செவ்வாய், பிப்ரவரி 19, 2013

இது விஸ்வரூபம் விமர்சனம் அல்ல...




வாஷிங்டன் மாநகர். நேரம் நள்ளிரவு 12 மணி. வெள்ளைமாளிகையின் வாசல் திறக்கப்படுகின்றது. வந்து நிற்கும் காரின் கதவுகளை மிகப்பணிவுடன் பணியாளர் திறந்து விடுகின்றார். உள்ளேயிருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மதிப்பிற்குரிய செயலாளர்ஜி இறங்கி நேராக அமெரிக்க அதிபர் ஒபாமாஜியின் அறைக்கு செல்கின்றார்.  அங்கே நீள்வட்ட வடிவ நீண்ட மேஜையில் இரண்டு கைகளையும் முழங்கைகளால் ஊன்றியபடியும் இரண்டு உள்ளங்கைகளால் கன்னங்களை தாங்கியபடியும் அடக்கமுடியாமல் குமுறி குமுறி அழுதபடி இருப்பவர்   ஒபாமாஜி. இடதுபுறம் அமர்ந்திருக்கும் வெளியுறவுத்துறை செயலாளரும் வலதுபுறம் அமர்ந்திருக்கும் உள்துறைசெயலாளரும் (நமது பாஷையில் மந்திரிகள்) அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஐ.நா.பொதுச்செயலாளரும் வந்துட்டாரு, இனிமே நாம் கவலைப்பட வேண்டாம், சர்வதேச சமுதாயமும் நம்ம பக்கம்தான் என்றபடியே ஐ.நா.செயலாளர்ஜியை வரவேற்க, அவரோ தன்னையும் மீறி ஏற்கனவே அழுதுகொண்டிருந்த ஒபாமாஜியை கட்டிப்பிடித்து பெருங்குரலெடுத்து இப்படியும் நடக்குமா? ஐயோ!வென கதறி அழுகின்றார். அருகில் உட்கார்ந்திருக்கும் புஷ்ஜி, கிளிண்டன்ஜி, வால்மார்ட் முதலாளிஜி, பெட்ரோலிய கம்பெனிகளான எக்சான் மோபைல், ப்ரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், கொனொகோ ஃபிலிப்ஸ், செவ்ரோன், ஆக்சிடெண்டல், எமெர்சன் ஆகியவற்றின் முதலாளிஜிக்களும், கொகொகோலா முதலாளிஜி, பெப்சி முதலாளிஜி, யூனியன் கார்பைடு முதலாளியான வாரன் ஆண்டர்சன்ஜி, மான்சாண்டோ முதலாளிஜி, கார்கில் முதலாளிஜி, என்ரான் முதலாளிஜி, சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜி அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயல்கின்றார்கள்.

********************
அதே நேரம் பாரத்தேசத்தின் தலைநகரம் டெல்லியில் ராணுவத்தலைமையகத்தின் முன் ஒரு கறுப்புக்கலர் கார் வந்து நிற்கின்றது. தரைப்படைத்தளபதி, விமானப்படைத்தளபதி, கடற்படைத்தளபதி மூவரும் சேர்ந்து காரின் கதவைத்திறக்க அதிலிருந்து இறங்கியவருக்கு விரைப்புடன் மூவரும் சல்யூட் வைக்கின்றனர். கைகுலுக்கி அவரை வரவேற்று உள்ளே ஒரு அறைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கே ஏற்கனவே ராஹுல்ஜி. மன்மோஹன்ஜி, சிதம்பரம்ஜி, அத்வானிஜி, ராஜ்நாத்ஜி, மோடிஜி, மாண்டேக்சிங் அலுவாலியாஜி, அனில் அம்பானிஜி, முகேஸ் அம்பானிஜி, டூஜி, த்ரீஜி ஆகியோரோடு உளவுத்துறையான ரா இயக்குனர்ஜியும் இவரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். காரில் வந்தவரை மன்மோஹன்ஜி கைகுலுக்கி வரவேற்க மறு விநாடியே வந்தவர் குமுறிக்குமுறி புரண்டு அழுகின்றார். “சரி விடுங்க, அழுது புரண்டு என்ன பிரயோசனம்? ஏதோ நம்மால் ஆன உதவிகளை அவங்களுக்கு செய்வோம், அழாதீங்க. இதோ பாருங்க, ஒபாமாஜியும் ஐ.நா.பொதுச்செயலாளர்ஜியும் அங்கே காத்துக்கிட்டு இருக்காங்க என்றபடியே அவரை சமாதானப்படுத்துகின்றார் மன்மோஹன்ஜி. அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் தளபதி சைகை காட்ட விளக்குகள் அணைக்கப்பட தலைக்குமேல் ப்ரொஜெக்டரில் இருந்து படம் விழுகின்றது திரையில். அதே படம் அதே நேரத்தில் வாஷிங்டனில் வெள்ளைமாளிகையிலும் தெரிகின்றது. திரையில் இராக்கின் தலைநகரான பாக்தாத். வீதிகளில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என லட்சக்கணக்கானோர் கூடி நின்று ஆக்ரோசமாக கோஷம் இடுகின்றார்கள். சதாம் உசேன் ஒழிக! கடலை மிட்டாயை ஒழித்துவைத்த சதாம் உசேன் ஒழிக! கடலைமிட்டாயை ஒழித்துவைத்து எங்களை பட்டினி போடும் சதாம் ஒழிக! என்று கோஷம் வானத்தை ரெண்டாகப் பிளக்கின்றது. பாக்தாத் மட்டும் இன்றி இராக் தேசமே இக்கோஷத்தால் திமிலோகப்படுகின்றது.  இது பற்றியெல்லாம் ஒருதுளிகூடக் கவலைப்படாமல் அரண்மணையின் சாப்பாட்டு அறையில் யாருக்கும் தரமாட்டேன் என்றபடியே தட்டுத்தட்டாக கடலைமிட்டாய்களை தின்றபடியே இருக்கின்றார் சதாம் உசேன்.

*****************************************
டெல்லியிலும் வாஷிங்டனிலும் படம் முடிகின்றது. இப்போது டெல்லியில் காரில் வந்தவர் மீண்டும் ஓவென அழத்தொடங்க ரா இயக்குனர் அவரை ஆசுவாசப்படுத்துகின்றார். அழாதீங்க! இப்போதான் நீங்க தைரியமா இருக்கணும்! இராக் குழந்தைகளுக்கு கடலைமிட்டாய் கிடைச்சே ஆகணும்கறதுல பாரத் சர்க்காரும் ஒபாமாஜியும் புஷ்ஜியும் உறுதியா இருக்கறோம்! இதுக்கு யாரு தடையா இருந்தாலும் அவங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிச்சுக்கட்டுறதுன்னு பாரத்மாதா மேல சத்தியம் செய்துருக்கோம்! இந்த ஆக்சனுல நீங்கதான் நேரடியா இறங்கப்போறீங்க! இதுக்கு ஐ.நா.செயலாளர்ஜியும்  அனுமதி கொடுத்துட்டாரு! இன்னிலேயிருந்து உங்க பேரு ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி! இந்தாங்க ஃப்ளைட் டிக்கட். இன்னிக்கு ராத்திரி 12 மணி ஃப்ளைட்டுல நீங்க அமெரிக்கா போறீங்க! இதோ இந்தப் பையிலே கதக், கதகளி, கரகாட்டம், டப்பாங்குத்து டான்ஸ் காஸ்ட்யூம், ஷாம்பூ, கத்திரி, சவரக்கத்தி, சலங்கை, ஜதிக்கட்டை, தொப்பி, ஒட்டுத்தாடி, ஜிப்பா, 30 நாள்ல உருது, புஷ்டு, அரபி, ஹிந்தி கத்துக்கறது எப்புடி புக்ஸ் எல்லாம் இருக்கு! இது இல்லாம 20 டஜன் கைக்குட்டை தனியா இருக்கு! அழுதா துடைச்சுக்குங்க! ஆல் தி பெஸ்ட்! வாஷிங்டன்ல பாரத் தூதர் உங்களுக்காக எல்லா அரேஞ்மெண்டும் செய்வார்! பாரத் மாதா கீ ஜே! என்று சொல்ல, அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்ப, ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி காரில் ஏறி இந்திராகாந்தி இண்டெர்னேஷனல் ஏர்போர்ட்டுக்கு விரைகின்றார்.

********************************
வாஷிங்டன் வெள்ளைமாளிகை வாசல். ஒபாமாஜி, புஷ்ஜி உள்ளிட்ட பல ஜிக்களும் சி ஐ ஏ, எஃப் பி ஐ இயக்குனர்கள்ஜிக்களும் காத்திருக்க ஒபாமாஜியின் தனிச்செயலாளர் ஒபாமாஜியின் காதில் ஏதோ சொல்ல வாவ்! ஒண்டர்ஃபுல்! என்றவாறே பக்கத்தில் நிற்கும் ஜிக்களை உள்ளே அழைத்து செல்கின்றார். அங்கே அறையில் ஏற்கனவே ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி உட்கார்ந்திருக்கின்றார். குட் மார்னிங் ஒபாமாஜி அண்ட் அதர் ஜீஸ்! நாம இறங்கப்போறது அதிரடி ஆக்சன்ங்கறத மறந்துடாதீங்க! யாருக்கும் துளியளவு கூட தெரியக்கூடாது! நம் எதிரிகள் உஷார் ஆகிடுவாங்க! அதனால பின் வாசல் வழியா வந்தேன்! என்று சொல்ல இண்டர்னேஷனல் பயங்கரவாதத்தை அடக்கும் அதிரடி ஆக்சனுக்கு ஒட்டுமொத்த குத்தகை எடுத்து திமிரோடு திரியும் சி ஐ ஏ, எஃப் பி ஏ இயக்குனர்கள் கூட வெட்கத்தில் தலை குனிந்தார்கள். வாவ்! இண்டியன்ஸ் ஆர் க்ரேட்! என்று ஒபாமாஜி வியக்க, உடனடியாக ஒரு பாராட்டு சான்றிதழ் டைப் செய்யப்பட்டு ரா.ர.காஷ்மீரிக்கு வழங்கப்பட்ட்து. கூட்டம் முடியும்போது பாரதப்பிரதமரிடம் இருந்து ரா.ர.காஷ்மீரிக்கு தொலைபேசி வந்தது. ரா.ர.காஷ்மீரி இறங்கப்போகும் அதிரடி ஆக்சனுக்கு பிரதமர் வாழ்த்து சொல்ல ரா.ர. ஜெய் ஹிந்த்! என்று பேச்சை முடிக்க ஒபாமாஜி முறைக்க ரா.ர.காஷ்மீரி தன் தவற்றை உணர்ந்து காட் சேவ் அமெரிக்கா! என்று முடிக்கின்றார்.

************************************
திட்டமிட்டபடி ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரி ஃப்ளொரிடா மாகாணத்தில் தோண்டப்பட்ட ஒரு பாதாளச்சாக்கடை வழியாக இராக் வந்து பாக்தாத்தின் நெரிசலான ஒரு மார்க்கெட்டின் மேலே வந்து விடுகின்றார். சதாம் உசேனுக்கு லாலிபாப் என்றால் கொள்ளை ஆசை என்று சிஐஏ மூலம்தெரிந்துகொண்டு ஒரு பை நிறைய லாலிபாப்புடன் சதாமின் அரண்மணைக்கு முன்னால் சலங்கை கட்டி கதக், ஒடிசி, கதகளி, டப்பாங்குத்து, கரகாட்டம் என கலந்துகட்டி டான்ஸ் ஆடுகின்றார். ஆடிக்கொண்டிருக்கும்போதே லாலிபாப்களை அள்ளிஅள்ளி வீச அது அப்படியே விரிந்து சதாமின் அரண்மணைக்கு முன்னால் மலைபோல் குவிந்துவிடுகின்றது. இதைக்கேள்விப்பட்ட சதாம் ராமசாமி ரஹ்மத்துல்லா காஷ்மீரியை அரண்மணைக்குள் வரச்சொல்கின்றார். சிஐஏ,எஃப் பி ஐ, ரா எல்லோரும் எதிர்பார்த்ததும் இதுதான். யாரப்பா நீ? என சதாம் வினவ ரா.ர.காஷ்மீரி என் சொந்த ஊர் கைபர் கணவாய், ஊர் ஊராப் போயி டான்ஸ் ஆடி ஜனங்களை சந்தோசப்படுத்துறதே என் தொழில் என சொல்கின்றார்.  ஏற்கனவே திட்டமிட்டபடி இருபது லாரி நிறைய லாலிபாப் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சதாமிடம் இருந்து பெறுகின்றார். ஆனால் லாரியில் வந்து இறங்கியதோ அத்தனையும் வெடிகுண்டு, ஏவுகணைகள், துப்பாக்கிகள். லாரியை ஓட்டிவந்த டிரைவர்கள் கிளீனர்கள் எல்லோரும் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். திட்டமிட்டபடி அரண்மணைக்குள் நுழைந்து சதாமைக் கைது செய்கின்றார்கள். சதாமின் படைவீர்ர்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பதிலுக்கு இவர்கள் தாக்குதல் நடத்த சதாமின் ராணுவம் மொத்தமும் க்ளோஸ். 

