செவ்வாய், அக்டோபர் 24, 2017

பச்சைக்கொடி படரும் ரஷ்கின் பாண்டின் சிறிய அறை



மசூரி. டேராடூனில் இருந்து இரண்டு மணிநேர மலைப்பயணம்.

ஒருகாலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்துள்ளது இந்த ஊர். ஆரவாரமற்ற, எளிமையான அமைதியும் இமயத்தின் குளிரும் இயற்கையின் பேரழகும் மட்டுமே ஆட்சி செய்யும் அந்த மலைப்பிரதேசம் உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.  மசூரிக்கு இரண்டு முறை செல்லும் வாய்ப்பு அமைந்தது.

இரண்டு முறை சென்று திரும்பியபோதும் மனதுக்குள் ‘அவரைச் சந்திக்காமல் வந்து விட்டோமே!
என்ற குற்றவுணர்வு என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றது.

அவர் என்று நான் குறிப்பிடுவது எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட். 1934ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தின் கசாலியில் பிறந்தவர். ஜாம்நகர், சிம்லா,  புதுதில்லி, டேராடூன் ஆகிய ஊர்களில் வளர்ந்தவர். சிறிது காலம் பிரிட்டனிலும் வாழ்ந்தார். இப்போது உத்தர்காண்ட் மாநிலத்தில் மசூரியின் லாண்டூர் கண்டொன்மெண்ட்டில் தான் தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்துடன் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

பள்ளி வாழ்க்கையில் அவரது ஒரு சில கதைகளை வாசித்திருப்போம். அவரது எழுத்துக்கள் நெடுகிலும் டெல்லியில் இளம்பிராயத்தில் அனுபவித்த துயரம் தோய்ந்த வாழ்க்கையின் நினைவுகளும் அதனைத் தொடர்ந்த டேரா டூன் வாழ்க்கையின் நினைவுகளும் பிரியாத நிழலைப்போல் பின் தொடர்கின்றன. பின்னர் அவர் விரும்பித்தேர்ந்தெடுத்துக் கொண்ட மசூரி வாழ்க்கையுடன் பிணைந்த மலைகள், நதிகள், புற்கள், இமயமலைத்தொடர்களுக்கே சொந்தமான பெயர் தெரிந்த தெரியாத மரங்கள், வண்ணமயமான மலர்கள், காற்றின் ஓசையை உணரமுடியாத மலைவெளிகளில் ரகசியமாய் சலசலத்து ஓடும் நீரோடைகளின் மொழி, மழை, பனி, இளங்காலை இமயத்தின் வெயில், அணில்கள், லாங்குர் குரங்குகள், எப்போதாவது யார் கண்ணிலும் பட்டும்படாமலும் மின்னல் போல் பாய்ந்து எதையாவது கவ்விக்கொண்டு ஓடிவிடும் சிறுத்தைகள், சடைவளர்த்து சோம்பித்திரியும் நாய்கள், லாண்டூரின் வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், நூறாண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய கடைகள், அவ்வூரின் மக்கள், மால் ரோட்டின் வணிகம், வணிகர்கள், சுற்றுலாப்பயணிகள், தான் சந்தித்த, கடந்து செல்கின்ற மனிதர்களின் குணங்கள், மனங்கள்  என மலைவாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பூ மலரும் கவனத்துடன் பதிவு செய்கின்றார்.   

சரி, அடுத்த முறை மசூரிக்குப் பயணிக்கும் வாய்ப்பு நேரும் எனில் அவரது சந்திப்பை தவற விடக்கூடாது என்று உறுதியெடுத்துக்கொண்டு என்னை நானே சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியாக அவரது மசூரிக்குச் செல்லும் சாலைகள்’ (Roads to Mussoorie) என்ற நூலை வாசிக்கத்தொடங்கினேன்.

அவரது
Running for Cover (ஓடி ஒளிவது) என்ற பதிவை வாசித்தேன். அவர் எழுதுகின்றார்:

தனிமனிதனின் தனிமைக்கான உரிமை என்பது மேற்கத்திய நாடுகளில் சாத்தியம், கிழக்கத்திய நாடுகளில் இன்றும் சாத்தியமற்ற ஒன்றே.  நான் தனிமையை அனுபவிக்க விரும்பினால் வெட்கம் ஏதுமின்றி பொய் சொல்கின்ற ஒருவனாக மாற வேண்டும் – நான் ஊரில் இல்லை சார்! இந்தப் பொய் வேலைக்கு உதவாது எனில் பெரியம்மையாலோ தட்டம்மையாலோ அல்லது புதிய வகை ஆசிய ஃப்ளூ நோயாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக புளுக வேண்டும்.

இப்போதெல்லாம் நான் மக்களை சந்திப்பதை விரும்பத் தொடங்கியுள்ளேன், சகல விதமான மக்களையும். இப்படியான சந்திப்புக்கள் இல்லையெனில் நான் எழுதுவதற்கான விசயங்கள் எதுவும் இல்லாமல் போகக்கூடும்.
ஆனால் சொல்லவேண்டியது என்னவெனில் ஒரே நேரத்தில் பலரை சந்திப்பதை நான் விரும்புவதில்லை என்பதே. நான் ஒரு கவிதையையோ ஒரு கதையையோ எழுதிக்கொண்டிருப்பேன், அல்லது மதியநேரத்தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பேன், முன்கூட்டிய தகவல் எதுவும் இன்றி அப்போது வந்து கதவைத் தட்டுவார்கள் எனில் நான் அவர்களை வரவேற்பது எவ்வாறு சாத்தியமாகும்? இது போன்ற நேரம்கெட்ட நேரங்களில் வரும் அழையா விருந்தாளிகளை சில நேரங்களில் நான் திருப்பி அனுப்பியதும் உண்டு.

வயதாகிக்கொண்டே போகின்றது, மதியநேரத்தூக்கம் எனக்கு அவசியமான ஒன்றாகின்றது, ஆடம்பரத்துக்கு அல்ல.  ஆனால் அந்த இரண்டு மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கதவைத் தட்டுபவர்களுக்கு அதுதான் ஓய்வு நேரம் என்பதைத்தவிர வேறென்ன இருக்க முடியும்?

இன்றைய மதிய நேரத்தை எப்படி கடத்துவது?

ஒன்றும் பெரிய விசயம் இல்லை! ரஷ்கின் ‘பெரிசைபோய் பார்க்கலாம். அவர் தீவிரமான ஒரு உரையாடலை நமக்கு வழங்குவார் என்பது உறுதி

மதியநேரத்தில் தீவிரமான உரையாடலா? சாக்ரடீஸ் கூட அதை விரும்பமாட்டார், சத்தியம்.

அடடா, இன்று எனக்கு உடல்நிலை சரியில்லை, உங்களைச் சந்திக்க இயலாமைக்கு வருந்துகின்றேன்

என்ன, உடல்நிலை சரியில்லையா? மிகவும் வருந்துகின்றோம். இதோ என் மனைவி, இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர்

என்னை சந்திக்க வருபவர்களில் மிகப்பலர் ஹோமியோபதி மருத்துவர்களாக இருப்பது வியப்புக்குரியது. ஆனால் தலைவலி தொடங்கி ஹெர்னியா வரை குணப்படுத்தும் அவர்களது சர்வரோக நிவாரணிகளை தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்கள் பயன்படுத்துவதில்லை என்பது கெடுவாய்ப்பான ஒன்று.

இப்படித்தான் ஒருநாள், ஒரு குடும்பம் என்னை சந்திக்க  வந்தது, ஆம், முன்னறிவிப்பின்றித்தான். கணவர் ஆயுர்வேத மருத்துவர், மனைவி, வேறென்ன, ஹோமியோபதி மருத்துவர், மூத்த மகன் ஆங்கில மருத்துவ மாணவன்.

