மத்திய சென்னை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அக்டோபர் 11 அன்று மக்களிசை மேதை எம்.பி. சீனிவாசன் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. நிகழ்ச்சிக்கு நாடகவியலாளர் பிரளயன் தலைமை வகித்தார்.
1925 செப்டம்பர் 19ஆம் நாள் பிறந்த எம்.பி. சீனிவாசன், ஓர் இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆகவும் மிகச்சிறந்த இசைக் கலைஞராகவும் இருந்தார். தென்னிந்தியத் திரைப்படத்தொழிலாளர்களுக்கான முதலாவது தொழிற்சங்கத்தை தொழிற்சங்கச் சட்டம், 1926இன் கீழ் பதிவு செய்த இடதுசாரி இயக்கவாதி எம்.பி. சீனிவாசன் ஆவார். அவரால் நிறுவப்பட்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இப்போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ மூன்று லட்சம் திரைப்படத் தொழிலாளர்கள் இன்றளவும் அவரால் பயன் பெற்று வருகிறார்கள். மட்டுமின்றி சேர்ந்திசை என்ற சமுதாய கூட்டிசையை தமிழகத்திலும் இந்தியாவிலும் மக்களிடையே கொண்டு சென்ற முன்னோடியாக அவர் இருந்தார்.
எம்.பி. சீனிவாசன் அவர்களால் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழுவின் செயலாளராக பொறுப்பு வகித்த டி. ராமச்சந்திரன் இப்போது அக்குழுவின் கலை இயக்குனராக பொறுப்பு வருகின்றார். குழுவின் பெயர் இப்போது சென்னை எம்.பி.எஸ் சேர்ந்திசைக் குழு என்று மாற்றப்பட்டுள்ளது. டி. இராமச்சந்திரன் எம்.பி. சீனிவாசனிடம் இசை கற்றுக் கொண்ட நேரடி மாணவர் ஆவார்.
நூற்றாண்டு விழாவில் தனது இசைக்குழுவினருடன் பாடல்களை அரங்கேற்றிய டி. இராமச்சந்திரன் தனது உரையில் பேசியதாவது:
இசை எல்லோருக்கும் பொதுவானது. எல்லோருக்குள்ளும் இசை இருக்கிறது, அதை வெளியே கொண்டு வருவதுதான் நமது வேலை என்பார் எம்.பி. சீனிவாசன். இசை குறித்த கேள்வி ஞானம் மட்டுமே இருந்த எனக்கும் எமது குழுவின் உறுப்பினர்களுக்கும் எம்.பி. சீனிவாசன்தான் இசைஞானத்தைப் புகட்டினார். ஒரு பாடலை எழுதிய பாடலாசிரியர் எந்த உணர்வுடன் அந்தப் பாடலை எழுதியிருப்பார், அவர் சொல்ல வருவது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வதுதான் ஒரு பாடகனின் அடிப்படையான வேலை. அந்த உணர்வுடன் பாட வேண்டும், பாடலின் உள்ளே இருந்து பாட வேண்டும் என்று எம்.பி.எஸ் கூறுவார். ஒரு பாடலைப் பாட வேண்டும் என்றால் முதலில் அந்தப் பாடலின் உட்கருத்தை எங்களுக்குப் புரிய வைப்பார். பாடலின் உணர்வுக்கு ஏற்ப பாடுபவர் உணர்ச்சிப் பூர்வமாக இருக்க வேண்டும், இசை மணம் இருக்க வேண்டும், இசைப்பிணம் அல்ல என்பார் எம்.பி.எஸ்.
பன்னிரண்டு மொழிகளில் நாங்கள் பாடுகிறோம். எனவே பிறமொழிப் பாடல்களைப் பாடும்போது அந்தந்த மொழியின் சரியான உச்சரிப்புடன் பாட வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருப்பார். அந்த மொழி தெரிந்த ஒருவரை அருகில் வைத்து எங்களுக்குப் பயிற்சி அளிப்பார். ஒரு தெலுங்குப் பாடலில் ஒரே ஒரு எழுத்தின் உச்சரிப்பை எங்கள் குழுவினர் சரியாகச் சொல்லவில்லை என்பதற்காக எங்களை இருபத்தைந்து முறை மீண்டும் மீண்டும் உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தார்.
அவரிடமிருந்து நாங்கள் இசையை மட்டுமே கற்றுக் கொள்ளவில்லை. ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கான நற்குணங்களை தன்னுடைய வாழ்க்கையில் அவர் எப்போதும் கடைப்பிடித்து வந்தார். அடுத்த மனிதனைப் பற்றிய அக்கறை வேண்டும், அடுத்த மனிதன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் அவரது நிலையான பண்பாக இருந்தது. பிறர் அறியாமல் அவர் மற்றவர்களுக்கு செய்கிற உதவிகள் ஏராளம். அவரால் பயன் பெற்றவர்கள் ஏராளம் என்பதை நானே அறிவேன். ஆனால் அவர் இது பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
சேர்ந்திசை மூலம் அடுத்த தலைமுறையும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே மிகப்பல பயிற்சிப்பட்டறைகளை நடத்தினார். அவரது பாரம்பரியத்தை நாங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்களும் பள்ளிக்குழந்தைகளுக்கு தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வருகிறோம். பள்ளிக் குழந்தைகள் 6,000 பேரை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து எம்.பி.எஸ். சேர்ந்திசை நிகழ்ச்சி நடத்தினார். அவரது சேர்ந்திசைப் பாரம்பரியத்தை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுத்துக் கொள்வோம்.
எம்.பி. சீனிவாசனின் தந்தை மானாமதுரை பாலகிருஷ்ணன். இவரது தம்பி எம். ஆர். வெங்கட்ராமன் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் 1964க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் இருந்தார். இவர்களது தம்பி கல்யாணசுந்தரம் சர்க்கரைத் தொழில்நுட்ப நிபுணர். அவரது மகள் ஜெயந்தி. சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழுவில் ஜெயந்தியும் ஒரு பாடகர். விழாவில் ஜெயந்தி அவர்கள் ஆற்றிய உரை:
எனது தாத்தா ராவ் பகதூர் ராமசாமி சிவன், பாட்டி லட்சுமி ஆகியோர் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எங்களது குடும்பத்தினர் அனைவருமே ஜாதி மத பேதங்களை மறுத்தவர்கள். பாரம்பரியமான சடங்குகள், ஆச்சாரங்களை மறுத்து அவற்றைக் கைவிட்டவர்கள். எங்களது பாட்டி லட்சுமி அவரது காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் ஒன்பது கெஜம் மடிசார் கட்டிக்கொண்டு பெரிய ஆண்கள் கூட்டத்தின் மத்தியில் கலந்து கொண்டார். எங்களது குடும்பத்தில் பல மதத்தவர்களும் ஜாதியினரும் இருக்கிறார்கள். எமது குடும்பத்தில் தாத்தா, பாட்டி உட்பட மிகப் பலரும் இசை அறிவும் திறனும் பெற்றவர்கள். எனது பெரியப்பா எம்.ஆர். வெங்கட்ராமன் அவர்களும் சிறந்த இசை அறிவு படைத்தவர், நல்ல பாடகர்.
நானும் எனது சகோதரியும் எம்.பி.எஸ். இசைக்குழுவில் இணைந்து இசை கற்றுக்கொண்டோம். அவரது நேர்மை, உழைப்பு, திறமை ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து வியந்தோம். இங்கே சேர்ந்திசை நிகழ்த்தப்பட்டபோது நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன். அவர் இன்னும் பல காலம் வாழ்ந்து இருக்க வேண்டியவர். அவரது மகத்தான பணி திரையுலகத்திற்கு இன்னும் தேவைப்பட்டது. அவர் மிகச்சிறந்த நேர்மையாளர். தனக்கு சரி என்று பட்டதை எதையும் அவர் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து காட்டியவர். எனவேதான் பட வாய்ப்புகள் அவருக்கு மறுக்கப்பட்டன. ஆயினும் தனது பொருளாதார நிலைமை பற்றி அவர் என்றுமே பொருட்படுத்தியது இல்லை. 'விளம்பரப்படங்களில் வரும் வருவாயைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்துவேன்' என்று பகிரங்கமாக சொன்னவர் அவர்.
அவருக்குத் தரப்பட வேண்டிய உரிய இடத்தையும் மரியாதையையும் தமிழ்ச்சினிமா உலகம் கொடுக்கவில்லை என்பது துயரமான உண்மை. அவரது மனைவி ஜகிதா உண்மையில் எம்.பி.எஸ்சின் உற்ற நண்பராக இருந்து அவருக்கு வலதுகரமாக விளங்கினார். எல்லா சூழ்நிலைகளிலும் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. பலதரப்பட்ட தளங்களிலும் வெளிவரும் நூல்களை தொடர்ந்து வாசிப்பார். வாசிப்பும் இசையும் அவரது மூச்சாக இருந்தன. உலக மக்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவர் இல்லை, சாதி பேதம் எதுவும் இல்லை, மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை அவர் தன் வாழ்வில் நேர்மையாகக் கடைப்பிடித்தார். அவர் எங்களுக்கு கற்றுத் தந்த உயர்ந்த விழுமியம் அதுதான். அவர் அன்று சொன்னதை நாங்கள் இன்று வரையிலும் எங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கிறோம்.
நான் எம்.பி.எஸ்ஸின் குடும்பத்தை சார்ந்தவர் என்ற வகையில் இந்த விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். வாழும் காலத்தில் மறக்கப்பட்ட அந்தக் கலைஞனை இப்போது உலகம் கொண்டாடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவதை எனது உறவினர் மல்லிகாவின் மூலம் அறிந்த பாடகர் உஷா உதுப் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்து செய்தியை அனுப்பி இருக்கிறார் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மாநாட்டில், எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாட வேண்டும், சென்னையில் அவரது சிலையை நிறுவ வேண்டும், அவரது பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. விழாவில் மு. இக்பால் அகமது எழுதிய 'மக்களிசை மேதை எம்.பி. சீனிவாசன்' என்ற நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
...
தீக்கதிர் வண்ணக்கதிர் 19.10.2025
புகைப்படத்தில்: விழாவில் உரையாற்றிய திரு.டி இராமச்சந்திரன், திருமதி. ஜெயந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக