சனி, அக்டோபர் 13, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் (இறுதிப்பாகம்)


பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? நாங்க இங்கதான் பிறந்தோம். எங்க முன்னோர்களும் இங்கதான் பிறந்தாங்க. அண்ணன் தம்பிகளா உங்களோடதான் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம்.உடைந்து அழுதார். மீட்சிங் இமாமை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பாலோர் கண்ணீர்விடத் தொடங்கினார்கள். மூக்கைச் சிந்தினார்கள்.

கிராமத்தலைவர் பேசினார். ஆமாமா, நீங்க எங்களோட சகோதரர்கள்தான். எங்களைப் பொறுத்த மட்டில், நீங்க, உங்களோட குழந்தைகள், பேரப்பிள்ளைங்க எல்லோரும் இந்தக் கிராமத்துலேயே எத்தனைகாலத்துக்கு வேண்டுமானாலும் இருங்க. உங்களையோ உங்க மனைவிமாரையோ பிள்ளைகளையோ யாராவது திட்டினாங்கன்னா, உங்க தலையிலிருந்து ஒருமுடி உதிர்றதுக்கு முன்னாலே நாங்களும் எங்க மனைவிமாரும் பிள்ளைகளும் உயிரை விடுவோம். ஆனால், மாமா... நாங்க எண்ணிக்கையிலே ரொம்பக் குறைவு. பாகிஸ்தானிலிருந்து அகதிகள் ஆயிரக்கணக்குலே வந்துக்கிட்டே இருக்கறாங்களே, அவங்களாலே ஏதாச்சும் ஆச்சுன்னா யார் பொறுப்பு?”

ஆமாமா, எங்களுக்கு ஒண்ணுமில்லே. ஆனா அகதிகளால ஏதாச்சும் ஆச்சுதுன்னா?” மற்றவர்கள்.

துப்பாக்கி ஈட்டிகளோட ஆயிரக்கணக்கான பேர் பல கிராமங்களை முற்றுகையிட்டுட்டதாக நாங்க கேள்விப்பட்டோம். எதிர்ப்புங்கற பேச்சுக்கே இடமில்லே.

கும்பலைப் பார்த்துப் பயப்படறோம் இல்லே? வரட்டும் பார்க்கலாம். நாம் குடுக்கற அடி, மறுபடி அவங்க மனோமஜ்ராவைத் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாதுஎன்றது ஒரு குரல். இந்த சவாலுக்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை, ஒரு வெற்றுச்சவாலாக இருந்தது. இமாம் மீண்டும் மூக்கைச் சிந்தினார். சகோதரர்களே, நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்கபொங்கி வரும் உணர்ச்சியோடு கேட்டார்.

கிராமத்தலைவர் கனத்த குரலில் கூறினார். மாமா, சொல்றதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு. ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையிலே நீங்க எல்லாரும் அகதி முகாமுக்குப் போறதுதான் நல்லதுன்னு நான் சொல்வேன். உங்க சொத்துபத்தெல்லாம் வீட்டுலே வச்சுப் பூட்டிட்டுப் போங்க. உங்க ஆடுமாடுகளையெல்லாம் நீங்க திரும்பி வர்றவரைக்கும் நாங்க பார்த்துக்கிறோம்.... இதுக்குப் பிறகும் நீங்க இங்கேயே இருக்கணும்னு விரும்பினீங்கன்னா, நாங்க அதை வரவேற்கிறோம். எங்க உயிரைக்கொடுத்தாவது உங்களைக் காப்பாத்துவோம்.

இமாம் எழுந்தார். ஆகட்டும், நாங்க போய்த்தான் ஆகணும்னா, எங்க சொத்து, பாய்படுக்கையெல்லாம் கட்டி எடுத்துக்கிட்டுப் போறோம். எங்க அப்பாக்களும் தாத்தாக்களும் பல நூறு வருசங்களா உருவாக்கிய இந்த மண்ணை விட்டுட்டு நாங்க போறதுக்கு எங்களுக்கு ஒருநாள் ராத்திரியாவது வேணுமல்லவா?”

