செவ்வாய், ஏப்ரல் 27, 2021

லெனினுக்குப் பிடித்த நூல்கள்

லெனினுக்குப் பிடித்த நூல்கள்

(Ilyich's favourite books: Nadezhda Krupskaya)

(தமிழில்: மு இக்பால் அகமது)

என்னை இலியிச்சுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தி இருந்த தோழர் இப்படித்தான் சொல்லியிருந்தார்: அவர் விஞ்ஞான நூல்களை மட்டுமே வாசிப்பார், நாவல், கவிதை பக்கம் எல்லாம் அவர் போனதே இல்லை. எனக்கு வியப்பாக இருந்தது. என் இளமைப்பருவத்தில் செவ்வியல் இலக்கியங்களை முழுமையாக வாசித்திருக்கிறேன். Lermontov வின் எழுத்துக்கள் எனக்கு முற்றிலும் மனப்பாடம், Chernyshevsky, Lev Tolstoi, Uspensky ஆகியோரின் படைப்புக்களோ என் வாழ்வின் அங்கமாகவே இருந்தன. ஆனால் இப்படியான படைப்புகளைப் பற்றி ஒரு எழுத்தும் அறியாத ஒரு மனிதரும் இங்கே இருக்கின்றார் என்பது அதிசயம்தான்.

பின்னர் இலியிச்சுடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்கிய பின்னர், அவர் தன் சக மனிதர்களை எவ்வாறு மதிக்கின்றார், வாழ்க்கையையும் மக்களையும் எவ்வாறு உற்றுக் கவனிக்கின்றார் என்பதை நான் உணரத்தொடங்கினேன். மக்களைப்பற்றி எழுதப்பட்ட எந்த ஒரு நூலையும் வாசித்திடாத ஒரு மனிதர் என்ற என் அபிப்பிராயத்தை உயிர்ப்புடன் துலங்கிய இலியிச் உடைத்தார். 

எங்களது அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் இடையே வாசிப்பு, நூல்கள் ஆகியன குறித்துப்பேச எங்களுக்கு நேரம் வாய்த்தது இல்லை. ஆனால் பிற்காலத்தில் சைபீரியாவில் நாங்கள் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தபோதுதான் நான் உணர்ந்தேன், நான் வாசித்திருந்த செவ்வியல் இலக்கியங்களை அவரும் அறிந்திருந்தார், மட்டுமின்றி துர்கனேவை அவர் மீண்டும் மீண்டும் வாசித்திருந்தார். புஷ்கின், லெர்மோண்டோவ், Nekrasov ஆகியோரின் நூல்களை நான் சைபீரியாவுக்கு கொண்டுவந்திருந்தேன். தன் படுக்கை அருகே ஹெகலின் நூல்களுடன் இந்த நூல்களையும் இலியிச் அடுக்கி வைத்தது மட்டுமின்றி நாள்தோறும் மாலை வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் புஷ்கின். 

ஒரு எழுத்தாளரின் நடை மட்டுமே அவரைக் கவர்ந்திழுக்கும் என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, சேர்ணிசெவ்ஸ்கியின் What is to be done? என்ற நூலை அவர் ஆழ்ந்து வாசித்தார். அந்த நூலின் நடை பற்றி பெரிதாக சொல்லிட ஒன்றுமில்லை ஆனாலும் அந்த நூலின் மையமான கருத்துக்களை அவர் வாசித்து உள்வாங்கிய விதத்தை கண்டு நான் வியப்படைந்தேன். உண்மை என்னவென்றால் சேர்ணிசெவ்ஸ்கியின் எழுத்துக்களை அவர் மிகவும் நேசித்தார். சைபீரியாவில் வைத்து இருந்த அவரது புகைப்பட சேகரிப்பில் சேர்ணிசெவ்ஸ்கியின் இரண்டு புகைப்படங்களையும் இலியிச் வைத்து இருந்தார், ஒரு படத்தில் அவரது பிறந்தநாள், இறந்தநாள் இரண்டையும் குறிப்பிட்டு வைத்து இருந்தார். மட்டுமின்றி, எமிலி ஜோலா, ரஷிய எழுத்தாளர்கள் ஆன Herzen, Pisarev ஆகியோரின் படங்களும் இருந்தன.  Goethe எழுதிய Faust, Heineஇன் ஒரு கவிதைதொகுப்பு ஆகியவற்றின் ஜெர்மானிய பதிப்புகளை சைபீரியாவில் நாங்கள் வைத்திருந்தோம்.

மியூனிக்கில் அவர் இருந்தபோது வாசித்தவற்றில் Gerhardt எழுதிய Bei Mama, Polenz எழுதிய Buttnerbauer ஆகிய நூல்கள் இருந்தது எனக்கு நினைவில் உள்ளது.

பாரிசில் நாங்கள் இரண்டாவது முறை குடியேறியபோது, விக்டர் ஹியூகோவின் Chatiments ஐ அவர் விரும்பி வாசித்தார். இந்த நூல் 1848 புரட்சி குறித்தது. ஹியூகோ வெளிநாடுகளில் இருந்து எழுதுவார், நூல்கள் பிரான்சுக்குள் கடத்தப்படும். ... எழுத்தாளர் Montegusஐ அவர் மிகவும் நேசித்தார். பாரிஸ் கம்யூனின் உறுப்பினர்களில் ஒருவரின் மகனான மான்டேக், உழைப்பாளிகள் அடர்ந்த பகுதிகளில் அவர்களின் பிரியத்திற்குரிய பிரபல எழுத்தாளர் ஆக விளங்கினார். அவரது பாடல்களில் வாழ்க்கையை பற்றிப்பாடுவார், அவற்றில் தத்துவ சார்பு எதுவும் இருக்காதுதான், ஆனால் அவரது பாடல்கள் மக்களோடு நெருங்கி இருந்தன. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மறுத்த 17ஆவது ரெஜிமெண்ட் வீரர்களை போற்றிப்பாடும் Greeting to the 17th Regiment பாடலை இலியிச் அவ்வப்போது பாடிக்கொண்டு இருப்பார். 

எங்கள் வீட்டில் பிரெஞ்சு பெண்மணி ஒருவர் தினமும் இரண்டு மணி நேர வீட்டு வேலைகளை செய்ய வருவார்.  ஒருநாள் Alsace குறித்த ஒரு பாடலை அப்பெண்மணி பாடியதை இலியிச் கேட்டார். அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடுமாறு அவரைக் கேட்டுக்கொண்ட இலியிச், அப்பாடலை மனப்பாடம் செய்து தானே பாடத் தொடங்கினார். "நீங்கள் அல்சேசையும் லொரெய்னையும் கைப்பற்றி விட்டீர்கள், ஆனாலும் என்ன, நாங்கள் ப்ரெஞ்சுமக்களாகவே இருப்போம்; எங்கள் நிலங்களை ஜெர்மானியமயமாக்குவதில் நீங்கள் வெற்றி கண்டிருக்கலாம், ஆனால் எங்கள் இதயங்களை ஒருபோதும் உங்களால் அப்படி மாற்ற முடியாது" என்பது அப்பாடல்....

போர்க்காலத்தில், Barbusse எழுதிய Le Feu என்ற நூலை மிக மிக முக்கியமான நூலாக மதித்து வாசித்தார். அவரது உணர்வுகளுக்கு அந்த நூல் மிக நெருக்கமாக இருந்ததே காரணம்.

... ...

அவருடைய இறுதிக்காலத்தில், புனைவுகளை வாசிக்க சொல்லி கேட்பார், மாலை நேரங்களில் இந்த வாசிப்பு நடக்கும். Shchedrin ஐ வாசித்திருக்கின்றேன். கோர்க்கியின் My Universities ஐ வாசித்திருக்கின்றேன். கவிதைகளை கேட்பார், குறிப்பாக Demyan Bednyயின் கவிதைகள் அவருக்கு விருப்பமானவை. சில நேரங்களில், கவிதைகளை கேட்டுக்கொண்டே இருக்கும் அவர், ஜன்னலுக்கு வெளியே மறையும் சூரியனை ஆழ்ந்து நோக்குவார். 

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஜாக் லண்டனின் Love life என்ற கதையை அவருக்கு வாசித்தேன். அந்த நூல் இப்போது அவரது அறையின் மேசை மேல் இப்போதும் இருக்கின்றது. இதுவரை யாரும் கால் பதித்திடாத பனி படர்ந்த மலை மீது ஒரு மனிதன் நடந்து செல்கின்றான், பட்டினியும் நோயும் அவனை கொன்று கொண்டிருக்க, ஆற்றின் கரையில் அமைந்த ஓடத்துறையை நோக்கி அவன் நகர்கின்றான். தன் சக்தி முழுமையாக வடிந்த பின்பு, நடக்க இயலாது பனி மேல் ஊர்ந்து தவழ்கின்றான். அவனுக்குப் பின்னால் செத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஓநாய் பின் தொடர்ந்து வருகின்றது, அவனையே உணவாகக்கொள்ளும் பெரும் பசியில். செத்துக்கொண்டு இருக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஆன போராட்டத்தில் இறுதியில் மனிதன் வெல்கின்றான். இலியிச் உணர்ச்சிவசப்பட்டார்.

இரண்டாம் நாள் லண்டனின் மற்றொரு கதையை வாசித்தேன். கதை கேட்ட இலியிச் கதையின் இறுதியில் சிரித்தார், தன் கையை ஆட்டினார். அதுவே அவருக்காக நான் கதை வாசித்த இறுதி நாள்.

.... ..... ....

Reminiscences of Lenin by his relatives, Moscow, 1956.

Lenin and Books என்ற நூலில் இருந்து, Progress Publishers, 1971.

கருத்துகள் இல்லை: