திங்கள், ஜனவரி 28, 2013

கமலஹாசன் அவர்களுக்கு...


கமலஹாசன் அவர்களுக்கு...

1) 
தீவிரவாதிகள் என்றால் துப்பாக்கி தூக்கி அடுத்தவனை சுட்டு ரத்தம் வரவைப்பவன் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியையே நீங்களூம்  உன்னைப்போல் ஒருவனில் முன்வைத்தீர்கள். நன்றாக சவரம் செய்து கோட்டு சூட்டணிந்து இலக்கணம் தவறாத ஆங்கிலம் பேசி கடப்பாரை தூக்கி  வழிபாட்டுத்தலத்தை இடித்த (லாஹூர் கல்லூரியில் படித்த) எல்.கே.அத்வானிநியூக்ளியர் ஃபிசிசிஸ்ட்  டாக்டர் முரளிமனோஹர் ஜோஷி போன்றோர் தீவிரவாதிகள் இல்லையாவிடுதலை பெற்ற இந்தியாவில் முதல்முதலாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட கூட்டத்தை திரட்டி ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்த கூட்டத்தின் தலைவர் அத்வானி தீவிரவாதி இல்லையாதேசப்பிரிவினைக்குப் பின் மிகப்பெரும் மதக்கலவரங்களுக்கு விதை போட்டது பாபர் மசூதி இடிப்பு எனில் அதற்கு காரணமான ஆர் எஸ் எஸ்பாஜக தீவிரவாத இயக்கங்கள் இல்லையாஅதன் தலைவர்கள் தீவிரவாதிகள் இல்லையாவரலாற்று அடிப்படையில் திரைப்படம் எடுப்பதாக சொல்லும் நீங்கள்  பாபர் மசூதி இடிப்பு குறித்து தனது அடுத்த படத்தை எடுக்க வேண்டும். ஒரு நாள் நள்ளிரவில் எப்படி மசூதிக்குள் ராமர் சிலை வந்தது என்பதில் இருந்து தொடங்க வேண்டும். படத்தை எடுத்துவிட்டு உத்தவ் தாக்ரேயிடம் போட்டுக்காண்பித்துவிட்டு வெளியிடக்கூடாது (பம்பாய் படத்தை சூப்பர் சென்சார் பால் தாக்ரேயிடம் காண்பித்து அப்ரூவல் வாங்கிய பின் மணிரத்னம் வெளியிட்டது போல).
 
2) 1990களில் புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்க- ஐரோப்பிய நலன்களுக்கு அடகுவைத்த மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி செய்ததும் செய்வதும் தீவிரவாதம் இல்லையா? விவசாய நாடான இந்தியாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது இதே கொள்கைகள்தான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா? ஜனவரி 1 முதல் வால்மார்ட் போன்ற ராட்ச்சர்களை இந்தியாவுக்குள் அனுமதித்து நமது தெருக்களின் சில்லறை வியாபாரிகளை அழிப்பது இக்கொள்கைதான் எனில் இக்கொள்கையை வடிவமைத்துப்புகுத்திய மன்மோஹன்சிங்-காங்கிரஸ் கூட்டணி தீவிரவாதிகள் இல்லையா?

3) 
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தான் படங்கள் எடுப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களாம். உங்களது உன்னைப்போல் ஒருவனின் வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்கியது நேர்மையான செயலா? ’ஆரிஃப் பாய்பெஸ்ட் பேக்கரியில் நம்ம ஆளுங்களை கொளுத்திட்டாங்கஅதுனாலதான் நான் தீவிரவாதி ஆனேன்’ என்று அமானுல்லா கூறுவது புரட்டு அல்லவா? 2002இல் நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு 1993இல் மும்பையில் அல்லது 1998இல் கோவையில் அமானுல்லா வெடிகுண்டு வைத்தான் என்பது நீங்கள் செய்த வரலாற்றுப்புரட்டு அன்றி வேறென்ன? ஆர் எஸ் எஸ்-ம் பாஜக-வும் இதைத்தானே செய்கின்றார்கள்? என்ன பெரிதாக நீங்கள் வரலாறு பேசுகின்றீர்கள்? அதுவும் உங்கள் படம் உள்ளிட்ட தமிழ், இந்திப்படங்களில் இந்திய முஸ்லிம்களில்  தீவிரவாதிகளாக இருப்பவர்கள் பாகிஸ்தானிய உளவாளிகளாக இருப்பதும் தேஷபக்தி கொண்ட ‘நல்ல’ முஸ்லிம்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருந்து அதே ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளை கண்டுபிடித்து உதைப்பதும் எப்படி சார்? விஜயகாந்தும் அர்ஜூனும் இதைத்தானே தங்கள் படங்களில் செய்தார்கள்? குருதிப்புனலிலும் (அர்ஜுனின் பெயர் அப்பாஸ்) உன்னைப்போலிலும் இப்படித்தானே? தனக்கு சாதகமான ஒத்திசைவு கொண்டவராக இருந்ததால்தானே அப்துல்கலாமை இவரு ரொம்ப நல்லவரு’ அதாவது நல்ல முஸ்லிம்’ என்று ஆர் எஸ் எஸ்-ம் பாஜகவும் ஜனாதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தின? தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள்தான் என்ற இந்திய/தமிழ்  சமூகத்தின் பொதுப்புத்தியில் முதலீடு செய்துதான் விஜயகாந்தும் அர்ஜூனும் லாபம் சம்பாதித்தார்கள், நீங்களும் உன்னைப்போலொருவனில் லாபம் பார்த்தீர்கள், இதில் என்ன உங்களிடம் பெரிய வரலாறும் அதற்கு ஆதாரமும் வேண்டிக்கிடக்கின்றது? (ஆர்.கே.செல்வமணி என்ற மிகப்பெரும் அறிவாளி டைரக்டர் புதியதலைமுறை விவாதத்தில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இப்படி சொன்னார்: ‘என் நண்பர் யார் தெரியுமா, அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்!’. அதாவது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பெரீய்ய்ய உதாரணமாம்! இப்படிப்பட்ட அறிவாளிகள்தான் உங்களோடு இருக்கும் தமிழ்ச்சினிமா இயக்குனர்களாம்!)

4) தீவிரவாதிகளை அழித்துவிட்டால் தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற உங்களது உயரிய அறிவார்ந்த’ தத்துவத்தை ஏற்றுக்கொள்ளலாமாஅதுவும் அமெரிக்காவும் ஆர் எஸ் எஸ்-பாஜகவும் சொல்கின்ற இஸ்லாமிய தீவிரவாதம்’ குறித்து மட்டும்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் பேசுவீர்களாஅப்படியெனில் ‘இந்துதீவிரவாதிகளை ஒழித்துவிட்டால் இந்து தீவிரவாதம் ஒழிந்துவிடும்’ என்ற ஃபார்முலாவை நீங்கள் முன்வைப்பீர்களா? மெக்கா மசூதிமாலேஹாவ்ன்சம்ஜௌதா ரயில் போன்ற வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துதீவிரவாத அமைப்புக்கள் குறித்து நீங்கள் பேச வேண்டும்தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகள் ஆகியவை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட்து குறித்தும், ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பிகள்பொய் (ஒட்டு) தாடிகளுக்கு என்ன வேலை என்பது குறித்தும் நீங்கள் படம் எடுக்க வேண்டும். புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் இப்போதும் கரைக்கப்படாமல் கலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது ஏன் என்பது குறித்து நீங்கள் படம் எடுக்க வேண்டும்.

5
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே தாமிரபரணி தமிழர் படுகொலைஉத்தப்புரத்தில் தீண்டாமை சுவர் கட்டியது-அதை இடித்ததுஒரு மாசத்துக்கு முன் தர்மபுரியில் இந்து மதத்தை சார்ந்த வன்னியர்கள் அதே இந்து மதத்தை சார்ந்த தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொளுத்தியதுமுப்பது மைல் தொலைவில் உள்ள இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே ராணுவம் படுகொலை செய்தது போன்றவையும் வரலாற்று நிகழ்வுகள்தான், நீங்கள் இவற்றையும் திரைப்படமாக எடுக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் தேவர் சாதி மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே என்ன பிரச்னை என்பது குறித்தும், தேவர் குருபூஜை என்றால் துப்பாக்கியோடு காவல்காக்கும் தமிழக அரசு இம்மானுவேல் சேகரன் குருபூஜை என்று சொன்னாலே துப்பாக்கி சூடு நடத்துவது ஏன் என்பது குறித்தும் திரைப்படமாக எடுக்க வேண்டும். தேவைப்படும் எனில் இந்த நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு வரலாற்று ஆதாரங்களை கொடுத்து உதவ நான் தயார்.