கிராமத்தலைவர் அதிகபட்சக் குற்றவுணர்வுக்கு ஆளாகி உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்தார். தனது இடத்திலிருந்து எழுந்து இமாம் பக்ஷைக் கட்டித் தழுவி வாய்விட்டு அழத்தொடங்கினார். அந்தக் கிராமத்தின் சீக்கியர்களும் முஸ்லிம்களும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து குழந்தைகளைப் போல் அழுதார்கள். கிராமத் தலைவரின் தோளிலிருந்து தன்னை மெதுவாக விடுவித்துக் கொண்ட இமாம் பக்ஷ், “அழுவதற்கு அவசியமில்லைஎன்று விம்மியவாறே கூறினார்.


உலகம் இவ்வளவுதான்
மணம் கமழும் பந்தல் கொடியில்
புல்புல் பறவையின் பாடல் நிரந்தரமல்ல
இளவேனிற் காலமும் நின்று நிலைப்பதில்லை
பூக்களும் நிரந்தரமாய் பூத்திருப்பதில்லை
மகிழ்ச்சியும் நிலைத்து நீடிப்பதில்லை
இன்பம் பொங்கும் நாட்களிலும் கூட 
சூரியன் நிலைத்து நிற்பதில்லை, மறையவே செய்வான்
நட்பும் நிரந்தரமாய் நிலைப்பதில்லை
யார் இவற்றை அறியாதவரோ
அவர் வாழ்க்கையை அறியாதவராவார்.” 


(முற்றும்)

(புகைப்படத்தில் குஷ்வந்த் சிங். (இப்போது  பாகிஸ்தானில் உள்ள ) பஞ்சாபின் ஹதாலி மாவட்டத்தில் சர்கோதா என்னும் ஊரில் பிறந்தவர். பிறப்பு 1915, பிப்ரவரி 2.  அவரது தந்தை சர் சோபா சிங் அன்றைய காலத்தில் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ் பெற்றவர், வெள்ளையர் காலத்திய டெல்லியில் பல அழகுமிகு கட்டிடங்களை கட்டியவர். குஷ்வந்த் சிங் லாஹூர், டெல்லி,லண்டன் நகரங்களில் படித்தவர். சட்டப்படிப்பில் பார்-அட்-லா படித்தவர். அவரது நாவல்கள்,சிறுகதை தொகுப்புக்கள் முப்பதுக்கும் மேல் இருக்கலாம். சமூகம், மதம், அரசியல், பாலியல்  சார்ந்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவரது வழக்கம்)

திங்கள், அக்டோபர் 08, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 3 (குஷ்வந்த் சிங்)


அது என்ன நாற்றம் என்று யாரும் யாரையும் கேட்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் அது என்னவென்று. அவர்களின் கடந்த காலம் அதை அவர்களுக்குச் சொல்லியிருந்தது. அந்த ரயில் பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதே அவர்களின் கேள்விகளுக்குத் தகுந்த பதிலாக இருந்தது.


மனோமஜ்ரா நினைவு தெரிந்த நாளிலிருந்து முதன்முதலாக அன்றுதான் இமாம் பக்ஷின் குரல் (மசூதியிலிருந்து) வானத்தைத் தொட்டு அல்லாவின் புகழை உரக்கக் கூவுவதற்காக மேலெழும்பவில்லை.



*******************************************



ஹெட்கான்ஸ்டபிளின் வருகை, வெண்ணெயில் கத்தி இறங்குவதைப் போல் மனோமஜ்ராவை இரண்டாகப் பிளந்துவிட்டது. முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்து துக்கத்தில் ஆழ்ந்தார்கள். பாடியாலாவிலும் அம்பாலாவிலும் கபுர்தலாவிலும் சீக்கியர்கள் முஸ்லிம்களைத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்பட்ட வதந்திகள் முன்பு பரவியதும், ஆனால் தாங்கள் அதைப் பொருட்படுத்தாததும் மீண்டும் நினைவில் ஓடின. முக்காடு விலக்கப்பட்ட தங்கள் பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு ஆள் நடமாட்டமிக்க வீதிகளில் ஊர்வலமாகத் துரத்தப்பட்டு மார்க்கெட் பகுதியில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டிருந்தார்கள். தாங்கள் சூறையாடப்படுவதற்கு முன்பாகவே பலர் தங்களை மாய்த்துக் கொண்டார்களாம். பன்றிகளைக் கொண்டுவந்து வெட்டியெறிந்து மசூதிகளை அசுத்தம் செய்ததாகவும், புனித குர்-ஆனை எதிரிகள் கிழித்து எரிந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தார்கள். மனோமஜ்ராவின் ஒவ்வொரு சீக்கியரும் திடீரென கெட்டநோக்கத்துடன்கூடிய விரோதியாகத் தோன்றினார்கள். அவர்களது நீண்ட தலைமுடியும் தாடியும் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றியது. கிர்பான்(குறுவாள்) முஸ்லிம்களுக்கெதிரான ஆயுதமாகத் தோன்றியது. பாகிஸ்தான் என்ற பெயரில் ஏதோ அர்த்தம் உள்ளதாக - சீக்கியர்களே இல்லாத ஒரு புகலிடமாக - முதன்முதலாக நினைக்கத் தொடங்கினார்கள்.



சீக்கியர்களுக்குள் கோபமும் வன்மமும் தலைதூக்கியது. ஒரு முஸ்லிமை எப்போதும் நம்பாதேஎன்றார்கள். அவர்களது கடைசி குரு கூறியிருக்கிறார், “முஸ்லிம்கள் நன்றியுணர்ச்சியற்றவர்கள்சரிதான். முஸ்லிம்களின் ஆட்சியில், தங்களது தகப்பனார்களை சகோதரர்களைக் கொன்றும், அவர்களது கண்களைக் குருடாக்கியும் இருக்கிறார்கள், அரியணையைக் கைப்பற்ற. குருத்துவாராக்களில் பசுக்களைப் பலியிட்டு அசுத்தப்படுத்தினார்கள். புனித கிரந்த்சாகிப்பை கிழித்து எறிந்தார்கள். முஸ்லிம்கள் பெண்களை மதிப்பதே கிடையாது. முஸ்லிம்கள் கையில் சீரழிவதை விட, கிணற்றில் விழுந்து செத்த பெண்களையும், தீயிட்டுக்கொண்டு செத்த பெண்களையும் பற்றி சீக்கியஅகதிகள் சொல்லியிருக்கின்றார்கள். தற்கொலை செய்துகொள்ளாதவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தெருவில் துரத்தப்பட்டு, வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார்கள். இப்போது ஒருரயில் நிறைய சீக்கியர்கள் கொல்லப்பட்டு மனோமஜ்ராவில் அவர்கள் எரிக்கப்பட்டுள்ளார்கள்.



*****************************************



சற்று நேரம் சென்றபின், கிராமத்தலைவர் பண்டாசிங் பேசத் தொடங்கினார்.



பக்கத்து கிராமங்களில் உள்ள முஸ்லிம்களெல்லாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சந்தன்நகர் அருகிலுள்ள அகதி முகாமில் இருக்கின்றார்கள். பலர் ஏற்கனவே பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார்கள். மற்றவர்கள் ஜலந்தரில் உள்ள பெரிய முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.



மற்றொருவர் தொடர்ந்தார். ஆமாம். கப்பூராவும், குஜ்ஜூமாட்டாவும் கடந்தவாரம் காலி செய்யப்பட்டன. மனோமஜ்ராவில் மட்டும்தான் இப்போது முஸ்லிம்கள் உள்ளார்கள். தங்களது சகாக்களை வெளியேறுமாறு எப்படி அவர்கள் கூறமுடிந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நமது குத்தகைக்காரர்களிடம் நாம் எப்போதுமே அவ்வாறு சொல்லப்போவதில்லை. நமது பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு எப்படிக் கூறமுடியுமோ அதைவிட அதிகமாக நாம் ஒன்றும் பேசிவிட முடியாது. இங்கே யாராவது இருக்கின்றீர்களா - கிராமத்து முஸ்லிம்களை, “சகோதரர்களே, மனோமஜ்ராவை விட்டு வெளியேற வேண்டாம்என்று சொல்வதற்கு?



இதற்கு யாரும் பதில் சொல்லும்முன் யாரோ வாசலில் நுழைந்தார்கள். விளக்கின் குறைந்த வெளிச்சத்தில் அடையாளம் தெரியவில்லை. யாரது?” கேட்டது கிராமத்தலைவர். உள்ளேவாங்கஇமாம் பக்ஷ் உள்ளே வந்தார். இரண்டு பேர் கூடவே வந்தார்கள். முஸ்லிம்கள்.



சலாம், இமாம் பக்ஷ் மாமா. சலாம் கேர் தினா சலாம், சலாம்



சத் ஸ்ரீ அகால், தலைவரே, சத் ஸ்ரீ அகால்முஸ்லிம்கள் வணக்கம் சொன்னார்கள்.



அவர்களுக்கு உள்ளே இடம் கொடுத்தார்கள். இமாம் பக்ஷ் பேசக் காத்திருந்தார்கள்.



விரலால் தாடியைக் கோதியபடியே இமாம் பேசத் தொடங்கினார். சகோதரர்களே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?”



மோசமான அமைதி நிலவியது. கிராமத்தலைவரை எல்லோரும் பார்த்தார்கள்.



என்ன கேள்வி இது? எங்களுக்கானதைப் போல உங்களுக்கும் இந்தக் கிராமம் சொந்தமில்லையா?”



வெளியே என்ன மாதிரியாகப் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். நாம் மட்டுமே மீதி. நாங்கள் வெளியேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் போய்விடுவோம்.



ஒரு இளைஞன் பேசினான்,”இமாம் பக்ஷ் மாமா, இங்கே பாருங்க நாங்க இங்கே இருக்கிறவரைக்கும் உங்களைத் தொடறதுக்கு யாருக்கும் துணிச்சல் வராது. நாங்க முதல்லே உயிரை விடுவோம் அதுக்குப்பிறகு நீங்க உங்களைப் பார்த்துக்குங்க.



ஆமாம், நாங்க முதல்ல. அப்புறம்தான் நீங்க. உங்களுக்கு எதிரா யாராவது புருவத்தை உயர்த்துனாங்கன்னாக்கூட அவனோட அம்மாவைக் கற்பழிப்போம்என்றது ஒரு குரல்.



ஆமாமா, அம்மா, சகோதரி, மகன்பல குரல்கள். கண்ணில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு, சட்டையின் நுனியால் மூக்கைச் சிந்தினார் இமாம்.

(தொடரும்...4)



திங்கள், அக்டோபர் 01, 2012

பாகிஸ்தான் செல்லும் ரயில் - 2 (குஷ்வந்த் சிங்)

இது மட்டுமில்லை, ஒருநாள் சீக்கிய ராணுவ வீரர்களின் அணி  இறங்கியது. ரயில் நிலையத்துக்கு அருகில் கூடாரம் போட்டார்கள். ரயில் பாலத்தின் முனையிலுள்ள சிக்னல்கம்பம் அருகே ஆறடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை சதுரமாக அடுக்கிஒவ்வொரு திசைக்கும் ஒரு இயந்திரத் துப்பாக்கியையும் பொருத்தினார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் பிளாட்பாரத்தைக் காவல் காத்தார்கள். கிராமமக்கள் ரயில் நிலையத்தை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. டில்லியிலிருந்து வரும் ரயில்களின் டிரைவர்களும் கார்டுகளும் பாகிஸ்தானுக்குள் நுழையும் முன்பாக அங்கே மாற்றப்பட்டார்கள். பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில்களின் எஞ்சின்கள் ஏதோ விடுதலைப் பெருமூச்சுடன் ஓடி வருவதைப் போல் இந்தப் பக்கம் வந்தன.


ஒருநாள் காலையில் பாகிஸ்தானிலிருந்து வந்த ரயில் ஒன்று அங்கே நின்றது. அமைதியாக இருந்த அந்த நாட்களில் ஓடிய ரயிலைப் போலத்தான் இதுவும் இருந்தது பார்த்தவுடன். கூரைகளில் யாரும் பயணிக்கவில்லை. பெட்டிகளுக்கிடையே யாரும் தொத்திக் கொண்டும் தொங்கிக் கொண்டும் இல்லை. படிக்கட்டுக்களில் ஊசலாடிக் கொண்டு யாரும் இல்லை. ஆனாலும் இந்த ரயிலில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாகப்பட்டது. இது ஒரு குறுகுறுப்பை மனதில் ஏற்படுத்தியது. ஒரு பேயைப் பார்ப்பதுபோல் உணர்வு வந்தது. பிளாட்பாரத்துக்குள் வந்தவுடன்கார்டு இறங்கிஸ்டேசன் மாஸ்டரின் அறைக்குள் நுழைந்தார். பின் இருவருமாக கூடாரம் அடித்துள்ள இடத்துக்குச் சென்று அங்கேயிருந்த ராணுவ அதிகாரியிடம் பேசினார்கள். பிறகு படைவீரர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கேயிங்கே என அலைந்து திரிந்து கொண்டிருந்த கிராமமக்கள் அனைவரும் கிராமத்துக்குள் உடனே சென்றுவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒரு வீரன் மோட்டார் சைக்கிளில் ஏறி சந்தன்நகர் நோக்கிப் புறப்பட்டபின் ஒருமணி நேரத்திற்குப்பின் சுமார் ஐம்பது போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார். அதன்பின் மாவட்ட மாஜிஸ்டிரேட்டும் உதவி கமிஷனருமான ஹக்கும்சந்த் தனது அமெரிக்கக் காரில் வந்து இறங்கினார்.



பட்டப்பகலில் வந்த அந்த பேய்ரயில் மனோமஜ்ராவின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. தங்களது வீட்டுக்கூரைகளின் மீது ஏறிரயில் நிலையத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நீண்டிருந்த ரயிலின் கறுப்பு வண்ணக் கூரையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ரயில்நிலையக் கட்டிடமும் இரும்புக் கம்பிகளும் படிகளும் ரயிலை முழுமையாகப் பார்க்க முடியாமல் மறைத்தன. திடீர் திடீரென யாராவது ஒரு ராணுவ வீரனோ போலீஸ்காரனோ நிலையத்திலிருந்து வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தார்கள்.



பிற்பகலில் ஆண்கள் கும்பல் கும்பலாகக் கூடி ரயிலைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள். அரசமரத்தடியில் கும்பல்கள் மொத்தமாகக் கூடியபின்அனைவரும் குருத்வாராவுக்குள் சென்றார்கள். வீடுவீடாகச் சென்று குசுகுசு’ பேசியும் சேகரித்துக் கொண்டும் இருந்த பெண்கள்இறுதியாககிராமத் தலைவர் பண்டாசிங் வீட்டில் கூடி அந்த ரயிலைப்பற்றிய தகவல்களோடு வரும் தங்களது ஆண்களுக்காகக் காத்திருந்தார்கள்.



* * *



திடீரென ஒரு போலீஸ்காரன் குருத்வாரா வாசலில் தென்பட்டான். கிராமத் தலைவரும் மற்ற சிலரும் எழுந்து நின்றார்கள். அரைகுறைத் தூக்கத்தில் இருந்தவர்கள் அவசரமாக விழித்தார்கள். என்ன என்ன ஆச்சு?” என்றபடி தங்களது தலைப்பாகையை அணிந்தவாறே அனைவரும் சுறுசுறுப்பானார்கள்.



கிராமத் தலைவர் யார்?”



பண்டாசிங் வாசலுக்கு வந்தார். அவரைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போன போலீஸ்காரன் அவர் காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்க்க முடிந்தது. பண்டாசிங் திரும்பினார். ம்...ம்..நடக்கட்டும்... இன்னும் அரைமணி நேரம்தான். ஸ்டேசன் பக்கத்திலே இரண்டு மிலிட்டரி லாரி நிக்குது. நான் அங்கே போகணும்



போலீஸ்காரன் மிடுக்காகத் திரும்பிப் போனான். அனைவரும் பண்டாசிங்கைச் சுற்றி நின்றார்கள். ஒரு ரகசியத்தைத் தெரிந்து கொண்டிருப்பதால் அவர் ஒரு முக்கியமானவராகிப் போனார். அவரது குரலில் அதிகாரத் தொனி தெரிந்தது.



