சனி, டிசம்பர் 14, 2013

தொப்புள்கொடிகளும் மலக்குடல்களும்-9

37) முற்றத்திறப்புவிழாவில் “யாயும் யாயும் யாராகியரோ” என்ற குறுந்தொகைப்பாடலின் நவீன வடிவமாக பிஜேபியின் பொன்.ராதாகிருஸ்ணனை தாயப்பன் இப்படி வரவேற்றாராம்: ”நீங்கள் காவி, நாங்கள் கருப்பு உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி இருந்தாலும் நாம் இருவரும் தமிழன் எனும் வகையில் ஒன்று கலந்தோமே”. ஆஹா! பெரியாரைக் கேவலப்படுத்துவதில் ஆர் எஸ் எஸ்-காரர்களையும் மிஞ்சுகின்றார்கள் இனமானக்காவலர்கள். மலக்குடல் நாற்றம் தாங்கமுடியவில்லை. 

38) பிஜேபி ஆள்கின்ற மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு மகிந்த ராஜபக்சே வந்தபோது, அங்கே போராட்டம் நடத்த நேரடியாக சென்ற வைகோவின் கழுத்தில் தொப்புள்கொடிகள் கன்னாபின்னாவென சிக்கிக்கொண்டன. சிக்கியது அது ஒன்றும் முதல் முறை அல்ல. தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் ம.தி.மு.க, பா.ம.க, தி.மு.க மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தார்கள் (காங்கிரசோ பிஜேபியோ தேசிய முன்னணியோ வேறு எதுவுமோ...திமுக அந்த அமைச்சரவையில் நிச்சயம் இருக்கும், அது என்ன தொப்புள்கொடியோ!). 2000 ஏப்ரலில் சிங்கள இராணுவத்தை புலிகள் முற்றுகை இட்டார்கள்; உதவி கேட்ட இலங்கை அரசுக்கு ஆதரவாக வாஜ்பாய், ”புலிகள் இந்த முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும், அவர்களை விடுவிக்க வேண்டும், இல்லையென்றால் இங்கிருந்து இந்திய படைகள் அனுப்பப்படும்” என்று எச்சரித்தார். அவ்வாறே புலிகள் விலகினார்கள். இந்த உடன்பாட்டுக்கு உதவிய தொப்புள்கொடிகள் யார் யார் என்ற கேள்வியும் இக்கட்டுரையைப் பொருத்தவரை இரண்டாம்பட்சம்.

39) 2014 நாடாளுமன்றத்தேர்தல் (குறைந்த பட்சம்) அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்தியாவின் அரசியல்-பொருளாதார தலைவிதியை நிர்ணயம் செய்யும். 1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலை சற்றே நினைவில் கொள்வோம்.

40) 1989ஆம் ஆண்டு விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களின் தலைமையில் ஆன ஒரு கூட்டணி அரசு அமைந்தது; இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் அமலாக்கினார்; இது பார்ப்பனீய சக்திகளுக்கும் அவர்களின் இயக்கமான பிஜேபி ஆர் எஸ் எஸுக்கும் உவப்பானதாக இல்லை; மேலும் ரத யாத்திரை என்ற பெயரில் நாடெங்கும் ஒரு ரத்தக்களறியை ஏற்படுத்தி டெல்லி நாற்காலிக்கு குறிவைத்து அத்வானி நடத்திய ரத யாத்திரைக்கு பிஹாரில் லாலுபிரசாத் முற்றுப்புள்ளி வைத்தார்; விளைவு வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பிஜேபி விலக்கிக்கொண்டது, வி பி சிங் அரசு கவிழ்க்கப்பட்டது; அதன் பின் காங்கிரஸ் ஆதரவுடன் சில மாதங்களுக்கு பிரதமராக இருந்த சந்திரசேகர் 1991 மார்ச் ஆறாம் நாள் பதவி விலகினார்.


41) காங்கிரஸ் அல்லாத பிஜேபி அல்லாத ஒரு கூட்டணி, குறிப்பாக இடதுசாரிகளின் செல்வாக்குடன் ஆன ஒரு கூட்டணி, மத்தியில் ஆட்சியில் அமரும் என்பதை ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பாக நடந்த வாக்குப்பதிவுகள் உறுதி செய்வனவாக இருந்தன. உலகமயம் தனியார்மயம் தாராளமயம் என்ற மூன்று பெரும் தீமைகளின் பிறப்பிடமான அமெரிக்காவும் அதன் உலகமய பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களும் 1991 தேர்தலை ஆழ்ந்து கவனித்து வந்தனர்; அத்தகைய ஒரு கூட்டணி ஆட்சியில் அமர்வது தங்களது உலகளாவிய கொள்ளைக்கு, குறிப்பாக தமது இலக்கான 100 நூறு கோடி மக்களைக் கொண்ட பரந்து விரிந்த சந்தையான இந்தியாவில் ஆட்சியில் அமர்வது பெரும் தடங்கலாக அமையும் என்று உணர்ந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம்; விளைவு ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்; ‘நாங்கதான் உலகத்துலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடாக்கும்’ என்று எப்போதுமே பீத்திக்கொள்ளும் தேர்தல் ஆணையம், 1991 மே 21க்குப் பின் நடக்கவிருந்த வாக்குப்பதிவை 12 முதல் 15 நாட்களுக்கு தள்ளி வைத்தது; அதாவது ஒரு தனி நபரின் மரணத்தை காரணம் காட்டி ஆகப்பெரும் ஒரு தேசத்தின் வாக்குப்பதிவையே தள்ளி வைத்தது. அது தற்செயலான ஒன்றல்ல என்பதை அதன் பின் நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் தெளிவாக காட்டின; ராஜீவ் கொலைக்கு முன்பான 211 தொகுதிகளில் காங்கிரஸ் மிகப்பரிதாபமான வாக்குக்களைப் பெற்றதாக தெரிய வந்தது; ராஜீவ் காந்தி கொலையின் மீதான மக்களின் அனுதாப அலையை காங்கிரஸ் அறுவடை செய்ய 21ஆம் தேதிக்குப் பின் தொடர்ந்த பத்து நாட்களும் மிக உறுதியாகப் பயன்படுத்தப் பட்டன; தொலைக்காட்சிகளில் ராஜீவ் மரணக்காட்சிகள், அவரது தாத்தா காலத்தில் இருந்து அந்தக் குடும்பம் இந்திய மக்களுக்காக தங்களை எப்படியெல்லாம் ‘அர்ப்பணித்துக்’ கொண்டது போன்ற ‘வரலாறுகள்’ மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு மக்களின் அனுதாபத்தை காங்கிரஸ் அறுவடை செய்தது; காங்கிரஸ் இறுதியாக 244 இடங்களை பெற்றது; பிஜேபி 120; தேர்தல் முடிந்தபின் நரசிம்மராவ் பிரதமர் ஆனார், மன்மோஹன் சிங் என்ற முன்னாள் மத்திய அரசு ஊழியர், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் நிதியமைச்சர் ஆனார். அமெரிக்காவும் உலக கார்ப்பொரேட் முதலைகளும் விரும்பியவாறே உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் பட்டன; மக்களின் அனுதாபத்தை அறுவடை செய்தது காங்கிரஸ் அல்ல, அமெரிக்காதான் என்பதை கடந்த 20 வருட பொருளாதார சீரழிவு வரலாறு தெள்ளென நிரூபிக்கின்றது. ...

...தொடரும்

கருத்துகள் இல்லை: