வியாழன், ஏப்ரல் 29, 2021

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக

கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக:

1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.

2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்

.... ... ...

மாணவன் எழுதிய கட்டுரை:

(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)

1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் மோனாக்சைடு, Zyklon B என்று அழைக்கப்பட்ட ஹைட்ரஜன் சயனைடு ஆகிய வாயுக்களை மூடப்பட்ட மிகப்பெரும் அறைகளில் செலுத்தி, அடைத்து வைக்கப்பட்ட 10 லட்சம் யூதர்கள், சுமார் 75000 போலந்தியர்கள், 20000 ஜிப்ஸிகள், சிறை பிடிக்கப்பட்ட 15000 சோவியத் வீரர்கள், 10000-15000 செக்கோஸ்லோவாக்கியர், பைலோரஷ்யன், யுக்கோஸ்லோவியர், பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆஸ்திரிய மக்களை கொன்றதாக வரலாறு சொல்கின்றது. இதில் ஹைட்ரஜன் சயனைடு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த பட்டதாக தெரிகின்றது. போலந்தில் ஆறு இடங்களில் அத்தகைய வாயு அறைகள் இருந்ததாகவும் அங்கு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்றும் வரலாறு சொல்வதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்:

1. Auschwitz Birkenau 11லட்சம் - Zyklon B

2. Majdanek 80,000 - Zyklon B

3. Treblinka 8 லட்சம், 4.Belzec 6 லட்சம், 5. Sobibor 250000 - டீசல் எஞ்சினை ஓடவிட்டு அதில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு வாயுவை செலுத்தி கொன்றார்கள்

6. Chelmno 320000 - நடமாடும் வேன்களில் வாயுவை நிரப்பி தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று கொன்றார்கள்.

2. இவ்வாறு செத்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள், தங்கத்தால் ஆன பற்களை வெட்டி எடுத்துக்கொண்டார்கள். பெண்களின் கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டார்கள். பின் அத்தனை உடல்களையும் குவித்து வைத்து எரித்தனர். அவ்வாறு அரைகுறையாக எரிந்த உடல்களை அரைத்து பொடியாக்க ஸ்பெஷல் அரவை எந்திரங்கள் கண்டுபிடிக்கபட்டன. அப்படி கிடைத்த பல்லாயிரம் டன் எலும்பு துகளை Sola, Vistula ஆகிய நதிகளிலும் பிற ஏரி குளங்களிலும் கரைத்தார்கள். அப்படியும் எஞ்சிய துகளைக்கொண்டு சாலைகளில் பள்ளங்களை நிரப்புவது, வயல்களில் உரமாக்குவது என பயன்படுத்தினார்கள். 

3. Union Carbide என்னும் அமெரிக்க கம்பெனி, மத்திய பிரதேசத்தில் போபாலில் ரசாயன தொழிற்சாலை நிறுவியது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 நள்ளிரவில் அந்த தொழிற்சாலையில் இருந்த Methyl Isocyanide என்ற வாயு கசிந்ததால் தூங்கிக்கொண்டு இருந்த பல்லாயிரம் மக்கள் அவ்வாயுவை சுவாசித்து செத்து மடிந்தார்கள். தொழிற்சாலையின் அமெரிக்க நிர்வாகி ஆன வாரன் ஆண்டர்சனையும் இந்தியர்கள் ஆன சில நிர்வாகிகளையும் மாநில அரசு கைது செய்தது. ஆண்டர்சன் ஆறே மணி நேரத்தில் 25000 ரூபாய் ஜாமீனில் வெளியே வந்தார். அன்று ம.பி. காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜுன் சிங்கும் ஆண்டர்சனும் நெருங்கிய நண்பர்கள். ஆண்டர்சன் மாநில அரசு ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் டெல்லி சென்றார், அங்கிருந்து அமெரிக்கா சென்றார், அதன் பின் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆயினும் அவரை அமெரிக்க அரசும் இந்தியாவுக்கு அனுப்பவில்லை, இந்திய அரசு அல்லது அரசுகளாலும் அவரை இங்கே கொண்டு வர முடியவில்லை. அன்றைய பிரதமர் காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி. ஆண்டர்சன் நிம்மதியாக மரணமுற்றார், விச வாயுவால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட, செத்து மடிந்த இந்திய மக்களின் குடும்பங்கள் நிவாரண தொகைக்காக இப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு பிறந்த பல குழந்தைகள் இறந்தன, இப்போதும் உடலும் உள்ளமும் ஊனமுற்ற பல நூறு குழந்தைகள் அல்லது இளைஞர்களை போபாலில் பார்க்கலாம். 9 லட்சம் போபால் மக்களில் சுமார் 20000 பேர் ஒரே நாளில் செத்து மடிந்தனர், 6 லட்சம் பேர் விச வாயுவால் வாழ்நாள் நெடுக பாதிப்புக்கு உள்ளானார்கள்.

4. அதன் பின் நடந்த விசாரணையிலும் பொதுநல அமைப்புகள் மேற்கொண்ட பல்வேறு விசாரணைகளிலும் தெரிய வந்தவை மிக மிக அதிர்ச்சி அளிப்பவை. Carbaryl எனப்படும் பூச்சிக்கொல்லிதான் selvin என்ற பெயரில் அங்கே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரில் எதிரிநாட்டு மக்கள் மீது வீசப்பட்ட Phosgene என்ற ரசாயனமும் மீதைல் ஐஸோ சயனைடும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக மிக அதிகமாக அங்கே இருப்பில் வைக்கப்பட்டன என்பது பல முறைகேடுகளில் ஒன்று மட்டுமே.  அமெரிக்காவில் இருந்த அதே யூனியன் கார்பைடு கம்பெனியில் கடைபிடிக்க பட்ட மிகப்பல கறாரான பாதுகாப்பு, எச்சரிக்கை அம்சங்கள், அளவீடுகள், பயிற்சிகள், ஆபத்துக்கால நடைமுறைகள், நிவாரணங்கள் எதுவுமே இங்கே போபால் உற்பத்தி சாலையில் கடைப்பிடிக்க படவில்லை என்பதே அந்த உண்மை. குறிப்பாக வாயு கசிந்தால் தானாகவே எச்சரிக்கை அடைந்து தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவும் அமெரிக்க தொழிற்சாலையில் தானியங்கி முறையில் computerized   இயங்கின. இங்கே அப்படி இல்லை. அதாவது மத்திய, மாநில அரசுகள் அமெரிக்க முதலாளிக்கு சாதகமாக, உள்ளூர் மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு இருந்தன. 

5. அனில் அகர்வால் என்ற முதலாளி பீகாரில் பிறந்தவர், பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் விற்கும் காயலாங்கடை தொழில் செய்தவர் இங்கிலாந்து சென்றார். Vedanta Resources ltd என்கிற கார்பொரேட் நிறுவனத்தை தொடங்கினார். அம்பானி அதானி மிட்டல் போல இவரும் உழைப்பால் உயர்ந்து உத்தமர் ஆனார், எனவே இயற்கையாகவே ஆளும் உத்தமர்களுக்கும் நண்பர் ஆனார். 2017இல் அவர் சொத்து மதிப்பு 330 கோடி டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் சுமார் 21485 கோடி. 1992 காங்கிரஸ் நரசிம்மராவ் ஆட்சியில் மஹாராஷ்டிராவில் ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 60000 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க அரசு கொடுத்தது. ஸ்டெர்லைட் ஆலை என்று பெயர். ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பையும், கடற்கரை, கடல்சார்ந்த தம் வாழ்க்கை அழிய இருப்பதையும் உணர்ந்த உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடியதால் 15.7.1993 அன்று கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு ஸ்டெர்லைட்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

6. ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுக்கு வந்தார். மாநிலத்தில் அதிமுக, மத்தியில் காங்கிரஸ். 1.8.1994 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியம் TNPCB , தூத்துக்குடியில் தாமிர உற்பத்தி ஆலை அமைந்தால் சாத்தியம் ஆக கூடிய விளைவுகளை ஆய்வு செய்ய தடை இல்லா சான்றிதழ் NOC வழங்கியது. 14.10.1996 அன்று ஆலை தொடங்க மாநில அரசு லைசென்ஸ் வழங்கியது. ஆட்சியில் திமுக, மத்தியில் தேவ கவுடா.

7. 2.3.1999 அன்று தூத்துக்குடி அகில இந்திய வானொலி ஊழியர்கள் வாயுகசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் தவறு ஒன்றும் இல்லை என மாநில அரசு சான்று வழங்கியது. மாநிலத்தில் திமுக, மத்தியில் பிஜேபி வாஜ்பேயி. தவிர, உற்பத்தியை ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்த்தவும் அனுமதி வழங்கினார்கள். நவம்பர், டிசம்பர் 2000த்தில் பெய்த பெருமழைக்கு பின் ஆலையில் தேங்கி இருந்த விச தன்மை வாய்ந்த கழிவுநீரை நிறுவனம் மழை நீருடன் வெளியேற்றியதாக  2.1.2001 அன்று மக்கள் அரசிடம் புகார் செய்தார்கள். மாநிலத்தில் திமுக, மத்தியில் காங்கிரஸ் அரசு.

8. ஸ்டெர்லைட் ஆலை தன் உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழு 21.9.2004 அன்று பரிந்துரைத்தது. தவிர, அரசின் அனுமதி இன்றி உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் ஏற்கனவே ஆலையில் கட்டுமானங்களை ஸ்டெர்லைட் ஏறத்தாழ முடித்து இருந்ததையும் கண்டுபிடித்தனர். இப்போது ஆட்சியில் அதிமுக, மத்தியில் காங்கிரஸ். ஆனால் மறுநாளே மத்திய வனங்கள், சுற்றுசூழல் அமைச்சகம், ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி சான்று வழங்கியது.

9. 16.11.2004 அன்று TNPCB சமர்ப்பித்த அறிக்கையில், அனுமதி இல்லாத அதிக உற்பத்தி, புதிய உற்பத்தி ஆலைகள் இருப்பதை சொன்னது. ஆனால் 7.4.2005 அன்று மத்திய அமைச்சகம், உயர்த்தப்பட்ட உற்பத்திக்கு அனுமதி வழங்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. 2008இல் (திமுக, காங்கிரஸ் ஆட்சிகள்), மேலும் உற்பத்தியை அதிகரித்தது ஸ்டெர்லைட்.

10. 1996இல் வைகோவும் பிறரும் தொடர்ந்த வழக்கில், 28.9.2010 அன்று ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆட்சியில் திமுகவும் காங்கிரசும். 1.10.2010 அன்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதிக்க, லைசென்ஸ் இல்லாத உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடர்ந்தது! அக்ட்டோபார் 2010-ஏப்ரல் 2013 இடைக்காலத்தில் 3 தொழிலாளர்கள் விபத்தில் இறந்தார்கள், எட்டு விபத்துக்கள் நேர்ந்தன. 

11. 23.3.2013 அன்று (அதிமுக, காங்கிரஸ் அரசுகள்) சல்பர் டை ஆக்சைட் பெருமளவு கசிந்து தூத்துக்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். TNPCB வழக்கம்போல அமைதி காத்தது. மக்கள் போராடியதால் 29ஆம் தேதி ஆலையை மூட உத்தரவு இடப்பட்டது. கசிவு தன் ஆலையில் ஏற்பட்டது அல்ல என ஸ்டெர்லைட் வாதிட்டது. ஏப்ரல் 2 2013 அன்று உச்சநீதிமன்றம் இப்படி சொன்னது: ராணுவம், மின்சாரம், வாகன உற்பத்தி என பல தொழில்களுக்கும் தாமிரம் வேண்டும். 1300 பணியாளர்கள் வேறு வேலை செயகின்றார்கள். ... எனவே ஸ்டெர்லைட்டுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கின்றோம், ஆனால் ஆலையை மூட அவசியமில்லை. 

12. இதன் பின் 22.5.2018, மாநிலத்தில் அதிமுக, மத்தியில் பிஜேபி, அன்று தூத்துக்குடியில் போலீஸ் மக்களை நெஞ்சிலும் தலையிலும் சுட்டதில் 13 பேர் உயிர் இழந்தார்கள். 28ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது வேதாந்தா முதலாளி இரக்கப்பட்டு ஆக்சிஜன் தயாரித்து மக்களுக்கு தர முன் வந்துள்ளார். அவர் இரக்கத்தை பாராட்டாமல் என்ன செய்வது? ஹிட்லர் கேஸ் அறைகளில் 3150000 பேரை மட்டும்தானே கொன்றான்? அவனை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்?

செவ்வாய், ஏப்ரல் 27, 2021

லெனினுக்குப் பிடித்த நூல்கள்

லெனினுக்குப் பிடித்த நூல்கள்

(Ilyich's favourite books: Nadezhda Krupskaya)

(தமிழில்: மு இக்பால் அகமது)

என்னை இலியிச்சுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தி இருந்த தோழர் இப்படித்தான் சொல்லியிருந்தார்: அவர் விஞ்ஞான நூல்களை மட்டுமே வாசிப்பார், நாவல், கவிதை பக்கம் எல்லாம் அவர் போனதே இல்லை. எனக்கு வியப்பாக இருந்தது. என் இளமைப்பருவத்தில் செவ்வியல் இலக்கியங்களை முழுமையாக வாசித்திருக்கிறேன். Lermontov வின் எழுத்துக்கள் எனக்கு முற்றிலும் மனப்பாடம், Chernyshevsky, Lev Tolstoi, Uspensky ஆகியோரின் படைப்புக்களோ என் வாழ்வின் அங்கமாகவே இருந்தன. ஆனால் இப்படியான படைப்புகளைப் பற்றி ஒரு எழுத்தும் அறியாத ஒரு மனிதரும் இங்கே இருக்கின்றார் என்பது அதிசயம்தான்.

பின்னர் இலியிச்சுடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்கிய பின்னர், அவர் தன் சக மனிதர்களை எவ்வாறு மதிக்கின்றார், வாழ்க்கையையும் மக்களையும் எவ்வாறு உற்றுக் கவனிக்கின்றார் என்பதை நான் உணரத்தொடங்கினேன். மக்களைப்பற்றி எழுதப்பட்ட எந்த ஒரு நூலையும் வாசித்திடாத ஒரு மனிதர் என்ற என் அபிப்பிராயத்தை உயிர்ப்புடன் துலங்கிய இலியிச் உடைத்தார். 

எங்களது அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் இடையே வாசிப்பு, நூல்கள் ஆகியன குறித்துப்பேச எங்களுக்கு நேரம் வாய்த்தது இல்லை. ஆனால் பிற்காலத்தில் சைபீரியாவில் நாங்கள் நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தபோதுதான் நான் உணர்ந்தேன், நான் வாசித்திருந்த செவ்வியல் இலக்கியங்களை அவரும் அறிந்திருந்தார், மட்டுமின்றி துர்கனேவை அவர் மீண்டும் மீண்டும் வாசித்திருந்தார். புஷ்கின், லெர்மோண்டோவ், Nekrasov ஆகியோரின் நூல்களை நான் சைபீரியாவுக்கு கொண்டுவந்திருந்தேன். தன் படுக்கை அருகே ஹெகலின் நூல்களுடன் இந்த நூல்களையும் இலியிச் அடுக்கி வைத்தது மட்டுமின்றி நாள்தோறும் மாலை வேளைகளில் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் புஷ்கின். 

ஒரு எழுத்தாளரின் நடை மட்டுமே அவரைக் கவர்ந்திழுக்கும் என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, சேர்ணிசெவ்ஸ்கியின் What is to be done? என்ற நூலை அவர் ஆழ்ந்து வாசித்தார். அந்த நூலின் நடை பற்றி பெரிதாக சொல்லிட ஒன்றுமில்லை ஆனாலும் அந்த நூலின் மையமான கருத்துக்களை அவர் வாசித்து உள்வாங்கிய விதத்தை கண்டு நான் வியப்படைந்தேன். உண்மை என்னவென்றால் சேர்ணிசெவ்ஸ்கியின் எழுத்துக்களை அவர் மிகவும் நேசித்தார். சைபீரியாவில் வைத்து இருந்த அவரது புகைப்பட சேகரிப்பில் சேர்ணிசெவ்ஸ்கியின் இரண்டு புகைப்படங்களையும் இலியிச் வைத்து இருந்தார், ஒரு படத்தில் அவரது பிறந்தநாள், இறந்தநாள் இரண்டையும் குறிப்பிட்டு வைத்து இருந்தார். மட்டுமின்றி, எமிலி ஜோலா, ரஷிய எழுத்தாளர்கள் ஆன Herzen, Pisarev ஆகியோரின் படங்களும் இருந்தன.  Goethe எழுதிய Faust, Heineஇன் ஒரு கவிதைதொகுப்பு ஆகியவற்றின் ஜெர்மானிய பதிப்புகளை சைபீரியாவில் நாங்கள் வைத்திருந்தோம்.

மியூனிக்கில் அவர் இருந்தபோது வாசித்தவற்றில் Gerhardt எழுதிய Bei Mama, Polenz எழுதிய Buttnerbauer ஆகிய நூல்கள் இருந்தது எனக்கு நினைவில் உள்ளது.

பாரிசில் நாங்கள் இரண்டாவது முறை குடியேறியபோது, விக்டர் ஹியூகோவின் Chatiments ஐ அவர் விரும்பி வாசித்தார். இந்த நூல் 1848 புரட்சி குறித்தது. ஹியூகோ வெளிநாடுகளில் இருந்து எழுதுவார், நூல்கள் பிரான்சுக்குள் கடத்தப்படும். ... எழுத்தாளர் Montegusஐ அவர் மிகவும் நேசித்தார். பாரிஸ் கம்யூனின் உறுப்பினர்களில் ஒருவரின் மகனான மான்டேக், உழைப்பாளிகள் அடர்ந்த பகுதிகளில் அவர்களின் பிரியத்திற்குரிய பிரபல எழுத்தாளர் ஆக விளங்கினார். அவரது பாடல்களில் வாழ்க்கையை பற்றிப்பாடுவார், அவற்றில் தத்துவ சார்பு எதுவும் இருக்காதுதான், ஆனால் அவரது பாடல்கள் மக்களோடு நெருங்கி இருந்தன. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மறுத்த 17ஆவது ரெஜிமெண்ட் வீரர்களை போற்றிப்பாடும் Greeting to the 17th Regiment பாடலை இலியிச் அவ்வப்போது பாடிக்கொண்டு இருப்பார். 

எங்கள் வீட்டில் பிரெஞ்சு பெண்மணி ஒருவர் தினமும் இரண்டு மணி நேர வீட்டு வேலைகளை செய்ய வருவார்.  ஒருநாள் Alsace குறித்த ஒரு பாடலை அப்பெண்மணி பாடியதை இலியிச் கேட்டார். அப்பாடலை மீண்டும் மீண்டும் பாடுமாறு அவரைக் கேட்டுக்கொண்ட இலியிச், அப்பாடலை மனப்பாடம் செய்து தானே பாடத் தொடங்கினார். "நீங்கள் அல்சேசையும் லொரெய்னையும் கைப்பற்றி விட்டீர்கள், ஆனாலும் என்ன, நாங்கள் ப்ரெஞ்சுமக்களாகவே இருப்போம்; எங்கள் நிலங்களை ஜெர்மானியமயமாக்குவதில் நீங்கள் வெற்றி கண்டிருக்கலாம், ஆனால் எங்கள் இதயங்களை ஒருபோதும் உங்களால் அப்படி மாற்ற முடியாது" என்பது அப்பாடல்....

போர்க்காலத்தில், Barbusse எழுதிய Le Feu என்ற நூலை மிக மிக முக்கியமான நூலாக மதித்து வாசித்தார். அவரது உணர்வுகளுக்கு அந்த நூல் மிக நெருக்கமாக இருந்ததே காரணம்.

... ...

அவருடைய இறுதிக்காலத்தில், புனைவுகளை வாசிக்க சொல்லி கேட்பார், மாலை நேரங்களில் இந்த வாசிப்பு நடக்கும். Shchedrin ஐ வாசித்திருக்கின்றேன். கோர்க்கியின் My Universities ஐ வாசித்திருக்கின்றேன். கவிதைகளை கேட்பார், குறிப்பாக Demyan Bednyயின் கவிதைகள் அவருக்கு விருப்பமானவை. சில நேரங்களில், கவிதைகளை கேட்டுக்கொண்டே இருக்கும் அவர், ஜன்னலுக்கு வெளியே மறையும் சூரியனை ஆழ்ந்து நோக்குவார். 

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஜாக் லண்டனின் Love life என்ற கதையை அவருக்கு வாசித்தேன். அந்த நூல் இப்போது அவரது அறையின் மேசை மேல் இப்போதும் இருக்கின்றது. இதுவரை யாரும் கால் பதித்திடாத பனி படர்ந்த மலை மீது ஒரு மனிதன் நடந்து செல்கின்றான், பட்டினியும் நோயும் அவனை கொன்று கொண்டிருக்க, ஆற்றின் கரையில் அமைந்த ஓடத்துறையை நோக்கி அவன் நகர்கின்றான். தன் சக்தி முழுமையாக வடிந்த பின்பு, நடக்க இயலாது பனி மேல் ஊர்ந்து தவழ்கின்றான். அவனுக்குப் பின்னால் செத்துக்கொண்டு இருக்கும் ஒரு ஓநாய் பின் தொடர்ந்து வருகின்றது, அவனையே உணவாகக்கொள்ளும் பெரும் பசியில். செத்துக்கொண்டு இருக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் ஆன போராட்டத்தில் இறுதியில் மனிதன் வெல்கின்றான். இலியிச் உணர்ச்சிவசப்பட்டார்.

இரண்டாம் நாள் லண்டனின் மற்றொரு கதையை வாசித்தேன். கதை கேட்ட இலியிச் கதையின் இறுதியில் சிரித்தார், தன் கையை ஆட்டினார். அதுவே அவருக்காக நான் கதை வாசித்த இறுதி நாள்.