‘உங்களுக்கு நோய்கண்டால் என்ன செய்வீர்கள், மூன்றுவித மருத்துவமுறைகளையும் முயல்வீர்களா?என்றேன்.
‘அது நோயின் தன்மையைப் பொறுத்தது
என்றான் மகன். ‘ஆனால் எப்போதாவதுதான் நாங்கள் நோய்வாய்ப்படுகின்றோம். என் சகோதரி யோகா நிபுணர்’.

அவனது சகோதரியைப் பார்த்தேன், ஒரு மல்யுத்த பயில்வான் போல இருந்தாள், யோகா பயிலும் நபரைப்போல் இல்லை. இருபதுகளின் இறுதியில் இருந்த அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் எனது பெருத்த வயிற்றை நோக்கினாள். எனது உடம்பு சரியான வடிவில் இல்லாததை நோக்கினாள்.

நான் உங்களுக்கு சில உடற்பயிற்சிகளை சொல்லித்தருகின்றேன். ஆனால் நீங்கள் அதற்காக லூதியானா வர வேண்டியிருக்கும்என்றாள்.
காரில் சென்றாலே ஆறு மணிநேரம் ஆகும் தொலைவில் லூதியானா இருப்பதை எண்ணி பெரும் ஆறுதல் அடைந்தேன்.
கட்டாயமாக, அங்கே வரும்போது உன்னை சந்திப்பேன். உண்மையில் நான் வந்து ஒரு கோர்ஸ் எடுத்துக்கொள்வேன்

நல்லபடியாக அவர்களை வழியனுப்பி வைத்தேன். ஆனால் எப்போதும் இதுபோல் நல்லபடியாக முடிந்துவிடுவதும் இல்லை.

இப்படித்தான் ஒரு பெண்மணி, மிகவும் பிடிவாதக்காரர், என்ன சொல்லியும் எழுந்துபோவதாக இல்லை, எனக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதாகக் கூடச் சொல்லிப்பார்த்தேன், ம்ஹூம்.

‘நான் உங்களை தேவைகருதியே பார்க்க வந்தேன். நான் ஒரு நாவல் எழுதியுள்ளேன், புக்கர் பரிசுக்கு நீங்கள்தான் பரிந்துரைக்க வேண்டும்
ஐயோ, புக்கர் வட்டாரத்தில் எனக்கு யாரையும் தெரியாதே அம்மா! பிரிட்டனில் என்னை யாருக்கும் தெரியாதே!

போகட்டும், பாதகமில்லை. நோபல் பரிசு?
ஒரு நிமிடம் யோசித்தேன். ‘ஆங்...அறிவியல்துறையில் எனில் பரவாயில்லை. ஜீன்ஸ், ஸ்டெம்செல்ஸ் இப்படி ஏதாவது..?

என்னை ஒரு புழுவாகப்பார்த்தாள். ‘உங்களால் ஒரு பிரயோசனமும் இல்லை
என்றாள்.
‘சரி, உங்கள் நாவலைக் கொடுங்கள், வாசித்துப்பார்க்கின்றேன்
‘இன்னும் எழுதிமுடிக்கவில்லை
‘பரவாயில்லை, முடித்தவுடன் வந்து பாருங்களேன்? ஒரு வருடம், இரண்டு வருடம்... இதுபோன்ற விசயங்களை எல்லாம் அவசரகதியில் செய்யக்கூடாது’. அவருக்கு வாசலைக்காண்பித்து ஒவ்வொரு படியிறங்கும்போதும் உற்சாகப்படுத்தினேன்.

நீங்கள் ஒரு மோசமான நபர். வீட்டுக்குள் வா என்று கூட நீங்கள் அழைக்கவில்லை. உங்களைப் பற்றி குஷ்வந்த்சிங்கிடம் சொல்வேன். அவர் எனது நண்பர். உங்களது நடத்தை பற்றி நிச்சயம் எழுதுவார்

‘அட, குஷ்வந்த்சிங் உங்கள் நண்பர் எனில் என்னை ஏனம்மா தொந்தரவு செய்கின்றீர்கள்? நோபல், புக்கர் வட்டாரமெல்லாம் அவருக்கு அத்துப்படி. பல முக்கியப்புள்ளிகள் எல்லாம் அவருக்கு நெருக்கமானவர்கள்

அப்பெண்மணியை மீண்டும் நான் சந்திக்கவில்லை. ஆனால் எனது தொலைபேசி எண்ணை எவ்வாறோ தெரிந்து கொண்டு வாரம் ஒருமுறை என்னை அழைக்கின்றார், தனது நாவல் நல்லபடியாக வந்துகொண்டிருப்பதாக சொல்கின்றார். என்றாவது ஒருநாள் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியுடன் என் வீட்டுக்கதவைத் தட்டுவது நிச்சயம்.

தாங்கள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டு கையில் புத்தகங்களுடனும்  கையெழுத்துப்பிரதியுடனும் வந்து நிற்கும் அழையா விருந்தாளிகளை நினைக்கும்போது நடுக்கமாக உள்ளது. தங்களது ‘படைப்புக்கள்குறித்த எனது கருத்துக்களை கேட்பார்கள், ஆனால் நான் எனது விருப்புவெறுப்பற்ற கருத்தை சொல்லிவிடுவேன் எனில் அதனை அவர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு எதிர்கால எழுத்தாளனை நோக்கி அவனது நினைவோடை அல்லது நாவல் அல்லது கவிதைத்தொகுப்பை அச்சில் வெளியிடாமல் இருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வதைவிடவும் அறிவுகெட்ட செயல் வேறு எதுவும் இல்லை. நாட்டில் நடக்கும் படுகொலைகள் எல்லாமே தீவிரமான காரணங்களுக்காக மட்டுமே நடக்கின்றன என்று சொல்லமுடியாது. எனவே ‘ஆஹா, அற்புதம்! யாரும் அடிச்சுக்க முடியாது, தொடர்ந்து எழுதுங்கள்!என்று சொல்வதே உத்தமம், உயிருக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்தே உள்ளேன். ஆனால் இதுவும் கூட ஆபத்தில்தான் முடிகின்றது. உடனடியாக ஒரு அணிந்துரையோ முன்னுரையோ எழுதித்தரவும் கூடவே எனது பதிப்பாளருக்கு – அல்லது யாரோ ஒரு பதிப்பாளருக்கு அப்புத்தகத்தை அச்சிடப் பரிந்துரைக்கும் ஒரு கடிதத்தையும் என்னிடம் வேண்டுகின்றார்கள். என் விருப்பம் எதுவும் இன்றி என்னை ஒரு எழுத்து ஏஜெண்டாக ஆக்கிவிடுகின்றார்கள், ஆனால் இதற்கான ஊதியம் எதுவும் தரப்படுவதில்லை.

இப்படியான அணிந்துரைகள் எழுதுவதில் உள்ள அபாயத்தை உங்களுக்கு விளக்கிச் சொன்னால்தான் புரியும். தொடர்ந்து மனிதர்களை வேட்டையாடிவந்த ஒரு சிறுத்தை குறித்து எழுதப்பட்ட தனது நூலுக்கு அணிந்துரை எழுதித்தரும்படி ஒருவர் என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தார். நூலின் இறுதிவரையும் ஒரே ஒரு நயமான சொற்றொடரைக் கூடக் காணமுடியாத அளவுக்குத்தான்  அவர் எழுத்து இருந்தது. ஆனால் சிறுத்தையின் நரவேட்டைகளை ஒரு சங்கிலித்தொடர்போல கதையாக்குவதில் அவர் வெற்றிபெற்றிருந்தார். அவரது தொடர்ச்சியான நேரடி அல்லது தொலைபேசி வாயிலான வேட்டையின் பலனாக வேறுவழியின்றி நான் ஒரு அணிந்துரை வழங்கினேன். ஆனால் அடுத்து தனது நூலை எடிட் செய்தோ அழகுபடுத்தியோ தரும்படி அவர் வேண்டியபோது நான் உறுதியாக மறுத்துவிட்டேன். இதுமாதிரியான வேலையை நான் கையில் எடுத்தால் சாவு நிச்சயம் என்பதை நான் உணர்ந்திருந்தேன். இறுதியாக எனது புகைப்படம் ஒன்றை என்னிடம் இருந்து வாங்கிச்சென்றார்.

மாதங்கள் பல கழிந்தன, அவரே தனது முயற்சியில் புத்தகத்தை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார். புத்தகத்தில் எனது புகைப்படமும் சுட்டு வீழ்த்தப்பட்ட சிறுத்தையின் படமும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் விசயம் என்னவெனில் செத்துக்கிடந்த சிறுத்தையின் கீழ் “பிரபல எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட்என்ற வாசகமும் எனது புகைப்படத்தின் கீழ் “26 பேரைப்பலிவாங்கிய நரவேட்டைச்சிறுத்தை, சுட்டுவீழ்த்தப்பட்டபின் எடுத்த படம்என்ற வாசகமும் அச்சிடப்பட்டிருந்தன.

அச்சிட்டவரின் புண்ணியத்தில் நான் ஒரு தொடர் கொலைகாரனாக மாறி இருந்தேன்.

புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதுவதில்லை என நான் உறுதியாக இருப்பதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எனது அண்டைவீட்டுக்காரரான சாண்ட்ரா அம்மையார் –அவரது ஆன்மா சாந்தியடைவதாக- இறந்துவிட்ட தனது கணவரின் நினைவுக்குறிப்புக்களை நூலாக அச்சிடுவதன் பொருட்டு ஒரு பதிப்பாளருக்கு 40,000 ரூபாய் கொடுத்திருந்தார். கணவர் தனது ஆயுட்காலத்தில் அந்நூலை வெளியிடமுடியாமற்போனதால் இறக்கும் தருவாயில் எப்படியாவது அந்த நூலை வெளியிடுமாறு தனது மனைவியிடம் சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். தனது கணவனுக்கு அளித்த பிரமாணத்தை நிறைவேற்றும்பொருட்டு மனைவி நூலைக்கொண்டு வந்தார். அச்சிடப்பட்ட 500 பிரதிகளில் சிலவற்றை தனது நண்பர்களுக்கு அந்த அம்மையார் வழங்கிவிட்டு இறந்தும் விட்டார். அவரது வாரிசு, கனமான பைண்ட் செய்யப்பட்ட 450 விற்கப்படாத நினைவுக்குறிப்புக்களை வைத்துக்கொண்டு விழிபிதுங்குகின்றார்.

பலரும் என்ன நினைக்கின்றார்கள் எனில் ரஷ்கின் பாண்ட் மிகப்பரந்த பங்களாவில் பல உதவியாளர்களும் பணியாளர்களும் சூழ வாழ்ந்துகொண்டிருப்பார் என்று. அவர்கள் நேரில் என்னைப் பார்க்கவரும்போது எனது படுக்கைக்காகவும் படிப்பதற்காகவும் நான் பயன்படுத்தும் ஒரே சிறு அறையைக் கண்டு ஏமாந்துவிடுகின்றார்கள். எனது அன்றாடப்பயன்பாட்டு அறையில் புத்தகங்களே நிரம்பி இருப்பதால் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு விருந்தினர்களுக்கு மேல் அங்கு அமர இயல்வதில்லை.

சில நேரங்களில் 30-40 பள்ளிக்குழந்தைகள் என்னைச் சந்திக்க வந்துவிடுகின்றார்கள். குழந்தைகளை நான் சந்திக்க மறுப்பதில்லை. ஆனால் பெரும் எண்ணிக்கையில் வரும்போது அவர்களை சாலையில் நிறுத்திச்சந்திப்பது தவிர்க்க இயலாமல் போகின்றது, இது எல்லோருக்குமே தொந்தரவான விசயம்.

வசதியும் வாய்ப்பும் இருந்தால் ஒருவேளை மசூரியின் செல்வந்தர்கள் வாழும் ஒரு பகுதியில் ஒரு சினிமா நட்சத்திரத்தையோ டிவி நடிகரையோ அண்டைவீட்டு நண்பராகக்  கொண்ட பரந்த ஒரு பங்களாவில் நான் வசித்திருப்பேனோ? சந்தேகம்தான். எனது வாழ்க்கை நெடுகிலும் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில்தான் நான் வாழ்ந்து வந்துள்ளேன், ஒரு பெரிய அளவிலான வீட்டை என்னால் நிர்வகிக்க முடியுமா என்பது சந்தேகமே. நான் தத்து எடுத்துக்கொண்ட குடும்பத்தார் மற்ற இரண்டு அறைகளையும் பயன்படுத்துகின்றார்கள் என்பது உண்மைதான், ஆனால் நான்  பயன்படுத்தும் இடத்தை எந்தவகையிலும் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது (அல்லது தூங்கும்போது) அழையா விருந்தாளிகளின் தொந்தரவில் இருந்து என்னைக்காப்பது அவர்களே.


நான் பொய் சொல்வதற்கு கற்றுக்கொண்டுள்ளேன். பள்ளி விழாக்களில் என்னை தலைமை விருந்தினராக அழைக்கின்றார்கள். மற்றவர்கள் இரண்டு மூன்று மணி நேரம் நிகழ்த்தும் அறிவுரைகளைக் கேட்க நேர்வதும், அதன் பின் எனது அறிவுரையை அவர்கள் கேட்பதும்...இந்த நரகவேதனை மாணவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கும்தான். விளையாட்டுப்போட்டிகள் எனில் அவையும் அப்படியே. ஒலிபெருக்கியில் ...என்ற  மாணவன் பள்ளியின் ரிக்கார்டை முறியடித்துவிட்டான் என்றும், ...என்ற மாணவி தொடர்ந்து மூன்றாவது வருசமாக பரிசைத்தட்டிச் செல்கின்றாள் என்றும் அலறுவார்கள். ஆனால் ஒரு போட்டியைக்கூட நீங்கள் கண்ணால் பார்க்க முடியாது, நீங்கள் மரியாதைக்குரிய பிற விருந்தினர்களுடன் அப்போது சம்பிரதாயமாக அளவளாவிக்கொண்டிருப்பீர்கள். வழக்கமான சடங்குசம்பிரதாயங்களுக்கு மாறாக உயிரோட்டத்துடன் நடந்த ஒரே ஒரு விளையாட்டுப்போட்டி இப்போதும் என் நினைவில் நிற்கின்றது.  ஒருமுறை வட்டெறியும் போட்டி ஒன்றில் யாரோ வீசிய வட்டு ஒன்று திசைமாறி பள்ளித்தலைமை ஆசிரியரின் மனைவியின் தலையை சீவிவிடும் என்ற நிலையில் பறந்துசென்றது, மயிரிழையில் அவர் உயிர் தப்பிய அச்சம்பவமே நினைவில் பசுமையாக நிற்கின்றது.    

வேறு பல எழுத்தாளர்களாக என்னை கருதிக்கொண்டு தவறாக அடையாளம் கண்டுகொண்டு கதைப்பதும் உண்டு.

‘திரு.பிக்விக் நீங்கள்தானா?என்று கேட்டான் ஒரு சிறுவன். நல்லவேளை, சார்லஸ் டிக்கன்ஸையாவது அவன் படித்திருக்கின்றானே என்றமட்டில் நான் திருப்தி அடைந்தேன். நான் அவருக்கு தூரத்து உறவுஎன்று சொல்லியபடியே முடிந்த அளவுக்கு பிக்விக் மாதிரியே நடந்துகொண்டு அவனை பெருமையுடன் பார்த்தேன். சிறுவர் சிறுமியர் என்னைச் சந்திக்கும்போது மிகுந்த இயல்புடன் நடந்துகொள்ள முடிகின்றது, அவர்கள் எதுகுறித்தும் கவலையின்றி வெளிப்படையாகப் பேசுவார்கள், ஆனால் பெற்றோருடன் வந்தால் இது நடக்காது. அப்போது குழந்தைகள் பேச மாட்டார்கள், தாயும் தகப்பனும் மட்டுமே பேசித்தீர்ப்பார்கள்.

என் பையன் பள்ளியில் உங்கள் புத்தகங்களை வாசித்திருக்கின்றான்என்று தனது பத்துவயது மகனைக்காட்டி ஒரு அம்மா பெருமைப்பட்டுக்கொண்டார். ‘அவனுக்கு உங்கள் ஆட்டோக்ராஃப் வேண்டுமாம்’. ‘செல்லமே, தற்போது எந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்றாய்?என வினவினேன். ‘டாம் சாயர்என்று பட்டெனச் சொன்னான். பிறகென்ன, அவனது புத்தகத்தில் மார்க் ட்வைன் என்று கையெழுத்திட்டேன். பையன் பெருமகிழ்ச்சியடைந்தான்.

ஒரு பள்ளிச்சிறுமி அவளது கணக்குப்பாடப்புத்தகத்தில் எனது ஆட்டோக்ராஃபை இடச்சொன்னாள். ‘ஆனால் நான் கணக்குப்பாடத்தில் ஃபெய்ல் ஆனவன் அம்மா! நான் கதை எழுதுகின்ற ஒரு சாமானியன்’. ‘அப்படியா, கணக்கில் எத்தனை மதிப்பெண் பெற்றீர்கள்?’ ‘நூற்றுக்கு நான்கு’. அவ்வளவுதான், என்னை வினோதமான பிராணியாக பார்த்தபடி புத்தகத்தை என் கைகளில் இருந்து வெடுக்கெனப் பறித்தாள்.

எனித் ப்ளைடன், ஆர்.கே.நாராயண், இயான் போதம், டேனியல் டெஃபோ, ஹாரி பாட்டர்...இப்படி பல பெயர்களில் நான் ஆட்டோக்ராஃப் இட்டுள்ளேன். எவரும் அதுபற்றிக் கண்டுகொண்டதில்லை.

எனது புத்தகங்கள் பழையன, எனது சித்திரங்கள் பழையன, எனது காலணிகள் பழையன, எனது ஒரே மேல்கோட் மிகப்பழசானது. நான் மட்டுமே இளமையாக இருக்கின்றேன். நான் என்றும் இளமையுடன் இருப்பதற்குக் காரணம் என்னைச்சுற்றி எப்போதும் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்பதே. எனது குடும்பத்தின் குழந்தைகள் மட்டுமல்லர், பிற குழந்தைகளும்தான். இக்குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவருவதைக் காண்பதில் பெருவிருப்பம் கொள்கின்றேன். விடலைப்பருவம் என்பது வாழ்க்கையில் வசீகரமான பருவம், எனது கதைகளின் வழியே நான் எனது விடலைப்பருவத்திற்குத் திரும்புகின்றேன்.

... நான் எளிமையான, சிக்கனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ப்ரேமும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இரண்டு சிறிய அறைகளில் வசிக்கின்றார்கள், எனக்கு இரண்டு சிறிய அறைகள். ஒரு அறை நிறைய புத்தகங்கள், விருந்தினர் அமர்வதற்கான சில நாற்காலிகள். மற்றொரு சிறிய அறை எனது படிப்புக்காகவும் படுக்கைக்காகவும். இந்த அறை வெளிச்சமானது, சூரியஒளி இந்த அறையை நிரப்புகின்றது, ஜன்னல்களோ மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்கையும் எப்போதும் வரவேற்கக் கூடியவையாக   அமைந்தவை. கீழே மக்களும் வாகனங்களும் பயன்படுத்துகின்ற ஒரு சாலை.  1980இல் இருந்து நான் எழுதிய பெரும்பான்மையான கட்டுரைகளையும்  சிறார்களுக்கான நூல்களையும் இந்த அறையில்தான் எழுதினேன்.  இந்த அறையில் இருந்துதான் எப்போதாவது ஒரு கவிதையை எழுதுகின்றேன், இசையைக் கேட்கின்றேன், சிறார்களுடன் உரையாடுகின்றேன், சுவர்களில் படரும் பச்சைக்கொடியை வளர்க்கின்றேன். செடிகள் வளர்ப்பதில் நான் தேர்ச்சியுடைவனாக இருக்கின்றேன், குறிப்பாக படர்கொடிகள். வீட்டுக்குள்ளேயே வளரும் தாவரங்களை வளர்ப்பதற்கு இந்த அறை     
மிக உகந்ததாக இருக்கின்றது...

                                                          ************

மீண்டும் மசூரி செல்வேன், அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர் வசிக்கும் அந்த அறையின் அமைதியை சுவாசித்தவாறே அதனைக் கடந்துசெல்வேன். அந்த அறையின் அமைதியைக் குலைக்கும் உரிமை அவருக்குப் பிடித்த குழந்தைகளுக்கும் அறையில் படரும் பச்சைக்கொடியின் இலையசைவுக்கும் மட்டுமே சொந்தமானதாக  இருக்கட்டும்.

                        *******************


சனி, ஆகஸ்ட் 26, 2017

க்ளாரா ஜெட்கின்: பிரிட்டன் சகோதரிகளுக்கு ஜெர்மானிய சகோதரிகளின் அறைகூவல்

பிரிட்டன் சகோதரிகளுக்கு ஜெர்மானிய சகோதரிகளின் அறைகூவல்
க்ளாரா ஜெட்கின்(Clara Zetkin)1
(டிசம்பர் 1913)
தமிழில்: இக்பால்

அன்புக்குரிய சகோதரிகளே!
ஜெர்மானியப் பாட்டாளிவர்க்கப் பெண்கள் சோசலிசத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்றைய `காலக்கட்டத்தில் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்ற இச்செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றார்கள்.

இந்த நூற்றாண்டு நாகரிகத்தையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற நூற்றாண்டு எனப் பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் சமீபத்திய பால்கன் (Balkan) போரின்2 கொடூரமான மனித உயிர்ப்பலிகளையும் பேரழிவுகளையும் காட்டுகின்ற கொடுமையான புகைப்படங்களைப் பார்த்தபின் அந்த அச்சத்திலிருந்து மீள முடியாத நிலையில் நாங்கள் உறைந்துள்ளோம். எங்கள் கண்முன்னே குருதி கொப்பளிக்கும் உடல்கள்; சகமனிதனை இன்னொரு மனிதன் கொன்றுசாய்ப்பதால் கொப்பளிக்கும் குருதி; தரைமட்டமாக்கப்பட்ட கிராமங்கள் நகரங்கள்; கால்களும் கைகளும் பிற உறுப்புக்களும் அறுத்து எறியப்பட்ட நிலையில் ஏற்கனவே செத்துமடிந்தவர்களின் அருகில் செத்துக்கொண்டே இருக்கும் மனிதர்கள் எழுப்பும் தீனமான  அவலக்குரல்கள்...இவை யாவும் எம் காதுகளில் விழுகின்றன. தங்கள் வாழ்வின் பொருட்டே பிழைப்புத்தேடி சென்று போரில் உயிரை மாய்த்துக்கொண்ட அன்புக்குரியவர்களின் மனைவியரும் சகோதரிகளும் தாய்மார்களும் குழந்தைகளும் விசும்பி அழும் அவலமான கேவல் ஒலிகள் எங்கள் காதுகளில் விழுகின்றன.

ஐரோப்பாவின் பெருந்தேசங்களின் மக்கள் கடந்த சில மாதங்களாகவே மிகக்கொடூரமான பேரழிவுப்போர்களின் விளிம்புக்குச் செல்வதும் மீள்வதுமான வாழ்வா சாவா என்ற கெடுநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். இத்தகைய அவலநிலையை இவ்வுலகம் இதற்கு முன் கண்டதில்லை. நாங்கள் இதனை நினைத்து அச்சத்தில் நடுங்குகின்றோம். அப்பேரழிவின் இறுதிநாள் இன்றில்லை எனினும் பிரிதொரு நாள் வந்தே தீரலாம். நாகரிகமடைந்த நாடுகளின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அந்த சிறுபான்மையினரின் கரங்களைப் பாருங்கள்! அவர்கள் பேசுவதைக் கேளுங்கள்! அவர்களின் கரங்களில் இருப்பதுதான் என்ன?

உழைக்கும் மக்களின் பைகளில் இருந்து திருடிக்கொண்ட பணத்தைக்கொண்டு அவர்கள் ராணுவத்தளங்களையும் போர்க்கப்பல்களையும் கட்டுகின்றார்கள்; தரையிலும் கடலிலும் ஆகாயத்திலும் மக்களை கொத்துக்கொத்தாகக்  கொன்றழிக்கக் கூடிய மிகத்துல்லியமான கடற்படைத்துப்பாக்கிகளையும் பிற ஆயுதங்களையும் வாங்கிக்குவிக்கின்றார்கள். பல இலட்சம்  இளம்தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதாகச் சொல்லிக்கொண்டு அவர்களைத் துன்புறுத்துகின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள இவர்களது  சகதொழிலாளிகளின் காயின்(Cain)களாக3 அவர்களை மாற்றும்பொருட்டே இப்பயிற்சி அளிக்கப்படுகின்றது.

அவர்களது சுயநலமிக்க ஆயுதக்குவிப்புப்போட்டிக்கும் போர்களுக்கும் வசதியாக, சாமானியமக்கள் தமது உடைமைகளையும் செங்குருதியையும் தியாகம் செய்யும் பொருட்டு மக்களை ஆயத்தமாக வைத்திருக்கும் கள்ளநோக்கத்துடன் சகநாடுகளின் மக்களுக்கிடையில் பகைமையும் வெறுப்புணர்வும் எப்போதும் நிலைத்திருக்கும்வண்ணம் இச்சுயநலமிகள் எப்போதும் வாய்கிழியப்பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நாட்டின் நலன்பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனில் அடுத்த நாட்டின் மீது போர்தொடுத்து மரணத்தைக் கட்டவிழ்த்துவிடத்தக்க வகையில் ஆகப்பெரும் ராணுவங்களும் போர்க்கப்பல்களும் இருப்பது அவசியம் என்று கூச்சலிடுகின்றார்கள்.

இங்கிலாந்தில் உள்ள எங்கள் அன்புச்சகோதரிகளே! பகைமையுணர்வும் வெறுப்புணர்வும் விசிறிவிடப்படும் வெறிக்கூச்சல்கள் வதந்திகளாகப் பரப்பப்படுகின்றன என்பதை அறிந்து ஜெர்மனியில் இருக்கின்ற சோசலிச உழைக்கும் பெண்களாகிய நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஆனால் ஜெர்மன் மக்கள் மீது பிரிட்டிஷ் மக்கள் பொறாமையும் வெறித்தனமான பகைமையுணர்வும் கொண்டுள்ளதாக இங்கே ஜெர்மனியில் இருக்கின்ற அரசியல்வாதிகளும் செய்தித்தாட்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள புரளிகளை நாங்கள் நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம். பயங்கர சேதத்தை விளைவிக்கும் போர்க்கப்பல்கள் புதிதுபுதிதாகக் கட்டப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. போலித்தேசியவாத வெறிப்பேச்சுக்களை விசிறிவிட்டுக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இப்புரளிகளை நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.  இதேபோல் அங்கே உங்கள் நாட்டில் வெளிவரும் சில ஆங்கிலமொழிச்செய்தியேடுகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஜெர்மன் மக்களின் உணர்வு என்பதாகச் சொல்லிக்கொண்டு உங்கள் மத்தியில் பரப்பிவிடும் வதந்திகளை உண்மை என நீங்கள் நம்பவேண்டாம் என உங்களை உள்ளன்போடு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வலுக்கட்டாயமாக சக்கரவர்த்தியின் சீருடையை அணியக்கட்டாயப்படுத்தப் பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் அச்சுறுத்தும் துப்பாக்கிகளும் இதுவெல்லாம் உண்மைதானோ என்ற ஐயத்தைக் கிளப்பினாலும் நாங்கள் உறுதியளிக்கின்றோம், இவையாவும் உண்மை அல்ல. இங்கே ஜெர்மனியில் உள்ள போலிதேசியவாதம் பேசுகின்ற சுமார் அரைடஜன் வெறியர்கள் கிளப்பிவிடும் கட்டுக்கதைகளையே இச்செய்தியேடுகள் வெளியிடுகின்றன, எமது பொறுமையையும் சோதிக்கின்றன.

மக்கள் எனப்படுவோர் உண்மையில் யார்? ஜெர்மனியிலும் சரி உங்கள் மகாபிரிட்டனிலும் சரி, நாட்டின் முதல் பத்துப்பணக்காரர்கள், இளவரசர்கள், ராணுவ ஜென்ரல்கள், தங்க இழைப்பின்னல்களை அணிந்த அதிகாரிகள், வலிமைமிகு நிலக்கிழார்கள், ராணுவத்திற்கும் கடற்படைக்கும் ஆயுதசப்ளை செய்கின்ற கம்பெனிகளின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள், துப்பாக்கிகள், டாங்கிகளின் கவசத்தகடுகள், புகையில்லா வெடிகுண்டுகள், போர்விமானங்களைத் தயாரிக்கின்ற ‘மன்னர்கள் இவர்களில் ஒருவர் கூட  சாமானிய மக்கள் அல்லர். ராணுவத்திற்கும் கடற்படைக்கும் தேவையான ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் போர்க்களங்களில் வழிந்தோடும் குருதியில் இருந்து காசுகளைப்பொறுக்குகின்ற, போர்க்களங்களில் வீழ்ந்துபட்ட பிணங்களே உரமாகிப்போனதால் செழித்துவளரும் வயல்களில் இருந்து லாபத்தை அறுவடை செய்கின்ற ஒரு சிறு பகுதியினரை சாமான்யமக்கள் என்று சொல்ல முடியாது.

இலட்சோப இலட்சம் உழைக்கும் ஆண்களும் பெண்களுமே சாமானிய ஜெர்மன்மக்கள் ஆவர்; இந்த உழைக்கும் மக்களின் கரங்களும் மூளைகளும் இயங்காவிடில் இச்சிறு பகுதியினர் செல்வத்தை குவிக்க முடியாது, மனிதநாகரிகம் என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும்; ஆயினும் இந்த இலட்சக்கணக்கான மக்கள் செல்வத்தை, வாழ்க்கை வசதிகளை, மகிழ்ச்சியை அனுபவித்தார்களா என்றால் இல்லவே இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்ற இந்த சாமானிய மக்கள்தான் உண்மையான ஜெர்மன் மக்கள். தமது எதிரியை எல்லை தாண்டியிருக்கின்ற நாடுகளில் தேடக்கூடாது, வடக்குக்கடலின் மறுகரையில் தேடக்கூடாது என்ற உண்மையை அவர்கள் இப்போது உணர்ந்திருக்கின்றார்கள். இரக்கமற்ற தமது எதிரி வேறெங்கும் இல்லை, தமது சொந்தமண்ணில்தான் இருக்கின்றான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவமே தமது எதிரி,  உழைக்கும் மக்களை சுரண்டி அவர்கள் மீது தமது ஆட்சியதிகாரத்தைச் செலுத்தும் சொத்துடைமைவர்க்கமே தமது எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவம் என்னும் இந்த ராட்சசனே  உலகெங்கிலும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் பொதுவான எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

நாங்களும் உங்களைப்போலவே சங்கிலிகளால் கட்டுண்டுள்ளோம். உங்களது சுமைகள் எங்களது சுமைகளும் கூட, உங்களது துயரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம். ஆகவே நாங்கள் உங்களுடன் துயருருகின்றோம், உங்களோடு சேர்ந்து நாங்களும் நம்பிக்கை கொள்கின்றோம், ‘துயரங்களின் சமுத்திரத்துக்கு எதிராக உங்களுடன் நாங்களும் ஆயுதங்களை ஏந்துகின்றோம். எங்கள் கணவர்களுடன், குழந்தைகளுடன், சகோதரர்களுடன் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கிடையே சமாதானமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்க முன்வருகின்றோம். அவர்களுடன் இணைந்தே முதலாளித்துவத்துக்கு எதிராக, சோசலிசத்துக்காகப் போராடுகின்றோம். இங்கிலாந்து என்ற தேசத்தின் முன்னணி அறிவாளிகளின் ஞானமும் கனிவுமிக்க இதயங்களும் தேசிய சோசலிச (National Socialist) இயக்கம் நிலைத்து நீடித்திருக்கவும், அது வெல்லமுடியாத பலமிக்க அமைப்பாகவும் விளங்கிட எத்தகு மகத்தான அரிய பங்குப்பணியை அளித்துள்ளார்கள் என்பதை நாங்கள் ஒருபோதும் மறவோம். மகாபிரிட்டனின் உழைக்கும் ஆண்களும் பெண்களும் தமது உணவுக்காக உரிமைக்காக சுதந்திரத்திற்காக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை மறவாமல் என்றும் நினைவில் இருத்தியுள்ளோம். எரிமலையின் கீழே நிலநடுக்கம் ஏற்படும்போது வெளிப்படும் எரிமலையின் சக்தி மலையின் அடியில் ஒளிந்திருப்பனவற்றை எவ்வாறு வெளியே அள்ளி வீசுகின்றதோ அதேபோல் ‘தொழிலாளர் போராட்டம்என்பது சமூகஅடுக்கில் ஒளிந்துள்ள வசதிவாய்ப்புப்படைத்த சிறு சுரண்டும்வர்க்கத்தை அம்பலப்படுத்துகின்றது, இவ்வர்க்கம் ‘தொழிலாளர் போராட்டம்என்ற நிலநடுக்கத்தை கண்டு அஞ்சுகின்றது. இன்றைய நிலை எப்படியுள்ளது? உழைக்கும் வர்க்கத்தை முதலாளித்துவம் அச்சுறுத்துகின்றது, ஆனால் உழைக்கும்வர்க்கமோ சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.  
      
பிரிட்டனின் சகோதரிகளே! எங்கள் உண்ர்வுகளுடனும் இலட்சியங்களுடனும் நீங்களும் இணைந்திருக்கின்றீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். அனைத்து விதமான குறுகிய தேசியவாதங்கள், வெறுப்புணர்வுக்கு எதிராகவும் ஆயுதக்குவிப்புக்கும் போருக்கும் எதிராகவும்  போராடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்காக பாட்டாளிவர்க்கமே நடத்தும் புனிதப்போரின் முதல்வரிசையில் போராளிகளாக நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். நமது குழந்தைகள் சோசலிசத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், நாம் தொடங்கியிருக்கின்ற இந்தப்போரை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவைப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது. முதலாளித்துவம் என்பது நம் அனைவரின் மீதும் நடத்தப்படும் சமூகப்போராகும். பாட்டாளிவர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டம் என்பதன் பொருள் உலகநாடுகளிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் சகோதரத்துவம் என்பதே.

               சோசலிசம் என்பது உலகசமாதானமே!
                                ***
குறிப்புக்கள்:
க்ளாரா ஜெட்கின் (Clara Zetkin) (1857-1933): ஜெர்மன் நாட்டின் கம்யூனிஸ்ட். அரசியலில் உழைக்கும்பெண்களின் பாத்திரத்தின், போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர், சர்வதேச அளவில் அறியச்செய்தவர். அக்கால கட்டத்தில்  ஜெர்மன் நாட்டில் பெண்கள் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருந்தபோதும் பல்வேறு தொழிற்சங்கங்களில் நிர்வாகக்குழுக்களில் பங்கேற்றவர். சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் (International Bureau of Socialist Women) செயலாளராக இருந்தவர்.  ரோசா லக்சம்பர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோருடன் இணைந்து ஜெர்மானிய கம்யுனிஸ்ட் கட்சியை 1918இல் நிறுவியவர். 1920இல் ஜெர்மானிய ரீக்ஸ்டேக்கின் உறுப்பினராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Communist International) செயற்குழுவில் உறுப்பினராகவும், சர்வதேச பெண்கள் தலைமையகத்தின் (International Women’s Secretaraiat) பொதுச்செயலாளராகவும் இருந்தார்.  பால்கன் போர்கள் முடிந்த நிலையில் 1913 டிசம்பர் மாதம் அவர் இச்செய்தியை வெளியிடுகின்றார்; ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன நாடுபிடிக்கும் போட்டி, ஆயுதக்குவிப்பு மற்றும் கெடுபிடிகளின் விளைவாக 1914இல்  முதலாம் உலகப்போர் தொடங்கியது. நேசநாடுகள் என அறியப்பட்ட ரஷ்யப்பேரரசு, ஃப்ரெஞ்ச் மூன்றாம் குடியரசு, மகா பிரிட்டனும் ஐயர்லாந்தும் இணைந்த ஒன்றிய அரசியம் (United Kingdom) ஆகிய பேரரசுகள் ஒரு புறமும், ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி கூட்டணியில் மத்தியவல்லரசுகள் என்று அறியப்பட்ட நாடுகள் மறுபுறமும் இப்போரில் இறங்கின. போரின் போக்கில் இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை நேசநாடுகளின் பக்கமும்,  துருக்கியின் ஓட்டோமான் பேரரசும் பல்கேரியாவும் மத்தியவல்லரசுகளின் பக்கமும் சேர்ந்து போரைத்தொடர்ந்தன. போரின் போக்கில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான மாபெரும் ரஷ்யப்புரட்சியால் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 பால்கன் போர்: 1912-13இல் முதலாம் பால்கன் போர் நடந்தது. பால்கன் அமைப்பின் கீழ் அமைந்த கிரீஸ், பல்கேரியா, செர்பியா, மோண்டினெக்ரோ ஆகிய நாடுகளுக்கும் பலஹீனமடைந்து கொண்டிருந்த துருக்கியின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே இப்போர் நடந்தது. 1913இல் செய்துகொள்ளப்பட்ட லண்டன் ஒப்பந்தத்தின்படி எல்லைகள் மறுவரைவு செய்யப்பட்டு இப்போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் தொடர்புடைய சில நாடுகளின் அதிருப்தி காரணமாக 1913ஆம் ஆண்டே மீண்டும் ஒரு போர் நடந்தது. புகாரெஸ்ட் ஒப்பந்தம் வரையப்பட்ட பின் இப்போர் முடிவுக்கு வந்தது.
3 காய்ன் (Cain): கிறித்துவர்களின் பழைய வேதாகமத்தின் ஒரு பாத்திரம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த முதல் மகன். தனது சகோதரன் ஆபெல்லை காய்ன் கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
***************
(புதுவிசை இதழ் எண் 48,செப்டம்பர் 2017இல் வெளியானது)

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

உச்சநீதிமன்றத்தீர்ப்பும் காங்கிரஸ் + பிஜேபியின் கோரமுகமும்


இருண்ட காலங்களிலும் கவிதைகள் பாடப்படுமா?
ஆம், கவிதைகள் பாடப்படும், 
இருளைப்பற்றி பாடப்படும் 
– பெர்டோல்ட் ப்ரெக்ட்

1) விடுதலை பெற்ற இந்தியாவின் ஆகப்பெரும் இருண்டகாலமான காங்கிரசின் இந்திராகாந்தி காலத்தில்தான் அவசரநிலை காலத்தில்தான் அனைத்து ஜனநாயக-தனிமனித உரிமைகளும் முற்றாக நசுக்கப்பட்டன. அன்றைய நிலையில் எந்த ஒரு மனிதனையும் எங்கேயும் கைது செய்து கண்காணாத இடத்தில் அடைத்துவிடவோ அல்லது கொலை செய்துவிடவோ காவல்துறைக்கு முற்றாக அதிகாரம் இருந்தது. தனது உறவினர் அல்லது நண்பரைக் காணவில்லை, அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றோ தனது தன்னலன் பொருட்டோ எந்த ஒரு மனிதரும் நீதிமன்றத்தை அணுகி முறையிடும் habeas corpus மனுக்கள் நீதிமன்றங்களில் குவிந்தன.

குறிப்பாக 9 உயர்நீதிமன்றங்கள் ‘எமர்ஜென்சி காலத்திலும் கூட இது போன்ற ஹேபியஸ் கார்பஸ் மனுக்களை அனுமதிக்க இயலும் என்று தீர்ப்பளித்தன. தனது ஃபாசிச ஆட்சியின்போதும் இந்த உரிமை இருப்பதா என்று வெறுப்புற்ற இந்திராகாந்தி கீழமை நீதிமன்றங்களின் இத்தீர்ப்புக்களுக்கு எதிராக உச்ச்நீதிமன்றத்தில் முறையிட்டார், தொடர்ந்து 5 நீதிபதிகள் (அன்றைய உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி ஏ.என்.ரே, எம்.எச்.பெக், ஒய்.வி.சந்திரசூட், பி.என்.பகவதி, எச்.ஆர்.கன்னா) அடங்கிய அரசியல் சாசன அமர்வில் திரு.கன்னா தவிர மற்ற நால்வரும் “எமெர்ஜென்சி காலத்தில் அடிப்படை உரிமைகளான உயிர்வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமான வாழ்வுக்கான உரிமை ஆகியன மறுக்கப்படுகின்றனஎன தீர்ப்பளித்தனர், அதாவது இந்திராகாந்தியோடு உடன்பட்டனர். திரு.கன்னா மட்டுமே தனிமனிதன் உயிர்வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையும் ஒரு அரசு ஆணை மூலம் வெட்டிச்சுருக்கப்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கவில்லைஎன மாறுபட்ட கருத்தை பதிவு செய்தார். ஆக நால்வர் பெரும்பான்மையுடன் இந்திராகாந்தியின் ஃபாசிச பேயாட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. இது ADM ஜபல்பூர் வழக்கு என வரலாற்றில் அறியப்படுகின்றது. இதன்பின் கன்னா அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவர் என்றாலும் அவரைப் புறக்கணித்து இளையவரான பெக்கை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்தார் இந்திராகாந்தி. தொடர்ந்து கன்னா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1982ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான ஜெய்ல்சிங்கிற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கன்னா அவர்கள் நிறுத்தப்பட்டார் என்பது வரலாறு.

2) நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புக்குள் ஒரு விசித்திர முரண் அடங்கியுள்ளது, அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1977இல் மனித உரிமைகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நால்வரில் ஒருவரின் மகனான டி.ஒய்.சந்திரசூட் நேற்றைய தனது தீர்ப்பில் இப்படிக்கூறுகின்றார்: ‘தனிமனித அந்தரங்கம் என்பது மனிதகண்ணியத்தின் மையமான கரு. மனிதகண்ணியத்தை முழுமை பெறச்செய்வதே தனிமனித அந்தரங்க சுதந்திரம்தான்’.  40 வருடங்களுக்கு முன் தந்தை செய்த தவற்றை மகன் இப்போது நேர் செய்துள்ளதை பாராட்டியாக வேண்டும். மேலும் 1976இல் ADM ஜபல்பூர் வழக்கின் தீர்ப்பை இன்றைய தலைமைநீதிபதி நேற்றைய தீர்ப்பில் அதிகாரப்பூர்வமாக கண்டனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தீர்ப்பு 543 பக்கங்கள் கொண்டது. ஒன்பது நீதிபதிகளும் தனித்தனியே தமது ஆழமான கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளதை ஓரளவு வாசித்தேன். இந்த அமர்வின் மையமான விசயமே தனிமனிதர்களின் அந்தரங்க சுதந்திரம் பற்றியது, இது ஆதாரை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  நேற்றைய தீர்ப்பின் வெளிச்சத்தில் ஆதார் அடாவடிகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பது தெளிவாகப்பேசப்படுகின்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.புட்டஸ்வாமி ஆதார் விசயத்தில் அரசியல் அமைப்புச்சட்டத்தின் சரத்து 23 மீறப்படுகின்றது என்று கூறி தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல தீர்ப்புக்களில் இறுதியாக வந்ததே நேற்றைய அரசியல்சாசன அமர்வின் மிக முக்கியமான தீர்ப்பு.

3) தனிமனிதர்களின் கைரேகை, கண்மணி ஆகியவற்றை அரசின் உதவித்திட்டங்களுக்கு மட்டுமின்றி இத்தேசத்தில் உயிர்வாழ்வதற்கும் செத்த பிறகு புதைப்பதற்கும் எரிப்பதற்கும் கூட அவசியமானதாக்கியுள்ளது ஆர் எஸ் எஸ் மோடியின் அரசு. இதனை தொடங்கிவைத்தது காங்கிரஸ் என்பதை எக்காலத்திலும் நாம் மறக்கக்கூடாது. நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாத UIDIA அமைப்பை ஒரு அரசு ஆணையின் மூலம் ஏற்படுத்தி இந்திய மக்களுக்கும் அரசுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத முன்னாள் Infosys அதிகாரியான நந்தன்நீலகேணி என்ற நபருக்கு ஏகப்பட்ட அதிகாரங்களை வழங்கி UIDIA அமைப்பின் கீழ் அரசுக்கு எந்த வித்த்திலும் பதில்சொல்லக்கடமைப்பட்டிராத பல்லாயிரம் காண்ட்ராக்ட் தொழிலாளிகளை பணியில் அமர்த்தி இந்தியாவில் குடியிருக்கும் (இந்தியக்குடிமக்கள் அல்ல என்பதை வலியுறுத்துகின்றேன்) அனைவருடைய கைரேகை, கண்மணி ஆகியவற்றை பதிவுசெய்து எடுத்துக்கொண்டதன் மூலம் தனிமனிதர்களின் உடல்மீது தமது ஆட்சியதிகாரத்தை ஏவி சர்வாதிகரம் செய்ததிலும் செய்வதிலும் காங்கிரஸ் பிஜேபி இரண்டும் கெட்டியாக்க் கைகோர்த்துள்ளதை வரலாறு பதிவு செய்கின்றது.  பிஜேபி கட்சியைச்சேர்ந்த யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்றக்குழுவே கூட ஆதார் போன்ற ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்வதற்கும் UIDIA போன்ற அமைப்பை நிறுவுவதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை மிக்கவனமாக ஊடகங்கள் மட்டுமின்றி காங்கிரசும் பிஜேபியும் கூட வெளியே பேசுவதில்லை. இந்த நந்தன்நீலகேணி பிற்பாடு கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்; இன்றைய செய்திப்படி மீண்டும் அவர் Infosys நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

4) நேற்றைய தீர்ப்புக்குப்பிறகு காங்கிரசும் பிஜேபியும் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளன. வடிவேலுவின் தங்கை மீது ஆசைப்பட்டு பெண்கேட்க வரும் கவுண்டமணியும் செந்திலும் தங்களது முடிச்சவிழ்க்கி மொள்ளமாரித்தனங்களை நடுவீதியில் மாறிமாறிப் பட்டியல் இடுவது போல் இச்சண்டை ஒரே நேரத்தில் சுவாரசியமாகவும் அருவருப்பாகவும் இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி ‘தனிமனிதர்களின் சுதந்திரங்களில் மூர்க்கத்தனமாக தலையிடும் இந்த (பிஜேபி) அரசாங்கத்திற்கு இத்தீர்ப்பு ஒரு அடியைக்கொடுத்துள்ளதுஎன்று சொல்ல, அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பில் –அதாவது அரசாங்க கூட்டத்தில்- பிஜேபி மந்த்ரி ரவிஷங்கர்ப்ரஷாத்  தனிமனித சுதந்திரத்தைப்பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் தெரியாதா? எமெர்ஜென்சி (காங்கிரஸ்) காலத்தில் அவர்களது அட்டர்னி-ஜென்ரல் ‘ஒரு மனிதன் ஜெயிலில் கொல்லப்பட்டால் என்ன செய்வது, கதை முடிந்தது, அவ்வளவுதான்என நீதிமன்றத்தில் வாதிட்டாரே, தெரியாதா?என்று கொட்டியுள்ளார்.

5) நேற்றைய தீர்ப்பினை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர்; எமர்ஜென்சி புகழ் காங்கிரசும் வரவேற்றுள்ளது. எப்படி? பெருமுதலாளிகளின் ஏஜெண்டும் காங்கிரசின் ‘சிந்தனைச்சிற்பிகளில் ஒருத்தருமான ப.சிதம்பரம் ‘எங்கள் UPA சர்க்கார் கொண்டுவந்த ஆதார் திட்டம் தனிமனிதர்களின் அந்தரங்க சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கவில்லைஎன்று பீற்றுகின்றார். கூரையில் நாங்கள் கொள்ளியை வைக்கும்போது இத்தனை ஆபத்தாக இருக்கவில்லை என்று சிதம்பரம் சொல்கின்றார்.   

6) ஆறு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மந்திரியாக இருந்த கபில்சிபல் “இணையதளங்கள், சமூக தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் மோசமான’ ‘பாலியல்’ சார்ந்த விசயங்களை ஏகப்பட்டபேர் எழுதுவதால் இந்திய சமூகம் கெட்டுகுட்டிச்சுவர் ஆகி விடுவதாககண்ணீர், மூக்கு போன்றவற்றை சிந்தி வருத்தப்பட்டிருந்தார் என்பதை நினைவு படுத்திப்பாருங்கள்.
அன்றைய தேதிகளில் டுனீசியாவில் தொடங்கி எகிப்து,சிரியா,லிபியா போன்ற கட்டுப்பெட்டியான அரபு தேசங்களிலும் மக்கள் எழுச்சி வீறுகொண்டு எழுந்து காலகாலமாக குடும்ப சர்வாதிகார ஆட்சி செய்த நபர்களை துரத்தியடித்த நிகழ்வானது சாதாரணமான ஒரு செய்தி அல்ல. இப்போராட்டம் அரபு பிராந்தியம் எங்கும் தீ போலப்பரவ சமூக இணையதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை மிகப்பெரும் பங்காற்றின என்பது அத்தளங்களின் சொந்தக்காரர்களுக்கும் கட்டுப்பாட்டாளர்களுக்கும் கூட எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு நிற்கவில்லை.

7) ஜனநாயகம் என்ற பெயரில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை ஸ்தாபித்து கருத்துரிமையை, பேச்சுரிமையை குழிதோண்டிப்புதைக்கும்போதும், அமெரிக்கா போன்ற நாடுகளின்,  பெரும் சர்வதேச+இந்திய கார்பொரேட் நலன்கருதியும் ஆதார் போன்ற மனிதமாண்புகளுக்கு அப்பாற்பட்ட அதிகார துஷ்பியோகங்களை நாட்டுமக்கள் மீது ஏவும்போதும் சாமான்யமக்களும் தமது கருத்துக்களைப் பதிவிடுகின்ற எதிர்ப்பை பதிவு செய்கின்ற ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று கபில்சிபல் போன்றோர் கடுப்பெடுத்துப் புலம்பியது ஏதோ போகின்ற போக்கில் புலம்புவது அல்ல! காங்கிரசின் அசிங்கமான வரலாறு ரத்தக்கறை படிந்தது என்ற பின்னணியில்தான் இதை பார்க்க வேண்டும்.  விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பெரும் ஊழலைத்தொடங்கிவைத்த பெருமை காங்கிரசியே சேரும். தேசம் விடுதலை பெற்ற அடுத்த வருடமே காஸ்மீரில் ராணுவத்தேவைகளுக்காக ஜீப் வாங்கியதில் ஊழலை தொடங்கி 2ஜி வரையிலும் சாதனை செய்தார்கள்.

8) இப்படியாக காங்கிரஸ் கட்சியின் ஊழல்களையும், கடந்த காலத்தில் பிஜேபி+ஆர் எஸ் எஸ் நட்த்திய குஜராத் கலவரங்கள் உள்ளிட்ட பலவற்றையும், கடந்த மூன்று வருடங்களில் உனா, தாத்ரி, முசாஃபர்நகர் கலவரங்கள், யமுனை ஆற்றை நாசப்படுத்திய ஆர் எஸ் எஸ் சாமியாரான ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு பசுமைத்தீர்ப்பாயம் தண்டனை விதித்தது, மத்யப்ரதேஷ் பிஜேபியின் வியாபம் ஊழல், உத்ரப்ரதேஷில் இப்போது 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு என பல கேடுகளையும் வெளிக்கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.  இன்றைய பிஜேபி+ஆர் எஸ் எஸ் அரசும் ஊடகங்கள் மீது எத்தகைய அணுகுமுறையை கொண்டுள்ளது என்பதும் ஊரறிந்த ஒன்றே. ஊடகங்களையும் தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களையும் தன் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ்-சின் தணியாத தாகம். அதற்கான முயற்சிகளை எடுக்கும்போதெல்லாம் உரத்தகுரலில் எதிர்ப்பு கிளம்புவதால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் பின் வாங்குகின்றது. பிஜேபி+ஆர் எஸ் எஸ்-சின் ஆர்ப்பாட்டமான அசிங்கமான ஊதுகுழலான அர்ணாப்கோஸ்வாமி
தொடக்கத்தில் பணியாற்றிய NDTV மீது 24 மணி நேர ஒளிபரப்பு தடைவிதித்தன் மூலம் கருத்துச்சுதந்திரத்தின் மீது தனக்குள்ள அக்கறையை அம்பலப்படுத்திக்கொண்டது பிஜேபி+ஆர் எஸ் எஸ். தேவைப்படும்போது மீண்டும் ஒரு 1975ஐ கொண்டுவரவும் பிஜேபி+ஆர் எஸ் எஸ் தயங்காது என்பதை அதன் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.