வெள்ளி, ஜூன் 29, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 2)

ஷெல்தான் நைஜீரிய எண்ணெயில் பாதியை உறிஞ்சி விற்கின்றது. மோபில், செவ்ரான், எல்•ப், ஆகிப், டெக்சாசோ...என மேலும் பல கம்பெனிகள் உண்டு.
ஷெல் கம்பெனி கடந்த 2008ஆம் வருடத்தில், ஒரு நொடிக்கு 700 பவுண்டு (சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்) சம்பாதித்ததாக அதன் கணக்கே சொல்கின்றது. அதே நேரத்தில் எழுபது விழுக்காடு நைஜீரிய மக்களின் ஒருநாள் வருமானம் வெறும் நூறு ரூபாய்க்கு சமானம்! இதையே நாம் இப்படியும் சொல்லலாம்: நைஜீரிய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி விற்றால் ஒரு நொடிக்கு 700 பவுண்டு சம்பாதிக்கலாம். 1997 கணக்குப்படி மட்டும் ஒருநாளைக்கு 20 லட்சம் பேரல் கச்சாஎண்ணெய் நைஜீரியாவின் மடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
ஷெல் உட்பட்ட பன்னாட்டு எண்ணெய் சுரண்டல் கம்பெனிகள், பெட்ரோலை உறிஞ்சி எடுத்து விற்று சம்பாதித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நைஜீரிய மக்களுக்கு செய்த 'நன்மைகள்' வருமாறு: எண்ணெய்க்கசிவு, கழிவுகளால் மண்வளம், நீர்வளம் வீழ்ச்சி, மீனினம் அழிப்பு, சாயம், மீன்பிடித்தொழில் அழிப்பு, மண்ணா¢ப்பு, காடு அழிப்பு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் வீழ்ச்சி, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், சுற்றுச்சூழல் அழிப்பு, நீர், நிலம், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களும் அழிப்பு, எனவே மக்களின் வாழ்க்கை சீரழிவு, வேலையின்மை, வருமான இழப்பு, வறுமை, நோய், விபச்சாரம், மக்கள்தொகைப்பெருக்கம், கூடவே அநாதைக்குழந்தைகள் அதிகா¢ப்பு, அரசுநிர்வாக சீரழிவு, லஞ்சலாவண்யம்...என நீள்கின்றது.


எண்ணெய்க்கம்பெனிகளின் இந்த சூறையாடல் ஏதோ ஒருநாள் திடீர் என தொடங்கியது அல்ல; உலகப்போக்கிரியான அமெரிக்கா, அதன் ஏவல் நாயான இஸ்ரேல், ஜப்பான், ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என கடல்கடந்த கொள்ளையர்களின் ஏவல் நாயாக தொடர்ந்து இருந்த நைஜீரிய அரசுகள், வெறும் பொம்மை அரசுகளாக மட்டுமே இருந்ததும், அரசும் சர்வதேச முதலாளிகளும் சர்வதேச முதலாளித்துவம் விதித்த புனிதமான கோட்பாட்டை - "கூட்டுச்சேர்; தேச எல்லை, மொழி, இனம் பாராமல் கொள்ளை அடி" - அப்படியே பின்பற்றியதும்தான் நைஜீரியா சீரழிந்துபோனதற்கு காரணம். அதே சர்வதேச விதிகளின் அடுத்த விதியான "ஈவு இரக்கம் அனைத்தையும் குழிதோண்டிப்புதை: எதிர்க்குரல்களை ஒடுக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறு, அரசுபயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடு, ராணுவத்தையும் போலிசையும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்து, தேவைப்பட்டால் உயிரை எடுத்துவிடு" போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் நைஜீரிய அரசும் சர்வதேச முதலாளிகளும் திட்டமிட்டு நடத்தினார்கள்.


ஷெல் உள்ளிட்ட அந்நிய எண்ணெய்க்கம்பெனிகளின் புண்ணியத்தில் நைஜர் டெல்டாவின் மக்களும் இயற்கை வளங்களும் நாசமாகிக்கொண்டு வந்ததை பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கடந்த பல பத்தாண்டுகளாக அம்பலப்படுத்தி வந்தார்கள். பல புத்தகங்களாகவும் அறிக்கைகளாகவும் இணையதளங்களில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன, அவற்றில் ஒரு சில மட்டும் கீழே:
1) எண்ணெய் தோண்டி எடுக்கும்போது நிலத்திலிருந்து வெளிப்படும் இயற்கை எரிவாயுவை அப்படியே 24 மணிநேரமும் எரிப்பது. இதனால் 24 மணி நேரமும் அப்பகுதி தாங்கமுடியாத வெப்பத்துடன் தகித்தால் மனிதர்கள் எவ்வாறு வாழ்வது? கூடவே இந்த வாயு, சூறாவளி போன்ற பெரும்சத்தத்துடன் கெட்டநாற்றத்தையும் வெளிவிடுகின்றது. இப்போதுள்ள தொழினுட்பத்தின்படி இந்த வாயுவை வெளியேற்றாமல் வேறு வகையில் பயன்படுத்தலாம்; சேமித்து வேறு பல தொழில்களுக்கும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்; இல்லையேல் மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும், இந்த முறையை பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இவ்வாறு செய்வதற்கு ஆகும் செலவை விடவும் இப்படி எரிப்பதால் அரசுக்கு தரப்படும் அபராதத்தொகை குறைவு என்பதால் கம்பெனிகள் எரிக்கின்றன. விவேக் ஒரு படத்தில் சொல்வதுபோல் "ஏண்டா, அட்வான்சா அபராதம் கட்டிட்டு ரேப் பண்றீங்களாடா?". 2008 டிசம்பர் வரை இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட எர்¢க்கும் இடங்கள் இருந்ததாக தகவல் உள்ளது. உள்ளூர் மக்களின் வாழ்க்கை நாசமாகி விட்டது. 24 மணிநேரமும் வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்றவற்றால் தட்பவெப்பநிலை நாசமாகி விட்டது. குறைந்த பட்சம் மனிதன் அனுபவிக்கின்ற இயற்கையான இருள் சூழ்ந்த இரவு என்ற உரிமையைக்கூட நைஜா£ய மக்கள் இழந்துவிட்டார்கள்.


2) அமிலமழைப்பொழிவால் குடிநீர் கெட்டுவிட்டது; விவசாயம் நாசமாகி விட்டது. துத்தநாகத்தால் ஆன வீட்டுக்கூரைகள் 7 முதல் 10 வருடங்கள் உழைக்கும், ஆனால் இப்போது அமிலமழையால் இரண்டுவருடங்களில் நாசமாகிவிடுகின்றன.


3) எண்ணெய்க்குழாய்க்கசிவுதான் நைஜர் டெல்டாவின் மிகப்பெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு காரணம். மக்கள் வசிக்கும் வீடுகளின் முன்னால், தெருக்கள் நடுவே, வயல்களின் நடுவே என்று திரும்பிய திசை தோறும் எண்ணெய்க்குழாய்களே என்றால் மனிதன் எப்படி வாழ்வது? பல குழாய்கள் நாற்பது வருடங்களுக்கும் மேற்பட்டவை. இதனால் எண்ணெய்க்கசிவு மிக சாதாரணமான ஒன்று... உதாரணமாக 1998 ஜூன் மாதம் ஊட்டிகுவே1 பகுதியில் ஷெல்லின் 16 அங்குலக்குழாயில் இருந்து மாதக்கணக்கில் கசிந்த கச்சாஎண்ணெய் மட்டும் எட்டு லட்சம் பேரல்கள். அதே 1998 அக்டோபரில் ஜெஸ்சி கிராமத்தின் ஊடாக ஓடும் குழாய் வெடித்ததில் எழுநூறு பேருக்கும் அதிகமானோர், பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், செத்து மடிந்தனர். கடந்த ஐம்பது வருடங்களில் 15 லட்சம் பேரல் எண்ணெய் இதுபோல் நைஜர் டெல்டா எங்கும் கசிந்து ஓடி நாசம் செய்ததாக தகவல் கூறுகின்றது.


...3

வியாழன், ஜூன் 28, 2012

மேற்கத்திய உலகத்தின் வளர்ச்சி: திருட்டும் கொள்ளையும் - கென் சாரோ-விவா (பாகம் 1)


(2009 ஜூலை 'புதுவிசை'யில் வெளியானது, இப்போது பொதுவில்...)



ஷெல் (Shell) பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதன் தலமையகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய்க்கம்பெனிகளில் ஒன்று. 2008ஆம் ஆண்டில் மட்டும் இதன் வருமானம் 21,475 லட்சம் அமெரிக்க டாலர் என்று இக்கம்பெனியின் கணக்கு சொல்கின்றது (சுமாராக 10,300 கோடி ரூபாய்). எண்ணெய்க்கிணறு தோண்டுவது, எண்ணெய் எடுப்பது, இயற்கை எரிவாயு தோண்டுவது, இவற்றை விற்பது, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை என இதன் தொழில் பெட்ரோலியம் சார்ந்துள்ள பரந்த தொழில். இந்தியாவில் ஷெல், எஸ்ஓ போன்ற தனியார் கம்பெனிகள் எண்ணெய்க்கம்பெனிகள் இருந்ததும் பின் எண்ணெய்க்கம்பெனிகள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் பழைய வரலாறு. நரசிம்மராவ், ம.சி, ப.சி, மான்டேக் சிங், காங்கிரஸ், பாரதீய ஜனதா கூட்டணி கூடிப்பேசி பொதுத்துறையாகிய மக்கள்சொத்தை மீண்டும் தனியார் முதலாளிகளுக்கு ஏலம் போட்டு விற்பது புதிய வரலாறு.

(ராயல் டச்சு) ஷெல் கம்பெனி ஆப்பிரிக்கக்கண்டத்தின் நைஜீரிய நாட்டில் நைஜர் டெல்டாப்பகுதியில் 1956ஆம் ஆண்டு எண்ணெய் தோண்டி எடுத்து, 1958இல் விற்பனையைத் தொடங்கியது. அப்போதும் அதன் பின்னும் தொடர்ந்து இருந்த அரசுகளின் துணையுடன்தான் தனது கொள்ளை லாப வேட்டையை தொடர்ந்தது. ஷெல் கம்பெனி, பெட்ரோலை விற்று சம்பாத்தித்தை விடவும் (சர்வதேச முதலாளிகளின் கல்லாப்பெட்டி பொருளாதார விதிகளின் படி) நைஜீரிய மக்களின் ரத்தத்தை விற்று சம்பாதித்ததுதான் அதிகம் என்பதை வரலாறு கூறுகின்றது.
நைஜீரியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள நைஜர் டெல்டாப்பகுதி ஓகோனி (Ogoni) எனப்படுகின்றது. இந்த மக்களும் ஓகோனி என்றே அழைக்கப்படுகின்றனர். ஓகோனி பிரதேசம் இயற்கையிலேயே மிக வளமான பூமியாகும். இருபதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புள்ள டெல்டாவில் ஆறாயிரம் ச.கி.மீ. பரப்புக்கு சதுப்புநிலக்காடு மட்டும் உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய சதுப்பு நிலக்காடு இதுதான். மேலும், நைஜீரியாவின் (எஞ்சியுள்ள) மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றும் ஓகோனியில்தான் உள்ளது. ஓகோனி மக்கள் பாரம்பரியமாகவே இந்தக்காடுகளை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றார்கள். காடும் காடு சார்ந்த தொழில்களுமாக அவர்கள் வாழ்க்கை இருந்தது. சதுப்புநிலக்காடுகள் உயிரோடு இருப்பது மிக முக்கியம்- மண்வளம், தாவரவளம், மீன் பெருக்கம், காட்டு மரங்கள், வீடு கட்டுவதற்கான மரம், விறகு, மருந்துப்பொருட்கள், இயற்கைச்சாயம், பல்வேறு வனவிலங்குகள் ( யானை, வெண்மார்புக்குரங்கு, ஆற்று நீர்யானை, முதலை போன்ற அழியும் நிலையில் உள்ள உயிர்கள் உட்பட) பல்வேறு இயற்கை வளங்களின் நீடிப்புக்கும் உயிர்ப்புக்கும் நைஜர் சதுப்புநிலக்காடுகள் தொட்டிலாக இருந்தன. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, "உலகின் தலையாய பத்து ஈரநிலங்களின் வரிசையிலும், கடல்சார் சுற்றுச்சூழல் மையங்களின் வரிசையிலும்" நைஜர் டெல்டா இருந்தது.

நைஜர் பகுதியின் ஓகோனி மக்களின் வாழ்க்கை மட்டும் இன்றி, (மேற்கு ஆப்பிரிக்காவின்) மோசமான ஏழைநாடுகளின் மக்களின் வாழ்க்கையும் இந்த டெல்டாவை நம்பியே இருந்தது. நைஜர் டெல்டாவிலிருந்து இனப்பெருக்கத்துக்கான இடப்பெயர்ச்சி செய்யும் மீன்கள் இம்மக்களுக்கு வாழ்க்கை தருகின்றன. சுருக்கமாக, டெல்டாவின் 2.7 கோடி மக்களில் 75 விழுக்காடு மக்களின் விவசாயம், மீன்பிடித்தொழில், அவை சார்ந்த துணைத்தொழில்களை, வாழ்க்கையை இந்த டெல்டாதான் தீர்மானிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி நைஜர் டெல்டாதான் என்பதை ஷெல் போன்ற சர்வதேச முதலாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்னர் வரை ஓகோனி மக்களின் வாழ்க்கை ஒருகாலத்தில் பிரச்னை இல்லாமல் ஓடிக்கொண்டுதான் இருந்தது...

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரும் எண்ணெய் வள பூமி என்ற பெருமையோடு இப்போதும் நைஜீரியா ஜொலிக்கின்றது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் (OPEC) ஐந்தாவது பெரிய உறுப்பு நாடாகவும் நைஜீரியா இருந்தது. எனவே நைஜீரியாவின் அரசியல்-பொருளாதாரக் கூறுகளைத் தீர்மானித்ததில் பெட்ரோல் கண்டுபிடிப்பு முக்கிய சக்தியாக விளங்கியதில் வியப்பில்லை. நாட்டின் அந்நியச்செலாவணியில் 90 விழுக்காடும், அரசு வருமானத்தில் 80 விழுக்காடும் பெட்ரோலிய ஏற்றுமதியால் கிடைத்தது. எனவே, நைஜீரியாவின் ஒவ்வொரு குடும்பமும் அடுக்கு மாளிகையில் வசிக்கின்றது, தெருக்களில் சொகுசு கார்களை நிறுத்த இடம் கிடைக்காது, கடைவீதிகள், ஓட்டல்கள் என எப்போதும் மக்கள் காசை 'பெட்ரோலாக' செலவு செய்வார்கள், ஒரே பொழுதுபோக்குகள், கச்சேரி, குடி, கூத்தியா, கும்மாளம்தான்...என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கணும்...உலகின் மிக மோசமான ஏழைநாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் உள்ளது என்பது கசப்பான உண்மை. கடல்கடந்து வந்து நைஜீரியாவின் பெட்ரோலியவளத்தை சுரண்டி சாப்பிடும் ஷெல் போன்ற எண்ணெய்க் கம்பெனி முதலாளிகள்தான் டாலர்களில் படுத்துப் புரண்டுகொண்டு மேற்படி குடி, கும்மாள, கூத்தியா கேளிக்கைகளில் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக்கொள்ளையில் முதல் இடம் ஷெல்லுக்கு....

...2.



செவ்வாய், ஜூன் 26, 2012

போஸ்கோ முதல் கூடங்குளம் வரை...’பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...





பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராக...

ஒரிசாவில் கடந்த ஏழு வருடங்களாக தென் கொரிய கம்பெனியான போஸ்கோவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் ஜூன் 22 அன்று எட்டாவது வருடத்தை தொடுகின்றது. ஒரிசா அரசு இந்த தென்கொரிய கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி
-          ஒரிசா மக்களுக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு போஸ்கோ எஃகு கம்பெனி தொடங்க கொடுக்கப்படும்; இந்த நிலம் அனைத்தும் விவசாய நிலம் ஆகும்
-          எஃகு ஆலைக்கான இரும்புத்தாது தோண்டியெடுக்க இந்திய மக்களின் சுரங்கங்கள் 30 வருசத்துக்கு குத்தகைக்கு விடப்படும், குத்தைகையை மேலும் 20 வருசத்துக்கு நீட்டிக்கலாம்
-          தலைநகர் புவனேஸ்வரில் தலைமை அலுவலகம் அமைக்க சுமார் 25 ஏக்கர் நிலம் தரப்படும் 
-          ஒரிசா மக்கள் இப்போது குடியிருக்கும்  2000 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்படும், அங்கே போஸ்கோ குடியிருப்பு கட்டப்படும்
-          போஸ்கோ கம்பெனி வருசத்துக்கு 120 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும்
-          தொழிற்சாலை, சுரங்கம், குடியிருப்பு ஆகியவற்றைக்கட்டவும் ஒட்டுமொத்த பயன்பாட்டுக்கும் இந்தியாவின் மஹாநதியில் இருந்து தென்கொரிய நிறுவனம் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்
-          ரயில் பாதைகள், சாலைகள், துறைமுகம் ஆகியவற்றைக் கட்டிக்கொள்ள போஸ்கோவுக்கு அனுமதி தரப்படும்
-          இப்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்.

இதுவரை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகளில் இதுவே மிகப்பெரியது என்றும் சொல்லப்படுகின்றது. 90-களின் தொடக்கத்தில் மத்தியில் இருந்த நரசிம்மராவ்,மன்மோஹன், ப.சிதம்பரம்,மாண்டேக்சிங் அலுவாலியா கூட்டணி அமெரிக்க-ஐரோப்பிய பெருமுதலாளிகளின் நலன் காக்க உள்நாட்டில் திணித்த தனியார்மய-தாராளமயக்கொள்கைகள் கொண்டுவந்த ஆகப்பெரும் கேடுகளில் ஒன்றுதான் வெளிநாட்டுக்கம்பெனிகள் இந்தியாவுக்குள் தடைஏதும் இன்றி நுழைந்து இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாடுவது.  காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போலத்தெரிந்தாலும் கொல்லைப்புறத்தில் கமிசனில் சரிபங்கு பிரித்துக்கொள்கின்றார்கள்; இடை இடையே மத்தியில் ஆள வந்த பாஜக என்ன செய்கின்றது?  மன்மோஹன், அலுவாலியாவின் கொள்கைகளை எழுத்து மாறாமல் அப்படியே அமல்படுத்துகின்றது.

ஆனால் தம் வாழ்வின் ஆதாரமான மண் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்காத பழங்குடியின மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்ராம் சமிதி (PPSS) என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்; தம் மண்ணிலிருந்து போஸ்கோ வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன் ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய போராட்டம் இந்த வாரம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கின்றது. மண்ணை இழந்தவர்கள், தொழிலாளிகள்,மீனவர்கள், தலித் மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் மண்ணின் மைந்தர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு போஸ்கோ கம்பெனி ஜகத்சிங்புரில் தொடங்க உத்தேசித்துள்ள இடத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இடதுசாரிகள் போஸ்கோ திட்ட்த்தைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து மாநில அரசை வற்புறுத்தி வருகின்றார்கள். ஆனால் மாநில தலைமைச்செயலாளர் பிஜய் பட்னாய்க் வேறு மாதிரி பேசுகின்றார்: “2005இல் போஸ்கோவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதால் புதிய ஒப்பந்தம் போடப்படும்; ஏற்கனவே 2000 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது, இன்னும் 600 ஏக்கர் நிலத்தை அமைதியான(?) வழியில் கைப்பற்றுவோம்.

ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தில் மோதல்களில் பலர் இறந்துள்ளார்கள்; திங்கியா,நுவாகான்,கடாக்குஜங் ஆகிய மூன்று கிராமப்பஞ்சாயத்துக்களும் போஸ்கோவுக்கும் மாநில அரசுக்கும் எதிரான போராட்ட்த்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டள்ளதால் கிராமத்தின் ஒவ்வொருவர் மீதும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொய்வழக்குகள் உள்ளன, வழக்குகள் இல்லாத நபரே கிராமத்தில் இல்லை.

65 வயது சத்யாபதி ஸ்வைன் என்பவர் போராளி ரஞ்சன் ஸ்வைனின் தாயார். இக்காரணத்தினாலேயே சத்யாபதி ‘சட்டவிரோதமாக்க் கூடியகுற்றத்திற்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.  PPSS-ஐ முன்னின்று நடத்துகின்ற அபய் சாஹூ, நாராயண் ரெட்டி இருவர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு கணக்கே இல்லை. அபய் 2008இல் கைது செய்யப்பட்டார், பெயிலில் விடுவிக்கப்பட்டார். ‘ஒரு வரதட்சணை வழக்கில் சாட்சியங்களை அழித்தார்என 2011-இல் புது வழக்கு ஜோடிகப்பட்டது.

திங்கியா கிராமத்தை சேர்ந்த மனோரமா என்ற இளம்பெண் போராட்டத்தில் குதித்தார், கடந்த ஜனவரி மாதம் முதல் டைபாய்டு நோயில் விழுந்த இவர் மீது 48 வழக்குகள் உள்ளன.

ரமேஷ் பொசாயத் என்பவர் தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்றபோது வழியில் போலீஸ் அவரைக் கைது செய்தது, காரணம் தெரியாது.

விவசாயம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி செழித்து ஓங்கக்கூடிய ஒரு பகுதியில் எஃகுத்தொழிற்சாலை தொடங்கியே தீர்வது என மாநில அரசு ஏன் பிடிவாதமாக உள்ளது என்ற கேள்வியை 28 வயதான பிரகாஷ் ஜேனா எழுப்பியதால் 2009இல் கைது செய்யப்பட்டார், எட்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மேல் 28 வழக்குகள் உள்ளன, ஆனால் என்னென்ன பிரிவுகளின் கீழ் என்று இதுவரை அவருக்கு தெரியாது.

திங்கியா கிராமத்தின் முன்னாள் கிராமத்தலைவரின் மகன் ஜோதிரஞ்சன் மஹாபத்ரா “1400 பேருக்கு எதிராக வழக்கு உள்ளதுஎன்கின்றார்.

கைலாஷ் சந்திரா பிஸ்வாஸ் தனது மாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கிராமத்தை விட்டுச்செல்லும்போது கைது செய்யப்பட்டார். சூறையாடல், வெடிகுண்டு வீசல், வல்லாங்கு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து பெயிலில் வந்த அவர் தான் பணி புரியும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார், ஆனால் அவரது வேலை பறி போனது.

பாபாஜி சரண் சமன்தாரா திங்கியா கிராமத்தில் போஸ்ட்மாஸ்டராக 28 ஆண்டுகள் பணியாற்றியவர். 2007இல் போலீஸ் இவரை கைது செய்தது, 21 பொய் வழக்குகளை ஜோடித்தது. எனவே அரசுப்பணியில் இருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தை நாடினார். பின் தேதியிட்டு அவருக்கு ஊதியம் வழங்கவும் ஓய்வூதியம் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஆனாலும் அவருக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இன்னும் வரவில்லை.

“இது என் நிலம். இதைப்பாதுகாக்கும் உரிமை எனக்கு உள்ளது, அதைத்தான் செய்தேன். ஆனால் என்னை ஒரு கிரிமினல் போல் நடத்துகின்றார்கள்”  எனக் குமுறுகின்றார் ஒரு பெண்மணி.

“ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் அரசு துப்பாக்கி முனையில் வளர்ச்சியை காண நினைக்கின்றது;  மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கோ வளர்ச்சி என்ற சொல்லுக்கு அரசு தரும் வியாக்ஞானத்தை விமர்சிப்பதற்கோ இங்கு இடமில்லை. ஒரிசா மாநிலமானது மிகப்பல பழங்குடியினர் போராட்டத்தின் தாயகமாக விளங்கும் ஒரு மாநிலம், இப்போதோ தமது நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட வெகுமக்களின் போராட்டக்களமாக மாறிவிட்ட்துஎன்கின்றார் லோக்சக்தி அபியான் அமைப்பின் தலைவர் பிரஃபுல்ல சமாந்தாரா.

அடக்குமுறையைக் கையில் எடுக்கும் அரசுகள் என்ன செய்யுமோ (கூடங்குளத்தில் என்ன நடக்கின்றதோ) அதையே ஒரிசா அரசும் செய்கின்றது.  மாநிலத்தின் சில பகுதிகளை மாவோயிஸ்ட்டுக்கள் நிறைந்த பகுதி என்று அரசு அறிவித்துள்ளது, அப்பகுதிகளில் மக்கள் போராடும்போது வெகு எளிதாக அந்த மக்கள் இயக்கங்களை  மாவோயிஸ்டு இயக்கம் என்று அரசு முத்திரை குத்துகின்றது. டாங்கிரியா தலைவர் டோதி சிகோகா ‘தம் வாழ்வுரிமைக்காகப் போராடுகின்ற பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்டுக்களை ஒடுக்குகின்றேன் என்ற பெயரில் அரசு அடக்கி நசுக்கி சிறையில் அடைக்கின்றதுஎன்கின்றார்.

