா, அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் சொர்க்கபூமிதான் குஜராத். நாங்கள் அகமதாபாத்தில் இருந்து உனா வரை சென்ற வழி நெடுகிலும் கொடிய வறுமையைப் பார்த்தோம். சமூக-பொருளாதாரத் தளத்தில் இருந்து சுத்தமாக ஒதுக்கப்படுள்ள தலித் சமூக இளைஞர்கள் வாழ்க்கையை நட்த்தும்பொருட்டு கேரளா, மும்பை, தொலைதூர லட்சத்தீவு போன்ற இடங்களுக்கு செல்கின்றார்கள். ஆனால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் கார்ப்பொரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டோம். இதுவே ‘உலகத்தரம்வாய்ந்த ‘குஜராத் மாடல்’. மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தபின் குஜராத்தில் தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பொது இடத்தில் சாட்டையால் அடிப்பது, மாட்டுச்சாணத்தை தின்ன வைப்பது, ஆடைகளைக்களைந்து நிர்வாணமாக ஊர்வலம் நடத்துவது போன்ற கொடுமைகள் அதிகரித்துள்ளன”.



உனா யாத்திரையில் கலந்துகொண்டு திரும்பிய தலித்துக்களையும் பிறரையும் சாதி இந்துக்களும் இந்துத்துவா தீவிரவாதிகளும் திட்டமிட்டு வழிமறித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உனா சம்பவம் நடந்த அதே சம்தேர் கிராமத்தில், ஜுனாகத்தில், அம்ரேலியில் இன்னும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ‘நீ தலித்தா? ‘ஜெய் மாதா தி’ ‘காய் மாதா கி ஜே!’ (பசு மாதா வாழ்க) என்று கோசமிடுஎன்று சொல்லி அடித்துள்ளார்கள். ‘ஜெய் பீம்என முழக்கமிட்டவர்களை கடுமையாக அடித்துள்ளார்கள். அம்பேத்கர் படம் பொறித்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளார்கள். இதற்கு முன் காவல்துறை எப்படி நடந்துகொண்டதோ அப்படியே இப்போதும் நடந்து கொண்ட்து, அதாவது கை கட்டி வேடிக்கை பார்த்தது. உனா எழுச்சியை கார்ப்பொரேட் மீடியாக்கள் கண்டுகொள்ளாமல் திட்டமிட்டு மறைத்த்து போலவே இத்தாக்குதல்களையும் மறைக்கின்றன. குஜராத் சொர்க்கபுரி என்றும் இந்தியாவுக்கான எதிர்கால மாடலே குஜராத்துதான் என கடந்த இருபது வருடங்களாக பேசிவந்த பொய்யை திடீரென ஒப்புக்கொள்வது மெயின்ஸ்ட்ரீம் கார்ப்பொரேட் மீடியாவால் ஆகின்ற காரியம் அல்லவே?


சாதி இந்துக்களுக்கு நிலம் ஒரு பொருளீட்டும் கருவி எனில் தலித் சமூக மக்களுக்கு அது சமூகத்தில் மனிதனாக வாழும் உரிமையை அந்தஸ்தை நிறுவுவதற்கான அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. எனவே இது வெறும் நிலப்பகிர்வுக்கான போராட்டமாக மட்டும் இல்லை, தாங்கள் சார்ந்திருக்கின்ற இந்து மதத்தின் சாதீயக்கொடுக்குகளில் இருந்து விடுபடுவதற்கான, இந்து மதத்தின் சாதியப்பிரமீட்டின் கீழடுக்குக்கல்லை அசைக்கின்ற உருவுகின்ற தத்துவார்த்தப்போராட்டமாக இருப்பதால் இது நாளையோ நாளை மறுநாளோ முடிந்து விடுகின்ற போராட்டமாக இருக்கப்போவதில்லை என்பது உறுதி. சாதி ஒழிப்பும் நிலமீட்பும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்து செல்வதே இயல்பானதும் கோட்பாடு ரீதியாக சரியானதும் ஆகும். ஒன்றில் இருந்து மற்றது பிரிக்கப்பட முடியாதது.


தலித் சமூகம் இன்று தன்னெழுச்சியான போராட்டத்தை தொடங்கியுள்ளது; இப்போராட்டத்திற்கு இடதுசாரி அமைப்புக்களும் முற்போக்கு-ஜனநாயக அமைப்புக்களும் இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மை சமூக மக்களும் இந்துத்துவா அரசியலுக்கும் அனைத்துவிதமான பிரிவினைவாத அரசியலுக்கும் எதிரான அனைத்துப்பகுதி மக்களும் ஆதரவு அளிப்பதும் இணைந்து செல்வதும் காலத்தின் கட்டாயம்.