சதாம் ஏற்கனவே ஆயிரம் வருடங்களாக பூமிக்கு அடியில் புதைத்து மறைத்து வைத்துள்ள கடலை மிட்டாய்களை சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீரர்கள் தோண்டியெடுத்து ஆய்வு செய்ததில் அது இராக் மக்களுக்கு ஒத்துக்கொள்ளாது, அலர்ஜி ஆகும் என்று தெரிகின்றது. எனவே கடலைமிட்டாய்களை ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கே கொண்டு செல்வதென்று முடிவானது. இதற்கு தடையாக இருக்கும் அனைவரும் சர்வதேச பயங்கரவாதிகள் என்று ஐ.நா.செயலாளர்ஜி டிவியில் அறிவிக்கின்றார். இராக் மக்களோ எங்கள் மண்ணில் விளைந்த கடலைமிட்டாய் எங்களுக்கே சொந்தம், எடுத்துச் செல்ல விடமாட்டோம் என  சி ஐ ஏ, எஃப் பி ஐ அதிரடைப்படைகளை எதிர்த்து வீதிகளில் போராடுகின்றார்கள். அதிரடி ஆக்சன் வீரர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள், ஆனால் சிஐஏ, எஃப் பி ஐ வீசும் குண்டுகளும் ஏவுகணைகளும் கூட்டமாய் கூடி நிற்கும் இராக் பெண்கள் குழந்தைகள் மீது  விழுந்தால் அவை உடனடியாக ரோஜா, மல்லிகை என புஷ்பங்களாக மாறிவிடும் மாயமும் நடந்தது.

அடுத்தகட்டமாக இராக்கில் இருந்து ஆஃப்கானிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ரோடு போடும் வேலை ஆரம்பமானது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிசினஸ் பார்ட்னராக இருந்து பின்னர் பிசினசில் தகராறு ஏற்பட்டு பிரிந்து சென்ற ஒசாமாஜி ஆஃப்கானிஸ்தானத்தில் இருப்பதாக சிஐஏ, எஃப் பி ஐ, ரா மூலம் அறிந்த ராமசாமி ரஹ்மத்துல்லா காபூல் மார்க்கெட் நடுவில் நின்று கதக், கதகளி, பரதம், ஒயிலாட்டம் ஆட மறைந்து நின்று பார்த்த ஒசாமாஜியின் குடும்பம் மொத்தமும் வாயில் நுரை தள்ளி சாகின்றார்கள். கூடவே அல்கைதா, தாலிபான் பயங்கரவாதிகள் எல்லோரும் தாமாகவே முன்வந்து தற்கொலை செய்துகொள்கின்றார்கள். பாப்ரக் கார்மலை எந்த விளக்குக்கம்பத்தில் தூக்கில் போட்டார்களோ அதே கம்பத்தில் சதாம் உசேனையும் தூக்கில் போடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள். சே குவாரா, சால்வடார் அலண்டே, பாட்ரிஸ் லுமும்பா, கென் சாரோ விவா, யாசர் அராஃபத், நஜிபுல்லா ஆகியோர் புதைக்கப்பட்ட அதே இட்த்தில் சதாமையும் புதைத்துவிடுகின்றார்கள் சிஐஏ, எஃப் பி ஐ, ரா அதிரடி ஆக்சன் வீர்ர்கள்.
********************************
சென்னை. கூவம் நதியோரம் ஒரு பங்களாவிலிருந்து கேட்கின்றது அந்த ஒலி தாதா தைதை தாதா தைதை தகதிமி தைதை... உள்ளே சலங்கை ஜதிக்கட்டை சீராக ஒலிக்க ராமசாமி ரஹ்மத்துல்லா என்ற ராமத்துல்லா  ரஹ்மத்சாமி என்ற ரஹ்மத்சாமி ராமத்துல்லா ஏழெட்டுப்பெண்கள் சூழ கதக், ஒடிசி, கும்மியாட்டம் என்று கலந்துகட்டி ஆடிக்கொண்டிருக்கின்றார். தொலைபேசி மணி ஒலிக்கின்றது. தகதிமி தகதிமி தகதிமி தகதிமி என அபிநயம் பிடித்தபடியே தொலைபேசியை எடுத்து காதில் வைக்க,  “மிஸ்டர் ரா.ர.! உடனடியாக டெல்லிக்கு புறப்படுங்க! இரானில் ஒரு அதிரடி ஆக்சனில் இறங்க வேண்டியிருக்கு! உங்க வீட்டுக்கதவை திறந்து பாருங்க, ஃப்ளைட் டிக்கட் கிடக்கும்! உடனே புறப்படுங்க! இன்னிலயிருந்து உங்க பேரு... என எதிர்முனை பேசுகின்றது. தாதா தைதை தாதா தைதை...


ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

கமலஹாசன் அவர்களுக்கு (2)

அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,

கருத்து சுதந்திரம் பற்றி விரிவாக பேசப்படுகின்றது. உண்மைதான். விஸ்வரூபம் வெளிவரட்டும். ஆனால் படைப்பாளிக்கு சுதந்திரமும் வேண்டும், சமூகப்பொறுப்பும் வேண்டும் என்பது கமலஹாசன் விசயத்தில் மட்டும் மறந்து விடுமோ?


1) ‘ஹுசேன் கடல்கடந்தால் ஹாசன் கடக்க கூடாதா?’ – கமலஹாசன். ஹுசேன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மதத்து மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஓவியம் தீட்டியது இல்லை. உன்னைப்போல் ஒருவனில் வரலாறு பேசுகின்றேன் என்ற பெயரில் கமல்ஹாசன் வரலாற்றை புரட்டவில்லையா? ஹுசேனுடன் தன்னை ஒப்பிட்டுபேசுவது துணைக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. 




2) ‘என் சொத்துக்கள் அத்தனையும் விற்றுவிட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை’-கமலஹாசன். இந்திய இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை சொல்லும் ராஜீந்தர் சச்சார் குழுவின் அறிக்கையை அவர் வாசிக்க வேண்டும்.
3) தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்
• நாடு முழுதும் மிகக் குறைந்த வருமானம் முஸ்லிம்களுக்கு
• நகர்ப்புற ஏழை இந்தியர் சராசரி விகிதம் 22.8% ; ஆனால் முஸ்லிம்கள் 28%
• நீதித்துறையில் மிகப் பிற்படுத்தப் பட்டோர்/ தாழ்த்தபட்டோர் 23% மற்றும் 20%; ஆனால் முஸ்லிம்கள் வெறும் 7.8% மட்டுமே!
• 14 லட்சம் பப்ளிக் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் வெறும் 7.2%; அதுவும்கூட மிகக் கீழ்மட்டப் பணிகளில்தான்.
• நாட்டின் உயர் அரசுப் பணிகளில் வெறும் 3% (ஐ.ஏ.எஸ்: 3%; ஐ.எ•ப்.எஸ்: 1.8%; ஐ.பி.எஸ்: 4%)
• மாநில வாரியாக முஸ்லிம் மக்கள் தொகைக்கும் அவர்களது வேலைவாய்ப்பு நிலைக்கும் சம்பந்தமே இல்லாத நிலைமை நிலவுகிறது:

உதாரணம்:

அஸ்ஸாம்: முஸ்லிம்கள் 30.9% ; ஆனால் பணியில் 11.2% மட்டுமே
மேற்குவங்கம்: முஸ்லிம்கள் 25.2% ; ஆனால் பணியில் 4.2% மட்டுமே
உத்தரப்பிரதேசம்: 18.5%; 5.1%
பீஹார் : 16.5% ; 7.6%
தமிழ்நாடு : 5.6%; 3.2%
கேரளா : 24.7% ; 10.4%
ஆந்திரா : 9.2%; 8.8%
கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே சற்றே அதிக விகிதாச்சாரம்.


3)’இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இதுதான் இந்திய இஸ்லாமியர்களின் நிலைமை. பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் இஸ்லாமிய மக்களை, உங்கள் சொத்துக்களை அடகு வைத்து 100 கோடி செலவில் மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன சார்? (படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள், சொல்வதை தள்ள முடியுமா?).