.... ..... ....

Reminiscences of Lenin by his relatives, Moscow, 1956.

Lenin and Books என்ற நூலில் இருந்து, Progress Publishers, 1971.

புதன், ஏப்ரல் 21, 2021

மாஸ்கோவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கள்: சவுகத் உஸ்மானியின் நினைவலைகள்

மாஸ்கோ 1921: ஹோட்டல் லக்ஸில் அவர்கள் கண்ட பகல்களும் இரவுகளும் 

(Moscow 1921: Days and Nights at Hotel Lux)

ஆங்கிலத்தில்: Suchetana Chattopadhyay 

தமிழில்: மு இக்பால் அகமது

1. 1920 டிசம்பர் இறுதியில், சோவியத் யூனியன் தாஸ்கென்ட்டில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் வேகம் அதிகம் இல்லாத ஒரு ரயிலில் மாஸ்கோ நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தார்கள். அது ஒரு சவுகரியமான பயணம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்நாட்டுப்போரின் விளைவாக மக்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவிய போதும், இந்த ரயிலில் போர்வைகள், விரிப்புக்கள், தலையணைகள், குளிரில் இருந்து தப்பிக்க வெப்ப வசதிகள் என தரப்பட்டிருந்தன. பயணத்தின்போது, சோசலிசம் குறித்தும் இந்திய அரசியல் குறித்தும் விவாதித்துக்கொண்டு சென்றார்கள். முன்னாள் முஹாஜிர் மாணவர்கள் ஆன அப்துல் மஜீத், சவுகத் உஸ்மானி, அப்துல் காதிர் கான் (இவர் உண்மையில் பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட், ராய் குடும்பத்தினர்க்கு வேண்டப்பட்டவர்) ஆகியோர் மாஸ்க்கோ நகரில் Delovoi Dvor விடுதியிலும் பிற இடங்களிலும் தங்கினார்கள். பகல் பொழுதுகளை பெரும்பாலும் ஹோட்டல் லக்சில் கழித்தார்கள். ஹோட்டலின் ஒரு பொது அறையில், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு ECCI கூட்டங்களை நடத்தினார்கள். இந்த இரண்டு விடுதிகளும்தான் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்கள் கூடும் இடங்களாக இருந்தன. Sen Katayama ( ஜப்பான்), Tom Quelch (பிரிட்டன்), Kuusinen (பின்லாந்து) , Rakosi, Bela Kun (ஹங்கேரி) உள்ளிட்ட பலரும் வருவார்கள், Zinoviev, Radek இருவரும் தினமும் வருகை புரிபவர்கள்.

2. Delovoi Dvor என்ற அந்த விடுதி மிகப்பெரியது, பல அலுவலகங்கள் அங்கே இயங்கின. போருக்கு முந்தைய 1912-13 காலக்கட்டத்தில் பண்டைய கட்டிடக்கலை வடிவை மீட்கும் வகையில் ஆனால் நவ நாகரீகமாக வணிகப்பயன்பாட்டுக்கென கட்டப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அரசியல் நடவடிக்கைகளின் மையம், கூட்டங்கள் கூடும் இடம் எனில் அது லக்ஸ் விடுதிதான். மாஸ்க்கோ நகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான Tverskaya வீதியில் அமைந்திருந்த அந்த விடுதியானது, கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயல்வீரர்கள், வெளிநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இருந்து வரும் விருந்தினர்கள் ஆகியோருக்காகவே இருந்தது. விடுதியின் புகைப்படமே சொல்கின்றது, அதன் மிகச்சிறப்பான கட்டிடக்கலை வடிவம், இத்தாலிய மறுமலர்ச்சி கால கலை வடிவம், Baroque ஆகியவற்றின் சிறப்பான கலவை என்று.

3. லக்ஸ் விடுதியில் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் கூட்டங்களில் கலந்து கொண்ட சுவாரஸ்யமான தலைவர்கள் பற்றி சவுகத் உஸ்மானி இப்படிக்கூறுகின்றார்:

"ஹோட்டல் லக்சின் பொது அறையில் நடந்த ECCI கூட்டங்கள் உண்மையில் மிக மிக சுவாரஸ்யமானவை. எப்படியெனில், உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்களை ஒருவர் அங்கே மிக நெருக்கத்தில் பார்க்கலாம். உயரமான உருவம் கொண்ட Karl Radek, Zionviev, இறுக்கமான முகம் கொண்ட ட்ராட்ஸ்கி. குள்ளமான உருவம் கொண்ட ஆனால் தத்துவங்களும் கூர்மதியும் நகைச்சுவை உணர்வும் நிரம்பி வழியும் மூளைக்கு சொந்தக்காரர் ஆன Bukharin ஐ காணலாம். இன்னும் பல உலகத்தலைவர்கள். ஸ்டாலினின் அடர்ந்த புருவத்தைம் மீசையையும்  யார்தான் மறப்பார்கள்?

4. ஹோட்டல் லக்சில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது உண்டு. அவற்றுள் குரறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு நிகழ்வு. ட்ராட்ஸ்கி ஒருநாள் வந்திருந்தார். அவரிடம் அடையாள சீட்டுகள் எதுவும் இல்லை. கட்டுரையாளர் (உஸ்மானி) விடுதியின் தலைவாசலில் நின்று கொண்டு இருந்ததால் நடந்தவற்றை கவனித்துக்கொண்டு இருந்தார். அடையாள அட்டை இல்லாத ட்ராட்ஸ்கியை, செம்படை வீரர் உள்ளே அனுமதிக்க மறுக்கவே, அவரிடம் ட்ராட்ஸ்கி வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தார். அவர் மறுக்க இவரோ பின்வாங்குவதாக இல்லை. "நான் ட்ராட்ஸ்கி" என்று இவர் சொல்ல, செம்படை வீரர் "Nitchevo" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ட்ராட்ஸ்கியின் மிரட்டும் குரலுக்கு அவர் சற்றும் பயப்படவில்லை, மாறாக ஏதாவது அடையாள சீட்டை காட்டுங்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். விடுதியின் வரவேற்பாளரோ அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருந்தாலும் பிரச்சினையில் தலையிடவில்லை, ஏனெனில் இது ஒழுக்கம் தொடர்பான விசயம். மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதியின் பொது அறையில் கூடி உலக விவகாரங்களை விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். இறுதியாக, மாடியில் கூட்டத்தில் இருந்த புகாரினை வரவேற்பாளர் தொலைபேசியில் அழைத்து கீழே வரச்சொல்லி ட்ராட்ஸ்கியை அடையாளம் காணச்செய்தார், இல்லையேல் பிரச்சனை முற்றி அசிங்கமாக ஆகியிருக்கும். இதுதான் செம்படை ஒழுக்கம் என்பது!"

5. சர்வதேசதலைவர்கள் வந்து போகும் லக்சும் மாஸ்க்கோவின் பிற தொழிற்சங்க அலுவலகங்களும் அவர்களுக்கு ஒரு புதிய அரசியல் பயிற்சிகளமாக விளங்கின. பொருளாதாரம், அரசியல், தொழிற்சங்க இயக்கவாதம் ஆகியவற்றை தான் படித்ததாக சவுகத் உஸ்மானி இப்போது நினைவு கூர்ந்தார். லக்ஸ் ஹோட்டலில் நிலவிய சர்வதேச உணர்வு கொண்ட சூழலும் மாஸ்க்கோவின் தொழிற்சங்க அலுவலகங்களும் அவர்களுக்கான அரசியல் பயிற்சித்தளமாக விளங்கின. பொருளாதாரம், அரசியல், தொழிற்சங்க அரசியல் ஆகியவற்றைப் பயின்றதை உஸ்மானி நினைவு கூர்ந்தார். இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு ரஷிய மொழி தெரியாததால் ஆங்கிலம் அறிந்த அறிஞர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். பிரிட்டனில் இருந்து வந்திருந்த பொருளாதார வல்லுநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆன Fineberg அவர்களுக்கு ஆசிரியராக இருந்தார். அவர் போலந்து-யூத சமூகப்பின்னணி கொண்டவர். Borodin, Tom Quelch, Balabanov தம்பதியர், தொழிற்சங்க தலைவரும் அமெரிக்க கம்யூனிஸ்டுமான Boris Reinstein (ரஷ்ய வம்சாவளியை சேர்ந்தவர்) ஆகியோரும் பயிற்சி அளித்தார்கள். இந்த ஆசிரியர் குழாமுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் இந்திய முகாஜிர் இளைஞர் குழுவுடன் எளிதில் உரையாட முடியும் என்பதுதான் முக்கிய காரணம். மதிய நேரங்களில் ராணுவ வகுப்புகள் நடந்தன. தொழிற்சங்க தலைவர் ஆன  Reinstein எவ்வாறு தொழிலாளர்கள் இயக்கத்தை கட்டுகின்றார் என்று கற்றுக்கொள்ளும் பொருட்டு இந்திய இளைஞர்கள் அவரது அலுவலகத்துக்கும் செல்வார்கள்.

6. அவ்வப்போது பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. கிழக்கு, மேற்கு நாடுகளின் பிரதிநிதிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் பயணங்களில் இந்திய இளைஞர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அது போன்ற ஒரு பயணத்தில் கிரெம்ளினில் நேரடியாகவே லெனினை சந்திக்கும் வாய்ப்பு உஸ்மானிக்கு வாய்த்தது. வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் லெனின் கைகுலுக்கியதுடன் இந்த சந்திப்பு முடிந்தது. மிகக்குறைந்த அறைகலன்கள் கொண்டது லெனினுடைய அறை. கார்ல் மார்க்சின் உருவப்படம் இருந்த தன் அலுவலக அறையின் வாசலில் அவர் நின்றுகொண்டு இருந்தார். 'ஒளிவீசும் கண்களும் ஆளை வீழ்த்தும் புன்னகையும்' கொண்ட லெனினைக் கண்டு உஸ்மானி பரவசப்பட்டார். 1921 ஏப்ரலின் நடுவே மாஸ்க்கோவில் அவர்களது தொடக்கநிலைக்கல்வி முடிந்தது. மாஸ்க்கோவில் புதிதாக தொடங்கப்பட்டு இருந்த University of the Toilers of the East இல் சேர்ந்து பயில மீண்டும் மாஸ்க்கோவுக்கு வந்தபோது கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ் தொடங்க இருந்தது. லக்ஸ் ஹோட்டல் புரட்சியாளர் கூட்டத்தால் மீண்டும் பரபரப்பானது. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் கூட்டமும் இதில் அடங்கும் எனினும் தனிப்பட்ட, அரசியல் கருத்துவேறுபாடுகள் காரணமாக இவர்கள் தங்களுக்குள் பழகாமல் தள்ளி நின்றார்கள். கட்சியை கட்டுவதில் ராயுடனும் முகர்ஜியுடனும் ஏற்பட்ட கடுமையான கருத்துவேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட Abdur Rab, மண்டயம் பி திருமலாச்சார்யா ஆகியோரும் லக்சில் தங்கியிருந்தனர். தவிர, பெர்லின் கட்சிக்குழுவின் உறுப்பினர்கள் ஆன வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, புபேந்திரநாத் தத்தா, Khankhoje, டாக்டர் அப்துல் வாஹித், Ghulam Ambia Khan Luhani, நம்பியார் உள்ளிட்ட 'பல குப்தாக்கள், பல தாஸ்குப்தாக்கள்' - இவர்கள் நாடுகடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய மறுத்தவர்கள் - ஆகியோரும் இருந்தார்கள். உஸ்மானி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்ததால் லக்சில் அவருக்கு அறை கொடுக்கப்பட்டது, மற்றவர்கள் வேறு இடங்களில் தங்கினார்கள். ஆக கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு கூட்டங்களை நேரில் பார்க்கும் பெரும் வாய்ப்பு உஸ்மானிக்கு வாய்த்தது. கட்சி, இயக்கம் ஆகிய நடவடிக்கைகளை தாண்டிய அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்ததாக உஸ்மானியின் பதிவுகள் சொல்கின்றன. லக்ஸ் ஹோட்டலில் இருந்த போல்ஷ்விக் கட்சியின் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், அகிலத்தின் தலைவர்கள் என அங்கு நிலவிய அரிய, காணக்கிடைக்காத சூழ்நிலையை எம் என் ராயும் பதிவு செய்துள்ளார். முதலாம் உலகப்போர், உள்நாட்டுப்போர் ஆகியவற்றின் விளைவாக மக்களுக்கு அத்தியாவசியபொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தாலும், இங்கே தோழமை உணர்வுக்கும் விவாதங்களுக்கும் அதிகாலை வரை நீளும் இசைக்கும் நடனத்துக்கும் குறைவில்லாமல் இருந்தது. 

(முற்றும்)

...... .....

Courtesy: Leftword

...

புகைப்படத்தில் லெனின், மாக்சிம் கோர்க்கி, எம் என் ராய் ஆகியோர் இருக்கின்றார்கள். இரண்டாவது அகிலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். Courtesy: medium.com

... ...

சவுகத் உஸ்மானி: 1901-1978. 1920இல் சோவியத் யூனியனில் நிறுவப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையின் உறுப்பினர்களில் ஒருவர். பிற்காலத்தில் கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்றவற்றில் பிரிட்டிஷ் அரசு அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.