(முற்றும்)

(’சமரசம்’ (செப்.16-30) இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளது, link: http://samarasam.net/issue/16-30_Sep_16/#12 )


குஜராத் – அழுகி நாறும் ‘இந்துத்துவா மாடல்’ - 2






உனாவில் தலித்துக்கள் மீது நடந்த தாக்குதல் திடீரென்று நடந்த ஒன்றோ எப்போதாவது நடக்கின்ற ஒன்றோ அல்ல.

இவ்வருடம் (2016) தொடங்கி ஏப்ரல் வரை மட்டுமே தலித்துக்கள் மீது 406 வன்முறைகள் ஏவப்பட்டுள்ளன. 2001 தொடங்கி தொடர்ச்சியாக 14,500 வழக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகி உள்ளன. அதாவது சராசரியாக வருசத்துக்கு 1,000, தினசரி 3. 2006-15 காலகட்டத்தில் வருசத்துக்கு 20 தலித்துக்கள் கொலை, 45 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். 

இவ்வருடம் மே 22 அன்று ராஜுலா என்ற ஊரில் உள்ள தலித் காலனிக்கு ‘பசுப்பாதுகாவலர்கள்அதாவது இந்துத்துவா தீவிரவாதிகள் வந்தார்கள். பெரிய கார்களிலும் பைக்குகளிலும் வந்தவர்கள் கையில் வாள், கத்தி, இரும்புக்கம்பி, கட்டை போன்ற ஆயுதங்கள்; தலித்துக்களின் கை கால்களை அடித்து உடைத்தார்கள், செல்போனில் வீடியோ எடுத்து ‘மற்றவர்களுக்கும் இதே கதிதான்என்று அச்சுறுத்தினார்கள் (உனாவிலும் இதுவே நடந்தது). அப்பகுதியின் தலித் உரிமைப்போராளியான ரமேஷ்பாய் பபாரியா என்பவர் இவ்வன்முறை நிகழ்வை வீடியோவுடன் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றார், எப்போதும்போலவே காவல்துறை அலட்சியம் செய்தது. நீங்கள் கொண்டுவந்த வீடியோவை நம்ப நாங்கள் என்ன முட்டாள்களா?என்று கேலி செய்தார்கள். மறுநாள் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள், ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்னும் பலபேர் மீது வழக்குப்பதியவில்லை. இதற்குப்பிறகு ஒரு நடவடிக்கையும் இல்லை.எனவே மே 31 அன்று மீண்டும் காவல்நிலையம் சென்றார்கள். 

தலித் உரிமைப்போராளியான பிரேமபாய் ராத்தோட் “நாங்கள் காவல்துறைமீது நம்பிக்கை இழந்தோம்; இதன்பின் போலீஸ் இருக்கும்போதே அதே கும்பல் தலித்துக்களை மீண்டும் தாக்கியது. எனவே ஜுலை 7 என்று குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கோரி அம்ரேலி தொடங்கி ராஜுலா வரையிலான 70 கி.மீ. தூரத்திற்கு மோட்டர்சைக்கிள் பேரணி நடத்தினோம். ஆனால் ஜூலை 11 உனா தாக்குதல் பெரிய பிரச்னையானதால் மே மாத வழக்கில் ஆறு பேரை போலீஸ் கைது செய்ததுஎன்று சொல்கின்றார்.

2012இல் (மோடி முதலமைச்சர்) இதே உனாவில் ஒரு தலித்தை வீட்டிலேயே எரித்துக்கொன்றார்கள், இக்கொலையை ‘கவுரவக்கொலைஎன போலீஸ் மூடிமறைக்க முயற்சிக்கின்றது; உண்மை என்னவெனில் அத்தலித் குடும்பத்தாருக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் சாதி இந்துக்களின் சதி இக்கொலையின் பின்னணியில் உள்ளது என அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றார்கள்.

ஜுலை 11 உனா தாக்குதலுக்கு முன்பாக ராஜுலாவில் ஒரு தலித்தும் அவரது தலித் அல்லாத மனைவியும் கொல்லப்பட்டார்கள், மற்றொரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞர் எரிக்கப்பட்டார். ஜுலை 11 தாக்குதலுக்குப்பிறகு மனம் உடைந்த பாதுகாப்புணர்வை முற்றிலும் இழந்த 30 தலித்துக்கள் தற்கொலை முயற்சியில் இறங்கினார்கள், சிலர் மரணமுற்றனர்.