4) உங்கள் சக நண்பர்களான விஜயகாந்த், அர்ஜுன் (ஐயோ, இந்த ரெண்டு பேர் மட்டும் இல்லைன்னா இந்தியாவை பாகிஸ்தான்காரன் எப்போவோ திருடிட்டு போயிருப்பான்!) படங்கள் சித்தரித்தது என்ன? இந்திய இஸ்லாமிய மக்களுக்கு 24 மணி நேரமும் பாகிஸ்தானுக்கு உளவு சொல்வதைத்தவிர வேறு வேலையே இல்லை என்பதைத்தானே! கோடம்பாக்கத்தில் ஒட்டுத்தாடியும் குல்லாவும் அஞ்சு ரூபாவுக்கும் பத்து ரூபாவுக்கும் சல்லிசாக விற்கின்றது என்பதற்காக வில்லன்கள் எல்லாருக்கும் முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம்கள் அனைவரையும் தேசத்துரோகியாக்கியது என்ன நியாயம்? ஒரு படமா இரண்டு படமா, எத்தனை படங்கள் வரிசையாக? இவர்களோடு சேர்ந்து நீங்களும் இஸ்லாமியர்களை உன்னைப்போல் ஒருவனில் தீவிரவாதிகளாகத்தானே காட்டினீர்கள்?


5) திரை உலகமும் கலை உலகமும் கமலஹாசனுக்கு பின்னால் திரண்டு நிற்கின்றதாம். கருத்து சுதந்திரமாம். கருணாநிதி ஆதரவு தருவதுபோல் ஜெயலலிதாவுக்கு எதிராக கேவல அரசியல் நடத்த முயல்கின்றார்; ரஜினி கடிதம் எழுதுகின்றார். விஜயகாந்தும் அர்ஜூனும் தொடர்ந்து இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக பாகிஸ்தானிய உளவாளிகளாக சித்தரித்த போது இந்த கோடம்பாக்கத்து கலையுலகமும் கருணாநிதியும் ரஜினியும் இன்னபிற கருத்துசுதந்திர வக்கீல்களும் எங்கே போனார்கள்? விஜயகாந்தையோ அர்ஜூனையோ படம் எடுத்த இயக்குனர்களையோ ஒற்றை வார்த்தை சொல்லி கண்டித்ததாக ஏதாவது சான்று உண்டா? நீங்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் இதை மௌனமாக வேடிக்கைதான் பார்த்தார்கள்; ஒருவேளை விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடும், அந்த நேரத்தில் அவரோடு கூட்டணி வைக்கவும் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாக இருக்கலாம்.

6) ’வெளிநாட்டில் குடியேறுவேன்’-கமலஹாசன். கடல்கடந்து குடியேறும் அளவுக்காவது அவரிடம் பொருளாதார வசதி உள்ளது. ஆனால் பாபர் மசூதிக்குப்பின் நடந்த பல குண்டுவெடிப்புக்களுக்கு பின் தமிழகத்தின் பல பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்த முஸ்லிம் மக்களை வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் வற்புறுத்தி வெளியேற்றியதை நீங்கள் அறிவீர்களா? குறிப்பாக கோவை குண்டுவெடிப்புக்களுக்குப் பின் கோவையில் வசித்த இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக கோவையை விட்டு வெளியேறும் அளவுக்குத்தான் நிலைமை இருந்தது. நீங்களோ வெளிநாட்டில் குடியேறுவேன் என சொல்ல, தமிழக இஸ்லாமியர்களோ சொந்த நாட்டில் வீடில்லாமல் அலைந்தார்கள். 2002க்கு பிறகு குஜராத்தில் இஸ்லாமியர்களின் நிலை இப்போதும் இப்படித்தானாம்.

7) நீங்கள் எடுக்கும் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாக கூறுகின்றீர்களாம். உங்கள் விஸ்வரூபம் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இருக்கிறதாமே: “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்””””. ’’இதுக்கு ஆதாரம் உண்டோ உங்களிடம்? அரவாக் இனமக்களின் படுகொலை தொடங்கி அமெரிக்கா கட்டிய கட்டுகின்ற சமாதிகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும் என்பது உங்களுக்கு தெரியாது என்று நாங்கள் நம்ப வேண்டுமா?