6
நீங்கள் பெரிய படிப்பாளி, படைப்பாளி. காந்தஹார்மசூத் அசார்முல்லா ஒமர்பின்லேடன் குறித்தெல்லாம் படம் எடுக்கும் நீங்கள், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக நாங்கள் சொன்னது பொய்’ என்று அமெரிக்கா சொன்னதையும்அப்படியானால் அமெரிக்கா அங்கே படையெடுத்து சதாம் உசேன் உட்பட பல லட்சம் மக்களை படுகொலைகள் செய்தது புல் புடுங்கவா என்பதையும் படமாக எடுக்க வேண்டும். படைப்பாளியான உங்களுக்கு நானோ பிறரோ கட்டளை போட முடியாதுஉங்களை நான் வேண்டிக் கொள்ளலாம், அவ்வளவே.

7)இறுதியாக: விஸ்வரூபம் நான் இன்னும் பார்க்கவில்லை, எனவே கருத்து சொல்லவில்லை. விஸ்வரூபம் திரைக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை. கமலஹாசன் யார் என்பதை இஸ்லாமிய சமூகம் மட்டுமல்ல, தமிழ்ச்சமூகம் மொத்தமும் புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

வியாழன், ஜனவரி 10, 2013

’மாவோ நூல்கள்’ மொழிபெயர்ப்புக்கு ஆனந்தவிகடன் விருது 2012

                                                                                    


அன்புத்தோழர்களே!

அலைகள்-விடியல் வெளியீட்டகங்கள் இணைந்து 2012 செப்டம்பரில் வெளியிட்ட ‘மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்க’ளை (9         தொகுதிகள்) ஆனந்தவிகடன் 2012ஆம் 
ஆண்டின் 

சிறந்த மொழிபெயர்ப்பு
 நூலாக தேர்ந்தெடுத்துள்ளது. தொகுதிகள் 5, 9 ஆகியவற்றை நான் மொழிபெயர்த்துள்ளேன் என்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். ஆனந்தவிகடனுக்கு நன்றி! மொழிபெயர்க்கும் வாய்ப்பை அளித்த அலைகள் சிவம் அவர்களுக்கும் நன்றி!


பிற தொகுதிகளை மொழிபெயர்த்த தோழர்கள் மயிலை பாலு, நிழல்வண்ணன், வான்முகிலன்,பாஸ்கர், பாலன், மணிவாசகம், தங்கப்பாண்டியன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!


வாழ்த்துகின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல....!

செவ்வாய், ஜனவரி 01, 2013

தானாய் எல்லாம் மாறும் என்பது...



இதோ 2012ஆம் ஆண்டு பின்னால் சென்று பழைய வருடமாகிவிட்டது!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என வாழ்த்தவே மனம் நாடுகின்றது தோழரே!
நடப்பது கண்டால்...?
ஆதலினால் காதல் செய்வோம்...என்றொருவன் சாதியப்பெருநோய்க்கு  மருத்துவம் பார்த்த இந்த மண்ணில்தான் காதலை காமத்தோடு முடிச்சுப்போட்டு அன்பெனும் உறுப்பை மனித மனங்களில் இருந்து சாதீயக்கட்டாரி கொண்டு அறுத்துப்போடும் நவீன மருத்துவர்கள் நெஞ்சு நிமிர்த்தி ஊர்வலம் வருகின்றார்கள்.
இயற்கை மனிதருக்குள் பருவத்தே முகிழ்த்து மலர்விக்கும் ஆண்பெண் உறவுத்தோட்டத்தில் புகுந்துவிடும் காடுவெட்டிகள் சாதீயத்தீவட்டியை எரிந்து தோட்டம் சாம்பலாவதை கிட்ட நின்று பார்த்து கைகொட்டி சிரிக்கின்றார்கள்.
அண்ணாவுக்கு பொடிவாங்கிக்கொடுத்த, பெரியாருக்கு தடி எடுத்துக்கொடுத்த திராவிடத்தளபதிகள் தலித்துக்களின் வீடுகள் பற்றி எரியும்போது ஒரு மயிரைக்கூட உதிர்க்க ஆயிரம் யோசனை செய்கின்றார்கள்.
அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்றாடம் ஆயிரம் நாமம் சாத்தும் பார்ப்பனத்தலைவிகளின் காவல்துறை, தேவர் குருபூஜை எனில் கைகட்டி சேவகம் செய்கின்றது, தர்மபுரியில் தலித் வீடு பற்றிஎரியும்போதோ  கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. வெண்மணியிலும் வாச்சாத்தியிலும் மாஞ்சோலையிலும் தர்மபுரியிலும் கயர்லாஞ்சியிலும், இதோ, டெல்லியிலும் காவல்துறை ஒரே மாதிரித்தான் இருக்கின்றது! செப்புமொழி பதினெட்டு, எனினும் காவல்துறைக்கு சிந்தனை ஒன்றுதான்!
தேசத்தையும் நதிகளையும் மாதா என்று கொண்டாடும் தேசத்தின் தலைநகரில் 23 வயதுப்பெண்ணொருத்தி சக நண்பனுடன் பயணித்தால் உடலோடு உள்ளமும் சிதைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிணமாகின்றாள். அவள் சிதைக்கப்பட்ட அப்பேருந்து ஐந்து காவல்துறை சோதனை பாயிண்டுக்களை தாண்டி பயணித்ததாம், ஆனால் குறைந்தபட்சம் ஒரே ஒரு பாயிண்டில்கூட எந்த ஒரு போலீஸ்காரனுக்கும் அப்பேருந்து குறித்து சிறு சந்தேகமும் வரவில்லையாம், பேருந்து தடையின்றி பயணித்ததாம்! புரோகிதர்கள் மந்திரம் சொல்ல தேங்காய் உடைக்கப்பட்டு ஏவப்பட்ட பல பத்து செயற்கைக்கோள்களில் ஒன்று கூடவா இந்தப் பேருந்தைக் காட்டிக்கொடுக்கவில்லை?! பாரத் மாதா கீ ஜே! இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட உறவினர் எண்ணிக்கை நூறாம், போலீசின் எண்ணிக்கையோ ஆயிரமாம்! உடன் பயணித்த நண்பன் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு பாரத்ரத்னா விருது நிச்சயம், முயற்சி செய்யுங்களேன்!
மனிதன் உயிர்வாழும் பொருட்டுத்தேவையான அத்தனை உறுப்புக்களுடன் பிறந்தாலும் ரேசன்கார்டு இல்லாத மனிதன் இந்தியாவில் நாயினும் கேடானவன்! புழுவிலும் கீழானவன்! நேற்று வரை அப்படித்தான்! இதோ, வேட்டிகட்டிய தமிழர்களும் டர்பன் கட்டிய பஞ்சாபிகளும் சேர்ந்து (இன,மத,மொழி,நிற,மாநில,கட்சி வேறுபாடு எள்ளளவும் இன்றி செம்புலப்பெயல் நீர் போல நெஞ்சம்தான் கலந்து ஒற்றுமையுடன்)இந்த இழிநிலையை மாற்றிவிட்டார்கள்! கோட்டும் டையும் கட்டிய வெள்ளைக்காரனுக்கு மலம் கழுவ வரிசையில் வெள்ளிச்சொம்புடன் காத்து நிற்கின்றார்கள்! மலம் கழுவ சில நிபந்தனைகள் உண்டு: ரேசன்கார்டை ஒழித்துக்கட்டு; காஸ் சிலிண்டருக்கு மானியத்தை ஒழி; மாதம் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்து; தெருவோரக்கடைகளில் அல்லது தெருவில் கூவி விற்கும் இந்த மண்ணின் மக்களான சில்லரை வியாபாரிகளை குரல்வளை நெரித்துக்கொல், வால்மார்ட்டை உள்ளே விடு; மக்கள்சொத்தான வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை இணைப்பு என்ற பெயரில் ஒழித்துக்கட்டு, அமெரிக்கப் பெருமுதலாளிகளுக்கு ‘அதில் பங்குஎன்ற பெயரில் விற்றுவிடு....
2012இன் இறுதிஅல்ல மேலே சொன்னவை; சாதீயம் ஈராயிரம் வருட இழிவின் எச்சமெனில் உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும்  நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட முதலாளித்துவத்தின் உச்சம்; இதில் எதுவும் மனிதன் நிம்மதியாய் வாழ ஒரு  மயிரைக்கூட கடந்தகாலத்தில் உதிர்த்ததில்லை, உதிர்க்கப்போவதும் இல்லை!
இந்த இழிவெனும் எச்சங்களும் உச்சங்களும், அவற்றின் காரணகர்த்தாக்களும் எடுபிடிகளும் ஒழியும் நாளே நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் இந்த நாட்டுக்கும் மகிழ்வையும் அன்பையும் நலத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் திருநாளாம்! தானாய் ஒழியாது எதுவும்! இவற்றை மாற்றும் படைதனில் நாமாய் முன்வந்து இணைந்தால் அன்றி சாத்தியமில்லை எதுவும்! தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!