உண்மையில் ஜூலை 11 தாக்குதலின் பின்னாலும் தலித்துக்களின் வீடு-நில அபகரிப்பு சதியே உள்ளதாக தலித்துக்கள் சரியாகவே குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான விஷ்ரம்பாய், ரமேஷ்பாய் ஆகியோரின் தந்தையான பாபுபாய் வீராஸ்பாய் சரோவ்யா “கிராமத்தலைவரான பிரபுல்லாபாய் கொராட் என்பவர் சாதி இந்துக்களாகிய ‘பசுப்பாதுகாவலர்களோடு சேர்ந்துகொண்டு எங்களது இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்கத்திட்டமிட்டுள்ளார். இந்த இட்த்தை நாங்கள் மாடுகளின் தோலை உரிக்கப் பயன்படுத்துகின்றோம்என்று சொல்கின்றார். ஜுலை 11 ‘பசுப்பாதுகாவலர்கள்இரண்டு பெரிய கார்களில் வந்தார்கள்; ஒரு காரில் கிர் சோமநாத் சிவசேனா தலைவர்என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அகமதாபாத்தில் உள்ள ‘தலித் ஹக் ரக்‌ஷக் மஞ்ச்அமைப்பின் நிர்வாகியான ராஜு சோலங்கி என்பவர் “பாபுபாய் கூறுவதில் வியப்பில்லை; தலித்துக்கள் மீதான தாக்குதலுக்கு எப்போதும் மையமாக இருப்பது நிலமே. நிலஅபகரிப்பை நோக்கமாகக் கொண்டுதான் உயர்சாதி இந்துக்கள் போலீசுடனும் மாநில அரசின் நிர்வாகத்துடனும் கூட்டணி வைக்கின்றார்கள்என்று அம்பலப்படுத்துகின்றார்.

குஜராத்தின் கிர் காடுகள் சிங்கங்களுக்கு புகழ் பெற்றவை. கிர் காடு மூன்று மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் மாடுகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம். சாலைகளின் நிலைமையோ படுகேவலம் என்பதும் சாலைகளில் அடிபட்டு சாகின்ற மாடுகள், சிங்கங்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் மாடுகள் என மாடுகள் சாவதும் சர்வசாதாரணம்; இறந்த மாடுகளை அப்புறப்படுத்தி தோலை உரித்து பொருளாதாரத்தை அமைத்துக்கொள்வதே இப்பகுதி தலித் மக்களின் பாரம்பரியமான தொழிலாக உள்ளது; உயிருடன் இருக்கும் மாடுகளை யாரும் கொல்வதில்லை என்பதே உண்மை.
ஜூலை 11 தாக்குதல் தேசமெங்கும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது என்பது ஒருபுறம்; ஆனால்  ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ ‘வைப்ரண்ட் குஜராத்’ ‘க்ளோரிஃபையிங் குஜராத்’ ‘விகாஸ் குஜராத்’ ‘விகாஸ் புருஷ்’ (வளர்ச்சிநாயகன் மோடி) ‘அச்சே தின் போன்ற வலதுசாரி தீவிரவாத ஆர் எஸ் எஸ் கும்பலின் இருபத்தைந்து வருட போலி கோசங்களும் உள்ளீடற்ற வெற்றுவிளம்பரங்களும்தான் உண்மையில் தேசமெங்கும் அம்பலமானது  என்பது ஆர் எஸ் எஸ் இந்துத்துவா கும்பலுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