அவங்கவங்க வீட்டில இருக்கிற விறகுமண்ணெண்ணெய் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்த மிலிட்டரி லாரிக்கு வந்துடுங்க. பணம் கொடுப்பாங்க



எதற்காக என்று அவர் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது குரல் கட்டளை இட்டது.என்ன உங்களுக்கெல்லாம் காது செவிடாஇல்லைநான் சொன்னது காதுல விழலியாபோலீஸ்காரன் வந்து கம்பால குண்டியில அடிச்சாத்தான் நகருவீங்களாவேலை நடக்கட்டும்



* * *



விறகுகள் லாரிகளில் ஏற்றப்பட்டன. காலியான பெட்ரோல் கேன்களில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டது. எல்லாம் முடிந்தபின்அதிகாரிக்கு மரியாதை தரும் விதமாக சற்றே தூரத்தில் அனைவரும் கூடி நின்றனர்... லாரிகள் ஸ்டேசனை நோக்கிச் சென்றன.



* * *



வீட்டுக் கூரைகளின்மீது நின்று பார்த்தால்ஸ்டேசன் பக்கத்தில் நிற்கும் லாரிகளைப்பார்க்க முடிந்தது... அவை மீண்டும் இடதுபுறம் திரும்பி ஸ்டேசனை நோக்கி வளைந்து ரயிலுக்குப் பின்னால் மறைந்தன. ரயில் பாலத்தின் அடியில் சூரியன் மறைந்தபோதுதங்களது அன்றாட வேலைகளை மறந்துபோய் விட்டோமே என்று ஆண்களும் பெண்களும் ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். விரைவில் இருட்டிவிடும்குழந்தைகள் உணவுக்காக அழத் தொடங்குவார்கள். ஆனாலும்பெண்கள் ரயில்வே ஸ்டேசன்மீது பதிந்த தங்களது கண்களை அப்படியிப்படி நகர்த்தவேயில்லை. பசுக்களும் எருமைகளும் தானியக்களஞ்சியத்துக்குத் திரும்பின. ஆனாலும் ஆண்கள் வீட்டுக்கூரைகளின் மீது நின்றுகொண்டு இப்போதும் ஸ்டேசனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கப் போகின்றது...



சூரியன் பாலத்துக்கு பின்னால் மூழ்கிக்கொண்டிருந்தான். வெண்மேகங்களைவெண்சிகப்பும் பழுப்பும் ஆரஞ்சுமான கலவையால் ஒளியேற்றி வண்ணமயமாக்கினான். சற்றுநேரத்தில் சாம்பல் வண்ணக் கீற்றுக்கள் இந்த வண்ணக்கலவையுடன் சேர்ந்துகொள்ள மாலைப்பொழுது மெல்ல மங்கி அந்தி சாயத்தொடங்கியது. அதுவும் மெதுவாகத் தன்னை இருட்டில் சங்கமித்துக் கொண்டது. ரயில்வே ஸ்டேசன் ஒரு இருட்டுச் சுவராக மாறிக்கொண்டது. சலித்துப்போன ஆண்களும் பெண்களும் மெதுவாகக் கீழேயிறங்கத் தொடங்கினார்கள்.



நீலமும் சாம்பல் வண்ணமும் கலந்த வடக்குத் தொடுவானம்மீண்டும் ஆரஞ்சுவண்ணத்தை வீசியது. அது பழுப்பு வண்ணமாகி ஒளிமயமான வெண்சிகப்பை வீசியது. செக்கச் சிவந்த தீயின் நாக்குகள் மேலெழுந்து கருங்கும்மென்றிருந்த இருட்டு வானத்தைத்தொட்டன. இளங்காற்று மனோமஜ்ராவை நோக்கி வீசியது. மண்ணெண்ணெயும் விறகும் எரியும் வாடை உடன் வந்தது. அதன்பின் மனிதச் சதை எரிந்து தீய்ந்து போன தெளிவற்ற குமட்டுகின்ற நாற்றம் வந்தது.



மரண அமைதியில் மனோமஜ்ரா உறைந்தது. 

(தொடரும் 2)