2011 ஜனவரி முதல் தேதியன்று ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஐந்து மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் சொன்னது.  இதில் 14 வயது இளம்பெண்ணும் அடக்கம்.  இதேபோல் காசிப்பூர் மாவட்டம் கோரப்புட்டில் ஜனவரி 9 அன்று மாவோயிஸ்ட்டுக்கள் என்ற பெயரில் சாமானிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.  இவர்கள் சுரங்கம் வெட்டுவதை எதிர்த்த கிராம மக்களே என்பதை மனித உரிமை ஆர்வலர் குழுக்கள் ஆய்வு செய்து அறிவித்தனர்.

உள்நாட்டு வெளிநாட்டு ஏகபோகப்பெருமுதலாளிகளுக்கு இந்தியாவின் இயற்கை வளங்களை திருடுவதற்கு மட்டும் அல்ல; அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் காலாவதியாகி உள்ளூர்களில் பயன்படுத்துவதற்கு உள்ளூர் மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட (கூடங்குளம்,ஜெய்தாப்பூர் போன்ற) தொழினுட்பங்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் மத்தியில் இருக்கின்ற காங்கிரஸ் அரசும் அவ்வப்போது இருக்கின்ற பாரதீய ஜனதாக் கட்சியும் இந்தியாவின் கதவுகளை அகலத்திறந்து விடுகின்றார்கள்; இவர்களது கூட்டணிக்கட்சிகளோ (திமுக, அ இ அதிமுக, பாமக போன்றவை அல்லது அவற்றின் தலைவர்கள்) மத்தியில் கிடைக்கின்ற சில மந்திரி பதவிகளுக்காக கட்டியிருக்கின்ற வேட்டி, தாம் சார்ந்திருக்கின்றா மாநிலமக்களின் நலன் உட்பட எல்லாவற்றையும் அடகு வைக்கின்றார்கள்; தம் குடும்பத்தாரின் சொத்து கோடிகோடியாக வளரவும், இது போன்று இந்தியாவில் முதல்போடும் பன்னாட்டு தொழில் நிறுவன்ங்களில் தம் குடும்பங்களை முக்கிய பங்குதாரர்களாக ஆக்கவும் மட்டுமே கட்சியை (அல்லது கம்பெனியை) நடத்துகின்றார்கள்.  இவற்றுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களை தேசத்துரோகிகள், மாவோயிஸ்டுக்கள் என்றும் எளிதில் முத்திரை குத்துகின்றார்கள், பொய்வழக்குகளை ஜோடிக்கின்றார்கள்.

போஸ்கோவுக்கு எதிராகவும், வேதாந்தாவுக்கு எதிராகவும், மஹாராஷ்ட்ராவில் ஜெய்தாப்பூரிலும், தமிழகத்தில் கூடங்குளத்திலும் அணு உலைகளுக்கு எதிராக மக்கள் நடத்திக் கொண்டிருப்பதும், கேரளாவின் பிளாச்சிமடாவில் பெப்சிக்கு எதிராக உள்ளுர் மக்கள் நட்த்தியதும் ஏதோ அந்தந்த உள்ளூர் பிரச்னைகள் அல்ல; ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள்  ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மீது தொடர்ந்து தொடுத்து வரும் சமூக-பொருளாதார முற்றுகைக்கும், பெருமுதலாளிகளின் படையெடுப்புக்கு’ (corporate invasion) எதிராகவும் ஆன மக்கள்போராட்டங்கள் இவை என்பதைப்புரிந்துகொள்வோம்.  இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு  எதிரான உடனடிப்போராட்டங்களாக இவை இருப்பினும் இப்போராட்டங்களின் மைய இலக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் சர்வதேச கார்ப்பொரேட்டுக்களும்தான். இவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு கட்டுரையையும் பிற தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)