இதன் பின் ஜுலை 31 அன்று மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பல்லாயிரம் தலித் மக்கள் திரண்ட மாபெரும் மாநாட்டில் தங்களது எதிர்ப்புக்குரலை அழுத்தமாகப்பதிவு செய்தார்கள்; தலித் அத்யாச்சர் லடத் சமிதி (தலித்துக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான இயக்கம்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக ஜிக்னேஷ் மேவானி என்பவர் தேர்வுசெய்யப்பட்டார்; மேவானி வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், மனித உரிமைப்போராளி. தாங்கள் சமூகத்தில் மதிப்புடன் வாழ்வதன் பொருட்டு குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும், நாகரிகமான வேலைகள் வேண்டும் என குஜராத் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். முக்கியமாக ‘இனிமேல் மலம் அள்ள மாட்டோம், சாக்கடை வார மாட்டோம், செத்தமாடுகளை அப்புறப்படுத்துவது தோலை உரிப்பது போன்ற வேலைகளைச் செய்ய மாட்டோம்என உறுதியேற்றார்கள். ‘மாடுகளை தமது தாய் என்று சொல்பவர்கள்தான் தமது தாய் இறந்துபோகும்போது அப்புறப்படுத்தும் கடமையைச் செய்ய வேண்டியவர்கள், இனிமேல் அந்த வேலையை அவர்களே செய்துகொள்ளட்டும்என்று பிரகடனம் செய்து சங்பரிவாருக்கும் உயர்சாதி இந்துக்களுக்கும் அதிர்ச்சிவைத்தியம் செய்துள்ளார்கள். செத்த மாடுகளை அள்ளி மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்களில் வீசி எறிந்தார்கள்; கிர் சோம்நாத் மாவட்டமும் குஜராத்தின் பல பகுதிகளும் செத்த மாடுகளால் நாற்றம் எடுத்து அழுகி வீசின. இந்துத்துவாவின் உண்மையான அழுகிய சாதீயஅரசியல் குஜராத்தின் வீதிகளில் புழுத்து நாறி அம்பலமானது.

ஆகஸ்ட் 5 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட பெரும் பாதயாத்திரை ஆகஸ்ட் 15 அன்று 400 கி.மீ. தொலைவில் உள்ள உனா நகரை வந்து அடைந்த்து. வழியெங்கும் உள்ள கிராமங்களின் தலித் மக்கள் மேலே உறுதிமொழிகளை ஏற்றார்கள். யாத்திரையில் தலித் சமூகத்தின் பல நூறு பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றது எழுச்சியான ஒன்று.  பேரணி சென்ற வழி நெடுகிலும் முற்போக்கு இயக்கத்தவர்கள், சாதிமத மறுப்பாளர்கள், தொழிற்சங்கத்தினர், எழுத்தாளர்கள், சமூகப்போராளிகள், பெண்கள், இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். இஸ்லாமியமக்களும் இணைந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2002 கலவரங்களின்போது ‘இஸ்லாமியர்களே உங்கள் எதிரிகள், அவர்களை துரத்தியடித்தால் உங்களுக்கு வீடுகளும் நிலமும் கிடைக்கும்என்று தலித் மக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்பரிவார் கும்பல் தூண்டிவிட்டதையும் தங்கள் சமூகம் அதற்கு இரையானதையும் ஏமாந்துபோனதையும் இப்போது வேதனையுடன் குறிப்பிடுகின்றார்கள். பஞ்சாப், பிஹார், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சமூகப்போராளிகள் தாங்களாகவே முன்வந்து இந்த யாத்திரையில் இணைந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன் காலத்தின் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கியமான சமூக இழிவுகள், எழுச்சிகளை பதிவு செய்து வருகின்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் பாதயாத்திரையில் கலந்துகொண்டு பதிவுசெய்துள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று உனாவில் நடந்த தேசியக்கொடியேற்றத்தில் ‘ஐந்து ஏக்கர் வேண்டும்என்ற கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய சாதியக்கட்டமைப்பில் இருந்து வெளியே வரவும் தமக்கான சமூக அந்தஸ்தை நிலைநிறுத்துவதன் பொருட்டும் ஆன அடிப்படை உரிமையான கோரிக்கை இது. ஆகஸ்ட் 15 அன்று உனாவில் முடிவுற்ற பேரணியில் தேசியக்கொடியேற்றி ‘இன்றுதான் எங்களுக்கு உண்மையான சுதந்திரதினம்என்று அவர்கள் பிரகடனம் செய்ததில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த குஜராத்தில் தலித் இயக்கங்கள் அவரது கொள்கைகளோடு முரண்படுகின்றார்கள்; தெய்வத்தின் பிள்ளைகள் எனப்பொருள்படும் அரிஜன் என்ற சொல்லை உருவாக்கியவர் காந்தி. இந்துமதத்தை அதன் சாதியக்கட்டமைப்புக் குலையாமல் பாதுகாப்பதில் காந்தி மிகக்கவனமாக இருந்தார் என்பது வெளிப்படை; அவரது ‘ராமராஜ்யத்தில்தலித்துக்களுக்கு (அல்லது அரிஜன் மக்களுக்கு) எத்தகைய வாழ்க்கை வாய்க்கும் என்பதற்கு தெளிவான உதாரணமே குஜராத். இயல்பாகவே இடதுசாரி இயக்கங்கள் பலஹீனமாக இருக்கின்ற குஜராத்தில் தலித் மக்களை இடதுசாரிகளின் பின்னால் அணிதிரட்டுவது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆர் எஸ் எஸ், சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், பிஜேபி ஆகிய வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் ‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்என தெருத்தெருவாக நின்று கூவினாலும் தலித் உள்ளிட்ட ஆயிரம் சாதிகளைக் கொண்ட இந்துமத மக்களை அடுத்த பத்தாயிரம் வருடங்கள் கழித்தாலும் ‘ஒன்றுபடுத்த முடியாது என்ற உண்மையை சாதி மறுப்பாளர்களை விடவும் வலதுசாரி ஆர் எஸ் எஸ் அமைப்பும் அதன் கொடுக்கு அமைப்புக்களும் தெளிவாகவே புரிந்துகொண்டுள்ளார்கள். ஆயிரம் சாமிகளை வைத்திருக்கும் இந்துமதம் தலித்துக்களையும் தலித்துக்களின் சாமிகளையும் தள்ளியேதான் வைத்திருக்கின்றது. உயர்சாதி சாமிகள் உயர்சாதி இந்துக்களைப் போலவே பொன்வேய்ந்த வானுயர்ந்த கோவில்களில் ‘அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆனால் உயர்சாதியினர்க்கு சொந்தமானஅரசாங்க சாமிகளாக இருப்பதையும் தலித்துக்களின் சாமிகள் தலித்துக்களைப் போலவே ஊருக்குவெளியே வெட்டவெளிகளில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தபடியும் இருப்பதையும் பார்க்க முடிகின்றது. உயர்சாதி கார்ப்பொரேட் சாமியார்களைப் போலவே உயர்சாதி சாமிகளும் கார்ப்பொரேட் சாமிகளாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.

இத்தகைய பின்னணியில் ‘ஐந்து ஏக்கர் நிலம்என்ற கோரிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. “நாங்கள் அரசுக்கு 30 நாட்கள் கெடு விதிக்கின்றோம்; போர்ர்களத்திலிருந்து நாங்கள் விடுக்கும் செய்தியாகும் இது. எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் நாங்கள் ரயில் மறியல் செய்வோம். பட்டிதார் சாதியினரால் (ஹர்திக் படேல்) ஒன்பது மாதங்கள் சிறையில் இருக்க முடியும் எனில் என்னால் இருபத்தேழு மாதங்கள் இருக்க முடியும்என்று சொல்கின்றார் ஜிக்னேஷ் மேவானி. படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையோடு ஹர்திக்படேல் என்ற இளைஞனை தூண்டிவிட்டதன் பின்னணியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு இருந்தது. எங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையெனில் யாருக்குமே இட ஒதுக்கீடு கூடாதுஎன்பது ஹர்திக்படேலின் குரல் அல்ல, ஆர் எஸ் எஸ்சின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான குரலாகும். பெருமளவு படேல் சமூகத்தவரின் வாக்குகளை குறிவைத்து குஜராத்தின் ஆன்ந்திபென் படேல் அரசு படேல் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்தது, ஆனால் உச்சநீதிமன்றம் இந்த ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்தது சங்பரிவார் எதிர்பாராத இடியாகும்.

குஜராத்தின் உண்மை முகம் அம்பலமானதில் பதட்டம் அடைந்த  (அடல்பிஹார் வாஜ்பேயி, அத்வானி போன்ற ‘இளைஞர்களைஆட்சியில் அமர்த்தி வேடிக்கை காட்டிய) சங்பரிவார், ஆனந்திபென் படேலுக்கு ‘வயசாகிவிட்டதாக சாக்குச்சொல்லி அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது. ஒபாமாவுடனும் அம்பானி அதானியுடனும் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே வாயைத் திறக்கும் நரேந்திரமோடி வேறு வழியின்றி செங்கோட்டையில் நின்றுகொண்டு தலித்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உனா தாக்குதலில் ஈடுபட்ட தான் சார்ந்த சங்பரிவார் கூட்டத்தை நேரடியாக குறிப்பிட வக்கற்ற பிரதமர் ‘சுடுவதாக இருந்தால் என்னைச் சுடுங்கள்என்று முகம் தெரியாத எதிரியை சவாலுக்கு அழைத்ததுபோல் நாடகம் போட்டார்.
(தொடரும்)


குஜராத் – அழுகி நாறும் ‘இந்துத்துவா மாடல்’ - 1




குஜராத்தில் இயங்கும் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான இயக்கம் (Movement for Secular Democracy) என்னும் அமைப்பு 14.7.2016 அன்று அம்மாநில ஆளுநருக்கு சமர்ப்பித்துள்ள மனுவில் இவ்வாறு சொல்கின்றது: இத்தேசம் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தலித்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னுதாரணத்தை குஜராத் மாநிலம்உருவாக்கியுள்ளதைக் கண்டு வேதனையுறுகின்றோம்.  கிர் சோமநாத் மாவட்டத்தில் உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.  இந்நிகழ்வு குறித்து முழுமையாக விசாரிக்க நீதிவிசாரணைக்கமிசன் அமைக்க வலியுறுத்துகின்றோம்.  தலித்துக்கள் மீதான தொடர்தாக்குதல்கள் குஜராத்தில் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரத்தைப் பாருங்கள்:
பனஸ்கந்தா மாவட்டம் – 1133
ஜுனாகத் -830
சுரேந்திரநகர் -756   
அகமதாபாத் – 693
இவையன்றி ஒவ்வொருவருடமும் 20 தலித்துக்கள் கொல்லப்படுகின்றார்கள், 50 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். எனவே தலித்துக்கள் மீதான தாக்குதல்கள் நட்த்தப்பட்ட மாவட்டங்களின் காவல்துறைத்தலைமை, நிர்வாகத்தலைமையில் உள்ளவர்களை தண்டிக்க வேண்டும்; காவல்துறை நிர்வாகத்தில் தலித்துக்கள் மீதான வேற்றுமை பாராட்டுதல், வஞ்சகங்களைக் களைய வேண்டும்; நம் சமுதாயத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட  மக்களைக்குறித்து காவல்துறைக்கும் அரசு நிர்வாகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”.

இவ்வியக்கத்தின் நிர்வாகிகள் மட்டுமின்றி முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, நடனக்கலைஞரும் சமூகப்போராளியும் ஆன மல்லிகா சாராபாய் உள்ளிட்ட சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பல்வேறு துறையினரும் இம்மனுவில் கையழுத்திட்டு உள்ளனர்.

குஜராத்தின் உனா என்னும் ஊரில் 2016 ஜூலை 11 அன்று செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு தலித் இளைஞர்களை காரில் கட்டிவைத்து இரும்புக்கம்பிகளால் கட்டைகளால் தாக்கியவர்கள் இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ அல்லர்; இந்துமதத்தை சேர்ந்த ‘பசுப்பாதுகாவலர்கள்என்ற போர்வையில் வந்த வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதிகளே அவர்கள். 

“1986இல் எனது நண்பர் ஒருவர் குஜராத்தின் கோலானா கிராமத்தில் தலித் உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றைக்கட்ட முயன்றார். அக்கிராமத்தில் தலித் மக்களுக்கு எதிரான உழைப்புச்சுரண்டலை எதிர்த்தும் நிலங்களின் மீதான தலித்துக்களின் உரிமைக்காகவும் போராடினார். அவரை சுட்டுக்கொன்றார்கள். எனவே குஜராத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுவதும் தாக்கப்படுவதும் நீண்ட நெடுங்காலமாகவே நடக்கின்ற ஒன்றுதான்என்று சொல்பவர் மார்ட்டின் மக்வான். 1988இல் நவ்சர்ஜன் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை நிறுவி தலித்துக்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றார். உனாவில் நடந்த தாக்குதல் புதியதல்ல என்பதையே இவ்வாறு சொல்கின்றார்.

2012இல் முதலமச்சராக இருந்தவர் நரேந்திரமோடி. அப்போது சுரேந்திரநகர் மாவட்டம் தங்கத் என்னும் ஊரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நான்கு தலித்துக்கள் இறந்தார்கள். தார்னேதார் எனும் திருவிழாவில் கடைகள் போடுவதில் தலித்துக்களுக்கும் பார்வாத் சாதியினருக்கும் இடையே தகராறு எழுந்ததை தொடர்ந்து வெடித்த கலகத்தில்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டடது. ‘இச்சம்பவத்தில் தடயங்கள், சாட்கள் தெளிவாக இல்லை என்று அரசாங்கமே சொல்கின்றது. எனவே நீதிமன்றமும் இவ்வழக்கை ‘சிவகுப்பு வழக்கு நிலுவையில் வைத்துள்ளது. எனவே உண்மையான குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் இருக்கின்றார்கள். அரசு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே தலித்துக்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நடத்த ஆதிக்கசாதியினர்க்கு துணிச்சலைத் தருகின்றதுஎன்கின்றார் மக்வான். தங்கத் கலகத்தில் ஏகே47 எந்திரத்துப்பாக்கிகளால் போலீஸ் சுட்டதாக தெரிகின்றது. ஆனால் குற்றப்பத்திரிக்கையே இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. மூன்று நபர் விசாரணைக்குழு ஒன்ற அமைத்தார் மோடி. ஆனால் நான்கு வருடங்களுக்குப்பின்னும் கமிட்டி அறிக்கையை குஜராத் அரசு வெளியிடவில்லை என்றால் யாரைக்காப்பாற்ற? இப்போதும் பிஜேபிதான் ஆட்சியில் உள்ளது.

“குஜராத்தில் மக்கள்தொகையில் தலித்துக்களின் எண்ணிக்கை 7.5%. இந்தியாவில் உள்ள தலித்துக்களின் எண்ணிக்கையில் இது 2.33%. ஆனால் தலித்துக்களின் மீதான தாக்குதல்கள் என்றால் தேசியப்பட்டியலில் குஜராத்தே முதல் பாதியில் உள்ளது. தேசிய செட்யூல்ட்சாதி ஆணையம், தேசியக்குற்றப்பதிவேடுகள் அலுவலகம் ஆகியவற்றின் புள்ளிவிவரங்கள் சொல்வது இதுதான். தங்கத் துப்பாக்கிச்சூட்டில் தலித்துக்கள் உடலில் துப்பாக்கிக்குண்டுக்காயம் இருப்பதாக போஸ்ட்மார்டம் அறிக்கை சொல்கின்றது. நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினோம், ஆனால் மாநில அரசு அலட்சியம் செய்வதால் அரசாஙத்தின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றோம்என்கின்றார் மக்வான். 

நாங்கள் இயக்கத்தை தொடங்கிய காலத்தில் குஜராத்தில் தலித்துக்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மொத்தவழக்கில் 4% மட்டுமே; நாங்கள் தொடர்ந்து போராடி வருவதன் விளைவாக இப்போது இது 28-29% ஆக உயர்ந்துள்ளது. ‘தீண்டாமையைப் புரிந்துகொள்வது’ (Understanding Untouchability) என்ற தலைப்பில் 2010இல் குஜராத்தில் நாங்கள் ஒரு ஆய்வு நடத்தினோம்.  1,569 கிராமங்களில் 98,000 மக்களிடம் ஆய்வு நட்த்தினோம். 98 வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதை அறிந்தோம். பள்ளிகளில், மதிய உணவுத்திட்டத்தில், தேநீர்க்கடைகளில், கோவிகளில், பொது இடங்களில், பொதுக்கிணறுகளில் என எல்லா இடங்களிலும் தீண்டாமை ஒவ்வொரு விதத்தில் பரவி உள்ளது. எமது ஆய்வை அரசிடம் அளித்தோம். ஆனால் எமது ஆய்வின் முடிவுகளை மறுப்பதற்காகவே அன்றைய முதல்வர் மோடி அரசுத்தரப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்; பெயரளவில் ஐந்து கிராமங்களில் ஒரு ‘ஆய்வைசெய்து தீண்டாமை குறித்து மவுனம் சாதிக்கும் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கச்செய்தார். குஜராத்தில் இப்போதும்  பொதுக்கிணறுகளில் தலித்துக்கள் நீர் எடுக்க முடியாது; தேநீர்க்கடைகளில் இரண்டு தம்ளர்கள்தான், 90%  கோவில்களில் தலித்துக்கள் நுழைய முடியாது. 54% பள்ளிகளில் தலித் மாணவர்களை தனியே பிரித்துவைத்துள்ளார்கள்; தலித்துக்கள் தமக்கான சுடுகாடுகளை தனியே வைத்துக்கொண்டுள்ளார்கள், சாதி இந்துக்கள் தமது சுடுகாடுகளில் தலித்துக்களை அனுமதிப்பதில்லை.
தலித்துக்களுக்கு கல்வி அளித்து நாகரிகமான வேலைவாய்ப்புக்களை அளிக்க அரசு மறுக்கின்றது. மாநில அரசு வேலைகளில் செட்யூல்ட் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 64,000 காலியிடங்களை அரசு இன்னும் நிரப்பவே இல்லை என்னும் உண்மை சொல்வதென்ன? ஆனால் மலம் அள்ளுவது, செத்தமாடுகளை அப்புறப்படுத்துவது, தோலுரிப்பது போன்ற தலித்துக்களுக்கான ‘பாரம்பரியவேலைகளை செய்யவே நிர்ப்பந்தப்படுத்துகின்றார்கள். கல்வியும் பிற நாகரிகமான வேலைகளும்  இல்லாத சூழலில் சாதிய அடிப்படையிலான பலநூறு ஆண்டுகள் பழமையான இழிவான வேலைகளை செய்யவே திட்டமிட்ட வகையில் தலித்துக்கள் குஜராத்தில்  தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

“பள்ளிகளில் தலித் சமூகமாணவர்களை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றார்கள். 2010இல் நாங்கள் நடத்திய ஆய்வில் சவ்ராஷ்ட்ரா பகுதியில் 1,500 மாண்வர்கள் நேரடியாக எங்களிடம் சொன்னதே இது. பொதுஇடத்தில் மக்களிடம் நேரடியாக நட்த்தப்பட்ட விசாரணையில் குஜராத் உயர்நீதிமன்றநீதிபதியிடம் மாணவர்களின் பெயர்கள், கிராமங்கள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகவே கொடுத்து முறையிட்டோம். ஆனால் அரசாங்கம் இதுவரையிலும் ஒன்றும் செய்யவில்லைஎன்கின்றார் மக்வான்.

குஜராத்தில் தலித்துக்கள் சமூகத்தின் எல்லாத்தளங்களிலும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளார்கள். நிலச்சீர்திருத்தம் குஜராத்தில் தலித்துக்களுக்கு ஒன்றுச்செய்திடவில்லை. “1996-2000 காலத்தில் நவ்சர்ஜன் அமைப்பு, 6,000 ஏக்கர் நிலம் தலித்துக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக அரசுப்பதிவேட்டில் இருந்ததையும் உண்மையில் இவ்வாறு கொடுக்கப்படவே இல்லை என்பதையும் கண்டுபிடித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தோம்; ஆனால் குஜராத் அரசு இவ்விசயத்தில் இன்றுவரை ஒன்றுமே செய்யவில்லை. குஜராத்தில் தலித்துக்கள் வாழும் 12,500 கிராமங்களில் 250 கிராமங்களில் மட்டுமே இந்த 6,000 ஏக்கர் நிலமோசடி நடந்துள்ளது எனில் ஒட்டுமொத்த மாநிலம் எங்கும் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வது சிரம்மான ஒன்றல்ல; குஜராத்தில் தலித்துக்களின் வாழ்க்கை மிகமோசமாக இருப்பதற்கு நிலப்பகிர்வில் அலட்சியம்-மோசடி என்பது முக்கியமான காரணம்என்கின்றார். 

‘நூறு வருடங்களுக்கு முன்னர் படேல் சமூகத்தினர் சூத்திரர் எனப்படும் கீழ்சாதியினராகத்தான் இருந்தார்கள். யு.என்.தேபர் 1948-54 காலக்கட்டத்தில் சவ்ராஷ்ட்ரா முதல்வராக இருந்தபோது நிலச்சீர்திருத்தத்தை செம்மையாக அமல்படுத்தினார், படேல் சமூகத்துக்கு நிலப்பகிர்வு செய்தார். பலனாக இன்று படேல் சமுகம் குஜராத்தில் பொருளாதார மட்டத்திலும் சமூக அந்தஸ்து மட்டத்திலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம்.  ஆக நிலச்சீர்திருத்தமும் நிலப்பகிர்வும் மட்டுமே தலித்துக்களின் வாழ்க்கைத்தரத்தில் சமூக அந்தஸ்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது உறுதிஎன்கின்றார் மக்வான்.

அகமதாபாத்தின் முன்னணி தலித் உரிமைப்போராளியான அசோக் ஸ்ரீமாலி என்பவர் “நீண்ட நெடுங்காலமாக குஜராத்தில் தலித்சமூகத்தின் நிலைமையை ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்தே வந்துள்ளன; 1985ஆம் வருடம் குஜராத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அப்போது மாநிலத்தில் தலித்துக்கள் நீண்ட நாட்கள் போராட்டம் நட்த்தினார்கள். உனாவில் நடந்த சம்பவத்தை சமூக ஊடகங்கள் இப்போது வெளிஉலகுக்குக் கொண்டுவந்துள்ளதால் குஜராத்தின் உண்மை நிலைமை அம்பலமாகி உள்ளதுஎன்று சொல்கின்றார்.
(தொடரும்)